குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, March 26, 2013

அனைவரும் பயன்பெறக்கூடிய திரிபலா காயகற்ப முறைகள்

 இந்தப்பதிவில் ஆயுர்வேத நூற்களில் காணப்படும் நான்கு வகையான காயகற்ப முறைகளை கூறுகிறோம்.  இவை ஒருவர் நூறாண்டு காலம் வாழ்வதற்கான கற்பமுறைகள். மேலும் ஒரு விடயத்தினை நினைவில் கொள்ள வேண்டுகிறோம். காயகற்பம் உண்டு விட்டு வாழ்க்கையினை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொண்டிருந்தால் நூறாண்டு காலம் வாழலாம் என்று நினைக்கும் நபர்  நீங்கள் இல்லை என எண்ணுகிறோம். சித்தர்களது நோய் அணுகா விதியும், பிரணாயாமம், தியான மனச்சாதனையும் உடைய சாதகர் ஒருவரே சித்தர் நூற்களில் கூறப்படும் காயகல்பத்தின் நூறாண்டு வாழ்க்கை எனும் முழுமையான பலனை அனுபவிக்க முடியும். மற்றவர்கள் வாழும் வரை ஆரோக்கியமாக வாழலாம். ஏனெனில் காயகற்பம் என்பது சாதகன் தனது சாதனையினை பிறவிப் பெரும் பயனை அடைவதற்கு பயன்படுத்த பட்ட ஒன்று. இங்கு  கூறப்படும் நான்கு முறைகளில் முதல் இரண்டு முறைகள்  அனைவராலும் பயன்படுத்தக்கூடியது.  

திரிபலா கற்ப முறை - 01
முதல் தடவை உணவருந்தி நன்கு சமிபாடடைந்தவுடன், அடுத்த சாப்பட்டிற்கு ஒருமணி நேரம் முன்னதாக ஒரு கடுக்காயின் அளவு கடுக்காய் பொடி  வெந்நீருடன் அருந்தவும். பின்னர் சாப்பாட்டிற்கு பதினைந்து நிமிடத்திற்கு முன்னர் இரண்டு பழங்கள்  அளவுள்ள தான்றிக்காய் பொடி  அருந்தவும்,  உணவின் பின்னர் நான்கு பழ அளவுள்ள நெல்லிக்காய் பொடி நெய்யுடன் அருந்தவும். இந்த முறை சரக சம்ஹிதையில் உள்ளதன் படி. இங்கு ஒரு கடுக்காயின் அளவு என்ன? இரண்டு தான்றிக்கயின் அளவு என்ன? நான்கு நெல்லிக்காயின் அளவு என்ன என்று சந்தேகம் வரலாம். அதற்கு இலகுவாக உங்கள் பெருவிரல், சுட்டுவிரல், நடுவிரல் முன்றையும் சேர்த்தால் அள்ளக்கூடிய அளவில் 1: 2: 4 என அருந்தலாம். இந்த மூன்று  பொடிகளும் எல்லா சித்த ஆயுள்வேத மருத்துவ கடைகளிலும் கிடைக்கும். நாள் ஒன்றுக்கு இருவேளை. 

இப்படி தினமும் அருந்துபவர்களுக்கு நூறாண்டு ஆயுள் நிச்சயம் என சரஹ சம்ஹிதை குறிப்பிடுகிறது.  

திரிபலா கற்ப முறை - 02
திரிபலா பொடியினை எடுத்து நன்கு நீர்விட்டு  பிசைந்து படை போலாக்கி கொண்டு இரும்பு சண்டியின் உள்புறத்தில் தடவி 24  மணி நேரம் சாதாரண அறை வெப்பநிலையில் காய வைத்து (வெயிலில் இல்லை) சுரண்டி எடுத்துக்கொள்ளவும். இது இலங்கை, இந்தியபோன்ற நாடுகளில்தான் சாத்தியம். பின்னர் நன்கு போடி செய்து தினமும் 5 கிராம் அளவு தேனில் கலந்து நீருடன் அருந்தி வர நோயற்ற வாழ்வும் நூறாண்டு ஆயுளும் உண்டாகும்.

திரிபலா கற்ப முறை - 03
திரிபலா சூரணம், அதிமதுரம், மூங்கில், திப்பிலி, சக்கரை சம அளவு கூட்டி தேனும் நெய்யும் இட்டு தினமும் உணவிற்கு பின்னர் 10 கிராம் அளவு இருவேளை உண்டு வரநோயற்று ஆயுள் கூடும். 

திரிபலா கற்ப முறை - 04
இது குறித்த அளவு தங்கம், வெள்ளி, அய பஸ்பங்கள் ஏதாவது ஒன்றுடன் திரிபலா, வசம்பு, திப்பிலி, வாய்விடங்கம், கல்லுப்பு போன்ற சரக்குகள் சேர்த்து செய்யும் கற்பம். 

எளிய முறை திரிபலா கற்ப முறை - 05:
தினசரி 5 கிராம் அளவு திரிபலா சூரணம் இரு வேளை உணவின் பின்னர் உண்பது.

இவற்றுள் எளிய முறைகளான் 01, 02, 05 இல் உங்களுக்கு வசதியான ஒன்றினை பின்பற்றலாம். 

Monday, March 25, 2013

குண்டலினி சக்தி 03: ஆறாதாரங்களும் குண்டலினி சக்தியும்


************************************************************************************
எனது உரை

இதிலிருந்து மூல நூலின் மொழிபெயர்ப்பு தொடங்குகிறது, இந்த மொழிபெயர்ப்பு வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பல்ல, மூல நூலில் உள்ள கருத்தினை மாற்றாமல், எல்லோரும் விளங்க கூடிய அளவிற்கு எளிமைப்படுத்த முயன்றிருக்கிறேன். இந்தத்தொடரிற்கு வாசிக்கும் வாசகர்களிடமிருந்து இயலுமான அளவு பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.  மற்றும் பேசப்படும் விடயத்தின் புரிதல் விட்டுப்போகாமலும், விளங்கிக்கொள்வதற்காகவும் உபதலைப்புகளை இட்டுள்ளேன். இவை மூல நூலில் இல்லாதவை. 

சிவப்பு நிறத்தில் இலக்கமிடப்பட்டவை மூல நூல் ஆசிரியரின் அடிக்குறிப்புகள், அவை இலக்கத்திற்கேற்றவாறு பதிவுன் முடிவில்  கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

இந்த பதிவுத்தொடர் குண்டலினி யோகம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு என எண்ணுகிறோம்

ஸத்குரு பாதம் போற்றி!

அன்புடன்

சுமனன் 
************************************************************************************

அறிமுகம்
ஆறாதாரங்களும் குண்டலினி சக்தியும்

ஷட்சக்ர நிருபணம் (ஆறு ஆதாரங்களின் விவரணம்), பாதுகா பஞ்சகம் (பாதுகையின் ஐந்து தன்மைகள்) என்ற இரு பதங்களும் தாந்திரீக யோகத்தின் ஒருபிரிவான குண்டலினியோகம் அல்லது சிலர்கூறும் பூதசுத்தி என்பவற்றின் அடிப்படையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தப்பதங்கள் மனித உடலில் உள்ள மகாசக்தியான குண்டலினியினை குறிப்பதாகவும் அது விழிப்படைந்து உடலின் பூதகாரணிகளை சுத்தி செய்வதன் மூலம் யோகம் எனும் நிலைவாய்க்கிறது. இந்த யோகம் சாதனை அடிப்படையில் சக்ரபேதனம் அல்லது சக்ரவிழிப்பு என அழைக்கப்படும். இந்த செய்முறை உடலில் உறங்கும் குண்டலினி சக்தி விழிப்படைந்து ஆறு ஆதாரங்கள் தாமரைகளினூடாக பாய்வதன் மூலம் இது நடைபெறுகிறது. இதற்குரிய சரியான ஆங்கிலப்பதமாக நான் "ஸேர்பண்ட்(1) பவர்" என தேர்ந்தெடுத்தேன். குண்டல என்றால் சுருண்டு உள்ளது எனப்பொருள். தேவியின் சக்தி அதாவது சுருண்டுள்ள சக்தி குண்டலினி எனப்படும். பிரபஞ்ச மஹாசக்தி உடலின் கீழ்பகுதியில் சுருண்ட பாம்பு வடிவில் முதுகெலும்பு முடிவுறும் இடத்தில் உறைந்துள்ளாள். அவள் யோகத்தின் மூலம் தட்டி எழுப்பபடும் போது குண்டலினி எனப்படுகிறாள். குண்டலினி என்பது மனித உடலில் உறைந்துள்ள தெய்வீக பிரபஞ்ச ஆற்றலாகும். சப்த பூமி(2) எனப்படும் ஏழு உலகங்கள் பற்றிய வர்ணணையின் உள்ளார்ந்த தாந்திரீக அர்த்தம் உடலில் உள்ள ஏழு ஆதாரங்களையே(3) குறிக்கிறது. 

தாந்திரீகம் இரண்டு காரணங்களுக்காக  யோகம் எனக்கூறப்படுகிறது. தாந்திரிகத்தில் காணப்படும் சக்கரங்கள் பற்றிய விளக்கங்கள் யோக உப நிஷதங்களிலும் சில புராணங்களிலும் காணப்படுகிறது. அத்துடன் ஹதயோக கோட்பாடுகளும் இவற்றுடன் பொருந்தி வருகின்றன. ஆகவே தாந்திரீக யோகம் என அழைக்கப்படுகிறது. 

வேற்று கலாச்சாரங்களில் குண்டலினி யோகம்
இந்தியா தவிர்ந்த மற்றைய நாட்டு முறைகளிலிலும் இத்தகைய குறியீடுகளை காணக்கிடைக்கிறது. இவை இங்கிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டவைதான் என்பதனை அனுமானித்துக்கொள்ளலாம். பாரசீகத்தின் இளவரசன் முகம்மது டாரா சிக்கோ என்பவர் எழுதிய ரிசாலா-ஈ-ஹக்-நுமா எனும் சூஃபி நூலில் உடலில் உள்ள மூன்று ஆதாரங்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றது. அவையாவன "தாய் மூளை" அல்லது உருளை இதயம் (டில்-ஐ-முத்தாவர்); தேவதாரு இதயம் (டில்-ஐ-சனோவாரி) மற்றும் லில்லி இதயம் (டில்-ஐ-நிலோவாரி) என்பனவே அதில் குறிப்பிடப்பட்ட ஆதார ஸ்தானகளாகும். மேலதிக ஆதாரங்கள் இஸ்லாமிய சூஃபி இலக்கியங்களில் காணலாம். சில சூஃபி(4) இலக்கியங்களில்  இந்திய யோகிகளிடம் பெற்றுக்கொண்ட அறிவின் படி குண்டலின் என்பது ஆன்ம விழிப்பிற்குரிய ஒரு வழியாக குறிப்பிடப்பட்டுள்ளது. என்னுடைய கருத்துப்படி அமெரிக்க மாயன் கலாச்சாரத்தில் காணப்படு சினூஸ் எனப்படும் பொபுல் வூ(5) இலக்கியத்திற்கும் இந்திய சாஸ்திரங்களுக்கும் தொடர்பு உண்டு என அறியப்பட்டுள்ளது. 

