குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, December 28, 2012

காயத்ரி புரச்சரணம்



மந்திர சித்தியிற்கு புரச்சரணம் எனப்படும் பயிற்சி அவசியமாகும். மந்திரத்தின் மூலம் துரித பலனைப் பெற விரும்புபவர்கள் புரச்சரணம் செய்வது அவசியம். இது ஆன்மீக முன்னேற்றம் கருதியோ அல்லது லௌகீக முன்னேற்றம் கருதியோ செய்யலாம். புரச்சரணம் என்பது அக்ஷர லட்சம் தடவை ஜெபம் செய்து அதில் 1/10 பங்கு ஹோமம், ஹோமத்தின் பத்தில் ஒரு பங்கு தர்ப்பணம், தர்ப்பணத்தில் 1/10 பங்கு மார்ஜனம், அதில் 1/10 பங்கு அன்னதானம். இந்த ஐந்து அங்கங்களும் சேர்ந்த சாதனையே புரச்சரணம் எனப்படும். 

காயத்ரி புரச்சரணம் பிரம்ம காயத்ரி மந்திரத்தில் 24 எழுத்துக்கள் காணப்படுகின்றது, ஆகவே 24 இலட்சம் ஜெபமும் மேற்கூறியவகையில் மற்றை அங்கங்களும் செய்யவேண்டும். இதில் வேறு பல நியதிகளும் உண்டு, அது அவரவர் குருமுகமாய் அறிதல் வேண்டும். ஒரு நாளைக்கு 3000 தடவை ஜெபம் என முடிவு செய்து ஜெபிக்க தொடங்கினால் அதே அளவில் 24 லட்சம் ஜெபிக்கும் வரை செய்து முடிக்க வேண்டும். இதன் மூலம் அதிகளவு ஆன்ம ஆற்றலை துரிதமாக பெறலாம். 

மதன் மோகன் மாளவியா அவர்கள் தனது காயத்ரி புரச்சரணத்தின் பின்னரே காசியில் இந்து பலகலைக்கழகத்தினை ஸ்தாபித்தார். சாந்தி குஞ்சில் உள்ள காயத்ரி பரிவார் ராம் சர்மா ஆச்சார்யாவின் 24 காயத்ரி புரச்சரணத்தின் தபோபலத்தினால் அமைக்கப்பட்டது. 

யோகபிரஷ்டர்களும் (முற்பிறவியில் இறை சாதனை செய்து முடிக்காமல் விட்டார்களும்) தூய மனதுடையவர்களும் மட்டுமே ஒரு புரச்சரணத்தில் காயத்ரி தேவியின் காட்சியினை பெறமுடியும். அவரவர் சித்தத்தில் உள்ள பாவ சம்ஸ்காரத்திற்கேற்ப மந்திரசித்தி பெற ஜெபிக்க வேண்டிய அளவு வேறுபடும். இதனை பிரபலமான மதுசூதான ஸ்வாமிகளின் கதையிலிருந்து அறியலாம், அவர் கிருஷ்ண மந்திரத்தில் 17 புரச்சரணம் செய்தும் கிருஷ்ணனின் காட்சியினை பெற முடியவில்லை, 18 செய்யத்தொடங்கி சிறிதளவிலேயே காட்சியினை பெற்றார், பின்னர் கிருஷ்ணனிடம் அதற்கான காரணத்தினை கேட்ட போது முற்பிறப்பில் 17 பிராமணர்களை கொலை செய்த பாவத்தினை கழிக்கவே முன்னைய புரச்சரணத்தின் சக்தி செலவாகிவிட்டதென்று காரணத்தை உரைத்தார். இந்தவிடயத்தினை காயத்ரி புரச்சரணம் செய்பவர்களும் நினைவில் இருத்த வேண்டும். 

ஸத்குரு பாதம் போற்றி!

காயத்ரி ஜெபம் (பகுதி - 02) ரிஷிகேஷத்தின் ரிஷி சுவாமி சிவானந்தர் அருளியது


காயத்ரி ஜெபத்தின் பயன்கள் 

காயத்ரி வேதங்களின் தாய், அனைத்து பாபங்களையும் அழிக்கும் வல்லமை உள்ள மந்திரம். பூவுலகிலும், தேவருலகிலும் காயத்ரியிற்கு மேலான தூய்மைப்படுத்தும் புனிதமளிக்கும் ஒன்று இல்லை. காயத்ரியினை மட்டும் ஜெபிப்பது நான் கு வேதங்களையும் அதன் அங்கங்க்களுடன் ஜெபித்து பெறும் ஞானத்தினை தரவல்லது. இந்த ஒரு மந்திரம் ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று தடவைகள் ஜெபித்தாலே கைவல்யத்தையும் மோஷத்தையும் தரவல்லது. இதன் விரிவே மற்ற வேத மந்திரங்களின் விரிவு, இந்த மந்திரத்தின் தொடர்ச்சியான சாதனை நல்லாரோக்கியம், அழகு, வலிமை, வனப்பு, வீரியம் மற்றும் பிரம்ம தேஜஸ் எனப்படும் வசீகர காந்தசக்தியினை தரவல்லது. காயத்ரி எல்லாவித துக்கங்களையும் அழிக்க வல்லது. காய்த்ரி அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு வகையான புருஷார்த்தங்களையும் தர வல்லது. மனிதனை பீடித்துள்ள அறியாமை, காமம், கர்மம் என்ற மூன்று முடிச்சுகளில் இருந்தும் விடுவிக்க கூடியது. காயத்ரி மன தினை தூய்மைப்படுத்தி மனச்சக்தியினை வளர்க்க வல்லது. தொடர்ச்சியான சாதனையினால் அஷ்ட சித்திகளையும் தரவல்லது. காயத்ரி மனிதனை சக்தியுள்ளவனாகவும் ஞானவானாகவும் ஆக்குகிறது. இறுதியாக காயத்ரி சாதகன் பிறப்பு இறப்பு என்ற சுழல்ற்சியிலிருந்து விடுபட்டு முக்தி எனும் மோஷத்தினை அடைகிறான். 

தொடர்ச்சியான சாதனையினால் மனம் தூய்மை அடைகிறது. அதனால் மனம் நற்குணங்களினால் நிறைகிறது. தொடர்ந்து சாதனையினை புரிந்து வரும் போது மனதில் நல்ல சம்ஸ்காரங்கள் பதிகின்றன. மன தில் எண்ணுவதைப்போல் மனிதன் உருவாகிறான் என்பது உளவியல் விதியாகும். மனதினை நல்ல எண்ணக்களில் பழக்கும் மனிதனின் வாழ்க்கை மனதில் நல்ல எண்னங்களை ஈர்த்து நல்வாழ்க்கை அமையத்தொடங்குகிறது. காயத்ரி சாதனையில் காயத்ரி தேவியின் உருவை எண்ணி தியானிக்க தொடங்கும் மனது இந்த ஆற்றலைப்பேறத்தொடங்க்குகிறது. இடது மூளையில் பதியப்படும் எண்ணங்கள் சம்ஸ்காரங்கள் எனப்படும் (இவை நேரடியாக ஆழ்மனதில் பதியும்). இப்படி பதியும் எண்ணங்களை திரும்ப திரும்ப பதிப்பிக்கும் போது அந்த சம்ஸ்காரங்கள் வலிமையடைகின்றன. இதன்பயனாக மனதில் பழக்க வழக்கங்களும் செய்கைகளும் உருவாகின்றன. (இவை நல்லவற்றிற்கும் கெட்டவற்றிற்கும் பொதுவானது), எவன் ஒருவன் தெய்வீக எண்ணங்களை தொடர்ச்சியாக பதிப்பித்து தியானத்தின் மூலமும் தாரணை மூலமும் தனது மனதினை தெய்வத்தன்மை ஆக்குகிறானோ அவன் தெய்வத்தன்மை உடையவனாகின்றான். அவனது பாவனையினால் தூய்மை அடைகின்றான். தியானிப்பவனும் தியானமும், ஏகாக்கிரமும்(மன ஒருமை) ஏகாக்கிரம் செய்பவனும் ஒன்றாகின்றனர். இதுவே சமாதி எனப்படும், இது தொடர்ச்சியான உபாசனயினால் கிடைக்கின்றது. இவற்றை காயத்ரி உபாசனை செய்பவன் சுலபமாக அடைகின்றான். .

அடுத்த பதிவில் காயத்ரி மந்திர சித்தி அளிக்கும் புரஸ்சரணம்

Thursday, December 27, 2012

காயத்ரி ஜெபம் (பகுதி - 01) ரிஷிகேஷத்தின் ரிஷி சுவாமி சிவானந்தர் அருளியது

இந்தப்பதிவு யோக மார்க்கத்தினை உலகறியச் செய்த மஹாயோகியான ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தரது காயத்ரி ஜெபம் கட்டுரையின் மொழிபெயர்ப்பாகும். எமது வாசகர்களுக்கும் காயத்ரி சாதனை செய்ய விரும்புபவர்களுக்கும் உந்ததுதலையும் வழிகாட்டக்கூடிய ஒரு கட்டுரையாதலால் இங்கு பதிவிடுகிறோம். 

காயத்ரி தியானம்

ஓம் பூர் புவஹ ஸ்வஹ தத் ஸவிதுர் வரேண்யம்; பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ நஹ ப்ரசோதயாத்

சப்த அர்த்தம் (அதாவது சொற்களுடைய பொருள்)
ஓம் - பரப்பிரம்மன், பூர் - பூவுலகம், புவஹ - அந்தரிக்ஷ உலகம், ஸ்வ - சுவர்க்க உலகம், தத் - பரமாத்மா, ஸவிதுர் - சூரிய ஒளியான ஈஸ்வரன், வரேண்யம் - வழிபடுவதற்குரிய தகுதி,  பர்கோ - அறியாமையும் பாவங்க்களையும் அகற்றும்,  தேவஸ்ய - தெய்வ சக்தியுடைய ஞான ஸ்வரூபம், தீமஹி - தியானிப்போமாக, தியோ - புத்தி, யோ - எந்த, நஹ - எங்க்களுடைய, ப்ரசோதயாத் - ஞானமடைய செய்யும்.

பாவ அர்த்தம் (அதாவது தியானிக்க வேண்டிய அர்த்தம்)

எல்லாம் வல்ல பரம்பொருளான ஈஸ்வரனை தியானிப்போமாக; யார் இந்த உலகங்களை சிருஷ்டித்தானோ, யார் வனங்க்குவதற்கு தகுதியானவனோ, யார் எம்முடைய பாவங்களையும் அறியாமையினையும் அகற்றுபவனோ அந்த பேரொளி எமது புத்தியினை நல்வழியில் தூண்டட்டும். 

சாதகன் காயத்ரி மாதாவினை நோக்கி கீழ்வருமாறு பிரார்த்திக்க வேண்டும்; " தாயே, இந்தப் பிறப்பில் நான் பெற்ற இந்த உடலும் மனமும் புத்தியும் அஞ்ஞானமும் நிறைந்து துன்பத்தில் உழல்கின்றேன். என்னுடைய உண்மையான் ஆன்ம ஸ்வரூபத்தினை அறியக்கூடிய ஞானத்தினையும், தூய மனம், புத்தியினையும் ஒளியினையும் எனக்கு தரவேண்டும்" 

இதுவே பிரம்ம காயத்ரி மந்திரம், காயத்ரி வேதங்களின் தாய், வேத மாதா, காயத்ரியினை விட சிறந்த மந்திரம் எதுவுமில்லை, சுத்தப்பிரணவமாகிய "ஓம்" சன்னியாசிகளுக்குரியது, காயத்ரி பிரம்மச்சாரிகளுக்கும் குடும்பஸ்தர்களுக்கும் உரியது. ஓம்கார ஜெபத்தினால் தியானத்தினால் பெறக்கூடிய அத்தனை பலங்களையும் காயத்ரியினை ஜெபிப்பதனால் பெறலாம். ஓம்காரத்தினை சன்னியாசி ஜெபித்து அடையும் பரமஹம்ஸ நிலையினை காயத்ரியினை இடைவிடாது ஜெபிக்கும் கிரஹஸ்தனும் பிரம்மச்சாரியும் அடைகின்றனர்.

சாதனை புரிவதற்கான சில அனுபவ முன்மொழிவுகள்
பிரம்மமுகூர்த்தம் எனப்படும் காலை 04.00 மணிக்கு எழுந்து காயத்ரியினை (தாமரையில் அமர்ந்துள்ள பஞ்ச முக காயத்ரியினை) பத்மாசனம், சித்தாசனம், வீராஸனம் அல்லது சுகாசனத்தில் வ்டக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து ஜெபத்தினை ஆரம்பிக்கவும். அறையில் வாசனை பத்தி ஒன்றினை ஏறவும், வெயில் காலத்தில் குளித்தபின்னர் ஜெபத்தினை ஆரம்பிக்கலாம், குளிர்காலம் ஆயின் கை, கால் முகம் கழுவி ஆசமனம் செய்தபின்னர் ஆரம்பிக்கலாம். இரண்டு மணித்தியாலங்கள் ஜெபத்தினை தொடரவும். பின்னர் இரவு 07.00 மணிமுதல் 08.00 மணிவரை ஆக ஓரு நாளில் இருதடவை ஜெபம் செய்யவும். ஜெபத்தின் போதும் அந்த நாளின் மற்றைய வேளைகளில் தொடர்ச்சியாக காயத்ரியிடமிருந்து ஒளியினையும், தூய்மையினையும், ஞானத்தினையும் பெறுவதாக பாவிக்கவும். இது மிக முக்கியமான பாவனை. தியானத்தின் போது காயத்ரியின் உருவத்தினை திரிபுடி எனப்படும் புருவ மத்தியில் கண்களை மூடி தியானிக்கவும். அப்படி இல்லாவிடின் இருதயத்தில் தாமரையில் அமர்ந்திருப்பதாக தியானிக்கலாம். இப்படியான தியானத்தினால் காயத்ரியினை நீங்கள் சதரிசிக்கலாம்.


நாளொன்றிற்கு 3000 தொடக்கம் 4000 ஜெபம் செய்வது மிக்க நன்று, இதனால் உங்கள் மனமும் புத்தியும் துரிதமாக சுத்தியடையும், இந்த அளவினை செய்யமுடியாவிட்டால் தினசரி 1008 செய்யலாம். இதை செய்வதும் கஷ்டமாயின் மிகக் குறைந்தது 108 செய்யலாம், அதைக்கூட ஒருதடவையில் செய்ய கஷ்டமாயின் 36 தடவை சூரியோதயத்திலும், 36 தடவை நண்பகலிலும், 36 தடவை சூரிய அஸ்தமன நேரத்திலும் செய்யலாம். இந்த சந்தியாவேளைகளில் ஒரு அபூர்வ தெய்வ காந்த சக்தி பூவுலகில் செயற்படுகிறது, அந்த வேளைகளில் ஜெபிப்பதால் மனம் துரிதமாக சுத்தியடைகிறது. மனம் சத்துவ குணத்தால் நிறைவடையும். மன ஒருமை சக்தி எதுவித முயற்சியும் இல்லாமல் அதிகரிக்கும். பிரம்ம முகூர்த்தத்தில் எழும்ப முடியாவிட்டால் சூரியோதயத்திற்கு முன்னர் எழுந்து ஜெபத்தினை தொடங்கவும். யார் சந்தியா வேளையில் காயத்ரியினை ஜெபிக்க தவறுகிறார்களோ அவன் பிரஷ்டன் ஆகின்றான், அதாவது வீழ்ச்சியடைந்த மனிதனாகிறான், அவன் தனது வலிமை, வனப்பு, பிரம்ம தேஜஸினை இழக்கின்றான்.

எப்படி ஜெபம் செய்யவேண்டும்?
காயத்ரி மந்திரம் ஒன்பது பெயர்களை கொண்டிருக்கிறது 1. ஓம் 2. பூர் 3. புவஹ 4. ஸ்வஹ 5. தத் 6. ஸவிதுர் 7. வரேண்யம் 8. பர்கோ 9. தேவஸ்ய, இந்த ஒன்பது பெயர்களும் கடவுளை பணிந்து வேண்டும் நாமங்கள். தீமஹி என்பது கடவுளை வணங்க்குவோம் என்பதை குறைக்கும், தியோ யோ நஹ ப்ரசோதயாத் என்பது பிரார்த்தனை. காயத்ரி மந்திரம் ஐந்து இடங்களில் நிறுத்தி ஜெபிக்க வேண்டும். முதலாவது நிறுத்தல் "ஓம்"; இரண்டாவது நிறுத்தல் "பூர் புவ ஸ்வஹ"; மூன்றாவது நிறுத்தல் "தத் ஸவிதுர்வரேண்யம்"; நான்காவது நிறுத்தல் "பர்கோ தேவஸ்ய தீமஹி"; ஐந்தாவது நிறுத்தல் "தியோ யோ நஹ ப்ரசோதயாத்", காயத்ரியினை ஜெபிக்கும் போது மேற்கூறிய ஒவ்வொரு பதத்திலும் நிறுத்தி ஜெபிக்கவேண்டும்.

காயத்ரி மந்திரத்தின் அதிஷ்டான தெய்வம் ஸவிதா, மந்திரத்தின் வாய் அக்னி ஸ்வரூபம், கண்டறிந்த ரிஷி விஸ்வாமித்திரர், சந்தஸ் (இலக்கண அமைப்பு) காயத்ரி). இது பிரணாயாமத்திற்குரிய மந்திரம். யார் காயத்ரியினை தியானிக்கிறானோ அவன் மஹாவிஷ்ணுவினை தியானித்ததன்  பலனை பெறுகின்றான்.


