குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, January 29, 2012

சித்த வித்யா பாடங்கள் 10 : மனித காந்த சக்திகளை வளர்ச்சியுறச் செய்யும் முறைகளும் அவற்றின் பயன்பாடுகளும்

மனிதன் காந்த சக்தி படைத்தவன் என்பது சித்த வித்யா கோட்பாடுகளில் ஒன்று. அதாவது கந்தம் என்ற சொல்லின் பொருள் இயற்பியல் அர்த்தத்தினை விட சித்த வித்யா அடிப்படையில் பார்த்தால் ஒருவித கதிர்ப்பும் ஈர்ப்பும் உடையவன் என்பதனை விளக்கவே இந்த சொற்பிரயோகம் பிரயோகிக்கப்படுகிறது. 

எமது வாழ்க்கையில் சில சம்பவங்களைப் பார்ப்போம்;
  1. முன்பின் தெரியாத ஒரு சிலரைப் பார்க்கும் பொது சிலர் மீது விருப்பும் வெறுப்பும் வர என்ன காரணம்? 
  2. ஒரு சிலரைப்பார்த்தாலே மனம் கவலைகளை மறந்து மகிழ்வடைய என்ன காரணம்?
  3. ஒரு சிலர் முக அமைப்பில் அழகு அற்றவர்களாக இருந்த போதும அவர்களை பிடிப்பது ஏன்?
  4. சில சாமியார்களிடம் பெற்ற விபூதி தீராத நோய்களை தீர்ப்பது எப்படி?
  5. சிலரது கண்பார்வை பட்டால் காரியம் சரி வராது என்று வழக்கில் கூறுவதன் காரணம் என்ன?
இப்படி பல உதாரணங்களை கூறிக்கொண்டு போகலாம். 

இவற்றின் காரணம் எல்லாம் ஒவ்வொரு மனிதனுடைய காந்த சக்தி கதிர்ப்பில் ஏற்படும் ஒற்றுமை வேற்றுமைகளே. 

எப்படி இந்த காந்த சக்தி உருவாகிறது?
எமது மேல் மனதில் உருவாகும் எண்ண அலைகளும் ஆழ்மன பதிவுகளும், பிராண சக்தியின் அளவுமே ஒருவரது தனிப்பட்ட காந்த சக்தியின் அளவினை தீர்மானிக்கும் காரணிகளாகும். 

மனம் ஒரு எண்ணத்தினை நினைக்கும் பொது எமது உடலை சுற்றி ஒரு காந்தப்புலம் உருவாகின்றது. அது எமது பிராண சக்தியின் அளவிற்கு  ஏற்றவாறு பரவுகின்றது. 

எப்படி உங்களுடைய காந்த சக்தியின் தன்மையினை அளவினை பரிசோதிப்பது?

இரண்டு ஒரே அளவாக பழுத்த எலுமிச்சம் கனிகளை வாங்கி வாருங்கள், ஒரு கனியினை மனதில் பல நாட்களுக்கு கெடாமல் இருக்க வேண்டும் என தொடர்ச்சியாக எண்ணிய படி கைகளுக்குள் (நசுங்கி விடாமல்) 10 நிமிடங்கள்  வைத்திருந்து விட்டு அதிக வெப்பம் இல்லாத இடத்தில் தனித்தனியாக  வைத்து விடுங்கள். பின்னர் ஐந்து நாட்களுக்கு பின் அவை இரண்டையும் எடுத்துப்பார்க்கும் போது எது முதலில் பழுதடைந்துள்ளது என்பதனை வைத்து  உங்கள் காந்த சக்தியின் தன்மையினை சோதித்து கொள்ளலாம். 

அல்லது கீழ்வரும் குறிகளைக்கொண்டும் உங்கள் காந்தத்தின் தன்மையினை அறிந்து கொள்ளலாம். 
  • மற்றவர்களுடன் பழகும் போது அவர்கள் உங்களை விரும்பும் அளவு மதிக்கும் தன்மை
  • கைராசி அளவு
எப்படி எமது காந்த சக்தியினை தூய்மைப்படுத்துவது?

ஆழமான மூச்சும் நல்ல எண்ணங்களும் தான். 

நாம் முன்னர் குறிப்பிட்ட மனச்சுத்தி  பயிற்சியினை  செய்வதன் மூலம் எமது காந்தத்தினை சுத்தி செய்து கொள்ளலாம். 

அடுத்த மிகதுரிதமான வழி காயத்ரி மந்திர ஜெபம் அல்லது இஷ்ட தெய்வத்தின மந்திர ஜெபம் 

எப்படி காந்த சக்தியினை பலப்படுத்துவது ?

மன ஏகாக்கிரம் (தாரணை ) யும் பிராண சக்தி வளர்ச்சியும் 

மனித காந்தத்தினை சுத்தி செய்து பலமடையவும் செய்யும் (two in one method)  மந்திர ஜெபம் ஒன்றே. 

மனித காந்த சக்தியின் பிரயோகங்கள்  எவை?
  • வசியம் முதலான மந்திர பிரயோகங்கள் 
  • ஹிப்னாடிசம் மெஸ்மரிசம் 
  • நோக்கு வர்மம் 
  • தீட்சை 
  • நோய் தீர்த்தல் 
  • கவர்ச்சி பெறல் 
போன்ற அனைத்தும் மனித காந்த செயற்பாடுகளின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன.

இந்த விளக்கங்கள் அடிப்படையினை விளங்குவதற்கு போதுமானது என எண்ணி இத்துடன் முடிக்கிறேன். மேலதிக விளக்கங்கள் தேவையானவர்கள் ஈ மேயிலிற்கோ, பின்னூட்டமாகவோ கேட்கலாம். 


Friday, January 27, 2012

சித்த வித்யா கேள்வி பதில்கள்


அன்பர்களே இந்த பதிவு வாசகர் ஒருவரின் கேள்விகளுக்கான பதில்களை கொண்டிருக்கிறது, இவை அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனக்கருதி இங்கு பதிவிடப்படுகிறது. 

அன்புடைய சுமனன் அவர்களுக்கு ,

வணக்கம. நன் ஒரு Software Engineer. உங்களுடய ப்ளாக் படித்தேன், மிகவும் அருமை. நீங்கள் சொல்லியிருந்த எளிய யோகா பயிற்சி செய்து பார்த்தேன்(சுவாசத்தை கவனிக்கும் பயிற்சி). இப்பயிற்சியினை நான் செய்தபோது நான் பெற்ற அனுபவத்திலிருந்து சில கேள்விகள் கீழே கேட்டு உள்ளேன் தயவு செய்து பதில் கூறவும்.


நீங்கள் கேட்கும் கேள்விகள் இந்த பதிவுகள் தொடர்பானது என்ற அனுமானத்திலேயே பதிலளிக்கப்படுகிறது. 

1 . என் சுவாசம் ஆழமாக இருக்கிறது, ஆனால் பயிற்சி நேரம் முழுவதும் எனது சுவாசம் ஒரே சீராக இல்லை. என் இப்படி ஆகிறது ? நான் தவறாக பயிற்சி செய்கிறேன ?


தங்களுக்கு ஆஸ்மா போன்ற சுவாச நோய்கள் இல்லாத பட்சத்தில் இந்த அறிகுறி உங்கள் எண்ண‌ சலனத்தினை குறிப்பதாகும். அதாவது உங்கள் சுவாசப்பை பூரண ஆரோக்கியத்தில் இருப்பின் சுவாச ஓட்டத்தின் மாறுதல் மனதில் எழும் எண்ண‌ அலைகளினால் மாற்றப்படுகிறது என்பதனை உணருவதற்கு இது ஒரு சிறந்த உதாரணம், ஆகவே உங்களுக்கு எதுவிதமான சுவாச நோயும் இல்லாத பட்சத்தில் இது உங்களுடைய மனம் சலனம் அடைவதால உருவாகும் நிலையாகும், ஆதலால் தொடர்ந்து பயிற்சி செய்வதன் முலம் ஆழாமான சுவாசம் கைவரும். 


எனினும் நீங்கள் கோபம், மகிழ்ச்சி போன்ற எந்த விதமான மன எழுச்சி ஏற்பட்டாலும் உங்களுடைய சுவாசத்தின் அளவு மாறுபடும். இது பற்றி விரிவாக வேறொரு பாடத்தில் விளக்குவோம். எமது பதிவுகளில் தரப்பட்ட இது தொடர்பான மற்றைய பதிவுகளையும் இங்கே பார்க்கவும். 


2 . பயிற்ச்சியின் போது சிலவேளைகளில்(மிக மிக சிலவேளை) மூச்சு வெளியேறிய பின்பு சில விநாடி சுவாசம் கொள்ளாமல் அப்படியே சுவாசிக்காமல் இருக்கிறேன். இது இயல்புதான அல்லது பிழையா ? (எனது சுய முயற்சியால் நான் சுவாசத்தை நிறுத்தவில்லை)


இது மிகவும் சரியான அனுபவம், உண்மையாக பயிற்சிக்கும் போது கும்பகம் எனும் முச்சடங்கும் நிலை தானாக ஏற்படும், ஆதலால் இது பற்றி நீங்கள் பயப்படத்தேவையில்லை. இது சரியான நிலையே ஆனால் உங்கள் முயற்சியினால் மூச்சை அடக்கவில்லை என்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள். இப்படி நடக்குமாக இருந்தால் பயிற்சியின் பின்னர் உங்கள் உடல் மனம் என்பன மிக உற்சாகமாக இருக்கும், நீண்ட நேரம் களைப்பின்றி வேலை செய்யக்கூடிய நிலை ஏற்படும், இவற்றின் மூலம் சரியாக செய்கிறீர்கள் என்பதனை உறுதி செய்து கொள்ளலாம். 


3 . எந்த வேளையில் / நிலையில் இந்த பயிற்சியினை செய்யகூடாது ? எவ்வளவு நேரம் இப்பயிற்சியினை மேற்கொள்ளலாம் ?


காலை சூரிய உதயத்திற்கு அரைமணி நேரம் முன்னராகவும் பின்னராகவும், அதேபோல் கூறிய அஸ்தமனத்தின் முன்னரும் பின்னரும் அரைமணி நேரத்திற்குள்ளே செய்வது மிக மிக விசேடமானது, 


இப்படி நேரம் கிடைக்காத மட்டில் உணவு அருந்தி நான்கு மணி நேரத்தின் பின் செய்யலாம். இதெல்லாம் விட முக்கியமானது முதலில் உங்கள் மனம் விரும்பும் நேரத்தில் செய்யப்பழக்கி பின்னர் இவ்வாறான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்திக்கொள்வது, இயல்பாக மூச்சினை அவதானிப்பதற்கு பொதுவாக எந்த விதிகளும் இல்லை, 


உங்களால் முடிந்த வரை மனம் உடல் விரும்பும் வரை செய்யுங்கள். 


