குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, December 30, 2011

சித்தவித்யா பாடங்கள்: 01 - குருகுலவாச ஆரம்பம்


இனி வரும் பதிவுகளில் பதியப்படும் சித்த வித்தை பாடங்களைப் படிப்பதற்கு முன் எப்படியான தன்மையில் இருந்து அவற்றை கற்கவேண்டும் என்பதனை விளங்கிக் கொள்தல் அவசியமாகும். இன்று இவற்றை கற்பிக்கும் முறைகள் எமது பாரம்பரிய கல்விமுறை அல்ல! எமது பாரம்பரிய கல்வி முறை குருகுலவாசமாகும். குருகுல வாசத்தில் மாணவன் எப்படி வித்தையினை கற்றுக்கொள்கிறான் என்பதனை அறிந்து அதன் செயல் முறையினை உணர்ந்தால் மட்டுமே உண்மையில் நாம் இவற்றை கற்றுக் கொள்ளமுடியும்.

பண்டைக்காலத்தில் ஒரு மாணவன் வித்தை கற்கவேண்டுமானால் குருவின் ஆசிரமத்திற்கு செல்லவேண்டும், அங்கு அவருடனேயே வசித்தவண்ணம் அவரது அன்றாட கடமைகளை செய்துகொண்டு அவர் கூறும் உபதேசங்களை மனதில் கிரகித்துக்கொண்டு தனது அன்றாட வேலைகளை தவறவிடாமல் செய்தவண்ணம் பயிற்சிக்க வேண்டும். குருவின் உபதேசம் மிக சுருக்கமாக சூத்திரமாகவே இருக்கும், அவற்றை கிரகித்து பயிற்சித்து தனது அனுபவமாக்கி கொள்வதே மாணவனின் கடமை. இது மனிதனில் சித்தமாகிய ஆழ்மனதை செயல்படுத்தி கற்கும் முறையாகும். இந்த முறையின் அடிப்படைகள்: 
  1. குரு தனது அனுபவத்தினை சுருக்கமாக மாணவனிற்கு விளக்குவார்.
  2. அவன் தனது நாளாந்த கடமைகளினை தவறவிடக் கூடாது.
  3. கூறியவற்றை கிரகித்து அதன் படி பயிற்சித்து அதன் உண்மைத்தன்மையினை தன்னுள் உணர்ந்து தன்னுடையதாக்கி கொள்ளுதல் வேண்டும்.
  4. இதுதவிர இவற்றை சரியா, பிழையா என விவாதித்து விளங்கப்படுவதில்லை. இதன் அர்த்தம் சொல்வதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொண்டு குருவிற்கு அடிமையாக இருத்தல் என்பதல்ல. எந்த ஆய்வும் உங்களுடைய அகத்தில் இருத்தல் வேண்டும், அவற்றை சீர்தூக்கி சரியானதா எனப்பயன் பெறும் உரிமை உங்களுடையதாக இருத்தல் வேண்டும். அந்த உண்மை தங்களுக்கு தங்களே நிருபிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
  5. தங்களால் குறித்த விடயங்கள் உணரமுடியாத தன்மை இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அவற்றை மகிழ்வுடன் ஏற்கும் கொண்டு மீண்டும் முயற்சிக்க வேண்டும்.

இந்த அடிப்படையிலேயே இந்த சித்தவித்யா பாடங்களும் நடை பெறப்போகிறது. அப்படியா! எப்படி? யார் குரு? எங்கு ஆசிரமம்? எவ்வளவு நாள் போயிருக்கவேண்டும்? இப்போது இது சாத்தியமா? என உங்கள் மனதில் எண்ணங்கள் உதிக்கலாம். இதற்கு எமது பதில் முடியும் என்பதே!

எப்படி?

நன்றாக கவனியுங்கள், ஒருவிடயத்தினை கற்பதற்கு அடிப்படையான சூஷ்மமே முக்கியமே, இதுவே சித்த வித்யா! அல்லாது ஸ்தூல வடிவம் அல்ல! குருகுலவாசத்தில் மனம் பெறும் நிலையினை தற்போது செயற்படுத்தினால் அதே நிலையில் நாமும் கற்கலாம் என்பதே இதன் அடிப்படை!. எப்படி என்பதனை காண்போம்.