குண்டலினி யோகமும் வைதீக ஹத யோக கோட்பாடுகளும்
எனது தகவலாளர்களின் படி சுழுமுனையின் நடுவே ஒரு வெற்றுக்குழாயும், இடகலை பிங்கலை "இரு மடிப்புள்ள வெற்றுக்குழாயும்" காணப்படுகிறது. இதில் பாயும் மின்னல் போன்ற ஒளியே - ஹுராகன் - குண்டலினி ஆகும். இவற்றின் நடுவே மையங்கள் விலங்குகளால் சங்கேதக்குறிகளில் காட்டப்பட்டுள்ளது. எனக்கு கிடைத்த தகவல்களின் படி மற்றைய சமூகங்களில் உள்ள இரகசிய வித்தைகளிலும் இத்தகைய குறியீடுகள் காணப்படுகின்றன. இதன் அடிப்படையில் உண்மை இருப்பதாக கருதின் இந்த சாதனையும் தத்துவமும் பரவலாக காணப்பட்டதான ஒன்றாக நாம் எதிர்பார்க்கலாம், இந்த வகையான யோகம் குறிப்பாக தாந்திரீகத்துடன் அல்லது ஆகமத்துடன் முதன்மையாக தொடர்பு பட்ட ஒன்றாக காணப்படுகிறது. இவற்றுக்கான ஒழுங்குபடுத்தப்பட்ட முழுமையான சாதனை விபரங்கள் ஹத யோக நூற்களிலும் தாந்திரீக அறிவுறுத்தல் புத்தகங்களிலும் காணப்படுகின்றது. இது இந்து வழிபாட்டு முறைக்கு மட்டுமல்லாது முழுமையான மறையியலுக்கும் பொதுவாக காணப்படுகிறது. அடுத்து கீழ் ஆதாரங்களில் செய்யப்படும் யோககிரியைகள் தாந்திரீக பண்பினை உடையனவாய் இருக்கிறது, புத்தகங்களில் காணப்படும் பொதுவான வழிகாட்டல்கள் பரிசோதனை ரீதியாக பிரயோகித்து செய்முறை அறிவுடன் செய்ய வேண்டியவையாக உள்ளது. தாந்திரீக முறைகளின் முக்கியமான பண்பு குறித்த முதன்மையான உணர்வு மையத்தின் மீதான செயன்முறை. பல புராதன காலாச்சாரங்கள் மனித உடலில் பல்வேறு பாகங்களில் ஆன்மாவின் இருப்பு பற்றி கூறுகின்றன. இரத்தத்தில்(6), மூச்சில், இதயத்தில் ஆன்மா உறைவதாக கூறப்படுகிறது. பொதுவாக மூளை ஆன்மா உறையும் இடமாக குறிப்பிடப்படவில்லை. வைதீகத்தில் இதயமே உணர்வின் இருப்பிடமாக கருதப்படுகிறது, இதனை "இதயத்தில் இருத்திக்கொள்" ""இதயத்தினால் கற்றுக்கொள்" போன்ற வார்த்தைப்பிரயோகங்கள் விளக்குகின்றன. ஐந்து வகைப்பித்தங்களின் ஒன்று இதயத்தில் உறைந்து மறைமுகமாக ஒருவனுடைய புரிதலையும் அறியும் செயன்முறியினையும், இதயம் துடிக்கும் அளவினையும் கட்டுப்படுத்துகிறது. இந்திய உடற்கூற்றியலின்(7) படி உடலின் ஒவ்வொரு பாகத்தினை உருவாக்குவதிலும் உணர்வுசக்தி செயற்படுகிறது எனக்கூறப்படுகிறது.  தாந்திரீக தத்துவத்தின் படி உணர்வின் முதன்மை இருப்பிடங்களாக மூளை-முண்ணாண் நரம்புத்தொகுதியினை அண்டிய ஆறு ஆதாரங்களும் மூளையின் மேல் காணப்படும் சகஸ்ராரமும் குறிப்பிடப்படுகின்றன. தந்திர சாஸ்திரம்  ஜீவாத்மா - உடலில் உள்ள உயிரான்மா உறையும் இடமாகவும், பிராணன் எனும் உயிர்சக்தி உறையும் இடமாகவும் இதயம்(8) இருப்பதாக குறிப்பிடுகிறது. இத்தகைய காரணத்தினாலேயே ஷட்சக்ர நிருபணத்தின் முதல் ஸ்லோகம் இந்த யோகத்தினைப்பற்றி "தந்திரானுஸரேன" எனக்குறிப்பிடுகிறது. அப்படியென்றால் "தாந்திரீகத்தில் கூறிய படி" என்று பொருள், காளிசரணின் உரையின் படி "தாந்திரீகத்தின் அதிகார வரைமுறைக்கு அமைவான படி" எனப்பொருள் கொள்கிறார். 

தொடரும் ...........


 அடிக்குறிப்புகள்
(1) தேவியின் நாமங்களில் புஜங்கினி அல்லது நாகம் என்பதும் ஒன்று
(2) பூர், புவ, ஸ்வஹ, மஹ, ஜன, தப, ஸத்தியம் என்ற ஏழு வ்யாக்ருதிகளே சப்த உலகம் என அழைக்கப்படும். 
(3) ஏழாவது சக்கரம் தலையில் அமைந்துள்ள சகஸ்ராரம் ஆகும்.
(4) அல்ப்ரூணி என்ற சூஃபி ஞானி பதினோராம் நூற்றாண்டில் பதஞ்சலி யோக சூத்திரத்தினையும் சாங்கிய தத்துவத்தினையும் அரபிய மொழிபெயர்த்தார்.
(5) லுஸிபெரை சேர்ந்த ஜேம்ஸ் ப்ரைஸி எனப்படும் தாந்திரீகம் மொழிபெயர்த்து தியோசபிக்கல் ஜேர்னலில் வெளியிட்டதன் படி, நான் இதனை நேராக படிக்கவில்லை, 
(6) பைபிள் "இரத்தத்தில் உயிர் உறைவதாக கூறுகிறது"
(7) கவிராஜ குஞ்சலாலா பிஸகராத்மா பதிப்பித்த சுசுருத ஸம்கிதையின் படி, 
(8) இந்திய தத்துவ மரபின் படி மூளை மனதினதும் புலன் களினதும் மையம், இதயம் உயிரின் மையம், சரகரின் கருத்துப்படி இதயம் உடல் அங்கங்களினது மையமும், அவை தொழில் புரிவதற்குரிய சக்தியினை வழ்ங்கும் ஒரு உறுப்பு, சுசுருதரின் கருத்துப்படி இதயம் உணர்ச்சிகளின் மையம். 

Sunday, March 24, 2013

குண்டலினி சக்தி 02: ஆர்தர் ஆவலோன் (Arthur Avalon) முன்னுரை



முன்னுரை

எனது "சக்தியும் சாக்தமும்" நூல் முதன்முறையாக குண்டலினி யோகத்தின் தத்துவம் பற்றி விவரித்திருந்தது. சில பகுதிகளில் அதிகம் பேசப்பட்டிருந்தாலும் அது பற்றிய தெரிதல் மிகக்குறைவே.

இந்தப்புத்தகம் குண்டலினி யோகம் பற்றிய முழுமையான விளக்கங்களையும் விபரிப்புகளையும் கொண்டிருக்கின்றது, இந்த யோகத்தினூடாக பேசப்படும் விடயங்கள் தந்திராவின் அதிமுக்கியமான கோட்பாடுகளாகும். சிலவருடங்களுக்கு முன்னர் இந்த இரண்டு நூற்களினதும் சமஸ்க்ருத மூலம் எனது தந்திர நூற்களை வெளியிடும் தொகுதியில் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் மொழிபெயர்க்கப்படவில்லை. முதலாவது நூலான "ஷட்சக்ர நிருபணம்" (உடலில் உள்ள ஆறு சக்கரங்களின் விளக்கமும் ஆதாரமும்) தாந்திரீகரான பூர்ணாணந்த ஸ்வாமி அவர்களால் எழுதப்பட்டது. அவரைப்பற்றிய விபரங்கள் பின்னர் வெளியிடப்படும். இந்த நூலானது அவரது வெளியிடப்படாத "ஸ்ரீ தத்துவசிந்தாமணீ" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட பகுதியாகும். இந்த நூல் தாந்திரீக நூற்தொகுதி வெளியீடு பகுதி - 02 இல் சங்கரா மற்றும் விஸ்வ நாதா ஆகியவர்களால் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது. அந்த பதிப்பே இந்த மொழிபெயர்ப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. உரைக்கான மொழிபெயர்ப்பு காளிசரண் என்பவர் எழுதிய உரையின் மொழிபெயர்ப்பாகும்.

இரண்டாவது நூலான "பாதுகா பஞ்சகம்" மேலே ஷட்சக்ர நிருபணத்தில் விபரிக்கப்பட்ட சக்கரதாமரைகளில் ஒன்றினைப்பற்றி விபரமாக விபரிக்கின்றது. இதற்குரிய உரையும் காளிசரணினால் வகுக்கப்பட்டதே. இரண்டு மொழிபெயர்ப்புத்தொகுதிகளுக்கும் நான் எனது சொந்த கருத்துரைக் குறிப்புகளையும் எழுதியுள்ளேன். இங்கு எழுதப்பட்டுள்ள உரையும் மொழிபெயர்ப்பும் மறைபொருள் சார்ந்த விளக்கத்தில் இருப்பதால் அவை சாதாரண (ஆங்கில) வாசகனுக்கு கஷ்டமானதாகும். இதனால் மொழிபெயர்ப்பிற்கு (எனது அறிவுக்கும் இத்துறை சார்ந்த அனுபவத்திற்கும் உட்பட்டு) இந்த யோகம் சார்ந்த எனது அறிமுக உரையினை வழங்கியுள்ளேன். அத்துடன் சில படவிவரணங்களையும் இந்த நூலில் விபரிக்கப்பட்டதற்கமைய வரைந்து இணைத்துள்ளேன்.

இந்த யோகத்தினைப்பற்றி சுருக்கமான பொதுவான விளக்கமுடைய அறிமுகம் எழுதுவது என்பது முடியாத காரியம், இதுபற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் எனது மற்றைய தந்திரசாஸ்திர நூற்களை படிக்குமாறு வேண்டுகிறேன். அதற்கு தந்திர தத்துவம் பொருந்தமானது, இந்த நூலுடன் தொடர்புடைய விடயத்தினை கொண்டது. எனது அண்மைக்கால பதிப்புகளின் ஒன்றான சக்தியும் சாக்தமும் நூலில் சாக்த தந்திரம் தொடர்பான விடயங்களையும் அதன் சடங்கு முறைகளையும் விபரித்துள்ளேன். வேதாந்த கேசரி எனும் நூலில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்ட முதல் மூன்று பகுதிகள் எனது மந்திர சாஸ்திரம் தொடர்பான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன, அவை இந்ததுறையில் பயன்படுத்தப்படும் கலைச் சொற்களான தத்துவம், சக்தி, கலா, நாத, பிந்து போன்ற சொற்களுக்கான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை புரிந்துகொள்வது இந்த நூலில் கூறப்பட்டுள்ள விடயங்களை விளங்கிக்கொள்ள அவசியமான ஒன்றாகும்.

வங்காளத்தின் மிகச்சிறந்த தாந்திரிகர்களில் ஒருவரான பூர்ணானந்தருடைய "ஷட்சக்ர நிருபணம்" என்ற இந்த நூல் அவருடைய வழித்தோன்றல்களில் ஒருவரின் மூத்த புதல்வர்களிருவரிடமிருந்து பெறப்பட்டது. அவர்களில் இருவர் ராஜ்சாஹி வரேந்திரா ஆராய்ச்சி நிலையத்துடன் தொடர்புபட்டவர்கள். ஸ்ரீ அக்ஷய குமார மைத்ரயா (இயக்குனர்), ஸ்ரீ ரதா கோவிந்த பைசக் (செயலாளர்), இவர்கள் இருவரிடமிருந்தும் பூர்ணானந்தருடைய விபரங்கள் பெறப்பட்டன, அவை வருமாறு;

பூர்ணானந்தர் காஸ்யப கோத்திரத்தினை சேர்ந்த ராஹிரி பிராமணர். இவர்களுடைய முன்னோர்கள் பக்ராசி எனும் கிராமத்தினை சேர்ந்தவர்கள். இது எங்கு உள்ளது என இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவரது ஏழாவது தலைமுறை முன்னோர்களில் ஒருவரான அனந்தாச்சார்யா முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பரா நகரா என்ற இடத்திலிருந்து மைமென்சிங்க் மாவட்டத்தில் உள்ள கைதாலி என்ற கிராமத்திற்கு இடம்பெயர்ந்தார் என அறியக்கிடைக்கிறது. இவர்களின் குடும்பத்திலிருந்து இரண்டு பெரும் தாந்திரீகர்கள் உருவாகியுள்ளார்கள். ஒருவர் ஸர்வானந்தா மற்றையவர் பூர்ணானந்தா. ஸர்வானந்தரின் வம்சாவழியினர் மேஹாரில் வசிக்கின்றனர். பூர்ணானந்தரின் வம்சாவழியினர் மைமென்சிங்க் மாவட்டத்தில் வசிக்கின்றனர். பூர்ணானந்தரின் உலகவாழ்க்கை பற்றி அதிகம் அறியக்கிடைக்கவில்லை. அவரைப்பற்றிய ஒரேயொரு தகவல் மாத்திரமே அறியக்கிடைக்கிறது. சாக வருடம் 1448 (கி.பி 1526) அளவில் ஜெகதானந்தா என்பவர் விஷ்ணு புராணத்தினை பிரதிசெய்து படி எடுத்துள்ளார். அந்த பிரதி  இன்றும் ரயிதாலியை சேர்ந்தஅவரது வழித்தோன்றல்களில் ஒருவரான பண்டிட் ஹரிகிஷோர் பட்டாச்சார்யாவிடம் பாதுகாக்கப்பட்ட வடிவில் உள்ளது. அது வரேந்திரா ஆராய்ச்சி கழகத்தினை சேர்ந்த சதீஷ் சந்திர சித்தாந்தபூஷணவினால் படிக்கப்பட்டுள்ளது. அந்த ஏட்டுப்பிரதியில் சாகவருடம் 1448 இல ஜகதானந்த சர்மா அதனை எழுதியதாக குறிப்பு இருக்கின்றது.