4 . இபயிர்ச்சியினை மேற்கொள்ளும்போது எனது வலது காலில் சூகை பிடிக்கிறது(சிறுது நேரம் உள்டல் பக்கத்தை அசைக்காமல் இருந்ததால் ரத்த ஓட்டம் நின்றுவிடுமே ) இது எதுவும் உடலுக்கு உபாதை உண்டாக்காது அல்லவே ?


பயிற்சியினை உட்கார்ந்து செய்கிறீர்கள் அல்லவா, பயிற்சி முடிந்து எழுந்தவுடன் சிறிது உடலினை உங்களால் இயன்றவரை அசைத்து செய்யமுடிந்த அசைவுகளை செய்யவும். உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் இப்படியான பிரச்சனை வராது, உங்கள் வயது, உடலாரோக்கியத்தினை கருத்தில் கொள்ளுங்கள். தாங்கள் ஆரோக்கியமானவர் என்ற அனுமானத்தில் தான் இந்த பதில்கள் என்பதனை கருத்தில் கொள்ளுங்கள். தாங்கள் இருதய நோயாளியாகவோ வேறு நோய்கள் உள்ளவராக இருந்தால் உங்களுடைய மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கவும். 

----------------------------------------------------------------------------------------------------------------

காயத்திரி மந்திரத்தை பற்றி கூறியிருந்தீர்கள் ..காயத்திரி மந்திரத்தை எப்போது , எதனை முறை கூறவேண்டும்?
இதுவும் மேலே கூறப்பட்ட படி காலை சூரிய உதயத்திற்கு அரைமணி நேரம் முன்னராகவும் பின்னராகவும், அதேபோல் கூறிய அஸ்தமனத்தின் முன்னரும் பின்னரும் அரைமணி நேரத்திற்குள்ளே செய்வது மிக மிக விசேடமானது, 

ஆரம்பத்தில் 9 இலிருந்து 27 , 54 , 108 , வரை கூறலாம், அதன் அர்த்தத்தினை மனதில் நினைத்தபடி வாயால் உச்சரித்து கூறலாம், பயிற்சி அடைந்த பின்னர் மனதில் அர்த்தத்தினை நினைத்தவண்ணம் மனிதிலேயே கூறும் நிலையினை அடையலாம்.

----------------------------------------------------------------------------------------------------------------
ஆக்ஞா சக்கரத்தை விழுப்பிக்க என்ன செய்யவேண்டும் ?


மூலாதாரம் விழிப்படையாமல் ஆக்ஞ்சா விழிப்படைந்து என்ன பயன், பைத்தியம்தான் பிடிக்கும் நீங்கள் குறிப்பாக எதனையும் வலிந்து விழிப்படைய வைக்க முயல வேண்டாம். பொதுவாக நீங்கள் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு காரியம் செய்வதற்கும் குறித்த சக்கரங்கள் சிறிய அளவில் விழிப்படைந்தால் மட்டுமே எதனையும் செய்ய முடியும், உங்களது பரிணாம உயர்வுக்கும் பிராண சக்தியினா அளவிலும் ஒவ்வொரு சக்கரங்களின் படிப்படியாக விழிப்படையும். 


மிக எளிய சுருக்கமான பாதுகாப்பான வழி நாம் குறிப்பிட்ட சுவாச பயிற்சியும் காயத்ரி மந்திர ஜெபமுமே! எப்படியாயினும் குரு தீட்சையுடன் உங்கள் சித்த சம்காரங்கள் (ஆழ் மன பதிவுகள் ) சுத்தம் செய்யாமல் இந்த முயற்சியில் இறங்கினால தங்கள் இயல்பு மன உடல் நிலைகள் பாதிப்படையும் என்பதனை கருத்தில் கொள்ளுங்கள். 


அடுத்து இந்தக்கேள்வியினை உங்களிடமே இப்படிக் கேட்டுப்பாருங்கள் " எனக்கு ஆக்ஞ்ச சக்கரம் விழிப்படைந்தால் என்ன பலன் என்று? " ஒரு முறை நான் எனது குரு நாதரை வற்புறுத்தி இதனை கற்றுத்தரும் படி கேட்க அவர் சொல்லித்தார், அப்போது எனது வயது அனுபவம் என்பன மிகக்குறைய, அவற்றை செய்தபின்னர் முன்னால் வந்து நிற்பவர்கள் அனைவரது எண்ணங்களும் தெரியத்தொடங்கியது, இப்படி என்னை சுற்றி நடக்கும் எல்லா விடயங்களும் வித்தியாசமாக விளங்கத்தொடங்கியது, நான் மிகவும் மன குழப்பம் அடைந்து விட்டேன், அதனால் எந்த விதமான பலனும் கிடைக்கவில்லை, இப்படியான நிலையில் எனக்கு திரும்பவும் குரு நாதரிடம் சென்று கேட்க பயமாக இருந்தது, மாலை வேளைகளில் சிறிது தூரம் நடப்பார், அந்த வேளைகளில் அவருடன் நானும் சேர்ந்து நடப்பேன், அவ்வாறு நடக்கும் போது ஒருநாள் அவராகவே "தம்பி பக்குவம் இல்லாமல் ஆஞ்சா சக்கரம் விழ்ப்படைந்தால் இப்படித்தான் இருக்கும்" என சிரித்துக் கொண்டு கூறினார். அதன் பின் எனக்கு அப்படியான தோற்றங்கள், எண்ணங்களை அறியும் தன்மை அற்றுப்போனது. 


ஆகவே நண்பரே உங்களது ஆர்வம் நியாயமானது, என்றாலும் ஆராய்ந்து சரியாக குரு முறையாக செய்ய வேண்டிய விடயம் என்பதனை மனதில் ஆழமாக கொள்ளுங்கள் 

---------------------------------------------------------------------------------------------------------------
நண்பரே நான் ஆன்மிக வழித்தடங்களுக்கு புதியவன். எனக்கு எப்படி, யாரை குருவாக தேர்ந்து எடுப்பது என்று தெரியவில்லை . எனது ஆன்மிக பயணத்தை தொடர நீங்கள் எனக்கு உதவ வேண்டும்?


கவலை வேண்டாம் நண்பரே, ஆன்மிகம் லௌகிகம் என்ற பாகுபாடெல்லாம் வேண்டாம். கிடைத்த வாழ்வை நேர்மையாக குருவை பணிந்து இன்பமாக அனுபவியுங்கள், ஆதிகுரு அகஸ்தியரை அல்லது உங்கள் மனம் விரும்பும் குருவை மனதில் பிரார்த்தித்து வாருங்கள், வழிகாட்டுவார்கள். 


எப்படி அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது என்பதனை எமது பதிவுகளில் கூறியுள்ளோம், படித்து பயிற்சி செய்யுங்கள். 


சத்குரு பாதம் போற்றி, 



Thursday, January 19, 2012

சித்த வித்யா பாடங்கள்: 09 பிரபஞ்ச மனத்தினை ஆழ்மனம் மூலம் ப‌ய‌ன்ப‌டுத்தி ப‌ல‌ன் பெறும் முறை

சென்ற‌பாட‌த்தில் சூஷ்ம‌ உட‌ல் ப‌ற்றி பார்த்தோம். சூஷ்ம‌ உட‌லின் ஒவ்வொரு ப‌குதியும் பிர‌ப‌ஞ்ச‌ அமைப்பாக‌வும் வியாபித்திருக்கின்ற‌து என்ப‌த‌னை எம‌து முன்னோர்க‌ள் அறிந்திருந்த‌ன‌ர்.

அதாவது மனிதனது ஒவ்வொரு அமைப்பும் அவனது புறச்சூழலுடனும், இந்த பிரபஞ்சத்துடனும் தொடர்புபட்டது என்பதே சித்தவித்தையின் அடிப்படையான விதியாகும்.

நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் இந்த பிரபஞ்சவெளியில் சேமித்து வைக்கப்படுகின்றது. அவை அழிவதில்லை, தகுந்த பக்குவத்தினை ஏற்படுத்தும் எவரும் அவற்றை அறிந்து கொள்ளலாம்.

இதேபோல் எமது காரியங்கள் சரிவரவேண்டுமென்றாலும் இந்த பிரபஞ்ச மனதைப்பயன்படுத்தி வெற்றியடையலாம். இதற்கான வழி என்ன?

எம்மிடம் இருக்கும் ஆழ்மனம்தான் அதற்குரிய உபகரணம், எப்படி பயிற்சிப்பது என்ற வழிமுறை கீழேதரப்பட்டுள்ளது.

பயிற்சிமுதலில் உங்களுக்கு ஆகவேண்டிய காரியத்தினை எதிர்காலம், நிகழ்காலம், கடந்த காலம் ஆகிய மூன்றுகாலங்களிலும் ஆக்கிக்கொள்ளுங்கள். உதாணமாக உங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பணம் தேவையெனில், எனக்கு ஒரு இலட்சம் ரூபாய் கிடைக்கும், கிடைத்துக் கொண்டிருக்கிறது, கிடைத்து விட்டது என வாக்கியங்களை அமைத்துக்கொள்ளலாம்.

பின்னர் நீங்கள் தூங்கப்போகும் வேளையில் படுக்கையில் இருந்தபடி இந்த மூன்று வாக்கியங்களையும் மந்திரம் உச்சரிப்பதுபோல் உச்சரித்துக்கொண்டு அந்த வார்த்தைகளினால் வரும் சந்தர்ப்பங்களை மனதில் காட்சியாக காண முற்படுங்கள். அதாவது ஒரு நபர் உங்களுக்கு குறித்த அளவு பணம் தருவதாகவும், அதைகொண்டு வந்து தந்துவிட்டதாகவும், பின்னர் அதனைக்கொண்டு உங்கள் தேவை நிறைவேறிவிட்டதாகவும் மனதில் காட்சியாக காணவும். இவ்வாறு பத்து நிமிட‌ங்க‌ள் செய்த‌பின்பு நித்திர‌க்குச் செல்ல‌வும்.

நிபந்த‌னைக‌ள்:இந்த‌ பிர‌ப‌ஞ்ச‌ம் விதிக‌ளுக்கு உட்ப‌ட்ட‌து, ஆக‌வே அத‌ன் விதிக‌ளை மீறி யாரும் செய‌ல் புரிய‌ முடியாது, ஆத‌லால் இப்ப‌டி ஆகாய‌ ம‌ன‌தினை எம‌து சித்த‌த்தின் மூல‌ம் ப‌ய‌ன்ப‌டுத்தி வெற்றிபெற‌ நீங்க‌ள் இருக்குக் நிலையிலிருந்து அடுத்த‌ நிலைக்குச் செல்வ‌த‌ற்கே ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம். உதார‌ண‌மாக ஒரு க‌ம்ப‌னியில் மேலாலள‌ராக‌ இருந்துகொண்டு உட‌ன‌டியாக‌ நிறைவேற்று இயக்குனராக வ‌ர‌வேண்டும் என‌ இந்த‌ சாத‌னையினை செய்தால் நிறைவேறாது, உங்க‌ளுக்கு அடுத்து மேலே உள்ள‌ ப‌த‌வியிற்கு நீங்க‌ள் ப‌யிற்சித்தால் நிறைவேறாது, ஆதலாம் நாம் வைக்கும் கோரிக்கைக‌ளுக்கு அடிப்ப‌டை த‌குதிக‌ள் இருக்கின்ற‌தா என்று ஆராய்ந்த பின்பே உங்கள் கோரிக்கைகளை முன்வையுங்கள். 
 
