Friday, March 23, 2012

பிராண சக்தி விழிப்பு இரகசியம்



பிராணாயாமம் என்பது யோகம் பழகுபவர்களிற்கு முக்கியமான ஒரு பயிற்சியாகும். இன்றைய நோக்கில் யோக பழகுங்கள் உடல் ஆரோக்கியம் வரும். பிராணாயாமம் பழகினால் உடல் ஆரோக்கியம் வரும் என்று யோகா நிலையங்கள் போதித்து வருகின்றன. இது உண்மையானாலும் இதை விட ஒரு அரிய விடயம் இதில் பொதிந்துள்ளது என்பதை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம். 

முதலாவது பிராணன் என்பது மூச்சு அல்ல, மூச்சு பிராணனை உடலிலிருந்து கட்டுப்படுத்த உபயோகிக்கும் ஒருசாதனம் என்பதனை யோகம் பழக விரும்புபவர்கள் மனதில் இருத்த வேண்டும். மனிதன் பஞ்ச கோசங்களால் ஆனவன் என்பது யோக தத்துவம், சித்தர் தத்துவங்கள் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த பஞ்ச கோசங்களில் அன்னமய கோசம் என்பது எமது ஸ்தூல உடல், மனோமய கோசம் என்பது மனம் இவற்றை இரண்டையும் இணைக்கும், செயற்படுத்தும் சக்திதான் பிராணன், இந்த பிராணன் மேற்குறிப்பிட்ட அன்னமய, மனோமய கோசங்களில் பயணிப்பதற்கு உள்ள அமைப்புகள் தான் உடலில் உள்ள ஆதார சக்கரங்களும், 72000 நாடிகளும், ஆதாரங்கள் என்பன மொலாதாரம, சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞ்சை, ஆறும் சகஸ்ரதளம் என்பது இந்த ஆறு ஆதாரங்களினது சேர்க்கையும் ஆகும். இவை ஒவ்வொரு சம்பிரதாயங்களுக்கு ஏற்ப மாறுபடும் (கோரக்கரின் வகைப்படுத்தல் பிரகாரம் எட்டு ), இவை உண்மையில் ஸ்துல உடலில் இருப்பவையல்ல, மனோமய கோசத்தில் பிராணனின் ஓட்ட ஒழுங்கிற்காக  சித்தர்களால் உருவாக்கப்பட்டவை, மன இயக்கத்தின் படி மூச்சு மாறும், மூச்சின் மாற்றத்தின் படி பிராணனின் ஓட்டம் மாறுபடும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே உடலில் உள்ள சக்கரங்கள், இவை தற்போது போதிக்கப்படுவதுபோல் குறித்த இடத்தில் மாத்திரம் இருப்பவை அல்ல, இன்னும் பல சக்கரங்கள் உள்ளன, சித்தர்களால் வழங்கப்பட்டுள்ள சக்கர வரைபடம் ஒருவருடைய பிராணனை ஒழுங்கு படுத்தி பரிணாமத்தில் மேலே கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். அதாவது முக்தி பாதையில் செல்வதற்கான வரைபடமாகும். 

அதாவது மஹா பிராணன் எனப்படு பிரபஞ்சச பிராணன் மூச்சு உள்ளிழுக்கும் பொது சகஸ்ராரம் உடாக வந்து ஒவ்வொரு ஆதார சக்கரங்களூடாக கிழிறக்கி மூலாதாரத்திற்கு சென்று பின் அங்கிருந்து இடகலை, பிங்கலை நாடிகலூடாகவும் உப நாடிகலூடாகவும் உடலிற்கு செலுத்தப்படுகிறது. இந்த பிராண சக்தியும் அன்னமய கோசம் ஏற்கும் உணவிலுள்ள சத்துகளும் சேர்ந்து உடலினதும், மனத்தினதும் இயக்கத்தினை சரிவர செய்கின்றது. உண்மையில் நோய்வந்து மருந்து உண்ணும் போது மருந்தும் உணவும் நோய்வந்த பகுதியினை மீளமைக்கவும் சரி செய்யவும் தேவையான மூலப்பொருளை வளங்குகின்றணவே தவிர குணப்படுத்துவதில்லை, அதனால் தான் ஆங்கிலத்தில் "Doctor treat; God cures" என்பார்கள், இந்த கடவுள் என்பது பிராண சக்தியே ஆகும். இந்த பிராண சக்தி உடலில் எவ்வளவு இருக்கின்றதோ அந்தளவிற்கு உடல் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். 

இந்த மஹா பிராணசக்தி ஒவ்வொருவருடைய பிராணமய கோசத்திலும் உறை நிலையில் வைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் மனிதன் கடவுளின் அமிசம், தான் கடவுள் என்பதனை மாயையினால் மறந்துவிட்ட கடவுள், அல்லது இப்படிசொல்லலாம் மஹா பிராண சக்தி எந்த விதத்திலும் கலப்பற்று சுயமாக இயங்கும் நிலை கடவுள் அல்லது பரா சக்தி, கட்டுப்பட்டு சுருண்ட நிலை மனிதன் அல்லது குண்டலினி. அதாவது இரண்டும் ஒன்றுதான் ஆனால் பிராணனின் விழிப்பு நிலை வித்தியாசம், இதுவே கடவிளிற்கும் மனிதனிற்கும் உள்ள வேறுபாடு. 

இதனை அறிந்த சித்தர்கள் பிராணமய கோசத்தில் உறங்கும் மகா பிராண சக்தியினை விழிப்படைய வைத்து ஒவ்வொரு மனிதனும் கடவுளாகும் நிலையினை அடைவதே யோக சாதனையின் குறிக்கோள். 

பிராணயாமத்தின் பயன்பாடு 
பிராணாயாமத்தின் போது உடலின் நாடிகள் மெதுவாக உஷ்ணமடைகின்றது, இது மெதுவாக மூலாதாரத்தில் உறைந்துள்ள மஹா பிரணனான குண்டலினியை உஷ்ணப்படுத்தி விழிப்படைய வைக்கிறது, இந்த வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் போது மஹா பிராணன் சுழுமுனை  நாடியினுடாக ஆக்ஞ்ச சக்கரத்தினை அடைந்து பின்னர் மூலாதாரத்திற்கு மீண்டு வருகிறது. இதுவே சுருக்கமான விளக்கம். ஆனால் சுழுமுனை விழிப்படையாத நிலையில் பிராணன் வேறு நாடிகளுடாகவும் செல்லும், இதனால் பல்வேறு வேண்டத்தகாத விளைவுகளும் ஏற்படலாம். 

எல்லாவித பிராணயாமங்களும் மகா பிராணனை விழிப்படைய செய்வதில்லை, சிலது பிராணன் பயணிக்கும் நாடிகளை சுத்தி செய்பவை, 

எப்படியாயினும் பிரணாயாம பயிற்சி தகுந்த குருவினை அண்டி செய்யவேண்டிய பயிற்சி என்பதனை பழக விரும்புபவர்கள் மனதில் இருத்துதல் அவசியம்.

ஓம் சத்குரு பாதம் போற்றி! 

Wednesday, March 14, 2012

காயத்ரி சாதனைக் குறிப்புகள் - 01

காயத்ரி மந்திரமானது ரிஷிகளின் மூல மந்திரமாக இருந்து வருகிறது, அதன் அமைப்பு இரு வகைகளில் பயன் படுகிறது, ஒன்று அர்த்தமுள்ள பிரார்த்தனையாக ஆழ்மனதிற்கு ஒரு சுய ஹிப்னாடிச மறை மொழியாக (auto suggesstion) மனதை செம்மைப்படுத்துகிறது, இரண்டாவது அதன் அதிர்வுகள் எல்லா மந்திரங்களது அதிர்வுகளையும் வழங்கி மனிதனில் சூஷ்ம சக்தியினை விழிப்பிற்க கூடியதாக உள்ளது, சாதாரண வைதிகர்கள் பயன்படுத்தும் காயத்ரி முதலாவது வகையினை சார்ந்தது, இரண்டாவது முறை தாந்திரிக அடிப்படையில் தீட்சை மூலம் செயற்படுத்த படுவது. இரண்டாவது முறையில் முறையாக சித்தி பெற்ற குருமுறையாக சாபவிமோசனம் செய்வித்து மந்திர தீட்சை பெறுதல் வேண்டும். இப்படியான தீட்சையினால் பெறப்படும் காயத்ரி மந்திர சித்தியினால் ஒருவன் தனது ஆன்ம பரிணாமத்தினை சாதனையினை பூர்த்தி செய்யும் வழியில் ஞானம் உருவாக்கி அவனை வலி நடாத்தும்.