ஒருவன் தனது சாதனையினை தொடங்குவதற்கு முதலில் அதுபற்றிய உண்மைகள் சுருக்கமாக வார்த்தை மூலமாக குரு விளக்க வேண்டுமே!

அதனை இந்த பதிவுகள் செய்யும். பதிவுகளை தொடர்ச்சியாக படிப்பதும், அவற்றை கிரகிப்பதும் உங்களுடைய கடமை,

எனினும் இந்தப்பதிவுகளை எழுதும் சுமனன் ஆகிய நான் யாருக்கும் குரு அல்லன். எமது ஆதிகுருவாகிய ஸ்ரீ அகஸ்திய மகரிஷி, அவரின் மாணவர் ஸ்ரீ கண்ணைய யோகி, அவரின் மாணவர் ஸ்ரீ காயத்ரி சித்தர் அவரிடம் நான் கற்றவற்றை அவர்களின் ஆணையில் ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு "செயலாளராக" வெளியிடுவதே எனது பணி. உங்களுடன் சேர்ந்து நானும் அவர்களிடம் கற்றுக் கொள்ளவே இந்த முயற்சி. இன்னும் ஒரு வார்த்தையில் சொல்வதானால் வெறும் தபால்காரன் மட்டுமே, மற்றும்படி வழிமுறைகளை பின்பற்றி பலனடைந்து கொள்வது உங்களுக்கும் சூஷ்மத்தில் உள்ள மேற்குறித்த குரு நாதர்களுக்கும் இடையிலானது.

உங்களது நாளாந்த கடமைகள் எதுவும் இருந்தால் அவற்றை தவறவிடக்கூடாது என்பதுதான் முக்கியமே அல்லது குருவின் ஆசிரமத்தில் சேவை செய்தால்தான் ஞானம் வரும் என்ற மன நிலையில் எதுவித உண்மையும் இல்லை, வாய்ப்பு இருந்து நீங்கள் செய்தால் அவருடைய அன்பு நிறையக் கிடைக்கும், இல்லாவிட்டால் எது உங்களது நாளாந்த கடமையோ அதனை தவறாது ஒழுங்காக செய்யுங்கள்.

பதியப்படும் விடயங்களை பலமுறை படியுங்கள், அவற்றை உங்களது சொந்த பயிற்சியில் அனுபவத்தின் மூலமாக பெறுவதைக் கொண்டு உங்களுடையதாக்குங்கள்.

ஆக நாம் வாழும் இந்த பூமி, சூழல், குடும்பம்தான் எமது குருவின் ஆசிரமம், பிரபஞ்சம் முழுவதும் கலந்துள்ள அகஸ்தியமகரிஷி (அல்லது உங்களுடைய குரு) தான் எமது குரு, எமது தற்போதைய அன்றாட வாழ்க்கை கடமைகள்தான் குரு சேவை, இந்தப் பாடங்கள்தான் குரு உபதேசம். ஆகவே இந்தப் பாடங்களை தவறாமல் கற்று, குரு சேவையாக உங்களது நாளாந்த கடமைகளை செய்தவண்ணம், பயிற்சிகளை செய்துவருவீர்களேயானால் அவற்றினால் பலன் அடைவீர்கள் என்பதனை உறுதி கூறுகிறோம்.

நாம் விளக்கிய முறையில் இவற்றைக்கற்பதற்கு உங்களது சிரத்தை அல்லது ஆர்வம் இன்மை தவிர்ந்த எதுவும் தடையாக இருக்காது என நம்புகிறேன்.

இன்றிலிருந்து இப்படி உங்களது குருகுலவாசத்தினை ஆரம்பியுங்கள்!

அடுத்த பாடத்தில் குருநாதருடன் தொடர்பினை ஏற்படுத்தும் வழிக்கான ஆரம்ப நிலைகளைப்பற்றிப் பார்ப்போம். 

ஓம் ஸத்குரு பாதம் போற்றி!