அடுத்து தீய கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சித்தால் அதன் பலன் பலமடங்கு வலிமையுடன் மீண்டும் உங்களையே தாக்கும் என்பதனை நினைவில் வைக்கவும்.

ஓம் ஸத்குருபாதம் போற்றி!

Wednesday, January 18, 2012

சித்த வித்யா பாடங்கள்: 08 சூஷ்ம உடலும் அதன் செயல்முறை அடிப்படையும்

மனிதனின் அமைப்பு ஸ்தூலம் சூஷ்மம் என இருவகைப்படும் எனமுன்னரே கண்டோம். இன்றைய பதிவில் சூஷ்ம உடல் எனறால் என்னவென்று பார்ப்போம்.

சூஷ்ம உடல் மனம், புத்தி, சித்தம், அஹங்காரங்களினால் ஆக்கப்பட்டிருக்கிறது. அதன் வடிவம் எனது உடலின் வடிவத்தினை ஒத்து இருக்கும், ஏனெனில் நாம் எமது உடலைவைத்தே எம்மை மனதில் நாமே அறிந்துகொள்கிறோம்.

அதேவேளை சாதனை/பயிற்சியுள்ள மனம் சூஷ்ம உடலை மாற்றக்கூடிய திறமை உள்ளது. அதாவது நாம் கூறவருவது "மனிதன் தனது மனம் புத்தி, சித்த, அஹங்காரங்களில் தன்னை உருவகப்படுத்திக்கொள்வதற்கேற்ப அவனது சூஷ்ம உடல் வடிவத்தினை பெறும், சாதாரணமாக இயற்கையின் பரிணாமத்தில் நாம் பெற்ற வடிவத்தினை ஒத்ததாக காணப்படுகிறது."

இந்த சூஷ்ம உடலின் வடிவத்திற்கேற்றவாறே ஸ்தூல உடல் உருவாக்கப்படுகிறது. அதாவது அடிப்படை சூஷ்ம உடலாகிய எமது எண்ணம், அவற்றின் சேர்க்கையால் உருவாகும்  மனம், சித்தம், புத்தி, அஹங்காரம் எனபனவே.

சூஷ்ம உடலினை வசப்படுத்தும் சாதனையில் முதலில் மனதினை, எண்ணத்தினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும். ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது.

அடுத்து சித்ததினை வசப்படுத்த வேண்டும், சித்தம் என்பது ஆழ்மனதின் ஒரு கூறு அல்லது இணைப்பு, இது பிரபஞ்ச மனதுடன் தொடர்பு கொள்ளக்கூடியது. இதனை வசப்படுத்தும் சாதனையினை பின்னர் விளக்குவோம்.

மனம், சித்தம் வசப்பட்டாலும் அதனை சரியான பாதையில் வழிநடாத்திச் செல்ல புத்தி வலுப்பட்டிருக்கவேண்டும். இதற்கான வழி தியானம்.

இறுதியாக மனிதனை சூஷ்மத்திலும், ஸ்தூலத்திலும் இயக்கும் அகங்காரத்தினை சுத்தி செய்து வசப்படுத்த வேண்டும். இதற்கு ஒரேயொரு வழி பக்தி எனும் மேலான சக்தியினை பணிதல். இதனை சற்று விளக்கமாக பார்ப்போம்.

எந்த ஒரு செயலையும் செய்வதற்கு விருப்பு வேண்டும், விருப்பு என்பது உண்மையில் எமது நான் எனும் அகங்காரம் அதுவாக விரும்புதல் ஆகும். நான் நல்லவன் என்ற அகங்காரத்தில் நாம் செயற்படவேண்டுமாயின் முதலில் எமது மனம் நல்ல எண்ணங்களை எண்ணப்பழக வேண்டும், பின் அவை சித்ததில் பதியவேண்டும், அவற்றை புத்தி இது நல்லது, இது கெட்டது என பகுத்து இறுதியாக எமது அகங்காரம் நான் நல்லவன் என உறுதி அடையும் போது நாம நல்லவராகிறோம்.

இந்த செயன்முறைதான் கடவுளை அடைதலிலிருந்து, நாளாந்த வாழ்க்கை வரைக்கும் அனைத்திற்கும் அடிப்படை, இந்த அடிப்படையில் நீங்கள் கடவுளையும் உணரலாம் (இதற்குதான் தெய்வ உபாசனை வகுக்கப்பட்டிருக்கிறது)வியாபாரம் தொடங்கலாம், உயர்ந்த உத்தியோகத்தினை அடையலாம்.

இறுதியாக சூஷ்ம உடல் எப்படி இயங்குகிறது என்பது பற்றி விளக்கு இன்றை பாடத்தினை முடிவிற்கு கொண்டுவருவோம்.

சூஷ்ம உடலின் கூறுகள் எவை என அறிந்தோம், இவற்றை இணைத்து இயக்கும் ஒரு சக்தி பிராணன், பிராண சக்திதான் சூஷ்ம, ஸ்தூல உடல்களின் இணைப்பு, ஆக பிராணனின் அளவு, அதிர்விற்கேற்ப ஒருவரின் சூஷ்ம உடலின் பலம் இருக்கும். இதனைக் கொண்டு மானசீகமான சாதனைகள் பல செய்யலாம்.

உதாரணமாக பிரார்த்தனை செயற்படுவது இந்த சூஷ்ம உடலின் மூலம்தான், இது எப்படி எனப்பார்ப்போம், "எனக்கு தேவையான அளவு பணம் தேவை" என பிரார்த்திக்கிறோம் எனக்கொள்வோம்.

முதலில் ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்தில் குறித்த அளவு இந்த பிரார்த்தனையினை செய்துவர பணம் வேண்டும் என்ற எண்ணம் உருவாக்கப்படுகிறது, பின்னர் அது படிப்படியாக சித்தத்தில் படிந்து பிரபஞ்சமனதிற்கு செலுத்தப்படுகிறது, அது எப்படி கிடைக்கும் என்ற வழிமுறையினை புத்தி ஆராய்கின்றது, அதேவேளை பிரபஞ்ச மனதில் பதியப்பட்ட எண்ணம் பிரபஞ்சஞானத்தினால் அதற்குரிய சந்தர்ப்பங்களை அவனிற்கு ஏற்படுத்துகிறது, அதன் பின் அவன் அவனது அகங்காரம் "நான்" இந்த வியாபாரத்தினை ஆரம்பித்தால் எனக்கு பணம் வரும்" என உறுதி அடைந்து செயலில் இறங்கி வெற்றிபெறவைக்கிறது.

இதே செயல்முறையினை இறைவனை நம்பும் பக்தர்கள், "பகவானே" என தமக்கு வெளியில் அகங்காரத்தினை உருவாக்கி காரிய வெற்றி பெறுகின்றனர்.

இவற்ற்றில் விளக்கப்பட்ட அடிப்படையில் சூஷ்ம உடலின் அங்கங்களான மனம், சித்தம், புத்தி, அஹங்காரங்களினை செயற்படுவதனால் பெறும் சித்திகள்தான் தொலைவில் உணர்தல், தூரக்கேட்டல், தூரதரிசனம் எனபவையெல்லாம். இவற்றின் அடிப்படையினை வரும் பதிவுகளில் பார்ப்போம். 

Tuesday, January 17, 2012

சித்த வித்யா பாடங்கள்: 07 சித்த, யோக வித்தைகளும் பஞ்சகோச சுத்தியின் அவசியமும்

பாடம் 04, 05 இல் மனிதனது சூஷ்ம அமைப்பு பற்றி பார்த்தோம், இன்றைய பதிவில் சூஷ்ம அமைபுகளான மனம், பிராணன், புத்தி, ஆன்மா ஆகியவை எப்படி சூஷ்ம உடலினை ஆக்குகிறது என்பதனைப் பார்ப்போம்.

சித்தரிலக்கியங்கள் வாசித்தவர்கள் பஞ்சகோசங்கள் உண்டு என்பதனை அறிந்திருப்பர், அவை அன்னமய கோசம், பிராணமயகோசம், மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம் என ஐந்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளது,

கோசம் என்பது சூஷ்ம அமைப்புகளின் சேர்க்கை எனவே விளங்கிக்கொள்ளவேண்டும். அதாவது பஞ்சபூதங்களான நிலம், காற்று, நெருப்பு, நீர்,ஆகாயம் என்பன வெவ்வேறு விகிதத்தில் சேர்ந்து இந்த கோசங்களை ஆக்குகின்றது. இதன்படி ஒவ்வொருவருக்கும் இந்த பஞ்சகோசங்களின் தன்மையும் அளவும் வேறுபடும். உதாரணமாக அன்னமயகோசமாகிய ஸ்தூல உடலினை எடுத்துக்கொண்டால் நல்ல சத்துணவு உண்டு, உடற்பயிற்சி செய்பவருக்கும் சத்துணவு உண்ணாமல் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பவரது ஆரோக்கியம் ஆற்றலில் வேறுபாடு இருப்பதுபோல் பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய கோசங்களுக்கும் தகுந்த உணவும் பயிற்சியும் அவசியம். இவற்றையே பதஞ்சலி முனிவர் அழகாக பஞ்சகோசங்களையும் படிப்படியாக இணைத்து வலிமையுறச் செய்யும் பயிற்சியினை அஷ்டாங்க யோகமாக வகுத்துதந்தார்.

  • இயம, நியமங்கள் = அன்னமய, மனோமய கோச சுத்தியும் வலிமைப்படுத்தும் பயிற்சிகள்.
  • ஆசனம்:அன்னமய, பிராணமய கோச சுத்தி வலிமைப்படுத்தலும், மனோமய கோசத்தினை அவற்றுடன் இணைக்கும் செயல்முறை.
  • பிரணாயாமம்: பிராணமய கோச சுத்தியும், வலிமைப்படுத்தும் பயிற்சி
  • பிரத்தியாகாரம்: மனோமய கோச வலிமையுறவைக்கும் பயிற்சி
  • தாரணை: மனோமய, பிராணமய கோச சக்திகளை ஒரு இடத்தில் குவிக்கும் செயல்முறை. மனோமய கோசத்தினையும் பிராணமய கோசத்தினையும் இணைத்து பயன்படுத்தும் உத்தி.
  • தியானம்: விஞ்ஞானமய, ஆனந்தமயகோசத்தினை சுத்தி செய்து வலிமைப்படுத்தும் பயிற்சி
  • சமாதி: பஞ்சகோசங்களை வசப்படுத்தி அவற்றிலிருந்து உண்மையான "நான்" ஆகிய ஆன்மாவினை அடையும் நிலை.
சித்த வித்தை அடிப்படையில் பார்த்தால் அட்டாங்க யோகத்தில் முதல் ஐந்து படிமுறைகளும் (இயம, நியம, ஆசனம், பிராணாயாம, பிரத்தியாகார) அன்னமய, பிராணமய, மனோமய கோசங்களை சுத்தி செய்து வலிமையுறச் செய்யும் பயிற்சிகள்.

