குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, December 29, 2022

கல்வி முன்னேற்றத்திற்கான செயல் ஆராய்ச்சி Action Research for Educational Improvement

ஆசிரியருடைய, விரிவுரையாளருடைய பங்கு மாணவனுக்கு கற்பதற்கு, அவனுடைய கற்றல் திறனை விருத்தி செய்வதற்கு, அவன் தனது கல்வியில் வளர்வதற்கு உதவி செய்வது!
எமது ஆய்வுகளின் படி ஒரு பிரச்சனையை ஆய்வு நோக்கில் அணுகி அதற்குரிய தீர்வினை அனைவருமாக ஒன்று பட்டு பாடசாலைக்கு தகுந்த உதவிகளைச் செய்து முன்னேறிச் செல்வோம் என்பதை விட அதிபரிற்கு அழுத்தம் கொடுத்தல், அதிபர் என்னை மதிக்கிறாரா, அப்படியில்லை என்றால் அதற்கு சரியான பாடம் புகட்டுகிறேன் என்ற சமூகத் தலைமைகளும் ஆசிரியரைக் குறை சொல்லும் பெற்றோர்களும், பெறுபேறுகள் வந்தவுடன் வாயிற்கு அவல் கிடைத்தது என்று விமர்சிக்கும் சமூகமாகவே நாம் இருக்கிறோம். 
கல்வியல் பிரச்சனைகளை நுணுக்கி ஆராய்ந்து அதற்குரிய உண்மைக் காரணத்தைக் கண்டு அதற்குரிய தீர்விற்குள் செல்லும் ஒரு பொறி முறையை நாம் உருவாக்குவதில்லை !
இதற்குரிய ஒரு முறை action research, இதை நாம் "செயல் ஆராய்ச்சி" என்று மொழிபெயர்க்கலாம்; தான் செய்யும் செயல் தகுந்த பலனைத் தருகிறதா? அப்படியில்லாவிட்டால் அதற்குரிய காரணம் என்ன? என்பதை ஆராயும் ஒரு முறை;
செயல் ஆராய்ச்சி என்பது ஆய்வு முறையின் ஒரு வடிவமாகும், தற்போது ஆய்வு முறை என்பது முனைவர் பட்டம் பெறுபவர்கள் மாத்திரம் செய்து, பட்டத்திற்காக செய்யப்படுவது என்றும், பல்கலைக்கழகங்களில் தமது பேராசிரியர் பதவியிற்கு புள்ளிகளுக்காக செய்வது என்ற போக்கிலேயே அனைவரும் செயற்படுகிறார்கள்; ஆனால் செயல் ஆராய்ச்சி என்பது ஒரு பிரச்சனையை சரியான தர்க்க ரீதியில் அணுகி அதற்குரிய தீர்வினை கண்டுப்பிடித்து பிரச்சனையைத் தீர்க்கும் அணுகு முறையைக் கொண்டது. 
இது எந்த ஒரு செயலையும் செய்பவர்கள் தங்கள் வேலையை விசாரிக்கவும் மதிப்பீடு செய்யவும் உதவுகிறது. அவர்கள், ‘நான் என்ன செய்கிறேன்? நான் என்ன மேம்படுத்த வேண்டும்? அதை நான் எப்படி மேம்படுத்துவது?’ என்ற சிந்தனையுடையவர்களாக இருக்க வேண்டும். 
இந்த அடிப்படைப் பண்பு இல்லாமல் பிரச்சனைகளை தமது குறைகளாகப் பார்ப்பவர்களும், தம்மைக் குற்றம் சாட்டிவிடுவார்கள் என்று நினைப்பவர்களும், ஆய்வுப் பண்பு இல்லாதவர்களும் ஆசிரியர்களாக, அதிபர்களாக தமது தொழிலைத் தேர்ந்தெடுத்தால் அவர்களால் கல்வித்துறையில் முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை. 
ஆகவே செயல் ஆராய்ச்சிப் பண்பினை கல்வித்துறைக்குள் உள்வாங்கி செயற்படுவது அவசியம். 
செயல் ஆராய்ச்சிப் பண்புகள் உடைய ஒரு ஆசிரியர், விரிவுரையாளர் கீழ்வரும் கேள்விகளைக் கேட்டு அதற்குரிய சரியான பதிலையும், தீர்வினையும் செய்யக்கூடியவர்களா இருக்க வேண்டும். அவர்களது செயல் ஆராய்ச்சியினைத் தொடங்க கீழ்வரும் கேள்விகளைக் கேட்க ஆரம்பிக்க வேண்டும். 
எனது விரிவுரைகளுக்கு/வகுப்பிற்கு மாணவர்கள் ஏன் வருவதில்லை?
மாணவர்கள் ஏன் படிக்கவில்லை?
எனது மாணவர்களை உற்சாகப்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்?
மாணவர்கள் தங்கள் எழுத்தில் மேலும் பகுத்தாய்வு செய்ய நான் என்ன செய்ய வேண்டும்?
கோட்பாட்டை அவர்களின் நடைமுறையுடன் இணைக்க மாணவர்களுக்கு நான் எவ்வாறு உதவுவது?
எனது மாணவர்கள் பேசாதபோது எனது கருத்தரங்குகளில் என்ன தவறு நடக்கிறது?
மாணவர்கள் ஏன் நூலகத்தைப் பயன்படுத்துவதில்லை?
தக்கவைப்பு மற்றும் முன்னேற்ற விகிதம் ஏன் குறைகிறது?
எனது விரிவுரை பாணியை மேலும் அணுகக்கூடியதாக மாற்ற நான் என்ன செய்ய வேண்டும்?
இவையெல்லாம் எமது கேள்விகளாக இருந்தால் நாம் கட்டாயம் செயல் ஆராய்ச்சியில் இறங்க வேண்டிய தருணம் இது.

Wednesday, December 28, 2022

வைராக்கியம் என்பது என்ன?

மனதால், உடலால் அனுபவிக்கக் கூடிய அனைத்து போகங்களையும், அவை சித்தத்தில் ஏற்படுத்தும் இன்ப உணர்ச்சிகளை காக்கையின் மலம் போன்று கருதத் தக்க மனப் பண்பினைப் பெறுதல். 

இறந்த பின்னர் சொர்க்கம் கிடைக்கும், கடவுளைக் காணலாம் அதனால் பல நன்மைகளைப் பெறலாம், இப்படி இச்சைகளை வைத்துக் கொண்டிருக்கும் மனம் வைராக்கியம் அற்றது. குறிப்பாக ஒரு பலனை நிர்ணயித்துவிட்டு அது கிடைத்தே தீர வேண்டும் என்ற அவாவினை ஏற்படுத்தி விட்டு அதற்கு ஏற்றால் போல் காரியம் ஆற்றுவது மலம் - அசுத்தமுடைய சித்தமாக யோகத்தில் கொள்ளப்படும். 

ஒரு செயலை எடுத்தால் அந்தச் செயலை எப்படி முடிப்பது, அதன் பலன் எனக்கு தனிப்பட இன்பம் தருமா துன்பம் தருமா என்று சிந்தித்து அதன் மேல் பற்றுவைக்காத மனநிலை. 

எந்த இச்சையும் இல்லாமலிருப்பதற்கு பெயர் வைராக்கியம்; 

இந்த வைராக்கியத்தை பதஞ்சலி இரண்டு வகையாக (வைராக்கியம், பரவைராக்கியம்) என்று பிரித்தாலும் இவை நான்கு வகை;

1) யதமானம்

2) வியதிரேகி

3) ஏகேந்திரியம்

4) வசீகாரம்

சிலருக்கு மந்தமான வைராக்கியம் இருக்கும்; புலன்கள், ஆசைகள், பற்றுக்கள் எல்லாம் தன்னை கீழே இழுக்கின்றது என்பது நன்றாகத் தெரியும்; சிறிது முயற்சி செய்தும் பார்ப்பார்கள்; ஆனால் காலம் வரட்டும் செய்து முடிப்போம் என்று இருக்கும் வைராக்கியம் யதமான வைராக்கியம். 

வியதிரேகி - குரு, வைராக்கியமுடையவர்களது சேர்க்கையைக் கண்டவுடன் உருவாகும் வைராக்கியம்; தன்னிடமுள்ள துர்குணங்களை நீக்கி நற்குணங்களை உருவாக்கிக் கொள்வதில் உண்டாகும் உற்சாக வியதிரேகி வைராக்கியம். இவர்கள் சத்சங்கம், குரு உடனிருந்தால் வைராக்கிய சீலர்கள்; இல்லையென்றால் தன்னிலை தளர்ந்து விடுவார்கள். 

இந்திரியங்களை முழுவதும் அடக்கி தனது கட்டுப்பாட்டில் இயக்கும் வல்லமை உள்ளவனுக்கு ஏகேந்திரிய வைராக்கியமுடையவன் என்று பெயர். 

மனம் எதைக் கண்டு குதிக்காமல், தாழாமல் சமத்துவ தன்மையை அடைந்ததாவரும் வைராக்கியத்திற்கு வசீகர வைராக்கியம் என்று பெயர்.


சமூகப்பணி

உங்கள் நேரத்தை அறிவை அனுபவத்தை செல்வத்தை சமூக முன்னேற்றத்திற்கு எதிர்பார்ப்பின்றி பங்களியுங்கள்.

இன்று ஒரு நற்காரியம் நடைபெற்றது; மாத்தளையில் பாக்கியம் தேசியக் கல்லூரி - இந்துக் கல்லூரி ஆகிய இரண்டு பாடசாலைகளிலும் உள்ள அடுத்த ஜனவரி மாதத்தில் உயிரியல் பிரிவு, கணிதப் பிரிவில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு துரித மீட்டல் பயிற்சி வகுப்புகள் மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale இனால் நடாத்தப்பட்டது. 

கொழும்பிலிருந்து கணித ஆசான் ஹரிசன் எனது அழைப்பை ஏற்று வருகை தந்திருந்தார்; இணைந்த கணிதத்திற்குரிய மீட்டலைச் செய்திருந்தார்; அவர் தனது சொந்தச் செலவில் வருகை தந்திருந்தார்; அவரை மாவனல்லை, கல்முனை என்று பல இடங்களில் அழைத்து கணிதம் படிக்கிறார்கள்; அண்ணா நீங்கள் அழைக்கும் வரை காத்திருக்கிறேன், உங்கள் அழைப்பில் கற்பிப்பதற்கு எனக்கு பணம் தேவையில்லை; மாத்தளையின் தமிழ் கல்வி முன்னேற்றத்திற்கு என்னுடைய பங்களிப்பு என்றார்! ஹரிசன் என்னிடம் யோகம் பயிலும் மாணவர்களில் ஒருவர்! சிறுவயதிலிருந்து கவிபுனையும் ஆற்றல் பெற்றவர்; பதஞ்சலி யோகம் தானாக கற்று சாதனை புரிந்து பின்னர் தெளிவிற்கு என்னிடம் வந்தார்; தனது உயர்தரம் முடிந்த மறு நாளில் இருந்து கணிதம் கற்பிக்கும் ஒரு ஆசான்.

கலாநிதி நிசாந்தன் பிரயோக உயிரியல் பாடத்தினையும், நான் சுற்றாடல் உயிரியல் பாடத்தின் மீட்டலையும் நடாத்தினோம். 

மாத்தளை இந்துக் கல்லூரியின் அதிபர் திரு கணேசமூர்த்தி ஐயா தந்த உத்வேகம் இதை ஆரம்பிக்க உற்சாகப்படுத்தியிருக்கிறது. 

பாக்கியம் தேசியக் கல்லூரி அதிபர் திருமதி மஞ்சுளாதேவி அம்மையார் அவர்கள் எமது சமூகத்திற்கு கிடைத்திருக்கும் நல்ல கல்வித் தலைமைத்துவங்களில் ஒருவர்! அதை இந்த முறை பாக்கியம் தேசியக் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருக்கும் மாணவர் எண்ணிக்கையில் காணலாம்! தொடர்ச்சியாக இதைச் சாதிக்க அவரிற்கு தேவையான ஒத்துழைப்பினை நாம் வழங்க வேண்டும். 
திரு சாந்தக்குமார் ஆசிரியர் அவர்கள் அனைத்து உள்ளக ஏற்பாடுகளையும் செய்திருந்தார்; திரு ஜெயக்குமார் ஆசிரியரும் இதற்கான உதவிகளைச் செய்திருந்தார். 
சதுஷன் எமது பட்டதாரிகள் ஒன்றியத்தின் புதிய உறுப்பினர்; மாத்தளை இந்துக்கல்லூரியில் இருந்து மருத்துத்துவத்துறைக்கு தெரிவாகியிருக்கும் மாணவர்; தற்போது கல்விக்கு நல்ல தலைமைத்துவத்தினை வழங்கி வருகிறார்; கணித உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் ஆண் மாணவர்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கி வரும் கல்விக்கான தலைமைத்துவத்துடன் செயற்படும் இளைய தலைவர். 
லக்ஷ்மிகாந் ஆசிரியர் ஒன்றியத்தின் தூண்- வெகுவிரைவில் மாத்தளையில் அரசறிவியலை இளைஞர்களுக்கு கற்பிக்கும் திட்டத்தை வடிவமைத்து வருகிறார். 
கோயில், மாத்தளை தமிழ் அமைப்புகள் இந்த இரு தேசிய பாடசாலைகளை எமது தமிழ் சமூகத்தின் கல்வி மையங்களாக கருதி இந்த இரண்டு பாடசாலையிலும் கணித விஞ் ஞான தொழில்நுட்ப பாடங்கள் மேம்பட தகுந்த ஒத்துழைப்பைத் தரவேண்டும். ஏற்கனவே முத்துமாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் குழு கல்விச் சமூகம் இதற்குரிய திட்டத்தை வகுத்தால் தாம் மனமுவந்து செயற்பட தயார் என்று கூறியுள்ளார்கள்.
நல்ல செயல்கள் பல நடைபெறட்டும்.

Tuesday, December 27, 2022

Occult Chemistry by Annie Besant

இந்த நூல் ஒரு சுவாரசியமான நூல்; மேற்கத்தேய அறிவியல் பகுத்த இரசாயனப் பதார்த்தங்களை கீழைத்தேய யோகத்தின் ஸமாதி அனுபவத்திற்கூடாக பிரம்ம ஞான சபையின் அன்னிபெசண்ட், லீட்பீட்டர் ஆகிய இருவரும் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். 

அகத்தியர் சௌமிய சாகரத்தில் கண்குவித்து மனக் கண்ணால் கண்டு பகுத்து பஞ்ச பூதங்களின் இயல்பினை சித்தி செய்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். 

பதஞ்சலி ஒரு பொருளை எடுத்து அதன் மேல் ஏகாக்கிரம், தாரணை பழகி மனதை தியான நிலைக்கு கொண்டு போய் ஸமாதி அனுபவத்தினைப் பெற்றால் அந்தப் பொருட்களின் ஸ்தூல, சூக்ஷ்ம அறிவினைப் பெறலாம் எனக் கூறுகிறது. இதை ஸவிதர்க்க ஸமாதி என்கிறார். 

இந்த நூலிலுள்ள கருத்துக்கள் மேற்குறித்த முறையில் பெறப்பட்டவையே; அதை ஆசிரியர்கள் clairvoyance என்று குறிப்பிடுகிறார்கள். 

சித்த மருத்துவத்தில் கடும் நஞ்சுகளும் இரசாயனங்களும் மருந்துகளாகப் பாவிக்கப்படுவதன் அடிப்படை இதுதான். அதன் சூக்ஷ்ம பாகத்தினை எப்படி நோய் தீர்க்கும் அம்ருதமக பாவிப்பது என்பது; சித்த மருத்துவத்தில் மருந்துகளை அணுத் தன்மை அதிகரிக்க புடம் போடுவோம். இதைப் பற்றி நானே இரசாயனவியல் விஞ்ஞானியுமான எனது நண்பனுடன் உரையாடியிருக்கிறேன். 

இந்த நூல் நூற்றி இருபது வருடங்களுக்கு முந்தைய அடிப்படை இரசாயனவியல் மூலக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டது. 

Occultism ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம்!



தலைப்பு இல்லை

The great secret of true success, of true happiness, is this: the man or woman who asks for no return, the perfectly unselfish person, is the most successful.” 

~ Swami Vivekananda

உண்மையான வெற்றியின், உண்மையான மகிழ்ச்சியின் பெரிய ரகசியம் இது தான்: தனது செயலுக்கு திரும்ப எதையும் எதிர்பார்க்காத, கேட்காத, முற்றிலும் தன்னலமற்ற நபரே மிகவும் வெற்றிகரமானவர்.