எந்தவொரு மனிதனும் மானசீகமாக காயத்ரியினை நடக்கும் போதோ, படுத்திருக்கும் போதோ, அமரும் போதோ ஜெபிக்கலாம். இதனால் எந்த பாவங்களும் அவனை அண்டாது. வேதங்களின் அனைவருக்கும் பொதுவான மந்திரமாக குறிக்கப்பட்டிருப்பது காயத்ரி, "சமனோ மந்த்ரஹ", இது இந்துக்கள் அனைவருக்கும் பொதுவான மந்திரம். அனைத்து உபநிஷத்தினதும், நான்கு வேதங்களினதும் சாரம் மூன்று வ்யாஹ்ருதிகளுடன் கூடிய காயத்ரி. யார் காயத்ரியினை ஜெபிக்கிறானோ அவனே உண்மையான பிராமணன், ஜெபிக்காதவன் சூத்திரன், இதுவே வேதகால பிராமண சூத்திரன் என்பதற்கான பாகுபாடு. (இதிலிருந்து யார் ஞானத்தினாலும் அறிவினாலும் சமூகத்தினை வழி நடத்துகிறார்களோ அவர்களே பிராமணர்கள் எனப்பட்டார்கள் அன்றி பிறப்பினால் வருவதில்லை பிராமணத்துவம், அதை அடையும் பக்குவத்தினை தருவது காயத்ரி சாதனை)


தமிழில் ஸ்ரீ காயத்ரி தேவி தியான ஸ்லோகம்



தமிழில் காயத்ரி தேவியின் தியான சுலோகத்தினை படித்து தியானிக்க விரும்புபவர்களுக்கு சமஸ்கிருதத்தில் உள்ள "முக்தா வித்ரும ஹேம நீல தவளச்சைர்" எனத்தொடங்கும் காய்த்ரி தியான சுலோகத்தின் தமிழாக்கம், இதனை செய்தவர் ஸ்ரீமதி சௌந்தர கைலாசம் அவர்கள். இதுவும் சமஸ்கிருத சுலோகத்திற்கு நிகரானதே! இந்த தியானப் பாடல்களை மனதில் இருத்தி தியானித்து வருவோர் எல்லாவித ஞானங்களையும் கிரகிக்கும் ஆற்றலினைப் பெறுவர்.



தியான பாடல் 

முத்தொடு பவளம் தங்கம் முரண்படு கருமை வெண்மை
இத்தனை நிறங்கள் கொஞ்சும் எழில் முகம் ஐந்து கொண்ட
உத்தமி ஒவ்வொன்றிற்கும் விழிகள் மூன்றுடைய அன்னை
தத்துவ எழுத்து ரூபம் தாங்கிய எங்கள் தேவி
இரண்டு தாமரைகள் சங்கு ஏவு சக்கரம், கபாலம்
மிரண்டவர்க்கபயம், தாளில் விழுந்திடில் வரதம் இன்னும் 
அங்குசம் கயிறு சாட்டை ஆகிய பத்தும் கொண்டே
திங்க்களின் கலைகொள் மௌலித் தேவி காயத்ரி போற்றி!


காலையில் தியானிக்க வேண்டிய காயத்ரியின் ரூபம்
சரஸ்வதி 

ஒளியருள் சூரிய மண்டலத்தின் நடு உள்ளவளை
தெளிவருள் காயத்ரீயை எந்தேவியை சிந்திப்பேனே
சிவந்தவள் விடியும்போது செங்கதிர் நடுவை என்றும்
உவந்தவள் குமரியாக உள்ளவள் அன்னத்தின் மேல் அமர்ந்தவள்
ஜபமாலைக் கை அழகினள் நாவில் "ரிக்: கைச் சுமந்த காயத்ரி
பிரம்ம தேவதைச் சுடரே போற்றி!

பகலில் சாவித்ரீ - துர்கை 

ஒளியருள் சூரிய மணடலத்தின் நடு உற்றவளை
தெளிவருள் காயத்ரீயை என் தேவியை சிந்திப்பனே
வெங்கதிர் நடுவில் வாசம் வெண்ணிறம் காளை மீது
மங்கள சாவித்ரீ ரூபம் மலரெனும் பருவம் நாவில்
பொங்கிடும் யஜூர் வேதம் பொலிந்திடும் கையில் சூலம்
இங்கு காயத்ரீ ருத்ர தேவதை என்பேன் போற்றி!

மாலையில் லஷ்மீ 
ஒளியருள் சூரிய மண்டலத்தின் நடு உள்ளவளை
தெளிவருள் காயத்ரீயை எந்தேவியை சிந்திப்பேனே
கரிதாம் நிறத்தை மூத்த கலைமகள் வடிவை நன்மை
சொரியுமாம் ஒளியிடத்தை சுழலுமாயுதத்தை சென்று 
செரியுமாம் பொழுதில் சாமவேத உச்சரிப்பைக் கொண்ட
கருடவாகனத்து விஷ்ணு தேவதை காயத்ரி போற்றி

காயத்ரி பிரார்தனை

ஓம்
ஒளியினை பதினாங்கெனும் உலகினுக்குதவி ஞான
வெளியில் உலவும் அந்த வெய்யவன் தனக்கும் வற்றா
அளியினால் ஒளியை யூட்டி ஆண்டிடும் பொருளே நல்ல
தெளிவினை தந்து அஞ்ஞான இருளினை தீர்ப்பாய்!


அனைவரும் அன்னையின் அருள் பெற பிரார்த்திக்கிறோம்!

ஸத்குருபாதம் போற்றி!

Wednesday, December 26, 2012

சித்தமும் முற்பிறப்பு சம்ஸ்காரங்களும் (பதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள் 06)

எமது முன்னைய தொடர்களை  வாசித்து விட்டு வரவும்.



சித்தம் எனும் ஆழ்மனம் எமது புறக்கரணங்களாலும் அகக்கரணங்க்களாலும் பெறப்படும் தூண்டல்களை சேமித்து வைக்கும் ஒரு பதிவுக்கருவி என்று முன்னைய பதிவில் பார்த்தோம்.  

இந்தப்பதிவுகளில் இந்தப்பிறவியில் ஏற்பட்ட அனுபவங்கள் மட்டுமல்ல இதுவரை எடுத்த அனைத்துப்பிறவிகளது பதிவுகளும் உள்ளது, ஆக சித்தம் என்பது எமது முற்பிறப்புகளது தொடபுகளை அறிய உதவும் ஒரு HARD DISK கும் தான். 

சிலருக்கு சிலவிடயங்களில் இனம்புரியாத பயம் இருக்கும். அதாவது அந்த பயத்திற்கு வலுவான காரணம் எதுவும் அவர்கள் அறிந்தவகையில் இருக்காது,  ஆனால் பயம் மட்டும் வலுவானதாக இருக்கும். 

அழகான ஒரு ஆண் அழகே இல்லாத பெண்ணை விரும்புவான். 

ஒரு சில வீட்டில் தகப்பனும் மகனும் ஜென்ம விரோதிகள்  போல் இருப்பார். 

அண்மையில் ஒரு புத்தகம் வாசிக்க நேர்ந்தது, அதன் பெயர் "ஆறுமுகக் கடவுள் உரைத்த பூர்வ ஜென்மங்கள்", வழக்கறிஞர் என். ஞானவேல் அவர்கள் எழுதியது, ஆசிரியர் ஆரம்பகாலத்தில் ஆவியுலக தொடர்பாளராகவும் பின்னர் முருகக்கடவுள் அவரூடாக தகவல் தெரிவிப்பதாகவும், அப்படி அவரை நாடி வந்த அன்பர்களில் விசித்திரமான பிரச்சனைகளுக்கு ஆறுமுககடவுள் அதன் காரணம் என்ன என்பதை தெரிவிப்பதற்கு பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களை தெரிவிக்கிறார். மிகவும் சுவாரசியமான புத்தகம் இது, இதனை படிப்பதன் மூலம் எமது விடைகாணமுடியாத பல பிரச்சனைகளிற்கு விடை பூர்வ ஜென்ம கர்மங்களில் இருக்கிறது என்பதனையும், நாம் உத்வேகத்துடன் செய்யும் செயல்களுக்கான பதில் விளைவுகளை கடவுளும் நாம் அறியாதபடி எதோ ஒரு பிறவியில், எமக்கு தெரியாதபடி அனுபவிக்க வைக்கிறார் என்பதனையும் உணர்ந்துகொள்ளலாம். 

கடவுள் மனிதனது விடயம் எதிலும் தலையிடாத ஒரு அதியுச்ச பேரறிவு, மனிதன் தன் செய்வதற்குரிய பலனை தானே அனுபவிக்கவேண்டும். இந்த விளையாட்டில் கடவுள் தனக்காக நாம் செய்யும் செயல்களை பதிவு செய்ய ஒதுக்கி வைத்துள்ள பகுதிதான் சித்தம். 

இதன் பதிவுகளுக்கு ஏற்பவே எமது மனதில் விருத்திகள் ஏற்படுகிறது, இந்த விருத்திக்கேற்பவே மேல்மனத்தில் எண்ணங்கள் ஏற்படுகிறது, இதனை இவ்வாறு விளங்கிகொள்ளலாம், எல்லோரும் ஒரு விடயத்தினை ஒரே மாதிரி பார்ப்பதில்லை, பல கருத்து வேற்றுமைகள் காணப்படும், உதாரணமாக ஒரே வகையான மாம்பழம் ஒருவருக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கும், மற்றொருவருக்கும் பிடிக்காத ஒன்றாக இருக்கும். 

இதைப்போல் பல விடயங்களை நீங்கள் யோசித்தறிந்து கொள்ளலாம், 

இதைப்போல் சித்தத்தில் உள்ள பதிவுகளை சரியான நேரத்தில் தூண்டி விடும் இயக்குனர்கள் தான் கிரகங்கள், குறித்த செயல் நடைபெற வேண்டிய எண்ணத்தினை சித்தத்திலிருந்து வெளிப்படுத்தி செயற்படுத்தும் வேலையினை செய்வது மட்டும்தான் கிரகங்களுடைய வேலையன்றி எந்த கிரகமும் நல்லதும் அல்ல, கெட்டதும் அல்ல! நல்ல கர்ம பிரபாவம் உள்ளவனுக்கு ஏழரை சனிகாலத்தில் அமோக முன்னேற்றம் காணப்படும், தற்போதைய அரை சோதிடர்கள் கூறும் பலங்கள போல் கெட்டவை அல்ல! ஏழரைச் சனி என்பதே கர்மகாரகன் மனக்காரனாகிய சந்திரக்கு முன் வீட்டிலும், சந்திரனுடனும், அடுத்த வீட்டிலு இருக்கும் காலத்தினை குறிப்பதாகும், இதிலிருந்தே நீங்கள் விளங்கி கொள்ளலாம், மனதினூடாக கர்மத்தினை வெளிப்படுத்தும் காலம் தான் ஏழரச் சனி என்பது. சென்ற பிறப்பில் செய்த கர்மங்களில் பலமானவற்றை (அது நல்லதோ கெட்டதோ) சித்தத்திலிருந்து தூண்டி மனதில் செயற்படுத்தும் வேலையினை சனி பகவான் செய்வார். 

இப்படி சித்தத்தில் செயற்பாடு மிக நுட்பமானது, இவற்றையெல்லாம் அறிந்த பதஞ்சலியார் மனிதன் தனது கர்மபிரபாவங்களை கட்டுப்படுத்தி சமாதியினை நோக்கி செல்லும் வழியான யோகம் என்பது சித்தத்தின் விருத்தியினை நிறுத்ததல் என்றார். 

இந்த முதலாவது சூத்திரத்திலேயே யோகத்தின் ஒட்டுமொத்த இலக்கினையும் கூறிவிட்டார், அப்படியானால் அதற்கு பிறகு ஏன் 194 சூத்திரங்களை கூறினார், இதனை இப்படி எடுத்துக்கொள்வோம், நாம் கொழும்பில் உள்ளோம், திருவண்ணாமலை செல்லவேண்டும் எனபதே எமது பயண இலக்கு! அதனை ஒரே எட்டில் தாவி சென்று விடமுடியாதல்லவா! முதலில் பயணத்திற்கு தேவையான ஆயுத்தங்களை செய்ய வேண்டுமல்லவா! அதுபோல் இந்த சூத்திரத்தில் யோகத்தின் இலக்கினை கூறிவிட்டார், இனியுள்ள சூத்திரத்தில் இந்த இலக்கினை அடைவதற்கான பொறிமுறைகள் என்ன? என்னென்ன முன் தயாரிப்புகள் அவசியம்! வழியில் வரும் தடங்கல்கள் என்ன? இதுபோன்றவற்றினை சுருக்கமாக ஆனால் விளக்கமாக கூறுகிறார். 

இத்துடன் பதஞ்சலியாரின் முதல் சூத்திரத்திற்கான எமது புரிதல் முற்றும். 

இது தொடர்பான கலந்துரையாரல்களை எமது முகப்பு நூல் குழுமத்தில் கலந்துரையாடலாம். 

ஸத்குரு பாதம் போற்றி!

Monday, December 17, 2012

சித்த வித்யா - யோக வித்யா - மானச வித்யா போன்ற சித்தர்களின் அறிவுக்கருவூலத்தினை எளிய தமிழில் கற்பதற்கான வழி


எமது பதிவுகளை படித்துவரும் அன்பர்கள் பலர் எமது மின்னஞ்சலுக்கு தொடர்பு கொண்டு சித்தர்களின் வித்தைகளை கற்பதற்கு வழிகாட்டும் படி கேட்டவண்ணம் இருக்கிறார்கள். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற திருமூலர் வாக்குக்கமைய நாம் எமது குருநாதரிடம் கற்றவற்றை ஆரவமுள்ள அனைவரும் கற்று பயன்பெற இந்த வலைப்பதிவில் பதிந்து வந்தோம். ஆனாலும் நாம் முழுநேரம் இந்த தொண்டில் ஈடுபடமுடியாதவண்ணம் நளாந்த மற்றைய கடமைகள் அதிகரித்தவண்ணம் உள்ளன, பல கட்டுரைகள் முழுமையடையாமல் பாதியில் நிற்கின்றன. ஒரு பதிவு எழுதுவதற்கு கணிசமான அளவு நேர அவகாசம் தேவை. இப்படியொரு நிலையில் எமது பதிவுகளை படித்து மானச, யோகசாதனை செய்யவேண்டும் என எண்ணும் அன்பர்களுக்கு உதவுவதற்கான வழி என்ன என்று சிந்தித்த போது குருநாதர் ஒரு எண்ணத்தினை மனதில் உதிப்பித்தார். அதன் படி எமது பதிவுகளை படித்து சித்தர் வழியில் சாதனை புரிய வேண்டும் எனற் தீராத்தாகம் உடைய அன்பர்களுக்கு இங்கு முன்மொழியப்படும் வழிமுறை உதவுவதாக இருக்கும். அது என்ன?

எந்த ஒரு விடயத்தினை கற்பதற்கு சுயபடிப்பு அவசியம், ஏன் எமது குருநாதரும் சரி, அவருடைய குருநாதரும் சரி ஒரு வித்தையினை கற்பிப்பதற்கு முன்னர் அதற்குரிய அடிப்படை கொள்கைகளையும், செய்முறைகளையும் பாடங்களாக எழுதி கொடுத்துவிடுவார்கள், அவற்றை நாம் மீண்டும் மீண்டும் கற்று ஆழ்மனதில் பதிப்பித்துகொண்ட பின்னரே அதனை பயிற்சி செய்யவேண்டும். ஆக இந்த வித்தைகள் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் இந்த சுய கற்றலை செய்தல் அவசியமாகும்.

இப்பொழுது உங்கள் மனதில் "சரி நாங்கள், கற்கிறோம், ஆனால் அவற்றினை தருவது யார்?" என கேள்வி எழுவதை நாம் உணர்கிறோம், அதற்கான பதில் "ஆம், எமது குருநாதர் எழுதிய பாடத்தொகுப்புகள் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் உள்ளது, ஆர்வம் உடைய யாரும் பெற்றுக்கொள்ளலாம். விருப்பமானவர்கள் இந்த மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த பாடத்தொகுப்புகளில் உள்ளடங்கிய பாடங்கள் என்ன?

1. காயத்ரி குப்த விஞ்ஞானம்: இந்த பாடத்தொகுப்பு காயத்ரி மந்திர தீட்சை பெற விரும்பும் சாதகனுக்கு போதிக்கப்படுவது, காயத்ரி சாதனையின் அடிப்படையில் இருந்து, காயத்ரி பிரணாயாமம், காயத்ரி தியானம், காயத்ரி மூலம் குண்டலினி விழிப்பு, காயத்ரி யாகசெய்முறை போன்ற விளக்கங்கள் எளியதமிழில் பாடங்களாக  வகுக்கப்பட்டிருக்கின்றன. இதனை கற்று பயிற்சி செய்யும் ஒருவர் காயத்ரி சாதனையின் மூலம் பல பௌதீக, ஆன்மீக நன்மைகளை பெறும் வழிகளை அறிவார்.

