1) தந்திராச்சாரம் என்றால் தந்திர சாஸ்திரத்தை எமது வாழ்வில் கடைப்பிடிக்கும் வாழ்வியல் முறை எனப்படும். இது ஒவ்வொரு ஆன்மாவின் பரிணாமத்திற்கு தக்க ஏழு அல்லது ஒன்பது படிகள் இருப்பதாக மஹா நிர்வாண தந்திரம் கூறுகிறது.
2) வேதாச்சாரம் - இது கிரியைகள் மூலம் ஒரு சாதகன் தனது வாழ்வில் ஒரு சீரான ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்கும் வழி. இது புறச்சுத்தம், ஒழுங்கு, வர்ணம் இவற்றை முதன்மையாகக் கொண்டு ஆன்மா தன்னை ஒழுக்கத்திற்கு உட்படுத்திக்கொள்வது. அனைத்து ஆன்மாக்களும் வேதாச்சாரம் கடைப்பிடிப்பதன் மூலம் பரிணாமத்தில் தெய்வீகத்தன்மையை அடைவதற்குரிய அடிப்படைத் தகுதியை அடைகிறது. இதுவே அத்திவாரம். இது சரியான கடமைகளைச் செய்து தர்மத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஆன்மா ப்ரவிருத்தி மார்க்கமாக நன்மைகளை அடையும் வழியைக் காட்டுகிறது.
3) வைஷ்ணவாச்சாரம் அல்லது பக்தி மார்க்கம்: ஒழுங்கினை, ஒழுக்கத்தினை வேதாச்சாரம் மூலம் பெற்றாலும் உணர்ச்சிகளைத் தூய்மைப்படுத்தி இறை ஆற்றலுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் உணர்ச்சித் தூய்மையை இதன் மூலம் ஆன்மா இரண்டாவது நிலையில் பெறுகிறது. உணர்ச்சித் தூய்மை பெறாமல் எவரும் ஆன்மீகத்தில், சாதனையில் முன்னேற முடியாது.
3) சைவாச்சாரம் அல்லது ஞான மார்க்கம்: சைவம் அறிவே சிவம் என்று சொல்கிறது. வைஷ்ணவாச்சாரம் அல்லது பக்தி மார்க்கத்தில் இரஜோ, தமோ குணத்தாக்கத்தால் பக்தி தவறான உணர்ச்சி வசப்படும் ஒரு பலவீனமாக அறிவுத்தெளிவின்மையால் ஏற்படலாம். இதனால் சைவாச்சாரம் அறிவினைப் பலப்படுத்தும் ஞானத்தினை முன்னிறுத்துகிறது. சைவசித்தாந்தம் ஞான மார்க்கம்.
இவை மூன்றையும் சுவாமி விவேகானந்தம் நவீன உலகிற்கு ஏற்ற வகையில் வேதாச்சாரத்தை கர்ம யோகமாகவும், வைஷ்ணவாச்சாரத்தை பக்தி யோகமாகவும், சைவாச்சாரத்தை ஞான யோகமாகவும் விளக்கியுள்ளார்.
5) கர்மத்தில் சுத்தி, உணர்ச்சியில் பக்தி, அறிவில் தெளிவு அடைந்த ஆன்மா தன்னூள் நோக்கிய பயணத்தை ஆரம்பிக்க அகமுகமான சாதனையிற்கு தந்திர சாஸ்திரம் தக்ஷிணாச்சாரம் அல்லது சமயாச்சாரத்தைப் பரிந்துரைக்கிறது. இப்போது சாதகன் வெளிமுகமாக இருந்து உள்முகமாக திரும்புகிறான். மந்திர ஜெபம், தியானம், ஆறாதார தியானம் இவை எல்லாம் சமயாச்சாரத்திற்குள் வரும்.