இத்தகைய அரிய மந்திரத்தின் சக்தி தவறாக பயன்படக்கூடாது என்பதனை கட்டுப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட அமைப்பு பின்னர் அவை வைதிகர்களுக்கு மட்டுமே சொந்தமானது எனும் கருத்தில் அதனுடைய உபயோகம் மட்டுப்படுத்த பட்டது. தார்காலத்தில் அனைவரும் காயத்ரி ஜெபிக்கலாம் என்பது நிறுவப்பட்டுள்ளது, ஆதலால் இவற்றை பற்றி விவாதித்தல் அவசியமற்றது.

காயத்ரி மந்திரத்தின் பொருள்

"எல்லாம் வல்ல பரம்பொருள் எமது அறிவினை ஒளிர செய்து சரியான வழியில் இட்டு செல்லட்டும்"

இந்த பொருள் மிக எளியதும் மனிதனது அனைத்து தேவைகளையும் தீர்ப்பதற்கான அடிப்படை தகுதியை வழங்க்கிவதாகவும் உள்ளது. ஒருவனுடைய அனைத்து பிரச்சனைக்கும் காரணம் அறியாமை, அறியாமையினால் துன்பம் வருகிறது, ஆகவே துன்பத்தினை தீர்பதற்கு அறியாமையினை நீக்குதல் வேண்டும், எந்த பிரச்சனையினையும் எதிர்கொள்ளும் மனநிலையும் தீர்க்கும்  பக்குவமும் அறிவு தெளிவானவர்களுக்கு இலகுவாகும். தினசரி இந்த பொருளினை மனதில் சிந்தித்து காயத்ரி மந்திரத்தினை ஜெபித்து வருபவர்களுக்கு படிப்படியாக புத்தி இறை ஞானத்துடன் தொடர்பு கொள்ளத்தொடங்கும், அவை வலுக்க எந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் தன்மை உண்டாகும்.

இந்த செயல்முறையினை மேலும்  தெளிவாக விளக்குவதானால் ஒருமனிதன் எந்த முடிவுகளையும் எடுக்கும் போதும் அவனுடைய மேல் மனம் ஆழ்மனதினை தொடர்பு கொள்ளும், அந்த வேளையில் ஆழ்மனம் தரும் தகவல்களை வைத்துக்கொண்டு மேல்மனம் அந்த விடயம் தொடர்பாக புத்தியின் துணையுடன் ஆராயும், இதன் படியே ஒருவரும் முடிவுகள் அமையும், இந்த செயல்முறையில் மேல்மனதினை, ஆழ்மனம் செல்வாக்கு செலுத்தும், ஆழ்மனதினை புத்தி செல்வாக்கு செலுத்தும், இவற்றின் தன்மை, தூய்மை, பலம் போன்றவற்றின் தன்மைக்கு அமைய ஒருவருடைய ஆற்றல் செயல் அமைந்திருக்கும். பொதுவாக மேல்மனம் தர்க்க மனம் - ஒருவிடயதினை சரியா, பிழையா என ஆராய்ந்து கொண்டிருப்பது, இவற்றுக்குரிய தகவல்களை எந்த வித ஒழுங்கும் இல்லாமல் வழங்கிக்கொண்டு இருப்பது ஆழ்மனம், இதுதான் சரி , இது பிழை என ஒப்பீடு வழங்குவது புத்தி, ஆக புத்தி சரியாக இருந்தால் மற்றைய இரு பகுதிகளும் சரியாக வேலை செய்யும்.

காயத்ரி மந்திரம் என்பது இந்த பொறிமுறையினை சரி செய்யும் ஒரு உபகரணமே (tool) ஆகும், அதன் பொருள் ஆழ்மனதிற்கும் மேழ்மனதினையும் புத்தியுடன் இணைக்கும் செயலை செய்கிறது, அதன் மந்திர அதிர்வுகள் புத்தியை தெய்வ சக்தியான பரஞானத்துடன்  இணைக்கிறது.  

இதுவே எந்த பிரார்த்தனைக்கும் பொருந்தும் செயல்முறை இரகசியமாகும் - அதாவது எந்த மந்திரதினது அதிர்வு புத்தியை இறை சக்தியுடன் இணைக்கும், அதற்கு பொருள் 
இருப்பின் அது மனம் - புத்திகளை ஒழுங்குபடுத்தும். 

இந்த விளக்கத்தின் மூலம் காயத்ரி மந்திரம் எப்படி செயற்படுகிறது என்பதன் அடிப்படை விளங்கியிருக்கும் என எண்ணுகிறோம். 

ஓம் சத்குரு பாதம் போற்றி! 

Wednesday, March 07, 2012

குருவின் அவசியமும் அநாவசியமும்


உண்மையான குரு அகத்திலுள்ள நான் எனும் ஆன்மாவே, மனிதன் தனது உடலினை பார்த்தறிவதற்கு கண்ணாடி எப்படி உபயோகமாகிறதோ அது போல் எமது உண்மையான சொருபத்தினை அறிவதற்கு தன்னை அறிந்த ஒரு புறக்குரு தேவைப்படுகிறார், அவர் ஒரு கருவி மட்டுமே! இதுதான் உனது உண்மையான சொரூபம் என காட்டிவிட்டபின் அந்த அனுபவத்திலிருந்து எமது உண்மையான ஆன்ம சொருபத்தினை அறிவது நான் ஆகிய எமது அகக்குருவின் வேலை, இந்த படிமுறையில் (குருவை மையமாக கொண்ட எந்த ஆன்மவித்தையிலும் தாந்திரீகத்தில்) தன்னை உணர வைக்கும் செயல்முறையான தீட்சை மட்டுமே குருவால் கொடுக்கப்படுகிறது, அதன் பின் மாணவன் தனது சுய முயற்சியாலும், தேவைப்படி ஆன்மாவினை அறியும் நோக்கத்தில் சலனமுறும் போதும் அவரவர் பக்குவத்திற்கமைய அகக்குருவும், புறக்குருவும் வழிகாட்டுகின்றனர். 

இந்திய ஆன்ம மரபில் பொதுவாக சித்த குருக்களும், தாந்திரீக குருக்களும் மாணவன் பக்குவமடைந்த பின் தம்முடைய பாதையினை சுயமாக தேர்ந்தெடுத்து தமது சாதனையினை தொடர்வதற்கு அனுமதிக்கின்றனர். சமூக அலகில் அது நிறுவனமயப்படுத்தப்படும் போதும், ஞானத்தால், சாதனையால் பெறும் சக்திகளை, சித்திகளை தமது அகங்காரத்தினால் துஷ்பிரயோகம் செய்ததாலும், அவற்றை கட்டுப்படுத்தும் ஒரு நிறுவனங்களாக மடங்களும், பீடங்களும் உருவாகும் போதுதான் நாம் விவாதிக்கும் குரு சிஷ்ய சேவை, பணம், என ஆன்ம ஞானத்திற்கு உபரியான மற்றைய விடயங்கள் வருகின்றன. 

இன்னொரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது உலகில் பலவிதமக்கள் தமது மன உருவகங்களுக்கு ஒவ்வொரு விடயங்களிலும் திருப்தி உறுகின்றனர். உணவைப் போல், சினிமாவைப்போல், பொழுதுபோக்குபோல் மனதின் அடிமையான மனிதனிற்கும் ஆன்மீகமும் பலவித சுவைகளில் தேவைப்படுகிறது. இவற்றை திருப்திப்படுத்த முனையும் குரு உண்மையான ஞானத்தினை கொடுப்பதில்லை. அல்லது நோக்கம வழிமாறுகிறது, இந்தப் போராட்டத்திற்கு மத்தியில் சிக்கி தமது மனநிம்மதியினையும் பணத்தினையும் இழந்து பின்பும் மனப்போராட்டத்தில் சிக்கி இந்த மார்க்கமே பொய் என்ற மனவிரக்தியில் பலர் புலம்புவதை நாம் காண்கிறோம். 