இந்த ஜகதானந்த சர்மாவே பூர்ணானந்தர் என நம்பப்படுகிறது, ஜகதானந்தர் தனது குருவான பிரம்ம நாதரிடம் தீட்சை பெற்று அஸாமில் உள்ள காமரூபம் சென்று சாதனையில் சித்தி பெற்றதாகவும், அவர் தங்க்கியிருந்த ஆசிரமம் கௌஹதி (அஸாம்) நகரில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள கிராமம் எனவும் நம்மப்படுகிறது. அதன் பின்னர் பூர்ணானந்தர் வீடு திரும்பாமல் பரமஹம்ஸ நிலையினை எட்டி பல தாந்திரீக நூற்களை எழுதியதாகவும் அறியப்பட்டுள்ளது, அவர் எழுதியதாக அறியப்பட்ட நூற்கள் சில ஸ்ரீதத்துவசிந்தாமணீ, சியாமாரகஸிய, சாக்தக்ரம, தத்துவ நந்ததரங்கினி, யோகசார என்பவை. அவருடைய உரையில் காளிகாகரகுட பாடல்களுக்கான உரை மிகபிரசித்தமானது. இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஷட்சக்ர நிருபணம் ஒரு தனியான நூல் அல்ல, அது ஸ்ரீதத்துவ சிந்தாமணியின் ஆறாவது படலமாகும். இவருடைய வம்சாவழிகளில் ஒருவர் தந்த வம்சாவழிப்படத்தினை பார்க்கும் போது இவர்கள் தாந்திரீகத்தில் வீராச்சார மரபினை சேர்ந்தவர்கள் எனதெரியவந்துள்ளது, தற்போது உள்ள குடும்ப வம்சக்கொடியில் பத்து தலைமுறைக்கு முன்னர் பூர்ணானந்தர் விலகி தாந்திரீக வழியில் சென்றுள்ளார் என அறியக்கிடைக்கிறது.

இந்தவேலை கடந்த ஐந்து வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நூலின் பொருள் கடினமாதலால் ஆவற்றை கையாளும் நிலைகளில் ஏற்பட்ட தடங்கலால் ஏற்பட்டதே இது. இன்னும் சில படவிளக்கங்களை இணைக்கலாம் என எண்ணியிருந்தேன், எனினும் காலதாமதம் கருதி தற்போது உள்ளவடிவிலேயே வெளியிட விரும்புகிறேன்.
  
செப்டெம்பர், 20, 1918                                             ஆர்தர் ஆவலோன்
ராஞ்சி

******************************************************************************************************************************************
மூலம்: THE SERPENT POWER by Arthur Avalon
தமிழில் மொழிபெயர்ப்பு: சுமனன்

*******************************************************************************************************************************************

Saturday, March 23, 2013

குண்டலினி சக்தி 01: யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகளும் குண்டலினி யோகமும்


இந்தப்பதிவுத்தொடர் Sir John Woodrouf ஆங்கிலத்தின் எழுதிய Serpent Power  நூலின் தமிழ் மொழியாக்கமாகும். இதனை எழுதத்தூண்டிய யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகளின் சீடர் செல்லத்துரை சுவாமிகளுக்கும், எனது குருநாதருக்கும் முதற்கண் வணக்கத்தினைக்கூறி இந்த மொழியாக்கத்திற்கான காரண காரிய தொடர்பு முதற்பதிவாக வெளியிடப்படுகிறது.இதன் தூணடல் என்னை அறியாமல் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் விதைக்கப்பட்டிருந்தது, தற்போது தளிர் விடுகிறது. இனி விடத்திற்குள் வருவோம்! 





இலங்கையில் வாழ்ந்த சித்தர்களில் உலகம் அறிந்த சித்தராக வலம்வந்தவர் யோகர் சுவாமிகள், சுவாமிகளால் இலங்கை மக்கள் பலரும் இன பேதமின்றி பயன்பெற்றார்கள் என்பது மறுக்க முடியாத ஒன்று. சுவாமிகளது வரலாற்றினை அவரது சீடர்கள், பக்தர்கள் வெளியிட்டுள்ளார்கள். அந்த வகையில் இந்தப்பதிவின் நோக்கம் சுவாமிகளின் வரலாற்றினை பற்றியதல்ல. சுவாமிகளின் சீடர்கள் பலர், ஹவாய் சுப்பிரமணிய சுவாமிகள், சோல்பரிப்பிரவுவின் மகன் சாந்தாசுவாமிகள், மார்க்கண்டு சுவாமிகள், செல்லத்துரை சுவாமிகள் எனப்பலர். எந்த ஒரு சித்தரும் தமது ஆத்ம சித்திக்கு என்ன சாதனைகள் செய்தார்கள் என்பதனை வெளிப்படையாக எடுத்துரைப்பதில்லை. அந்தவகையில் யோகர் சுவாமிகள் இந்த வகையினர் என அடக்கமுடியாத சித்தர் கணத்திற்குள் வருகிறார் என்பதனை எமது சுய அனுபவத்தில் அறிந்த விடயங்களை பதிவிப்பதே இந்தப்பதிவின் நோக்கம். 

சிறுவயது முதலே யோகர் சுவாமிகள் மேல் எமக்கு ஈர்ப்பு இருந்து வந்தது, பலதடவைகள் சுவாமிகள் கனவில் தியானத்தில் இருப்பது போல் காட்சி வரும், சிறுவயதில் ஒரு சில தடவைகள் நடைபெற்றிருக்கிறது. அதன் பின்னர் எமது குரு நாதரிடம் சுவாமிகளைப்பற்றி பேசும் போது அவரும் பயமும் பெருமரியாதையும் கொண்டே பேசுவார், யோகர் சுவாமிகளிடம் நீங்கள் பேசியதுண்டா? எனக்கேட்டபோது "அவர் எங்கே நாம் எங்கே, அவரது ஆற்றலுக்கு முன்னால் நாம் எல்லாம் என்னப்பா?" என்பார், அந்தக்காலத்தில் நாமும் சிறுபிள்ளை, சிறுபிள்ளைகளுக்கு தமது அப்பாதான் உலகிலேயே எல்லாம் வல்லவர் என எண்ணம் உண்டு, அந்தக்காலத்தில் நாமும் எமது குரு நாதரை விட்டால் உலகில் ஆற்றலுள்ள சித்தர்கள் எவரும் இல்லை என்ற நினைப்பிலேயே இருந்தோம், ஆனால் எமது குரு நாதர் மற்றைய சித்தர்கள் மேல்வைத்திருந்த மரியாதை இந்த எண்ணத்தினை விரைவில் அகற்றியது, அனுபவம் அது ஒரு அறியாமையின் விளைவு என்பதினை வெகுவிரைவில் புரியவைத்தது. 

அந்த வகையில் யோகர் சுவாமிகளின் உன்னத சீடர் ஒருவருடன் சில மாதங்கள் அன்னியோன்யமாக பழகும் வாய்ப்பு கிட்டியது, அவர் யோகர் சுவாமிகளால் குண்டலினி யோக தீட்சை கொடுக்கப்பட்டு தாந்திரீக வழிபயிற்றுவிக்கப்பட்ட யோகி, அவரை வெறுமனே சிவதொண்டன் நிலைய பொறுப்பாளராக மட்டுமே பலர் கருதி வந்தனர், அவர் ஒரு சித்திபெற்ற குண்டலினி யோகி, தன்னை அப்படி வெளிக்காட்டிக்கொள்ளவில்லை, அந்த அரிய யோகியிடம் குண்டலினி யோகம் தொடர்பாக சந்தேகங்களை கேட்டு அறிந்துகொள்ளும் பாக்கியத்தினை குரு நாதர் எனக்கு ஏற்படுத்திக்கொடுத்தார். 

2003 காலப்பகுதி அளவில் சிறிது காலம் யாழ்ப்பாணத்தில் தங்கவேண்டியிருந்தது. சுமார் நான்கு மாதம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தபோது இயல்பாக எமது குருநாதர் கூறித்தந்ததைப்போல் சித்தர்களது ஜீவசமாதிக்கு சென்று தியானிப்பது வழக்கம். அந்த வகையில் கோண்டாவில் குடைச்சாமி சமாதி, வண்ணார்பண்ணை கடையிற் சுவாமி சமாதி எனத்தரிசனம் செய்யும் அதேவேளை மாலைவேளைகளில் சிவதொண்டன் நிலையம் சென்று யோகர் சுவாமிகளது பாதுகை உள்ள தியான மண்டபத்தில் சில நேரம் தியானித்து வருவது வழக்கம். அப்படிச் செல்லும் வேளைகளில் சிவதொண்டன் நிலையத்தின் வெளி விறாந்தை மூலையில் ஒரு தெய்வீககளை பொருந்திய முனிவரை போன்ற வெண்தாடி, ஒளிபொருந்திய உடல் உடைய பெரியவர் அர்த்த பத்மாசனத்தில் சிறு பாய் ஒன்று போட்டு அமர்ந்திருப்பார். மேலே தியான மண்டபத்திற்கு சென்று தியானித்து விட்டு கீழே அந்த பெரியவரை வந்து வணங்கிவிட்டு சற்று நேரம் அவர் முன் அமர்ந்து விட்டு வருவது வழக்கம், ஒவ்வொரு முறை வணங்கும் போதும் ஒரு தெய்வீக புன்னகையுடன் எமது கண்களை ஆழமாகப் பார்ப்பார், வாய்திறந்து எதுவும் பேசுவதில்லை. சிறிது நாட்களின் பின்னர் வணங்கி முடிந்தவுடன் "சற்று இருங்கள்" எனக்கூறிவிட்டு கோபி எனும் இளைஞரை அழைத்து 'இவருக்கு தேத்தண்ணி கொடுங்கள்" என்றார், சிறிது நேரத்தில் தேத்தண்ணி வந்தபின்னர் வாழைப்பழம் ஒன்றினையும் சாப்பிடத்தருவார். அன்று என்னைப்பற்றி விசாரித்தார், எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? என என்னைப்பற்றிய விபரங்களைக் கேட்டறிந்தார். அதற்கு நானும் என்னைப் பற்றிய சுயவிபரங்களை கூறியபின்னர், எனது குருநாதர் பெயரையும் கூறி, அவரிடம் தீட்சை பெற்று காயத்ரி சாதனை புரிவதாக கூறிக்கொண்டேன். அதற்கு அவர் மிக்க மகிழ்ச்சி எனக்கூறிக்கொண்டு, தான் எனது குரு நாதர் வாழும் பகுதியில் (நுவரெலியாவில்) ஆரம்பகாலத்தில் ஆசிரியராக பணியாற்றினார் எனவும், தனது ஆன்மீக பயணத்தினைப்பற்றியும் அளவளாவினார், அக்காலத்தில் அவர் ஒவ்வொரு சிவராத்திரியிற்கும் திருவண்ணாமலை செல்வாரெனவும், ரமணமகரிஷியுடன் சிலகாலம் தங்கி திருவண்ணாமலையில் தியானிப்பதும் தமது வழக்கம் எனவும் கூறினார். இப்படி எமது உரையாடல் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் ஒருமணி நேரம் தொடரும், வேறு நபர்கள் இருந்தால் நாட்டுப்பிரச்சனை, அரசியல் பற்றியும் சாமி பேசுவார். 

முதல் நாள் அறிமுகத்தின் பின்னர் சிவதொண்டன் நிலையத்தில் இருந்த, எனக்கு தேனீர் தந்த கோபி என்னும் இளைஞருடன் உரையாடியபோதே அந்தப்பெரியவர் யோகர் சுவாகளது சீடரான செல்லத்துரை சுவாமிகள் என அறிந்து கொண்டேன். அவரைப்பார்க்கும் போது ஒருவித காந்தசக்தியும், உடல் பொலிவும், சலனமற்ற கண்களும், புன்சிரிப்பும் எனது குரு நாதரை ஒத்தவராக இருக்கிறார் என உள்மனம் கூறியது. எனது குரு நாதர் என்னை எப்படி அன்புடன் அழைத்து உணவு கொடுத்து உபசரித்து பேசுவாரோ அதேபோல் இவரும் என்னை நடத்த அவருடனான அன்பு பிணைப்பு உருவானது. நாம் வழமையாக காங்கேசன் துறை வீதியில் உள்ள சிவதொண்டன் நிலையத்திற்கு சென்றே தியானிப்பது வழக்கம்! சில நாட்களின் பின்னர் சுவாமிகள் யோகர் சுவாமியின் அஸ்தியுள்ள சமாது கொழும்புத்துறையில் உள்ளதாகவும் ஒரு நாள் அங்கு சென்று தியானித்து வருமாறும் கூறினார், அவரது அறிவுரையின் படி ஒரு நாள் காலை கொழும்புத்துறை ஆசிரமம் சென்று தியானித்து வந்தோம். 