~ சுவாமி விவேகானந்தர்


Monday, December 26, 2022

சமூகத்திற்கான தபஸும் கர்ம யோகமும்

எமது பாரதீய மெய்யியல் தத்துவத்தில் தனது உயர்விற்கு, சமூக உயர்விற்கு, மனித குலத்திற்கு சேவையில் ஈடுபடுபவதை தபஸ், தபோ காரியம், தவம் என்று சொல்கிறது. 
எமது சமூகம் கல்வி, பொருளாதாரத்தில், ஆன்மீகத்தில் முன்னேற வேண்டும் என்ற தவத்தில் ஈடுபடுபவர்கள் அனேகர் இருக்கிறார்கள். இப்படியான தபஸ்விகளுக்கு இருக்க வேண்டிய பண்புகளை இப்படிப் பட்டியியலிடப்படுகிறது;
1) பிரபஞ்சம் முழுவதையும் அதில் எமது இலக்கிற்கு எதிராக செயற்படும் காரியங்கள் எதையும் துரும்பாகவும் எண்ணி மனச் சலனப்படாதவர்களாகவும்,
2) எதையும் இப்படி நடக்க வேண்டும், அப்படி நடக்க வேண்டும் என்று இச்சிக்காதவர்களாகவும்,
3) வெளிப் புறத்தில் எம்மை தூற்றுபவர்கள், போற்றுபவர்கள் இவர்களை நினைத்து மனதில் எந்த கிலேசங்கள் கொள்ளாதவர்களாகவும்,
4) சாந்த சுபாவம் உள்ளவர்களாகவும்
5) சமூக நன்மை, தேச நன்மை, எடுத்துக் கொண்ட இலக்கு வளர வேண்டும் என்பதற்கான தனது அறிவினை வளர்த்துக் கொள்ளும் முயற்சி உள்ளவர்களாகவும்,
6) அதிகம் வார்த்தைகள் இன்றி செயலுடயவர்களாகவும்
7) அதீத ஆசையற்றவர்களாகவும் 
 தனது இலக்கிற்காக தனது உயிர் முதற் கொண்டு எதையும் துறக்க தயாராக இருப்பவராகவும் 
இருக்க வேண்டும்; 
இதை கர்ம யோகம் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்; சமூகத்தை முன்னேற்ற விளைபவர்கள் கர்ம யோகிகளாக இருக்க வேண்டும்! 
வரும் எதிர்ப்புகளைத் துச்சமாக எண்ணி தனது இலக்கினை நோக்கிச் செல்ல வேண்டும்! 
குரங்குகள் காரிற்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் காரினை கைவிட முடியாது! கார் எம்முடையது! காரிற்குள் குரங்குகள் வராமல் இருக்க வழி செய்திருக்க வேண்டும்! அல்லது குரங்குகளை விரட்ட வழி தெரிந்திருக்க வேண்டும்! எப்படி இருந்தாலும் ஒருக்காலும் குரங்குகள் காரை ஓட்டாது; seat இனை கிழித்து விட்டு போன பின் காரை எடுத்து செப்பனிட்டு ஓட வேண்டும்; இது தான் இலக்குத் தவறாமல் பயணிப்பதற்குரிய வழி
எல்லா இடங்களிலும் இப்படி இருக்கிறது; நாம் ஒரு திட்டத்தை சிறப்பாகச் செய்தால், எனக்குச் செய்யத் தெரியாதா என்று குரங்கு போட்டி சமூகத்திலிருந்து வரும்; அவர்களுடன் நேரத்தைச் செலவழிக்காமல் சரி எம்மைவிட சிறப்பாகச் செய்யுங்கள் என்று கையளித்து விட்டு நாம் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும்! இப்படிச் செய்யும் போது சமூகத்திற்கு பெரிய் நன்மை! 
சண்டைகளும், சச்சரவுகளும் எமது நேரத்தை உறிஞ்சி வினைத்திறனை அழித்து விடும்! ஆனால் முட்டாள் தனத்திற்கு எதிராக சண்டை பிடிக்காமல் இருந்தாலும் அது தவறான உதாரணம் ஆகிவிடும், இப்படியான இருமைகளை சமாளித்து வெற்றி காண வேண்டும்.

தலைப்பு இல்லை

இன்று மாத்தளை பிரம்ம குமாரிகள் அமைப்பின் கிளையில் அதன் தேசிய இணைப்பாளர் சகோதரர் திரு B. K கணேஷ், மற்றும் மாத்தளையின் ஊர்ப் பெரியவர்களில் ஒருவரான திரு. சிவஞானம் ஐயா அவர்கள் இருவரின் தலைமையில் ஒரு கலந்துரையாடல்; ஊர்ப் பெரியவர்கள் , திரு சந்திரசேகரன் ஐயா அவர்களும், மற்றும் சட்டத்தரணி மணிவண்ணன் அண்ணா, சுவர்ண ஸ்வரங்கள் அமைப்பின் இயக்குனர் ஜெயபிரகாஷ், மாத்தளை சைவமகா சபைத் தலைவர் மாத்தளை கவி, ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தர்மகர்த்தா சபையினர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். 
இந்தக் கலந்துரையாடலின் நோக்கம் மனதின் ஆற்றலை ஆன்மீகப்பயிற்சியின் ஊடாக எப்படி சமூக முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவது என்பதாகும். இதுபற்றிய ஒரு விளக்கத்தை பிரம்மகுமாரி அமைப்பின் சிரேஷ்ட சகோதரர் திரு நந்தக்குமார் அவர்கள் தந்தார். 
மாத்தளை நகர் என்பது நீண்ட ஆழமான தமிழ் கலாச்சார பண்பாட்டினைக் கொண்ட நகர்; எமது சமூகத்தின் ஆன்மீக விழுமியம் கொண்ட ஒரு சமூகமாகும். எமது சமூக இணைப்புப் புள்ளியாக மாத்தளை முத்து மாரியம்மன் தேவஸ்தானம் விளங்குகிறது. மேலும் சமூக அக்கறையுடன் இயங்கும் பல்வேறு குழுக்கள் உடைய ஒரு சமூகம். 
இவற்றை இணைத்து எல்லோரும் ஒரு சமூக முன்னேற்றம் என்ற ஒரு திசையில் பயணிக்க வைப்பதற்கு என்ன செய்யலாம் என்று உரையாடப்பட்டது. 
சந்திரசேகரன் ஐயா தொடர்ச்சியான சமூக அறிவூட்டல், சத் சங்கத்தின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். 
திரு ஜெயபிரகாஷ் அவர்கள் சமய நிறுவனங்கள் கல்வி, பண்பாட்டிற்கான தலைமைத்துவத்தை தரவேண்டிய அவசியத்தை முன்மொழிந்தார்; இதை முத்துமாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் சபைத் தலைவர் வரவேற்று ஏற்றுக்கொண்டார். 
சட்டத்தரணி மணிவண்ணன் அண்ணன் அவர்கள் குடும்பக் கட்டமைப்பினை வழி நடத்தும் அறிவூட்டல் அவசியத்தினையும், மாத்தளை தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை தனது சட்டத்தரணி தொழில் அனுபவத்தினூடக பகிர்ந்துகொண்டார். 
சைவமகா சபைத் தலைவர் மாத்தளைக் கல்வி அவர்கள் சைவமகா சபை எத்தகைய செயற்திட்டத்தை முன்னெடுக்கலாம் என்பது பற்றிக் கூறினார். 
நான் மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் இளைய சமுதாயத்திற்கு எப்படியான வழிகாட்டலைச் செய்கிறது என்பதைப் பற்றிய யோசனைகளைப் பகிர்ந்து கொண்டேன்.

Sunday, December 25, 2022

தலைப்பு இல்லை

2018ம் ஆண்டு நான் எனக்கு உள்ளிருந்து ஏற்பட்ட அகவிழிப்பில் இயற்கை விவசாயம் ஆரம்பிக்கிறேன்; எனது மாணவனும், நண்பருமான ஒருவருடன் சேர்ந்து! எமது இலக்கு இதன் அறிவியல் பகுதியை அனுபவமாக அறிவது! மற்றவர்கள் சொல்வதை நம்புவதில்லை! பசுமை விகடன் உசுப்பேத்துவதை நம்புவதில்லை என்ற எண்ணத்தில்!
அதேகாலத்தில் Navajeevan Anantharaj என்றொருவர் இந்தியாவிலுள்ள இந்தத் துறையின் நிபுணர்களை எல்லோரையும் அழைத்து Prabu Nadaraja Rajethan Makeswaran குலசிங்கம் வசீகரன் போன்ற உத்வேகமுள்ள இளைஞர்களை இணைத்து, தூண்டி இயற்கை வழி வேளாண்மை இயக்கம் ஆரம்பமாகிறது. இந்தக் குழுவின் நோக்கம் ஒட்டுமொத்த சமூகத்திற்கானது! ஆகவே அனைவரும் ஆதரிப்போம்! 
இயற்கை வழி விவசாயம் என்பது அதீத நுகர்வுக் கலாச்சாரத்திற்கு மாற்றான விவசாய முறை அல்ல! தன்னிறைவுப் பொருளாதாரத்தை மூலமாக எண்ணும் சமூகத்திற்கானது! ஆகவே நுகர்வுக் கலாச்சாரத்திற்கு தீனி அளிக்கும் விவசாய முறைகளை ஒப்பிட்டு எவரும் அரசியல் பேசவேண்டாம்; கேள்வி உள்ளவர்கள் இந்த நிகழ்வில் கலந்து உங்கள் கேள்வியை இயற்கை விவசாயத்தை வாழ்வியலாகக் கொண்டவர்களிடமிருந்து நேரடியாகப் பதிலைப் பெறுங்கள்! 
வட கிழக்கிற்கான இயற்கை வழி வேளாண்மையின் முறைகள் 2022 இல் மலையகத்திற்குமானதாக பரிணமித்திருக்கிறது. நாம் வேளாண்மை அறிவியலில் எவ்வளவு அனுபவங்களையும், அறிவியலையும் பகிர்ந்து கொள்கிறோமோ அந்தளவிற்கு எமது உணவு உற்பத்தியினை செழுமைப்படுத்தி சிறிய தன்னிறைவான சமூகங்களைக் கட்டமைக்க முடியும்! 
கள அனுபவம் உள்ள, பல ஆயிரம் பேரை பயிற்றுவித்த நிபுணர்கள் தாய்த் தமிழகத்திலிருந்து வருகை தருகிறார்கள்; கலந்துரையாட, அனுபவத்தைப் பகிர! 
ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளவும்!

Saturday, December 24, 2022

தலைப்பு இல்லை

சித்தர்களின் யோக முறையை ஒரு படிமுறையாக எப்படிப் புரிந்து கொள்வது என்ற ஒரு மாணவரின் கேள்விக்கு சிறு விளக்கம்

யோகத்திற்கு மூன்று கருவிகள் அவசியம் மனம், உடல், பிராணன்; இந்த மூன்றில் இரண்டு கருவிகளை சித்தி செய்து கொள்வது (mastery) அவசியம்; இதன் அர்த்தம் மூன்றாவது கருவி அவசியம் அல்ல என்பதல்ல! சாதனை முறைகளில் கட்டாயம் இரண்டு கருவிகள் பிரதானமாக இருக்கும்; மூன்றாவது சற்று குறைவாக உபயோகப்படுத்த வேண்டி இருக்கும். 

இந்த அடிப்படையில் சித்தர்களின் யோகத்தை சித்தி நோக்கத்தின் அடிப்படையிலும், இலக்கு அடிப்படையிலும் கீழ்வருமாறு பகுக்கலாம்;

ஹடயோகம் - உடலையும், பிராணனையும் பிரதானமாகக் கொண்டது; பிராணனை வீணாக்காமல் உயர் உணர்வு நிலை அடைவதை இலக்காகக் கொண்டது. 

மந்திர யோகம் - மனதையும் பிராணனையும், பிரபஞ்ச நாத சக்தியையும் அடிப்படியாகக் கொண்டது; மனதை உயர்த்துவதன் மூலம் உயர் உணர்வு நிலை அடைவதை இலக்காகக் கொண்டது.

லய அல்லது வாசி யோகம் - மந்திரமாகிய பிரபஞ்ச நாத சக்தியையும், பிராணனையும் அடிப்படையாகக் கொண்டு உள்ளிருக்கும் குண்டலினியை விழிப்பிப்பதை அடிப்படையாகக் கொண்டது. 

சாங்கிய இராஜ யோகம் ஆன்ம தத்துவங்கள் 24 இனை சித்திசெய்வதை நோக்கமாகக் கொண்டது.

தாரக இராஜயோகம் மனதை தாரணைக்கு யோக்கியப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது. 

அமனஸ்க இராஜயோகம் மனதினை ஸாமதி அனுபவத்தில் கரைப்பதை இலட்சியமாகக் கொண்டது. 

சிவயோகம் இலட்சியம் என்பது சிவத்தை தவிர வேறு எதுவுமில்லை என்ற பரவைராக்கியத்தை நோக்கமாகக் கொண்டது. 

இப்படி யோகத்தில் எவ்வளவோ படிமுறைகள், நுணுக்கங்கள் இருக்கின்றது.


Thursday, December 22, 2022

தலைப்பு இல்லை

தற்போதைய கல்வி முறையில் இருக்கும் பெரிய வழு மாணவர்களை கற்கத் தூண்டாமல் ஒரு சில ஆசிரியர்களை கடவுளர்கள் போல் பிம்பம் அமைத்து அந்த ஆசிரியரிடம் படித்தால் பரீட்சை சித்தியாகும் என்று பிள்ளைகளை அலைக் கழித்து இறுதியில் ஊன்றி, கவனித்துப் படித்திருந்தால் சிறப்பு பெறுபேறு பெற வேண்டிய பிள்ளையை சாதாரணமான சித்தி ஆக்கும் செயலைச் செய்வதாகும். 

மெய்யான கல்வியின் முதலாவது அடிப்படைக் கொள்கை, எதையும் கற்பிக்க முடியாது என்பதேயாகும்.

ஆசிரியர், பாடங்களை எடுத்துச் சொல்லும் அறிவுரையாளரோ, வேலை வாங்கும் மேலாளரோ அல்லர், அவர் உதவியளித்து வழிநடத்துபவர் ஆவார். 

கருத்துக்களைச் சுட்டிக் காட்டுவதே அவருடைய பணியாகும், அவற்றை வலியச் சுமத்துவதன்று. உண்மையில் ஆசிரியர் மாணவனின் மனத்துக்குப் பயிற்சியளிப்பதில்லை, மாணவன் தன் அறிவுச் சாதனங்களை எவ்வாறு செம்மைப்படுத்திக் கொள்ளலாம் என்பதை அவனுக்குக் காட்டி, அதில் அவனுக்கு ஆதரவளித்து ஊக்கமூட்டுகிறார். 

அவர் மாணவனுக்கு அறிவைக் கொடுப்பதில்லை, அவன் எவ்வாறு தன் முயற்சியால் அறிவை எய்தக் கூடும் என்பதை அவனுக்குக் காண்பிக்கிறார். 

ஆசிரியர் உள்ளிருக்கும் அறிவை வெளிக் கொணர்வதில்லை; அறிவு எங்கே புதையுண்டு கிடக்கிறது என்பதையும், அதை எவ்வாறு மேற்பரப்பிற்கு அடிக்கடி எழுந்து வருமாறு பழக்கப்படுத்தலாம் என்பதையும் அவர் அவனுக்குக் காண்பிக்கிறார்.

என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்

ஆகவே பாடசாலைகள், வகுப்பறைகள், ஆசிரியர்கள் மாணவர்கள் தமக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக் கொண்டு வரக்கூடிய களங்களை அமைப்பவையாக இருக்க வேண்டும்.


சிவ ஞான போத சூத்திரம் – 01

அறிவு என்ற போதம் கேள்வியால், ஆராய்ச்சியால் வருவது, இது அறியப்படுவதன் மேலோட்டமான பொதுவியல்பை மாத்திரம் தருவது! 
அனுபூதி என்பது அனுபவத்தால் வருவது, இதுவே உண்மையியல்பை உணர்த்துவது,
சிவ ஞானம் போதம் வேண்டில், சூத்திரங்களை கேள்வியால், ஆராய்ச்சியால் சித் எனும் அறிவு கொண்ட சித்தத்தில் பதிப்பிக்க வேண்டும் கேட்டலுடன் சிந்தனையுமாய் குரு முகமாய்! 
சிவ ஞான போதம் அனுபூதி வேண்டில் தெளிந்ததை நிட்டை கூட்ட வேண்டும்;
சிவ ஞானபோதத்தில் சூத்திரம் பன்னிரெண்டு! ஞான போதம் மானிடர்க்கு வரும் வழி சிவ ஆதித்திய கலைகள்! சிவ ஆதித்திய கலைகள் பன்னிரெண்டு! சிவ ஞான போதத்தின் சூத்திரங்கள் பன்னிரெண்டு! 
அண்டத்தில் ஆதித்தன் இராசி மண்டலம் புகும் நாளில் சூத்திரமொன்று கேட்டு, சிந்தித்து, தெளிந்து மாதம் ஒன்று நிட்டை கொள்ள வேண்டும்! மாதமொன்றிற்கு ஒரு சூத்திரமாய் அண்ட ஆதித்தன் இராசி மண்டத்தை ஒரு சுற்றுச் சுற்ற, வருடமொன்றில் சிவ ஞான போதம் சூத்திரம் உன் அகத்தில் ஒளியாய் ஏற்ற வேண்டும்! 
முதல் சூத்திரம்
அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்

சிவஞான போதம்

அகத்தியர் வணக்கம் 
******************************
காசியி னின்றும் போந்து கம்பர்தாம் அருளப் பெற்று
மாசிலாக் கச்சி மூதூர் மன்னிவீற் றிருந்து பூமேல்
ஆசிலாத் தமிழ்ப ரப்பி அருந்தமிழ்க் குரவு பூண்ட
தேசினான் மலய வெற்பிற் குறுமுனி திருத்தாள் போற்றி
காசியில் நிலைகொண்டு தன் தபஸினை வலுப்படுத்தியவறும், காஞ்சியிலே ஏகாம்பர நாதர் அருளைப் பெற்று காஞ்சியில் வீற்றிருந்து அருந்தமிழ் மொழி மாசற்ற மொழியாக இலக்கணம் வகுத்தவரும், மிக உயர்ந்த குருவான பொதியமலைக் குறுமுனிவரும் ஆகிய அகத்தியர் தம் திருவடிகளை வணங்குகிறேன்!
சிவ ஞான யோகியார்
காஞ்சி புராணம்
பாயிரச் செய்யுள் - 11
_______________________
ஸோமன் ஸௌமிய சாகரத்தின் தீட்சை நிலை கொண்டு வாசி நிலை ஏறி சிவயோக நிலைகண்டு சிவபோதம் அனுபவமாக அறிய மார்க்கமென்ன என்றான் எங்கும் வளங்கொள் இலங்கொளியான குருநாதர் அகத்தியம்பெருமானிடம்,
அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியர் இந்த மெய்யால் கண்ட சாத்திரத்தில் தலையான மெய்ஞான சாத்திரம் சிவஞானபோதம் பயில் என்றார். 
சிவஞான போதத்தின் உண்மை விளக்கம் எங்கனம் அறிவேன் ஐயனே என்றான்;
அகத்திய குலத்தில் எம்மருளால் உதித்த சிவ ஞான யோகியாரின் சிவஞான போத மாபாடியம் கண்குவித்து மனக் கண்ணால் ஏகாக்கிரமாய் குரு பாதுகையை நினைத்து சித்தத்தில் பதிவிப்பாய், அகத் தீயாய், ஒளியாய் உள் நின்று விளக்குவோம் என்று அருளினர் அகத்திய மகரிஷி.