ஆகவே ஆனம பாதையில் செல்ல விரும்புபவர்கள் குருவின் அவசியத்தினையும் அநாவசியத்தினையும் புரிந்திருப்பது அவசியம்!இல்லாவிடில் வீண் மனக்குழப்பம்தான் எஞ்சும்! 

Monday, February 27, 2012

ஆன்மீகமும் மதங்களும்


இன்றையகாலகட்டத்தில் மதங்கள் என்பன ஆன்மீகத்துடன் கலக்கபட்டு பெரும் குழப்பத்தில் மக்களை ஆழ்த்தி வைத்திருக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை.இந்த சிறுபதிவில் மதம், ஆன்மீகம் என்பவற்றுக்கிடையிலான வேற்றுமைகள் எவை என்பது பற்றிப் பார்ப்போம். மதம் அல்லது சமயம் என்படுவது இரு கூறுகள் உடையதாகவே காணப்படுகிறது. 
  • ஒன்று உண்மையான ஆன்மீகம் 
  • மற்றது சமயம் என்ற பொதுக்கட்டமைப்பு. 

உண்மையான ஆன்மீகம் என்பது மனிதனை தான் யார் என்பதனை அறிந்து தனக்கு மேலுள்ள ஒரு சக்தியுடன் ஒன்ற செய்யும் தனிமனித செயற்பாடு. இந்த செயற்பாடுகளுக்குள் அடங்கும் விடயங்கள் மெதுவாக குழுமக்கட்டமைப்பிற்குள் வரும் போது சமயம் தோற்றமாகிறது. எப்படியென்றால் ஒருவன் தான் அனுபவித்த இன்பத்தினை, உணர்வினை பகிரங்க படுத்த முனையும் போது அது அவரை சூழ உள்ள பலரிற்கு வியாக்கியானப்படுத்தப்படுகிறது. பின்னர் அதனை ஒழுங்காக நடைமுறைப்படுத்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட குழு உருவாகிறது, அவர்களே அதற்கு அதிகாரமுடையவர்களாகின்றனர், பின்னர் அவர் மட்டுமே அதிகாரம் உடையவர்களாகின்றனர், இது ஒரு அதிகார அலகாக, அரசியல் அலகாக தோற்றம் பெறுகிறது. இந்த மாயையில் சமூகம் சிக்கி உண்மை ஆன்மீகத்தினை சமூகம் மறக்கின்றது. 

இதுவே எந்தவொரு மதத்தினதும், ஆசிரமங்களதும், மடங்களது வரலாறாக இருக்கிறது, கிருஸ்தவம், இஸ்லாம், இந்து மதம் உட்பட எல்லாம் இப்படி கலப்படமடைந்த சரக்காகவே இருக்கிறது. உண்மையான வழிமுறை அதை உணர்ந்து உரைத்த முதல் மனிதனுடன் அற்றுப்போகிறது, யேசுவுடன், நபிகளுடன், கிருஷ்ணருடன், ரிஷிகளுடன், சித்தர்களுடன் அவை அற்றுப்போகின்றன. 

அதுபோல் ஆன்ம உயர்விற்கு தனிமனித சாதனை மட்டுமே சிறந்த வழி, மற்றைய எந்த கூட்டமும், ஆசிரமும் ஒரு வகை களியாட்டமாகவே அமையும் (அதுவும் மன மகிழ்ச்சியிற்கு தேவையான ஒன்றுதானே!), அது தவிர ஆன்ம விழிப்பிற்கு உதவாது. 

Sunday, February 26, 2012

சித்த வித்யா பாடங்கள் 13 (அ): எண்ண‌ங்க‌ளின் இய‌க்க‌விய‌ல் - எண்ணங்களின் அடிப்படை

சதாரண மனம் உருவாக்கும் எண்ணம் ஒளியைவிட வேகம் குறைந்தது, பலமான மனம் உருவாக்கும் எண்ணங்கள் ஒளீயை விட வேகமானது. இதனாலேயே ஒளியினை தியானிப்பது யோகத்தின் தியானங்களில் உள்ள ஒரு அமிசமாகும். ஒளியினை தியானிக்கும் மனம் ஒளியளவு வேகமுடையதாக பரிவுற்று எண்ணங்க்களை உருவாக்க கூடியது. இது மந்திர சக்தியுடன் கலக்கும் போது அதைவிட பலமடங்கு சக்தியுடையதாகிறது. 

உருவாக்கப்படும் எண்ணங்கள் யாவும் ஆகாயத்தில் பதியப்படுகிறது, எந்த எண்ணமும் அழிவதில்லை, அதன் வலிமைக்கு ஏற்றவாறு செயல் நிலைக்கு வருகிறது. அதனை வலிமைப்படுத்தும் செயல் மனித உடலில் உள்ள மனிதர்களால் தீர்மானிக்கப்படுகிறது, எப்படியெனில் அதனை மீண்டும் மீண்டும் சிந்தித்து அதற்கு உரமூட்டுவதால் நடைபெறும். உதாரணமாக 2012 இல் உலகம் அழியும் என எண்ணுபவர்களும் உள்ளனர், இல்லையென்பவர்களும் உள்ளனர், இவற்றில் எந்த எண்ணத்திற்கு வலிமை கூடுகிறதே அது நடைபெறும், இதுவே எமது நாளாந்த வாழ்விலிருந்து பிரபஞ்ச இயக்கம் வரைக்கு உள்ள அடிப்படையாகும். 

ஒவ்வொரு எண்ணமும் குறித்த வலிமையும், அதிர்வும் உடையது. பரிமாற்றக்கூடியது. 

ஒவ்வொரு மனிதனுக்குமுரிய எண்ண உலகம் அவனுக்கே உரியது, அதன்படியே அவன் தனது எண்ணங்களை உருவாக்குகிறான். 

ஒவ்வொரு எண்ணங்களை உருவாக்கும் போதும் மூளை தனது நரம்பு சக்தியினை விரயமாக்குகிறது, அந்த விகிதத்திற்கேற்ப அவனுடைய ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது, அதிகமாக சிந்திப்பதனால் உருவாகும் இழப்பினை ஈடு செய்யும் வகையில் உணவும் ஓய்வும் இல்லாதபோது மனம் பாதிக்கப்ப்டுகிறது. 

உலகில் அனைவரும் உருவாக்கு எண்ணங்க்களும் ஒன்றுடன் ஒன்று தக்கமுற்று ஒரு சிக்கலான வலையினை உருவாக்குகிறது, அனேகமாக நாம் எண்ணும் எண்ணங்க்களில் 80% அதிகமானவை எம்மால் சுயமாக உருவாக்கப்படாதவை, எங்கோ உருவாக்கப்பட்டு எமது மனதால் ஈர்க்கப்பட்டு எண்ணப்படுபவை, இவை தீயதாக இருக்கும் போது பாதிப்பும், நல்லதாக இருக்கும் போது நன்மையும் ஏற்படும். 

சுருக்கமாக எண்ணத்தின் இயக்கவியலை விளங்கிக்கொள்ளவேண்டுமானால் ரேடியோ அல்லது அலைபேசி வலையமைப்புதான் (மொபைல் நெட்வேர்க்தான்) உதாரணம். 
  • தவல் அட்டை (சிம் கார்ட்) - ஒருவர் தன்னுள்கொண்டிருக்கும் இயல்பு (நல்லது, கெட்டது, தெய்வீகம் போன்ற அகக் காரணிகள், எந்த எண்ணங்க்களையும் உண்மையில் வெளியில் இருந்து சிம் கார்ட் வாங்குவது போல் நாம் தான் வாங்கி செருகிக்கொள்கிறோம்)
  • போன் (அலைபேசி) - உடல்
  • அலை பெருக்கி கோபுரங்கள் - மூளை, எண்ணங்களை ஆகாயத்தில் பரப்புவது
  • கட்டுப்பாட்டு நிலையம் - ஆகாய மனம் எனும் பிரபஞ்ச மனம்

அடுத்த பதிவில் எண்ணத்தின் இயக்கவியல் பற்றி பார்ப்போம்.