சுவாமிகள் திருமந்திரத்தில் மிக்க புலமைவாய்ந்தவர். திருமந்திரத்திற்கான விளக்கத்தினை வகுப்புகளாகவும் நடாத்தி வந்தார். நாம் சுவாமிகளை சந்திதபோது 2003 பொங்கல் முடிந்து தை மாதமளவில் இருக்கும். யாழ்ப்பாணத்தில் இருந்த் மூன்று மாதங்களில் சந்தித்த நாட்கொண்டு ஒவ்வொரு நாளும் மாலைவேளைகளில் சுவாமிகளை சந்திக்க சிவதொண்டன் நிலையம் செல்வதினை வழமையாக்கிக்கொண்டேன். சில நாட்களில் தான் ரமண மகரிஷியுடன் இருந்தது, பின்னர் யோகர் சுவாமி தம்மை ஆட்கொண்டு சிவதொண்டன் நிலையத்தினை பொறுப்பேற்றுக்கொள்ளச் சொன்னது எனக்கூறுவார்கள். தனியாக இருக்கும் போது ஆன்மீக பேச்சுப்போகும், யாராவது இடையில் வந்துவிட்டால் அவரவர் மன நிலைக்குத்தக்க அரசியலோ, அவர்களது குடும்பபிரச்சனையோ வரும். அந்த வேளைகளில் நாம் அமைதியாகி கொள்வோம். 

இப்படியான சந்தர்ப்பத்தில்தான் ஒரு நாள் சுவாமிகளிடன் "சுவாமி, யோகர் சுவாமிகள் தமது சீடர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் நிலைக்குத்தக்க வேறு வேறு சாதனை மார்க்கம் அருளியுள்ளதாக படித்துள்ளேன், நீங்கள் கைக்கொண்ட மார்க்கம் என்ன? " என வினாவினேன். அதற்கு புன்சிரிப்புடன் 'குண்டலினி யோகம்" எனப்பதிலளித்தார். நாம் ஏற்கனவே காயத்ரி தீட்சை பெற்று சாதனை செய்து வரும் காலத்தில் எமது குரு நாதரும் காயத்ரி மந்திரத்தின் மூலம் குண்டலினி விழிப்படையச் செய்யும் சாதனை பற்றி கற்பித்திருந்தார், எனினும் கண்டிப்பாக பல்லாண்டுகால (குறைந்தது தீவிரமாக எனின் மூன்று ஆண்டுகள்) தொடர்ச்சியான காயத்ரி சாதனையின் பின்னரே அவற்றை பயிற்சிக்க வேண்டும் என உபதேசித்திருந்தார். அதனால் நாம் அதைப்பற்றி விரிவாக எதையும் அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. அடுத்து காயத்ரியினை உபாசிப்பவர்களுக்கு குண்டலினி யோகம் தனியாக பயிலவேண்டிய அவசியமில்லை, பக்குவம் பெற்றவுடன் தேவி தனது இச்சையினாலேயே குண்டலியினை விழிப்பிப்பாள் என்பதினை எனது குருநாதர் உபதேசித்திருந்தார். செல்லத்துரை சுவாமிகள் தான் யோகர் சுவாமிகளின் வழிகாட்டலில் குண்டலினி யோகம் பயின்று சித்திபெற்றார் என்று கூறியவுடன் எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. செல்லத்துரை சுவாமிகளை கண்ட நாள்முதல் அவரது ஒளிபொருந்திய தேகமும், கண்களும் அவரது யோக நிலையினை உணர்த்திக்கொண்டிருந்தது. இப்படி எனது மனது எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில் சுவாமிகள் தான் குண்டலினி யோகம் பயில எப்படி யோகர் சுவாமிகள் ஈர்த்தெடுத்தார் எனக்கூறினார். 

ஒரு நாள் தமக்கு "இது உனக்கு நான் தரும் பொக்கிசம், கவனமாக பேணிவா" என ஒரு பொதியினை தந்ததாகவும் அதனுள் ஸேர் ஜோன் வ்ட்ரூப் எழுதிய "ஸேர்பண்ட் பவர்" (Serpent Power) எனும் ஆங்கிலப்புத்தகம் இருந்ததாகவும் சாதனைக்கும் முன்னர் அதனை பலமுறை படித்து விளங்கி கொண்டதாகவும் கூறினார், சுவாமிகள் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் மூன்றிலும் திறமை பெற்றவர். சிவதொண்டன் ஆசிரியர் குழாம் ஒன்றினை அமைத்து அந்த நூலின் முகவுரையினை தமிழில் மொழிபெயர்த்து சிவதொண்டன் இதழில் வெளியிட்டதாகவும், பின்னர் அவற்றை தொகுத்து நூலாக வெளியிட ஸேர் ஜோன் வ்ட்ரூப் இன் மூல நூற்களை வெளியிட்ட சென்னை கணேஷ் அண்ட் கோவிடம் அணுகிய போது அவர்கள் ஏற்கனவே விற்காமல் இருந்த புத்தகங்களை காட்டி இந்த நூற்களுக்கு தற்போது கிராக்கி இல்லை (இது 1945 - 50 களில் ஆக இருக்கலாம்) எனக்கூறி நிராகரித்து விட்டனர் எனவும் கூறினார். அதன் பின்னர் அவற்றை தாம் தமது அச்சுக்கூடத்தில் சிறிய அளவில் பதிப்பித்து புத்தகமாக கட்டி வைத்திருப்பதாக கூறினார். தம்மிடம் ஒரு சில பிரதிகள் இருப்பதாகவும் எமக்கு ஒன்று தருவதாகவும் கூறினார். எமக்கோ மிக்க மகிழ்ச்சி! சுவாமிகள் கேட்காமல் தருகிறேன் என்கிறாரே! அவற்றை உடனடியாக தேடித்தரமுடியாமல் இருப்பதாகவும், சில நாட்களில் சிவராத்திரி வர இருப்பதால் ஆயுத்த வேலைகள் இருப்பதாகவும் கூறினார், அதன் பின்னர் அன்றைய நாள் விடைபெறும் போது அந்த வருட சிவராத்திரியினை சிவதொண்டன் நிலையத்தில் வந்து அனுஷ்டிக்கும் படியும் கூறினார். 

சுவாமிகள் கூறிய படி அந்த வருட சிவராத்திரி சிவதொண்டன் நிலையத்தில் சாதனையுடன் கழிந்தது. சிவராத்திரி கழிந்து ஒரிரு நாட்களில் சுவாமிகளை காணச் சென்ற போது அவர் மொழிபெயர்த்த தமிழ் பிரதியினை தந்து அவற்றை நன்கு கற்று விளங்கிக்கொள்ளும் படியும் அந்த கோட்பாட்டறிவு சாதனைக்கு அவசியம் ஆனால் அவற்றை பயிற்சிப்பதுதான் உண்மையான சாதனை, புத்தகத்தினை படிப்பதால் மட்டும் எதையும் அடைந்து விட முடியாது எனக்கூறி தந்தார், அந்த வேளையில் யோகர் சுவாமிகள் தமக்கு இந்த புத்தகத்தினை (ஆங்கில மூல நூலான Serpent Power) இனை தரும் போது கண்டிப்புடன் "குண்டலினி சக்தி நூலினை கவனமாக படி" எனக்கூறி பின்னர் "நூலில் ஒன்றுமில்லை, எல்லாம் இங்கே உள்ளது" என உடம்பை சுட்டிக்காட்டினார் என தமது குரு நாதன் தமக்கு கூறியதையும் ஞாபகப்படுத்தினார். நாமும் அந்த நூலினை பெற்றுக்கொண்டு சென்று வாசிக்கத்தொடங்கினோம், அதன் தமிழ் நடை கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கு முந்திய பழைய நடையில் இருந்தது, வழக்குச் சொற்கள் தற்போதையதாக இருக்கவில்லை. அதன் பின்னர் சுவாமிகளிடன் சென்ற நாட்களில் சுவாமிகள் தனது அனுபவத்தினையும் கூறினார். தாம் சாதனை செய்யும் போது குண்டலினி முடிச்சுக்களை பிளந்து (பிரம்ம கிரந்தி, விஷ்ணூ கிரந்தி, ருத்திர கிரந்தி எனப்படும் முடிச்சுக்கள்) கடப்பது கடினமானது எனவும், தமக்கு முதல் முறையாக பிரம்ம கிரந்தியினை குண்டலினி கடக்க முயலும் போது பெரும் அவஸ்தைப்பட்டதாகவும், அதற்காக தாம் குரு நாதரை அணுகிய போது கோபத்துடன் காலால் ஒரு உதை கொடுத்து "உனக்கு பிடிக்கு பிடி நெய்விடவேண்டுமோ?" என ஏசி அனுப்பிவிட்டாராம், அன்றைய தினத்திலிருந்து குண்டலினி பிரம்ம கிரந்தியினை பிளந்து நாசி நுனி வரை ஏறிவிட்டதாகவும் கூறினார். அதன் பின்னர் தமது சாதனையினால் தாம் குண்டலினி சக்தியினை எப்படி கையாள்வது என்பதனை சுய அனுபவத்தில் கற்றுக்கொண்டதாகவும், தம் குரு நாதர் "பிடிக்கு பிடி நெய் விடவேண்டுமோ என்று கேட்டதன் அர்த்தம் "பயிற்சியினை ஒழுங்காக இடையில் நிறுத்தி விடாமல், தொடர்ச்சியாக செய்து அனுபவ அறிவு பெறாமல் தொட்டதிற்கெல்லாம் குருவை நாடாதே" என்பதனையும் விளக்கினார். சுவாமிகள் வேறுபல குண்டலினி யோகம் சார்ந்த நுணுக்கங்களையும் உரையாடினார். அதன் பின்னர் அன்றைய தின முடிவில் "உமக்கு விருப்பம் இருந்தால் பங்குனி ஆயில்யம் அன்று குருபூசை, அதில் பங்கு பெற்றும், இந்த யோகத்தினை உபதேசிக்கிறோம்" என்றார். நாம் மறு பேச்சுப்பேசாமல் "சரி சுவாமி" என்றவாறு வந்து விட்டோம். 

இப்போது எமது மனம் இரண்டும் கெட்டான் நிலை குழப்பமாகிவிட்டது, ஏற்கனவே குரு நாதரிடம் காயத்ரி தீட்சை பெற்று சாதனை பயின்று வருகிறோம், எமது குரு நாதர் குண்டலினி யோகம் என்றாலே வாய் திறக்கமாட்டார், அதெல்லாம் என்னத்திற்கு இப்போ, பக்குவம் வரும்போது தானாக எல்லாம் தேடிவரும் அப்பா" என்பார். அப்படியென்றால் எனக்கு இப்போது பக்குவம் வந்துவிட்டதா? செல்லத்துரை சுவாமிகள் நாம் கேட்காமலே குண்டலினி யோகம் உபதேசிக்கிறேன் என்கிறாரே? அடுத்து குண்டலினி யோகம் பற்றி எமது குரு நாதர் கூறும் கருத்து தற்காலத்து யோகிகள் எனக்கூறும் கருத்தில் அல்ல, "குண்டலினி யோகம் செய்ய விரும்புபவன் தனது மண்ணுலக பரிணாமத்தினை முழுமையாக முடிக்க விரும்புபவன், குண்டலினி விழித்த நபர் மண்ணுலக பற்றினை அறவே விட்டிருப்பார், இப்படி விழிப்பிப்பதற்கு சித்தத்தினை முழுமையாக சுத்தி செய்து அதில் தெய்வீக சம்ஸ்காரங்களை பதிப்பித்து வைக்கவேண்டும், இல்லாவிடில் குண்டலினி விழித்தவுடன் சித்ததில் உள்ள சம்ஸ்காரங்கள் உடனடியாக செயல் நிலைக்கு வரும், உதாரணமாக யாரையாவது கொல்லவேண்டும் என்று மனதில் நீண்ட நாள் நினைத்து மறந்து விட்டிருப்போம், ஆனால் அந்த எண்ணம் சித்தத்தில் பதித்திருக்கும், இந்த நிலையில் குண்டலினி விழித்தால் அந்த மனிதன் கட்டாயம் அந்த நபரை கொன்று விட்டுத்தான் மறு வேலை பார்ப்பான், இப்படி தகுந்த சித்த சுத்தி இல்லாமல் குண்டலினி விழிப்பிப்பவர்களது வாழ்வு பரிணாம உயர்ச்சிக்குப்பதில் தாழ்வு அடைவதற்கான சாத்தியக்கூறும் உள்ளது எனக்கூறுவார். எனது சித்தத்தின் நிலை என்ன? எனது வாழ்வு எப்படி மாறும்? இப்படி பலவாறான குழப்பத்திற்கு மத்தியில் நான் தள்ளப்பட்டேன். இறுதியாக எனது சுய ஆராய்ச்சியின் பெயரில் எனதுவிருப்பங்களை எல்லாம் பட்டியலிட்டேன், நிறைய விருப்பங்கள் இருந்தது, 