2. எளிய ராஜயோகப்பயிற்சிகள்: பதஞ்சலி யோகம் கூறும் அஷ்டாங்க யோகமான இயம,நியம, ஆசன, பிரணாயாம, பிரத்தியாகார, தாரணை, தியானம், சமாதி ஆகியவற்றினை மிக எளிய முறையில் சாதிக்கும் எளிய பயிற்சிகள் அடங்கிய பாடத்தொகுப்பு.

3. இரகசிய வித்யா சாதனை பயிற்சி: குப்த வித்தை என சித்தர்களால் தமது சீடர்களிற்கு கற்பிக்கப்பட்ட அரிய ஞானம், மொத்தம் 23 பாடங்கள், உள்ளடக்கம் வருமாறு: வரவேற்பும் உறுதியும், வித்தியயின் பழமை, பிரபஞ்ச மூலம், பரபஞ்சம் உணர்வுமயம், நினைப்பின் தத்துவம், எண்ணத்துருவங்கள், மன அலையின் செயல்முறை, மூன்று மனங்கள், சாதனை வகைகள்,சாதனைப்பண்பு, இரகசிய வித்யா தளர் சாதனை, இரகசிய வித்யா பிரணாயாமம், சூனிய தாரணை, மனப்பார்வை வளர்ச்சி, மனக் கருத்து வாக்கியங்க்கள், சாதனை தேர்வு, சாதனைக்குறிப்புகள், உடல் சாதனைகள், ஆக்கப்பேறுகள், செழிப்பு சாதனைகள், மனத்தொடர்பு சாதனைகள், கால ஞான சாதனைகள், சூஷ்ம சாதனைகள், முடிவுரை.

4. எளிய தியானப்பயிற்சிகள்: இதில் அடங்கும் பாடங்கள், தியானம் என்றால் என்ன? தியானத்தின் பலன், தியானமும் மனமும், தியானமும் தாரணையும், தியானம் செய்வதற்கான நியமங்கள், தியானத்தேர்வு, உடல் உறுப்பு தியானம், அறாதார விழிப்பு தியானம், காய்த்ரி தியானம், குண்டலினி தியானம், பக்தி தியானம், பிரணவ தியானம், உள்முக தியானம், செயல் தியானம், பிரம்ம லய தியானம்

5. இருதய நோய்க்கு யோக சிகிச்சை: மானச, யோக, சித்த மருத்துவத்தின் மூலம் இருதய நோயினை குணப்படுத்தும் வழிமுறைகள்.

6. ஆண்மை சக்தியிற்கு யோகப்பயிற்சிகள்: மானச, யோக, சித்த மருத்துவத்தின் மூலம் ஆண்மை சக்தியினை பெறும் பயிற்சிகள்.

இப்படி பல நூறு தலைப்புகளில் பாடங்கள் உண்டு, ஆர்வமுடையவர்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்,

இவற்றை பெற்று நீங்களாகவே கற்றுக்கொண்டு இதுதொடர்பான கருத்துப்பரிமாறல்களை கீழ்வரும் சித்த வித்யா விஞ்ஞான முகப்புநூல்  குழுமத்திலும், எமது FACEBOOK கணக்கிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவற்றை எழுதியவர் யோக மஹாரத்னா, டாக்டர். பண்டிட், ஜீ. கண்ணைய யோகியார், அவரது வரலாறு இங்கு காணவும்.

அடுத்த பதிவுகளில் நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய மற்றைய பாடங்களின் விபரங்களைக் குறிப்பிடுகிறோம்.

உலகம் அறிந்திராத ஒரு உன்னத யோகி!


இந்த கட்டுரை எமது குருவின் குருவாம் ஸ்ரீ கண்ணைய யோகியாரின் சீடராகிய அருள் திரு ராஜயோகி ராஜமோகன் ஐயா அவர்கள் தன் குருவின் வாழ்க்கை சுருக்கம் பற்றி  எழுதியது, எமது வாசகர்கள் அறிந்து கொள்ள இங்கே பகிர்கிறோம். 

 - சுமனன் -


குரு வந்தனம்

ஓம் ஆனந்த மாநந்த கரம் பிரசன்னம்
ஞான ஸ்வருபம் நிஜபோத ரூபம் யோகிந்தர மீட்யம்
பவரோக வைத்யம் ஸ்ரீ சத்குரும்
நித்யம் பஜாமி



காவி உடுத்திடாமல் கமண்டலம் எடுத்திடாமல்
காட்டிடை அலைந்திடாமல் காணலிடை நலிந்திடாமல்
பூவுலகம் தன்னை சுத்த பொய் என்றும் புகன்றிடாமல்
புறத்தொரு மதத்தினோரைப் புண்பட பேசிடாமல்
சேவைகள் செய்தற்போதும் தெய்வத்தை தெரிவோம் என்று
தெளிவுற காட்டினாய் உன் தினசரி வாழ்கைதன்னால்
தீவினை இருட்டை போக்கி ஜகமெல்லாம்
விளங்கும் ஆன்மிக யோக ஞான தீபமே
ஸ்ரீ கண்ணைய தேவனே போற்றி போற்றி போற்றி

வாழ்க்கை வரலாறு
யோகி ஸ்ரீ கண்ணையன் அவர்கள் குருசுவாமி தம்பதியினர்க்கு 29-05-1882 அன்று கோயம்பத்தூரில் அவதரித்தார். சிறு வயதிலேயே கடவுளை காண வேண்டும் என ஏக்கம் கொண்டிருந்த அவரை நீலமலை காடுகளின் நடுவே தனது ஆஸ்ரமத்தை அமைத்து கொண்டிருக்கும் ஸ்ரீ அகஸ்திய மாமஹரிஷி அவர்கள் ஆட்கொண்டார். கண்ணையனை தனது பிரதிநிதி மூலம் நீலமலையில் தனது ஆஸ்ரமதிற்கு அழைத்து வர செய்தார் .

18 ஆண்டுகள் அகத்திய மகரிஷியலும் புலிப்பாணி மகரிஷியலும் நான்கு வேதங்கள், 96 தத்துவங்கள், எல்லா மொழிகளின் வடிவ, ஒலி ரகசியங்கள், யந்திர, தந்திர , மந்திரங்கள் ஆக 64 கலைகள், அஷ்டமசித்திகளின் பெருக்கமான 512 சித்திகள் மகரிஷிகளால் கற்பிக்கப்பட்டது. அவருக்கு அளித்த அத்தனை பயிற்சிகளும் நேர்முக அனுபவ பயிற்சி.

கண்ணையன் மூலம் எண்ணற்றவர்கள் பூலோகத்தில் ஆன்மீக வளர்ச்சி பெற காத்து கொண்டிருக்கிறார்கள் என அகஸ்திய மகரிஷி அகக்கண்ணுற்றார். ஆதலால் அவரை பூலோக வாழ்கையை மேற்கொள்ளுமாறு கட்டளையிட்டார். ரிஷி பிரதிநிதி மூலம் மறுபடியும் கோயம்பத்தூரில் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தாய் தந்தையின் வற்புறுத்தலுக்கு இணங்க திருமணத்திற்கு தலை அசைத்தார்.இரு மகவுகளுக்கு தந்தையுமானார். குடும்பத்தோடு சென்னை மாநகரத்தில் உள்ள சூளைக்கு இடம் பெயர்ந்தனர். திடீரென தந்தை இறக்கவே தனது தந்தையின் தொழிலான நாடி ஜோதிடம் செய்ய நேரிட்டது. காலச்சக்கர வசத்தால் குருநாதரின் தாயார், துணைவியார் இருவரும் இவரை பிரிந்து விண்ணுலகம் சென்று விட்டனர்.

தனக்களிக்கப்பட்ட பணியான யோக வித்தையை உலகெங்கிலும் பரப்ப அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. தனது இரு மகவுகளை பேணி காக்க வேண்டி இருந்ததால் தனது குருநாதரின் அறிவுரையின்படி இரண்டாவது மணம் நடந்தேறியது. வாழ்கையில் எல்லா பொறுப்புகளையும் இனிதே நிறைவேற உதவியவர்கள் இவரது சீடர்களும் மாணவர்களும் தான்.

பௌதீக வாழ்கையை தொடர ஆசிரியர் தொழிலை மேற்கொள்ள முடிவு செய்து பண்டிட் பட்டம் பெற முற்பட்டார். பச்சையப்பன் கல்லூரியில் பண்டிட் தேர்வுக்கான வகுப்பை ஓர் வைணவ ஆச்சாரியார் நடத்தி வந்தார். தன்னையும் தேர்வுக்கு பயில்விக்க கண்ணையன் அவரை வேண்டிய பொழுது , இராமாயண இதிகாச வகுப்பை நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் , "உன்னால் பண்டிதன் ஆக முடியாது" என் கடும் சொற்களால் சாடி வெளியே போகுமாறு கூக்குரலிட்டார். மறுநாளும் ஆச்சரியாரை நாட அதே கடும் சொற்கள் மீண்டும் ஒலித்தது. கண்ணையன் மௌனமாக வெளியே நின்று கொண்டிருந்தார். ஆசிரியர் தான் நேற்று நடத்திய கம்ப ராமாயணத்தின் விளக்கத்தை கேட்க அனைத்து மாணவர்களும் பதில் கூறாது விழிக்க, ஆசிரியரின் கண்கள் சிவந்தன. இத்தருணத்தில் கதவருகில் நின்ற கண்ணைய யோகி "நான் சொல்லட்டுமா ?" என்று பணிவுடன் கேட்டார். சினத்தின் எல்லையில் இருந்த ஆச்சாரியார் கொதித்தெழுந்து " நீயா..? சொல்லு.. சொல்லு பார்க்கலாம் .." என்று கர்ஜித்தார். கண்களை மூடிய வண்ணம் ஞான ஒளி கண்டு கம்பராமாயண செய்யுட்களை வரி பிசகாமல் அப்படியே மடை திறந்த வெள்ளம் போல் செப்பி முடித்தார். ஓடி வந்து கண்ணையனை கட்டி பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தார் ஆச்சாரியார். தேர்வுக்கான கட்டணத்தை தானே ஏற்று தன் மாணவனை "பண்டிட்" ஆக்கினார்.

ரிக் முதல் அதர்வண வேத மந்திரங்கள் மற்றும் இதிகாச, புராண சம்பவ நிகழ்சிகளின் போது அருளப்பட்ட ஸ்தோத்திரங்கள், உயிரினங்களின் உள்ளும் புறம்பும் அண்டத்தில், ஆகாயப்பரப்பில் ஒலியலையென செய்யும் ஜால வித்தைகள் , ஆரம்ப கீர்வனத்திலிருந்து , எல்லா மொழிகளிலும் புதைந்து கிடக்கும் ரகசியங்களை தன் நூல்களில் சொற்பொழிவுகளில் வெளியிட்டவை ஏராளம். ஓர் ஓரின எழுத்து முதல் எழுத்து கோர்வைகளை ஓத செய்து தன் மாணவ சீடர்களுக்கு அவற்றின் வடிவம், சக்தி, நிறம், அலைகழிவு, ஆர்ப்பாட்டம் போன்ற விஞ்ஞான விளக்கங்களை பரிசோதனை வாயிலாக ஆக்கபூர்வமாக அறியச்செய்த தெய்வான்மீகர் இவர்.

அன்றாட வாழ்கையில் காலையில் கண் விழித்தது முதல் பல் தேய்க்க, நாவை வழிக்க, உத்தியோக உயர்வு, வியாபாரம் சிறக்க, அகால மரணம் தவிர்க்க, அறிவு வளர , ஆயுள் நீள, ஆர்வம் நிலை பெற, கடன்கள் மறைய, உறவு - பகை மாற, எண்ணும் காரியங்களில் வெற்றி பெற, எஜமானர்களின் மதிப்பை பெற, ஏவல் தோஷங்கள் மறைய , கெடுமதி ஆவிகள் ஓட, பயம் நீங்க, கர்ப தோஷங்கள் அகல, கர்ப்பம் உண்டாக-ரட்சிக்க, கல்யாணம் ஆக, தொலைந்து போனவர்களை - போனவைகளை மீட்க, கீர்த்தி உண்டாக, கெட்ட கனவுகள், குணங்கள் மாற, கிரக பீடைகள் நீங்க, அருள் பெற, செல்வம் பெற, சௌபாக்கியம் உண்டாக, கணவன் மனைவி அன்புடன் வாழ, கீர்த்தி பெற, ஞானம் பெற, ஆன்மிக தடைகள் நீங்க, பாண்டியத்துவம் பெற, பாவங்கள் விலக, ஊர்வன பயம் நீங்க, மழை வரவழைக்க-தடுக்க, பலம் பெற செப்பிடும் மந்திரங்கள் - பௌதீக இன்ப வாழ்க்கைக்கு ஏதுவான இது போன்ற முடிவில்லா நீண்ட கலியுக சித்திகளின் வானுயர்வு அடுக்கு மாடி மந்திர கட்டடத்திற்கு சொந்தகாரர் இவர் என்றால் மிகை ஆகாது.


காஞ்சி காமாட்சி அம்மனின் அருளாசி பெற்று காஞ்சியின் கண் கண்ட தெய்வமாக விளங்கிய ஸ்ரீ சந்திரசேகர பரமாச்சாரியாரை பல்லக்கில் அமரச்செய்து அம்பதூரிலிருந்து குருநாதரின் வீட்டை கடக்கும் கணத்தில் " நில்லுங்கள்" என்று பல்லக்கை சுமந்த பக்தர்களிடம் கூற, அவருடைய தீர்கப்பார்வை குருநாதரின் பூஜை அறையை நோக்கி சென்றது... இது வீடு அல்ல.. சாட்சாத் அம்பாள் அருள் பாலிக்கும் ஆலயம் எனக்கண்டார். மானச வழிபாட்டிற்கு பின் , சிறிது நேரம் கழித்து தன் பயணத்தை தொடர்ந்தார். தன் தெய்வான்மீகபணிகளை முடித்து பரமாச்சாரியார் திரும்பிய வேளையிலும் இதே காட்சி நீடித்தது. பூஜை அறையில் இருந்த குருநாதரும் பரமாச்சாரியாரின் சக்தி தரிசனத்தை உணர்ந்தார். இவர்கள் தெய்வ கடாட்சம் எங்கெல்லாம் நிறைந்திருக்கிறது என உணர்ந்தவர்கள்.

நமது குருநாதரின் பிரதம சீடர்களில் ஒருவரான சிறப்பு தீட்சை பெற்ற திரு ஆர் .கே. முருகேசு, ஸ்ரீலங்கா அவர்கள், பௌர்ணமி தியானம் முடிந்து மொட்டை மாடியில் (குரு நாதர் அங்கேயே இருந்ததால் குளிரையும் பொருட்படுத்தாது ஓர் ஓரத்தில் உறங்க ஆரம்பித்தார். திடீரென்று "தெய்வ ஒளிக்கதிர்கள் அவர் கண்களில் பாய்ந்தன. யாரும் காண முடியாத கந்தர்வ காட்சியை கண்டார். ரிஷிகள் கூட்டம் நம் குருநாதரின் முன் அமர்ந்திருந்தது. ஏதோ ஒன்றினை காண்பித்து விளக்கம் கேட்க, ஸ்ரீ கண்ணைய தேவன் பதிலுரைத்துகொண்டிருந்தார். ரிஷிகளின் தரிசனம் அவர்களின் ஞான ஒளி கிரணங்கள் இவருக்கு அருள் பாலித்து கொண்டிருந்ததன. அவர் தான் பின்பு ஸ்ரீலங்காவின் ஆன்மிக அரசாக விளங்கிய சுவாமி ஆர்.கே.முருகேசு . மக்கள் கூட்டத்தை அகர்ஷணிக்கும் ஸ்ரீலங்காவின் தெய்வான்மீக விடிவெள்ளியாக பிரகாசித்தார்.

மும்பையில் நடை பெற்ற அகில உலக யோகியர் மாநாட்டில் யோகம் குறித்து நீண்டதொரு சொற்பொழிவாற்றினார். பாண்டிச்சேரியில் வாழ்ந்த சுவாமி கீதனந்த நடத்திய அகில உலக யோகியார் மாநாட்டில் " யோகா மகாரத்னா" என்ற பட்டதை நமது குருநாதருக்கு அளித்து பெருமை சேர்த்து கொண்டது.


ஒரு சமயம் சென்னை திருமுல்லைவாயிலிலுள்ள ஈஸ்வரன் கோவிலில் உச்சிகால பூஜை நடந்து கொண்டிருந்த போது சிவனுக்கு நெய்வேதியம் முடிந்ததும் அதனை சிவனடியார்க்கு கொடுப்பது கட்டாய வழக்கம். அன்று இராமலிங்க அடிகளார் தனது சீடர்களுடன் அங்கே வர நெய்வேத்தியம் சீடர்களுக்கு கொடுக்க படவில்லை. சீடர்களின் பசியை போக்காததால் அடிகளார் கோவிலுக்கு சாபமிட்டார். பிற்காலத்தில் அவ்வூர் மக்கள் நம் குருநாதரை அணுகி பாவ விமோசனம் செய்விக்கப்பட்டு அக்கோயில் புத்துயிர் பெற்றது.


"ஏகம் சத்" என்ற பரம்பொருள் ஒன்றிருக்க, குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருக்கும் கிரஹஸ்தர்களும் எல்லா தேவ தேவியர்களிடமிருந்து அருள் பெரும் ரகசிய முறைகளை அவரவர்களுக்கு தகுந்தபடி ஆக்கி கொடுத்தார். அது மட்டுமல்ல தன தாய் மாமனுக்கு திருப்தி வேங்கடஜலபதியை நேர்முக தரிசனம காண செய்தவர்.