Saturday, February 25, 2012

யோக சாதனையின் நோக்கம், தெளிவு, பாதை


இந்த கட்டுரையில் யோக சாதனையின் நோக்கம், தெளிவு, பாதை என்பது பற்றி நாம் எமது சாதனையிலும், அனுபவத்திலும், தெளிவிலும் கண்டவாறு விளக்குவதே நோக்கம். இந்த கட்டுரையின் முடிவில் நீங்கள் யோகம் ஏன் பயிலவேண்டும்? ஏப்படி பயிலவேண்டும்? அதற்கு நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை அறிவு என்ன என்பது பற்றி ஒரு தெளிவும் புரிந்துணர்வும் ஏற்படும் என்று நம்புகிறோம்.

இன்று யோக சாதனை என்றாலோ, யோகா பழகுகிறேன் என்றாலோ ஆசனம் செய்வதையே பெரும்பாலும் குறிக்கிறார்கள், ஒரு சிலர் பிராணாயாம பயிற்சியினையும் சேர்த்து யோகா எனப் பொருள் கொள்கிறார்கள். அதாவது ஆசனம் செய்வதில் தொடங்கி, பிராணாயாம பயிற்சியுடன் குண்டலினி தியானம் வரைக்கும் செய்து வருகிறர்கள், இந்த நோக்கம் தான் என்ன? ஏன் இவற்றை செய்ய வேண்டும்? இப்படி செய்வதுதான் யோகமா?

பலரும் நினைப்பதனைப்போல் ஆசனம், பிராணாயமம் தொடங்கித்தான் யோக சாதனை செய்வதானால் இராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி போன்றோர் அவ்வாறு செய்யவில்லையே?

பலர் யோக சாதனை செய்யத்தொடங்கி ஒரு சில படிகளுடன் மேலே செல்லாது காலம் பூராகவும் ஆசனப்பயிற்சியினையும் , பிராணாயாமத்தினையும் செய்தவண்ணம் சிறந்த உடல் ஆரோக்கியத்தினை பெற்றிருப்பர், அடுத்த படி என்னவென்று தெரியாமல் இருப்பர்.

இந்த கட்டுரை இப்படி தனிப்பட உடல் ஆரோக்கியத்தினை மட்டும் கருத்தில் கொண்டு ஆசனம் பிராணாயாமம் செய்பவர்களுக்கு எழுதப்படவில்லை, அதையும் தாண்டி யோகப்பாதையில் செல்ல விரும்புபவர்களுக்காகவே எழுதுகிறோம் என்பதனை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

எப்போதும் ஒருகாரியத்தினை செய்வதற்கு முன் கீழ்வரும் மூன்று கேள்விகளை கேட்டபின்பே செய்யத்தொடங்க வேண்டும் என்பது எமது வாழ்க்கையில் பொதுவாக கொள்ளப்படவேண்டிய விதி!
  1.  இதை நான் ஏன்  செய்கிறேன்?
  2.   இதன் விளைவுகள் என்ன?
  3.  இதில் நான் வெற்றியடைவேனா?  

இந்தக்கேள்விகளுக்கு திருப்தியான பதில் கிடைத்த பின்பே எந்தக்காரியத்தினையும் செய்யவேண்டும், அதுபோல யோக சாதனை செய்ய விரும்புபவர்களும் இந்த கேள்விகளை தமது யோக சாதனை எதற்காக செய்கிறோம் என்பதனை இக்கேள்விகளை கேட்டு அதற்குரிய திருப்தியான பதிலினை அடைந்த பின்னரே அவற்றினை செய்ய தொடங்க வேண்டும்.

இதை நான் ஏன் செய்கிறேன்? என்பதற்கான பதில் பலவகையில் இருக்கலாம், இது நீங்கள் எந்த நோக்கத்திற்காக யோகம் பயில்கிறீர்கள் என்பதனை தெளிவு படுத்தும், அந்த நோக்கங்களை கீழ்வருமாறு பாகுபடுத்தலாம்;
  1. சாதாரண உலக வாழ்க்கையில் நலமாக வாழ்வதற்குரிய அடிப்படையினை பெறுவதற்கு: "நண்பன் கூறினார்" "இவற்றை பழகினால் உடலாரோக்கியம் வரும், மன ஒருமை அதிகரிக்கும்" "வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கலாம்" என்பன காரணமாக இருக்கலாம், இவையே பெரும்பாலான காரணங்கள், இன்றைய உலகில் நாளாந்த வாழ்க்கை உடலிற்கும் மனதிற்கும் சுமை மிகுந்ததாகி விட்டது அதற்கு ஒரு நிவாரணியாக "யோகா" பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் யோகம் பழகுபவர்களே பெரும்பாலானவர்கள்
  2. அற்புத சித்திகளை பெறுவதற்கு: அடுத்தவகையினர் அற்புத, அதீத சக்திகளை விரும்பி யோகம் பயிலவந்திருப்பவர்கள், அவர்களை பொறுத்தவகையில் யோகம் பயில்வதால் அற்புத சித்திகள் அடையலாம் என்பது நோக்கமாக இருக்கும்
  3. இறைவனை அடைவதற்கு: இவர்கள் இறைவனை அடைவதற்குரிய வழிமுறையாக யோகத்தினை தேர்ந்தெடுத்தவர்கள்,


சரி இந்த மூன்று வகையினரிலும் யார் சரியான நோக்கம் உடையவர்கள்? அனைவரும் சரியான நோக்கம் உடையவர்களே, அவரவர் இருக்கும் நிலைக்கு ஏற்றவாறு அனைவரும் சரியானவர்களே!

அப்படியானால் யோகம் பயில்வதன் இறுதி நோக்கம்தான் என்ன? இதனைக் கூறுவதற்கு முன்னர் யோக சாதனையினை தொடங்குவதற்கான முன்னேற்பாடு என்ன என்பது பற்றி பார்ப்போம்; இது மூன்று படிமுறைகள் உடையது;
  1.  முதலில் நாம் யார் என்பதனை அறிதல் வேண்டும், இதனை ஒருவரியில் கூறுவதானால் "தன்னையறிதல்", அதாவது நாம் யார் என்பதனை பகுத்து அறிய   வேண்டும்,
  2. பின்னர் நாம் யார் என்று அறிந்த எமது பகுதிகளை சுத்தம் செய்யவேண்டும்.
  3. எமக்கு மேலிருக்கும், எம்மைவிட வலுவான சக்தியான தலைவனை அறியவேண்டும்.
இந்த முன்று படிமுறைகளையும் உள்ளடக்கியதே முழுமையான யோக சாதனை, எந்த யோக சாதனை இந்த மூன்றையும் உள்ளடக்கியிருக்கிறதோ அதுவே முழுமையான யோகப்பயிற்சியாகும். இப்படியான பயிற்சியில் நாம் மேலே கூறிய பொதுவான யோகம் பழகுவதற்கான நோக்கங்கள் அனைத்தும் அடங்க்கிவிடும்.

இனி இந்த மூன்று படிமுறைகளது உள்ளடங்கங்களைப்பற்றியும் சுருக்கமாக பார்ப்போம்;

தன்னையறிதல்:
பொதுவாக நாம் யார் என எம்மையே கேட்டால் என்ன பதில் வரும்; எமது பெயரை சொல்வோம்; அல்லது இன்னாருடைய மகன்/மகள் என்போம், எமது பதவி பட்டங்களை சொல்வோம், ஆனால் அவையெல்லாம் பௌதீகம் சார்ந்தவை, எமது பேச்சிலேயே நாமும் அவையும் வேறு என்பதனை அறிந்திருக்கிறோம், எனது பெயர் சந்திரன் என்றால் நான் வேறு, எனக்கு இட்ட பெயர் சந்திரன் என்றுதானே கூறுகிறோம்? எனது என்ற வார்த்தையினை பிரயோகிக்கும் போதே நான் வேறு, அதுவேறு என்பதுதானே பொருளாகிறது. அப்படியானால் நாம் யார் என்பதற்கு எமது சித்தர்களும், முனிவர்களும் யோகிகளும் என்ன பதில் கூறுகின்றனர்? நான் என்பது ஆன்மா! அப்படியானால் எனக்கு உடல் இருக்கிறது, எண்ணுவதற்கு மனம் இருக்கிறது, காரியங்களை செய்வதற்குரிய ஆற்றலான பிராணன் இருக்கிறது, எதையும் பகுத்தறியும் புத்தி இருக்கிறது இவையெல்லாம் என்ன என்ற கேள்வி எழுகிறதல்லவா? ஆம் இதற்கான பதில் அவை ஆன்மாவினை சூழவுள்ள கவசங்கள். இவற்றையே யோக மொழியில் பஞ்ச கோசங்கள் என்போம். நான் ஆகிய ஆன்மா பஞ்சகோசங்க்களால் சூழப்பட்டுள்ளது. ஆக தன்னையறிவதற்கு என்ன செய்யவேண்டும்? எனவே யோகசாதனையில் சித்தியுற எண்ணுபவர்கள் அனைவரும் பஞ்சகோசங்கள் பற்றியும், அவற்றின் அமைப்பு செயல்முறை பற்றியும் தெளிவாக அறிந்திருத்தல் அவசியமாகும்.