ஆறாவதான தாரணை எனப்படும் "ஏகாக்கிரம்" ஆனது மேற்கூறிய ஐந்து படிமுறைகளாலும் பெறப்படும் சக்தியினை பயன்படுத்தும் உத்தி ஆகும். இப்படி வலிமையும் சுத்தியும் பெற்ற அன்னமய, பிராணமய,மனோமய கோசங்களுடன் அடுத்த இரண்டு வலிமையான கோசங்களான புத்திமய(விஞ்ஞானமய)ஆனந்தமய கோசங்களை வலுப்படுத்தும் பயிற்சிமுறை "தியானம்" ஆகும்.

இப்படி பஞ்சகோசங்கள் சுத்தி பெற்று, வலிமையுற்றபின்பு "நான்" எனப்படும் ஆன்மாவை அறிந்த நிலை சமாதி ஆகும்.

ஆக இந்த பதிவில் கூறவரும் கருத்து என்னவென்றால் சித்தவித்தை பயிலவிரும்புபவரோ, (மன,உடல், ஆன்ம)ஆரோக்கியமாக இருக்க விரும்புபவர்கள் கட்டாயம் இந்த பஞ்சகோச விளக்கத்தினை புரிந்துகொண்டு அவற்றை சுத்தி செய்வதற்கான படிமுறைகளையும், வலிமைப்படுத்துவதற்கான பயிற்சிகளையும் செய்து வருவார்களானால் நிச்சயம் மகிழ்வான உலகவாழ்க்கையினையும், ஆன்ம வாழ்க்கை உயர்வு வேண்டின் அவற்றையும் பெறுவார்கள்.

இதுவரை எமது பதிவுகளில் மனோமய, பிராணமய கோசங்களை சுத்தி செய்யும் இலகுவான பயிற்சிகளை குருவருளால் வெளியிட்டுள்ளோம்.


அடுத்துவரும் பாடங்களில் மற்றைய கோச சுத்திகள் பற்றியும் வெளியிடுவோம்.

ஸத்குரு பாதம் போற்றி!

Monday, January 16, 2012

சித்த வித்யா பாடங்கள் 06: மனதினை சுத்தி செய்யும் பயிற்சி முறை


இன்றைய யோகவகுப்புகள் அனைத்தும் மனதினை கட்டுப்படுத்தும் முறையினை சொல்லித்தருவதாகவும், உயர்ந்த தியானப்பயிற்சிகளை சொல்லித்தருவதாகவும் கூறிவருகின்றன. எப்படி இருப்பினும் பட்டம் பெறவேண்டுமென்றால் முதலாம் வகுப்பிலிருந்து ஒழுங்காக கற்று உயர் வகுப்புகள் தேறிய பின்னரே பல்கலைக்கழகம் செல்லமுடியும் என்பதுபோல் உயர்ந்த யோகப்பயீற்சிகள், தியானம் செய்வதற்கு முன்னர் அடிப்படை பயிற்சிகள் கட்டாயம் செய்யப்படவேண்டியவை என்பதனை அனேகமாக யோகம் பயில்பவர்கள், தியானம் பயில்பவர்கள் பறந்து விடுகின்றனர். ஒரு வீட்டிற்கு குடிபோகவேண்டுமென்றால் முதலில் வீட்டினை சுத்தப்படுத்தி வெள்ளையடித்து அழகு படுத்துவதுபோல் சித்த வித்தைக்கு அடிப்படையான மனதிற்கும் இவ்வாறனதொரு சுத்தி செய்யும், ஒழுங்க்குபடுத்தும் படிமுறை அவசியமாகும். இது இல்லாமல் எந்தவொரு மனப்பயிற்சியினையும் செய்ய ஆரம்பிப்பது தகுந்த ப்லனை தராது, ஏன் தெய்வ வழிபாட்டின் மூலம் பயன் பெறவேண்டும் என நினைப்பவர்கள் கூட இங்கு கூறப்படும் பயிற்சியினை செய்து வந்தால் துரிதமாக பலன் காணலாம். 

மனதினை சுத்தி செய்வது என்பது மனதில் எழும் உணர்ச்சிகளை உத்வேகங்களை கட்டுப்படுத்தி மனதை பயன் தரும் நேர் எண்ணங்களை (Positive thoughts) உருவாக்க செய்யப்படும் பயிற்சியாகும். பொதுவாக நம்மில் பலர் ஒரு விடயத்தினை தெரிய ஆரம்ப படிமுறையான கேள்வி கேட்கும் மேல்மனதை பழக்கப்படுத்திக்கொள்வதால் எப்போது நேர்மறை எண்ணங்களை (Negative thoughts) உருவாக்க பழகி விடுகிறோம், உதாரணமாக எமது மனம் நம்பினால் மூட நம்பிக்கையாக நம்பும், அல்லது சந்தேகப்பட்டால் முழுமையாக சந்தேகிக்கும், ஆனாம் நேர் எண்ணங்கள் என்பது சரியான விதத்தில் ஒரு விடயத்தினை ஆராய்ந்து, அது சரிவருமா இல்லையா என்பதனை துணிந்து, வரும் இடர்களை எதிர்பார்ப்புடன் சமாளித்து, அதன் பின் எந்த பின்வாங்கலும் இன்றி செய்துமுடிப்பது. ஆனால் மனம் வலிமையற்று இருக்கும் போது எப்போது துன்பமாகவும் எதிர்மறையாகவுமே எண்ணும். 

இந்த பயிற்சியினை செய்துவருவதன் மூலம் மனம் நேர் எண்ணங்களை உருவாக்குவதற்கு பழக்கப்படும். இதனால் மனம் சரியான விதத்தில் இயங்கி உங்களுக்கு காரிய வெற்றியினைத் தரும்.

பயிற்சி நிபந்தனைகள்
  • பயிற்சியினை உண்மையில் பலன் காணவேண்டும் என்ற சிரத்தையுடன் செய்யவேண்டும், 
  • தினசரி காலை மாலை குறித்த நேரத்தினை ஒதுக்கிகொண்டு அதே நேரத்தில் தொடர்ந்து செய்து வரவேண்டும்.
  • இடமும் ஒரே இடமாயிருத்தல் நன்று. 
  • பலன் தெரிவதற்கு குறைந்தது மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக பயிற்சிக்கவும், அதன் பின்பும் அனுதினம் உங்கள் சாதனையுடன், வழிபாட்டுடன் செய்துவரலாம். 

பயிற்சி:
காலை கிழக்கு திசை நோக்கியும், மாலை மேற்கு நோக்கியும் பார்த்து அமைதியாக உட்கார்ந்து கொள்ளவும். கால்களை மடித்து உட்காரக்கூடியவர்கள் சுகாசனம், பத்மாசனம், சித்தாசனம் இவற்றில் அமர்ந்து கொள்ளலாம், முடியாதவர்கள் சௌகரியமாக உட்கரக்கூடிய நாற்காலியிம் முதுதண்டு நேராக இருக்க கூடியவாறு அமர்ந்துகொள்ளவும். பிராணாயாமம் தெரிந்தவர்கள் சில முறை செய்துகொள்ளலாம், மற்றையவர்கள் மெதுவாக ஆழமான மூச்சு சிலதடவைகள் உள் இழுத்து வெளிவிட்டு தளர்ச்சியாக அமர்ந்து கொள்ளவும். பின்னர் (காலையிலாயின்) கிழக்கு திசையினை நோக்கி அமர்ந்து கொண்டு கண்களை மூடி கீழ்வரும் வாக்கியங்களை மனதில் உச்சரித்துக்கொண்டு, உங்கள் மூளையிலிருந்து உருவாகும் எண்ண அலைகள் கிழக்கு திசை பூராகவும் பரவுவதாக மனதில் பார்க்கவும், இவ்வாறு ஐந்து நிமிடங்கள் செய்தபின்பு, தெற்கு திசை நோக்கி திரும்பி ஐந்து நிமிடங்கள் மேற்கூறிய பாவனையினை செய்யவும், அதன்பின் மேற்கு, வடக்கு திசைகள் நோக்கியும் செய்யவும். மாலையில் மேற்கு தொடங்கி, வடக்கு, கிழக்கு, தெற்காக செய்து முடிக்கவும். 

பயிற்சியின் போது கூறவேண்டிய வாக்கியம்: 
"கிழக்கு திசையில் (மற்றைய திசைகளுக்கு அதன்படி மாற்றிக்கொள்ளவும்) உள்ள மனிதர்கள், ஜீவராசிகள், உயிரினங்கள், அனைத்தும் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும், இன்பமாகவும் இருக்க வேண்டும், கிழக்கு திசை எப்போதும் நலமாக இருக்கட்டும்" 

இந்த பயிற்சி செய்யும் போது மனம் முழுமையாக விழிப்புணர்வுடன் குறித்த திசையில் ஒன்றி மனதாலோ, அல்லது வாயினாலோ கூறலாம்.

பலன்கள்
தொடர்ச்சியான பயிற்சியால் மூன்றுமாதங்களில் பலன் தெரியும், கீழ்வரும் அறிகுறிகள் மூலம் மனம் பலமடைந்து சுத்தியாகியுள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம்
  • முன்னர் உங்களுக்கு இருந்து தீய உணர்வுகள் தற்போது அடிக்கடி மனதில் தோன்றுவது மறைந்திருக்கும் அல்லது குறைந்திருக்கும். 
  • அவற்றை தூண்டும் சந்தர்ப்பங்கள் சூழ் நிலைகள் ஏற்பட்டபோதும் அவை மனதில் குறித்த உணர்ச்சிகளை தூண்டியிருக்காது. 
  • வெறுப்புள்ள நபர்களை காணும்போது மனதில் அந்த உணர்ச்சி தோன்றாதிருத்தல். 
  • மனதில் அன்பு, பாசம், கருணை, இரக்கம் போன்ற உணர்வுகள் தோன்றுதல். 

இவற்றின் மூலம் உங்களது மனம் சுத்தியடைந்துள்ளதை அறிந்து கொள்ளலாம். இதன் பின் நீங்கள் செய்யும் எந்த சித்த வித்தை, மனப்பயிற்சிகளும் வெற்றியளிக்கும்.