ஏனெனில் அடிப்படையில் நான் ஆன்மாவினை அறிவதற்காக ஆன்மீகத்திற்குள் வரவில்லை! வெறும் ஆர்வமும், ஆராய்ச்சி புத்தியும்தான் என்னை இதற்குள் கொண்டு வந்தது, சிறுவயதில் முருக உபாசகரும் சித்த வைத்தியருமான தந்தையும் எனது இளைய சகோதரரும் கந்தர் சஷ்டிகவசம் படிக்கும் போது அதனை கட்டிலில் இருந்து கொண்டு கேலி செய்யும் பாங்கிலேயே அவதானித்து சில சமயம் நையாண்டியும் செய்வது உண்டு, அத்துடன் கோயிலிற்கு செல்வதில்லை, குரு நாதருடன் இருக்கும் காலத்திலும் கோயிலிற்கு சென்று வழிபட சுத்தமாக விரும்புவதில்லை, இன்றுவரை குடும்பத்தவர்களுக்காக மட்டுமே கோயில் செல்வதை செய்கிறோமோ அன்றி சுய விருப்பில் இல்லை, இந்த நிலையில் தற்செயலாக (இல்லை யாரோ ஒருவரின் பெருந்திட்டத்தின் காரணமாக என்பதே சரி) சரியாக 16 வயதில் எனது குரு நாதரினை சந்திக்கும் பாக்கியம் கிடைக்கும், அவரும் எனக்கு ஆன்மீகத்தினை உபதேசிக்கவில்லை, நிபந்தனை அற்ற அன்பினை மட்டுமே தந்தார், அவரை பார்க்கச்செல்லும் போதெல்லாம் உணவருந்தாமல் திருப்பி அனுப்பமாட்டர், சென்றால் குறைந்தது இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து விட்டுத்தான் அனுப்புவார், சிலவேளை மாதக்கணக்கில், அனுப்பும் போது கையில் வேண்டாம் என்றாலும் காசினை பொக்கடில் திணித்து தந்து அனுப்புவார், ரொம்ப மரியாதையாகத்தான் நடத்துவார். திருவிழாக்கள் வந்தால் எனக்கும் சேர்த்து கட்டாயம் புத்தாடை இருக்கும். காசு வேண்டாம் என்றாலும் "நீங்கள் உழைக்கவில்லையே, செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள்" என தருவார், பல முறை மறுத்தபோதும் தனது திருப்திக்காக தருவதாகவும் அதனால் இனிமேல் மறுக்காமல் வாங்கொள்ளும் படியும் கூறுவார். இப்படி அவரது நிபந்தனையற்ற அன்பு மூலமே எனக்கு இந்த துறையில் ஆர்வமும் சாதனை செய்யும் உத்வேகமும் ஏற்பட்டது. அவரே உபாசனை, தெய்வம் என்பதன் உண்மை அர்த்தங்களை படிப்படியாக உணரவைத்தார். அவரது பண்பினையும், அன்பினையும் எழுதுவது என்றால் தனியா ஒரு ப்ளாக்கீல் வருடக்கணக்கில் எழுதலாம். 

இனி விடயத்திற்கு வருவோம், செல்லத்துரை சுவாமி எமக்கு குண்டலினி யோக உபதேசம் தருகிறோம் என்றவுடன் மனதிற்கும் பெருமகிழ்வு ஏற்பட்டாலும் உலகத்துடனான பற்று அறுந்து விடுமோ என்று மனம் பயமுறுத்தியது, ஆகவே மனதின் வழி நான் நடப்பதற்கு முடிவேடுத்தேன்! எனது விருப்பங்களை எல்லாம் பட்டியலிட்டு யோகர் சுவாமிகளுக்கும், எனது குரு நாதரிற்கு மானசீகமாக அவை நிறைவேறும் வரை எனது உலகப்பற்று அறுந்து விடக்கூடாது என வேண்டிக்கொண்டேன், ஏனெனில் எனக்கு சிறுவயது முதல் துறவு என்றாலே பிடிக்காத ஒரு விடயமாகவும், மனதால் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத விடயமாகவும்தான் இருந்தது, துறவறத்தை வலிந்து தழுவுபவர்கள் ஏதோ ஒருவகையில் தமது ஆசைகளை அடக்கிக் கொண்டு பிற்காலத்தில் மனதினால் ஆட்டிப்படைக்கிறார்கள் என்று மனம் கூறிவந்திருக்கிறது. ஆதலால் எனது ஆசைகளை சரியான முறையில் பூர்த்தி செய்துகொள்ளவே நான் விரும்பினேன், இது எனக்கு தவறாக படவில்லை, தற்போது இதை நினைத்தால் சிரிப்பு வருகின்றது என்றாலும் அந்த நிலையில் எனது முடிவு சரியானதாகவே பட்டது. அதன் படி மானசீகமாக எல்லோரிடமும் பிரார்த்தித்து விட்டு எனது அன்றாட வேலைகளை கவனிக்கதொடங்கிவிட்டேன். 

சரியாக பங்குனி ஆயில்யத்திற்கு, செல்லத்துரை சுவாமிகள் வரச் சொன்ன நாளிற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக சாக்குப்போக்குச் சொல்ல முடியாத அளவிற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கிளம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. எனது மனம் உள்ளூர சொன்னது, நீ இன்னும் குண்டலினி யோகம் பயிற்சிப்பதற்கு பக்குவப்படவில்லை என்று, எனினும் எனது மனதிற்குள் ஆழமான ஒரு கேள்வி இருந்தது, நான் பக்குவப்படவில்லையானால் ஏன் செல்லத்துரை சுவாமிகள் எனக்கு உபதேசம் செய்வதாகக்கூறினார்? அவரும் யோக ஆற்றல் பொருந்தியவர்தானே, அவருக்கு தெரியாதா? எனினும் எதுவித குழப்பமும் இன்றி கிளம்பி குருநாதரிடம் சென்று விட்டேன். வழமையாக செல்லும் நாள் மட்டும்தான் நான் முடிவு செய்வது திரும்பி வரும் நாள் அவரே முடிவு செய்வார். ஒரு நாள் குருநாதரிடம் மாலைவேளைகளில் நடை செல்லும் போது, யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள போது எமக்கும் செல்லத்துரை சுவாமிகளுக்கும் நடந்த விடயத்தினை கூறினோம். 

அதற்கு அவர் சிரித்துகொண்டு "அவர் உங்களை ஆட்கொள்ளவிரும்புகிறார், உங்களால் ஆகவேண்டிய பணி ஒன்று உள்ளது, ஆனால் உங்களுக்கு தற்போது வேறுவேலை இருக்கின்றது, காலம் வரும்போது நடைபெறும்" என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார். அதன் பின்னர் நான் எனது கல்லூரிப்படிப்பு, குரு நாதரை பார்க்கச் செல்லுவது என எனது வேலையாகிவிட்டேன். அவர் தந்த தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் மட்டும் என்னுடன் பக்குவமாக இருந்தது. மீண்டும் இருவருடங்கள் கழித்து யாழ்ப்பாணம் செல்ல நேர்ந்த போது சுவாமிகளை சந்திக்க நேர்ந்தது. அது ஓரு அவசர தரிசனமாகவே இருந்தது, சுவாமிகள் நீண்ட மௌனத்தில் இருந்தார். ஒன்றும் பேசுவதற்கு முடியவில்லை, கால்களில் காயத்திற்கு கட்டுப்போடப்பட்டிருந்தது. அவரை வணங்கும் போது அமைதியான புன்சிரிப்புடன் எமது கண்களைப்பார்த்தார். நானும் உடனடியாக விடைபெற்றுக்கொண்டேன். பின்னர் ஒரு வருடம் கழிந்து சுவாமிகள் சமாதி அடைந்துவிட்டார் என அறிந்துகொண்டேன். சுவாமிகள் சமாதியடையும் போது சுவாமிகளுக்கு வயது 92. 

அதன் பின்னர் எனது வாழ்வு எனது குருநாதர் காட்டியவழியில் சாதனை, படிப்பு, வேலை, திருமணம் என சென்றவாறு இருக்கின்றது, இந்தப்பதிவு எழுதுவதற்கான மானசீக தூண்டுதல் எனது கேள்விகளுக்கான விடைகள் ஒரு வாரத்திற்கு முன்னிருந்து கிடைப்பதற்கான அறிகுறி தொடங்கி இன்று காலையில் கிடைத்தமையே! 

செல்லத்துரை சுவாமிகள் எமக்கு தந்த ஸேர் ஜோன் வ்ட்ரூப் எழுதிய "ஸேர்பண்ட் பவர்" இன் முன்னுரை புத்தகம் இரு ஆண்டுகளுக்கு முன்னதாக செங்கலடி சிவதொண்டன் நிலையத்தில் உதவி புரியும் நண்பர் ஒருவர் என்னிடமிருந்து பெற்று மீள்பதிப்பு செய்வதற்காக கொண்டு சென்றிருந்தார், நாமும் வேலை முடியும்மட்டும் அந்த புத்தகத்தினை கேட்கவில்லை. திடீரென சென்றவாரம் Serpent Power ஆங்கில மூல நூல் படிக்க நேர்ந்தது. அதைப்படிக்கும் போதுதான் எமக்கு மேலே பதிவில் கூறிய சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. அத்துடன் அந்த மூல நூலை தமிழில் மொழிபெயர்த்தால் என்ன எனற எண்ணமும் தோன்றியது. புத்தகத்தினை என்னிடம் வாங்கிச்சென்ற நண்பரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது எமது பிரதியினை திருப்பித்தரமுடியும் எனக்கூறி நேற்று கொண்டுவந்து தந்தார். 

இன்று காலை நித்திரை விட்டெழும்போதுதான் செல்லத்துரை சுவாமிகள் எமக்கிட்ட பணி என்னவென்று விளங்கியது. எனது குரு நாதர் கூறிய "அவர் உங்களை ஆட்கொள்ளவிரும்புகிறார், உங்களால் ஆகவேண்டிய பணி ஒன்று உள்ளது, ஆனால் உங்களுக்கு தற்போது வேறுவேலை இருக்கின்றது, காலம் வரும்போது நடைபெறும்" என்ற வார்த்தையின் அர்த்தமும் விளங்கியது. ஆம் அது ஸேர் ஜோன் வ்ட்ரூப் எழுதிய "ஸேர்பண்ட் பவர்"  என்பதாகத்தான் இருக்கும் எனபதனை அனுமானித்துக்கொண்டேன், அதற்குரிய முன்னுரைதான் இது! அதன் மொழிபெயர்ப்பினை விரைவில் எதிர்பாருங்கள்! இது சாதகர்களுக்கு அரிய ஒரு பொக்கிஷமாக கிடைக்கப்போகிறது. யோகர் சுவாமிகள் குண்டலினி யோகத்திற்கென முன்மொழிந்த அரிய நூல் தற்காலத்திய எளிய தமிழ் நடையில் தரலாம் என எண்ணுகிறோம். 

இந்தப்புரிதல் மிகச்சரியானது என்பதினை இந்தக்கட்டுரை முடிக்கும் இந்ததருவாயில் சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்னர் செல்லத்துரை சுவாமிகள் பங்குனி ஆயில்ய குருபூஜைத்தானே எம்மை வரச்சொன்னார்? தற்போது பங்குனி மாதம், எப்போது ஆயில்யம் வருகிறது என்று பஞ்சாங்கத்தினை பார்த்தால், நம்பமுடியாத ஆச்சரியம்! ஆம் இன்று தான் யோகர் சுவாமிகளின் குருபூசை தினம்! பங்குனி ஆயில்யம்! சித்தர்களின் ஆட்கொள்ளல்கள் எம்மால் உடனடியாக புரிந்துகொள்ள முடியாதவை! காலத்தினூடாக அனுபவத்தினூடாக ஞானத்தினை தருவதுதான் அவர்கள் கருணை! அந்தக்கருணையினை அனுபவிக்கவும், இந்தப்பணியினை திறம்பட செய்வதற்கு யோகர் சுவாமியாய், செல்லத்துரை சுவாமியாய், எமது குரு நாதனாய் இருக்கும் ஞானசக்தியினை இருத்தி இந்தப்பணியினை தொடங்குவோம்!


*********************************************************************
செல்லத்துரை சுவாமி அவர்களது வாழ்க்கைச் சுருக்கம் இங்கே 
*********************************************************************



Friday, March 15, 2013

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் 

பகுதி - 01
பகுதி - 02
பகுதி - 03
பகுதி - 04
பகுதி - 05
பகுதி - 06
பகுதி - 07

*******************************************************************************************************************************
இந்தப்பகுதியில் ஆயுர்வேதம் சுக்கிலம் எனப்படும் விந்தினைப்பற்றி என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

சுக்கில தாதின் உற்பத்தி:
கோடிக்கணக்கான எலும்பு மஞ்ஞை/மற்றும் நரம்புக் கலங்கள் சேர்ந்து சுக்கிலம் உருவாகிறது. ஆயுர்வேத சித்த உடல் தத்துவங்களின் படி உண்ணும் உணவிலிருந்து ஏழுவித உடலில் அடிப்படை தாதுக்கள் உருவாகின்றன. இந்த ஏழும் ரச,ரக்த,மாம்ச,மேதா, அஸ்தி, சுக்ல என்பனவாகும். நாம் உண்ணும் அன்னத்திலிருந்து இந்த தாதுக்கள் ஒன்றிலிருந்து ஒன்றாக உருவாக்கமடைகின்றன. இவற்றில் ஏழாவது தாது சுக்ல தாது எனப்படுவது. இது மற்றைய ஆறுதாதுக்களினதும் சுருக்கி, வலிமைப்படுத்தப்பட்ட தாது. இதனாலேயே இதன் பெறுமதி அதிகம்!