Tuesday, December 20, 2022

தலைப்பு இல்லை

இந்த வருடம் மாத்தளை கல்வி வலயத்திற்குள் தமிழ் பாடசாலைகளில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்வு ஒன்றை பல்கலைக்கழக விரிவுரையாளர்களான Dr. Nishānthan Ganeshan மற்றும் Thatchanesh Kanth (PhD reading) ஆகிய இருவரது தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
எமது ஆய்வுகளில் கடந்த வருடம் எப்படி பதிவினை மேற்கொள்வது, ஆங்கிலம் தெரியாது, அதிக தூரத்தில் பல்கலைக்கழகம் இருக்கிறது போன்ற பல்வேறு காரணங்களால் சிலர் கிடைத்த கல்வியையும் தொடராமல் விட்டமை அறியப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனைகளைத் தீர்த்து எப்படி சவால்களுக்கு மத்தியில் கிடைத்த பல்கலைக்கழகக் கல்வியை மாணவர்கள் பூர்த்தி செய்வது என்ற வழிகாட்டலை வடிவமைத்துள்ளோம்! 
பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு தலைமை ஆலோசகராக எனது உரை! 
வரவேற்பு
*********
மாத்தளையில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருக்கும் மாணவர்கள் அனைவரையும் மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்திற்கு வரவேற்கிறோம்!
மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் சுருக்கமாக FTGM என்று அழைக்கப்படும். 
இந்த அமைப்பு மாத்தளையில் தமிழ் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், தமிழ் பட்டதாரிகள் அதிகளவில் எமது சமூகத்திலிருந்து உருவாகவும் வேண்டி மாத்தளையில் உள்ள, மாத்தளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பட்டதாரிகளை ஒன்றிணைக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. 
இதன் இலக்கு எமது சமூகத்தை ஒரு கல்விச் சமூகமாக உருவாக்குவதாகும். 
இந்தப் பயணத்தின் முதல் படியில் நீங்கள் அனைவரும் பட்டப்படிப்பிற்கு தேர்வாகியுள்ளமை மிக முக்கியமான ஒரு மைல் கல்லாகும். 
சில இலட்சம் மாணவர்களில் உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது பெரிய வரப்பிரசாதமாகும். இந்த வரப்பிரசாதத்தை நீங்கள் எந்தவிதமான வளப்பற்றாக்குறை, கவலையீனங்கள் காரணமாக தவறவிடக்கூடாது என்பதற்காக எமது ஒன்றியம் இந்த ஆலோசனைத் திட்டத்தினை ஆரம்பித்திருக்கிறது. 
முதலில் நாளை கலாநிதி நிசாந்தன் அவர்கள் உங்களுக்கு எப்படி பல்கலைக்கழக மானியங்கள் குழுவின் தளத்தில் உங்களது கற்கையை பதிவுசெய்வது என்பது பற்றி அனைத்து வழிமுறைகளையும் சொல்லித்தருவார். 
உங்களில் எவராவது வீட்டின் நிதி நிலவரம் காரணமாக பல்கலைக்கழகம் செல்ல முடியாத சூழல் இருந்தால் அதைக் கட்டாயம் என்னுடன் தனிப்பட உரையாடுங்கள்; நீங்கள் தடையறக் கற்பதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்துதர ஒன்றியம் தன்னால் இயன்ற முயற்சியை எடுக்கும். 
எக்காரணம் கொண்டும் கிடைக்கும் கல்வியை நிறுத்த வேண்டாம்; குடும்பத்தின் ஏழ்மை காரணமாக சுய தொழில் செய்து கொண்டு தமது கல்வியைப் பூர்த்தி செய்து கொண்டு மிகப்பெரிய தொழில் வாழ்க்கையில் வெற்றிப் பெற்றவர்களது உத்வேக கதைகள் நீங்கள் ஒன்றியத்தின் உத்வேக உரைகளில் கேட்பீர்கள். 
இந்த ஒன்றியத்தில் தலைமை ஆலோசகராக எதிர்காலத்தின் எமது சமுகத்தின் உயர் கல்வியலாளர்களான உங்களை அனைவரையும் FTGM இற்கு அன்புடன் வரவேற்கிறேன்.
உங்கள் கல்வி முன்னேற்றம் வேண்டும்.
ஸ்ரீ ஸக்தி சுமனன்
தலைமை ஆலோசகர்

Monday, December 19, 2022

தலைப்பு இல்லை

"Knowing is not enough; we must apply. Willing is not enough; we must do"
அறிந்தால் மாத்திரம் போதாது; நாம் அறிந்ததை பிரயோகிக்கும் ஆற்றல் வேண்டும்.
ஒரு செயலில் இஷ்டமிருந்தால் போதாது; அதை நாம் நிச்சயம் செய்ய வேண்டும்!

தலைப்பு இல்லை

தனி மனிதனாக பட்டம், புகழ், பணம் ஆகியவற்றில் தன்னிறைவு அடைந்து வெற்றி பெறுவது இலகுவானது. உதாரணமாக யாழ்ப்பாணத்து சமூகத்தை எடுத்தால் எல்லோரும் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும்; பணம் சம்பாதிக்க வேண்டும்; வீடு வாங்க வேண்டும்; வாகனம் வாங்க வேண்டும்; பெரிய தொழிலில் இருக்க வேண்டும், வெளி நாட்டில் செட்டிலாக வேண்டும் என்று தனிமனித வெற்றியில் சிறப்புறுகிறார்கள். ஆனால் கூட்டாக வெற்றி பெற வேண்டிய அரசியல், சமூகச் முன்னேற்ற செயற்பாடுகளில் தோல்வியுற்றவர்களாகவே இருக்கிறார்கள். 
இயற்கையில் ஒரு கல அங்கியாக இருக்கும் போது மிக எளிமையாக இருக்கும் உயிர்கலம் பலகல அங்கியாக தோற்றம் பெறும் போது பல்வேறு சிக்கல் நிலையை அடைகிறது. இந்த சிக்கல் நிலைக்குள் ஒரு சம நிலை இல்லை என்றால் எப்போதும் நோயுற்றதாக இருக்கிறது. 
தனிமனிதன் ஒருவன் பட்டதாரியாகுவது அவனது தனிப்பட்ட திறன் சார்ந்தது; ஆனால் ஒரு சமூகத்தில் 90% நபர்கள் பட்டதாரியாக வேண்டும் என்றால் அதற்கு பலரது ஒன்றிணைந்த செயற்பாடு அவசியமானது. 
தனிமனிதன் அமைச்சரைக் கவனிக்க வேண்டிய வகையில் கவனித்து அதிகாரத்தைப் பெற்று தனது காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம்; ஆனால் ஒட்டுமொத்த சமூகமும் அரசியல் உரிமை பெறவேண்டும் என்றால் கூட்டிணைந்த அரசியல் ஞானம் உள்ள சமூகம் இருக்க வேண்டும்.
சமூகத்திற்குள் இருக்கும் சிக்கல் தன்மை சரியான சம நிலையில் பேணப்பட வேண்டும். 
அண்மையில் கேள்வியுற்ற செய்தி; மிகப் பெரிய சேவை செய்த சமூக நிறுவனம் ஒன்று அதிகாரப் போட்டியால் சிதைந்து போனது என்று; இது தமிழர்களுக்கு புதிய கதை அல்ல; சோழ, சேர, பாண்டியர் காலத்திலிருந்து தமிழர்களின் வரலாறு இது தான்! 
சர்வவல்லமை உள்ள இறைவன் போன்ற தலைவன் ஒருவன்; அவனுக்கு நிகர் எவருமில்லை என்று புகழ் பாடி அவனைக் கொம்பில் ஏற்றுவது; அவனது ஆற்றல் கண்டு பயமுறுவது; பிறகு அவருக்கு மட்டும் எப்படி இப்படிப் புகழ் வரலாம் என்று அசூயை உருவாக்குவது; அவர் என்னை மதிக்கிறார் இல்லை; அவருக்கு மட்டுத்தான் அதைச் செய்ய முடியுமா, சரியான பாடம் புகட்டுகிறேன் என்று அரசை -தலைவனைக் கவிழ்ப்பது! நானும் செய்து காட்டுகிறேன் என்று நன்றாகச் சென்றுகொண்டிருக்கும் திட்டத்தைக் கவிழ்ப்பது இதுதான் தமிழர்களின் அதிகாரப் போட்டியின் சுருக்க வரலாறு! 
Peter Kropotkin என்ற ரஷ்ய தத்துவாசிரியர் ஒரு அதிகாரமைய நிலவுடமைக் குடும்பத்தில் பிறந்தவர்; அரசின்மை - Anarchism என்ற ஒரு அரசறிவியல் கோட்பாட்டினை முன்மொழிந்தார். இதன் படி அதிகாரப்படி நிலைகள் அற்ற தேவையற்ற நிறுவன அமைப்புகளை உருவாக்காமல் ஒருங்கிணைந்து செயல்படுதல் என்ற தத்துவத்தை முன்மொழிந்தார். இதன் படி ஒரு சமூக நோக்கத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து இலக்காக செயற்பட வேண்டும்; ஆனால் அதிகாரங்களை ஒரிடத்தில் குவித்து தேவையற்ற பூசல்களை உருவாக்கக் கூடாது. 
இன்றைய தமிழ் சமூகத்தின் தேவையும் இதுதான்! 
ஒவ்வொருவரும் தமது அக சந்தோஷத்திற்காக, சமூக முன்னேற்றத்திற்கான தனது பங்களிப்பு, தானும் சமூகத்திற்கு நல்லது செய்தேன் என்ற அக உந்தலுடன் சமூக நிறுவனங்கள் பல உருவாக்கப்பட்டாலும் தனித்தனியே ஒவ்வொருவரும் ஒருதிட்டம், இன்னொரு திட்டம் என்று ஒருவித ஒத்திசைவு இன்மையை ஏற்படுத்தாமல், அனைவரது உழைப்பும் சமூகம் கூட்டாக முன்னேற வேண்டும் என்ற இலக்காக இருக்க வேண்டும். இதில் எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற முனைப்பு, எனது கட்டுப்பாட்டில்தான் அனைத்தும் இருக்க வேண்டும் என்ற நினைப்பு, அசூயை என்ற மற்றவர் நல்லது செய்யும் போது ஏற்படும் எமக்கு ஏற்படும் கலக்கம் இவைகள் அற்ற உயர்ந்த மனிதர்களாக ஒவ்வொருவரும் இன்னொருவருக்கு உதவேண்டும். 
சித்த மருத்துவத்தில் வாயு என்ற பிராணனே உயிர் சக்தி; இந்த உயிர்சக்தி தகுந்த அளவில் உடல் எங்கும் தங்காமல் ஓடிக்கொண்டிருந்தால் அவை உயிரைக் காக்கும் சக்தி; எங்காவது தங்கினால் வாதம் - இதை தோஷம் அல்லது குற்றம் என்று சொல்லுவார்கள்; இதையேதான் Peter Kropotkin அதிகாரம் ஓரிடத்தில் குவியாமல் Anarchism ஆக சமூக அமைப்பு இருக்க வேண்டும் என்று கூறுகிறார். 
பொன்னியின் செல்வனை ஆனந்தித்துக் கொண்டாடும், ஹீரோயிசத்தை அரசியல் தலைமையாக நம்பும் தமிழர்கள் இப்படியான அதிகாரமையம் அற்ற அனைவரும் முன்னேறக்கூடிய சமூக அமைப்புகளை உருவாக்கும் ஆற்றல் உள்ளவர்களா என்பது சிந்திக்கப்பட வேண்டியதே!!!

Friday, December 16, 2022

தலைப்பு இல்லை

ஆசிரியத் தொழில் ஒரு உயர் தொழிலாகும்; உயர்தொழில் எனும் போது அதற்குரிய சில பிரத்தியேக பண்புகள் இருக்கின்றது. 
1) உயர்தொழிலில் ஈடுபடும் ஒருவன் தன்னை தயார்படுத்திக் கொள்வது, ஆயுத்தப் பயிற்சி அவசியமானதாகும். புதிய திறன் களை வளர்த்துக் கொள்ளுதல் அவசியமாகிறது. நவீன தொழில் நுட்பங்களைப் பாவித்து கற்பித்தலை எப்படி இலகுவாக்குவது போன்ற திறன் கள் தேவைப்படுகிறது. தற்காலத்தில் தகவல் தொழில் நுட்பம் அத்தியாவசியமான ஒன்றாக இருப்பதும் அதைப் பிரயோகிக்கத் தெரிவதும் அவசியமாகிறது. உயர் தொழிலில் இருப்பவர்கள் அனுதினமும் கற்பவர்களாக இருக்க வேண்டும். 
2) உயர்தொழிலில் இருப்பவர்கள் தமது துறை சார்ந்து மெய்யியல், தத்துவம், சமூக இயக்கவியல் , மனவியல் தெரிந்திருப்பது அவசியம். கல்வித் துறையில் கல்வி மனவியல், கல்வித் தத்துவக் கோட்பாடுகள் தெரிந்திருக்க வேண்டும். 
3) உயர்தொழிலில் இருப்பவர்கள் தனது சுய நலனுக்காகவன்றி பெரும்பாலும் சமூக முன்னேற்றத்த்திற்கும், மற்றவர்களை முன்னேற்றவும் பாடுபடும் மனப்பாங்கு இருக்க வேண்டும்; தம்மைப் பெரிதாக முன்னிறுத்துபவர்களாக அன்றி தான் தொழில் புரியும் துறைக்காக தம்மை அர்ப்பணிப்பவர்களாக இருக்க வேண்டும். 
4) உயர்தொழிலில் அடையும் வெற்றி என்பது அவருடைய அறிவுத்திறன், சமூகம் அடைந்த மேம்பாடுகளைக் கொண்டு அளவிடப்படும்; ஊதியத்திலிருந்து அல்ல! பலவிதங்களில் சம்பாதித்து கார்வைத்திருக்கும் ஆசிரியர் தனது ஆசிரியத் தொழில் வெற்றி பெற்றவராக அண்மையில் ஒருவர் கூறினார்; இது தவறானது; ஆசிரியர் தனது துறையில் எத்தனை பேரை உருவாக்கியிருக்கிறார் என்பதே அளவீடு! 
5) உயர்தொழிலில் ஈடுபடுவனுக்கு மேற்பார்வை எதுவும் தேவைப்படாது; அவன் தனது தொழிலைச் செய்வதற்குரிய அத்தனை திறன், அறிவு, சுய உத்வேகங்களையும் பெற்றிருப்பான். வகுப்பறைக்கு வந்தால் மாணவர்களை கல்வியில் கவனம் செலுத்த வைக்கக்கூடிய ஆளுமை இருக்க வேண்டும்! 
6) அறம் சார்ந்த மனதை உடையவனாக இருக்க வேண்டும்; மாணவர்கள் மனதில் மற்றைய ஆசிரியர்களைப் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்துதல், ஊர்ப் பிரச்சனை, மாணவர்களை தனது சுய விருப்பங்களுக்காக தவறாக வழிகாட்டுதல், பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் படி உரையாடலை நிகழ்த்துதல், வக்கிரமான நகைச்சுவைகளால் மாணவர் மனதைக் கவருதல் போன்றவை தீயபண்புகள் அற்றவராகவும், மாணவர்களின் மனதில் தேவையற்ற எண்ணச் சிதறல்களை ஏற்படுத்தா அறமுடையவர்களாக இருக்க வேண்டும். 
7) தன்னை எப்பொது மேம்படுத்திக் கொண்டு, திறனை வளர்த்துக் கொண்டு, தனது தொழிலிற்கு அடிப்படையான அறிவு,செயல் திறன் இவற்றை எப்போதும் தொடர்ந்து கற்றுக் கொண்டிருப்பவனாக இருக்க வேண்டும். 
இப்படியான உயர்தொழில் பண்பு (High professional attitude) இருக்கும் ஆசிரியர்களைக் கொண்ட பாடசாலைகள், சமூக கல்வியில் துரித முன்னேற்றம் பெறும்.