6) மேலேயுள்ள ஆச்சாரங்களைக் கடைப்பிடிப்பதால் சாதகன் தனது ஒழுக்கத்தினால், அறிவினால் அகங்காரத்தையும் சமூகத்தினால் கட்டுப்பட்ட பசுத்தன்மையினையும் அடைக்கிறான். ஆகவே அஷ்ட பாசங்களிலிருந்து வெளிவருவதற்கு தந்திர சாஸ்திரம் வாமாச்சர தந்திர முறையைப் பயிற்சிக்கச் சொல்கிறது. இதில் மது, மாம்ஸம், மச்சம், மைதுனம், சம்ஸான சாதனை இவைகள் அடங்கும். இதன் நோக்கம் அஷ்ட பாசங்களிலிருந்து வெளிவருவதாகும்.
7) அஷ்ட பாசங்களிலிருந்து வெளிவந்த ஒருவன் தன்னை அறியும் ஆற்றலும், சித்திகளைப் பெறும் தகுதியையும் பெறுகிறான். இந்தப் பண்பு உள்ளவன் சித்தாச்சாரத்தில் சாதனை பயிலச் சொல்கிறது. தமிழ் சித்தர்களுடைய சாதனை மார்க்கம் எல்லாம் சித்தாச்சார முறைகளே. இங்கு 96 தத்துவங்களையும் சித்தி (mastery) சித்தி செய்யும் சாதனை பயிற்றுவிக்கப்படுகிறது.
8) கௌலாச்சாரம் - The Supreme and Universal Path - எல்லா ஆச்சாரங்களும் அடங்கிய உயர் நிலை. இது பாகுபாடு, மதம், இனம், குலம் எல்லாவற்றையும் தாண்டிய ஒருங்கிணைந்த நிலை.
எமது குருபரம்பரை எல்லா ஆச்சார முறைகளையும் கற்பிக்கும் அதிகாரமும், அனைத்துவித சாதனைகளையும் குருமுகமாகப் பயின்ற சிறப்புடையது. இங்கு பயிலும் எவரும் தமது சாதனையை ஒழுங்காகச் செய்வார்களேயானால் வேறு எங்கும் அலையத்தேவையில்லை.
ஆனால் buffer lunch போல் நீங்கள் விரும்புபவற்றைப் பயில முடியாது, உங்கள் பரிணாமத்திற்குத் தக்க சாதனை கற்பிக்கப்படும்.
ஒரு சாதகன் வேதாச்சாரம் தொடங்கி தக்ஷிணாச்சாரம் வரை தனது வெளிமுகமான வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி, வாமாச்சாரம் தொடக்கம் கௌலாச்சாரம் வரை அகமுகமாக ஆன்ம பரிணாமத்தில் பயணிக்கிறான்.
எந்தவொரு ஆன்மாவும் அனைத்து ஆச்சாரங்களையும் ஒரே பிறப்பில் கடைப்பிடித்து சித்தியுறுவதில்லை. சிலபிறப்புகள் சில ஆச்சாரங்களைக் கடைப்பிடித்து ஆன்மா தன்னைப் பக்குவப்படுத்தி முன்னேறுகிறது.
தனக்கு வழங்கப்பட்ட சாதனையை ஆச்சாரத்தை ஒழுங்காகக் கடைப்பிடிப்பதன் பலனாக அது அடுத்த நிலையைப் பெறுகிறது. ஆகவே வீண் ஆராய்ச்சிகளையும், கற்பனைகளையும், அதியாசைகளையும் விட்டுவிட்டு கிடைத்த சாதனையை ஒழுங்காகச் செய்வது அவசியமானது.
ஆச்சாரம் என்பது ஒரு பிரிவினை அடையாளம் அல்ல, மாறாக ஆன்மீக வெளிப்பாடாகும்.
இந்தப் பாதை வெளிப்புற சடங்கிலிருந்து உள் சுய உணர்தலுக்கு செல்கிறது.
வாமாச்சாரமும் கௌலாச்சாரமும் அகங்காரத்திலிருந்து விடுதலைக்கு உணர்வுபூர்வமாகத் திரும்புவதைக் குறிக்கின்றன.
வேத, சைவ, வைணவ ஆச்சாரங்களில் வெளிப்புற வேடங்களில் தெரியும், தக்ஷிண, வாம, சித்த, கௌலாச்சாரங்கள் வெளிவேடங்கள் அற்ற அகமுகச் சாதனைகள்