ஆயுர்வேத நூலாரின் படி சுக்கிலம் உடல் பூராகவும் பரவியுள்ளது. (சர்வ சரீர கதஹ)சுக்கிலமானது பாலில் நெய் கலந்திருப்பதுபோலும், கரும்பில் சக்கரைகலந்திருப்பதுபோலும் சுக்கிலம் உடலிற் கலந்திருக்கிறது. ஆகவே சித்தர்கள் கூறும் விந்தின் பொருளை இதனுடன் ஒப்பிட்டு நோக்க வேண்டும். உடல் பூராகவும் சுக்கிலம் உள்ளது எனக் கூறப்படுகிறது.

அடுத்து ஆணில் சுக்கிலமானது உடல்பூராகவும் நுண்மையாக படர்ந்திருந்து உடலுறவில் விந்துடன் வெளியேறுகிறது. இதன் மூலம் ஒரு சில விடயங்களை புரிந்துகொள்வோம்.

எமது உடல் உண்ணும் உணவுடன், பிரபஞ்ச பிராணசக்தியினையும் ஈர்த்து சப்த தாதுக்களாக வளர்ச்சியடைகிறது. இந்த தாதுக்கள் ஒவ்வொன்றும் செறிவாக்கப்பட்டு உடலினை வலிமைப்படுத்தி ஆன்மாவினை உயர்பரிணாமத்தினை நோக்கி செலுத்தும் பணியினை செய்கிறது.

இப்படி செறிவு படுத்தப்பட்ட (Concentrated)  தாதுவான சுக்கிலம் அல்லது விந்து உடல் பூராகவும் நுண்மையாக பரவியுள்ளது. இந்த நுண்மையான பரவல் சாதாரண உடலுறவின் மூலம் வெளியாகிறது. இது மேலே கூறப்பட்ட உதாரணத்தில் பாலில் நெய் கலந்திருத்தல் என்றால் பால் உடல், நெய் சுக்கிலம், சாதாரண உடலுறவில் பாலை கடைந்து நெய் எடுக்காமல் பழுதாக்குவது போலவே மனிதன் வாழ்கின்றான். ஆனால் தாந்திரீகம், பரியங்க யோகம் பயின்றவன் இந்த உடலெங்கும் பரவியுள்ள சுக்கிலத்தினை சரியான பொறிமுறையான கடைதல் (யோகசாதனை) மூலம் உயர்ந்த மனோ ஆன்ம சக்தியான நெய்யினை பெற்றுக்கொள்ளவேண்டும்.

பால் கறந்தபின்பு குறித்த நேரத்திற்குள் காய்ச்சி, உறையவைத்து தயிராக்கி, தயிரை கடைந்து நெய்யாக்கிக் கொள்ளவேண்டும். அல்லாமல் அதனை ஒரே பாத்திரத்தில் இட்டு பல நாட்கள் வைத்திருந்தால் அது கெட்டு நாற்றம் எடுக்கத்தொடங்கி விடும். இதைப்போலவே சுக்கிலத்தின் தன்மையும், உண்ட அன்னமும், பிராணசக்தியும் உடலினுள் சப்த தாதுக்களை உருவாக்கி, ஒன்றில் இருந்து ஒன்று செறிவாக்கி, இறுதியாக மன,பிராண, புத்திகளை வலிமைப்படுத்தி ஆன்மாவினை உயர்ந்த சக்தியாக்கும் சுக்கிலத்தினை உருவாகிறது. இதனை சரியான முறையில் கடைந்து பக்குவப்படித்தி நெய்யாக்கி பயன்படுத்த முடியும் எனில் நல்லது, இல்லாமல் அதனை வலிந்து அடக்காமல் இயல்பான வழியில் விட்டுவிடவேண்டும். அப்படி அடக்கினால் பால் கெட்டு வீணாகி விடுவது போல் உடலிலும் மனத்திலும் நோயினை தோற்றுவித்து விடும். இதனை உடலில் வரும் பதின்நான்கு வேகங்களை அடக்குவதால் தோன்றும் நோய்களைப்பற்றி சித்தர்கள் விவரித்துள்ளதன் மூலம் ஒப்பீட்டு அறியவும்.

அடுத்து ச்ரகர் முதலான ஆயுர்வேத நூலார் பெண்களின் உடலில் உள்ள சுக்கிலத்தினைப்பற்றிய குறிப்பினை தருகிறார்கள். அது "சுக்கிலதாதுவானது உடலுறவின்போது பெண்களில் சுரந்து வெளியாகிறது, ஆனால் அது கர்ப்ப உற்பத்தியில் பயன்படுவதில்லை" என்பதாகும். இதன் மூலம் சுக்கிலம் என்பது உடல் சுரப்பும் அதனுடன் கலந்த பிராண சக்தியே என்பது புலனாகிறது. ஆயுர்வேதத்தில் சித்தர்கள் வலியுறுத்திக்காட்ட வந்த விடயம் "உடலுறவில், விந்து வெளியேற்றத்தில் அதிக பிராணசக்தி உடலில் இருந்து வெளியாகின்றது" என்பதே அன்றி விந்தினை அடக்குவதை அல்ல! இப்படி வெளியாகும் சக்தி சரியான முறையில் ஈடுகட்டப்படாவிட்டால் உடல் நோயினை, வயதாதலை நோக்கி விரைவாகச்செல்லும் என்பதினை புரிந்து கொள்ளவேண்டும்.

சுக்கிலத்தினை கடைந்து நெய்யாக்கும் செயன்முறைதான் "தியானம்", தியானம் என்பதன் பொருளும் பலரும் பலவாறாக விளங்கப்படுத்தி இருக்கிறார்கள், அதுபற்றி வேறொரு பதிவில் தனியாக விளக்குவோம்.

இங்கு நாம் கூறவரும் விடயத்தின் சுருக்கம் இதுதான், நீங்கள் சரியான பிரம்மச்சரியம் அனுஷ்டிக்க வேண்டுமாயின் ,  சரியான தியானத்தினை மட்டும் செய்யுங்கள். அதனைவிடுத்து வேறு எந்த செய்முறையும் செயற்கையான முறையில் உங்கள் உடலின் வேகத்தினை அடக்கும் செய்முறைதான். இப்படி தியானம் செய்யும் போது விந்து நீக்கும் காம எண்ணம் மனதில் எழுந்தால் அதனால் சலனமுற்று தவறு செய்ததாக வருந்தி தாழ்வுமனப்பான்மை கொள்ளாமல், மீண்டும் மீண்டும் முயற்சிக்கவேண்டும். அப்படி முயற்சிக்கும் போது ஒரு நாள், ஒரு பிறப்பில் அது கைகூடும், அதுவன்றி விவேகானந்தர் பிரம்மச்சாரியாக இருந்தார் என்று நானும் அதுபோல இருப்பேன் என்று உங்கள் இயல்புக்கு மாறாக இருக்க முயலக்கூடாது,விவேகானந்தர் போன்றோர் பல பிறப்புகளில் எடுத்த முயற்சி, நீண்ட தியான சாதனையே அவர்களை அந்த நிலைக்கு கொண்டுவந்தது என்று உணர்ந்து சரியான வழியில் முயற்சிக்கவேண்டும். அதேவேளை மனிதனின் செயற்பாட்டில் உடலுறவில்தான் அதிக சக்தி வெளியாகிறது என்பதாலேயே அதன் முக்கியத்துவத்தினை  வலியுறுத்தியுள்ளார்கள்.

இப்படி ஆன்மீகத்தில் எதுவும் விருப்பமில்லை என்றால் அதீத உணர்ச்சிக்கு அடிமையாகி (obsession), உள்ளீட்டினை (Input) விட அதிக வெளியீடு(output) செய்யாமல் மிதமாக(balanced) காமத்தினை அனுபவிக்க வேண்டும்.

Wednesday, March 13, 2013

காம ரகசியம் 07: விந்து/சுக்கிலம் என்பதன் பொருளை விளங்கிக்கொள்ளுதல்

எமது பதிவுகளில் நாம் எழுதும் இந்தப்பதிவுகள் காமத்தினை அடக்கி உடல் மன நோய்கள் அடையாமல் எப்படி யோகமாக்கி உயர்ந்த சக்தியாக பயன்படுத்துவது என்ற அறிவினை இந்தத்துறையில் ஆர்வம் கொண்டவர்கள் அறிவதற்காக வேண்டி எழுதுகிறோம். அந்த வகையில் இன்றைய சமூகத்தில் சரியாக படிக்காத சித்த வைத்தியர்களாலும், மேலைத்தேய சிந்தனையாலும் எமது முன்னோர்கள் கூறிய ஒழுக்கங்களை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அதில் சித்தர்கள் கூடிய விந்து, பித்தம் என்ற‌ வார்த்தைகள் தற்கால நவீன மருத்துவக் கருத்துகளுடன் ஒப்பிட்டு பின்னர் அதன் மூலம் சித்தர்பாடல்களின், மருத்துவத்தின் பொருளினை நோக்கும் போது குழம்பி வந்த பெருங்குழப்பமே எஞ்சுகிறது.

உதாரணமாக பித்தம் என்றால் சித்த ஆயுள் வேதத்தில் கருதும் பொருள் வேறு, அதே தற்காலத்தில் கல்லீரலினால் சுரக்கப்பட்டு கொழுப்பினை சமிபாடடைய செய்யும் பித்தம் என்ற பொருளில் மட்டும் நோக்கினால்  ஏற்படும் புரிதல் வேறு.

இப்படி தவறாக விளங்கிக்கொள்ளப்பட்ட பொருள்தான் விந்து/சுக்கிலம் என்ற வார்த்தைகளும். இந்ததவறு தமிழர்களை குழப்பிய புண்ணியம் தமிழ் நாட்டில் இருந்த தனித்தமிழ் புரட்சியாளர்களுக்கும் பங்கிருக்கிறது. எமக்கு தெரிய எமது பாட்டனார்காலத்து வைத்தியர்கள், பண்டிதர்கள், புலவர்கள் சரியான அறிவு பெறுதலுக்கு எதுவித காழ்ப்புணர்வு நிலையும் இன்றி தமிழ்,சமஸ்கிருதத்தில் புலமை வாய்ந்தவர்களாக இருந்தமையினால் புரிதலில் ஏற்படும் தவறுகளை இலகுவாக அறிந்துகொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள். தனித்தமிழையும், தர்க்க அறிவினால் மட்டும் கட்டியெழுப்பப்பட்ட நவீன மனதினையும் வைத்துக்கொண்டு சித்தர்களது பாடல்களது பொருளை தெரிந்து கொள்ள  நினைக்கும் தற்காலத்து சிந்தனாவாதிகள்  குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களாகவோ, கிணற்றுத்தவளைகளாகவோதான் இருப்பார்கள்.இதனால் சும்மா பழம் பெருமை பேசலாமேயன்றி பிரயோசனம் எதுவும் இல்லை. சித்தர்களது வரலாற்றினை எடுத்து நோக்குபவீர்களாக இருந்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். போகர் சீனா,யோகபு எனும் யூகி முனி அரபியா, கோரக்கர் கோரக்பூர் என ஓவொருவரும் வேறு வேறு கலாச்சாரத்தில் இருந்து வந்து தமிழில் எழுதி வைத்துச்சென்றார்கள். தமிழில் உள்ளதற்காக அனைத்தும் தமிழர்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்று கூறமுடியாது. இதற்கு உதாரணமாக தற்கால நிலையினைவிளங்கிக்கொள்ளலாம். தற்போது அறிவியல் கல்விகள், கண்டுபிடிப்புக்கள் எல்லாம் ஆங்கிலத்தில் உள்ளது, இரண்டாவது மொழியாக பிரஞ்சு மொழி இருக்கிறது. இரண்டையும் கற்றுக்கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளலாம், உலக அரங்கில் எமது அறிவினை பகிரவும் விருத்தி செய்து கொள்ளவும் முடியும். அதுபோல் அக்காலத்தில் எல்லாக்கலைகளும் பாரததேசத்தினை மையமாக வைத்து தமிழிலும், சமஸ்கிருதத்திலும் ஆராயப்பட்டு கற்பிக்கப்பட்டு வந்திருக்க வேண்டும். அவற்றை பல மொழி, கலாச்சாரத்தினை சார்ந்தவர்களும் செய்திருக்க வேண்டும். இந்த வரலாறும் உண்மையினையும் மற்றைய கலாச்சாரத்துடன் ஒப்பிடுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம். நாம் இங்கு கூறவந்ததன் கருத்து; சித்தர்களது பாடல்களை, அறிவியலை பரந்த மனதுடன் எதுவித முன் துணிபுகளும் இன்றி அணுகவேண்டும் என்பதனை வலியுறுத்திக்கூறவே!