Thursday, December 15, 2022

இல்லற யோகம்

நூல் PDF வேண்டுபவர்கள் கீழ்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள்: +917200081475
__________________________________
இல்லறத்திலிருந்து யோக சாதனை செய்யலாம் என்பதற்குரிய விதிமுறையை விளக்கும் இந்தச் சிறிய நூல் குருதேவர் பண்டிட் ஸ்ரீ ராம் சர்மாச்சர்யா அவர்கள் “க்ருஹஸ்த யோகம்” என்று ஹிந்தியில் எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட “Married life is Perefect Yoga” என்ற ஆங்கில நூலில் தமிழ் மொழிபெயர்ப்பு!
இந்த நூல் தொழில்சார் முறையில் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கப்படவில்லை. குருதேவரிடம் எனக்கிருந்த சாதனா உறவு இப் பணியை உள் இருந்து தூண்டியதால் உருப் பெற்றதே இந்த நூல். 
எனது தினசரி காயத்ரி சாதனையில் ஒரு நாள் அதிகாலையிலே, ஓர் ஒளி உருவம் எனது ஜப சாதனையை அதிகரிக்கச் சொல்லி அன்புடன் குரலாக ஒலித்தது. ”எனது நாளாந்தக் கடமைகளுடன் அவ்வளவு ஜெபத்தை என்னால் செய்ய முடியுமா?” என்று நான் தயங்கி நினைத்த போது, மீண்டும் அந்த ஒளிரூபம் ”முதல் கட்டமாக இவ்வளவு ஜெபத்தை ஆரம்பி! பின்னர் உனது உடல் அதிக தபஸை தாங்கும் வண்ணம் படிப்படியாக உனது மனமே வழிகாட்டும், இதைச் செய்ய வேண்டியது உனக்காக அல்ல; நீ மற்றவர்களுக்கு உதவுவதற்கு தேவையான சக்தியைப் பெறுவதற்கான பயிற்சியே இது” என்று ஆசி கூறி மறைந்தது. 
அதன் பிறகு நீண்ட காயத்ரி ஜெபம் செய்யும் ஆற்றலும், சலிக்காத மனமும் வாய்த்தது. அந்த ஒளியின் ஆசிப்பிரகாரம் எனது சாதனையும் முன்னேறத் தொடங்கியது. ’அந்த ஒளியில் கிடைத்த குரல் எவருடையது?’ என்ற சிந்தனை எப்போதும் ஏற்படவில்லை. அந்தப் பேரொளி என்னை வழி நடாத்துகிறது என்ற ஆழமான உணர்வை அனுபவமாக உணரத் தொடங்கினேன். அதன் பிறகு என்னிடம் கற்பதற்கு, வழிகாட்டல் பெற சிலர் நாடத் தொடங்கினார்கள். அதற்குத் தகுதியுள்ளதாக என்னை ஆக்கிக்கொள்ள நான் மேலும் ஆழமாக சாதனையில் செல்லத்தொடங்கினேன். 
இந்த சாதனாப் பயணத்தின் அடுத்த கட்டம் மக்களுக்கு ரிஷிகளின் சிந்தனையை தமிழில் தரவேண்டும் என்று வழிகாட்டப்பட்டதும், அதற்காக எடுத்துக் கொண்ட பணி தான் குருதேவர் பண்டிட் ஸ்ரீ ராம் சர்மாச்சார்யா அவர்களின் நூற்களை தமிழில் மொழி பெயர்த்து வாராந்தம் பத்திரிகையில் சிறு கட்டுரைகளாக வெளியிடுவது என்பது! இதற்கு அகில உலக காயத்ரி பரிவாரின் தலைவர் Dr. பிரணவ் பாண்டேயாவிடம் அனுமதி கேட்க, அவர் மனமுவந்து செய்யச் சொல்லி ஆசி கூறினார். இதன் பிரகாரம் இந்த இல்லற யோகம் என்ற கட்டுரைத் தொடரானது, இலங்கையின் தினகரன் பத்திரிகையின் சைவ மஞ்சரிப் பகுதியில் 
வாரந் தோறும் கட்டுரையாக வெளி வந்தது. இப்போது அவற்றைத் தொகுத்து ஒரு சிறு நூலாக வெளியிடுகிறோம். 
குருதேவர் பண்டிட் ஸ்ரீ ராம் சர்மாச்சர்யா அவர்கள் இல்லறத்திலிருந்தவாறே கடுமையான 24 இலட்ச எண்ணிக்கை கொண்ட காயத்ரி மந்திர புரச்சரணங்கள் 24 இனை, 24 வருடங்களில் பூர்த்தி செய்தவர். அவர் கடந்த நூற்றாண்டின் ரிஷி! அவர், தாம் வாழ்ந்த வாழ்க்கையின் பிரகாரம் கூறிய பயனுள்ள அறிவுரைகளை இந்த நூலில் தொகுத்துத் தந்திருக்கிறோம். இல்லறத்திலிருந்து கொண்டு தகுந்த மனப்பாங்கினை ஏற்படுத்தி, பண்புகளை வளர்த்து அனைவரும் காயத்ரி சாதனையால் ரிஷிகளாக முடியும் என்பதை, உறுதி பட வழிகாட்டுகிறது இந்த நூல். 
சாதனை செய்யும் சாதகர்கள் அனைவருக்கும் தகுந்த வழியைக் காட்டக் கூடிய இந்த அரிய நூலை, உங்களுக்குத் தரும் கருவியாக்கிய குருமண்டலத்தை பிரார்த்தித்துக் கொண்டு…., 
அனைவருக்கும் ’அருளோடு, செல்வம், ஞானம், ஆற்றலும், அன்பும் பண்பும், பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா! ஆயுளாரோக்கியம், வீரம் அசைந்திடா பக்தியன்பு, தேயுறா செல்வம், கீர்த்தி தேவியே அருள்வாயம்மா!’ என்று அன்னையைப் பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்,
ஸ்ரீ ஸக்தி சுமனன்

Tuesday, December 13, 2022

விஸ்வ மித்ர சிந்தனை

எமது மனதில் தாழ்மனம் என்ற ஒரு பகுதி இருக்கிறது; இந்த மனம் எப்போதும் கேள்வி கேட்கும்; தர்க்கத்துடன் அணுகும்; தன்னை அங்கீகரித்தால் மகிழும்; புறக்கணித்தால் துன்பமடையும்; க்லேசமடையும்; சமூக அங்கீகாரத்தை வேண்டி நிற்கும்; இதை திருப்திப்படுத்தாவிட்டால் எப்போதும் எம்மைக் கீழே இழுக்கும். 
இந்த மனதினைத் திருப்திப்படுத்துவதற்காகவே எமது வாழ்க்கையில் நாம் நல்ல நிலை அடைகிறோம் என்று கற்பித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கும்; பதவி, பட்டம், புகழ், விருதுகள், மக்களின் நன்மதிப்பு என்ற தவிப்பு எல்லாம்! 
இதை ஒருவன் அடையாமல் அதற்கு மேல் உள்ள உயர் மனதை அடைய முடியாது. ஒருவன் தனது பதவி, பட்டம், புகழ் என்பவற்றை அடைந்த பிறகு அதில் தான் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்ற பேராசையோ, அதற்குப் பிறகு மீண்டும் மீண்டும் அதைத் தேடி அலைவதோ கூடாது! 
அந்த மயக்கங்களில் இருந்து வெளியே வந்து தனது, கல்வி, தகுதி, அதிகாரம், பணம் இவற்றைக் கொண்டு மற்றவர்கள் உயரப்பாடு பட வேண்டும். 
பேராசிரியர் ஆன ஒருவர் தனது வாழ் நாளில் இன்னும் 100 பேராசிரியர்களை உருவாக்க சங்கல்பம் பூண வேண்டும்; அதைவிட்டு விட்டு தனக்கு இன்னும் என்ன விருது கிடைக்கும், பரிசு கிடைக்கும் என்று நினைத்தால் ஒரு சுய நலமியாக தன்னை வளர்க்கிறேன் என்று வாழ்க்கையை அர்த்தமற்றதாக்குகிறார் என்பதே அர்த்தம்! 
அனேகமாக பெருமையை, புகழைத் தேடி ஓடுபவர்களுக்கு நுணுக்கமான ஒரு சுய நலம் உள்ளது; அது தன்னைப் போல் இன்னொருவனும் வந்து விட்டால் தனது மதிப்புக் குறைந்து விடும் என்ற அசூயை. 
இந்த அசூயையால் தமது மாணவர்களையோ, சக தோழர்களையோ தட்டிக் கொடுக்க மாட்டார்கள்! 
ஆகவே தமது வாழ்க்கையில் ஒரு நிலையடைந்தவர்கள் மீண்டும் புகழ், பணம், பெருமைகளை நோக்கி ஓடுவதை விட்டு விட்டு மற்றவர்களும் தாமடைந்த உயர்வு அடைய வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும்! 
இதுவே விஸ்வ மித்ர சிந்தனை - உலகிற்கு நண்பனான மனப் போக்கு! 
கௌசிகன் என்ற மன்னன் தனது தபோபலம் முழுவதையும் தன் மக்கள் உயரவே பாடுபட்டு விஸ்வ மித்ரர் ஆனார். 
இந்தச் சிந்தனையே ஒரு சமூகம் முன்னேறுவதற்கான அடிப்படைத் தகுதி!

தலைப்பு இல்லை

திருமண நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகள்! தனித் தனியாக ஒவ்வொருவருக்கும் நன்றி நவில முடியவில்லை! 
Like and  symbol இனை நன்றி நவிலல் ஆக ஏற்றுக் கொள்ளவும். 
இவ்வளவு பேர் அன்பு வைத்து வாழ்த்துச் சொல்ல என்ன காரணம் என்று திகைத்துப் போயிருக்கிறேன்! 
நன்றிகள்!
என்று அன்புடன் 
ஸ்ரீ ஸக்தி சுமனன்

பாரதியாரின் யோக சித்தி

பாரதியாரின் யோக சித்திப் பாடல்கள் அனைத்தும் ஸக்தியின் அருளால் யோகம் சித்திக்கும் நிலையை விளக்குபவை. ஆனால் உடனடியாக தனக்கு நடக்க வேண்டும் என்ற ஆவல் நிறைந்த வேண்டுதல்கள்! 
ஸ்ரீ அரவிந்தரின் வாழ்வே யோகம் என்பதன் அடிப்படைகளும் யோக சித்திப் பாடல்களில் விளக்கப்பட்டிருக்கிறது. 
எண்ணுங் காரியங்க ளெல்லாம் -- வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும் -- தொழில்
பண்ணப் பெருநிதியும் வேண்டும்-அதிற்
பல்லோர் துணைபுரிதல் வேண்டும்
இன்று தொழில் முனைவோரிற்கு இருக்கும் ஒரு உயரிய பண்பு மற்றவர்கள் வாழ்க்கை மேன்மையுற பெரிய தொழில் நிறுவனங்களை உருவாக்குதல். இந்த எண்ணம் பாரதியாருக்கு இருந்திருக்கிறது; இதை யோக சித்தியின் ஒரு அமிசமாகவே கூறுகிறார். 
வாழ்வை யோகமாக்க அற்ப புத்தியுடன் வீண்கதை பேசி நேரம் போக்குவபவர்களால் முடியாது. இதை
தேடிச் சோறுநிதந் தின்று -- பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம்
வாடித் துன்பமிக உழன்று -- பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து -- நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல
வேடிக்கை மனிதரைப் போலே -- நான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ?
என்று சொல்கிறார். 
பாரதியாரின் யோக சித்தி வேண்டுதல்கள் தாழ் உணர்ச்சிகளில் இருந்து விடுபட்டு உயர் ஆற்றலும், ஞானமும் உள்ள மனித குலத்தை உருவாக்கும் இலட்சியம் கொண்டது.

தலைப்பு இல்லை

மாத்தளைக் கல்வி வலயத்தின் தமிழ்ப் பாடசாலைகளின் கணிதப் பாடத்தின் சாதாரண தரப்பரிட்சைப் பெறுபேறுகளைப் பார்க்கும் போது தலை சுற்றுகிறது; இதற்கு என்ன தீர்வு என்று சிந்திக்கும் போது கணித ஆசான் சொல்லியது வாய்ப்பாடு ஒன்று தொடக்கம் 16 வரை பாலர் வகுப்பில் தலைகீழாகக் கேட்டாலும் சொல்லும் படி பழக்க வேண்டும். பிறகு கணிதத்தின் செய்முறைகளை விளக்கிவிட்டால் கணிதம் இலகுவான பாடமடாப்பா! என்றார்!
வளர்ந்து கட்டிளமைப் பருவத்திற்கு வந்துவிட்ட சரியாக அத்திவாரம் போடப்படாத மாணவர்களுடன் ஒவ்வொரு முறையும் தமது சக்தியை விரயமாக்கி புலம்பும் விரக்தி ஆசிரியர்களையே நாம் பார்க்கிறோம்! அத்திவாரத்திலிருந்து தொடங்க வேண்டும்! 
உடனடியாகத் திட்டம் தீட்டி மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale மாத்தளைப் பட்டதாரிகள் ஒன்றியத்தில் இருக்கும் ஆசிரியர்களுடன் உரையாட ஒரு ஆசிரியத் தங்கை அண்ணா நான் இந்தத் திட்டத்தை பொறுப்புடன் எடுத்து செய்கிறேன் என்று இன்று பாடசாலையில் அனுமதியும் பெற்றுவிட்டார். அவர்களுக்குரிய வளங்களை ஒருங்கிணைப்பதில் மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale பணிபுரிகிறது. ஆர்வமுடைய ஆசிரியர்கள் தலைமைத்துவம் ஏற்கிறார்கள். 
திட்டத்தின் நோக்கம் பாலர்களுக்கு கணிதத்திறன் விருத்தி செய்தல்! 
எப்படி விருத்தி செய்வது?
முதலில் அதிபரும் ஆசிரியரும் எமது பிள்ளைகள் அனைவரும் கணிதத்தில் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற சங்கல்பம் எடுத்துக் கொள்வது, 
இரண்டாவது பெற்றோர்கள் எமது பிள்ளை கணிதத்தில் திறன் பெற்றவர்களாக இருக்க நாம் எம்மால் இயன்ற உதவியினை, உத்வேகத்தினைக் கொடுப்பது, பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் கல்வியில் அக்கறை காட்டி சீரியஸாக இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும்! 
மூன்றாவது பிள்ளைகளை குழப்பம் இல்லாமல் ஒரு நிகழ்ச்சி நிரலில் பிணைக்க வேண்டும். 
எப்படிப் பிணைப்பது? 
இந்தப் பணியை மாத்தளை கல்வி வலயத்திற்குள் மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் ஏற்றுக் கொள்கிறது. 
2) பாடசாலையில் திட்டம் பற்றிய அறிமுகக் கூட்டம் - பெற்றோர்களுக்கானது; இதில் சொல்லப்பட வேண்டிய விடயம் :
மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் எமது பிள்ளைகளின் கணிதத் திறன் விருத்திக்காக வாய்ப்பாடு போட்டி ஒன்றினை ஆரம்பிக்கிறது. இதன் படி தினசரி நீங்கள் வீட்டில் 30 நிமிடங்கள் காலையிலோ மாலையிலோ வாய்ப்பாடு மனனம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.
இந்தப் பயிற்சியில் ஐந்து நிலைகள் உண்டு:
பயிற்சி நிலை 01: ஒன்று முதல் 05 வரை வாய்ப்பாட்டினை தடங்கல் இன்றி சொல்லுதல்
பயிற்சி நிலை 02: ஒன்றிலிருந்து பத்துவரை தடங்கலின்றி சொல்லுதல்
பயிற்சி நிலை 03: ஒன்றிலிருந்து பதினாறு வரை தடங்கலின்றி சொல்லுதல்.
பயிற்சி நிலை 04: ஒன்றிலிருந்து பதினாறாம் வாய்ப்பாட்டினை தலைகீழாகச் சொல்லுதல். 
பயிற்சி நிலை 05: பதினாறாம் வாய்ப்பாட்டிற்குள் எழுந்தமானமாக பெருக்கல் தொகை கூறும் ஆற்றல்.
முதலாவது மாதத்தில் பயிற்சி நிலை - 01 பூர்த்தி செய்தல்
இரண்டாவது மாதத்தில் பயிற்சி நிலை - 02 பூர்த்தி செய்தல்
மூன்றாவது மாதத்தில் பயிற்சி நிலை - 03 பூர்த்தி செய்தல்
நான் காவது மாதத்தில் பயிற்சி நிலை - 04 பூர்த்தி செய்தல்
ஐந்தாவது மாதத்தில் பயிற்சி நிலை - 05 பூர்த்தி செய்தல்
ஆறாவது மாதம் பொதுப்போட்டி
1) ஐந்து நிலைத் திறனையும் பூர்த்தி செய்பவர்களுக்கு அடுத்த வருடத்திற்கான பாடசாலை கொப்பி புத்தக செலவிற்கான புலமைப்பரிசில்கள் முழுமையாகவோ, பகுதியாகவோ கிடைக்கும். 
எமது ஒன்றியம் ஒவ்வொரு டிசம்பர் மாதம் இதற்குரிய பதிவுகளை ஆரம்பித்து ஜனவரி முதலாம் திகதி பயிற்சி நிலை - 01 இனை ஆரம்பிக்கும். 
ஆரம்பித்த பின்னர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும் பதிவு செய்த மாணவர்களின் பெற்றோர் வாட்ஸப்பினூடாக ஒளிப் பதிவு செய்து எமது போட்டிக்குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும். 
இப்படி அனுப்பி வைக்கப்படும் ஒளிக் கோப்புகளை ஒரு excel sheet entry எடுத்து தகவல் தொழில் நுட்ப குழு ஆவணப்படுத்தும். 
இன்னுமொரு குழு இவற்றைப் மேற்பார்வையிட்டு மாணவர்களுடைய திறனை மதிப்பிட்டு புள்ளியிட வேண்டும். 
ஜூலையில் பொதுப்போட்டி நடைபெறும்.
இது ஒரு கணிதத் திருவிழாவாக ஒவ்வொரு வருடமும் நடைபெற மாத்தளையில் கணித வல்லுனர்கள் உருவாகுவார்கள்! 
மாத்தளை அம்பாளின் பக்திக்கு பெயர் போனது; இந்த ஊரில் வசிப்பவர்கள் எல்லோருக்கும் ஒரு கலண்டர் இருக்கிறது; ஜனவரி என்றால் கோயில் கொடியேறுகிறது; மாலையானால் கோயிலிற்கு போவது, தேர் அன்று ஒன்று கூடி தேரிழுப்பது இது மாறாத ஒன்று! 
இதைப் போல் கணிதத்திற்கு ஒரு திருவிழா
தமிழில் எழுத்துப் பயிற்சிக்கு ஒரு திருவிழா
கிரகித்தலுக்கு ஒரு திருவிழா உருவாக்கிவிட்டால் மாத்தளையில் அம்பாளின் பக்தர்களாவதோடு கணிதத்தில் வல்லுனர்களாகவும் உருவாகிடுவர். 
இந்த திட்டத்தை அனைவரும் பிரதியெடுத்து அவரவர் திட்டமாக ஒவ்வொரு பாடசாலையிலும் கல்வி வலயத்திலும் செயற்படுத்த வேண்டும் என்பதே அவா! இங்கு பலருக்கு இது அவருடைய திட்டம், இவருடைய திட்டம் என்று முத்திரை குத்திக் கொள்வதிலேயே அவா! ஆனால் எல்லாத் திட்டத்திலும் பயனாளிக்கு தகுந்த பயன் கிடைத்ததா என்பது மாத்திரமே உண்மையான தேவை! 
யார் குற்றினாலும் கடைசியில் அரிசி வரவேண்டும்; சமூகம் மேன்மையுற வேண்டும் . 
தனி மனிதனோ, சிறு குழுவோ எந்தவொரு பெரிய விஷயத்தையும் சாதிக்க முடியாது; பல கரங்கள் இணைந்து அவரவர் செயலாக இவற்றை எண்ணி செய்ய வேண்டும்!
ஆர்வமுள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்! நான் குழுக்களை அமைத்து சரியான திசையில் செலுத்துவதிலும், வளங்களை ஒருங்கமைப்பதிலும் அனுபவமுள்ளவன்! 
மேலும் கல்வித் திட்டங்களை நடைமுறைப்படுத்த பெரிய பணம், வளம் தேவையில்லை! எமது எண்ணம் சிரியதாக, உறுதியுடையதாக இருந்தால் பணம், வளம் எல்லாம் வந்து சேரும்!