பஞ்ச கோசங்கள் எவை?
  • அன்னமய கோசம்: எமது ஸ்தூல உடலும் மற்றைய உடல்களின் இணைப்பும் சேர்ந்த பகுதி, இதனை வசப்படுத்தும் சுத்தி செய்யும் முறைதான் ஆசனப்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, உபவாசம் எனபன,
  • பிராணமயகோசம்: இதுவே அனைத்தையும் இணைக்கும் உயிர் சக்தி, இது மூச்சின் மூலம் பிரதானமாக கட்டுப்படுத்தப்படுகிறது,  பிராணன் என்பது மூச்சு அல்ல, உடல், மனம், புத்தியாலும் கட்டுப்படுத்தக் கூடியது.
  • மனோமயகோசம்: எண்ணங்களையும், மனம், சித்தம் என்பவற்றை ஆக்குவது,
  • விஞ்ஞானமய கோசம்: புத்தி அதாவது பொருட்களை, எண்ணங்களை பகுத்தறிவது, மற்றைய கோசங்களை கட்டுப்படுத்தும் வலிமை உடையது. 
  • ஆனந்தமயகோசம்: ஆன்மாவினை சூழவுள்ள உறை, இந்த கோசத்தில்தான் மனிதனுடைய ஆத்ம சக்தி உறைந்துள்ளது, இந்த ஆத்ம சக்தியே புத்தியின் மூலம் செலுத்தபட்டு மனதினூடாக எண்ணமாகி பின்னர் பௌதீக நிலையில் செயல் நிலைக்கு வரும். இது அனைவருக்கும் பொதுவான செயல்முறை, அந்தந்த கோசங்களின் வலிமையிலும் சுத்தியிலுமே அவர்களின் வேற்றுமை தங்கியுள்ளது.

அதாவது எந்தவிதமான செயல்முறைக்கும் ஆத்மசக்தியின் தூண்டுதல் இருக்கவேண்டும், இது எப்படி செயற்படுகிறது எனப்பார்ப்போம், பொதுவாக மக்கள் எந்த செயல் முறையினையும் உடலினூடாகவும் பிராணனினூடகவுமே செய்கின்றனர், இது எமது ஆற்றலில் மிககுறைந்த அளவினை பயன்படுத்தும் செயல்முறை, உதாரணமாக உடலால் உழைக்கும் வர்க்கத்தினர் இதனை மட்டுமே பயன்படுத்துகின்றனர், பின்னர் ஆற்றல் வலுப்படும் போது உடல் உழைப்பினைகுறைத்து மனதாலும் புத்தியாலும் உழைக்கப்பழகுகின்றனர், ஆத்மசக்தி விழிப்படைந்து வலிமையடைந்தவர்கள் தமது இச்சாசக்தியினாலேயே தமது காரியத்தினை சாதிக்கவல்லவராகின்றனர். இதனை சாதிப்பது எப்படி என்பதனையே யோகம் போதிக்கும்,

பஞ்ச கோசங்களை சுத்தி செய்தலும் வலிமைப்படுத்தலும்:
பஞ்ச கோசங்களே எமது அமைப்பு என்பதும் அவை ஆன்மாவாகிய எம்மை சூழ்ந்த கவசங்கள் என்பதனையும் தற்போது புரிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேண், அனைத்து செயல்களுக்கு ஆனந்தமயகோசத்தின் அசைவு சலனம் அவசியம் என்பதனைப் பார்த்தோம், அதேவேளை அந்த அளவும் மற்றைய கோசங்களின் வலிமையும் அனைவருக்கும் ஒரேயளவில் இருப்பதில்லை, அவரவர் வாழ்க்கைமுறை, சூழல், பிறப்பு என்பவற்றிற்கேற்றவாறு வேறுபடும். ஆதலால் அவற்றை சுத்தி செய்தல் வேண்டும், இந்தபடியினை பதஞ்சலி மகரிஷி அட்டாங்கயோகத்தின் முதல் ஐந்து படிகளான இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம் என்பவற்றில் விளக்கியுள்ளார், இதில் பிராணாயாமம் சுத்திமுறையிலும் வரும், வலிமைப்படுத்தும் பகுதியிலும் வரும், ஆரம்ப நிலை பிராணாயாமங்களான நாடி சுத்தி போன்றவை சுத்தி முறைகள் கும்பக பிராணாயாமங்கள் வலிமைப்படுத்தும் செயல் முறைகள். இனி பதஞ்சலி மகரிஷியின் அட்டாங்க யோகமுறையில் எந்த படிமுறைகள் பஞ்சகோச சுத்தியுடன் தொடர்புடையது, எவை பஞ்சகோச வலிமைப்படுத்தும் செயன்முறையுடன் தொடர்புடையவை என்பதைப்பற்றி கீழ்வரும் அட்டவணையில் பார்ப்போம்;

அட்டாங்க யோக படிமுறை
சுத்தி

வலிமைப்படுத்தல்
இயமம்
மனோமய கோச சுத்தி 
விஞ்ஞானமய கோச வலிமைப்படுதல்
நியமம்
விஞ்ஞானமய கோச சுத்தி
மனோமய கோச வலிமைப்படுதல்
ஆசனம்

பிராணமய கோச சுத்தி (நாடிகள், சக்கரங்களை சுத்தி செய்யும்)
அன்னமய கோச சுத்தி
பிராணாயாம

அன்னமயகோச சுத்தி, பிராணமயகோச சுத்தி,
அன்னமய, பிராணமயகோச வலிமை
பிரத்தியாகாரம்
மனோமய கோச சுத்தி,
விஞ்ஞானமய கோச வலிமை
தாரணை
விஞ்ஞானமயகோச சுத்தி,
மனோமயகோச வலிமை
தியானம்
ஆனந்தமயகோச சுத்தி,
விஞ்ஞானமய கோச வலைமை
சமாதி

இது அனைத்து கோசங்களும் சுத்தியாகி, வலிமை அடைந்த நிலை, பரிபூரணமாக ஆனந்தமய கோச நிலை விழிப்புற்ற நிலை


முடிவுரை:
இறுதியாக இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட கேள்வியான் யோகம் பழகுவதற்கான உண்மையான நோக்கம் எதுவெனக்கூறி முடிக்கலாம் என எண்ணுகிறோம். யோகம் என்பது எம்மை நாம் அறிந்து, எமது பலகீனங்களை அகற்றி சுத்தி செய்து வலிமைப்படுத்தி ஆதியாகிய பராசக்தியுடன் ஒன்ற செய்வதான செயல்முறையே ஆகும். அதனை முழுமையாக புரிந்துகொள்வதற்கு அதன் பகுதிகள் அனைத்தையும் அறிதல் வேண்டும், அவற்றை பற்றிய அறிமுகமாகவே அனைவருக்கும் பரீட்சையமான அட்டாங்க யோக பகுதிகளுடன் ஒப்பிட்டு விளங்கப்படுத்தி இக்கட்டுரையினை முன்வைக்கிறோம். இதனை சாதிக்கும் மற்றைய வழி சக்தி உபாசனை அதுபற்றியும் சுருக்கமாக கூறி நிறைவு செய்கிறோம், அதாவது அட்டாங்க யோகம் உடல், பிராணன், மனம், புத்தியினூடாக ஆன்ம சக்தியினை வலுப்படுத்தி ஆன்மாவினை அறிந்து சக்தியுடன் ஒன்றும் முறையினை விபரிக்கும்.