இந்த வகையில் விந்து/சுக்கிலம் என்பது பற்றி எவ்வாறான தவறான கருத்து தமிழர்களிடையே விதைக்கப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். இதனை சரியாக புரிந்து கொள்வதற்கு நாம் ஆயுர்வேத மூல நூற்களை சற்று ஆராயவேண்டும்.

Tuesday, March 12, 2013

காம ரகசியம்: 06 கட்டுப்படுத்தப் பட்ட பிரம்மச்சரியம்

இன்றைய இளைஞர்களில் குறிப்பாக ஆன்மீக நம்பிக்கையுடையவர்கள், யோகம் பழகவேண்டியவர்கள், சாதனை செய்து இறை அருள் பெறவேண்டும் என நினைப்பவர்களுக்கு உள்ள விடைதெரியாத பிரச்சனை "பிரம்மச்சரியம்",மிக அதிகமாக தவறாக விளங்கிகொள்ளப்பட்ட விடயம் பிரம்மச்சாரியம், இதனை விந்தடக்கம் என்று கூறிகிறார்கள், இது முற்றாக தவறான விடயம். பிரம்மத்தினை ஆச்சரிக்க (சார்ந்திருக்க) எதுவித முயற்சியும் இல்லாமல் நடப்பதே விந்தடக்கமே அன்றி வலிந்து விந்து வீணாகிவிடும் என அடக்குவது பிரம்மச்சரியம் ஆகாது. ஆக இந்தப்பதிவில் பிரம்மச்சரியம் பற்றிய ஒரு சில கருத்துக்களைப் பார்ப்போம்.

பிரம்மச்சரியம் என்பது இயல்பாக வரவேண்டியது, வலிந்து அடக்குவதல்ல,அப்படி அடக்கப்பட்ட காம உணர்வு எந்தவிதத்திலும் மனிதனுக்கு பயன்படமுடியாது. ஒரு அழுத்தமாக ஆழ்மனதில் பதிவுற்று வேறு ஒரு வழியில் வெளிப்படவே முயலும். இதனால் உள/மனப்பிரச்சனைகள் அதிகரிக்குமே அன்றி எதுவித ஆன்ம மன முன்னேற்றம் இருக்காது.

சித்தர் இலக்கியத்தில் விந்து விட்டான் நொந்து கெட்டான் என்று உள்ளதே அப்படி என்றால் அது பிழையா என்று கேட்பவர்களுக்கு அதே சித்தர்கள் அடக்ககூடாத உடலின் 14 வேகங்களி ரேதஸ் எனும் விந்தும் ஒன்று என்பதனை அறிவார்களா? சித்தர்கள் எல்லாவற்றையும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள், எதையும் முழுமையாகப் படிக்காத அறிவாளிகள்தான் அதனை பிழையாக வியாக்கியானப்படுத்தி விட்டார்கள்.
அப்படியானால் விந்தினால் ஒரு பிரயோசனமும் இல்லையா? அப்படியில்லை, ஒரு மனிதனின் ஆன்ம முன்னேற்றத்திற்கோ, பௌதீக முன்னேற்றத்திற்கோ உரிய மாபெரும் சக்தி விந்தில் தான் இருக்கிறது. சாப்பிடும் அன்னம், சப்த தாதுக்களாக மாறி இறுதியில் அதிஉயிர்ச்சத்து உள்ள விந்தாகவே மாறுகிறது. இத்னை வலிந்து கட்டுப்படுத்துவதே தவறு என்பதனை விளங்கி கொள்ளவேண்டியது.

இதனை சற்று விளங்கிக்கொள்வோம், இந்த அரிய சக்தியினை எப்படி உயர்ந்த சக்தி ஆக உருமாற்றுவதுதான் பிரம்மச்சாரியமே அன்றி வலிந்து விந்தினை உடலில் இருந்து வெளியேறாமல் தடுக்கும் எதுவும் பிரம்மச்சரியம் இல்லை.

இப்படி சாத்தியமாகக்கூடிய ஒரே சாதனை தியானம் மட்டுமே, தியானத்தின் மூலம் தானகவே மனம் பிரம்மத்தினை ஆச்சரிக்க, விந்து கட்டுப்பட்டு உயர் சக்தியாக உருமாறும். உண்மையாக சரியான தியானத்தினை செய்து வரும் யாரும் விந்தடக்கத்தினைப்பற்றியோ, பிரம்மச்சரியத்தினை பற்றியோ கவலைப்படத்தேவையில்லை!

யோகம் பழகவிரும்பும் ஒவ்வொருவரும் தமது உடலினதும், மனதினதும் இயக்கங்களை சரியான முறையில் புரிந்துகொண்டு தமக்கு சாதகமாக்கும் வழியில் முயலவேண்டுமே அன்றி போர் புரியக்கூடாது!
ஸத்குருவே போற்றி

Monday, March 11, 2013

திரிபலாவின் மகிமை - 06


*****************************************************************************************************
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்

பகுதி 01
பகுதி 02
பகுதி 03
பகுதி 04
பகுதி 05
*****************************************************************************************************

சித்தர்களின் கருத்துப்படி எல்லா நோய்களுக்கும் காரணம் வயிறு, வயிறு சுத்தமாக இருந்தால் நோய்வராது என்பது சித்தர்களின் நோயணுகாவிதிகளில் ஒன்று, சாதாரண நிலையில் சரிவர இயங்கும் வயிறு நோயுற்ற நிலையில் வயிற்றில் சேரும் நச்சுப்பொருட்கள் நோயினை தோற்றுவிக்கும், இதனை ஆமம் என்பார்கள், இந்த ஆமத்தினை ஒவ்வொரு நாளும் வெளியேற்றுபவர்களுக்கு நோய் அண்டாது, அப்படி வந்தாலும் விரைவில் குணமாகி விடும். இந்த ஆமம் தோன்றுவதற்கு காரணம் சரியாக சீரணிக்காத உணவுகள் ஆகும். இந்த ஆமம் வாத, பித்த கபத்தின் சமனிலையினை கெடுக்கும். இதனால் நோய் உண்டாகும். இந்த தோஷ சமனிலை இன்மையினால் உடலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை வாசகர்கள் எளிதாக விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் ஆங்க்கிலத்தில் தருகிறோம்; 
  • Indigestion - அஜீரணம்
  • Flatulence - வாய்வுக்கோளாறு
  • Constipation - மலச்சிக்கல்
  • Increased cholesterol - கொலஸ்ரோல் அதிகரிப்பு
  • High blood pressure - உயர் இரத்த அழுத்தம்
  • Blood related disturbances - இரத்த நோய்கள் 
  • Heart related problems - இதய நோய்
  • Decreases body immunity - உடலின் நிர்ப்பீடனம் குறைதல் 
  • Respiratory disorder - சுவாச நோய்கள்
  • General body debility - உடலின் பொதுவான நரம்புத்தளர்ச்சி
  • Early aging - இளமையில் வயதான தோற்றம்
  • Liver related ailments - ஈரல் நோய்கள்
  • Diabetes - நீரிழிவு
  • Inflammation or edema in the body - நோய்த்தொற்று
  • Dull skin and skin problems - தோல் நிறம்மங்குதல், நோய்கள்
  • Decreased vision- பார்வைக்கோளாறு
  • Chronic headaches - நீண்டகால தலைவலி

இவற்றுக்கெல்லாம் தீர்வு ஏதும் உண்டா என்றால் அதற்கெல்லாம் ஒரே எளிய தீர்வு "திரிபலா" பொதுவாக திரிபலாவினை இலகுமலகாரி ஆகத்தான் பலரும் கருதுகின்றனர். அது அதன் ஒரு செய்கை மட்டுமே, அதன் செய்கை பலது அதுபற்றி சுருக்கமாக பார்ப்போம். 

உவர்த்தன்மை (Saline purgative): திரிபலையில் உள்ள உப்புத்தன்மை நீரினை உறிஞ்ச்சும் தன்மையுடையது, ஆதலால் அது குடலிற்கு செல்லும் போது சுற்றுப்புறத்தில் உள்ள நீரினை உறிஞ்சி மலத்தினை நீர்த்தன்மை உடையதாக்கும்,இதனால் மலச்சிக்கல், மலமிறுகுதல் போன்றவை நிகழாது. 

இலகு மலகாரி (Laxative): மலத்தினை இலகுவாக்கி குடலில் இருந்து வெளியேற்றும். இந்தப்பண்புகளால் குடலில் உள்ள ஆமத்தினை திரிபலா மெதுவாக அகற்றுகிறது, அதன் மூலம் உடலின் நோய்க்காரணிகளை அகற்றுகிறது. 

Sunday, March 10, 2013

சித்தர்களின் சர்வரோகங்கள் நீக்கும் புருவமத்திசாதனை முறை விளக்கம்(4448 நோய்களும் குணமாக‌)))))))


இன்று எங்குபார்த்தாலும் நோய், நோயின்றி வாழதலே வாழ்வின் பெரும் சிறப்பு, சித்தர்கள் கூறிய மருத்துவத்திலிருந்து இன்று நாம் பல லட்சம் செலவு செய்யும் ஆங்கில மருத்துவத்திற்கு சென்று விட்டோம். இன்று மருத்துவத்துறை பெரும் வியாபாரத்துறை ஆகிவிட்டது. இன்றைய நிலையில் உலகின் அதிகூடிய வருமானம் தரும் வியாபாரத்துறை மருந்துகளும் ஆயுதங்களும் என ஆய்வுகள் சொல்லிகின்றன. சாதாரணமாக நகர்புறத்தில் சிறு சளி, காய்ச்சம் என்றால் மருந்தெடுக்கச் சென்றால் 5000.00 ரூபாய் இன்றி திரும்பி வர இயலாது. வருமானம், அதற்கு மேற்பட்ட பொருளாதரச் சுமை இத்துடன் நோயும் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. அதிலிருந்து மீள்வது குதிரைக்கொம்புதான்! இந்த நிலை தமிழ் - இந்திய பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு வரக்கூடாதா நிலை! ஏனென்றால் வருமுன் காக்கும் நிலையினையும் சொல்லி, வந்தாலும் எல்லோரும் இலகுவாக குணமாக்கிக் கொள்ளக்கூடிய வழிமுறைகளை சித்தர்கள் வகுத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார்கள். ஆனால் அவற்றை படித்து பயன்படுத்துபவர்களோ எவருமிலர்! 

சித்தர்களது மருத்துவம் எளிமையானது, எல்லோருக்கும் பயன்படவேண்டும் என்று சொல்லிவைத்தார்கள், எம்மவர்களுக்குத்தான் எளிமையானவுடன் ஏளனமாகவும் நினைக்கும் பண்பு வந்துவிடுமே! இன்று எம்மை தொடர்பு கொள்பவர்கள் எல்லாரும் நாம் சித்தர் நூற்களை எல்லாம் படிக்க முயற்சித்தோம் ஆனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை என புலம்புகிறார்கள்! ஏன் நாம் எளிமையாக சிந்திக்கும் பழக்கத்தினை இழந்து விட்டோம்! மேற்கத்தைய மனதுடன் தான் சித்தர் நூற்களை அணுகப்பார்க்கிறோம். அவை தர்க்க ரீதியாக எழுதப்பட்ட நூற்கள் இல்லை! இயற்கையுடன் இயைந்தவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எழுதிவைத்துள்ளார்கள். நீங்கள் இந்த இயற்கையும் ஒன்றிய மனம், பண்பு இல்லாவிட்டால் உங்க்களுக்கு அவர்கள் கூறீய பொருள் விளங்காது. வேண்டுமென்றால் அப்படிக் கூறியுள்ளார்கள், இப்படிக்கூறியுள்ளார்கள் என அறிவினை காட்டலாமேயன்றி பயன் பெற இயலாது. இது வெறுமனே நாம் கூறவில்லை, அனுபவத்தில் கூறுகிறோம். சிறுவயதுமுதல் சித்தர் இலக்கியமும் குருவிடமும் இருந்தபோது எம்மை குரு நாதர் வலிந்து சூழலியல் விஞ்ஞானம் கற்க செய்தார், அப்போது எனக்கு வேறு சில துறைகளில் ஆர்வம் இருந்தாலும் "இல்லையப்பா, இதைப்படியுங்கள்" என்று வலியுறுத்திக்கூறினார்கள். அந்ததுறை எனது இயல்புக்கு ஏற்றவாறு இருந்ததோடு ஆர்வத்துடன் முதுமாணி பட்டம் வரை படித்தேன், அப்போதுதான் விளங்கியது அடபாவிகளா நமது முன்னோர்கள், சித்தர்கள் கூறியதையெல்லாம் பொருட்படுத்தாமல் தலைக்கு மேல் போகும் வரை இருந்து விட்டு இன்று விஞ்ஞானத்தால் அதானை சரிப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று. 