Monday, December 12, 2022

தலைப்பு இல்லை

இன்று எமது திருமண நாள்! 
பார்வதி அற்ற சிவனை அகுலா - குலம் அற்றவன், குடும்பமற்றவன் என்கிறது தந்திர சாஸ்திரம்! உக்கிரமும், வீரமும், அதிர்வும் கொண்ட தாண்டவம், நளினமும், அன்பும், மென்மையும் கொண்ட லாஸ்யத்தால் சமப்படுவது போன்றதே திருமண வாழ்க்கையும்! 
அது போல் சுமனனாக இருந்தவன் ஸக்தீஸ்வரியை மணந்ததால் ஸக்தி சுமனன் ஆகி, குருநாதர் இருவருக்கும் தேவியை உபாசிக்கும் ஸ்ரீ வித்தை அருளியதால் ஸ்ரீ ஸக்தி சுமனன் ஆகியதும் எமது கதை!
அகங்காரத்தை, ஆணவத்தை, சுய நலத்தை விடத் தெரியாதவனுக்கு, காமத்தை காதலால் வெல்லத் தெரியாதவனுக்கு, பொறுப்புகள் ஏற்கத் தெரியாதவனுக்கு திருமண வாழ்க்கை சுமை! 
கணவன் விருப்பப்படி மனைவி வாழவேண்டும், மனைவி விருப்பப்படி கணவன் வாழ வேண்டும் என்று ஒற்றைப் போக்காகச் சிந்திக்காமல் இருவரும் சேர்ந்து ஒருவர் விருப்பத்திற்கு மற்றவர் எப்படிப் பங்களிக்கலாம் என்று யோசிக்கத் தொடங்கினால் வாழ்வு அழகாகும்! 
இந்தப்பதிவைக் காணும் அனைவருக்கும் ஸ்ரீ காமேஸ்வரி ஸ்ரீ காமேஸ்வரரின் அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா ஆயுளாரோக்கியம் அசைந்திடா பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா என்ற பிரார்த்தனைகள்.

சுப்பிரமணிய பாரதியாரும் ஸ்ரீ அரவிந்தரும்

ஸ்ரீ அரவிந்தரின் சீடர்களில் ஒருவரான அம்ருதா (அரவமுதாச்சாரி ஐயங்கர்) பாரதியாரின் பெருமை பற்றி தனது குறிப்புகளில் கூறுவதைக் கேளுங்கள். 
அம்ருதா யோக சாதனை பழக வேண்டி ஸ்ரீ அரவிந்தரை அணுகி தினசரி வலம் வருகிறார். ஆனால் ஸ்ரீ அரவிந்தரிடம் குருவாக முழுமையாகச் சரணாகதி ஏற்படவில்லை! ஆனால் ஒவ்வொரு நாளும் ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்கும் பாரதியார் ஸ்ரீ அரவிந்தர் மேல் காட்டும் எல்லையற்ற மரியாதையால் பாரதியார் மேல் தனக்கு ஈர்ப்பும் மரியாதையும் வந்ததாகக் குறிப்பிடுகிறார். 
ஸ்ரீ அரவிந்தர் மௌனமே உருவானவர்; எவரையும் சந்தித்து, உரையாடி, நீண்ட உபதேசம் செய்யும் பழக்கம் அற்றவர். இரவு ஏழு மணிக்கு மேல் மாத்திரம் உத்தரவு பெற்று அவரைச் சந்திக்க முடியும். பாரதியாருக்கும் ஸ்ரீனிவாச்சாரி என்ற இருவருக்கும் மாத்திரம் ஸ்ரீ அரவிந்தரை நினைத்த நேரத்தில் சந்திக்கும் விதிவிலக்கு இருந்தது. 
மூவரும் சேரும் போது அரிய விடயங்கள், யோக சாதனை, நாட்டின் சுதந்திரம், அரசியல், இலக்கியம், சமூகம், நகைச்சுவை எனப் பல உரையாடல் நிகழும். இப்படி இரவில் ஸ்ரீ அரவிந்தருடைய உரையாடல்களை பாரதியார் மறு நாள் மற்றவர்களுடன் உற்சாகத்துடன் பகிர்ந்து கொள்வார்! அல்லது பாரதியாரைச் சூழ அனைவரும் மறு நாள் சூழந்து கொண்டு ஸ்ரீ அரவிந்தரிடமிருந்து என்ன பெற்றுக் கொண்டீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிப்பார். இப்படி இரண்டு வருடங்கள் ஸ்ரீ அரவிந்தருடன் பாரதியார் ஒரு நாள் விடாமல் உரையாடல் நிகழ்த்தியதாக அம்ருதா குறிப்பிடுகிறார். 
ஸ்ரீ அரவிந்தர் குறிப்பாக ஸக்தி உபாசனை பற்றி உரையாடல் நிகழ்த்தியதாக அம்ருதா குறிப்பிடுகிறார். 
அம்ருதா தனது குருவான ஸ்ரீ அரவிந்தரைப் புரிந்துக் கொள்ள பாரதியாரே முதன்மைக் கருவியாக இருந்திருக்கிறார் என்பதைப் பதிவு செய்திருக்கிறார்! 
எனது அனுபவத்தில் பாரதியாரின் யோக சித்தி, சக்தி உபாசனைக் கவிதைகளைப் படித்தால் ஸ்ரீ அரவிந்தரைப் புரிதல் இலகுவாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன்! 
பாரதியார் ஸ்ரீ அரவிந்தரிடமிருந்து விடை பெறும் நாள் பற்றி பாரதியாரின் மகள் சகுந்தலா பாரதி தனது நூலில் இப்படி விவரிக்கிறார்:
கடைசிமுறையாக் என் தந்தை அரவிந்தரிடம் விடை பெறப் போன போது அவர்கள் தனியறையில் சம்பாஷணை நடத்தியதால் அதன் விவரம் எனக்குத் தெரியாது. ஆனால் விடைபெற்றுத் திரும்புகையில் ஸ்ரீ அரவிந்தரின் சாந்தி நிறைந்த ஞானவொளி வீசும் கண்கள் கண்ணீரால் மங்கியிருந்தன. என் தந்தையின் வீர விழிகளில் கண்ணீர் ததும்பி நின்றது. அது மட்டும் தான் நான் கண்டேன்.

தலைப்பு இல்லை

எனக்கு பாரதியின் யோக சித்தி பற்றி நிறையக் கருத்து உண்டு! பாரதியைப் பற்றி உரையாடுபவர்கள் பலர் இதைக் கருத்தில் எடுப்பதில்லை! 

எல்லோருக்கும் கவிஞன், சுதந்திரப் போராட்ட வீரன், அறிஞன்! நான் புரிந்த வகையில் ஸ்ரீ அரவிந்தருடன் பூரண யோகம் முயற்சித்த யோகி! 

பாரதியின் யோக வாழ்க்கையை எல்லோரும் சகோதரி நிவேதிதையுடன் தொடர்புபடுத்திக் கூறினாலும் செம்மையுற்றது ஸ்ரீ அரவிந்தரால்! ஸ்ரீ அரவிந்தர் எவருக்கும் தன்னை குருவென்று பிரகடனப்படுத்தியவர் அல்லர்! தன்னை ஒரு சக யோக சாதகனாகவே எப்போதும் நடத்தியவர்! பாரதியார் ஸ்ரீ அரவிந்தரின் உற்ற நண்பராகவும், அதேவேளை அவரது யோக சாதனைக்குரிய உத்வேகத்தையும் பெற்றார்! 

ஸ்ரீ அரவிந்தரை பாண்டிச்சேரியில் வரவேற்கும் பணியை பாரதியார் செய்தார்; அது போல் ஸ்ரீ அரவிந்தர் பாரதியாரிடமிருந்து தமிழ் பாசுரங்கள், இலக்கியங்களும் கற்றுக் கொண்டார். 

ஸ்ரீ அரவிந்தர் திருவுருவமாற்றம் எனும் பூரண யோகம் செய்தார். இந்த யோகத்தினைச் செய்யும் போது சித்த விருத்திகளைக் கட்டுப்படுத்தி இருக்கா விட்டால் உடல் நோயுற்று அழியும் அபாயம் நிறைந்தது. இது பற்றி ஸ்ரீ அரவிந்தர் ஸாவித்ரி காவியத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த யோகத்திற்காக 12 வருடங்கள் மௌனம் காத்திருக்கிறார். ஸ்ரீ அகத்தியர் அந்தரங்க தீக்ஷா விதியில் இத்தகைய உயர் யோகத்தினைச் செய்யும் போது உடலில் உருவாகும் பயங்கர நோய்களையும் அதிலிருந்து உடலைப் பாதுகாப்பதற்குரிய கற்பங்களையும் கூறுகிறார். சுவாமி விவேகானந்தரும் உயர் யோகத்தின் ஆற்றல் காரணமாக உடல் கெட்டு ஒளி சரீரம் ஏற்க வேண்டிய நிலை வந்தது! இதை அவரே பதிவுசெய்திருக்கிறார்.

இந்த வகையில் பாரதியின் உடல் அவரது ஆன்ம வளர்ச்சியைத் தாங்காது சிதைந்தது என்பதே சரி! அதற்கு அவர் இளமைக் காலத்திலிருந்து சில பழக்கங்களும், கட்டுக்கடங்காது சித்த விருத்திகளை உருவாக்கி கவிதை பாடும் ஆற்றலால் வீணாகிய உயிர் ஆற்றலும் காரணமாக இருந்திருக்கலாம்! 

‘எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா, 

யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டிலே’ 

என்ற வரிகள் கவித்துவத்திற்கான வரிகள் மாத்திரமல்ல! பாரதியாரின் யோக சாதனையின் உறுதியையும் கூறுகிறது. 

பாரதியின் ஒளியான்மா வேண்டியதன் படி வரைந்த குறிப்பு இது!

ஸ்ரீ ஸக்தி சுமனன்

11-12-2022


Saturday, December 10, 2022

தலைப்பு இல்லை

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale முறையான ஒரு கல்வியல் ஆய்வினை முன்னெடுக்கிறது. மாத்தளை மாவட்டத்தில் வசிக்கும் பெருந்தோட்ட, இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் கல்வி முன்னேற்றம் எந்தளவில் இருக்கிறது என்பதை க. பொ. த இந்த வருட (2021) பெறுபேறு அடிப்படையில் எப்படி வரைபு படுத்துவது என்பது இதன் நோக்கம். இதன் விரிவான அறிக்கைகள் உத்தியோக பூர்வமாக இவற்றுடன் தொடர்புடைய அதிபர், திணைக்களம், ஆசிரியர்களுடன் விரிவுரையாளர் Dr. Nishānthan Ganeshan தலைமையில் உரையாடப்படும். இந்தப் பதிவின் நோக்கம் சமூக விழிப்புணர்வாகும். 

மாத்தளை கல்வி வலயத்தில் மொத்தமாக 83 பாடசாலைகள் இருக்கிறது. இவற்றில் 59 சிங்கள மொழி மூல பாடசாலைகள்; தமிழ் மொழி மூல பாடசாலைகள் மொத்தம் 24; தமிழ் மொழி மூலப் பாடசாலைகளை நாம் மலையகத் தமிழர்களின் கல்வி முன்னேற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு பாகுபடுத்தினால் 

முஸ்லீம் பாடசாலைகள் - 10

தமிழ் (இந்து/கத்தோலிக்க/கிருஸ்தவ) பாடசாலைகள் - 14 

அதாவது மலையக/பெருந்தோட்ட தமிழ் சமூகத்திற்கான பாடசாலைகளின் எண்ணிக்கை 14 ஆகும், 

இந்த 83 பாடசாலைகளிலிருந்தும் க.பொ. த சாதாரண தரத்திற்கு தோற்றிய மொத்த மாணவர்கள் 3918 ஆகும். இவற்றில் 

சிங்கள மொழி மூல மாணவர்கள் 2796. 

தமிழ் மாணவர்கள் - 539

முஸ்லீம் மாணவர்கள் - 583

இவற்றில் மொத்தமாக சித்தி அடைந்த மாணவர்கள்

சிங்கள மொழி மூல மாணவர்கள் 2198. 

தமிழ் மாணவர்கள் - 278 

முஸ்லீம் மாணவர்கள் - 391

சதவீதப்பிரகாரம் ஒப்பிட்டால்,

பரீட்சைக்குத் தோற்றிய மொத்த சிங்கள மாணவர்களில் 79% ஆன மாணவர்கள் உயர்தரம் செல்வதற்கு தகுதியுடையவர்கள் ஆகியிருக்கிறார்கள். 

பரீட்சைக்குத் தோற்றிய மொத்த முஸ்லீம் மாணவர்களில் 67% ஆன மாணவர்கள் உயர்தரம் செல்வதற்கு தகுதியுடையவர்கள் ஆகியிருக்கிறார்கள். 

பரீட்சைக்குத் தோற்றிய மொத்த தமிழ் மாணவர்களில் 52% ஆன மாணவர்கள் மாத்திரமே உயர்தரம் செல்வதற்கு தகுதியுடையவர்கள் ஆகியிருக்கிறார்கள். 

மாத்தளை தமிழ் சமூகம், பெருந்தோட்ட மலையகச் சமூகம் இந்தப் புள்ளி விபரவியலை நன்கு உள் வாங்கிக் கொள்ள வேண்டும். 

"எமது சமூகத்தில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடிப்படைக் கல்வித் தகுதி அற்றவர்களாகிக் கொண்டிருக்கிறார்கள்" 

சித்தி விகிதத்தை அதிகரிக்க மாத்தளையில் இருக்கும் சைவ, இந்து அமைப்புக்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் எப்படி பாடசாலைகளுக்கு உதவலாம்? 

சித்தி விகிதம் குறைவதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன என்பது பற்றிய action research உம் அவற்றிற்கான தீர்வினை எப்படி அடைவது என்ற திட்டங்கள் இவற்றை கலந்தாலோசிக்கலாம். 

இந்த ஆய்வு முற்றிலும் எமது சமூகத்தின் கல்வியில் நிலவரத்தை தெளிவுபடுத்துவதற்கான சமூக அக்கறைப் பதிவுகளாகும். 

கல்வி முன்னேற்றம் தொடர்பான திட்டங்களை மாத்தளையில் முன்னெடுக்க மாத்தளைப் பட்டதாரிகள் ஒன்றியத்தின் செயலாளர் கலாநிதி நிசாந்தனை அணுகலாம்.

சிறந்த புரிதலைப் பெறுவதற்கு தரவுகளைப் பகுக்கும் போது பயன்படுத்தப்பட்ட அனுமானங்கள்:

1) முஸ்லீம் பாடசாலைகள் என்பதன் அர்த்தம் அங்கு பெரும்பான்மையான மாணவர்களும், பாடசாலை நிர்வாகமும் இஸ்லாமிய மத முன்னுரிமை தரும் பாடசாலைகளாகும். அங்கு சிறு விகிதமான இந்து தமிழ் பிள்ளைகள் பயில்கிறார்கள். 

2) தமிழ் பாடசாலை எனும்போது அங்கு பெரும்பாலும் மலையகத் தமிழர்களும் மிகச் சிறியளவில் இஸ்லாமிய மாணவர்களும் இருப்பார்கள்.

3) சிங்களப்பாடசாலைகள் எனும்போது அங்கு மிகச்சிறிய அளவில் மலையகத் தமிழர்களும், இஸ்லாமியரும் கற்கிறார்கள். 

4) தமிழ் பாடசாலைகளில் கற்கும் அனைவரும் மலையக இந்திய வம்சாவளித் தமிழர்கள் இல்லை; வட கிழக்கினைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களும் இதற்குள் அடங்குவார்கள். 

5) தமிழர்கள் எனும் போது கிருஸ்தவ, இந்துக்கள் தம்மைப் பிரித்துக்காட்டுவதில்லை என்பதும் இங்கு நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

6) சமூகமாக கூட்டிணைந்து வளங்களைப் பெறுவதற்கு மிக அவசியமானது என்பதால் மேற்குறித்த பகுப்புகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக இஸ்லாமியர்கள் தமது சமூகம் என்ற உத்வேகத்துடன் கல்வி வளர்ச்சிக்கு தம்மால் இயன்ற உதவியை நன்கு செய்கிறார்கள் என்பது மிகச்சிறப்பான விடயம். 

7) மேற்குறித்த சிங்களம், தமிழ், முஸ்லீம் என்ற சொற்பதங்கள் 100% பகுப்பாய்விற்கானதும் சமூகமாக கல்வியில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளோம் என்பதை ஆராய்வதற்கான பகுப்பு என்பதையும், கல்வியில் விளிம்பு நிலையில் இருக்கும் மலையக தமிழ் சமூகத்தை உத்வேகப்படுத்தி தலைமைத்துவங்களை உருவாக்குவதற்குமான ஒரு கருவியாகவே புலமை அடிப்படையில் முன்வைத்துள்ளார்கள்; ஆய்வாளர்கள் எந்தவித இன, மதப் பாகுபாட்டினை தனிப்பட ஏற்றுக் கொள்வதில்லை என்பதையும், தமது ஆய்வுகளில் புலமைத்துவ அறத்தையும் முழுமையாகப் பின்பற்றுகிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறார்கள்.