இதன் எதிர் திசையான முறைதான் சக்தி உபாசனை, அவற்றுள் குறிப்பானவை ஸ்ரீ காயத்ரி உபாசனையும் ஸ்ரீ வித்யா உபாசனையுமாகும். இந்த சாதனையில் ஆத்ம சக்தியின் மூலம் பராசக்தியின் சக்தியினை ஈர்த்து பஞ்சகோசங்களை சுத்தி செய்து, வலிமைப்படுத்தும் முறைகள் உள்ளன. 

Sunday, February 12, 2012

சித்த வித்யா பாடங்கள் 12:மனித காந்த சக்தியினை பிரயோகித்து பயன் பெறும் முறைகள்

சென்ற பதிவுகளில் மனித காந்த சக்தி பற்றிய விளக்கங்களும் அவற்றை வளர்ச்சியுற செய்யும் முறைகள் பற்றியும் கூறியிருந்தோம். இந்த பதிவில் அதனை நாளாந்த வாழ்க்கையில் எப்படி இவை பயன்படுத்த படுகிறது என்பதானியா பார்போம்.

மனித காந்த சக்தி மனிதனது உடலை சூழ முட்டை வடிவில் காணப்படுகிறது. இதனையே ஆரா (Aura) என்பார்கள். இந்த காந்த சக்தி உடலில் இருந்து அதிகம் வெளியாகும் பாகங்கள் கண்கள், கைகள், கால்கள் ஆகும். இதை அடிப்படையாக வைத்தே கண்திருஷ்டி, நட்பிற்கு கை குலுக்குதல், தீமை செய்ய காலடி மண் எடுத்தல் என்பன வழக்காகின. 

இதே அடிப்படையில் பிராண மன ஏகாக்கிர தன்மை பெற்றவர்கள் பழம், நீர், விபூதி போன்றவற்றில் தமக்கு தேவையான காந்த சக்தியினை பதிப்பித்து பயன்படுத்தி வரலாம். 

கண்திருஷ்டி கழித்தல் என்பது எம்மை சூழ உள்ள தீய காந்த சக்தியினை அகற்றும் செயல் முறைதான்.

இதனை செய்வதற்கு மனம் எகாகிரம் அடைந்த நிலையும் பிராண சக்தியும் அவசியம். 

இவற்றை மேலும் விரிவாக அறிந்துகொள்ள கேள்வி பதில் மூலம் தொடரலாம் என எண்ணி இந்த கட்டுரையினை முடிக்கிறோம். 

சத்குரு பாதம் போற்றி! 

Friday, February 03, 2012

சித்த வித்யா பாடங்கள்: 11 மனித காந்தசக்தியினை வளர்ச்சியுறச் செய்யும் பயிற்சிகள்

சென்ற பாடத்தில மனித கந்த சக்தியினை வளர்ச்சியுற செய்யும் அடிப்படைகளை விளக்கினோம், அதனை படித்த சில நண்பர்கள் அவற்றை தெளிவான பயிற்சி முறையுடன் விளக்கினால் நன்றாக இருக்கும் என கூறியிருந்தனர். அவர்களது விருப்பபடி அந்த முறைகளை தொகுத்து தந்துள்ளோம்.

மனித காந்தம் மனம் பிராணன் என்ற இரு பகுதிகளை உடையது. மனம் காந்தத்தின் தன்மையினை (Quality) தீர்மானிக்கும், பிராணன் அதன்  வலிமையினை (Strength) தீர்மானிக்கும். 

இதன் அடிப்படையில் கீழே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், கடவுளை சாராமல் தமது காந்த சக்தியினை வளர்த்துக்கொள்ளவும் ஆன பயிற்சிகளை தருகிறோம்.

முதலாவது பிராணா சக்தியினை வளர்ப்பதற்கான பயிற்சி ;

அடிப்படை 

முதுகுத்தண்டு நேராக இருக்குமாறு நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள், முடியுமானால் பத்மாசனம், சித்தாசனம், சுகாசனத்தில் அமர்ந்து கொள்ளவும்.  இயலாதவர்கள் நேராக நின்று கொண்டும் செய்யலாம். 

கைகளை பக்க வாட்டில் தளர்ச்சியாக பக்கவாட்டில் தொங்க விட்டு மெதுவாக மூச்சினை முழுவதும் வெளியேற்றி விட்டு பின் மூச்சினை உள்ளிழுக்கும் பொது கைகளை மேலுயர்த்தி நன்றாக மூச்சினை எடுத்து பின்னர் மூச்சினை வெளிவிடும் பொது கைகளை பக்கவாட்டில் விடவும். இப்படி ஆரம்பத்தில் மூன்று தடவைகளும் பின்னர் 5  தடவைகளும் செய்து வரவும். 

இப்படி செய்யும் போது மூச்சிழுக்கும் போது நல்ல காந்த சக்தி உங்களுக்குள் வந்து நிரம்புவதாகவும் வெளியேறும் போது உங்கள் உடலில் மனதில் உள்ள தீயவை வெளியேறுவதாக பாவிக்கவும்.

இதனால் உங்கள் காந்த சக்தி அதிகரிக்கும்.

நடு நிலை 

சூரிய நமஸ்காரம் பிராண சக்தியினை அதிகரிக்க செய்யும் ஒரு அரிய செயல்முறையாகும், இதனை தெரிந்த வர்கள் மேற்கூறிய பாவனையுடன் ஒவ்வொரு அசைவின் உடனும் செய்துவருவதால் அதிகரிக்கலாம. 


உயர் நிலை பயிற்சி  

கும்பக பிரணாயமமே அதிகளவு காந்த சக்தியினை பெறுவதற்கான வழி, ஆனால் நேர்முகமாய் பயில் வேண்டியது. 

கடவுள் நம்பிக்கை உள்ள நபர்களிற்கான பயிற்சி 
  1. உங்கள் இஷ்ட தெய்வத்தினை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்,
  2. அத்தெய்வதிற்குரிய சிறிய மந்திரமொன்ரை எடுத்துக்கொள்ளுங்கள் (ஓம் "நமசிவாய, நாராயணய, சரவணபவாய, துர்கையை" நமஹா என்றவாறு அல்லது காயத்ரி மந்திரம், இஸ்லாமிய நண்பர்கள் "பிஸ்மிள்ளஹி  ர்ரகுமநிர்ரஹீம் என ஜெபிக்கலாம் )
  3. பின்னர் குறித்த நேரத்தில் மனதில் உங்களது இஷ்ட தெய்வத்தினை பாவித்த வண்ணம் மந்திரத்தினை உங்களது மூச்சினை மெதுவாக உள்ளிழுக்கும் போது உங்களது இஷ்ட தெய்வத்தினது அருள் காந்த சக்தி சென்று உடல் மனதில் கலப்பதாக பாவித்து வரவும்.
  4. ஓரிரு மாத கால பயிற்சியில் நிச்சயமாய் உங்கள் காந்த சக்தி வளர்ந்திருப்பதை அனுபவமாக உணரலாம்.  
இவற்றை எப்படி பிரயோகிப்பது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

சத்குரு பாதம் போற்றி!

Sunday, January 29, 2012

சித்த வித்யா பாடங்கள் 10 : மனித காந்த சக்திகளை வளர்ச்சியுறச் செய்யும் முறைகளும் அவற்றின் பயன்பாடுகளும்

மனிதன் காந்த சக்தி படைத்தவன் என்பது சித்த வித்யா கோட்பாடுகளில் ஒன்று. அதாவது கந்தம் என்ற சொல்லின் பொருள் இயற்பியல் அர்த்தத்தினை விட சித்த வித்யா அடிப்படையில் பார்த்தால் ஒருவித கதிர்ப்பும் ஈர்ப்பும் உடையவன் என்பதனை விளக்கவே இந்த சொற்பிரயோகம் பிரயோகிக்கப்படுகிறது. 