Thursday, December 29, 2011

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

சித்த வித்யா பாடங்கள்

நோக்கமும் தெளிவும்



கடந்த நான்கு ஐந்து மாதங்களாக சித்த வித்யா விஞ்ஞானம் என்ற இந்த வலைப்பூவில் நாம் கற்ற சித்தர்களது வித்தைகள் பற்றி ஒரு சில குறிப்புகளும், தொடர் கட்டுரைகளும் வெளியிட்டு வந்தோம். சில அன்பர்கள் சித்த வித்யா, சித்த வித்தை கற்பதற்கு என்ன வழி? எப்படிக் கற்பது என்ற கேள்விகளை கேட்டிருந்தனர். இந்தக்கேள்விகளுக்கு பதிலாகவே இந்தப்பதிவும் இனிவரும் பதிவுகளும் அமையப்போகின்றது.


 சித்த வித்தை கற்க எண்ணும் பலரிற்கு உள்ள தடைகளை கீழ் வருமாறு வகைப்படுத்தலாம் என எண்ணுகிறேன்.

சித்தர்களது நூற்கள் அனைத்துமே பாடல் வடிவில் இருத்தல், அவற்றை புரிந்து கொள்ளும் தன்மையினை சமுகம் இழந்துவிட்டமை. இதற்கு காரணம் எமது பாரம்பரிய கல்வி முறை மாற்றமடைந்தமை, தற்கால கல்வி அறிவுடன் அவற்றை அணுகும் போது அபத்தமான விளைவுகள் பல உண்டாகின்றது. இது கிட்டத்தட்ட நுண்கணித பாடப்புத்தகத்தினை (Calculus text book) சாதரணமான ஒருவன் பார்த்த நிலைதான்.

சித்த வித்தைகள் பற்றிய மாயை,கட்டுக்கதைகள், அற்புதமாக்கல், வியாபாரப்படுத்தப்பட்ட பிரச்சாரங்கள், நோக்கத் தெளிவு இன்மை என்பன. எமது பழைய சமூகம் அகவயப்பட்ட சமூகம், எமது பண்பாடுகள்,கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் அனைத்தும் தன்னையறியும் முறையுடனேயே வடிவமைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் இவை மாறுபட்டு சமூகம் புறவயப்பட்ட சமூகமாக மாறா ஆரம்பித்தது, இப்படி மாற்ற முற்ற சமூகத்தினூடாக பரிமாறப்பட்ட சித்த வித்தைகளும் பல வித கிளைகளாக யோகமுறைகளாக, காப்புரிமை கோரல்களுடன் மேற்கத்தைய முறையில் "புதுப் புது ப்ராடக்ட்" ஆக வடிவம் பெற்று இன்று வேற்று கலாச்சாரத்தவர்கள் மொழியினர்  போற்றும் ஒரு அரிய கலையாக வடிவம் பெற்றுள்ளது. எம்மைப் பொருத்தவரையில் எம்மிடமிருந்துதான் இவையெல்லாம் சென்றது எனத்தெரியும், ஆனால் அவற்றை மூல நூற்களில் விளங்கும் ஆற்றலோ முறைப் படுத்தப்பட்ட கல்வியோ எம்மிடம் இல்லை.

இந்த நிலையில் இவை பற்றிய அதீத கற்பனைகள், புனைவுகள், இவற்றை சாமானியர் கற்க முடியாது என்ற பயமுறுத்தல், ஒரு சாரார் தமக்கு மட்டுமே அவற்றின் உண்மை விளங்கப்படுத்தப் பட்டுள்ளதாக கருதல், நாவல்கள், சினிமாக்களின் எடுத்தாள்கை என்பவற்றினூடாக பெற்ற கருத்தாக்கங்கள் மீண்டும் எம்மவர்களாலேயே எமக்கு இடப்பட்ட தடைகளாக உருப்பெற்றுள்ளன.

இவற்றை அடிப்படையாகக் கொண்டும் தற்காலத்து நடைமுறையில் சித்த வித்தையினை விளங்கிக் கொண்டு உள்ளத்தில்  இலகுவாக பதியும் வண்ணம் அவற்றின் மூலங்களின் சாரம் குறையாதவகையில் கற்பதற்கான ஒரு முயற்சிதான் இந்த சித்த வித்யா பாடங்கள்.