Thursday, November 03, 2022

தலைப்பு இல்லை

பயன்எளி தாம்பரு மாமணி செய்ய

நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு

அயஓளி யாயிருந் தங்கே படைக்கும்

பயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே. (திருமந்திரம் - 392) 

இந்த பாடல் இரண்டாம் தந்திரத்தில் சர்வ சிருஷ்டி எனும் தலைப்பின் கீழ் வருகிறது.

இதனை தமிழறிவு, சைவ சித்தாந்த அடிப்படை கொண்டு பொருள் நோக்கின் முதலில் சந்தி பிரிக்க 

பயன் எளிதாம் பருமாமணி (செய்ய)

நயன் எளி(தாகிய) நம்ப ஒன்றுண்டு

வயன் ஒளியாயிருந் த(அ)ங்கே படைக்கும்

வயனெளி தாம் வயண(ம்)ந் தெளிந்தேனே. 

பதப்பொருள்: 

பருமாமணி=சிவபெருமான்

நயன்=இன்பம்

"ஆகிய" என்பது "செய்யிய" என்னும் வினையெச்சம்

நம்புதல்=விரும்புதல்

வயன்=வெற்றி 

வயணம்=காரணம்

பொருள்:

படைக்கும் ஆற்றல் (பிரம்மா) வெற்றியுடன் செயலாற்றும் காரணத்தை நான உணர்ந்து தெளிந்தேன் (வயனெளி தாம் வயண(ம்)ந் தெளிந்தேனே) அது என்னவென்றால் படைப்பினை நடத்துவதற்கான மூல காரண ஒளி படைப்பிக்கும் இடத்தில் அந்த சக்தியாக திரிந்து நிற்கிறது.  (வயன் ஒளியாயிருந் த(அ)ங்கே படைக்கும்) அதாவது சிவம் என்ற போராற்றலே பிரம்மா எனும் படைக்கும் சக்திக்கு மூலமாக இருக்கிறது என்கிறார் திருமூலர் பெருமான். அதற்கு மேல் உள்ள வரியில் அது என்னவென்று கூறுகிறார்; இன்பமான ஒன்று எல்லோராலும் விரும்பப்படுவது ஒன்று உண்டு (நயன் எளி(தாகிய) நம்ப ஒன்றுண்டு), அது யாரெனில் பருமாமணியான சிவனே!அவனைப் பற்ற எல்லாம் எளிதாகும். 

இந்தப்பாடலை பொருள் கொள்ள தனியே இந்த பாடலை மட்டும் கொண்டு விளங்கவியலாது என்பதறிதல் வேண்டும். 

சர்வ சிருஷ்டி அத்தியாயத்தின் தொடக்கத்திலிருந்து திருமூலர் சிவம் எப்படி ஒன்றாயிருந்து பலவாகி பராபரையாகி, பிரம்மாவாகி, விஷ்ணுவாகி ஆறாதாரங்களில் உறைந்து, பஞ்ச பூதங்களில் கலந்து செயல்கொள்கிறது என்பதனை விளங்குதல் வேண்டும்.

பழைய பதிவு

எழுதியது August 05, 2012

**************

#திருமந்திரம் #திருமூலர்


Tuesday, November 01, 2022

சித்த சம்ஸ்காரம்

பதஞ்சலி யோகத்தில் சித்தம் என்ற சொல் மிக முக்கியமானது. சித்தம் என்ற மனதின் பகுதியில் எழும் விருத்திகளை நிரோதம் செய்வதுதான் யோகம் என்று பதஞ்சலி வரையறுக்கிறார். 

சித்தம் என்பது எமது புலன்களால் பெற்ற அனுபவங்கள் அனைத்தையும் பதிவு செய்துகொள்ளும், கணனியில் hard disk போன்ற ஒரு பகுதியாகும். இந்த சித்தத்தில் ஏற்படுத்தும் பதிவுகள் அனைத்தும் சம்ஸ்காரங்கள் எனப்படும். சம்ஸ்காரங்கள் என்றால் நாம் பெற்ற அனுபவங்கள் விதை வடிவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நிலை. 

இந்த சம்ஸ்காரம் ஒருவனில் ஐந்து விதமாக சேருகிறது;

1) ஆன்மாவின் சுய இயல்பான ஸத், சித், ஆனந்தம்

2) முற்பிறவியில் ஐம்புலன்கள் மூலம் பெற்ற அனுபவங்கள்

3) தாய், தந்தை குடும்பத்தினரால் புகுத்தப்பட்ட சம்ஸ்காரங்கள்

4) வாழும் சூழல் புகுத்தும் சம்ஸ்காரங்கள்

5) தனது இச்சசக்தியால் சிந்தித்து தானே உருவாக்கிக்கொள்ளும் சம்ஸ்காரங்கள். 

இந்த ஐந்து சித்தப்பதிவுகளின் அடிப்படையிலேயே ஒருவனின் மன எண்ண ஓட்டம் ஆரம்பமாகி, பின்னர் அது அவனது பழக்கமாக மாறி அவனது வாழ்க்கையை முன்னேற்றவோ தாழ்த்தவோ வைக்கிறது. 

ஒரு மனிதன் நல்ல வாழ்க்கையைப் பெற வேண்டும் என்றால் அவன் மேற்குறித்த ஐந்து வழிகளிலும் நல்ல சம்ஸ்காரங்களைப் பதித்துக் கொள்ள வேண்டும். அப்படியில்லாமல் தேவையற்ற சம்ஸ்காரங்களைப் பதித்துக் கொள்வதால் தவறான பழக்கவழக்கத்திற்கு உள்ளாகி வாழ்க்கையில் துன்பம் அனுபவிக்கத் தொடங்குவான். 

இப்படி தம்முள் ஏற்றுக்கொண்டு பதிப்பிக்கப்பட்ட சம்ஸ்காரங்களால் எழும் எண்ண விருத்திகளை நிரோதம் செய்து தமது சித்தத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுவதே பதஞ்சலி கூறும் அந்தரங்க யோகம் - தாரணை, தியானம், சமாதி! 


Saturday, October 29, 2022

தலைப்பு இல்லை

நான் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு வேலை நிமித்தம் (அப்போது யாழ்பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம்) காரில் பயணித்துக் கொண்டு மிகிந்தலையில் ATM இல் காசு எடுத்துவிட்டு மின்னஞ்சலை பரிசோதித்தால் ஒரு மேற்கத்தேய நபரிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. செய்தி இதுதான்; எனது அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலை முனைவர் திருமதி கீதா ஆனந் இனது மொழிபெயர்ப்பினூடாக தான் கற்றதாகவும் தனக்கு தமிழ் சித்தர் இலக்கியங்களில் உள்ள யோக நுணுக்கங்களைக் கற்க விரும்புவதாகவும் எழுதியிருந்தார். 

சரி, தனியே ஒரு நபரிற்கு கற்பிப்பது கடினம், ஒரு சிறுகுழுவாக ஆர்வமுள்ளவர்களை ஒன்று திரட்டுங்கள் என்று கூற அகத்தியர் குருகுலம் பிரேஸில் நாட்டில் உருவாகியது. 

சிரத்தையாக, பொறுமையாக இரண்டரை வருடங்களாக அர்ப்பணிப்புடன் ஒவ்வொரு விடயமாக கற்று வருகிறார்கள். மிகுந்த தேடல் உள்ளவர்கள்; கற்பவர்களில் பலர் ஆயுர்வேதம் முறையாகப் பயின்றவர்கள்; பல்கலைக்கழக விரிவுரையாளர், இசைக் கலைஞர், சூழலியலாளர் என்று பலவித துறைகளில் நிபுணர்கள். 

அவர்களுடன் உரையாடிய உரைத்தொகுப்பை சில மாணவர்களின் முயற்சியால் edited video ஆக ஒவ்வொரு வாரமும் புதன், ஞாயிற்றுக் கிழமைகளில் ஹடயோக பிரதீபிகை உரை வெளிவருகிறது. 

யோகத்தில் ஆர்வமுள்ளவர்கள், ஹடயோக சாதகர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் பாருங்கள்! 

பார்த்தபின் like பண்ணுங்க, share பண்ணுங்க, இப்படி எல்லோரும் support பண்ணினாதான் channel வளர்ந்து இந்த வீடியோ செய்யும் முயற்சி எடுப்பவர்களுக்கு அவர்கள் வேலைக்குத் தகுந்த சன்மானம் கொடுக்க முடியுமாம். 

ஆகவே மறக்க வேண்டாம். 

மூன்றாவது பாகம்: முதல் கொமெண்டில்


Tuesday, October 25, 2022

தலைப்பு இல்லை

பேராசிரியர் தேஷ்பாண்டே அவர்களை ஸ்ரீ அன்னை ஶ்ரீ அரவிந்தர் சன்னதியில் சந்திப்பு! 

அவர் ஒரு இயற்பியல் பேராசிரியர் - He worked as Scientist in Tata Institute of Fundamental Research, Mumbai (1955-57); at Bhabha Atomic Research Centre, Mumbai (1957-80); at the Lawrence Berkeley Laboratory, Berkeley, California USA (1964-65); headed several Atomic Energy and Space Projects in Advance Technology, apart from being the Examiner for a number of PhD thesis in the field of Solid State Physics.

தனது ஓய்விற்குப் பின்னர் பாண்டிச்சேரியை வசிப்பிடமாக்கிக்கொண்டு ஸ்ரீ அன்னையினதும், ஸ்ரீ அரவிந்தரது ஸாவித்ரி காவியத்தினையும் ஆராய்ந்து வருவதை தனது வாழ்நாள் பணியாகச் செய்து வருகிறார். 

யோகத்தில் உடலில் நடைபெறும் மாற்றங்கள் - body transformation பற்றி ஸ்ரீ அரவிந்தரின் குறிப்புகளை தொகுத்து வருகிறார். நான் அவரது நூல்களைப் படித்திருக்கிறேன் என்று அது பற்றி உரையாடியபோது மிகவும் இரசித்துக் கேட்டார். பின்னர் நெகிழ்ந்து இரு நூல்களை அன்பளித்தார். 

வர இருக்கும் எமது அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை முழுமையாக review செய்து தருவதாகவும் கூறினார். தன்னுடன் வந்து ஒரு வாரம் தங்கி தனது ஆய்வுகளை உரையாடும்படி அழைத்திருக்கிறார்.


Monday, October 24, 2022

தலைப்பு இல்லை

மனம் பற்றிய யோக விளக்கம் இரு வருடங்களுக்கு முன்னர் ஆற்றிய உரையின் பதிவு. 

மொத்தமாக மானச யோக வித்யா என்ற தலைப்பில் YouTube இல் 05 பாகங்கள் தினசரி தரவேற்றப்படுகின்றன. இணைப்பு முதல் கொமெண்டில்...

மனம் பற்றிய யோக சாத்திர விளக்கம் வேண்டுபவர்கள் பார்வையிடுங்கள். 

மறக்காமல் Like பண்ணுங்க Subscribe பண்ணுங்க...


தலைப்பு இல்லை

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

பண்டிகைகள் மனதிற்கு மகிழ்வைக் கொடுத்து மனித ஆற்றலை ஒன்றிணைக்கும் பொறிமுறைகள்! 

இதைக் காண்போர் அனைவருக்கும் அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா! ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தி அன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா! 

என்று பிரார்த்தித்து எமது மக்கள், சமூகம், நாடு, உலகம் உயர எமது அறிவு, ஆற்றல், அதிகாரத்தை பயன்படுத்துவோம் என்ற சங்கல்பத்துடன் இந்த தீபாவளியைக் கொண்டாடுவோம்.


Sunday, October 23, 2022

தலைப்பு இல்லை

ஸ்ரீ ஸக்தி சுமனன் ஆற்றிய சுப்பிரமணிய யோக ஞானத் திறவுகோல் உரைகளின் தொகுப்பு அவரின் மாணவர்களின் முயற்சியால் இந்த இதழில் தொகுக்கப்பட்டுள்ளது. 

முருக உபாசனை பற்றிய பல அரிய கருத்துக்கள் வீடியோ கோப்புக்களாகவும் இணைக்கப்பட்டுள்ளன. 

தீபாவளியும் மகாலக்ஷ்மி அருளும் 

******************************************

திருப்புகழ் கூறும் சக்தி நிபாதம்

****************************************

திருப்புகழ் கூறும் அருணகிரி நாதரின் யோக நிலைகள்

************************************************

மந்திர சாதனைக்கு மகத்தான திருத்தலம் திருப்புகழ் போற்றும் ஆவினன் குடி

************************************************

முருகனின் உருவ யோக தத்துவத்தை விளக்கும் வள்ளலாரின் சுப்பிரமணியம் 

******************************************

கந்தக்குரு கவசம் மெய்ப்பொருள் விளக்கம்

************************************************** 

போன்ற சுவாரசியமான கட்டுரைகளைத் தாங்கி வந்திருக்கிறது இந்த மாத சிருஷ்டி இதழ்.

படிக்க விரும்புபவர்கள் இந்த இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் +94776271292/+917200081475 PDF கிடைக்கும்.


Sunday, October 16, 2022

தலைப்பு இல்லை

சென்னையில் நடிகர் ஜீவாவுடன் ஒரு சிறு சந்திப்பு! காமராஜர் மக்கள் இயக்கத்தின் இளைஞர் அணித்தலைவராக மிகத்தீவிரமாக சமூக முன்னேற்றம் பற்றிய சிந்தனையும் செயலும் கொண்டிருக்கிறார். 

ஸ்ரீ அரவிந்தரின் மனிதச் சக்கரம் பற்றிய கோட்பாடுகள், சமூக மனம் எப்படி உருவாகிறது, மக்களின் தன்மைக்கு ஏற்பவே தலைவர்கள் உருவாகிறார்கள் என்பது பற்றி உரையாடினோம். 

மிகச்சிறிய உரையாடல், எனினும் பிரயோசனமாக இருந்தது!

மக்களின் மனதைக் கட்டியெழுப்புவதே மிக உயர்ந்த சமூகப்பணி!


Friday, October 14, 2022

தலைப்பு இல்லை

இந்த விஜயதசமி நாட்டியாச்சார்யா பாலச்சந்திர ராஜு ஐயா அவர்களிடம் நாதயோக சித்திக்காக இசைக்கருவிகளையும் நாட்டியத்தினையும் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி கற்றுக்கொண்டேன். 

கர்நாடக சங்கீதத்தில் கீதங்கள் வரை முன்னேறியிருக்கிறேன். 

நாட்டியாச்சார்யா பாலச்சந்திர ராஜு அவர்கள் யார் என்பதை அறிமுகப்படுத்த ருத்ர வீணை நாடகத் தொடரின் ஆரம்பத்தில் வரும் இராகம் பற்றிய விளக்கம் இவரது இராகபாவார்த்தம் என்ற நூலில் இருந்து பெறப்பட்டது. 32 இசைக்கருவிகளை வாசிக்கக்கூடிய நிபுணர். நட்டுவாங்கத்தில் நிபுணர். மூகாம்பிகை - இராஜமாதங்கி உபாசகர்! 

இன்று இசை மருத்துவம், இசை எப்படி மனதை வசீகரித்து செயல் புரிகிறது போன்ற உண்மைகளை ஆழமாக உரையாடினோம். 

சங்கீத ரத்னாகாரம், அபிநவபாரதி, பரத சாஸ்த்திரம், கூத்த நூல், பஞ்ச மரபு, அபிநய தர்ப்பணம் ஆகிய நூல்களை, தமிழிசைப் பண்களையும் இராகங்களையும் சிறுகுறிப்பாக தமிழில் எழுதச்சொல்லி ஆசி கூறியுள்ளார். 

நான் ஒரு இசைக்கலைஞன் இல்லை! கற்றல் என்பது ஒரு தீராத ஆர்வம்! வாழ்வே யோகம் என்றபடி இசை - நாட்டியம் இவற்றிலுள்ள யோகத்தின் கூறுகளை ஆராயப்போய் பற்றிக்கொண்ட தீராத ஆர்வமாக சங்கீதமும் நாட்டியமும் ஆகிவிட்டது.


Wednesday, October 12, 2022

காளி சித்தர்

காலையில் திரையலிங்கர் அதிஷ்டானத்தில அன்னையின் தரிசனம்; 

சேந்நா, ஐம்பத்து ஒரு முண்டமாலை, காளியின் பாதார விந்தம்; 

திரையலிங்கர் உன்னை உபாசித்து இரு சத ஆயுளுக்கு மேல் பெற்ற இரகசியம் என்ன? என்றேன்.

அன்னை கூறினாள்;

உன் சுவாசமும் நானே

அதன் வழி உட்புகும் பிராணன் நானே,

பிராணன் இயக்கும் மனமும் நானே, மனம் இயங்கும் உடலும், உடலின் அணுவும் நானே!

சுவாசம் தீர்க்கமானால் கும்பகம் சித்திக்கும், கும்பகம் சித்தித்தால் பிராணன் பலமாகும், பிராணன் பலமானால் சுழுமுனையைத் துளைத்து மூலாதாரத்தில் உறைந்து நிறையும், பிராண பிலமாகி உறைந்தால் பதுமங்கள் மலரும்; பதுமங்கள் மலர்ந்தால் குண்டலினியால் நான் ஊர்த்துவமாவேன்; என் ஊர்த்துவ முகம் ஐம்பது இதழுக்குள் அட்சரங்கள் நிரப்பும்; தட்சிண மார்க்கமாய் எழுந்து இதை நான் செய்வதால் நான் தட்சிண காளி, 

எழுந்த குண்டலினி இராஜபாட்டையில் சென்று ஆயிரம் இதழ் சேர்ந்தால் காலம் காலி, இதனால் நான் காலசங்கர்ஷினி;

தட்சண மார்க்கமாய் தொடங்கி காலத்தைக் காலி செய்தால் என் பணி செய்து முடியும் வரை உடலில் இருக்கலாம்.