எமது வாழ்க்கையில் சில சம்பவங்களைப் பார்ப்போம்;
  1. முன்பின் தெரியாத ஒரு சிலரைப் பார்க்கும் பொது சிலர் மீது விருப்பும் வெறுப்பும் வர என்ன காரணம்? 
  2. ஒரு சிலரைப்பார்த்தாலே மனம் கவலைகளை மறந்து மகிழ்வடைய என்ன காரணம்?
  3. ஒரு சிலர் முக அமைப்பில் அழகு அற்றவர்களாக இருந்த போதும அவர்களை பிடிப்பது ஏன்?
  4. சில சாமியார்களிடம் பெற்ற விபூதி தீராத நோய்களை தீர்ப்பது எப்படி?
  5. சிலரது கண்பார்வை பட்டால் காரியம் சரி வராது என்று வழக்கில் கூறுவதன் காரணம் என்ன?
இப்படி பல உதாரணங்களை கூறிக்கொண்டு போகலாம். 

இவற்றின் காரணம் எல்லாம் ஒவ்வொரு மனிதனுடைய காந்த சக்தி கதிர்ப்பில் ஏற்படும் ஒற்றுமை வேற்றுமைகளே. 

எப்படி இந்த காந்த சக்தி உருவாகிறது?
எமது மேல் மனதில் உருவாகும் எண்ண அலைகளும் ஆழ்மன பதிவுகளும், பிராண சக்தியின் அளவுமே ஒருவரது தனிப்பட்ட காந்த சக்தியின் அளவினை தீர்மானிக்கும் காரணிகளாகும். 

மனம் ஒரு எண்ணத்தினை நினைக்கும் பொது எமது உடலை சுற்றி ஒரு காந்தப்புலம் உருவாகின்றது. அது எமது பிராண சக்தியின் அளவிற்கு  ஏற்றவாறு பரவுகின்றது. 

எப்படி உங்களுடைய காந்த சக்தியின் தன்மையினை அளவினை பரிசோதிப்பது?

இரண்டு ஒரே அளவாக பழுத்த எலுமிச்சம் கனிகளை வாங்கி வாருங்கள், ஒரு கனியினை மனதில் பல நாட்களுக்கு கெடாமல் இருக்க வேண்டும் என தொடர்ச்சியாக எண்ணிய படி கைகளுக்குள் (நசுங்கி விடாமல்) 10 நிமிடங்கள்  வைத்திருந்து விட்டு அதிக வெப்பம் இல்லாத இடத்தில் தனித்தனியாக  வைத்து விடுங்கள். பின்னர் ஐந்து நாட்களுக்கு பின் அவை இரண்டையும் எடுத்துப்பார்க்கும் போது எது முதலில் பழுதடைந்துள்ளது என்பதனை வைத்து  உங்கள் காந்த சக்தியின் தன்மையினை சோதித்து கொள்ளலாம். 

அல்லது கீழ்வரும் குறிகளைக்கொண்டும் உங்கள் காந்தத்தின் தன்மையினை அறிந்து கொள்ளலாம். 
  • மற்றவர்களுடன் பழகும் போது அவர்கள் உங்களை விரும்பும் அளவு மதிக்கும் தன்மை
  • கைராசி அளவு
எப்படி எமது காந்த சக்தியினை தூய்மைப்படுத்துவது?

ஆழமான மூச்சும் நல்ல எண்ணங்களும் தான். 

நாம் முன்னர் குறிப்பிட்ட மனச்சுத்தி  பயிற்சியினை  செய்வதன் மூலம் எமது காந்தத்தினை சுத்தி செய்து கொள்ளலாம். 

அடுத்த மிகதுரிதமான வழி காயத்ரி மந்திர ஜெபம் அல்லது இஷ்ட தெய்வத்தின மந்திர ஜெபம் 

எப்படி காந்த சக்தியினை பலப்படுத்துவது ?

மன ஏகாக்கிரம் (தாரணை ) யும் பிராண சக்தி வளர்ச்சியும் 

மனித காந்தத்தினை சுத்தி செய்து பலமடையவும் செய்யும் (two in one method)  மந்திர ஜெபம் ஒன்றே. 

மனித காந்த சக்தியின் பிரயோகங்கள்  எவை?
  • வசியம் முதலான மந்திர பிரயோகங்கள் 
  • ஹிப்னாடிசம் மெஸ்மரிசம் 
  • நோக்கு வர்மம் 
  • தீட்சை 
  • நோய் தீர்த்தல் 
  • கவர்ச்சி பெறல் 
போன்ற அனைத்தும் மனித காந்த செயற்பாடுகளின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன.

இந்த விளக்கங்கள் அடிப்படையினை விளங்குவதற்கு போதுமானது என எண்ணி இத்துடன் முடிக்கிறேன். மேலதிக விளக்கங்கள் தேவையானவர்கள் ஈ மேயிலிற்கோ, பின்னூட்டமாகவோ கேட்கலாம். 


Friday, January 27, 2012

சித்த வித்யா கேள்வி பதில்கள்


அன்பர்களே இந்த பதிவு வாசகர் ஒருவரின் கேள்விகளுக்கான பதில்களை கொண்டிருக்கிறது, இவை அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனக்கருதி இங்கு பதிவிடப்படுகிறது. 

அன்புடைய சுமனன் அவர்களுக்கு ,

வணக்கம. நன் ஒரு Software Engineer. உங்களுடய ப்ளாக் படித்தேன், மிகவும் அருமை. நீங்கள் சொல்லியிருந்த எளிய யோகா பயிற்சி செய்து பார்த்தேன்(சுவாசத்தை கவனிக்கும் பயிற்சி). இப்பயிற்சியினை நான் செய்தபோது நான் பெற்ற அனுபவத்திலிருந்து சில கேள்விகள் கீழே கேட்டு உள்ளேன் தயவு செய்து பதில் கூறவும்.


நீங்கள் கேட்கும் கேள்விகள் இந்த பதிவுகள் தொடர்பானது என்ற அனுமானத்திலேயே பதிலளிக்கப்படுகிறது. 

1 . என் சுவாசம் ஆழமாக இருக்கிறது, ஆனால் பயிற்சி நேரம் முழுவதும் எனது சுவாசம் ஒரே சீராக இல்லை. என் இப்படி ஆகிறது ? நான் தவறாக பயிற்சி செய்கிறேன ?


தங்களுக்கு ஆஸ்மா போன்ற சுவாச நோய்கள் இல்லாத பட்சத்தில் இந்த அறிகுறி உங்கள் எண்ண‌ சலனத்தினை குறிப்பதாகும். அதாவது உங்கள் சுவாசப்பை பூரண ஆரோக்கியத்தில் இருப்பின் சுவாச ஓட்டத்தின் மாறுதல் மனதில் எழும் எண்ண‌ அலைகளினால் மாற்றப்படுகிறது என்பதனை உணருவதற்கு இது ஒரு சிறந்த உதாரணம், ஆகவே உங்களுக்கு எதுவிதமான சுவாச நோயும் இல்லாத பட்சத்தில் இது உங்களுடைய மனம் சலனம் அடைவதால உருவாகும் நிலையாகும், ஆதலால் தொடர்ந்து பயிற்சி செய்வதன் முலம் ஆழாமான சுவாசம் கைவரும். 


எனினும் நீங்கள் கோபம், மகிழ்ச்சி போன்ற எந்த விதமான மன எழுச்சி ஏற்பட்டாலும் உங்களுடைய சுவாசத்தின் அளவு மாறுபடும். இது பற்றி விரிவாக வேறொரு பாடத்தில் விளக்குவோம். எமது பதிவுகளில் தரப்பட்ட இது தொடர்பான மற்றைய பதிவுகளையும் இங்கே பார்க்கவும். 


2 . பயிற்ச்சியின் போது சிலவேளைகளில்(மிக மிக சிலவேளை) மூச்சு வெளியேறிய பின்பு சில விநாடி சுவாசம் கொள்ளாமல் அப்படியே சுவாசிக்காமல் இருக்கிறேன். இது இயல்புதான அல்லது பிழையா ? (எனது சுய முயற்சியால் நான் சுவாசத்தை நிறுத்தவில்லை)


இது மிகவும் சரியான அனுபவம், உண்மையாக பயிற்சிக்கும் போது கும்பகம் எனும் முச்சடங்கும் நிலை தானாக ஏற்படும், ஆதலால் இது பற்றி நீங்கள் பயப்படத்தேவையில்லை. இது சரியான நிலையே ஆனால் உங்கள் முயற்சியினால் மூச்சை அடக்கவில்லை என்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள். இப்படி நடக்குமாக இருந்தால் பயிற்சியின் பின்னர் உங்கள் உடல் மனம் என்பன மிக உற்சாகமாக இருக்கும், நீண்ட நேரம் களைப்பின்றி வேலை செய்யக்கூடிய நிலை ஏற்படும், இவற்றின் மூலம் சரியாக செய்கிறீர்கள் என்பதனை உறுதி செய்து கொள்ளலாம். 