முயற்சித்து பலன் பெறுங்க்கள்.

ஸ்த்குரு பாதம் போற்றி!


Monday, January 09, 2012

சித்த வித்யா பாடங்கள் 05: அந்தக்கரணங்களின் செயற்பாடு

மனிதனது சூஷ்ம அமைப்புகளில் அடிப்படையானது மனம், புத்தி , சித்தம், அஹங்காரம் எனும் அந்தக்கரணங்கள். அவற்றின் செயன்முறை  பற்றி இன்றைய பாடத்தில் பார்ப்போம்.  
  • மனம் எனது சடப்பொருள் அல்ல, அது ஒரு ஒரு சூஷ்ம சக்தி (Energy).
  • புலன்கள் மூலம் வெளியிலிருந்து மூளை பெறும் தகவல்கள் மூளையில் மின்காந்த அலைகளாக ஆக்கப்பட்டு எண்ணங்களை தோற்றுவிக்கிறது.  
  • எண்ணங்கள் தொடர்ச்சியாக தோன்றிக் கொண்டிருக்கும் சேர்க்கைதான்  (collective thoughts) மனமாக உருப்பெறுகிறது .
  • இவை நடைபெறும் இடமே மனம் அல்லது மேல் மனம். 
  • இவை தொடர்ச்சியாக உருவாகும் போது ஒரு அடையாளத்தினை (impression) பிரபஞ்ச வெளியில் உருவாக்கிறது, அதாவது எமக்கு தோன்றும் ஒவ்வொரு எண்ணமும் இந்த பிரபஞ்ச்சத்தில் அசைவை ஏற்படுத்தி ஒரு பதிவினை ஏற்படுத்துகிறது. 
  • இந்த பதிவுகள் சேரும் பகுதியைத்தான் சித்தம் அல்லது ஆழ்மனம் என அழைக்கிறோம், இவை எப்போதும் யாராலும்  அழிக்கமுடியாதவை. அனைத்தும் பதிவுற்ற நிலையில் இருக்கும், சரியாக தமது சூஷ்ம புலன்களை விழிப்படைய செய்தவர்கள் இவற்றை அறியலாம். 
  • இப்படி சித்தத்தில் வலுப்பெற்ற எண்ணங்கள் மனிதனின் தூல நிலையில் செயல்கொள்ள தயாராகும். 
  • அவை செயல் நிலைக்கு வர தகுந்த பிராணனும், சூழலும் அவசியம். இந்த செயல் நிலைக்கு வருவதற்கான காரணிகளை ஒழுங்கு படுத்தும் செயலைத்தான் நவக்கிரகங்களும் செய்கின்றன. அதாவது எமது சித்தத்தில் பதிவுற்ற பதிவுகள் செயற்படுத்தும் பொறுப்பு கிரகங்களுக்குரிவையை. 
  • புத்தி என்பது சித்தமாகிய ஆழ மனத்தினதும் அஹம்காரதினதும் சேர்வை. அதாவது சித்தத்தில் சேர்ந்த பதிவுகளின் படி நிகழ்காலத்தில் நடக்கும் செய்முறைகளை சரி பிழை என ஆராயும் பாகம்.  
  • அஹம்காரம் ஒரு செயலை செய்வதற்கான மையப்புள்ளி. அதாவது எப்போதும் நாம் ஒரு செயலை செய்வதற்கு மையம் ஒன்று தேவைப்படுகிறது. அந்தப்புள்ளி ஆன்மாவாக இருக்கும் நிலையே தன்னையறிந்த நிலை. அது விலக விலக நாம் உலக மாயையில் எம்மைப் பொருத்துகிறோம். உண்மையில் எமக்கு இரண்டு மையங்கள் காணப்படுகின்றன. ஒன்று உண்மையான நான் ஆகிய ஆன்மா, மற்றையது அஹம்காரமாகிய "நான்". இந்த வேற்றுமை உருவாவதற்கான காரணம் வெளி உலக தொடர்பில் மனம் ஈடுபடும் போது அந்த பதிவுகளை தனது உண்மை நிலை என எண்ணி மறந்து விடுவதே ஆகும். 
  • அஹம்காரமாகிய நான் இன்றி எந்தக் காரியமும் நடைபெறாது, எந்த ஆன்ம போதனையும் உண்மையான ஆன்மாவாகிய நானிற்கும், அதன் பிரதியான "நானிற்கு" இடையிலான இடைவெளியினை படிப்படியாக குறைத்து இறுதியில் ஆன்மாவாகிய "நானை" அடையும் வழிமுறையினையே போதிக்கிறது. 
  •  இந்த அந்தக்கரணங்கள் நான்கும் ஒன்றுடன் ஒன்று கலந்த, ஒன்றை ஒன்று இடைத்தொடர்புடையவை, அதாவது பொதுவான சாதாரண வாழ்க்கை முறை ஒன்றுடன் ஒன்று கலந்த நிலை, 
  • சித்த சாதனை அல்லது எந்தவொரு யோக சாதனையும் இந்த ஒழுங்கற்ற   அந்தக்கரணங்களில் கலப்பை  எமது மனதின் மூலம் உணர்ந்து ஒழுங்கு படுத்தி, சக்தியுடையதாக்கி படிப்படியாக கட்டுப்படுத்தி, மாயை ஆகிய நானிலிருந்து உண்மையான ஆன்மாவாகிய நானை உணரும் வழிமுறையினையே சொல்லும். 
  • எந்த தூல  சூஷ்ம பொருட்களும் பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் ஆகிய ஐந்தின் கலப்பினால் ஆனவையே.  அவற்றில் விளக்கமும் எல்லாவற்றிலும் ஐந்தும் ஒன்றுடன் ஒன்று கலந்த கலவையாகவே காணப்படும். 
  • அந்தக் கரணங்கள் நான்கும் பஞ்ச பூதங்களால் ஆனவையே. 
  • ஆகவே சித்த வித்தையின் படி ஒருவர் தனது மனம், புத்தி சித்த அஹங்காரங்க்களை சுத்தி செய்வதே முதற் படி. 
  • இந்த அடிப்படையினை ஒருவர் விளங்கிக் கொண்டால் மற்றைய விடயங்களை சிந்தித்தறிவதனால் இலகுவாக விளங்கிகொள்ளலாம். 
  • அடுத்த பாடத்தில் எல்லாவற்றிற்கும் மூலமான மனதினை சுத்தி செய்யும் ஓர் எளிய முறையினை பார்ப்போம். 

Friday, January 06, 2012

சித்தவித்யா பாடங்கள்: 04 மனிதனின் அமைப்பு

சென்ற பாடங்களை படித்தவர்களுக்கு சித்த வித்தையின் அடிப்படை நோக்கம் விளங்கியிருக்கும். பொதுவாக நாம் ஸ்தூலத்திலுள்ளவற்றையே உண்மையென நம்பி வாழ்கிறோம், ஆனால் ஸ்தூலத்தையும் தாண்டி எமது ஸ்தூல புலன்களுக்கப்பால் இருக்கும் சக்திகளால் நாம் கட்டுப்படுத்துவதையும் உணர்கிறோம். அவற்றை எப்படி கட்டுப்படுத்துவது, வசப்படுத்துவது என்ற ஆய்வில் மனிதன் கண்ட இருதுறைகள்தான் ஆன்மவிஞ்ஞானம், பௌதீக‌ விஞ்ஞானம், 

பௌதீக விஞ்ஞானம் புறவயச் சூழலை ஆராய்வது, ஆன்ம விஞ்ஞானம் அகச்சூழலை ஆராய்வது. ஆன்ம விஞ்ஞானத்தின முதல் நோக்கம் தன்னையறிதல் மூலம் தலைவனை அறிதல் என்பதாகும். ஆதலால்தான் அண்டத்தில் உள்ளதெல்லாம் இந்த பிண்டத்தில் உண்டு என சித்தர்கள் சொல்லிவைத்தார்கள். ஆகவே சித்த வித்தையினை, அதன் செயற்பாட்டினை தெளிவாக விளங்கி, அதன் வரைமுறைகள், பிரயோகங்கள் என்ன என்பதனை தெரிந்துகொள்ள முதலாவது நாம் மனிதராகிய எம்மைப் பற்றி அறிந்துகொள்வதாகும்.

மனிதன் தனது அமைப்பினை அறிந்துகொள்ள சில விதிகளை புரிந்துகொள்ளவேண்டும்.
  • எந்தவொரு பொருளும் அதன் அமைப்பில் சூக்ஷ்மம், ஸ்தூலம் என இரு இருப்பைக் கொண்டிருக்கும்.
  • எந்தப்பொருளும் சூக்ஷ்மத்திலிருந்தே ஸ்தூலதன்மைக்கும் வரும்.சூக்ஷ்மத்தில் இல்லாத எதுவும் ஸ்தூலத்தில தோன்றாது.
  • இவற்றுக்கிடையிலான இணைப்பு பிராண சக்தி எனும் உயிர் சக்தியால் உருவாக்கப்படுகிறது.

இந்த மூன்றுமே இன்றைய பாடத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட விடயங்களாகும். மற்றும் சில ஆழமான விடயங்கள் காணப்பட்டாலும் அவை பின்வரும் காலங்களில் எடுத்துகொள்ளப்படும்.

மேற்குறித்த விதியின் படி மனிதனது அமைப்பு கீழ்வரும் படத்தில் உள்ளவாறு காணப்படும்.
ஆக சித்த வித்தையின் படி மனிதனின் சூஷ்மம் ஸ்தூலம் இரண்டை பற்றியும் அறிதல் வேண்டும். மேற்கூறிய படத்தில் குறிப்பட்ட விடயங்களை சித்தர்களது நூற்களில் பஞ்ச கோசம், அந்தக்கரணம் எனும் சொற்கள் மூலம் அறியலாம். பொதுவாக சித்தர் பாடல்களுக்கு பொருள் கூறுபவர்கள் இவற்றை எது தனிப்பட அடுக்குகளாக இருப்பதாக கூறியிருப்பதை காணலாம், சூஷ்ம உடலின் கூறுகள் யாவும் ஒன்றுடன் ஒன்று கலந்தவை. தனிப்பட அடுக்குகளாக (layers) இருப்பதில்லை.

மேலே கூறப்பட்டதன் படி சூஷ்மத்தினை எமக்கு கட்டுப்படுத்தும் சக்தி வந்தால் ஸ்தூலம் தானாக கட்டுப்படும் என்பதே அனைத்து சாதனைகளினதும் குறிக்கோளாகும். 

இந்த அடிப்படையின் படி பிராணன் தான் ஸ்தூலத்திற்கும் சூஷ்மத்திற்கும் இடையிலான பாலமாகும்.  பிராணனுடன் கலந்துதான் ஸ்தூல சூஷ்ம உடல்கள் நன்மையோ தீமையோ பெறுகின்றன. 