இதை சாதித்த காளி புத்திரன் திரையலிங்கன்! அவன் உபதேசம் பெற்று விட்டகுறை தொட்ட குறையாய் என்னை இராஜ கௌல வாம பாதையில் இரு துவி தஸ மண்டலம் பரவைராக்கியமாய் உபாசிக்க காயசித்தி! என்னை நீ உபாசித்து அகத்தியன் பணி செய்ய ஆசிகள் என்றனல் அன்னை!

இதைச் சாதிக்க தட்சணத்தில் தொடங்கி காலசங்கர்ஷனத்தில் முடி என்றால் கருணை மிகு கண்ணால்!

ஶ்ரீ ஸக்தி சுமனன்

த்ரைய லிங்க சுவாமிகள் அதிஷ்டானம்

கங்கா காட், காசி

12 oct 2022


தலைப்பு இல்லை

நமப் பார்வதி பதயே நமஹ

ஹர ஹர மஹாதேவ்....

மஹாதேவர் ஸ்ரீ விஸ்வ நாதரிற்கு ஸப்த ரிஷி பூஜை

ஸ்ரீ அன்னப்பூரணிதரிசனம்

விசாலாட்சி அம்மாவிற்கு அபிஷேகம்

தர்ம ராஜர் யம பதவி பெற்ற தர்ம குண்டத்தில் ஹவனம்

ஸ்ரீ மகா கால பைரவருக்கு துரிய சந்திபூஜை

ஸ்ரீ அகத்திய லிங்கத்திற்கு கைகளால் அபிஷகம்

மணிகர்ணிகையில் ஜெப சாதனை 

தண்டபாணி தரிசனம்

திரையலிங்க ஸ்வாமிகள் அதிட்டானத்தில் சாதனை

சார் நாத் புத்தபகவான் தனது தர்மச்சக்கரத்தை சுழற்றிய இடத்தில் உள் செல்லும் - வெளிச்செல்லும் மூச்சைக் கவனித்து...

சன்னியாசி போஜனம் இவற்றுடன் காசி தரிசனம் கால பைரவர் அருளாசியுடன் பூர்த்தியானது....

காண்போர் அனைவருக்கும், அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா! ஆயுளாரோக்கியம் அசைந்திடா பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா என இவை அனைத்தும் கிடைக்கப் பிரார்த்தனைகள்!


Tuesday, October 11, 2022

தலைப்பு இல்லை

Bodhi Tree in Sarnath - Branch of Anuradhapura Maha Bodhi Tree.

Sarnath - where lord Buddha started his Dharma (Dhamma) chakra.

 SARNATH

SARNATH IS ONE AMONGST THE FOUR HOLY PLACES ASSOCIATED WITH THE LIFE OF LORD BUDDHA. THIS IS THE PLACE WHERE BUDDHA AFTER ATTAINING ENLIGHTENMENT AT BODHGAYA, PREACHED HIS FIRST SERMON TO HIS FIVE ERSTWHILE COMPANIONS. THIS EVENT IN BUDDHIST LITERATURE, IS KNOWN AS DHARMA CHAKRA-PRAVARTANA OR THE TURNING OF THE WHEEL OF LAW. FOUNDATION OF THE VERY FIRST BUDDHIST SANGHA WAS ALSO LAID OVER HERE BY LORD BUDDHA HIMSELF IN BUDDHIST TEXTS THE PLACE IS RECORDED AS RISHIPATAN OR ISSIPATANA AND MRIGADAVA OR MRIGADAYA. THOUGH ITS MODERN NAME SEEMS TO BE A CONTRACTION OF SARANGANATH (LORD OF DEERS), STILL BORNE BY THE MAHADEVA ENSHRINED IN A TEMPLE NEARBY. THE PLACE IS HELD EQUALLY HOLY BY THE JAINAS, AS BEING THE VENUE OF THE AUSTERITIES OF SREYANSANATHA, THE ELEVENTH TIRTHANKARA. THE ARCHAEOLOGICAL IMPORTANCE OF THE SITE WAS FIRST BROUGHT TO LIGHT BY MR. DUNCAN AND COL. E MACKENZIE DURING 1798.A.D WHICH WAS FOLLOWED BY A SERIES OF EXCAVATIONS BY ALEXANDER CUNNINGHAM (1835-36), MAJOR KITTOE (1851-52), MR. F. O. OERTEL (1904-05), SIR JOHN MARSHALL (1907), M.H. HARGREAVES (1914-15) AND LASTLY BY DAYARAM SAHANI, THESE EXCAVATIONS HAVE UNEARTHED A NUMBER OF MONASTERIES, STUPAS, TEMPLES, INSCRIPTIONS, SCULPTURES AND OTHER ANTIQUITIES DATING FROM THIRD CENTURY B.C TO TWELFTH CENTURY AD. NOTEWORTHY AMONG THEM ARE DHARMARAJIKA STUPA, DHAMEKH STUPA, MULGANDHA KUT, AN ASOKAN PILLAR WITH. LION CAPITAL DHARMA-CHAKRA-JIN-VIHARA OTHER MONASTERIES, CLUSTER OF VOTIVE STUPAS AND A LARGE NUMBER OF SCULPTURES. THE ARCHAEOLOGICAL SURVEY OF INDIA HAS MAINTAINED A SITE MUSEUM CLOSEBY, WHICH HOUSES THE SCULPTURES, INSCRIPTIONS AND OTHER OBJECTS OF INTEREST RECOVERED FROM THE EXCAVATIONS.


Sunday, October 09, 2022

பைரவ தரிசனம் - பைரவ ஸித்தி

துரியசந்தியில் காசிகாபுராதி நாத தரிசனம் 

சுரபானம் என் கையால் ஏற்று அனுக்கிரகம்

அதிரும் உடுக்கைச் சத்தம் கர்மமெல்லாம்

உதிர்வித்து மூலாதார பைரவியை விழிப்பித்து

சகஸ்ராரம் சேர்ப்பித்து தூங்காமல் தூங்கும் நிலை

தந்தீர் ஆனந்த பைரவா 

கோடிப் சூரியப் பிரகாச ரூபம் 

தேடியும் கிடைக்காத ஜோதியாக 

விஸ்வரூபம் கொள்ளும் விஸ்வ நாதர்

ஸப்த ரிஷிகள் பூஜை ஏற்கும் நேரம் 

அகஸ்திய குலம் தழைக்க அகத்தில் 

ஒளியாக நிலைத்து நிற்பீர்

அதிர்வுறும் பிரபஞ்சம் உம்மிருப்பு

இதையறியும் ஞானம் உம் கருணை

சிவரூப பைரவா நீயே என் ஆத்மா 

எம்குரு சித்த நாகரை பைரவ சித்தராக்கினீர்

உம் கருணையால் பைரவ சித்தி அருளுவீர்

எமக்கு, 

கர்மத்தால் மனதில் எழும் விருத்தியை

உமக்கும் சம்ஸான புருவமத்தியில் ஆகுதியாக்குகிறேன்

நீரே பிரபஞ்சத்தில் எல்லாமாக இருக்கும் போது

ஆரிங்கு பயம் தரமுடியும் எனக்கு

காசி எனும் புருவமத்தியில் 

வாசி எனும் கயிறு கொண்டு

அக்ஷங்கள் இரண்டையும் நிறுத்தி

பிராணன் எனும் நெய்யூற்றி

எண்ணம் எனும் சமித்து இட்டு 

பைரவ ஒளியில் ஆகுதியிட 

பைரவ ஸித்தி எனும் அனுக்கிரகம் தந்தீர்

ஸ்ரீ ஸக்தி சுமனன்

துரிய சந்தி, வாரணாசி

09-Oct-2022


விசாலாக்ஷி அருளால் சிவ ஒளி காணல்

பிரம்ம முகூர்த்தத்தில் அகண்ட கண்ணுடையாள் தரிசனம்,

பாலும் சுத்த ஜலமும் ஆதிபீடத்திற்கு அபிஷேகம்,

காசி என்றால் சிவத்தின் ஒளி பரவும் இடமென்றாய் அம்மா

நகரமே சிக்கலும் விக்கலும் எச்சிலுமாய் இருக்கிறதே என்றேன். 

சிரித்தாள்; ஸ்தூலமுண்டு, சூக்குமம் உண்டு, அதி சூக்குமமும் உண்டு, இவை தாண்டிய காரணமும் உண்டு; அதற்கு மேல் மகாகாரணமும் உண்டு; கேள்வி கேட்டால் மகாகாரணம் ஏறும் வரை அப்பியாச வைராக்கியம் உனக்கு உண்டென்றால் அனைத்திற்கும் பதிலும் உண்டென்றாள் அன்னை! 

சிறியேன் யான் உனது பஞ்சபூத ஆட்டத்தில் மயங்காமல் இருப்பது எப்படி, நீதான் அப்பியாச வைராக்கியம் தந்து வழி கூறவேண்டும் அம்மா! என்றேன். 

மந்தகாசப் புன்னகை உமிழ்ந்தாள்

கலி என்பது மகா குழப்பம், நேரற்ற தன்மை! 

இதுவே காசியின் ஸ்தூல அமைப்பு.

ஸ்தூலம் என்பது அழுக்கு. அதற்குள் சிவ ஒளியை அறியும் நுட்ப ஆற்றல் பெறவேண்டும் மகனே என்றாள்! 

காசி ஸ்தூல அமைப்பே உள்ளிருக்கும் சிவத்தின் ஒளியை அறியமுடியா உன்மனதினதும் உடலினதும் குழப்பம்! 

தெய்வத்தைக் காணவென்று வழியெங்கும் ஸ்தூலக் கண்கொண்டு கவனம் இழந்தால் அழுக்கும், அசுத்தமும் என்று மனம் கலங்கும்! 

பைரவரின் அருள் தரும் விழிப்புணர்வுடன் ஸ்தூலத்தில் இருக்கும் அழுக்கையும் பெருங்குழப்பத்தையும் தாண்டி, எனது அருளால் விசாலமான கண் பெற்றால் அழுக்கான ஸ்தூலத்திற்குள்ளேயே சூக்குமம், அதிசூக்குமமும், காரணமும், மகா காரணமும் காணும் ஆற்றல் பெறலாம்.

மலமும் சதையும் மூத்திரமும் நிறைந்த உடலுக்குள்ளே இறையின் அருள் பிரவாகிக்கும் சூக்கும நாடிகள் உண்டு. அந்த நாடிகளின் வழி உள்ளே சென்றால் புருவமத்தியில் காரணமான ஆன்ம ஒளி உண்டு; அது இன்னும் நுண்மையானால் மகாகாரணமான சிவத்தின் ஒளியும் உண்டு. 

உனது கண் எப்போதும் புலன் வழி புறவயமாகப் பார்த்து பழகும்போது ஸ்தூலமே உணர முடியும். அதைத்தாண்டி பார்க்க உன் முயற்சி வேண்டும்! முயற்சி சிரத்தையானால் எனது அருளால் மற்றவை சித்திக்கும்; கவலை வேண்டாம்! 

கண்ணை நேரே புறவயமாய் செலுத்தி புலன் வழி அழியும் நிலை போகம், அகமுகமாய் திரிபுடியில் செலுத்தினால் அது சிவயோகம். 

இட, பிங்கலை மூலாதாரம் தொடங்கி திரிபுடியில் இணைய மீனாக ஓடும் பிராண ஓட்டத்தை நடத்துவதால் நான் மீனாக்ஷி.

இந்த ஓட்டம் சிவத்தை அடையும் வரை சிவகாமத்தை உண்டுபண்ணுவதால் நானே காமாக்ஷி - சிவகாமி!

இந்த யோகத்தை நீ செய்ய விசாலமான சூக்கும அறிவைப் பெறச் செய்வதால் நான் விசாலாக்ஷி! 

இதுவே அகவிழிப்பு பெற்றவனுக்கு நான் காட்டும் யோக வழி!

குரு காட்டிய வழியில் காசியில் எட்டுத்திக்கும் பைரவர் இருக்க அகங்காரம் அழிந்து அவரருளால் விழிப்புணர்வு பெற்றால் நான் உனக்கு விசாலமான அகக்கண்ணைத் தருவேன்; அந்தக்கண் கொண்டு பார்த்தால் ஸ்தூல அழுக்கிற்கு அப்பால் இருக்கும் சூக்குமமாகவும், அதிசூக்குமமாகவும், காரணமாகவும், மகா காரணமாகவும் இருக்கும் சிவத்தின் ஒளி உள்ளிருப்பதைக் காண்பாய் என்றாள் அன்னை!

இது உன்னுடலிற்குள் நடக்கிறது; இதை அறியும் பக்குவம் இல்லா மானிடர் அவரவர் பரிணாமத்திற்கு தக்க விளங்க காசித் தெருவில் நடந்து குழம்பி என் பீடம் வந்தால் சிரத்தையுள்ள சாதகனில் கோடியில் ஒருவனுக்கு விசாலமான அகக்கண்ணைத் தந்து சிவஒளி காணும் வழியை அருளுகிறேன் என்றாள் அன்னை விசாலாட்சி. 

நானும் இதையடைய ஆசி வேண்டுகிறேன் என்று பணிந்தேன். நானே அகஸ்தியமயியாக நின்று உணர்த்துவிப்பேன் என்று ஒளிர்ந்தாள் விசாலாட்சி.

ஸ்ரீ ஸக்தி சுமனன்

பௌர்ணமி, பிரம்ம முகூர்த்தம் 

காசி விசாலாட்சி சக்தி பீடம்

09-அக்டோபர்-2022


Saturday, October 08, 2022

தலைப்பு இல்லை

    மணிகர்ணிகை ஸக்தியவள் பீடம் 

    அணிசெய்யும் மரணத்தின் விழிப்புணர்வு 

    கரணத்தில் ஞான அனுபவமாகு மிடம்

    நிரந்தரம் இல்லா வாழ்வில் ஆங்காரம் 

    அழிந்து உணர்வு தெளிந்து அருள்

    பொழிந்து அமரத்துவம் பெற வழி கூறும்

    காசியின் ஞான பீடம்.

ஸ்ரீ ஸக்தி சுமனன்

07- அக்டோபர் -2022

மணிகர்ணிகை, வாரணாசி


Thursday, October 06, 2022

பைரவ ஸ்துதி

அசையும் அசையாப் பொருளில் 

இசைவாய் நிறையும் 

விசேஷ உணர்வின் இருப்பே!

எங்கும் நிறையும் 

ஏகமாய் ஆதியும் அந்தமும் இல்லா மூலப்பொருளே!

மஹா கால பைரவரே

திக்கற்றவர்களின் துணையே 

என் சித்தத்திலும் ஹ்ருதயத்திலும் இருத்தி 

உம்மை நான் தியானிக்கிறேன்

ஸ்ரீ ஸக்தி சுமனன் 

காலபைரவ ஸன்னதி

வாரணாசி

06- OCT - 2022


Wednesday, October 05, 2022

தலைப்பு இல்லை

சில நாட்களுக்கு காசி வாசி!

பைரவப் ப்ராதுர்பாவம் வாசிப்புடன் காசியில்! 

ஓம் காலகாலாய காலாதீதாதாய காசிகாபுராதிநாத காலபைரவாய நமஹ


தலைப்பு இல்லை

Day of Victory over senses & mind 

விஜயதசமி 

காண்போர் அனைவருக்கும் அன்னையின் அருள் பெருக, வளம் பெருக பிரார்த்தனைகள்! பூரண யோகம் சித்திக்க ஒளி பெருகட்டும்.


Tuesday, October 04, 2022

தலைப்பு இல்லை

French institute of Pondicherry- சைவ ஆகமங்கள் பாதுகாக்கப்படும் மிகப்பெரிய இடம். அரிய பல சூழலியல் ஆய்வுகளும் நடைபெறுகிறது.

சிறிது நேர பார்வையிடல், வாசிப்பு


தலைப்பு இல்லை

இன்று சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடும் சிதம்பரத்தில் நடராஜப்பெருமான் சன்னதியில் எம்பெருமானுக்கு அர்ப்பணித்து ஆடிய ஒரு அழகிய நடனத்தைக் கண்டோம். 

பரதசாஸ்த்திரத்தின் ஆறாவது அத்தியாயம் ரசாத்யாயம்; இது இரசானுபவம் பற்றிய விளக்கத்தைத் தருகிறது. இரசானுபவம் என்பது நடனத்தைக் காணும்போது மனதிற்கு ஏற்படும் இன்பம். இந்த அனுபவம் இல்லாமல் எந்தக்கலையையும் இரசித்து அனுபவிக்க முடியாது. 

ஸ்ரீ அபிநவகுப்தர் இரசசித்தாந்தம் பற்றி விரிவாக உரையாடுகிறார். பரத சாஸ்த்திரத்தின் ஆறாவது அத்தியாய உரையில் நாட்டியத்தின் பதினொரு அங்கங்களைக் குறிப்பிட்டு அதில் முதன்மையானது இரசம். 

பரதமுனி இரசம் என்பது ஒரு நாட்டிய மங்கை வெளிப்படுத்தக்கூடிய மொத்தக் கலை உணர்ச்சி என்கிறார். இரசம் இல்லாமல் எந்தப் புலனும் இன்பத்தை அனுபவிக்க முடியாது. 

நல்ல நாட்டியத்தைக் கண்டு மகிழ்ந்த மனம் சிவபெருமானின் ஆனந்த கூத்தினை காணும் அனுபவத்தை திருமூலர் இப்படிச் சொல்லுகிறார்.