3 . எந்த வேளையில் / நிலையில் இந்த பயிற்சியினை செய்யகூடாது ? எவ்வளவு நேரம் இப்பயிற்சியினை மேற்கொள்ளலாம் ?


காலை சூரிய உதயத்திற்கு அரைமணி நேரம் முன்னராகவும் பின்னராகவும், அதேபோல் கூறிய அஸ்தமனத்தின் முன்னரும் பின்னரும் அரைமணி நேரத்திற்குள்ளே செய்வது மிக மிக விசேடமானது, 


இப்படி நேரம் கிடைக்காத மட்டில் உணவு அருந்தி நான்கு மணி நேரத்தின் பின் செய்யலாம். இதெல்லாம் விட முக்கியமானது முதலில் உங்கள் மனம் விரும்பும் நேரத்தில் செய்யப்பழக்கி பின்னர் இவ்வாறான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்திக்கொள்வது, இயல்பாக மூச்சினை அவதானிப்பதற்கு பொதுவாக எந்த விதிகளும் இல்லை, 


உங்களால் முடிந்த வரை மனம் உடல் விரும்பும் வரை செய்யுங்கள். 


4 . இபயிர்ச்சியினை மேற்கொள்ளும்போது எனது வலது காலில் சூகை பிடிக்கிறது(சிறுது நேரம் உள்டல் பக்கத்தை அசைக்காமல் இருந்ததால் ரத்த ஓட்டம் நின்றுவிடுமே ) இது எதுவும் உடலுக்கு உபாதை உண்டாக்காது அல்லவே ?


பயிற்சியினை உட்கார்ந்து செய்கிறீர்கள் அல்லவா, பயிற்சி முடிந்து எழுந்தவுடன் சிறிது உடலினை உங்களால் இயன்றவரை அசைத்து செய்யமுடிந்த அசைவுகளை செய்யவும். உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் இப்படியான பிரச்சனை வராது, உங்கள் வயது, உடலாரோக்கியத்தினை கருத்தில் கொள்ளுங்கள். தாங்கள் ஆரோக்கியமானவர் என்ற அனுமானத்தில் தான் இந்த பதில்கள் என்பதனை கருத்தில் கொள்ளுங்கள். தாங்கள் இருதய நோயாளியாகவோ வேறு நோய்கள் உள்ளவராக இருந்தால் உங்களுடைய மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கவும். 

----------------------------------------------------------------------------------------------------------------

காயத்திரி மந்திரத்தை பற்றி கூறியிருந்தீர்கள் ..காயத்திரி மந்திரத்தை எப்போது , எதனை முறை கூறவேண்டும்?
இதுவும் மேலே கூறப்பட்ட படி காலை சூரிய உதயத்திற்கு அரைமணி நேரம் முன்னராகவும் பின்னராகவும், அதேபோல் கூறிய அஸ்தமனத்தின் முன்னரும் பின்னரும் அரைமணி நேரத்திற்குள்ளே செய்வது மிக மிக விசேடமானது, 

ஆரம்பத்தில் 9 இலிருந்து 27 , 54 , 108 , வரை கூறலாம், அதன் அர்த்தத்தினை மனதில் நினைத்தபடி வாயால் உச்சரித்து கூறலாம், பயிற்சி அடைந்த பின்னர் மனதில் அர்த்தத்தினை நினைத்தவண்ணம் மனிதிலேயே கூறும் நிலையினை அடையலாம்.

----------------------------------------------------------------------------------------------------------------
ஆக்ஞா சக்கரத்தை விழுப்பிக்க என்ன செய்யவேண்டும் ?


மூலாதாரம் விழிப்படையாமல் ஆக்ஞ்சா விழிப்படைந்து என்ன பயன், பைத்தியம்தான் பிடிக்கும் நீங்கள் குறிப்பாக எதனையும் வலிந்து விழிப்படைய வைக்க முயல வேண்டாம். பொதுவாக நீங்கள் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு காரியம் செய்வதற்கும் குறித்த சக்கரங்கள் சிறிய அளவில் விழிப்படைந்தால் மட்டுமே எதனையும் செய்ய முடியும், உங்களது பரிணாம உயர்வுக்கும் பிராண சக்தியினா அளவிலும் ஒவ்வொரு சக்கரங்களின் படிப்படியாக விழிப்படையும். 


மிக எளிய சுருக்கமான பாதுகாப்பான வழி நாம் குறிப்பிட்ட சுவாச பயிற்சியும் காயத்ரி மந்திர ஜெபமுமே! எப்படியாயினும் குரு தீட்சையுடன் உங்கள் சித்த சம்காரங்கள் (ஆழ் மன பதிவுகள் ) சுத்தம் செய்யாமல் இந்த முயற்சியில் இறங்கினால தங்கள் இயல்பு மன உடல் நிலைகள் பாதிப்படையும் என்பதனை கருத்தில் கொள்ளுங்கள். 


அடுத்து இந்தக்கேள்வியினை உங்களிடமே இப்படிக் கேட்டுப்பாருங்கள் " எனக்கு ஆக்ஞ்ச சக்கரம் விழிப்படைந்தால் என்ன பலன் என்று? " ஒரு முறை நான் எனது குரு நாதரை வற்புறுத்தி இதனை கற்றுத்தரும் படி கேட்க அவர் சொல்லித்தார், அப்போது எனது வயது அனுபவம் என்பன மிகக்குறைய, அவற்றை செய்தபின்னர் முன்னால் வந்து நிற்பவர்கள் அனைவரது எண்ணங்களும் தெரியத்தொடங்கியது, இப்படி என்னை சுற்றி நடக்கும் எல்லா விடயங்களும் வித்தியாசமாக விளங்கத்தொடங்கியது, நான் மிகவும் மன குழப்பம் அடைந்து விட்டேன், அதனால் எந்த விதமான பலனும் கிடைக்கவில்லை, இப்படியான நிலையில் எனக்கு திரும்பவும் குரு நாதரிடம் சென்று கேட்க பயமாக இருந்தது, மாலை வேளைகளில் சிறிது தூரம் நடப்பார், அந்த வேளைகளில் அவருடன் நானும் சேர்ந்து நடப்பேன், அவ்வாறு நடக்கும் போது ஒருநாள் அவராகவே "தம்பி பக்குவம் இல்லாமல் ஆஞ்சா சக்கரம் விழ்ப்படைந்தால் இப்படித்தான் இருக்கும்" என சிரித்துக் கொண்டு கூறினார். அதன் பின் எனக்கு அப்படியான தோற்றங்கள், எண்ணங்களை அறியும் தன்மை அற்றுப்போனது. 


ஆகவே நண்பரே உங்களது ஆர்வம் நியாயமானது, என்றாலும் ஆராய்ந்து சரியாக குரு முறையாக செய்ய வேண்டிய விடயம் என்பதனை மனதில் ஆழமாக கொள்ளுங்கள் 

---------------------------------------------------------------------------------------------------------------
நண்பரே நான் ஆன்மிக வழித்தடங்களுக்கு புதியவன். எனக்கு எப்படி, யாரை குருவாக தேர்ந்து எடுப்பது என்று தெரியவில்லை . எனது ஆன்மிக பயணத்தை தொடர நீங்கள் எனக்கு உதவ வேண்டும்?


கவலை வேண்டாம் நண்பரே, ஆன்மிகம் லௌகிகம் என்ற பாகுபாடெல்லாம் வேண்டாம். கிடைத்த வாழ்வை நேர்மையாக குருவை பணிந்து இன்பமாக அனுபவியுங்கள், ஆதிகுரு அகஸ்தியரை அல்லது உங்கள் மனம் விரும்பும் குருவை மனதில் பிரார்த்தித்து வாருங்கள், வழிகாட்டுவார்கள். 


எப்படி அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது என்பதனை எமது பதிவுகளில் கூறியுள்ளோம், படித்து பயிற்சி செய்யுங்கள். 


சத்குரு பாதம் போற்றி,