சித்தர்கள் மனித உடலுக்கும் அவனைச் சூழ உள்ள இயற்கையிற்கும், இந்த பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பினை தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். உடலில் வரும் பாதிப்புகள் பஞ்சபூத சம நிலை இன்மையினால் வருவது, இந்த பஞ்ச பூதங்கள் ஸ்தூல வடிவாக உடலாக பரிணமிக்கும் அதே வேளை, சூஷ்ம உடலிலும் ஆறாதாரங்களாக பரிணமித்துள்ளது. அவற்றின் இயல்பு வருமாறு;
  • பிருதிவி பூதம் - மூலாதாரம்
  • அப்பு (நீர்) பூதம் - சுவாதிஷ்டானம்
  • தேயு (தீ) பூதம் - மணிப்பூரகம்
  • வாயு பூதம் - அநாகதம்
  • ஆகாய பூதம் - விசுத்தி
  • மனம் - ஆக்ஞா 

இதில் ஒவ்வொரு பூதத்தின் குறைபாடுகள் அந்த ஆதாரங்களின் சக்தி குறையும் போது சூஷ்ம உடலில் உருவாகி நீண்டகாலத்திற்கு பின்னர் ஸ்தூல உடலிற்கு வரும். இந்த அடிப்படையிலேயே ஒரு சித்தவைத்தியர் தனது சிகிச்சையினை செய்யவேண்டும் என்பது நாம் குருமுகமாய் அறிந்த ஒன்று. சரி வைத்தியர் இவற்றையெல்லாம் அறிந்திருக்கவேண்டும், சாதாரண பொதுமகனான நான் எப்படி இதையெல்லாம் அறிந்து பயன்படுத்துவது! ஏற்கனவே மேல்பகுதியில் கூறிவிட்டீர்கள் இயற்கையுடன் இயைந்து வாழவில்லையென்றால் சித்தர் நூற்களில் உள்ளவை விளங்காது என்று பயமுறுத்துகிறீர்கள்! சித்தர்கள் எப்போதும் இரங்கிய மனம் உடையவர்கள், தாமறிந்தவற்றை இந்த உலகம் பயன்படவேண்டும் என்ற உன்னத நோக்கம் உடையவர்கள். அதனாலேயே இவ்வளவு நேரம் செலவளித்து இலட்சக்கணக்கில் பாடலாக பாடிவைத்துவிட்டு போயிருக்கிறார்கள். அவர்கள் பாடிய பாடல்களில் துலாவினால் அரிய இரத்தினங்களைப் பெறலாம். இனி விடயத்திற்கு வருவோம். 

மேலே கூறிய ஐம்பூதங்களுக்கும் சூஷ்ம உடலில் உள்ள ஆதாரத்திற்கும் உள்ள தொடர்பினை பார்த்தீர்களானால் ஆறாவதான ஆக்ஞா மனத்துடன் தொடர்பு பட்டுள்ளது. மனம் என்பதே மனிதன் இந்த பிரபஞ்சத்துடன், ஐம்பூதங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு சாதனம். இது பற்றி எமது குரு நாதர் எழுதியுள்ள மானசயோகம் பகுதி 1 & 02 வாங்கி படிக்கவும். பல அரிய சாதனாமுறைகள், சித்திகள் பெறும் முறைகள் விளக்கப்பட்டுள்ளது. இங்கு பலகாலம் நோய்களால் அவதிப்படுபவர்களுக்கும் உதவக்கூடிய ஒரு முறையினை கூறுகிறோம். 

இந்தமுறையினை பயிற்சிப்பதற்கு உங்களுக்கு எந்தவிதமான தெய்வ நம்பிக்கையும் இருக்கத்தேவையில்லை, எதுவித கட்டுப்படும் இல்லை, மனதில் எந்தவித கேள்விக்கும் இடம் கொடுக்காமல் தொடர்ச்சியாக பயிற்சி செய்து வரவேண்டும். அவ்வளவே. 

இது திருமூலர் கூறிய ஒரு எளிய முறை தியானப்பயிற்சி; சித்தர்களின் பாகுபாட்டி மனிதனுக்கு தோன்றக்கூடிய வியாதிகள் 4448, இதற்குமேல் எந்த வியாதியும் இல்லை, இன்று ஆங்கிலப் பெயரிட்டு அழைக்கப்படும் பல்லாயிரக்கணக்கான வியாதிகளும் இவற்றுக்குள் அடங்கிவிடும். இந்தப்பயிற்சியால் 4448 வியாதிகளும் இல்லாது போய்விடும் என்பது திருமூலே வாக்கு, இந்த சாதனை பற்றிக் கூறும் பாடம் வருமாறு; (திருமூலர் ஞானக்குறி 30, பாடல் 14) 

நாலாயிரத்தி நானூத்தி நாற்பத்தெட்டு
மாலாம் வியாதியும் மாத மடிந்திடும்
பாலாங் குழந்தையாம் பார் புருவ மையத்தின்
மூலா மனத்தை மூட்டு கண் மூக்கிலே

இதன் பொருள் வருமாறு: மனதினை கண்ணும் மூக்கும் சந்திக்கும் மூட்டில் (மூட்டு கண் மூக்கிலே) அதாவது புருவமத்தியில் வைத்து தியானித்து வர 4448 வியாதிகளும் மடிந்து குழந்தையைப்போன்ற இளமை தோன்றும் என்கிறார். 

இதனை எப்படி பயிற்சிப்பது?
  • அதிகாலை காலை 04.00 - 06.30 வரை மிக உகந்த நேரம், அல்லது மாலை 06.00 - 07.00 மணிவரை
  • முதலில் அமைதியாக ஓரிடத்தில் முதுகலும்பு வளையாதவாறு நேராக நாற்காலி ஒன்றிலோ, அல்லது நிலத்தில் கால்மடித்து உட்காரமுடியுமானால் அவ்வாறோ இருக்கவும். அல்லது சாய்வு நாற்காலியில் முதுகினை நேராக சாய்த்தவாறும் செய்யலாம். படுத்திருந்து செய்யும் போது தூக்கம் வருவதற்கான வா
  • பின்பு கண்களை மூடி புருவமத்தியினை நோக்கி செலுத்தவும், இது பொதுவாக நீங்கள் ஏதாவதொன்றினை ஆழமாக யோசிக்கும் போதோ கண்கள் செல்லும் நிலையினை அவதானித்தால் செய்வதற்கு இலகுவாக இருக்கும். கண்கள் வலிக்காமல் இருக்கும் நிலையே சரியான நிலை, கண்கள் வலியெடுத்தால் நீங்கள் உங்கள் நிலைக்கு மீறி முயற்சிக்கிறீர்கள் என்று அர்த்தம். இப்படி செய்யும் போது ஆரம்பத்தில் நீங்கள் மனத்திரையில் இருளாகவும், சிறிது நாட்களுக்கு பின்னர் ஒளியு தோன்ற ஆரம்பிக்கும். அந்த ஒளிதெரியும் நிலையிலிருந்து உங்கள் நோய் படிப்படியாக குணமாக ஆரம்பிக்கும். 
  • இதற்கு முன்னர் கீழ்வரும் வாசகத்தினை எழுதி மனப்பாடம் செய்துகொள்ளவும், ஆரம்ப நாட்களில் மறந்தால் கண்களைத்திறந்து வாசித்து மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ளவும். 
  • எனது நோய் பிரபஞ்ச சக்தியின் ஆற்றலால் குணமாகப் போகிறது, குணமாகிக்கொண்டு வருகிறது, குணமாகி விட்டது, இந்த வாசகங்களை உச்சரிக்கும் போது அது நடக்கும் போது சூழல், உடல் எப்படி இருக்குமோ அதனை மனக்கண்ணில் பார்த்து வரவும். 
  • நாட்பட்ட புற்று நோய், நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு தொடர்ச்சியான 40 நாட்கள் பயிற்சியின் பின்னர் நிச்சயமாக உங்கள் உடல் நிலையில் முன்னேற்றம் காண ஆரம்பிக்கும். 
  • சளி போன்ற வியாதிகள் அனுபவத்தில் அடுத்த நாளே குணமாகும் என்பது அனுபவ உண்மை. 


இதனை விடாமல் செய்து பலனினை எமக்கு அறியத்தாருங்கள், சந்தேகங்கள் இருப்பின் ஈமெயிலிற்கு எழுதுங்கள் அதன் பின்னர் தொலைபேசியில் உரையாடி தெளிவுபெறலாம்.

ஸத்குரு பாதம் போற்றி!

Saturday, March 09, 2013

கடையிற் கிடைக்ககூடிய சித்தர்களின் அரிய காயகற்பமுறை - 05

நெல்லிக்காய் பற்றிய அறிவியல் தகவல்கள்

திரிபலாவில் மூன்றாவது சரக்கான நெல்லியின் மகத்துவன் பற்றி இந்தப்பதிவில் பார்ப்போம். 

நெல்லியில் உள்ள இரசாயன இயல்புகள் பின்வருமாறு;
The phytochemicals of this plant include hydrolysable tannins (Emblicanin A, Emblicanin B, punigluconin, pedunculagin)[35], flavonoids (Kaempferol 3 O alpha L (6” methyl) rhamnopyranoside, Kaempferol 3 O alpha L (6” ethyl) rhamnopyranoside), alkaloids (Phyllantidine and phyllantine). Gallic acid, ellagic acid, 1‐Ogalloyl‐ beta‐D‐glucose, 3,6‐di‐O‐galloyl‐D‐glucose, chebulinic acid, quercetin, chebulagic acid, corilagin together with isostrictinnin, were isolated from the fruit of Phyllanthus emblica.

A new acylated glucoside was isolated from the methanolic extract of the leaves of P.emblica. Their structures were named as apigenin 7‐O‐(6”‐butyryl‐beta)‐glucopyranoside, along with four known compounds gallic acid, methyl gallate, ,2,3,4,6‐penta‐Ogalloylglucose and luteolin‐4'‐Oneohesperiodoside. 

The seeds of P. emblica contain fixed oil, phosphatides and a small quantity of essential oil. In addition, the leaves contain gallic acid, ellagic acid, chebulagic acid and chebulinic acid. Phyllaemblic acid. 

உயீர்சத்து பெறுமதி
விட்டமின் சீ அதிகளவில் உள்ள கனி ஆரேஞ்சுப்பழம் போல் 06 மடங்கு விட்டமின் சீ யினை ஒரு நெல்லிக்காய் கொண்டிருக்கிறது. 

நவீன ஆய்வுகளின் படி (Mirunalini et al 2011) நெல்லி கீழ்வரும் இயல்புகளை கொண்டிருப்பதாக நிருபீக்கப்பட்டிருக்கிறது. 
  • ANTICANCER/ANTITUMOUR EFFECTS
  • புற்று நோய்க்கட்டிகளின் வளர்ச்சியினை தடுத்தல்
  • உடலின் எந்தப்பாகத்திலும் ஏற்படும் தேவையில்லாத கட்டிகள் ஏற்படுவதை தடுத்து கரைத்தல். 

இப்படியான அரியகுணங்களை இன்று விஞ்ஞானம் நிருபித்தாலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னிருந்தே எமது முன்னோர்கள் நெல்லிக்கனியின் அருமையினை உணர்ந்து காயகற்பமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இத்தகைய அரிய காயகற்ப சரக்குகளின் கலவையே திரிபலா ஆகும், இதன் பெருமைபற்றி அடுத்துவரும் பதிவுகளில் பார்ப்போம். இந்தப்பதிவு திரிபலாவினை பாவித்து பயன்பெற்ற புராதன மன்னன் ஒருவனின் கதையுடன் முடித்துக்கொள்வோம்.

கி.மு முதலாம் நூற்றாண்டில் கனிஷ்க தேசம் (தற்போதைய வட இந்தியாவும் பாக்கிஸ்தானும் இணைந்த பிரதேசம்) ஆண்ட மன்னனின் ஆஸ்தான மருத்துவராக இருந்தவர் சரகர் என்ற புகழ்பெற்ற மருத்துவர். இவர் தனது மன்னனை திரிபலா இரசாயனமூலம் நூறாண்டுகள் வாழவைத்துள்ளார். அதுபோல் துருக்கியை கைப்பற்றிய மன்னன் மஹமூன் அல் ரஷீட் இற்கு அவனது படைத்தளபதி தனது உயர்ந்த பரிசாக கடுக்காயினை கொடுத்ததாக சரித்திரகுறிப்புகள் கூறுகின்றன, திபேத்திய பௌத்தமதத்தில் குணமாக்கும் புத்தரை 'நீல புத்தர்" என அழைப்பர், அவரது கையில் கடுக்காய் நிறைந்த பாத்திரம் இருப்பதாகவும் மறுகையில் கடுக்காய் செடியினை தாங்கியவராகவுமே சித்தரிக்கப்பட்டுள்ளார். அதுபோல் சங்க இலக்கியத்தில் அதியமான் அஔவையாருக்கு கரு நெல்லிக்காய் கொடுத்தமை நெல்லியின் மாண்பினை கூறுகிறது. 



இவற்றிலிருந்து வாசகர்கள் திரிபலாவின் மேன்மை பற்றி விளங்கியிருப்பீர்கள் என நம்புகிறோம். அடுத்தபதிவில் மேலும் விபரங்கள் பகிரப்படும்.

ஸத்குரு பாதம் போற்றி! 

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...