பாடத்தினுள் செல்லமுன் இந்த வகுப்புகளிடையான ஒத்திசைவினை மேம்படுத்த அவற்றின் தன்மை பற்றிய ஓர் அறிமுகம் அவசியமானது என்பதால் இதுவரை நான் பெற்ற பின்னூட்டங்களின் அடிப்படையில் ஒரு சில தெளிவுகளை சுயமாக முன் வைக்கிறேன். இவை தவிர்ந்து மற்றய கேள்விகள் இருப்பின் அவற்றினை பின்னூட்டமிட்டால் அவற்றிற்கான பதில்கள் பின்னூட்டமாகவோ, அடுத்துவரும் பாடங்களிலோ இணைத்துக்கொள்ளப்படும்.

இவற்றை பயில்வதற்கு என்ன தகுதிகள் வேண்டும், பலரும் பயமுறுத்துகின்றனரே? குரு நேரடியாக இல்லாமல் எப்படி இவையெல்லாம் சாத்தியம்? என உங்கள் எண்ண அலைகள் ஓடுவது எமக்கு புரிகின்றது அன்பர்களே! அதற்கு பதில் ஏகலைவன் எப்படி வித்தை கற்றான்? என்பதில் அடங்கியுள்ளது. அதேவழியில்தான் நாமும் கற்க்கப்போகிறோம். ஆர்வமும் கற்க வேண்டும் என்ற தாகமும்தான் ஒரே தகுதி! ஏகலைவன் குருவிற்கே தெரியாமல்தான் அவர் மனதிலிருந்த ஞானத்தினை ஆகர்ஷித்தான், ஆனால் நாம் ஆதி குரு அகஸ்தியரை எப்போதும் மனதில் இருத்தியே இதைத் தொடரப்போகிறோம், நீங்கள் மற்றைய சித்தர்களை குருவாகக் கொண்டவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. சூஷ்மத்தில் இறைவன், சித்தர்கள் எவருக்கும் எந்தவித வேறுபாடுமில்லை. உங்கள் மனதிற்கு பிடித்த சித்தரையோ, தெய்வத்தினையோ குருவாகக் கொள்ளலாம். அவர்களுடன் சூஷ்ம இணைப்பினை ஏற்ப்படுத்திவிட்டால் பின்பு அவர்கள் சூஷ்ம உடலில் உள்ள குருநாதர், தேவதைகள், ஆகாய மனதுடன் தொடர்பு ஏற்படுத்துவதன் மூலமும் மேலதிக அறிவினை உங்களது நாளாந்த பயிற்சியின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இது எப்படி என்பதனை படிப்படியாக பாடங்களினூடே விளக்கப்படும். இப்படிப் படிப்படியாக பெறும் ஞானத்தின் மூலம் எல்லாக் கேள்விக்குமான விடையினை நீங்களாகவே பெற்றுக் கொள்ளலாம்.
தெய்வ நம்பிக்கை, உபாசனை எதுவும் செய்ய வேண்டுமா? இல்லை, செய்பவராக இருந்தால் அவற்றின் உண்மை விளக்கம், பயன்பாடு என்னவென்பதனை அறிந்து கொள்வீர்கள்.

சித்த வித்தை பற்றி பேசுவதற்கும் அவற்றினைப் பதிவதற்கும் உங்களுடைய தகுதி மற்றும் காரணம் என்ன? அந்த வித்தையிற்குரிய குருபரம்பரையினை தொடர்பு கொண்டு கற்றமையும் குருநாதர் உத்தரவுமே இவற்றிற்கான தகுதியும் காரணமாகும். இவைபற்றிய மேலதிக விளக்கம் அடுத்து வரும் பாடங்களில் விளக்கப்படும்.

இவற்றை பயிற்ச்சி செய்ய விருப்பமில்லை, ஆனால் வாசித்து விளங்க விருப்பமாயுள்ளேன்? நிச்சயமாக, நீங்கள் தொடர்ந்து பலமுறை வாசிக்கும் போது படிப்படியாக மனம் அவற்றை செய்வதற்கான நிலையினை, சூழலை உருவாக்கும். எதுவிதமான தாழ்வு மனப்பன்மையினையோ,பய எண்ணங்களையோ ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். மகிழ்ச்சியாக கற்க்கும் மனநிலையில் அணுகுங்கள். மற்றவற்றை குருநாதர் பார்த்துக் கொள்வார். ஆனால் உங்கள் முயற்சி உண்மையானதாக, உள்ளம் விரும்பி செய்வதாக இருக்க வேண்டும்

இதுவரையிலான விளக்கங்கள் அடிப்படை தெளிவையும் இவற்றை கற்க்கவேண்டும் என்ற ஆர்வத்தினையும் மனத்துணிவினையும் தந்திருக்கும் என நம்புகிறோம்.