நன்மையையும் தீமையும் எவை என்பதனை அந்தக் கரணங்கலான மனம், புத்தி, சித்த அகங்காரங்கள் தீர்மானிக்கின்றன. 

உதாரணம் மூலம் விளங்குவதானால் கணணி ஒன்றில் 
  • வெளியே தெரியும் கணணி (Computer hardware) - ஸ்தூல உடல் 
  • அதிலுள்ள அசம்பிளி லாங்குவேஜ் (Assembly language) - அகங்காரமும் ஆன்மாவும் கலந்த நான் எனும் உணர்வு .
  • புரோகிராமிங் லொஜிக் (Programming logic) - புத்தி 
  • விண்டோஸ் புரோகிராம் (Windows program) - சித்தம் ஆகிய ஆழ்மனம் 
  • மொனிட்டர் (monitor)  - புறமனம்
இவற்றை விளங்குவதன் மூலம் ஒருவருடைய இந்த ஒவ்வொரு பகுதியையும் கட்டுப்படுத்த எப்படி சில தகமைகள் வேண்டுமோ அப்படி எமது ஸ்தூலத்தினையும் சூஷ்மத்தினையும் கட்டுப்படுத்தும் பயிற்சிதான் சித்த வித்தை, யோகபயிற்சி இவையெல்லாம். 

இந்த அடிப்படையினைப் பற்றிய மேலதிக விளக்கங்களை தகுந்த இடங்களில்  பார்ப்போம். 

அடுத்த பாடத்தில் எந்த சாதனைக்கும் முக்கியமான மனதினை சுத்தி செய்யும் சாதனை பற்றி அடுத்த பாடத்தில் பார்ப்போம். 

சத்குருவே நமஹ 


Thursday, January 05, 2012

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - அகஸ்திய மகரிஷியின் ஞானப்பாடலின் சித்த வித்யா விளக்கம்


அகஸ்திய மகரிஷியின் ஞானப்பாடல் கீழ்வருமாறு, 

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே

பொதுவாக இந்தப் பாடலை வைத்துக்கொண்டு அகஸ்திய மகரிஷியே சொல்லிவிட்டார், மனம் செம்மையாக இருந்தால் மந்திரமும் ஜெபிக்கத்தேவையில்லை, பிரணாயாமம் செய்யத்தெவையில்லை என வாதிடுவோரும், பொருள் கொள்வோரும் உள்ளனர், ஏன் சில காலங்களுக்கு முன் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். அப்படியானால் எல்லா நூற்களிலும் என் மந்திரங்களும் யோக சாதனைகளும் கூறி உள்ளார்கள்?

இந்தப்பாடலை நேற்றுக்கண்ணுற்றப்போது அதனை வாசிக்கும் போது மனதில் கீழ்வருமாறு பொருள் தோன்றியது. 

மனது செம்மையாக முதலில் மந்திரம் ஜெபி!அப்படி மனது செம்மையான பின்பு பின்பு மந்திரம் செபிக்க வேண்டாம்,அந்த நிலையில் அசபையான மந்திரம் தானகவே ஜெபிக்கப்படும். 

அடுத்து மனது செம்மையாக அதன்பின் வாயுவை உயர்த்தும் பிராணாயாமத்தினை செய்,இதன் மூலம்  மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தும் பயிற்சியை நீ தொடர்ந்து செய்யத்தேவை இல்லை,தானாகவே மூச்சு கட்டுப்படும். 

அடுத்து மனது செம்மையாக்க வாசியாகிய பிராணனை ஆறாதாரங்களில் நிறுத்தப்பழகு அதன்பின் நீ மனமது செம்மையாக‌ வாசியை உன் முயற்சியால்  நிறுத்த வேண்டா,ஆதாரங்களில் தானாகவே வாசியாகிய பிராணன் நிலைப்படும். 

இவ்வளவற்றையும் நீ செய்து உனது மனம் செம்மையானால் உன்னிடமுள்ள மந்திரங்கள் எல்லாம் செம்மைதான். அதாவது சித்தி பெற்ற நீ சொல்லும் சொற்கள் எல்லாம் மந்திரமாக மாறும். 

ஆக இந்தப்பாடலிலேயே சித்த சாதனையின் படிமுறைகளையும், செய்முறைகளையும் பரிபாஷையாக சொல்லியுள்ளார் குருதேவர்! 

எப்படியெனில் ஒரு தந்தை மகனிற்கு லௌகீக ஒழுக்கத்தினை, வாழ்க்கையில் முன்னேற போதிக்கும் போது கூறும் பாணி எப்படி இருக்கும்?

"மகனே உனது படிப்பை முடித்தபின்பு நீ படிப்பைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை, நீ கற்ற கல்வி உனக்கு நல்ல தொழிலைத் தேடித்தரும், தொழில் கிடைத்த பின்பு அதனை ஒழுங்காக செய்தால் பதவியுயர்வு தேடி வரும்,அப்போது நீ தொழிலைப்பற்றி சிந்திக்கத்தேவையில்லை,பதவி வந்தால் செல்வாக்கும், பணமும் தானக வரும், அவை வந்தால் உலக‌இன்பம் தானாக வரும், அந்த நிலையில் 

உலகவின்பம் உண்டெனில் கற்க வேண்டா
உலகவின்பம் உண்டெனில் தொழிலும் வேண்டா
உலகவின்பம் உண்டெனில் பதவியும் வேண்டா
உலகவின்பம் உண்டெனில் அனைத்தும் உண்டே"

ஏனெனில் நீ ஒழுங்காக கற்றாலே இவை அனைத்தும் உனக்கு ஒழுங்காக முறையாக  கிடைக்கும்"

எனக்கூறுவது போல் சித்த வித்தை கற்கும் மாணவனிற்கு ஞானத்தந்தை அகஸ்தியர் கூறுகிறார்;

"மகனே ஞானம் பெற உன் மனம் செம்மையாக வேண்டும், அதற்கு நீ முதலில் மந்திரம் செபிக்கவேண்டும், பின் உனது மூச்சினால் பிராணனை கட்டுப்படுத்தும் சாதனையினை ஒழுங்காக செய்யவேண்டும், பிராணபலம் நன்கு பெற்றபின்பு வாசியினை சூஷ்ம உடலிலுள்ள ஆதாரங்களில் நிறுத்துவதற்கு பழகவேண்டும், இவற்றை எல்லாம் ஒழுங்காக செய்த நிலையில் உனது மனம் செம்மையான நிலையின் பின் ,

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே

ஏனெனில் அனைத்தும் உன் முயற்சியில்லாமலே தானாக நடக்கும் என்பதால்! என கூறியிருக்கிறார். 

இறுதியாக இந்த புரிதல்  இலக்கண ரீதியில்  சரியா பிழையா எனத்தெரியவில்லை, ஆனால் அனுபவ ரீதியில் சரியானதே, 

குருவைப்பணிந்து அவர் பாதத்தில் சமர்ப்பித்து இதனை பதிகிறேன். இந்த புரிதலால் பலன் இருப்பின் பயன் பெற்றுக்கொள்ளுங்கள்! 

ஓம் அகஸ்திய மாமகரிஷி குரவே நமஹ!
சத் குரு பாதம் போற்றி!


Wednesday, January 04, 2012

சித்தவித்யா பாடங்கள்: 03 குருவை சூஷ்மத்தில் தொடர்புகொள்வதற்கான பயிற்சி

சென்ற பாடத்தில் கூறப்பட்டதின் படி சூஷ்மத்திலுள்ள உங்களுக்கு விருப்பமான ஒரு குருவினை தேர்ந்தெடுத்திருப்பீர்கள் என நம்புகிறேன். அவ்வாறாயின் அவரது பெயரிற்கு முன்னால் "ஓம்" சேர்த்து இறுதியில் 'நமஹ/போற்றி" சேர்த்து அதனை ஒரு எளிய மந்திரச் சொல்லாக்கிக் கொள்ளவும். உதாரணமாக "ஓம் அகஸ்திய மகரிஷியே நமஹ" என்றவாறு உருவாக்கிக்கொண்டு அவரது படத்தினையோ, தீப ஒளியினையோ ஒரு இடத்தில் நிரந்தரமாக கண்பார்வை மட்டத்தில் இருக்குமாறு வைத்துக்கொள்ளவும். குறித்த இடம்  வீட்டின் பூஜை அறையில் அல்லது சுத்தமான ஒரு சிறு இடத்தில் இடம் ஒதுக்கிக் கொள்ளவும், அந்த இடம் வேறு எந்தப் உபயோகத்திற்கும் இல்லாததாக இருத்தல் வேண்டும். அந்த இடம் நீங்களும் குருநாதரும் தொடர்பு கொள்வதற்கான இடமாக மட்டும் இருக்கவேண்டும். 

பின்பு குறித்த நேரத்தில் அமைதியாக அமர்ந்து கண்ணை மூடி சில வினாடிகள் மெதுவாக ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டு (வேறு எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்) குருநாதரின் உருவத்தையோ அல்லது தீப ஒளியினையோ பார்த்தவண்ணம் நாமத்தினை ஐந்து நிமிடமோ அல்லது 108 தடவையோ மனதில் உச்சரித்த வண்ணம் (முடியாவிட்டால் ஆரம்பத்தில் சத்தமாக உச்சரித்து பின் மானசீகமாக செய்யவும்) அவருடன் அன்பு கலந்த பார்வையாக செலுத்தவும். மனதில் எமக்கு விருப்பமான ஒருவரை வரவேற்க எப்படி காத்திருப்போமோ அந்த உணர்ச்சி பாவத்தில் இருக்கவும். இப்படி நாமத்தினை உச்சரித்து முடித்தவுடன் மனதில் அன்புடன் கீழ்வரும் பொதுவான பிரார்த்தனையினை மனதால் வேண்டவும் "குரு நாதா எனது செயல்களுக்கு காரணமான மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்களை தங்களிடம் ஒப்படைக்கிறேன், அவற்றை நல்ல அதிர்வுடையவை ஆக்கி உங்களுடன் எப்போதும் இணைந்தவையாய் எப்போதும் நானும் நீங்களும் ஒன்றே என நிலையில் எனது மனமும் செயலும் நல்லதாகிடவும், என்னிலும், என்னைச் சூழவாழ்பவர்கள் வாழ்விலும், குடும்பத்திலும், ஊரிலும், நாட்டிலும், பூமியிலும் அன்பு, ஆனந்தம்,ஞானம், செல்வம் நிறைந்து ஒத்திசைவாய் வாழ அருள் புரியவேண்டும்" என மூன்று முறை பிரார்த்திக்கவும்.