நீலகிரி மலைகாடுகளிருந்து திரும்பி வந்த சமயம், நமது சுவாமிகள் சென்னைக்கு வர வேண்டியிருந்தது. பௌதீக உலகில் இயங்கும் புது கண்டுபிடிப்புகள், அவற்றின் இயக்கங்களை, தான் கற்ற வித்தைகளுடன் நேர்முகமாக ஒப்பிட்டு கொள்வது அவரின் இயல்பாக இருந்தது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்று நீராவி ரயில் இஞ்சின் எவ்வாறு இயங்குகிறது என்று பார்க்க முற்பட்டார். அவ்வமயம் எஞ்சின் இணைக்கப்பட்டு ஒரு ரயில் வண்டி தொடர் பிளாட்பாரத்திலிருந்து புறப்பட தயார் நிலையில் இருந்தது. (பிளாட்பார அனுமதி சீட்டு அந்நாளில் வழக்கு முறையில் இல்லை) பயணசீட்டு பரிசோதகரை அணுகி, தான் பிளாட்பாரம் சென்று ஓரிரு நிமிடங்களில் இன்ஜினை பார்த்து விட்டு வந்து விடுவதாக வேண்டினார். அதற்கு பயணச்சீட்டு பரிசோதகர் அவரை கடும் சொற்களால் பேசி அவரை வெளியே நிற்க வைத்துவிட்டார். . அங்கேயே நின்று கொண்டிருந்த சுவாமிகள் விண்ணப்பித்து கொண்டே இருந்தார். பத்து நிமிடங்கள் ஆயின. கார்ட் விசில் கொடுத்து பச்சை கொடியை காட்டினார். ரயில் புறப்பட ஆரம்பித்தது. சுவாமிஜியின் பார்வை இன்ஜினை நோக்க இஞ்சின் இயக்க நிலையை இழந்தது. ஆம் இரயில் நின்று விட்டது. இஞ்சின் டிரைவர் எவ்வளவு முயன்றும் வண்டி ஓடவில்லை. நிலைய அதிகாரிகள், மெகானிக்குகள் ஓடி வந்து இன்ஜினை இயக்க முற்பட்டார்கள். முடியவில்லை. இந்த காட்சி 30 நிமிடங்கள் தொடர்ந்தது. சுவாமிஜி டிக்கெட் பரிசோதகர் அருகிலேயே நின்று கொண்டிருந்தார் . இந்நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த ரயில்வே நிர்வாக ஊழியர் ஒருவர் சுவாமிஜியை நோக்கினார். இவர் ஒரு சாதாரனமானவர் இல்லை என்று உணர்ந்து, டிக்கெட் பரிசோதகரை அணுகி, பிளாட்பாரத்தில் அனுமதிக்குமாறு வேண்டினார். டிக்கெட் பரிசோதகரும் அனுமதிக்க, இன்ஜினின் இயக்கத்தை கண்டபின் மனக்கட்டுப்பாட்டை தளர்த்தினார். இன்ஜினும் இயங்க ரயிலும் புறப்பட்டது. பின் தான் தங்கி இருந்த அறையை அடைந்ததும் கோபக்கனல் தெறிக்க குருவின் தரிசனம் கிடைத்தது. இவருடைய சித்து விளையாட்டை உணர்ந்த புலிப்பாணி மகரிஷி " சித்தா விளையாடினாய் ? உன்னால் 30 நிமிடங்கள் ரயில் வண்டி தாமதமாக சென்று அடையும். அதனால் மக்கள் அவதிக்கு உள்ளாவார்கள்" என்று கண்டித்து " இனி சித்து விளையாடுவதை நிறுத்து" என்று ஆணையிட்டார்.

இது போன்று இன்னும் குருநாதரின் வாழ்கையில் ஏற்பட்ட ஏராளமான அற்புத நிகழ்வுகள், அவரது யோகா, ஞான, மூலிகை பயிற்சிகள், மந்திர, யந்திர, வித்தைகள், அவரது புத்தக தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

02-12-1990 அன்று - கார்த்திகை மாதம் ஞாயிற்று கிழமை, பிரம்ம முகூர்த்தத்தில், பௌர்ணமியில் அண்ணாமலை கார்த்திகை தீப திருநாளில். உடலில் இருந்து நிரந்தரமாக வெளி வந்து , மாலை சந்தியா காலத்தில் அம்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை மகா தீபம் நோக்கி, ரிஷிகள், சித்தர்கள், யோகிகள், தண்ணொளி ஈந்து முன் செல்ல, தேவர்கள், கண நாயகர்கள் பின் தொடர்ந்து பொற்கமலங்கள் தூவிய வண்ணம் புகழ் பாடி அழைத்து சென்று விட்டனர். இவர் பயன்படுத்திய அனைத்து பொருள்களும் இன்றும் சபையில் இருக்கிறது. இவர் ஒரு ஜீவன் முக்தர். தன்னை நினைக்கும் பக்தர்களுக்கு எல்லா உலகங்களிலும் காட்சி தந்து, அருளும் வரம் நல்க பெற்றவர். பக்தி சிரதையுடன் வழிபடுங்கள். அருள் கிட்டும். இராமாயண சுந்தர காண்டத்தை , சுவாமிஜி அருளிய விளக்கம் நல்கிய " பிரம்ம ப்ராப்தி" யை ரிக்-யஜுர்-சாம வேதத்தில் அருள் கேட்கும் மந்திரங்களை பாராயணம் செய்தால் என்ன பேறுகள் கிட்டுமோ அதே பேறுகளை உத்தம உண்மை யோகியாரின் சரிதத்தை படிப்பவர்களுக்கும் கிடைக்க என் தெய்வ குருநாதரையும், ஸ்ரீ காயத்ரி தேவியையும், ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரியையும் இரு கரங்கூப்பி , மனமார வேண்டுகிறேன்.

 - ராஜயோகி ராஜமோகன் - 

Friday, October 12, 2012

சித்தத்தின் செயற்பாடு (பதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள் 05)



சென்ற பதிவில் சித்தம் என்பது முழுமையான மனம் அல்ல,மனதின் ஒரு கூறான ஆழ்மனமே சித்தம் என்று பார்த்தோம். பதஞ்சலியார் மனதின் மற்றைய கூறுகளான மேல் மனம், புத்தி, அகங்காரங்களின் விருத்திகள் அல்லது செயற்பாட்டினை தடை செய்ய சொல்லவில்லை. சித்தத்தின் விருத்தியினையே தடை செய்யச் சொல்லுகிறார். ஏன்?

மற்றையவை ஒரு வழியில் ஞானத்தினை, இறைவனை அடைய உதவும் கருவிகள், மேல் மனம் இறைவன் மேல் செலுத்தலாம், புத்தி அறிவினை அடைந்து இறை ஞானத்தினை அடைய உதவும், அகங்காரம் நான் கடவுள் என்று உணர உதவியாக இருப்பது, ஆனால் சித்தமே இவை எல்லாவற்றையும் பதிந்து வைக்கும் கோப்பு மட்டுமே, அது தானாக எதையும் செய்யாது. மற்றைய மூன்றும் ஆன்மாவின் இச்சைக்கு ஏற்ப மாறக்கூடியவை, ஆனால் சித்தத்தில் உள்ள பதிவுகள் நிரந்தரமானவை, அவற்றை அகற்றாமல் மனிதன் எதுவித மாறுதலுக்கும் உள்ளாக முடியாது. மனிதனின் துன்பத்திற்கு காரணம் மேல் மனமல்ல, மேல் மனம் ஒன்றை அவதானிப்பதுடன் அதன் வேலை முடிந்து விடுகிறது, அதற்கு மேல் அது அதனை பற்றுவதில்லை.

அடுத்து புத்தி இது சரி, இது பிழை என சுட்டிக்காட்டுவதுடன் தனது வேலையினை முடித்துக்கொள்கிறது. அதுவும் மனிதனை ஒரு விடயத்தினை பற்றிக்கொள்ள வைப்பதில்லை.

அகங்காரமும் இவற்றிற்கேற்றவாறு மாறும் தன்மை உடையது, இந்த மூன்றையும் உருபெற வைக்கும் தகவல்களைக் கொடுப்பது சித்தம் எனும் பதிவகமே.

அதாவது புத்தி இது சரி இது பிழை என முடிவெடுப்பது சித்தத்தில் உள்ள பதிவுகளுக்கேற்பவே!

மேல் மனம் ஒரு வியயத்தை நாடுவதற்கு விருப்பத்தினை உண்டு பண்ணி தீனி போடுவது இந்த சித்தத்திலுள்ள பதிவுகளே!

அது போல் ஒருவர் தனது அகங்காரத்தின் மையத்தினை உருவாக்குவதும் சித்தத்திலுள்ள பதிவுகளுக்கு ஏற்பவே!

ஆக மேல் மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கும் சேர்ந்த மனம் என்ற தொகுதியில் சித்தம் என்ற பதிவுகளை சேகரிக்கும் கூறே மற்றைய மூன்று பகுதிகளையும் ஆட்டிப்படைத்து வைக்கிறது, இதுவே மனிதனது துன்பங்கள் இன்பங்கள் எல்லாவற்றிற்கும் காரணம், இதில் உள்ள பதிவுகளின் படியே மற்றைய கூறுகள் நடக்கும். இந்தப்பகுதியில் நல்லவற்றைப் பதித்தால் நல்லதும், தீயவற்றை பதித்தால் தீயது நடக்கும்.
ஆக இதுவரைகாலமும் நீங்கள் சித்ததில் சேர்த்த பதிவுகள் எல்லாவற்றையும் நீக்கும் செயல் முறையே யோகத்தின் முதற் படி என்பதனை சுட்டிக்காட்டவே இந்த சூத்திரத்தில் "சித்த வ்ருத்தி நிரோத" என்றார்.

இதுவரையும் மனமும் சித்தமும் ஒன்றல்ல என்பதனையும் சித்தம் என்பது மனதின் மிகவும் பலமாக கூறு என்பதனையும் பார்த்தோம். இதனை கையாளத்தெரிவதே யோகத்தின் முதற்படி என்பதனையும் பார்த்தோம்.

இதனை எப்படி சாதிப்பது? அதையும் இந்த சூத்திரத்தில் கூறியுள்ளார்,

அது பற்றி அடுத்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

Thursday, October 11, 2012

யோகத்தில் ஏன் ஒழுக்கம் அவசியம் (பதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள் 04)



யோக சூத்திரத்தின் முதலாவது சூத்திரம் யோகம் என்பது ஒழுக்கம் என்று குறிப்பிட்டது. ஒழுக்கம் என்பது ஒழுங்கு முறைக்கு உட்பட்டு செயற்படும் செயற்பாடாகும். ஏன் இந்தப்பிரபஞ்சமே ஓர் ஒழுங்கு முறைக்கு உட்பட்டே செயற்படுகிறது, இந்த செயன் முறையிலிருந்து மாறுபட்டதாலேயே மனிதன் தனது உண்மையான நிலையைனை மறந்துபோனான். அதனைத் திரும்பிப் பெற ஒழுகவேண்டிய செயன்முறையே யோகம்.

எந்த ஒரு காரியத்தினை செய்யவேண்டுமானாலும் அதனை ஒரு ஒழுங்குமுறைப்படியே செய்யவேண்டும் என்பது அனைவரும் அறிவர். சோறு சமைக்கவேண்டுமானால் அரிசியை கழுவவேண்டும், அடுப்பில் நீரை ஏற்றி கொதிக்க விடவேண்டும், கொதித்து வரும் போது அரிசியை இடவேண்டும், பின்னர் சரியான பதத்தில் நெருப்பை நிறுத்தி எடுக்க வேண்டும், இதை ஒழுங்கான முறைப்படி செய்தால்தான் ருசியான் சோறு கிடைக்கும்.

அதுபோல் மனதினை, உடலினை, பிராணனை சரியான முறையில் பக்குவப்படுத்தி அவற்றை வலுப்படுத்தி பின்னர் அவற்றிலிருந்து ஆன்மாவினைப் பிரித்து, விழிப்புணர்வினை அடைந்து அதன் மூலம் இறைவனை அடையும் ஒழுங்கு முறையான செய்கையே யோகம். இந்த ஒழுக்க முறைகளின் தொகுப்பே யோக சூத்திரம். இவ‌ற்றின் விரிவு ப‌ற்றி ம‌ற்றைய‌ சூத்திர‌ங்க‌ளில் கூற‌ப்ப‌ட்டுள்ள‌து.

ப‌த‌ஞ்ச‌லியார் த‌ன‌து அடுத்த‌ சூத்திர‌த்தில் யோக‌த்தில் செய்ய‌வேண்டிய செயற்பாட்டினை முத‌லாவ‌து சூத்திர‌த்தில் கூறுகிறார்;

"சித்த‌ விருத்தி நிரோத" ‍ "சித்த‌த்தின் விருத்தியினை நிரோதித்த‌லே யோக‌ம்" (02)

இந்த‌ சூத்திர‌ம் பொருள் கொள்ள‌ப்ப‌டும் வித‌ம் ச‌ற்று சிக்க‌லான‌து, சுவாமி விவேகானந்தல் உட்பட பெரும்பாலான‌ உரையாள‌ர்க‌ள் சித்த‌ம் என்ப‌த‌னை ம‌ன‌ம் என‌வே பொருள் கொள்கின்ற‌னர். இது ச‌ரிய‌ல்ல‌ என்ப‌து எம‌து குருப‌ர‌ம்ப‌ரையின‌ரின் க‌ருத்து, ஏனெனில் ம‌ன‌ம் வேறு சித்த‌ம் வேறு என்ப‌த‌னை குருநாத‌ர் அக‌ஸ்திய‌ரே த‌னது பாட‌லில் கூறியுள்ளார்;

"மனந்தானே புத்தியாங் காரஞ்சித்தம், மதியிரவி யண்டபிண்ட மானவாறும்"
அக‌த்திய‌ர் ஞான‌ம் 30 ‍ பாட‌ல் 07,

பொதுவாக ம‌ன‌ம் என்ப‌து புத்தி, அக‌ங்கார‌ம், சித்த‌ம் என்ற‌ நான்கினையும் குறிப்பிட்டுச் சொல்லும் பொதுச் சொல். இந்த‌ நான்கு பிரிவுக‌ளும் அந்த‌க்க‌ர‌ண‌ங்க‌ள் என‌ப்ப‌டும்.

இவ‌ற்றில் ம‌ன‌ம் என்ப‌து மேல்ம‌ன‌ம், அதாவ‌து ம‌னித‌னில் ச‌தா செய‌ற்ப‌ட்டுக்கொண்டு, இது என்ன? அது என்ன? என‌ ஆராய்ந்துகொண்டிருக்கும் இய‌க்க‌ கூறு.

புத்தி என்ப‌து எது ச‌ரி, எது பிழை என‌ ஆராயும் கூறு.

சித்த‌ம் என்ப‌து புலன்களால் பெறும் பதிவுகளை சேமித்து வைக்கும் ஆழ்ம‌ன‌த்தினை குறிக்கும்.

அஹ‌ங்கார‌ம் என்ப‌து மேற்கூறிய‌ மூன்றும் செய‌ற்ப‌ட‌த்தேவையான‌ மைய‌மாகும். இந்த மைய‌த்தினை எப்ப‌டி வ‌டிவ‌மைக்கின்றீர்க‌ளோ அத‌ன் ப‌டிதான் ம‌ற்றைய‌ மூன்றும் உருப்பெறும். அதாவ‌து நான் ந‌ல்ல‌வ‌ன் என்ற‌ அக‌ங்கார‌ மைய‌த்தில் இருந்தீர்க‌ளானால் அத‌ன்ப‌டியே உங்க‌ள் சித்த‌ம், புத்தி, மெல்ம‌ன‌ம் என்ற‌ மூன்றும் செய‌ற்ப‌டும். அதேபோல் ம‌றுத‌லையாக‌ இந்த‌ மூன்றினூடாக‌வே அக‌க்கார‌ மைய‌ம் உருப்பெறுகிற‌து. அதாவ‌து மேல்ம‌ன‌ம் பெறும் அனுப‌வ‌ங்க‌ள் புத்தி மூல‌ம் ஆராய‌ப்ப‌ட்டு சித்த‌த்தில் ப‌திய‌ப்ப‌ட்டே "நான் நல்ல‌வ‌ன்" என்ற‌ அக‌ங்கார‌ம் உருவாகிற‌து.

இப்ப‌டி ப‌ல‌ அக‌ங்கார‌ங்க‌ளை உருவாக்கி, உருவாக்கி இறுதியாக‌ எம‌து உண்மையான நான் ஆன்மா எனும் மைய‌த்திலிருந்து வில‌கி இப்ப‌டியான போலியான‌ நானிற்கு வ‌ந்து விட்டோம். இதுப‌ற்றி நாம் இந்த‌ப் ப‌திவில் குறிப்பிட்டுள்ளோம், ப‌டித்துப் பார்க்க‌வும்.