அடுத்து இனிவரும் பதிவுகளில் பதியப்படப்போகின்ற பாடங்களின் ஒழுங்கைப் பார்ப்போம். இவை பாடத்தின் விரிவுகளுக்கேற்ப மாறுபடக்கூடியவை. எனினும் அடிப்படை இவ்வாறே இருக்கும்.

பாடங்களது உள்ளடக்கம்

பாடம்:00 அறிமுகம்
பாடங்களின் தன்மை, நிபந்தனைகள், தகுதி, பக்குவம், குரு பரம்பரை

பாடம்: 01 முத‌ன்மையான‌ மூன்று த‌த்துவ‌ங்க‌ள் 
மனிதனின் அமைப்பு, மனிதனின் ஏழு அடிப்படைகள், ஸ்தூல உடல், சூஷ்ம உடல், பிராணன்

பாடம்:02 மான‌ச‌ த‌த்துவ‌ங்க‌ள்
நான்காவ‌தும் ஐந்தாவ‌துமான‌ அடிப்படைகள், இயற்கையுணர்வு மனமும், புத்தியும்

பாடம்: 03 ஆன்ம தத்துவங்கள்
ஆறாவதும் ஏழாவது அடிப்படைகள், ஆன்ம மனம், ஆன்ம ஒளி அல்லது ஆன்ம உணர்வு

பாடம்: 04 மனித கதிர்ப்பு 
ம‌னித கதிர்ப்பு, ஆரோக்கிய கதிர்ப்பு, பிராண கதிர்ப்பு, மான‌ச‌ த‌த்துவ‌த்தின் மூன்று கதிர்ப்பு (ஆன்மா, கதிர்ப்பு, கதிர்ப்பின் நிற‌ம், க‌திர்ப்பு உருவாகும் வித‌ம்)

பாட‌ம்: 05 எண்ண‌ங்க‌ளின் இய‌க்க‌விய‌ல்
எண்ண‌ இய‌க்க‌விய‌ல்,எண்ண‌த்தின் இய‌ல்பு, த‌ன்மை, ச‌க்தி, எண்ண‌த்தின் வ‌டிவ‌ம், எண்ண‌த்தின் மூல‌ம் செல்வாக்கு செலுத்துத‌ல், எண்ண‌த்தின் இய‌க்க‌விய‌ல் ப‌ற்றிய‌ இர‌க‌சிய‌ வித்தை கோட்பாடுக‌ள்

பாட‌ம்: 06 தொலைவினுண‌ர்த‌ல், தூர‌திருஷ்டி
தூர‌திருஷ்டி, தூர‌சிர‌வ‌ண‌ம், தொலைவினுண‌ர்த‌ல் ப‌ற்றிய‌ கோட்பாடுக‌ளும் அவ‌ற்றை எப்ப‌டி எம்மில் வ‌ள‌ர்த்துக்கொள்வ‌து

பாடம்: 07 ம‌னித‌ காந்த‌ம்
ம‌னித‌ காந்த‌ம், பிராண‌ ச‌க்தி, அவ‌ற்றின் த‌ன்மைக‌ளும் ப‌ய‌ன்பாடும், அவ‌ற்றை வ‌ள‌ர்ப்ப‌த‌ற்கான‌ ப‌யிற்சிக‌ளும் பிர‌யோக‌ முறைக‌ளும்.

