நேற்றைய பதிவில் மூன்றாவது பாடலின்
அல்லிக் கமலத் தயனும் மாலும்
அல்லா தவரும் அமரர் கோனுஞ்
சொல்லிப் பரவும் நாமத் தானைச்
சொல்லும் பொருளும் இறந்த சுடரை
என்ற வரி வரை பொருள் கண்டோம், இனி மிகுதி வரிகளைப் பார்ப்போம்.
நெல்லிக் கனியைத் தேனைப் பாலை
நிறைஇன் னமுதை அமுதின் சுவையைப்
புல்லிப் புணர்வ தென்று கொல்லோ
என்பொல் லாமணி யைப்பு ணர்ந்தே.
மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகத்தில் கீழ் பௌதீக பரிணாமத்தில் உழரும் உயிர் புருவ மத்தியில் உள்ள சுடரான சிவஜோதியைப் புணர்ந்தால் ஏற்படும் நிலையை சிவயோகத்தில் அம்ருதீகரணம் என்பார்கள்.
அதாவது உயிராற்றல் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் என்று மனதில் வழி கழியாமல் புருவமத்தியில் ஒளியாக இருக்கும் சிவத்தை ஊர்த்துவ முகமாக அடைந்தால் பிரபஞ்ச சக்தி உடலில் பாயும் நிலையை அம்ருதம் பெறல் என்று யோகியர் குறிப்பார்கள்.
இப்படியான யோக நிலையை அடைந்தால் அந்த உயிர் கற்ப நிலை அடையும், கற்ப நிலை என்பது காலம் கடந்து நிற்பது. பொதுவாக இன்று பலர் கற்பம் என்பது ஸ்தூல உடலை அழியாது நிறுத்தல் என்று எண்ணுகிறார்கள். உண்மையில் கற்பம் என்பது உயிர் தான் பெற்ற அனுபவத்தை இந்த பூவுலகில் மற்றவர்களுக்கு தரக் கூடிய வல்லமையுள்ளதாக வலிமையுள்ளதாக எவ்வளவு காலத்திற்கு நிலைத்து நிற்கிறதோ அந்த நிலை கற்ப நிலை எனப்படும்.
ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் பலர் எழுதியிருக்க மாணிக்கவாசகர் போன்ற ஒரு சிலரின் எழுத்துக்கள் மட்டும் மக்களுக்கு அவர் பெற்ற அனுபவத்தை தரும் வல்லமை உள்ளதால் மாணிக்கவாசகரும் கற்ப தேகம் அடைந்தவர் தான்.
இப்படி கற்ப நிலையை அடைய சித்தர்கள் மூலிகைகளில் துணையையும் நாடுவர்கள். இவற்றுள் எளிய கற்பம் நெல்லிக் கற்பம்! நெல்லிக்கனியை சரியாக பக்குவப்படுத்தி உண்டால் அது ஸ்தூல உடலைப் பலப்படுத்தி ஒருவனது சாதனைக்கு மனதையும் உடலையும் ஒழுங்குபடுத்தும் ஒரு அரிய கற்ப மூலிகை நெல்லிக்கனி!
ஆக தனது உயிரை கற்பமாக்க வல்ல சிவ ஜோதியை எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய எளிய கற்ப மூலிகையான நெல்லிக்கனிக்கு ஒப்பிடுகிறார்!
ஒரு யோகி தான் அண்ணாக்கில் பெறும் அமுதத்தை ஒப்பிடுவதற்குரிய பொருட்கள் தேனும், பாலும்! இத்தகைய கற்ப நிலையைத் தரும் சிவ ஜோதியாகிய பொல்லா மணியை புணர்வது எக் காலம் என்கிறார்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.