இப்போது இந்த‌ போலியான‌ மைய‌த்திலிருந்து உண்மையான‌ மைய‌த்திற்கு ப‌ய‌ணிக்க‌ப்போகும் ப‌ய‌ண‌மே யோக‌ம். இந்த‌ப்ப‌ய‌ண‌த்தில் எம‌க்கு போலியான‌ மைய‌த்தினை உருவாக்கிய‌ இந்த‌ நான்கு ப‌குதிக‌ளையும் தூய்மைப்ப‌டுத்தி ச‌ரியான‌ மைய‌த்தினை அடையும் வ‌ழியாக ஆக்க‌ வேண்டிய‌ செய‌ல்முறையே யோக‌மாக‌ இருக்க‌ ப‌த‌ஞ்ச‌லியாம் முத‌லாவ‌தாக‌ கூறுவ‌து சித்த‌மாகிய‌ ஆழ்ம‌ன‌தின் விருத்திக‌ளை நிறுத்து என்று!

ப‌த‌ஞ்ச‌லி மன‌தினை ப‌ற்றி முழுமையாக‌ கூறியுள்ளார், ஆனால் சூத்திர‌ங்க‌ளாக‌வே கூறியுள்ளார். சூத்திர‌ங்க‌ள் சுருக்க‌மாக‌ ஆனால் முழுமையாக‌ உரைக்கும் வ‌ல்ல‌மை உடைய‌ குறிச் சொற்க‌ள். அதிலுள்ள‌ ஒவ்வொரு வார்த்தையும் அது கூற‌வ‌ரும் பொருளைப்ப‌ற்றி ஆழ‌மாக‌ உரைக்கும்.

யோக‌த்தின் முத‌ல் ப‌டி ம‌ன‌தின் விருத்தியினை த‌டை செய்ய‌வேண்டும் என‌க் கூற‌வில்லை. ஏனெனில் ம‌ன‌ம் என்பது நான்கு உட்பிரிவுக‌ளுடைய‌து என்பத‌னை ப‌த‌ஞ்ச‌லியார் ந‌ன்கே அறிந்த‌வ‌ர், அவ‌ற்றில் சித்தம் தவிர்ந்த ம‌ற்றைய மூன்றினது விருத்தியினை த‌டை செய்ய‌ இய‌லாது, ஏனெனில் அவை மூன்றும் இருப்பிற்கு அவ‌சிய‌மான‌து. சித்த‌ம் ஒன்றே ப‌திவுக‌ளை சேக‌ரிக்கும் ப‌குதி அத‌னை ஒழுங்கு ப‌டுத்துவ‌தே முத‌ன்மையான‌ செய‌ல் என்ப‌தாலேயே சித்த‌ விருத்தி நிரோத‌ என்றார்.

இத‌னைப் பற்றி மேலும் விப‌ர‌மாக‌ அடுத்த ப‌திவில் பார்ப்போம்!

Wednesday, October 10, 2012

யோகம் பயில்வதற்கான நிலை என்ன? (பதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள் - 03)-



முதலாவது சூத்திரத்தின் முதலாவது சொல்லில் "அத -இப்போது"  எனக் குறிப்பிடுகிறார். அந்த இப்போது என்ற மன நிலையின் பக்குவம் என்ன? பொதுவாக யாருக்கும் உண்மையான யோக வழியில் செல்லவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்? மாயை என்ற ஒன்று உள்ளது அது எம்மை கட்டுப்படுத்துகிறது, அதனால் இன்பம் வருகிறது, பின்னர் அது நிலையிலாமல் துன்பமாகிறது. இப்படி எப்போதும் ஏதோ ஒருவகையில் இன்ப துன்பம் ஏற்படுகிறது என்பதனை உணர்ந்தவனிற்கு இந்த மன நிலை ஏற்படும். 

வாழ்க்கையில் எல்லவித துன்பத்தினையும் அனுபவித்து, இனித்துன்பம் வேண்டாம் நிலையான் இன்பம் ஒன்று இருந்தால் அதனை தேடவேண்டும் என்ற நிலை ஏற்படும் போது யோகம் பயிலவேண்டும் என்ற தகுதி உண்டாகிறது. இப்படியான இரு நிலையில் ஒவ்வொருவரும் குழம்பிய, ஒழுங்கற்ற நிலையினை அடைகின்றனர். அதாவது கடந்தகால அனுபவங்கள் மாயையின் விளையாட்டுகளால் துன்பத்தினை அனுபவித்து குழம்பி, தன்னை விட மேலான ஒன்று உளது என்ற உணர்ந்த நிலையில் யோகம் என்ற பிரம்மத்துடன்/சிவத்துடன் இணைய வேண்டும் என்ற முயற்சி உண்டாகிறது. இந்த முயற்சிக்கான சரியான வழிதான் அனுசாஸனம் - ஒழுங்கு முறை. 

ஏன் ஒழுங்கு முறை?  

இப்போது நீங்கள் குழம்பி உள்ளீர்கள், உங்களிடன் ஒரு புள்ளியில் நிலைத்திருக்க கூடிய மையம் இல்லை, அதனை உருவாக்கினால் தான் நீங்கள் உங்களது உண்மையான சொருபம் நோக்கி நகரமுடியும் என்பதனை குறிக்கவே ஒழுங்கு முறை தேவை என்றார். அதாவது பேராற்றலான மனம் (இன்னும் எதை ஒழுங்கு படுத்தவேண்டும் என்பதனை பதஞ்சலியார் கூறவில்லை, அதனை அடுத்த சூத்திரத்தில் கூறுகிறார், அது மனமே ஆகும்) மாயையினால் குழம்பி ஒரு மையமற்று செயற்பட இயலாத நிலையில் உள்ளது. இதுவே இன்றைய பெரும்பாலனோரது நிலை, இந்த நிலையில் உள்ள மனதை ஒழுங்கு முறைப்படுத்தி விழிப்புணர்வினை ஏற்படுத்தி எமது அடையவேண்டிய இறை நிலையை நோக்கி செலுத்த வல்லதாக்க ஒழுங்கு படுத்த வேண்டி உள்ளது. 

ஏன் ஒழுங்கு படுத்த வேண்டும்? ஒழுங்கு படுத்தும் போதுதான் மனதினை விழிப்புணர்வுடன் ஆற்றலுடன் இலக்கு நோக்கி செலுத்த முடியும். 

ஆக யோக சூத்திரத்தின் முதலாவது சூத்திரமான ""அத யோகானுசாஸனம்" - இப்போது யோக ஒழுங்கு முறை" என்பது ஒரு யோக சாதகன் யோகம் பயில்வதற்கான தகுதி, அதாவது எந்த நிலையில் பயிலத்தொடங்க வேண்டும் என்பதனையும், அதற்கான வழிமுறை ஒழுங்கு படுத்துதல் என்பதனையும் குறிப்பிட்டுள்ளர். அடுத்த சூத்திரத்தில் எதனை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதனைக் கூறுகிறார். அதன் விளக்கத்தினை அடுத்த பதிவில் பார்ப்போம். 

Tuesday, October 09, 2012

யோகம் என்றால் என்ன? (பதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்- 02)


யோகம் என்றால் என்ன பொருள்? இன்றை நிலையில் யோகம் என்றால் ஆசனம், பிரணாயாமம் என்றே பொருள் கொள்ளப்படுகிறது. இது இன்றைய நிலை, சற்றே சமஸ்கிருத பொருள் அறிந்தவர்கள் இணைதல், ஒன்றாதல் என்று பொருள் கொள்வர், அதாவது இறைவனுடன் இணையும் செயல்முறையே யோகம் எனப்படும். இதுவே சரியான பொருளும் ஆகும். சரி இறைவனுடன் இணைவதுதான் யோகம் என்றால்? எப்படி இணைவது? அதற்கான பயிற்சிகளின், விளக்கங்களின் தொகுப்பே யோக சூத்திரங்கள். 

இறைவனுடன் "நான்" இணையவேண்டுமானால் "நான்" யார்? என்பதனை சரியாக தெரிந்துகொள்ள வேண்டும். நான் என்பது கொள்கை அளவில் "ஆன்மா" எனத்தெரிந்திருந்தாலும் அதை எப்படி செயல்முறையில் தெரிந்துகொள்வது? அதற்கு என்னை சூழ என்ன என்னவெல்லாம் இருக்கிறது என்பதனை தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டுமல்லவா? நீங்கள் ஒரு ஊரில் பிறந்தீர்கள், உங்களை யாரோ கடத்திக்கொண்டு வந்து இருட்டறையில் அடைத்து வைத்துள்ளார்கள், இப்போது நீங்கள் தப்பி உங்கள் இருப்பிடத்தை அடைய வேண்டும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முயல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம், இந்த நிலைதான் மனிதப்பிறப்பெடுத்து யோகம் பயின்று சாதனை புரிந்து இறைவனை அடைய விரும்பும் இறை சாதகனின் நிலை. 

பரமான்மாவிடம் ஒன்றாக இருந்த எமது ஆன்மா மாயை எனும் கடத்தல்காரனால் கடத்தி வரப்பட்டு உடல், பூமி என்ற சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றோம். இந்த நிலையில் இருந்து மீண்டு பரமான்ம செரூபம் அடைதலே யோகத்தின் இலக்கு. இது ஒரு மீளும் பயணத்திற்கான போர், இந்த போரில் என்ன செய்யவேண்டும்? எப்படி திட்டமிடவேண்டும் என்ற தந்திரமே உண்மையான யோகம். இதில் ஒரு அங்கமாக உடலையும், பிராணனையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செயல்முறைதான் இன்று யோகம் எனப்படுகிறது. ஆனால் இந்த யுத்தம் நிகழும் தளமான மனதினைப்பற்றி கற்பிக்கும் குருமாரும் குறைவு, ஆராயும் மாணவரும் இல்லை. 

சரி யோகம் யாருக்கு உரியது? ஏனெனில் முதலாவது சூத்திரத்திலேயே பதஞ்சலியார் 

"அத யோகானுசாஸனம்" - இப்போது யோக ஒழுங்கு முறை (01)

என்கிறார். இந்த சூத்திரம் யோகம் என்பதற்கான தகுதி, வரையறை என்பவற்றை ஒரே வரியில் கூறி விடுகிறது. 

இப்போது என்ற சொல் ஒருவன் குறித்த நிலையினை அடைந்திருக்க வேண்டும் என்பதனை குறிக்கிறது, 

இரண்டாவது சொல் யோகம் எந்த நிலை தகுதியை அடைந்து இருக்க வேண்டும் என்பதனை விளக்குகிறது. அது எது என்றால் யோகம் என்ற பரமான்மாவுடன் இணைய விரும்பும் நிலையினை தகுதியினை அடைந்திருத்தல் வேண்டும். இந்த நிலை எப்படி வரும் என்பதனை மூன்றாவது சொல் விளக்குகிறது, அது ஒழுங்கு முறை (Discipline). 

அதாவது ஒருவன் தான் இந்த உலகு மாயையினால் ஆக்கப்பட்டுள்ளது, தனக்கு மேல் அறியவேண்டிய நிலை ஒன்று உள்ளது என்ற நிலையினை அடையும் போதே யோகம் கற்கும் தகுதியினை அடைகிறான். அதனை சரியாக அடைவதற்குரிய மார்க்கம் ஒழுங்கு முறையாகும் (Discipline) என்பதனை இரத்தினச் சுருக்கமாக கூறிவிட்டார். 

இதுவே யோகம் கற்பதற்கான மன நிலையாகும், ஆனால் இன்று பரிதாபம் இரத்த அழுத்தம், மன அழுத்தம் இருந்தால் யோகா கற்க வாருங்கள் என்று குருமார் விளம்பரம் செய்கிறார்கள். யோகம் என்பது சிகிச்சை மட்டும் என்ற மன நிலைக்கு மக்களை தள்ளிவிட்டனர் இன்றை கர்பரேட் குருமார், உண்மையில் யோகம் என்பது ஆரோக்கியமான மன நிலை உடைய ஒருவர் அதியுயர் மன நிலை அடைந்து, பின்னர் மனதிலிருந்து தனது விழிப்புணர்வினை நிரந்தரமாக்கி பிரம்மம்/சிவம் எனப்படும் பேரின்ப நிலையினை அடைய உதவும் ஒரு மார்க்கமாகும். இத்தகைய ஒரு வழியினை நோய் தீர்க்கும் காரணியாக பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை எனினும் அதை விட உயர் நிலை உள்ளது என்பதனை சுட்டிக்காட்டவே இங்கு கூறினோம். 

இந்த முதலாவது சூத்திரமான : "அத யோகானுசாஸனம்" - இப்போது யோக ஒழுங்கு முறை மேலும் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டிய சூத்திரமாகும். அடுத்த பதிவில் அது பற்றி மேலும் அறிவோம்.

ஸத்குரு பாதம் போற்றி!

Monday, October 08, 2012

மனதினை அறிவோம் - (பதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்-01)


சித்தர்கள் மனதினை அறிதலே தன்னை அறிதலுக்கான முதற்படி என்பதனை உறுதியாக வலியுறுத்தியுள்ளார்கள். சித்தர்களில் குருநாதர் அகஸ்தியர் பெருமளவான இடங்களில் மனதினைப்பற்றி கூறியுள்ளார். மனதின் செயற்பாட்டினை அறிதலே உண்மையான கல்வி, சிறுவயதில் சுவாமி விவேகானந்தரது "வீர இளைஞர்களுக்கு" என்ற புத்தகத்தில் 'உண்மையான கல்வி என்பது ஒருவன் தனது மனதினைப் பற்றிய கல்வியே" என்ற வரிகள் ஆழமாக பதிந்ததால் மனம் என்றால் என்ன? என்ற தேடல் எம்மை குருவை அடையவைத்தது. எமது குருபரம்பரையிலும் கண்ணையயோகீஸ்வரர் மனதினை அறிவதே இறை சாதனையின் முதல் படி என தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளார்கள். அவரது மானச யோகம் எனும் நூல் மனதினைப் பற்றி அடிப்படையினை புரிந்து கொள்ள தமிழிலில் உள்ள மிகச் சிறந்த நூல் என்றால் மிகையில்லை. இந்த வகையில் மனதினைப் பற்றி திருமூலர், அகத்தியர் முதலான பல சித்தர்கள் கூறியிருந்தாலும் விஞ்ஞான ரீதியாக தெளிவாக கூறிய சித்தர் பதஞ்சலி முனிவராவார். அவரளவிற்கு அறிவியலாய் மனதினை விளக்கியவர் எவரும் இருக்க முடியாது என்பது யோக ஆசிரியர்களது கருத்து. 

பதஞ்சலி பல்லாயிரக்கணக்கான மனங்களை ஆராய்ந்து இறுதியாக கூறிய முடிவுகளில் தொகுப்பே "யோக சூத்திரம்" எனப்படும் நூலாகும். இது மொத்தம் நான்கு பகுதிகளாகவும் 196 சூத்திரங்களையும் உடையதாகும். சமாதி பாதம், சாதனா பாதம், விபூதி பாதம், கைவல்ய பாதம் எனற நான்குமே இவையாகும். இதுவே அஷ்டாங்க யோகம் எனப்படும் ராஜயோகத்திற்கு அடிப்படை நூலாகும். இதற்கு சுவாமி விவேகானந்தர் முதற்கொண்டு பலரும் விளக்கவுரை எழுதியுள்ளனர். இந்த தொடரின்  நோக்கம் விளக்கவுரை அல்ல, எல்லவற்றிற்கும் அடிப்படையான மனதினை புரிந்து கொள்ள யோக சூத்திரங்களை எப்படி உபயோகிப்பது எனபதாகும். 

ஆகவே உங்களுடைய மனதினை புரிந்து கொண்டு பயன்படுத்த விரும்பும் அன்பர்கள் இந்த தொடரை படித்து இன்புற வாருங்கள். 

அடுத்த பதிவிலிருந்து அவற்றினை ஒழுங்கு முறையாகப் பார்ப்போம். 

ஸத்குரு பாதம் போற்றி!

இந்த தளத்தினை வாசிக்கப்புகமுன் சில வார்த்தைகள்

நண்பர்களே இதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் சித்தர்கள், யோகம், ஞானம், என்னுடைய தனிப்பட்ட புரிதல்கள், கடந்த 14 வருடகால எனது தனிப்பட்ட தேடலில், குருபரம்பரை கற்கையில் சேகரித்த, புரிந்த விடயங்களின் தொகுப்பு. இதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் எதுவும் கருத்து திணிப்பான மதப்பிரச்சாரமோ, விற்பனையோ அல்ல! எமது கலாச்சாரத்தின் ஆணிவேராக இருக்கும் யோகம், ஞானம், தத்துவவியலின் என் சார்ந்த புரிதல்கள். எழுதுவதன் நோக்கம் என் புரிதல்களை வார்த்தைகளில் ஒழுங்குபடுத்துவதற்கும் என் மன நிலையினைசார்ந்தவர்களுடனான கருத்துப்பதிவிற்குமே அன்றி அது தவிர்ந்த வேறு நோக்கங்களுக்காக அல்ல! வேறு நோக்கம் எனப்படும் போது எது சரி, எது பிழை என்ற வீண்வாதங்கள், மதச் சண்டை, கருத்துச் சண்டைகள் போன்றவை! ஆதலால் இதனைப்படிக்க உட்புகுபவர்கள் திறந்த மன நிலையில் உட்புகும் படி கேட்டுக்கொள்கிறேன். உங்கள் மன நிலைக்கு ஒவ்வாத கருத்து இருப்பின் தயவு செய்து விலகிவிடுங்கள், இது உங்களுக்கான தளம் அல்ல!