பாட‌ம்: 08 சூட்சும‌ சிகிச்சா முறைக‌ள்
சூட்சும‌ சிகிச்சை, ஆன்ம‌ சிகிச்சை, மான‌ச‌ சிகிச்சை, பிராண‌ சிகிச்சைக‌ளின் கோட்பாடும் பிர‌யோக‌ முறைக‌ளும்

பாட‌ம்: 09 ம‌னோவ‌சிய‌ம் அல்ல‌து ம‌ன‌ ஆற்ற‌ல் மூல‌ம் ம‌ற்ற‌வ‌ரை வ‌ச‌ப்ப‌டுத்துத‌ல்
ம‌னோவ‌சிய‌ம், வ‌சீக‌ர‌ காந்த‌சக்தி, ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் மான‌சீக‌ தாக்குத‌ல்க‌ளை த‌டுக்கும் முறைக‌ள், இந்த‌ ஆற்ற‌லை த‌வ‌றாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தால் ஏற்ப‌டும் விளைவுக‌ள்,

பாட‌ம்: 10 சூஷ்ம‌ உல‌க‌ம்
சூஷ்ம‌ உல‌க‌ம், அத‌ன் அமைப்பு, எம‌து சூஷ்ம‌ உட‌ல், சூஷ்ம‌ ச‌க்திக‌ளின் உத‌வி பெற‌ல்

பாட‌ம்: 11 உட‌லிற்கு அப்பால்
ம‌னித‌ உட‌லிலிருந்து உயிர்பிரிந்து இற‌ப்பின் பின் ந‌டைபெறுவ‌து என்ன‌?

பாட‌ம்: 12 ஆன்ம‌ ப‌ரிணாம‌ம்
ஆன்மாவின் ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி, எப்ப‌டி வ‌ள‌ர்கிற‌து, அத‌ன் நோக்க‌ம், அத‌ன் இல‌க்கு

பாட‌ம்: 13 ஆன்மீக‌த்தில் கார‌ண‌ காரிய‌ தொட‌ர்பு
வாழ்க்கையில் ந‌டைபெறும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளுக்கான‌ கார‌ண‌ காரிய‌த்தொட‌ர்புக‌ள், வினைக‌ளை விதைத்த‌லும் அவ‌ற்றை அறுத்த‌லிற்கான‌ கோட்பாட்டு விள‌க்க‌ம்,

பாட‌ம்: 14 யோக‌ப்பாதையில் இல‌க்கினை அடைத‌ல்
மூன்று ம‌டிப்புட‌ன் கூடிய‌ முறை (ச‌ரியான‌ முறை, திசை, திட்ட‌ம், சாதனை செய்ய விரும்பும் மாணவர்களுக்கான உப‌தேச‌ங்க‌ளும் ஆர்வ‌மூட்ட‌லும்.



ஸத் குரு பாதம் போற்றி!
குருவானவர் எம்மை சரியான வழியில் நடாத்திச் செல்வாராக!


வேண்டுகோள் 

தரவிறக்கி கொள்பவர்கள், இதனை பிரதி செய்து தமது தளத்தில் போட விரும்புபவர்கள் தாராளமாக எமது தளத்தின் முகவரியுடன் பதிவித்தல் வரவேற்க்கப்படுகிறது. மற்றும் ஆர்வமுடையோருடன் பகிர்ந்து கொள்ளவும்.

Wednesday, December 28, 2011

எனது மனத்தளம் # 01

இன்றைய பதிவு இதுவரை கடந்த நான்கு மாதங்களில், இந்த வலைப்பூவில் எழுதத்தொடக்கியது முதல் நான் பெற்ற அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டு அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஒழுங்கமைவான பாதையுடன் செல்வதற்கான‌ எனது மனத்தளத்தில் உதித்த எண்ணங்களை பகிர்வதற்கானதாகும்.

வலைப்பூவில் எழுதுவது என்பது எனக்கு புதிய விடயம் (நான்கு மாதங்களுக்கு முன்னர்) இணையம் எனும் பெரும் வனத்தினுள், பாதை எதுவும் தெரியாமல், முகம் தெரியாத பலருடன் வாத பிரதிவாதங்கள், கருத்து தாக்குதல்கள், இணைய அரசியல், முகமூடி இராஜதந்திரங்கள் என பல  மாய விளையாட்டு உலகினுள் நானும் கருத்து பகிர்வுக்கு என வந்தேன், அல்லது வரவைக்கப்பட்டேன் எனலாம். எல்லாம் நன்மைக்கே என்று எடுத்து கொள்வது என் இயல்பு. அதன்படி எழுத்தத் தொடங்கினேன். என்ன எழுதுவது என எண்ணியபோது எனது அறிவுத்தளத்தில் இருப்பவை இரு விடயங்கள்