இதன் பின்பு உங்களது உடனடித்தேவையான தனிப்பட்ட பிரார்த்தனை ஒன்றை மட்டும் செய்யவும், குறித்த ஒன்று நிறைவேறும் வரை அந்த ஒரு பிரார்த்தனையினை மட்டுமே செய்யவும், உதாரணமாக " எனது தகுதிக்கும் ஆற்றலிற்கும் தக்க வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் குருதேவா" என்று பிரார்த்திக்கவும். இதற்கு பின்னர் கண்ணைத்திறந்து சில நிமிடங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை அவதானித்து வாருங்கள். முதலில் தோன்றும் எண்ணங்களை ஒரு குறிப்பேட்டில் குறித்து வரவும்.  


தனிப்பட்ட வேண்டுதலிற்கு ஒரு காரியம் நிறைவேறிய பின் மற்றைய காரியத்தினை பிரார்த்திக்கவும்.  நிதானமாக சிந்தித்து உங்கள் தேவைகளை வரிசைப்படுத்தி முக்கியமானதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்யும் பொது நிச்சயமாக வெற்றி பெறுவதுடன் உங்களுக்கு நம்பிக்கையும் பிறக்கும். 


தொடங்குவது ஒரு வியாழக்கிழமையாக இருத்தல் நல்லது. 

இதனை காலையும் மாலையும் தொடர்ந்து செய்து வரவும். இந்த பயிற்சி வாழ்நாள் பயிற்சியாக இருக்கட்டும். இதில் எந்த கடமை மனப்பான்மையும் வரக்கூடாது. அதாவது பலனை எண்ணி ஒரு முறை செய்வது பின்பு விடுவது என்பதல்லாமல் எந்த எதிர் பார்ப்பும் இன்றி நாளாந்தம் செய்து வாருங்கள். இப்படி தொடர்ச்சியாக செய்துவரும் காலத்தில் முதலில் உங்கள் சிந்தனை மனம் (rational mind) குரு கூறுவது போல் வந்து தவறாக வழி காட்டக்கூடும். ஆனால் தொடர்ச்சியான முயற்சியாலும் பயிற்சியாலும் ஆழ்மனது குருவுடன் தொடர்பு கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும். அதன் பின்பு உங்கள் முடிவுகள் மனதில் தோன்றும் எண்ணங்கள் சரியானதாகவும் வெற்றி பெறக்கூடியவையாகவும் இருக்கும். 

நாளாந்த கடமைகள் தவிர்ந்து மனதில் எந்த ஒரு புதிய எண்ணம் தோன்றினாலும் ஒருதடவை மனதிற்குள் "குரு நாதா இந்த எண்ணம் சரியானதா? செயற்படுத்தலாமா?" எனக்கேட்டு சிறிது நேரத்தின் பின்னர் (வாழ்க்கையின் முக்கிய விடயங்களாக இருந்தால் சில நாள் தொடர்ச்சியான பிரார்த்தனையின் பின்னர் ) அதனை செயற்படுத்துவதற்கான வழி முறைகளில் இறங்கவும்.  இப்படி நீங்கள் செய்யும் போது சரியான பாதையில் செல்வதற்கான வழியினை குரு நாதர் ஏற்படுத்தித் தருவார் .

இப்படி செய்து கொண்டு வரும்போது உங்களது சித்தமாகிய ஆழ்மனம் விழிப்படைய தொடங்கும். இந்த ஒரு சாதனை மட்டுமே போதும் நீங்கள் அனைத்து ஞானத்தினையும் அடைவதற்கான வழி.


நிபந்தனைகள் 
  1. இந்தப் பயிற்சியில் வரும் குரு நாதர் தொடர்பு கொண்டு தனது சுய பிரச்சனைக்கு (உங்களிற்கும்  குடும்பத்தினரிற்கும்) மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது சுய நலமாக இருக்கின்றதே என்று புலம்புவராக இருந்தால் சற்று காத்திருங்கள், வரும் பாடங்களில் விடை கிடைக்கும். 
  2. தீய எண்ணங்களை செயற்படுத்துவதற்கான பிரார்த்தனைகள் செய்தல் கூடாது. 
  3. மன ஒழுக்கங்களை வளர்த்துக் கொள்வது விரைவாக சாதனையில் சித்தி பெற இன்றி அமையாதது. அவை பற்றி அறிந்து கொள்ள கீழ்வரும் இணைப்பில் பார்க்கவும். 
அன்பர்களே இப்போது நீங்கள் பயமில்லாமல் சித்த வித்தை கற்கலாம் என்ற நம்பிக்கை தங்களுக்கு வந்திருக்கும் என எண்ணுகிறேன். இந்தப்பயிற்சியினை செய்து உங்களுக்கும் குரு நாதருக்கும் இடையிலான தொடர்பு வலுப்பட்டவுடன் அடையும் பலன்களை நீங்கள் அனுபவித்து எமக்கும் கூறுங்கள்.  


ஓம் ஸத் குரு பாதம் போற்றி!

Sunday, January 01, 2012

சித்த வித்யா பாடம்: 02 - சித்த வித்தையின் படி குரு தத்துவம்


சென்ற பதிவில் குருகுலவாசம் பற்றி பார்த்தோம், இந்த பதிவில் நாம் கூறிய முறைப்படியான குருகுல வாசத்திற்கான படிமுறைகள் என்னவென்று பார்ப்போம். 


1 . மனதில் இவற்றை  கற்க வேண்டும் என்ற விருப்பம்.



எவன் ஒருவன் அமைதியான மனத்துடன், மௌனமாக, ஒருமைப்பட்ட மனதுடன் அறிவைத்தேடுவதற்கான பயணத்தினை அடைகிறானோ, அவன் சித்த வித்தையினையோ மற்ற எந்த அறிவினையும் அடைவதற்குரிய பாதையினை அறிகிறான், அப்படிப்பட்டவன் எப்போதும் குருவை அடைகிறான். இதுவே சித்த வித்தைக்கான முதல் அடிப்படை. இதனை நன்கு மனதில் பதியவைத்துக்கு கொண்டு இனி விளக்கங்களைப் பார்ப்போம்.

ஒரு நல்ல வளமான நிலத்தில் தரமான விதையினை விதைத்து அதற்கு தகுந்த உரமிட்டு, நீர்பாய்ச்சி பராமரித்தால் சிறந்த விளைச்சலையும் கனிகளையும் பெறுவது போல் இந்தப்பாடங்களை கற்பதால் உங்களது சித்தமாகிய ஆழ்மனதில் இவற்றின் அடிப்படை விதைக்கப்படும். விதைகள் தகுந்த சித்த மானச பக்குவம் வரும் பொழுது பலனினைத்தரும். ஆதலால் ஆர்வமுடன் இவற்றைப் படித்து மட்டுமே வருவீர்களானாலேயே ஆனால் கூட‌ அவை உங்களுக்கு தகுந்த பக்குவம் வரும் சூழ்நிலைகளில் உதவும். அத்த‌கைய‌ நிலையின் பின்பு இதில் கூற‌ப்ப‌ட்ட விட‌ய‌ங்க‌ள் உங்க‌ள‌து சொந்த‌ அனுப‌வ‌ங்க‌ளாகும். 

2. குருவின் சூஷ்ம தொடர்பு பெறுதலுக்கான விதி  

இன்று குரு தத்துவம் தனிமனித போற்றுதல்களாகவே உள்ளது. சித்த வித்தைப்படி குருதத்துவம் என்பது என்ன என்பதனை இங்கு பார்த்துவிட்டு மேலே செல்லவும். 

ஆக குருதத்துவம் என்பது எல்லையற்ற பிரபஞ்ச அறிவு அவற்றை பெரும் தன்மையினை எம்மில் உருவாக்கிக் கொள்ளும் முறைதான் குரு சிஷ்ய பாவம். 

அடுத்து குருவிட‌மிருந்து வித்தையினைப் பெறுவ‌தும் ச‌ரியாக‌ விள‌ங்கிக் கொள்வ‌தும் எப்ப‌டி? ப‌ல‌ரிற்கு நேருக்கு நேராக நின்று விள‌ங்க‌ப்ப‌டுத்தினால் ம‌ட்டுமே குருவிடம் வித்தை பெறுத‌ல் என‌ உறுதியாக‌ எண்ணுகின்ற‌ன‌ர், அது ஒருவ‌கையில் உண்மையாக‌ இருந்தாலும் குருவிட‌ம் இருந்த எல்லோரும் வித்தைக‌ளை அறிந்த‌வ‌ர்க‌ள் இல‌ர். அதேபோல் குருவை விட்டு பௌதீகமாக‌ தூரத்தில் இருந்தவர்கள் பலர் அரிய ஞானத்தினைப் பெற்றிருக்கிறார்கள். அப்ப‌டியானால் ஒரு சில‌ர் ம‌ட்டுமே குருவிட‌மிருந்து வித்தை பெற‌ த‌குதியான‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ம்தான் என்ன‌? இத‌ற்கு த‌த்துவ‌ ரீதியாக‌ ப‌ல‌வித‌ (பூர்வ‌ புண்ணிய‌ ப‌ல‌ன், குரு அருள் என‌) ப‌ல‌வித‌ விள‌க்க‌ங்க‌ள் இருப்பினும் நாம் இங்கு கூற‌வ‌ருவ‌து இத‌ற்கான‌ விஞ்ஞான அடிப்படையிலான‌ கார‌ண‌த்தினை, இத‌ன் மேல‌திக‌ விள‌க்க‌ங்க‌ள் எண்ண‌த்தின் இய‌க்க‌விய‌ல் என்ற‌ ப‌குதியில் விரிவாக‌ விள‌க்க‌ப்ப‌டும். இங்கு இத‌ன் அடிப்ப‌டையினை விள‌க்கி விடுகிறேன்.

இங்கு பௌதிக‌விய‌ல் கோட்பாட்டினை அடிப்ப‌டையாக‌ கொண்டால் எந்த‌ ஒரு எண்ண‌மும் அலைவ‌டிவ‌த்தினை (மூளையில் எண்ண‌ அலைக‌ள் ஆல்பா, பீட்டா, காமா, தீட்டா ஆகிய‌ அலைவ‌டிவாக‌ உருவாகுவ‌தாக‌ ஈ.ஈ.ஜி க‌ற்கைக‌ள் தெரிவிக்கின்ற‌ன‌)))0)) கொண்டிருக்கின்ற‌ன‌... பௌதிக‌விய‌ல்/இய‌ற்பிய‌ல் க‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு தெரியும் அலைக‌ள் ப‌ரிவுறும் என்ப‌து. ப‌ரிவு (resonance) என்பது ஒவ்வொரு அலையும் குறித்த அதிர்வினை (frequency) அடையும் போது மிக உயர்ந்த அலைவேகத்தினை அடையும். இந்த ஒத்த அதிர்வு நிலையினை அடையும் போது குறித்த தொகுதிகள் தமக்கிடையே சக்திப்பரிமாற்றத்தினை ஏற்படுத்திக் கொள்ளும். இந்த சக்திப்பரிமாற்றம் நிகழும் சந்தர்ப்பங்கள் பலவாறக இருக்கலாம். இந்த அடிப்படையிலேயே மானச, சித்த வித்தைகள் அனைத்தும் இயங்குகின்றன. இது எப்படி எனப்பார்ப்போம்.