பிடித்திருந்தால் உங்களைப்போன்ற மன நிலை உடையவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

நட்புடன்
சுமனன்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே! (திருமூலர்)

Saturday, October 06, 2012

காயத்ரி மந்திரமும் சர்வ தேவதா சித்தியும் - காயத்ரி சாதனை மூலம் அனைத்து தெய்வங்களின் சக்திகளையும் பெறும் முறை (பகுதி 01)

எமது காயத்ரி சாதனை தொடர்பான முன்னைய பதிவுகளை படித்து வந்தவர்கள் காயத்ரி உபாசனையின் பலனை நன்கு உணர்ந்திருப்பீர்கள். எனினும் பலர் நாம் ஏற்கனவே முருகனை உபாசிக்கிறோம், கணபதிதான் எனக்கு பிடித்த தெய்வம், எனக்கு காளியைத்தான் பிடிக்கும் எனக் கூறுகிறீரகளா? அப்படியானால் இந்தப் பதிவு உங்களுக்குகானது.

நாம் எமது முந்தைய பதிவுகளிலும் விளக்கியுள்ளோம், காயத்ரி சாதனை என்பது ஒரு தனிப்பட்ட தெய்வத்திற்குரிய சாதனை அல்ல, அது பிரம்ம சாதனை, பிரம்மம் என்றால் உலகின் ஒட்டுமொத்த (நிலைப்பண்பு+இயக்க) சக்திகளைக் குறிக்கும் சொல்லாகும். ஆக பிரம்மத்தினை உபாசிக்கும் சாதகன் பிரபஞ்சத்திலுள்ள மற்றைய சக்திகளையும் கவரும் ஆற்றல் பெறுகிறான். இதனை மேலும் விளங்கிக்கொள்ள ஒரு உவமான உதாரணம் மூலம் விளக்குவோம்.

ஒட்டு மொத்த பிரபஞ்ச சக்தியினை ஒரு நாட்டின் நிர்வாகம் என எடுத்துக்கொள்ளுங்கள். இந்த நிர்வாகத்தின் அதியுயர் சக்தி பீடம் ஜனாதிபதி, இதுவே பிரபஞ்ச சக்தியில் காயத்ரி எனக்குறிக்கப்படுகிறது. நீங்கள் முறையான பரிவார‌ உபாசகர்கள் என்றால் உங்களுக்கு யந்திர பூஜையில் உள்ள பரிவார தெய்வங்கள் பற்றி தெரிந்திருக்கும். இவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் அலுவலக அதிகாரிகள் தொடக்கம் ஊழியர் வரை இருப்பார்கள்.

இதுபோல் அந்த நிர்வாகத்திற்கு அமைச்சுகள் இருக்கும், கல்வி அமைச்சு, பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு என இவை முறையே சரஸ்வதி, லஷ்மி, துர்க்கா என பலவாறாக விரியும். இப்படியே நிர்வாக அலகு கிராம அளவில் வரும் போது கிராம அலுவலகர் அல்லது பஞ்சாயத்து வரை வரும். அந்த அளவில் பிரபஞ்சத்தில் சக்தி அளவு நவக்கிரகங்களால் கட்டுப்படுத்தப்படும்.

இப்போது அன்பர்களுக்கு நாம் கூறிய உதாரணம் நன்கு விளங்கியிருக்கும் என நம்புகிறோம். காயத்ரி உபாசனை எனபது ஒரு நாட்டின் ஜனாதிபதியின் நட்பிற்கு பாத்திரமாக இருப்பது போன்றது. இதனால் கிடைக்க கூடிய நன்மைகளை கூறவும் முடியுமா? ஜனாதிபதியின் அன்பும், நட்பும் இருப்பின் மற்ர்றைய அமைச்சுகளின் ஆதரவினைப்பெறுவது மிகச் சுலபமல்லவா! அதுபோலதான் காயத்ரி உபாசனை செய்பவர்கள் மற்றைய தெய்வ சக்தியினை கவரும் முறையினையே இங்கே தரப்போகிறோம்.

நாம் உதாரணம் கூறிய அரசியல் கட்டமைப்பினை தற்காலத்து சுயநல அரசியலாக எண்ணி தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. அதாவது ஜனாதிபதியின் அன்பு இருப்பதால்
இலஞ்சம் கொடுத்து  எல்லாவித தீய செயல்களையும் செய்து விட்டு தப்பிவிடலாம் என்று, பிரபஞ்ச சக்தி பேரொழுங்கு முறையானது, அதன் நியதியிலிருந்து சற்றேனும் விலகி உங்களுக்கு நன்மை செய்யாது, முதலாவது அதன் ஒழுங்கு முறைக்கு நீங்கள் உங்களை சரி செய்துகொள்ளவேண்டும். அதுவே ஒழுக்கம், இயமம், நியமம் எனப் போதிக்கப்பட்டது. அத‌ன் பின் ச‌ரியான‌ முறையில் நீங்க‌ள் அந்த‌ ச‌க்தியினை அணுக‌வேண்டும், அதுவே உபாச‌னை, பின்ன‌ர் கிடைத்த‌ ச‌க்தியினை ச‌ரியான‌ வ‌ழியில் ப‌ய‌ன்ப‌டுத்த‌வேண்டும். இந்த‌ நிய‌தியில் எதுவித‌ அதிகார‌ துஷ்பிர‌யோக‌மும் செய்ய‌முடியாது என்ப‌த‌னை ந‌ன்கு ம‌ன‌தில் கொள்ள‌வேண்டும்.

இத‌னை ச‌ற்று மேலும் விள‌ங்கிக்கொள்வோம். நீங்க‌ள் ஜ‌னாதிப‌தியுட‌ன் ந‌ட்பு இருக்கின்ற‌து என்ப‌த‌ற்காக‌ த‌குதிய‌ற்ற‌ ஒன்றை, உதார‌ண‌மாக‌ ப‌த‌விக்கேற்ற‌ த‌குதி இல்லாம‌ல் குறித்த‌ ப‌த‌வியினை அடைய‌ வேண்டும் என‌ விருப்புகிரீர்க‌ள். இத‌னை நீங்க‌ள் காய‌த்ரி உபாச‌னையில் தேவியிட‌ம் செய்யும் வேண்டுத‌லாக‌ வைத்துக்கொள்வோம். உட‌னே தேவி க‌ண்ணை மூடிக்கொண்டு அத‌னை உங்க‌ளுக்கு வ‌ழ‌ங்கி விட‌மாட்டாள், த‌ன‌து பிர‌ப‌ஞ்ச‌ ஞான‌ச‌க்தியினூடாக‌ அத‌னை அடைவ‌த‌ற்குரிய‌ த‌குதியினை பெறுவ‌த‌ற்கான‌ வ‌ழியில் உங்க‌ளை செலுத்துவாள். இத‌னை புரிந்து கொள்ளாம‌ல் ப‌ல‌ர் நான் வேண்டிய‌து கிடைக்க‌வில்லை அத‌னால் என‌து உபாச‌னை ப‌லிக்க‌வில்லை, தெய்வ‌மே பொய் என்ற‌ முடிவிற்கு வ‌ந்து வழியை விட்டு வில‌கிய‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர். ஆக‌வே எப்போதும் தெய்வ‌ உபாச‌னையில் நீங்க‌ள் இருக்கும்  நிலக்கு அடுத்த‌ நிலையினை அடைவ‌த‌ற்கு பிரார்த்திதால் உட‌ன‌டியாக நிறைவேற‌க்காணுவீர்க‌ள். உதார‌ண‌மாக‌ நீங்க‌ள் ஒரு சாதார‌ண உத்தியோக‌த்த‌ர் என்றால் அடுத்த‌ நிலை முகாமையாள‌ர் என்றால் அத‌னை அடைவ‌த‌ற்கு பிரார்த்தித்தால் உங்க‌ள் த‌குதிக்கேற்ப‌ சிறிது கால‌த்திற்குள் நிறைவேறக்காணுவீர்க‌ள். அல்லாம‌ல் க‌ம்ப‌னியின் நிர்வாக‌ முகாமையாள‌ராக‌ வ‌ர‌வேண்டும் என‌ பிரார்த்தித்தால் உங்கள் தகுதி காரணமாக‌ சில‌வேளை அங்கிருந்து வில‌க‌வேண்டிய‌ சூழ‌லும் ஏற்ப‌ட‌லாம்.

இந்த அடிப்படைகளை மனதில் வைத்துக்கொண்டு இந்தப்பதிவின் விடயதானத்திற்கு வருவோம். காயத்ரி என்பதி இந்தப்பிரபஞ்சத்தின ஒட்டுமொத்த சக்தியான பிரம்மம் என்று பார்த்தோம். நீங்கள் காயத்ரி உபாசனை மூலம் இந்த பிரம்மத்தின் அருளைப் பெற்றுவிட்டால் மற்றைய சக்திகளின் அருள் இலகுவாக கிடைக்கும். ஆனால் அதற்கும் நீங்கள் சில ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் ஜனாதிபதியின் விசேட அனுமதி பெற்ற நபர் என்ற சான்றிதழ் வேண்டும், இந்த அட்டையுடன் மற்றைய அமைச்சுகளுக்கு சென்றால் உடனடியாக உங்களது வேலைகள் முன்னெடுக்கப்படும். அத்தகைய ஒரு முறைதான் மற்றைய தெய்வங்களின் காயத்ரி மந்திரங்கள்.

நீங்கள் பொதுவாக அவதானித்தால் அனைத்து தெய்வங்களுக்கும் காயத்ரி மந்திரம் இருக்க காண்பீர்கள். இதன் ரகசியம் இதுதான், முற்காலத்தில் ரிஷி பரம்பரையினர், சித்தர்கள் முதலாவதாக பிரம்ம காயத்ரி உபாசனை செய்து மூலசக்தியினை வசப்படுத்திக்கொண்டு பின்னர் அதன் உதவியுடன் மற்றைய தெய்வ சக்திகளை தமது தேவைக்கு ஏற்ப, உதாரணமாக செல்வம் என்றல் லஷ்மி காயத்ரி, தடைகள் நீங்க விநாயக காயத்ரி,கல்வியிற்கு சரஸ்வதி என உபாசித்து வந்தார்கள். இந்த முறையின் சிறப்பு என்னவெனில் பிரம்ம காயத்ரி உபாசனையினை முறைப்படி (அதாவது பூரணமாக 125,000 ஜெபம் பூர்த்தி செய்து, பின்னர் நித்திய உபாசனை செய்து வந்தால்) செய்துவந்தால் இவற்றை தமது தேவையின் போது அதிக அளவு ஜெபிக்க தேவையில்லை.

ஆகவே மற்றைய தெய்வங்களை உபாசனை செய்பவர்களும் மூல காயத்ரி உபாசனையினை செய்யத்தொடங்குவீர்களானால் துரித பலனைப்பெறுவீர்கள். வாசகர்களே காயத்ரி உபாசனை எந்த விதத்தில் உங்களுக்கு உதவ முடியும் என்பதனை நன்கு உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறோம்.


Friday, October 05, 2012

பெண்களுக்கான சிறப்பு காயத்ரி சாதனைகள் ( பகுதி 03 - காயத்ரி சாதனை மூலம் பிள்ளைப்பேறு, குழந்தைகளை நல்வழிப்படுத்தல் )


ஒரு மனிதனை உருவாக்குவது பெண், அதனாலேயே பெண் தாய் எனும் ஸ்தானத்தினனை அடைகிறாள். ஒரு பெண் தாயாக பல கடமைகளை செய்யவேண்டி இருக்கிறது. குழந்தைகளை பெறுவதிலிருந்து, வளர்த்து நல்வழிப்படுத்தும் வரை தாயின் பங்கே முழுமையானது. இந்த ஆற்றலை உலகையே ஈன்று, பராமரிக்கும் ஜெகன்மாதாவின் சிறு செயல் வடிவத்தையே ஒரு பெண் தாயாக செய்கிறாள். அந்த பெண் ஜெகன்மாதாவின் ஆற்றலை பெற்றால் இந்தப்பணியினை சிறப்பாக செய்துமுடிக்க முடியும். ஒரு குழந்தையின் அறிவு, பண்பு, ஆற்றல் என்பவை தாயினுடைய பிரதிபலிப்பாகவே அமையும். இந்தவகையில் மகப்பேற்றுடன் தொடர்பான சில காயத்ரி சாதனைகளை கீழே தருகிறோம்.

சாதனை - 01
கருவுற்றிருக்கும் தாய் சந்தியா வேளைகளில் (காலை சூரியோதயம், மாலை சூரிய அஸ்தமனம்) காயத்ரி மந்திரத்தினை ஜெபித்த வண்ணம் சூரியனிலிருந்து அறிவுமயமான ஒளி கருப்பையினூடாக வந்து கருவை அடைவதாக பாவிக்கவும். இப்படிப்பட்ட சாதனையினால் பிறக்கும் பிள்ளை அறிவாற்றல் நிறைந்ததாகவும், ஞானமுடையதாகவும், நீண்ட ஆயுள் உடையதாகவும் இருக்கும். 

சாதனை - 02
கருப்பையில் பிரச்சனை உடையவர்கள் மேற்குறித்த நேரங்களில் நீராடி இடுப்பில் ஈர ஆடையுடன் கிழக்கு நோக்கி அமர்ந்து காயத்ரியினை சூரியனின் ஒளிவடிவாக தியானித்து யோனி வழியாக அந்த சூரியன் ஒளி சென்று கருப்பையினை அடைவதாகவும் கருப்பையில் உள்ள குறைபாடுகள் மாதாந்த தீட்டுடன் செல்வதாகவும் பாவித்து வரவேண்டும். இதனை கண்களை மூடி மனதில் தியானித்து வரவேண்டும். இது கருப்பையினை பலப்படுத்தி கருவுறக்கூடிய தன்மையினை ஏற்படுத்தும். இந்த சாதனை முடிந்தபின்னர் கைகளில் நீரை எடுத்து சூரியனுக்கு அர்க்கிக்க வேண்டும். அதன் பின்னர் உள்ளங்கைகளில் நீரை விட்டு குடிக்கவேண்டும்.  இதே சாதனைதான் குந்திதேவி கர்ணனை பெற்றெடுக்க செய்த சாதனையாகும். இந்த சாதனையினை கன்னிப்பெண்கள் செய்யக்கூடாது. இது குழந்தை இல்லாதவர்கள், குழந்தை பிறந்து இறந்தவர்கள், கருவழிவு ஏற்படுவது ஆகியவற்றிலிருந்து காப்பாற்றும் அரிய சாதனையாகும். 

சாதனை - 03
சோம்பல், படிக்க விருப்பமில்லாத, அடிக்கடி நோய் வரும் குழந்தைகளுக்கு தாய் குழந்தையினை மடியில் வைத்து மனதில் காயத்ரி தேவி அன்னப்பறவையில் இருப்பதாக கைகளில் சங்கு சக்கரம் வைத்திருப்பதாக பாவித்து காயத்ரி மந்திரத்தினை மானசீகமாக ஜெபித்த வண்ணம் தலையினை தடவியவாறு சில நிமிடங்கள் செய்யவும். குறிப்பாக குழந்தைகள் நித்திரைக்கு செல்லும்போது செய்யலாம். இது குழந்தையின் அறிவு, புத்தி, மனம், உடல் ஆகியவற்றில் மாற்றத்தினை ஏற்படுத்தி நல்ல வழியில் செல்லவைக்கும். இதே சாதனையினை பாலூட்டும் தாய்மார் குழந்தைக்கு பாலுட்டும் போதும் செய்யலாம். வியாழக்கிழமைகளில் ஒருவேளை உணவுடன் விரதமிருந்து சூரிய அஸ்தமனத்தில் குழந்தையுடன் சூரியனுக்கு அர்க்கியம் கொடுத்து, குழந்தையின் தலையில் சிறிதளவு நீர் தெளிக்கவும். 

அன்பான தாய்மார்களே, மேற்கூறிய முறைகள் விரைவாக சித்திப்பதற்கு நீங்கள் கட்டாயம் 125 000 ஜெபம் முடித்து தினசரி எளிய முறை காயத்ரி உபாசனை செய்து வரவேண்டும் என்பதனை மறக்கவேண்டாம்.

அனைவரும் இன்புற்றிருக்க ஜெகன் மாதா காயத்ரியை பிரார்த்திக்கிறோம். 

ஸத்குருபாதம் போற்றி!

Thursday, October 04, 2012

பெண்களுக்கான சிறப்பு காயத்ரி சாதனைகள் ( பகுதி 02 - திருமணமாகாத பெண்களுக்கான சாதனை,குடும்ப வாழ்க்கை மகிழ்வாக இருக்க)


திருமணமாகாத பெண்களுக்கான சாதனை

எமது எளிய முறை காயத்ரி உபாசனை பகுதியில் கூறியபடி உபாசனையினை செய்து, தினசரி 24 தடவைகள் (அதிகமாக 108) ஜெபம் செய்து நல்ல மணாளன் அமைய பிரார்த்திது வரவேண்டும். இது எப்படி செயற்படுகிறது என்பதனை ஏற்கனவே முன்னைய பதிவுகளில் விளக்கியுள்ளோம். 