  1. சிறுவயதிலிருந்து பாரம்பரியமாக‌ அகஸ்தியமகரிஷியினை ஆதிகுருவாக வணங்குவதாலும்  பின்பு 16 வயதில் குரு கிடைக்கப்பட்டதால் சித்தர்களது யோக, ஞான, ஆன்ம வித்தைகள் குருகுலவாசமாக முறையாக கற்க்கும் சந்தர்ப்பமும் குருவருளால் கிடைக்கப்பெற்றேன்.
  2. பின்னர் பல்கலைக்கழக படிப்பும் தொழிலும் என்னை சூழலியல் விஞ்ஞானத்தில் இட்டுச்சென்றது, அதன் மூலம் விஞ்ஞானப்பார்வையினையும் தொழில் ரீதியாக சூழலியல் விஞ்ஞான ஆய்வாளனாகவும், ஆலோசகனாகவும் இட்டுச்சென்றது.
எனது குருநாதர் எனக்கு எதுவித கட்டுப்பாடுகளும் வரைவிலக்கணங்களோ கூறியதில்லை, எனது விருப்பப்படியே கற்றுக்கொள்ளும் உரிமையினை எனக்கு தந்திருந்தார், ஆதலால் நான் எந்த வரையரைக்குள்ளோ, வரைவிலக்கணங்களுக்குள்ளே என்னை அடைத்துக்கொண்டு கற்க்கவில்லை.  ஆகவே எனது பார்வை சித்தவித்தையில் யோகசாத்திரம், தாந்திரீகம், தாவோயிசம், பௌத்த தாந்திரீகம், திபெத்திய யோகம், சித்தாஸ்ரமம், மேற்கத்தைய‌ ரோசிகிரேசியன், மார்டினிஸம் போன்ற பல சம்பிரதாயங்களில் உள்ள வித்தைக‌ள் கற்கும் ஆர்வத்தினையும் சந்தர்ப்பத்தினையும்  ஸ்ரீ வித்தையின் தாந்திரீக முறையும் தகுந்த குருமாரிடம் குருமுகமாக கற்பதற்கான அடித்தளத்தினை ஆதிகுரு அகஸ்திய மகரிஷி எனக்கு ஏற்படுத்திக்கொடுத்தார்.  

முதல் தளத்தில் இருந்து நான் பெற்ற அறிவு சித்த வித்யா (சித்த வித்யா = ஆழ்மனமாகிய சித்தத்தினூடாக பெறும் அறிவு), இரண்டாவது தளம் எனக்கு தந்த அறிவு விஞ்ஞானம், இரண்டையும் இணைந்து சித்தர்களது வித்தைகளது புரிதலையே சித்த வித்யா விஞ்ஞானம் என எனது வலைப்பூவிற்கு பெயரிட்டேன்.

சித்த வித்யா விஞ்ஞானம் என்ற பெயரில் எனது வலைப்பதிவு தொடங்கியவுடன் வலையுலகத்தில் குறிப்பாக முகப்பு புத்தக குழுமங்களில் பலவிதமான விமர்சனங்கள் எழுந்தது. பலர் பாராட்டினர், சிலர் காரசாரமாக வாதிட்டனர்,

இன்னும் சிலர் நான் ஏதோ யோகி எனக் காட்டிக்கொள்வதற்காக பதிவு எழுதுவதாக விமர்சித்தனர்.

திரு.சங்கர் குருசாமி மற்றும் சில நண்பர்கள் உற்சாகமூட்டினர்,

சில முகங்கள் அற்ற எலிகள் அனோனிமஸ் கமண்ட் திறந்து வைத்திருந்த வேளையில் சகிக்க முடியாத வார்த்தைப்பிரயோகத்துடன் ஒருவரின் பொறுமையினை சோதிக்கும் அளவிற்கு அதிகீழ்தரமாக கொமண்ட் செய்தார்கள்.