சித்த வித்தையின் படி (மற்றைய முறைகளும்தான் பூஜை, உபாசனை, யோக சாதனை, தாந்திரீகம்) நாம் எமது சக்தியினை அதிகரித்துக் கொள்வதே எமது இலக்கு. அதாவது உயர் சக்திகளுடன் எமது  எண்ண அலைகளை பரிவுறவைத்து தொடர்புகொள்ளுவதனால் எமது சக்தியினை  அதிகரித்துக்கொள்ளலாம். அதன் படி எமது தற்போதைய "இயற்கையான எண்ண அதிர்வினை” ஒரு ஒத்திசைவானநிலைக்கு (Harmonic state) கொண்டுவந்து, பின்னர் உயர்ந்த அதிர்வொன்றுடன் (higher frequency) சமப்படுத்தும் போது எமக்கு உயர்ந்த அதிர்வின் சக்திப்பரிமாற்றம் (energy transfer) கிடைக்கிறது, இவற்றை ஆரம்பத்தில் சிறுகச் சிறுக செய்து நீண்டகாலச் சாதனையில் எம்முடன் நிலைக்கச் செய்தலே சித்த வித்தையின் இலக்கு. இப்படிச் செய்து சித்தி பெற்றதால்தான் சித்தர்கள் என பெயர் வந்தது

3 . குருவின் சூஷ்ம தொடர்பே உண்மையான குரு சிஷ்ய தொடர்பு 

எம்மிடம் மனம் இருக்கிறது, தற்போது அதனை உயர் சக்தியுடன் பரிவுறச் செய்யவேண்டும். உயர் சக்தி எது எம்மைப்பொறுத்தவரையில் "குரு", எம் அனைவருக்கும் ஆதி குரு அகஸ்திய மகரிஷி, ஆகவே அவருடைய அதிர்வுடன் எமது அதிர்வை பரிவுறச்செய்வதால் எம்முள்ளே அவரது சக்தியினை பெற்றுக் கொள்ளலாம். அவர் பெற்ற சக்திகள் அனைத்தும் மன, சித்த அலைகளாக பிரபஞ்சத்தில் உள்ளன, அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் அவருடன் ஒத்திசைவதே!

இந்த இடத்தில் அகஸ்திய மகரிஷி என ஒருவரை மட்டுமே நீங்கள் தொடர்புகொள்ளவேண்டும் எனச் சொல்லவில்லை, உங்களுக்கு விரும்பிய எந்தச் சித்தரையோ, தெய்வங்களையோ, தேவதைகளைக் கூட அழைக்கலாம். எப்படியாயினும் அகத்தின் இயல்பை அறிந்த உயர் பிராண சக்தியுடைய ஞான சித்தர் ஒருவரை வழிகாட்டியாக பெற்றால் உங்களது சக்தியினை உயர்த்திக்கொள்ளலாம், ஞானத்தினையும் பெற்றிடலாம் என்பதுதான் கருத்து.

எப்படி ஒத்திசைவது? அதற்கு இறைவன் அளித்த கொடையே சித்தம் எனும் ஆழ்மனம்.

அதை இயக்குவது எப்படி? தொடர்ச்சியான எண்ணம்! ஜெபம்

ஆம் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய சக்தினை தொடர்ச்சியான எண்ண அலை மூலம் சித்தத்தில் பதிப்பிக்கும் முயற்சிதான் ஒரே வழி!

ஆகவே சித்த வித்தை கற்பதற்கு  ஆரம்பத்திலிருந்தே குருவுடன் சூஷ்ம தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வதும், மனம், சித்தம் ஆகியவற்றை ஒத்திசைவாக வைத்துக் கொள்வதும் சித்த வித்தையினை கற்பதற்கான முக்கியமான அடிப்படை தேவையாகும்.

4 . சித்த வித்தையின் தன்மையினை  புரிந்துகொள்ளுதல்  


சித்த வித்தை என்பது நாம் தற்காலத்தைய அறிவுத்தேடலில் ஆசிரியர் ஒருவரிடமோ, விரிவிரையாளர் ஒருவரிடமோ வகுப்பு போய் படிக்கும் விடயமல்ல. எல்லா அறிவும் பிரபஞ்சமாகிய ஆகாய மனதில் (Cosmic mind) உறைந்துள்ளது. அவற்றை அறிந்துகொள்ள சூஷ்ம தன்மையுடைய சித்தம்  எனும் ஆழ்மனம் மனிதனிற்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. அதனை செயற்படுத்தி நாமாக அவற்றை அறிந்துகொள்ளும் பயிற்சிதான் சித்த வித்தை. ஆகவே ஒரு விடயத்தினை நன்கு புரிந்துகொள்ளுங்கள் உங்களுக்கு யாரும் எதுவும் கற்பித்து விடமுடியாது, குருவானவர் அவற்றை அறிவதற்கு உரிய முறைகளை மட்டுமே தருவார். அவற்றை பயிற்சித்து அனுபவமாக்கி கொள்ளவேண்டியது உங்கள் கடமை. 


இந்தப் பயிற்சிகளின் போது ஒவ்வொருவருக்கும் உண்டாகும் அனுபவம் அவர்களுக்கே உரியதாகும். அவற்றில் உயர்வு தாழ்வு, சரி பிழை என்பது இல்லை. அவரவர் மன, பிராண சித்த பரிணாமங்களுக்கு ஏற்ப அவை வேறுபடும். ஆதலால் பலபேரின் அனுபவங்களைக் கேட்டு மனக் குழப்பமுற வேண்டாம். 


இதிலிருந்து உங்களுக்கு இன்னும் ஒரு விடயம் விளங்கியிருக்கும் என எண்ணுகிறேன்.  அகம் சார்ந்த வித்தைகள் எவற்றிலும் எது சரி அது பிழை என்ற மேற்கத்தைய தர்க்க விவாதங்கள் இல்லை. எமது மூல நூற்களை எடுத்துப் பார்த்தீர்களானால் சூத்திர வடிவிலேயே இருக்கும். அவற்றின் பொருளை குரு எப்படி என்று விளக்கி சொல்லியிருக்க மாட்டார். அவற்றை மனதில் இருத்திக்கொண்டு உங்கள் பயிற்சியினை செய்து வருவிர்களானால் உங்கள் பயிற்சிக்கு தக்க விதத்தில் அவற்றின் பொருளும் பிரயோகமும் விளங்கும்.  உங்களுக்கு இன்னும் தெளிவாக விளங்குவதற்கு ஒரு உதாரணம் பதஞ்சலி யோகத்தின் சூத்திரத்தில் இருந்து காட்டுவோம். 


சூத்திரம் 1 .2 : "யோக சித்த வ்ருத்தி ந்ரோத"


இதன் பொருள் மனதின் விருத்திகளை கட்டுப்படுத்துவது எனவே பொதுவாக பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் சித்த வித்தை (பின்னர் வரும் படங்களில் விளக்கப்படும் ) படி மனத்தை மூன்று வகையாக பிரிக்கலாம் என்பதனை சாதனை மூலம் அறிந்து கொள்ளும் மாணவன் படிப்படியாக மேல் மனதின் விருத்திகளை கட்டுப்படுத்தி, பின் சித்த மனத்தை கட்டுப்படுத்தி, பின் ஆழ் மனத்தை கட்டுப்படுத்தி, இறுதியாக பிரபஞ்ச மனத்தை கட்டுப்படுத்துவதே முழுமையான யோகம். இந்த நிலையில் மேல் மனதை கட்டுப்படுத்தும் பயிற்சி செய்பவரிற்கும், சித்தத்தை கட்டுப்படுத்துபவரிற்கும் இடையிலான அனுபவம், ஆற்றல் வேறுபாடும்.  


இவை பற்றி வரும் காலங்களில் நீங்கள் மேலும் அறிந்து கொள்வீர்கள். தற்போதைக்கு நீங்கள் மனக்குழப்பம் அடையக்கூடாது என்பதற்காகவே விளக்கினோம். ஏனெனில் இன்றைய காலத்தில் சித்தர் பாடல்கள், சித்தர்களது கலைகள் எல்லாம் தற்காலத்திய தர்க்க கல்விமுறையிலேயே ஆராயப்படுகிறது,இதனால் தகவல்கள் பெறலாமே அன்றி அனுபவம் பெறமுடியாது என்பதனை விளங்கிக்கொள்ளவும்.  


ஆகவே மனதில் இவற்றை கிரகித்துக்கொண்டு குருவுடன் சூஷ்ம தொடர்பினை ஏற்படுத்துவதற்கு தயாராவோம். 


5. குருவைத் தேர்ந்தெடுத்தல் 

சித்த வித்தை என்பது மதம் மொழி கலாச்சாரம் என்பவற்றிற்கு அப்பாற்பட்டது,  ஆகவே குருவைத் தேர்ந்தெடுக்கும் உரிமை  மாணவரின் உரிமை, இதில் வீணான பயமுறுத்தல்கள் எவையும் இல்லை.  அடுத்து சூஷ்ம நிலையடைந்த சித்தர்கள் எவரிடமும் பேதமில்லை.  ஒவ்வொரு சித்தரும் இறுதி நிலையடையும் போது பிரபஞ்ச மகா சக்தியில்  கலக்கின்றனர். நாம் எமது மனதை ஒருமைப்படுத்தி அவற்றை பெறுவதற்கும் அவர்களின் பௌதிக இருப்பை நிலைப்படுத்துவதற்கும்  வைத்துக்கொண்டவை தான் பல தெய்வங்கள், பல சித்தர்களின் பெயர்கள் எல்லாம். ஆதாலால் இவற்றை கற்க விரும்புபவர்கள் உங்கள் மன நம்பிக்கைக்கு தகுந்தபடி குருவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.  முக்கியமான நிபந்தனை அவர் சூஷ்மத்தில் இருக்க வேண்டும் அதாவது அவர் தற்போது உடலில் இல்லாதவராக இருத்தல் வேண்டும். 

ஆகவே கீழ்வருவனவற்றை தெளிவாக முடிவு செய்யுங்கள்;


1. நீங்கள் எந்த சித்தரை, ரிஷியை குருவாக கொள்ளப்போகிறீர்கள்?

2. பின்பு அவரை எந்த வடிவில் மனதில் உருவகப்படுத்த போகிறீர்கள்? (உருவத்திலா, ஜோதியிலா, மானசீகமாகவா)

3. தினமும் எந்த நேரத்தில் உங்கள் சாதனையினை செய்யப்போகிறீர்கள் என்பதனை முடிவு செய்யுங்கள். 

இவற்றை முடிவு செய்து கொண்டு அடுத்த பாடத்தினை எதிர்பாருங்கள், அதில் எப்படி குருவுடன் சூஷ்ம தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வது என்ற செயல்முறை பதியப்படும்.

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...