குடும்ப வாழ்க்கை மகிழ்வாக இருக்க

திருமணமான பெண்கள் காயத்ரி சாதனையினை கீழ்வருமாறு செய்வதால் ஆனந்தம், செல்வம், ஆயுள், ஆரோக்கியம் போன்றவற்றை தமது பிள்ளைகள், கணவனுடன் பெற்று மகிழ்வாக வாழ்வார்கள். சில குடும்பங்களில் கணவன்மார் பொறுப்பற்று தீய பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பார்கள், அப்படிப்பட்ட குடும்பங்களில் இந்த சாதனையினை மனைவி செய்து வருவாராக இருந்தால் அந்த கணவன் நல்வழிப்படுத்தப்படுவார். குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் நிறைந்து காணப்படும். 

இந்த சாதனை காலையில் செய்ய வேண்டியது, மதியத்திற்கு முதல் முடித்துவிடவேண்டும், அதுவரை திரவ ஆகாரம் தவிர உணவு உட்கொள்ளக்கூடாது. நீராடி சாதகி கிழக்கும் நோக்கி அமர்ந்து கொள்ளவேண்டும். பின்னர் நாளாந்த உபாசனையினை முறைப்படி முடித்துக்கொள்ளவேண்டும். இந்த உபாசனையில் மஞ்சள் நிறம் இடம் பெற்றிருக்க வேண்டும், பூக்கள் மஞ்சள் நிறமுடையவையாக இருக்க வேண்டும், சந்தனப் பூச்சினை பயன்படுத்த வேண்டும், பிரசாதம் கடலை மாவில் செய்து படைக்கவேண்டும். மஞ்சள் நிறமாக பசு நெய் பயன் படுத்தவேண்டும். இப்படி இயலுமான வரை மஞ்சள் நிறத்தினை பயன்படுத்தி வரவேண்டும். 

இதன் பின்னர் தேவியயை கண்மூடி தியானிக்கும் போது தேவி மஞ்சள் நிற ஆடை அணிந்திருப்பதாக, மஞ்சள் நிற வரிப்புலியில் அமைந்திருப்பதாக, அதன் பின்புற ஆகாயம் மஞ்சள் நிறமாக இருப்பதாக பாவிக்கவும். அத்துடன் நீங்கள் அணிந்திருக்கும் உடையும் மஞ்சள் நிறமாக இருக்கவேண்டும். இந்த பாவனையில் 24 தடவைகள் காயத்ரி மந்திரம் ஜெபிக்கவும். இப்படி அமைதியாக இருக்கும் போது தேவியை மனதில் பாவித்து காயத்ரி மந்திரத்தினை ஜெபித்து வரவும். இந்த சாதனை செய்பவர்கள் பௌர்ணமி தினங்களில் உபவாசன் இருக்கவேண்டும். அத்துடன் தினசரி உணவுகளில் மஞ்சள் சேர்த்துக்கொள்வதும், தினசரி குளிக்கும் போது மஞ்சள் பூசுவதும் அவசியமாகும்.

இந்த சாதனை உங்களுக்கு, கணவனுக்கு ஆயுள் ஆரோக்கியம், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை என்பவற்றைக் கொடுக்கும். 

Wednesday, October 03, 2012

பெண்களுக்கான சிறப்பு காயத்ரி சாதனைகள் ( பகுதி 01 - தன்னறிவுச் சாதனை)

 பெண்கள் பலகாலம் காயத்ரி சாதனை செய்யக்கூடாது என சமய சுயநலவாதிகளால் மறுக்கப்பட்டு வந்துள்ளது. இத்தகைய பார்வையில் எதுவித உண்மையும் இல்லை என்பதும், பெண்களே தெய்வசக்தியின் வடிவானவர்கள் என்பதுமே உண்மையாகும். ஆண் பெண் சேர்க்கையே இந்த உலகாகும், இந்த பிரபஞ்சத்தினை எடுத்து நோக்கினால் அதில் எப்போதும் இருமை காணப்படும். இந்த இருமைகளின் சேர்க்கையே பூரணம், ஆகவே ஆண் இல்லாமல் பெண்ணோ, பெண்ணிலாமல் ஆணோ பூரணமடைய முடியாது. இந்த இரண்டு சக்திகளும் சேருவதிலேயே உலகம் வளர்கிறது, இன்பமடைகிறது. ஆகவே இறை சாதனையில் ஆண் பெண் என்ற வேறுபாடுகள் பார்ப்பது அறியாமையின் வெளிப்பாடே என எமது குருநாதர் கூறுவார். அதுவும் இறைசக்தியின் பிரம்மமான ஞான ஒளியினை உபாசிப்பதில் பேதம் காண்பது ஏற்க முடியாது என்பதனை பல மஹான்களும்  வலியுறுத்தியே உள்ளனர். இந்த‌ வ‌கையில் இந்த‌ப் ப‌திவுத்தொட‌ரில் பெண்க‌ள் ப‌ய‌னுறும் வ‌கையில் சில‌ சாத‌னா முறைக‌ளை கூற‌ உள்ளோம்.

ம‌னித‌னை உருவாக்குப‌வ‌ள் பெண்ணே! ஆக‌வே பெண்க‌ள் ஞான‌ம் பெற்றால்தான் இந்த‌ பூவுல‌கில் ம‌னித‌ர்க‌ள் அனைவ‌ரும் ஞான‌ம் பெற‌முடியும். அந்த‌வ‌கையில் பெண்க‌ள் அனைவ‌ரும் காய‌த்ரி சாத‌னையால் பெறும் ச‌க்தி அவ‌ர்க‌ளூடாக‌ அவ‌ர்க‌ள‌து ச‌ந்த‌திக்கும் க‌ட‌த்த‌ப்ப‌டும். அதாவ‌து காய‌த்ரி சாத‌னை செய்யும் பெண்ணிற்கு பிற‌க்கும் குழ‌ந்தை பிற‌ப்பிலேயே அந்த‌ ஞான‌த்தினையும் ச‌க்தியினையும் பெறும்.

இந்த‌ சாத‌னைக‌ள் எதுவித‌ க‌ட்டுப்பாடுக‌ளோ, நிய‌ம‌ங்க‌ளோ அற்ற‌வை, உங்க‌ள‌து நாளாந்த‌ க‌ட‌மைக‌ள் போல‌ செய்துவ‌ர‌லாம், தீட்டு, பிர‌ம்ம‌ச்ச‌ரிய‌ம் என்ப‌வை அவ‌சிய‌ம‌ற்ற‌வை. இவை மான‌சீக‌ சாத‌னைக‌ள், அத‌னால் எதுவித‌ புற‌ நிய‌ம‌ங்க‌ளையும் வ‌லிந்து க‌டைப்பிடிக்க‌த்தேவையில்லை. அவை அனுஷ்டான‌த்தின் போது க‌டைப்பிடிக்க‌வேண்டிய‌வை. ந‌வ‌ராத்ரி காய‌த்ரி சாத‌னையின் பின்ன‌ரோ, ம‌ஹா அனுஷ்டான‌த்தின் பின்ன‌ரோ இவ‌ற்றை செய்தீர்க‌ளானால் உட‌ன‌டிப் ப‌ல‌ன் கிட்டும்.

இவை இலகுவான மானச சாதனைகள் அதிக நேரமோ அல்லது கட்டுப்பாடுகளோ அற்றவை. ஆனால் பலன்கள் அளவிடமுடியாதவை. செய்து பார்த்து உங்கள் அனுபவத்தினை கூறவும்.

முதலாவது


மன ஒருமைப்பாட்டிற்கும் ஆன்மாவினை அறியும் தன்னறிவுச் சாதனை

இந்த சாதனைக்கு முன்னர் குளித்து தோய்த்துலர்ந்த ஆடை  அணிந்து தம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். தீர்த்தப்பாத்திரத்தில் நீர் வைத்துக்கொள்ள வேண்டும், உங்கள் ஜெபமாலையினை எடுத்துக்கொண்டு ஆசமனம், நியாசம், ஆவாஹனம், ஸ்தாபனம் செய்து தியான சுலோகத்தினை கூறிய பின்னர் தேவியை கீழ் வருமாறு தியானிக்கவும். நடுத்தர வயதுள்ள அழகிய பெண், புன்சிரிப்புடன், வெள்ளை ஆடையுடுத்தி எருதின் மீது அமர்ந்தவளாகவும், நான் கு கரங்களும் அவற்றில் ஜெபமாலை, கமண்டலம், புத்தகம், தாமரை இலை ஏந்தியவளாக தியானிக்கவும். இந்த தியான பாவத்தில் இருந்த வண்ணம் உங்கள் வழமையான ஜெப எண்ணிக்கையினை பூர்த்தி செய்யவும். ஜெபம் மனதிற்குள்ளேயோ, அல்லது உதடு மட்டும் அசைவதாகவே செய்யலாம். 

இந்த தியானம் மனதினை கட்டுப்படுத்தி சத்வ குணத்தினை அதிகரிக்கும். பொதுவாக இந்த தியானம் தமது வாழ்க்கையில் கடமைகளை முடித்தவர்கள், விதவைகள், கணவனை இழந்த பெண்கள் தம்மை ஆன்மீக வாழ்வில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள விரும்பும் பெண்கள் மட்டுமே செய்ய வேண்டியது. இந்த சாதனையால் சாதகி சுயகட்டுப்பாடு, ஞானம், அமைதி, மனவலிமை ஆகியன வளரத்தொடங்கி சாதகி ஒரு முழுமையான யோகினி நிலைக்கு உயர்வார். அவருடைய உணர்வுகள், செயல்கள், வாழ்க்கை முறை தூய சத்வ குணத்திற்கு வந்து ஒரு தபஸ்வினியாக வாழத்தொடங்குவார்.




Tuesday, October 02, 2012

துரித மந்திர சித்தி தரும் நவராத்ரி காயத்ரி சாதனை (பகுதி 02)

கால நிலை மாற்றங்களின் சந்திப்பு காலங்களே நவராத்ரி எனப்படுகிறது, பொதுவாக ஐப்பசி, சித்திரை மாத நவராத்ரிகள் காயத்ரி சாதனைக்கு உகந்த மாதங்களாகும். இந்த இரு காலப்பகுதிகளிலும் செய்யும் உபாசனை சாதாரண காலத்தில் செய்யும் உபாசனைகளைப்பார்க்கிலும் சக்தி வாய்ந்ததும், உடனடியாக பலன் அளிக்ககூடியதுமாகும். அதாவது சித்தரை, ஐப்பசி மாதங்களில் வரும் பிரதமை முதல் நவமி வரையிலான ஒன்பது நாட்களில் இந்த அனுஷ்டானத்தினை முடிக்க வேண்டும்.

இதற்குரிய விதிமுறைகள் முன்னைய பதிவுகளில் விளக்கிய பெரிய அனுஷ்டானம், எளிய உபாசனை முறை, சாதனை ஒழுக்கங்கள் என்பன வற்றை போன்றதே, ஆக ஜெபத்தின அளவு வித்தியாசம் மட்டுமே மாறுபாடாகும். இந்த ஒன்பது நாட்களில் 24000 ஜெபத்தினை முடித்து முன்னைய பதிவுகளில் கூறியபடி யாகம், தானம் செய்யவேண்டும். இதற்கு ஒரு நாளைக்கு 27 மாலைகள் ஜெபிக்க வேண்டும். உணவு ஒருவேளைமட்டும் மற்ற வேளைகளில் பால், பழம், கஞ்சி என்பன உட்கொள்ளலாம்.

இது லகு அனுஷ்டானம் எனப்படும், அதாவது எளிய அனுஷ்டானம் எனப்பொருள் படும். இந்த நவராத்ரி காலத்தில் செய்யும் 24000 ஜெபமானது சாதாரண காலத்தில் செய்யும் மஹா அனுஷ்டாந்திற்கு (125000 ஜெபம் 45/90 நாட்களில்) சமமானதாகும். இதுவும் உங்களுக்கு துரித மந்திர சித்தியினையும் பலனையும் தரும்.

இந்த வருட ஐப்பசி நவராத்ரி 16 அக்டோபரிலிருந்து 24 அக்டோபர் வரையிலான காலப்பகுதியில் வருகிறது. இந்தக் காலப்பகுதியில் நீங்கள் சாதனையினை தொடங்கி சித்திபெற எல்லாம் வல்ல காயத்ரி தேவியினையும் குருவருளையும் வேண்டுகிறோம்.

இவற்றை தொடங்குமுன் கீழ்வரும் பதிவுகளை கட்டாயம் படிக்கவும்.

Monday, October 01, 2012

துரித மந்திர சக்தி விழிப்பு பெற காயத்ரி சாதனை உயர் சாதனைமுறைகள் - பகுதி 01

முன்னைய பதிவுகளில் நாளாந்த எளிய முறை காயத்ரி சாதனைகளை செய்யும் முறைகளை கூறி வந்தோம். இவை நாளாந்தம் அனைவரும் செய்யக்கூடியவை. சிலர் சாதனையிற்காக அதிக நேரம் ஒதுக்கக்கூடியவர்களாக இருப்பார்கள் அவர்களுக்கு பெரியளவிலான சாதனையின் வடிவினை இங்கே கூறுவோம்.

இந்த சாதனையின் முக்கியத்துவம் யாதெனில் ஒருவர் தனது ஆத்ம சக்தியின் அளவினை துரிதமாக கூட்டிக்கொள்ள விரும்பின், ஏதாவது உடனடியாக நிறைவேற வேண்டிய விருப்புகள் இருப்பின் இந்த முறையினை பின்பற்றி துரித முன்னேற்றம் காணலாம். இது ஒரு நோக்கம் கருதி செய்யப்படும் உபாசனையாகும். இதனை அனுஷ்டானம் எனபர். இதனைச் செய்வதால் சாதகன் தனது கிரகப்பாதிப்புகள், வேலையின்மை, பணப்பற்றக்குறை போன்ற உலகியல் பிரச்சனைகளை தீர்ப்பதுடன் ஆன்மீக முன்னேற்றமும் துரிதமாக ஏற்படக்காண்பான்.

இந்த‌ முறையில் ஒருமுறை அனுஷ்டான‌த்தினை பூர்த்தி செய்து விட்டீர்க‌ளானால் பின்ன‌ர் எளிய‌ உபாச‌னையில் சிறிய‌ள‌வில் நாளாந்த‌ம் செய்யும் போது அதிக‌ ப‌லனைப் பெற‌முடியும். இது கிட்ட‌த்த‌ட்ட‌ வெளிநாடு சென்று அதிக‌ள‌வு ப‌ண‌த்தினை குறுகிய‌ கால‌ம் வெலைசெய்து சேமித்து பின்ன‌ர் வ‌ங்கியில் இட்டுவிட்டு உள்நாட்டில் ச‌ம்ப‌ள‌ம் குறைவான‌ தொழிலானாலும் வ‌ங்கியில் இட்ட‌ ப‌ண‌த்திற்கு வ‌ட்டி வ‌ருவ‌தால் கையில் இருக்கும் ப‌ண‌ம் அதிக‌மாக‌ இருக்கும‌ல்ல‌வா! இந்த‌ நிலையினை ஒத்த‌தே இந்த‌ அனுஷ்டான‌மும்!

பொதுவாக‌ வாழ்க்கையில் பிர‌ச்ச‌னையினை எதிர்நோக்கும் போது ம‌ன‌ம் கல‌ங்கி ச‌ரியா எதிர்கொள்ள‌முடியாத‌ப‌டி புத்தி த‌டுமாறி நிற்கும். இந்த‌ துரித‌ அனுஷ்டான‌ம் ம‌ன‌தினை, புத்தியினை சுத்தி செய்து தெய்வ‌ ஒளியினை ம‌ன‌திற்கும் புத்தியிற்கும் பாய்ச்சி சாத‌க‌னை சரியான‌ பாதையில் செல்ல‌ வைக்கும். உண்மையில் காய‌த்ரி சாத‌னை சாத‌க‌ன‌து அக‌த்தினை மாற்றி புது வ‌ழிகாட்டும்.

அனுஷ்டான‌ம் என்ப‌து 125,000 ஜெப‌த்தினை பூர்த்தி செய்யும் செய‌ன்முறையாகும். எந்த‌வொன்றும் ப‌ல‌ன் த‌ர‌வேண்டுமானால் அத‌ன் விதை இட‌ப்ப‌ட்டு, க‌ருவாகி, வ‌ள‌ர்ந்து, ம‌ர‌மாகி ப‌ல‌ன்த‌ரும‌ல்ல‌வா! அதுபோல் காய‌த்ரி ம‌ந்திர‌த்தின் மூல‌ம் ப‌ல‌ன் பெற‌ விரும்புப‌வ‌ர்க‌ள் க‌ட்டாய‌ம் இந்த‌ எண்ணிக்கியினை குறித்த காலத்தினுள் பூர்த்தி செய்ய‌ வேண்டும்.

இந்த எண்ணிக்கையினை பூர்த்தி செய்தபின் உங்களது நாளாந்த உபாசனை இலகுவாக சித்திக்கும். அதாவது உங்கள் நேரிய பிரார்த்தனைகள் விரைவில் பலிக்கும்.

இவற்றை தொடங்குமுன் கீழ்வரும் பதிவுகளை கட்டாயம் படிக்கவும்.



ஔவையாரும் கணபதியும் - குண்டலினி யோகத்திறவுகோல்




ஔவைப்பிராட்டியை அறியாத தமிழர்கள் இருக்க முடியாது, நீதி நூற்களும் பாலருக்கு உகந்த பாடல்களும் எழுதி சிறுவயது முதல் எம்முடன் என்றும் வாழ்ந்துவரும் சிரஞ்சீவி ஔவைப்பிராட்டி. இந்தப் பதிவின் விடயம் ஔவையார் கைலாயம் சென்ற கதையின் யோக இரகசியத்தினை விளக்குவதாகும். அனைவரும் அறிந்த கதைதான். 

சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமானாரும் கையிலையிற்கு இந்திரன் அனுப்பிய ஐராவதம் எனும் தேவலோக யானையில் செல்லும் வழியில் ஔவைப்பிராட்டி கணபதிக்கு பூஜை செய்தவண்ணம் இருக்கிறார். அவரைக் கண்ட சுந்தரர் தம்முடன் கையிலையிற்கு வரும் படி அழைக்க பாட்டியோ கணபதி பூஜையினையின் நடுவே செல்ல விருப்பமில்லாமல் கணபதியிடம்  "பெருமானே நீர் விரும்பினால் நீரே என்னை கையிலையில் சேர்த்துவிடும்" என கூறுகிறார். அதற்கு கணபதி பிராட்டியாரை நோக்கி அகவல் ஒன்று கூறும்படி கேட்க அவர் குண்டலினி யோகமுறைகளை எல்லாம் உள்ளடக்கு பாடியதுதான் இன்று பாராயண நூலாக விளங்கும் "விநாயகர் அகவல்". இது குண்டலினி யோக இரகசியங்கள் அடங்கியது. அது பற்றி வெறொரு சமயத்தில் பார்ப்போம். இந்தப்பதிவில் இந்த கதையின் குறியிட்டு விளக்கம் என்ன என்பது பற்றிப் பார்ப்போம். இதன் பின்னர் கணபதி தனது தும்பிக்கையின் மூலம் ஔவைப்பிராட்டியாரை சுந்தரரும் சேரமான் பெருமானாரும் கையிலை செல்லும் முன் கொண்டு சேர்க்கிறார். 

கணபதி குண்டலினி யோகத்தில் மூலாதரச் சக்கரத்தின் அதிபதி, மனித பரிணாமத்தின் அனைத்துக் கர்மங்களினதும் சேமிப்பு இடம் மூலாதரச் சக்கரம். இந்த இடத்தினை கட்டுப்படுத்தும் தெய்வ சக்தியே கணபதி. இந்த சக்கரம் விழிப்படையாமல் ஆன்மா மேல் சக்கரங்க்களை நோக்கி பயணிக்க முடியாது. இந்த சக்கரம் சமனிலையில் இருந்தால் தான் அந்த மனிதனது உணர்ச்சிகளும் மனதும் சரியான வகையில் வேலை செய்யும். இல்லாவிட்டால் மனம் பெரும்பாலும் பயத்திலும், குழப்பத்திலும் இருக்கும். ஆக சமூகம் சமனிலையில் இருக்க இந்த மூலாதாரச் சக்கரம் சமனிலையில் இருக்கவேண்டும். இதை அறிந்தே எமது முன்னோர்கள் எல்லா ஆற்றங்க்கரையில், அரச மரத்தடியில் கணபதியினை ஸ்தாபித்து தலையில் குட்டி தோப்புக்கரணம் போடும் படி செய்வித்தார்கள். தலையில் சரியாக புருவ முடிவின் பகுதியின் அழுத்துவதன் மூலம் இடகலை, பிங்கலை நாடிகளை சிறிய அளவில் செயற்படுத்த முடியும், இப்படி செயற்படுத்திவிட்டும் தோப்புக்கரணம் போடும் போது மூலாதாரம் சலனித்து சிறிதளவில் மற்றைய சக்கரங்களுக்கு குண்டலினி சக்தியினை பாயவைக்கும். இந்த ஆற்றல் ஒவ்வொரு சக்கரத்திற்கும் செல்லும் அளவில் நீங்கள் நினைத்த காரியம் சித்தியாகும், அது போல் இந்த செய்முறையினால் யோக நாடிகள் சுத்தமாகி மனம் ஏகாக்கிரப்படும். ஆக கணபதி என்ற சக்தியின் செயற்பாட்டை செய்விக்கவே இந்த ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளார்கள் எமது முன்னோர்கள். 

இனி ஔவைப்பிராட்டியாரின் கதைக்கு வருவோம், சுந்தரமூர்த்தி நாயனார் பரியங்க யோகத்த்தின் மூலம் குண்டலினியை விழிப்பித்து கையிலை எனப்படும்  சகஸ்ராரத்தினை அடைந்தவர், சேரமான் பெருமானார் தானும் கையிலைக்கு வரவேண்டும் எனும் போது சுந்தரர் அவருக்கு பஞ்சாட்சர மந்திர தீட்சை அளித்து அவரை கூட்டிச் செல்கிறார். பஞ்சட்சர ஜெபத்தில் உள்ள ந, ம, சி, வா, ய என்பது மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி முதலான ஆதாரஙகளின் பீஜ - வித்து மந்திரச் சொல், இதன் மூலமும் கையிலையாகிய சஹஸ்ராரத்தினை அடையலாம். அவர்கள் கையிலையிற்கு செல்வதற்கு முன்னர் விநாயகர் அருளால் ஔவைப்பிராட்டி கயிலை அடைந்தார் என்பது கணபதியின் சாதனா மகிமையினைக் குறிக்கிறது. அதாவது கணபதி சாதனை ஒன்றே குண்டலினையை விரைவாக சஹஸ்ராரத்திற்கு அடையவைக்கும் என்பதனைக் குறிக்கவே இந்தக்கதையினை உருவகப்படுத்தினர். 

இதனாலேயே ஸ்ரீ வித்தையில் கணபதி சாதனை முதன்மையாக வைக்கப்பட்டிருக்கிறது, அனைத்து விடயங்களிலும் கணபதி முதன்மைப்படுத்துவதன் ரகசியம் எந்தக்காரியத்தினை செய்யும் முன்னும் மூலாதாரம் சமனிலையில் இருந்தால் மட்டுமே பிரபஞ்ச ஆற்றல் எதுவித தடங்கலும் இல்லாமல் மன திலும், உடலிலும் பாயும், இந்த நிலையில் எந்த தடங்கலும் இல்லாமல் காரியம் முடியும் என்பதனாலேயே. ஆகவே இந்த இரகசியத்தினை விளங்கிகொண்டு இனிமேல் எந்தக்காரியத்தினை செய்யும் முன்னும் மூலாதாரத்தில் கணபதியினை வணங்கி செய்தால் வெற்றி கிட்டும் என்பதனை அறிந்துகொள்ளுங்கள்.

ஸத் குரு பாதம் போற்றி

Sunday, September 30, 2012

அனைவரும் செய்யக்கூடிய எளிய காயத்ரி உபாசனை (பகுதி 05)


கிழ்வரும்  பதிவுகளை வாசித்துவிட்டு இந்த பதிவினை வாசிக்கவும். 

*********************************************************************************************************************
கடந்த பதிவில் நியாச முறை பற்றிப் பார்த்தோம்.  இந்தப் பதிவில் எங்கும் நிறைந்த பராசக்தியான காயத்ரி தேவியை நாம் வணங்கும் தேவியின் படத்திலோ அல்லது விளக்கொளியிலோ ஆவாஹனம் செய்து ஸ்தாபிக்கும் முறையினைப் பார்ப்போம். தெய்வ சக்தி எங்கும் நிறைந்திருந்தாலும் எமது மனதால் ஆகர்ஷிக்ககூடிய வண்ணம் ஒரிடத்தில் குவித்து அதன் மூலம் பயன் பெறும் செய்முறையே பூஜை என்பது. இதனை விரிவாக செய்வதற்கு பலமுறைகள் இருக்கின்றன, அவற்றை எல்லாராலும் செய்யமுடியாதென்பதால் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் அழகுதமிழில் தேவியின் பூஜைமுறையினை வகுத்து தந்துள்ளனர். இந்த தமிழ் பத்ததி கடந்த நாற்பது வருடங்களாக காயத்ரி சித்தர் முருகேசு ஸ்வாமிகளால் இலங்கை நுவரெலியா காயத்ரி பீடத்தில் இன்று வரை பூஜை முறையாக இருந்து வருகிறது. இதன் மூலம் சமஸ்கிருதம் அறியாதவர்களும் இலகுவாக தேவியின் அருளை பெற்றிருக்கிறார்கள். 

இந்த பூஜை பத்ததி ஆவாஹனம், ஸ்தாபனம், சந்தனம், குங்குமம், புஷ்பம், அஷதை, தாம்பூலம், பழம், தூபம், தீபம், நைவேத்யம், கர்ப்பூரம், பிரார்த்தனை, அர்ச்சனை, தியானம், ஜெபம், ஹோமம் என்ற 17 அங்க்கங்களுடைய பத்ததியாகும். இவற்றை முழுமையாக செய்வதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வரை ஆகும். இதனை தனிப்பட ஜெபசாதனை செய்துகொள்ள விரும்புபவர்கள் செய்துகொள்ளக்கூடிய வகையில் சுருக்கி இங்கு தருகிறோம். முழுமையாக காயத்ரி பூஜா பத்ததி தமிழில் கற்று பூஜை புரிய விரும்புபவர்களுக்குரிய விபரம் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் சுருக்கமாக பூஜை முறை வருமாறு; முதலாவது ஆவாஹனம், 

ஆவாஹனம்: கீழ்வரும் மந்திரத்தினை பக்தியுடன் கூறி, படத்தில், விளக்கு ஒளியில் காயத்ரியினை அழைப்பதாக பாவிக்கவும்

அந்தமும ஆதியில்லா, அருட்பெருஞ் ஜோதி மாயே, வந்திடாய் வந்திடாய், நீ வந்தெங்கள் பூஜையேற்பாய், 

ஸ்தாபனம்: அழைத்த காயத்ரி தேவியை படத்தில், விளக்கொளியில் உறைவதாக பாவிக்கவும்.

வந்தனை வந்தனை நீ வரதே வான்முகிலேயம்மா, சிந்தனை களித்துயிங்கே சிறப்புடன் வீற்றிருப்பாய். 

இதன் பின்னர் மேற்குறிப்பிட்ட உபசாரங்களை (சந்தனம், குங்குமம், புஷ்பம், அஷதை, தாம்பூலம், பழம், தூபம், தீபம், நைவேத்யம், கர்ப்பூரம், பிரார்த்தனை, அர்ச்சனை) விரும்பின் செய்யலாம். அல்லது நேரடியாக தியான ஸ்லோகத்தினை கூறி தேவியை மனத்திரையில் உருவகப்படுத்தலாம். 

தியானம்: கீழ்வரும் தியான ஸ்லோகத்தினை பக்தியுடன் மெல்லிய குரலில் கூறவும்.

முக்த வித்ரும ஹேம நீல தவளச் சாயைர் முகைஸ் த்ரீஷ்ணைர் யுக்தா மிந்து நிபத்த ரத்ன முகுடாம் தத்வார்த வர்ணாத்மிகாம், காய்த்ரீம் வரதா பயாங்குச கஸா பாஸம் கபாலம் குணம் ஸங்கம் சக்ர மதார விந்தயுகளம் ஹஸ்தைர் வஹந்தீம் பஜே

இதன் பொருள் சுருக்கமாக வருமாறு: முத்து, பவளம், பொன், நீலம், வெண்மை ஆகிய நிறங்களுடைய ஐந்து முகங்களுடனும், முக்கண்கள், சந்திரகலை பொருந்திய கிரீடம், தத்துவார்த்தத்தை விளக்கும் எழுத்துக்களின் வடிவாகவும், வர முத்திரை, அபய முத்திரை, அங்குசம், கசை, வெள்ளைக் கபாலம் (இது தற்போது வரும் காயத்ரி படங்களில் காணப்படுவதில்லை, அவற்றில் பாத்திரம் ஒன்று இருப்பதாகவே வரைகின்றனர்) பாசக்கையிறு, சங்கு, சக்ரம், இரண்டு தாமரைப்பூக்கள் ஆகியவற்றை கைகளில் தாங்குபவளான காயத்ரி தேவியினை வணங்குகிறேன். 

இதன் தத்வார்த்த விளக்கம் உயர்சாதனைகள் செய்ய விரும்புபவர்களுக்குரியது, அவற்றை வேறொரு பதிவில் தேவை வேண்டிவிளக்குவோம். 

இப்படி தேவியை மனத்திரையில் பிரத்யட்சமாக உண்மையில் இருப்பதாக பாவித்து அவளது வரம் தரும் கைகளில் இருந்து ஒளிவடிவாக அவளது அருட்கிரகணங்கள் உங்களில் வந்து சேர்வதாக பாவிக்கவும். இப்படி பாவித்தபடி ஜெபமாலையினை கையில் எடுத்து அதே பாவனையில் மந்திர ஜெபத்தினை தொடரவும். ஆரம்பத்தில் 09 முறை ஜெபத்தினை தொடங்கி வாரத்திற்கு ஒன்பது ஒன்பதாக கூட்டி வந்து அதாவது முதல் வாரம் 09. இரண்டாவது வாரம் 18, மூன்றாவது வாரம் 27 என்றவாறு 108 ஆக்கி தினசரி 108 செய்யும் படி பழகிக்கொள்ளுங்கள். இந்த பாவத்தில் ஜெபத்தினை முடித்தபின்னர் கடைசியில் கீழ்வரும் பிரார்தனையினை செய்யவும். 

பிரார்த்தனை: 
அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா;
ஆயுள் ஆரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா!

என பணிந்து தேவியிடமிருந்து வரமாக இவற்றை பெற்றுக்கொள்வதாக பாவிக்கவும். 

இதன் பின்னர் சிறிதளவு தீர்க்க சுவாசம் (ஆழமான மெதுவான மூச்சு) அல்லது நாடி சுத்திப்பிரணாயாமம் செய்துகொள்ளவும். 

இதன் பின்னர் தீர்த்தப்பாத்திரத்தில் உள்ள உத்தரணியில் நீரை வலது கையில் எடுத்து தேவியின் பாதத்தில் " எனது உபாசனையில் ஏதும் குறைகள் இருந்தால், ஜெகன்மாதாவான நீ சிறுபிள்ளையாகிய எனது பிழைகளை பொருத்தருளி எனது பிரார்த்தனையினை நிறைவேற்று தாயே' என மானசீகமாக பிரார்த்திது நீரை கீழே விடவும். இந்த செயன்முறை கட்டாயம் செய்யவேண்டிய ஒன்றாகும். 

இதுவரை ஐந்து பதிவுகளாக காயத்ரி உபாசனையினை எளிய முறையில் செய்யக்கூடிய முறையினை விளக்கியுள்ளோம். இதனை வாசித்தவர்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் என்றாலும் நேரடியாக கற்காமல் எப்படிச் செய்வது என்ற மனத்தடங்கல் இருப்பதை நாம் உணர்ந்துள்ளோம். இதனை தீர்ப்பதற்கு இரண்டு வழிகளில் நாம் உங்களுக்கு உதவ முன்வந்துள்ளோம். 

முதலாவது: நீங்கள் இலங்கையில் வசிப்பவராக இருந்தால் மாதாந்தம் பௌர்ணமி தினங்களிலும், வாரந்தம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நுவரெலியா காயத்ரி பீடத்தில் இந்தப்பூஜை முறையின் முழுமையான பத்ததி தமிழில் நடாத்தப்படுகிறது. ஒருமுறை சென்று நேரில் பங்கு பெற்றி கற்றுக்கொள்ளலாம். அங்கு காயத்ரி தேவியின் விரிவான தமிழ் பூஜைப் பத்ததி அச்சிட்டும், காயத்ரி சித்தரின் குரலிலும் சீ.டீக்களாக தருவார்கள். அவற்றை வாங்கி பலமுறை கேட்டு நீங்களே கற்றுக்கொள்ளலாம். பூஜையில் வத்த காயத்ரி படம் ஒன்றினை வாங்கிவந்து உங்கள் உபாசனையினை தொடரலாம். 
இரண்டாவது: நீங்கள் வெளி நாடுகளில் வசிப்பவராக இருந்தால் காயத்ரி பீடத்தினை தொடர்பு கொண்டு காயத்ரி உபாசனா பத்ததி நூலையும், காயத்ரி சித்தரின் குரலில் உள்ள பூஜை சீ.டி ஒன்றினையும் அனுப்பும்படி கேட்டுக்கொண்டால் அனுப்பி வைப்பார்கள், அவற்றை பெற்று உங்கள் உபாசனையினை தொடரலாம். 

மேற்கூறிய தொடர்புகளுக்கு,
திரு. ச, சந்திரமோகன்
நிர்வாக அறங்காவலர்
ஸ்ரீ காயத்ரி பீடம் இண்டர் நஷனல் ட்ரஸ்ட்
82, லேடி மக்கலம்ஸ் ட்ரைவ்
நுவரெலியா.
தொலைபேசி:+94-52-2222609
அலைபேசி: +94-773249554
ஈமெயில்: srigayathripeetam@gmail.com  

முக்கிய குறிப்பு: எமக்கும் காயத்ரி பீடத்திற்கும் நிர்வாக ரீதியாக, சட்ட ரீதியாக எதுவித தொடர்பும் இல்லை. காயத்ரி உபாசனையினை தமிழில் செய்வதற்குரிய வளங்களை, முறைகளை, தகவல்களை வாசகர்களுக்கு அடையாளம் காட்டுவதே இந்த தகவலின் நோக்கம், 

இந்த தகவல்களால் ஆர்வமுடைய யாராவது பயன் பெறுவார்கள் என உறுதியாக நம்புகிறோம். 

ஸத் குருபாதம் போற்றி!

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...