இப்படி கடந்த நான்கு மாதங்களில் எனது மனத்தளத்தில் எதிர்ப்பு, வாதபிரதிவாதங்கள், தாக்குதல்கள், தூற்றல்கள் அத்துடன் போற்றல், பாராட்டு, உற்சாகம் என்ற இருமைகள் கலந்த பலவிதமான எண்ணச் சுழல்களூடாக பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

ஒரு கட்டத்தில் ஏன் இந்த தேவையில்லாத வேலை? எனது அலுவலக வேலைகள் செய்வதற்கும், குடும்ப கடமைகளுக்கு மட்டுமே நேரம் சரியாக உள்ளபோது வலைப்பூவில் எழுதத்தான் வேண்டுமா? இதனால் என்ன பயன்? என்ற உள்மனப்போராட்டம் ஒவ்வொரு நாளும் எழவே செய்தது, ஆனால் என்னையும் மீறி இந்த பதிவுகள் நான் கருவியாக உபயோகிக்கப்பட்டு எழுதப்படுவதாகவே உணர்ந்தேன்.

அடுத்து இதில் நான் எழுதும் விடயங்களால் பலரும் பயன் பெறுவதாகவும் சித்த வித்தை கற்க ஆர்வமுள்ளதாகவும் அதற்கு என்ன செய்யவேண்டும் எனவும் பலர் மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர். முக‌ப்பு புத்த‌க‌த்தில் உரையாடின‌ர், பின்னூட்ட‌மிட்ட‌ன‌ர். 

இவற்றுக்கெல்லாம் பதிலாக இனிவரும் நாட்களில் புத்தாண்டிலிருந்து சித்தவித்யா விஞ்ஞானம் கற்க விரும்புபவர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு ஒழுங்கு முறையாக‌ பதிவுகள் வர குருநாதர் உத்தரவு கொடுத்துள்ளார். அதன் விபரம் நாளை பதியப்படும்.

பொதுவாக‌ த‌மிழில் யோக‌வித்தை, இர‌க‌சிய‌ வித்தைக‌ள் முறைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ பாட‌ங்க‌ளாக‌ ப‌டிப்ப‌டியாக‌ க‌ற்றுக்கொள்ளும் வ‌கையில் இல்லை. ஆக‌வே சில‌ மூல‌ நூல்க‌ளின் ஆதார‌த்துட‌ன் அவ‌ற்றை த‌ழுவி நான் க‌ற்ற‌ விட‌ய‌ங்க‌ளுட‌ன் என‌து மொழி ந‌டையில் குருநாதர் ஆசியுடன் பாடங்களாக தொகுத்துத் த‌ர‌வுள்ளேன்.  அவ‌ற்றை ப‌டித்து ப‌ய‌ன்பெறுப‌வ‌ர்க‌ள் ப‌ய‌ன்பெற‌லாம், த‌க‌வ‌லுக்காக‌ ப‌டித்து ம‌கிழ்பவ‌ர்க‌ளும் க‌ற்க‌லாம். அவ‌ற்றை ப‌திவ‌து ம‌ட்டுமே என‌து க‌ட‌மை, ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து முற்றிலும் உங்க‌ளைச் சார்ந்தது.

இந்த தளத்தில் நான் எழுதுவதில் எனது நோக்கம் (குருநாதரது நோக்கம் என்னவென்று இன்னுமும் நானறியேன்!) எழுதுவதற்கான எனது விருப்பமும் அதில் நான் அடையும் மனமகிழ்ச்சியுமே ஆகும், ஒவ்வொரு பதிவும் எழுதும் போதும் குருநாதருடன் மானசீகமாக பேச முடிகிறது. நான் முன்பு அறியாத சில விடயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. இதனை நான் எனது உள்மனத்துடனும் குருநாதருடனும் தொடர்பு கொள்ளும் பயிற்சியாகவே செய்கிறேன். இதன் மூலம் நான் அறிவதுடன் மற்றவர்களும் அதனை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் பதியப்படுகிறது, இந்த அவசரமான வியாபார உலகத்தில் சிறிய அளவு நேரம் எனது மனதை இந்த விடயங்களில் ஒன்றி வைத்திருக்க முடிகிறது. அப்படி பெறும் யாம் பெற்ற இன்பத்தினை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய வகையில் வலையுலகம் உதவி செய்கிறது. எப்போது குருநாதர் எழுதுவதை நிறுத்தச் சொல்கிறாரோ அன்று இந்தப்பதிவுகள் நின்றுவிடும்.

ஓம் ஸத்குரு பாதம் போற்றி!

அடுத்த பதிவில் யோக வித்தை பாடங்களது அறிமுகம் இடம்பெறும்!

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...