சிற்பரம் சோதி சிவ ஆனந்தக் கூத்தனைச்

சொல் பதம் ஆம் அந்தச் சுந்தரக் கூத்தனைப்

பொன் பதிக் கூத்தனைப் பொன் தில்லைக் கூத்தனை

அற்புதக் கூத்தனை யார் அறிவாரே


Monday, October 03, 2022

தலைப்பு இல்லை

சிதம்பரம் 

செஞ்சடைக் கற்றை முற்றத் 

திளநிலா எறிக்குஞ் சென்னி

நஞ்சடைக் கண்ட னாரைக் 

காணலா நறவ நாறும்

மஞ்சடை சோலைத் தில்லை 

மல்குசிற் றம்ப லத்தே

துஞ்சடை இருள் கிழியத் 

துளங்கெரி யாடு மாறே.


Friday, September 30, 2022

லக்ஷ்மித்துவம்

நாம் காமம் எனும் சக்தியால் இயக்கப்படுகிறோம். இந்த சக்தியின் இயல்பு சுயநலம். ஒன்றின் மீது தீராத இச்சை கொள்பவன் அதனைத் தனதாக்க முயல்வான். இப்படிச் செய்யும்போது அது நிலைத்திருக்க முடியாமல் போய்விடும். 

காமத்துடன் உறவைத் தொடங்குபவர்கள் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்தி உறவை மதிப்பில்லாமல் ஆக்கி விடுகிறார்கள். இது காதலாக மாறினால் இல்லறம் செழித்து குடும்பம், பிள்ளைகள் என இன்பம் நிலைக்க ஆரம்பிக்கும். 

தான் கற்று பெரிய அறிஞனாக வர வேண்டும் என்று சுயநலமாக பட்டங்கள், பதவிகளை நாடுபவர்களால் ஒழுங்கான கல்விச் சமூகத்தை உருவாக்க முடியாது; நான் பெற்றது போதும், அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று பணியாற்ற அந்தப் பணி நிலைத்து நிற்க ஆரம்பிக்கும். 

இப்படி காமத்தை காதலாகவும், சுயநலத்தைப் பொது நலமாகவும் மாற்றும் ஆற்றலை லக்ஷ்மி என்கிறோம். இந்த லக்ஷ்மித்துவம் வாய்த்தால் மாத்திரமே எதுவும் நிலைத்து நிற்க ஆரம்பிக்கும்! 

அன்னையைப் பற்றி எனது குருநாதர் கூறிய கருத்து வருமாறு;

காமம் - இச்சை எனும் ஆற்றல் உங்களை இந்த உலகத்திலிருந்து பிரித்து தனிமைப்படுத்தும் சிந்தனையை உருவாக்கும். இந்த காமம் அன்பாக மாற்றப்பட்டால் இந்த உலகம் நிலைத்திருக்கும். இதையே ஸ்திதி - காத்தல் என்கிறோம். பிரபஞ்சத்தின் பராமரிப்பு இப்படியே நிகழ்கிறது. இதை நிகழ்த்துவிக்கும் சக்தியை மகாலக்ஷ்மி என்கிறோம். 

ஸ்ரீ அம்ருதாந்தந்த நாத சரஸ்வதி

(Dr. N. Prahaladha Sastri - former nuclear scientist)


Tuesday, September 27, 2022

அகத்திய மகரிஷியின் பஞ்ச காவியங்கள்

எங்கும் இலங்கொளி அகத்திய

எங்கும் அகத்தியம் பரவ

உணர்வில் ஒளியாய் வந்து 

ஸோமா பஞ்ச காவிய நிகண்டு காண்பாய்

இலட்சணமும், வாதமும், ஞானமும், மந்திரமும்

துலக்கமாய் பூரணமாக ஐம்பெருங் 

காவியமாகச் சொன்னோம்

குருவருளும் திருவருளும் நிறைப்பித்து 

யோகமுடன் தமிழும் பயிற்றுவித்தோம் உன்னை

அருளுடனே ஏகாக்கிர சித்தம் கொண்டு 

பொருள் காண்பாய் ஐங்காவியங்களுக்கு

உலகத்தார் விளங்க செந்தமிழ்ச் 

சித்த வித்தை உலகெங்கும் பரவ 

உன் செயல் விதையாகும் 

விதை வளர்ந்து விருட்சமாக பட்சிகள் தேடிவரும்

பராபரை உள்ளிருந்து அகவொளியால் உணர்த்துவிப்பாள்

என்றார் துவிதிதை நவராத்ரியில்!

ஸ்ரீ ஸக்தி சுமனன்

27-Oct-2022


தலைப்பு இல்லை

தேவி,

சரண்புகுந்தவர்களின் துன்பத்தைத் துடைப்பவளே!

ஜெகன் மாதா - உலகின் தாயே!

விச்வேஸ்வரி - உலகின் தலைவியே!

விச்வம் த்வமீச்வரி - உலகைக் காக்கும் தேவி!

சராசரஸ்ய - அசையும் அடையாப் பொருள் அனைத்தையும் ஆள்பவள்

ஆதார பூதா - நிலைத்து நிற்பதற்கு ஆதாரமான பிருதிவி வடிவானவள்

ஆபஸ்வரூபா - அப்பு தத்துவ வடிவாக இருந்து திருப்தியை ஏற்படுத்துபவளே!

உன்னை நான் வணங்குகிறேன்!

தேவி மஹாத்மியம் - அத்தியாயம் 11 - தேவி ஸ்துதி


Sunday, September 25, 2022

தலைப்பு இல்லை

நவராத்திரி ஆரம்பம்!

ஸக்தியை உபாசிப்போம்! 

தேவி, நீ பகவதி! 

முக்திக்கு வித்தானதும் நினைத்ததற்கும் அரிதான மகாவிரதம் நீ!

பரவித்தை எதுவோ அதுவும் நீ!

இந்திரியங்களை அடக்கியவர்களாலும்,

தத்துவத்தின் ஸாரம் புரிந்தவர்களாலும்,

மன மாசற்றவர்களாலும், 

பரவைராக்கியம் உடையவர்களாலும் 

உணரப்படுபவள் நீ!

சாத்திரங்கள் அனைத்தின் ஸாரத்தை உணரும் புத்தி வடிவினள் நீ!

உன் கடைக்கண் பார்வை பெற்றவன் ஜன சமூகத்தில் சன்மானம் பெறுகிறான்! எல்லாச் செல்வங்களும் அவனிற்கு வந்து சேர்கிறது. 

உனதருளால் நல்வாழ்க்கை எய்தியவன் மிகுந்த ஆதரவுடன் தினசரி தர்ம காரியம் இடைவிடாது செய்கிறான்!

ஸ்ரீ தேவிமஹாத்மியம்


Saturday, September 24, 2022

தலைப்பு இல்லை

இன்றைய காலைப்பொழுது பாக்கியம் தேசியக்கல்லூரி பிள்ளைகளுக்கு ஆங்கில அறிவு, தகவல் தொழில்நுட்ப அறிவு, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புகள் பற்றிய அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினோம். 

மாத்தளையின் கல்வி முன்னேற்றத்தில் மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale உடன் தோளுக்குத் தோள் நின்று செயற்படும் நண்பர் திரு. Jayaprakash Sithambaram அவர்கள் சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தார். 

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் பல்வேறு பட்டப்படிப்புகள், சிறு கற்கை நெறிகள், பட்ட மேற்படிப்புகளை தற்போது மாத்தளை கல்வி நிலையத்திலேயே வழங்குகிறது. அதன் இயக்குனர் எனது ஆய்வுப் பேராசிரியரின் இன்னுமொரு மாணவர் என்பது மகிழ்ச்சியான செய்தி. மாத்தளையில் வசிக்கும் மாணவர்கள் அதிக செலவு செய்து தனியார் பல்கலைக்கழகத்திற்குச் சென்று பெற்றோருக்கு செலவு வைக்காமல் இலகுவாக அரச பல்கலைக்கழகத்தில் பயில அரிய வாய்ப்பு! 

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale ஒவ்வொரு வருடமும் குறைந்தது 20 பேருக்காவது இதில் கற்பதற்குரிய செலவை புலமைப்பரிசில் மூலம் வழங்குவதற்கு நிதி சேகரிப்பை நடாத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு எமது சமூகத்திடமிருந்து பாரிய ஒத்துழைப்புக் கிடைக்கும் என நம்புகிறோம். 

பாக்கியம் தேசியக் கல்லூரியின் அதிபர் திருமதி சந்திரசேகரம்பிள்ளை அவர்கள் இந்த நிகழ்விற்கு முழுமையான ஒத்துழைப்பும் தந்திருந்தார்! 

ஒன்றியத்தின் இயக்குனர்களில் ஒருவராகிய Sathasivam Luxsmi Kanth நிகழ்வை ஒருங்கிணைத்தார். மேலும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள். 

சாதாரணதரப் பரீட்சையின் பின்னர் கிடைக்கும் விடுமுறையினை வீணாக்காமல் ஆங்கில அறிவையும், தகவல் தொழில்நுட்ப அறிவையும் வளர்க்க இந்தக் கற்கைகள் உதவி செய்யும். 

மாத்தளையில் இருக்கும் அனைத்து தமிழ் பாடசாலைகளிலும் இந்த நிகழ்வினை நடாத்த முடியும். அதற்கு அதிபர்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும்! இந்த நிகழ்வை நடாத்த விரும்பும் அதிபர்கள் எமது ஆலோசகர் திரு Jayaprakash Sithambaram அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் பாடசாலையில் இந்தக் கற்கைகளைக் கற்க தகுதியுள்ள, ஆனால் வசதியற்ற மாணவர்கள் இருந்தால் அவர்களுக்கு கற்கைக்குரிய நிதி உதவிகளை மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale செய்யும்.


Friday, September 23, 2022

தலைப்பு இல்லை

புத்தகக்கிடங்கிலிருந்து…. 

மகாராணியார் இறப்பு இங்கிலாந்து வரலாற்றை தூசு தட்டிப் பார்க்க ஆர்வம் தந்திருக்கிறது.

1000 ஆண்டுகள் அரச வம்சம் அதிகாரத்தை தக்க வைக்கும் இரகசியம் என்ன?


Monday, September 19, 2022

தலைப்பு இல்லை

ஒரே யோகத்தைப் பற்றி எழுதாமல் சற்று போகத்தைப் பற்றியும் எழுதுவோமே! வாழ்வின் நோக்கம் இன்பத்தினைப் பெறுதல்; இன்பத்தினைப் புலன்களால் பெற்றால் போகம்; புலனடங்கி மனம் உணர்வில் அடங்கிப் பெற்றால் யோகம். 

எப்போதும் மனம் புலன்களூடாக போகத்தின் வழி நிற்பதால் மனதை உணர்வில் உடனடியாக அடக்குதல் கஷ்டம். ஆகவே போகத்தை புலன்கள்வழி நாடும் மனம் எப்படிக் குழப்பமுறுகிறது என்று ஒருவன் அறிந்தால் மாத்திரமே அவன் அந்தப்பிரச்சனையிலிருந்து வெளிவரலாம். 

ஒரு பெண்ணை முதன் முதலில் பார்த்து மயக்கமடைந்து, புத்தி குழம்பும் ஒரு ஆணின் மனநிலை எத்தகைய படி நிலைக்கூடாகச் செல்லும் என்பதை திருவள்ளுவர் தகையணங்குறுத்தல் என்ற அதிகாரத்தில் தந்திருக்கிறார். 

இந்தப்பகுதி களவியல் என்று கூறப்படுவதன் காரணம் ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே மட்டும் கொள்ளும் ஒழுக்கம் என்பதால். ஆகவே இதில் கூறப்படும் உணர்வுகள் எல்லாம் உறவு கொள்ளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மாத்திரம் இருக்க வேண்டியவை; அப்படியில்லாமல் வெளிப்படுத்தப்பட்டால் மற்றவர்களால் ஏளனப்படுத்தப்படும். 

களவியலை ஒழுங்காகக் கற்றுக்கொள்வதால் ஒருவன் தனது காதலில் வரும் மனச்சிக்கல்களை இயல்பாகப் புரிந்துகொண்டு தீர்த்துக்கொள்ளலாம். 

முதல் குறள்; 

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

ஒரு ஆண் தனக்குரிய பெண் என்று ஒருத்தியைக் காணும்போது அவள் அணங்கு - தேவலோகத்தில் இருக்கும் பேரழகியான அப்ஸரஸ் - என்றோ? அழகிய வண்ண மயிலோ என்று சந்தேகப்பட்டு தடுமாறி பிறகு இல்லை இல்லை இவள் கனமான குண்டலம் அணிந்த மானிடப்பெண் என்று தடுமாறி ஒருகணம் தனது நெஞ்சு குழம்பி நிற்பான்! 

இது மனக்கலக்கத்தின் முதற்படி! 

தனது மனதிற்குப் பிடித்த பெண்ணைக் கண்டு இந்தக் கலக்கம் ஏற்படாத ஆண் எவரும் உண்டோ?


Saturday, September 17, 2022

தலைப்பு இல்லை

அம்மாவும் நானும் ஒரு செல்பி  

எனது குருநாதர் என்னைக் கூப்பிட்டுச் சொன்னார்; தந்தையின் ஆசி பெற்றாயிற்று, அம்மா மனக்கலக்கம் இன்றி ஆசீர்வதித்தால் மாத்திரம் தான் உனக்கு யோக சாதனையும் முன்னேற்றமும் என்றார்! சாமி நீங்களே அதைப் பெற்றுத்தாருங்கள் என்றேன்! அம்மாவை அழைத்து வரச் சொன்னார்; என்னை மாணவனாகவும், சாதனை செய்யவும் குருமண்டலம் தேர்ந்தெடுத்திருக்கிறது; அவனது யோக சாதனையில் எந்தத் தடங்கலும், மனக்குழப்பமும் உங்களுக்கு ஏற்பட வேண்டாம்; நீங்கள் விரும்பியபடி உயர் கல்வி கற்பான், தொழில் புரிவான், திருமணம் செய்வான், உங்களுக்கும் குடும்பத்திற்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வான்; அதற்கு நான் உறுதி கூறுகிறேன் என்றார். அம்மா மனமகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்; அவரது ஒட்டுமொத்த குடும்பமும் அவநம்பிக்கை ஏற்படுத்தியது! சாமியாராகி, பிச்சை எடுக்க வேண்டி வரும் என்று பயமுறுத்தினார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவன் சரியான வழியில் செல்வான் என்று அம்மா நம்பினார். 

குருநாதர் எனது தாய்க்குக் கொடுத்த வாக்கு அனைத்தையும் காப்பாற்றும் வல்லமை எனக்கு வந்தது! அத்துடன் யோக சாதனையும் வளர்ந்தது!

எல்லாம் அப்படியே நடந்தது, நடக்கிறது! 

தாய்+தந்தை+ குரு = தெய்வம்


Friday, September 16, 2022

தலைப்பு இல்லை

யோகத்தில் நினைத்ததை அடையும் சித்தி ஒன்று உள்ளது! எனக்கு இந்த ஆற்றல் புத்தகங்களில் மாத்திரம் உள்ளது என நினைக்கிறேன்! ஏதாவது ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால், அடுத்த சில நாட்களில் அது எங்கிருக்கிறது, அங்கிருந்து எப்படி என்னிடம் வந்து சேரவேண்டும் என்பது தெரிந்து விடும்! 

கடந்த எட்டாம் திகதி தம்பி கார்த்திக் தியாகராஜன் “யானைகளும் அரசர்களும்” நூல் பற்றி வாட்ஸப்பில் அறியத்தந்தார். இன்று கைகளில் கிடைத்தது. 

மானிடவியல் ஆய்வாளரான தாமஸ் ஆர். டிரவட்மன் பாரதத்தின் போர் யானைகள் பற்றி எழுதிய ஒரு அரிய படைப்பு! 

நான் எனது இளமானிப்பட்டத்தில் பேராசிரியர் சந்தியாப்பிள்ளையிடமும் கலாநிதி விஜயமோகனிடமும் யானைகள் பற்றி கற்றுக்கொண்டவன்; களவிஜயங்களிலும் ஆய்வுகளிலும் பங்குபற்றியவன். பேராசிரியர் சந்தியாப்பிள்ளை கஜா என்று ஒரு journal எடிட்டராக இருந்தார். அவருடன் கஜசாஸ்த்திரம் பற்றிய் ஆய்வுகளைச் செய்யலாம் என்றெல்லாம் உரையாடியிருக்கிறேன். 

இந்த நூல் யானைகளின் சமூக பரிமாணத்தைக் கூறுகிறது. யானைகளின் சமூகத்தேவை அற்றுபோனதால் பல நூற்றாண்டுகளாக இந்திய உபகண்டத்தின் மதிப்புமிக்க பேராற்றல் கொண்ட சமூக விலங்கான யானை இன்று தொல்லை தரும் விலங்காக மாறிவிட்டது என்பதை இந்த நூல் அருமையாக விளக்குகிறது. 

யானை சமூக இடைத்தொடர்பு பிரச்சனைகள் பற்றி சிந்திக்கும் சமூக சிந்தனையாளர்களுக்கு இந்த நூல் மிக அரிய தகவல்களைத் தருக்கிறது. 

குறிப்பாக கலாநிதி Kumaravelu Ganesan ஐயாவுடன் சேர்ந்து நாம் கட்டுமுறிப்பு கிராமத்தின் யானைத்தொல்லைகள் பற்றி உரையாடியிருந்தோம். கணேசன் ஐயா மேற்கத்தேய குடித்தொகை கட்டுப்பாட்டு முறைகளை இலங்கையில் ஏன் நடைமுறைப்படுத்த முடியாது என்ற கேள்வியை உறுதியாகக் கேட்பவர்; அதற்கு இந்த நூல் ஆசிரியர் மானிடவியல் ரீதியாக யானை எப்படி இந்திய உபகண்டத்தில் மனிதனுடன் உறவு கொண்டு வாழ்ந்து இராஜ சின்னமாக மனிதர்களின் மனதில் குடிகொண்டிருக்கிறது என்று இந்த மானிடவியலாளர் விளக்கியிருக்கிறார்.


பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...