மந்திரம் என்றால் மனனிப்பவர்கள் மனதைக் காப்பது என்று பொருள்! எமது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் மனம் புலன்களாலும், ஆழ்மனம் என்ற சித்தத்தில் இருந்து எழும் விருத்திகளாலும் தூண்டப்பட்டு அந்தத் தூண்டலின் வழி நடப்பதால் துன்பத்திற்குள் வீழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இப்படியான வலிமையற்ற மனதை வலிமையுடையதாக்க, சலனமுறும் மனதை சலனமற்ற, தூய்மையான ஒன்றுடன் சேர்க்க வேண்டும். இந்த சலனமற்ற, தூய்மையானதை பதி என்று சைவமும், இறைவன், கடவுள் என்றும் தத்துவங்கள் கூறும்!
இந்த பதியை/இறைவனை எப்படி மனதுடன்
தொடர்புபடுத்துவது? அதற்கு தமிழில் ஒரு எளிய வழி இருக்கிறது.
பதிகங்கள் படிப்பது! பதிகம்
என்பது பத்துப்பாடல் கொண்ட தொகுப்பு என்று பண்டிதர்கள் கூறுவார்கள்! ஆனால்
எம்மளவில் பதிகம் என்றால் அகத்தில் பதியைப் பதிவிக்கும் பாடல்கள் என்று பொருள்!
ஆக பதிகங்களை அகத்தில் தினசரி பதித்துவர மனம் பதியை நாடும் தன்மை உருவாகும்!
திருவாவடுதுறை ஆதீன வெளியீடாக விதியை வெல்லுவது எப்படி என்று அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு பாட வேண்டிய பதிகங்கள் என்று ஒரு தொகுப்பு நூல் வந்திருக்கிறது. இதில் ஒவ்வொரு காரியங்களுக்குமுரிய பதிகங்கள் இருக்கின்றன.
இங்கு பதிகம் எப்படிப் பலன் தருகிறது
என்ற குழப்பத்துடன் தர்க்க புத்தி வேலை செய்பவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்ட
விளக்குவதே இந்தக்கட்டுரையின் நோக்கம்.
ஒவ்வொரு தேவாரமும்,
1) யாப்பு எனும்
சொற்கோர்வைக்கான இலக்கணம் கொண்ட பாடலாகவும்
2) பண் என்ற ஒலிக்கும் விதியும் தரப்பட்டிருக்கும்.
யாப்புபடி கோர்க்கப்பட்ட சொற்களுக்கு சந்தம் வாய்க்கும். சந்தம் வாய்த்த சொற்களை மனதில் நாக்கு, தொண்டை, மூச்சின் துணைகொண்டு ஒலியாக எழுப்பினால் மனதிற்கும் சந்தம் வாய்க்கும்!
இதற்கு பண்ணும்
சேர்ந்தால் அது மனதை வேறு விடயங்களிலிருந்து கழற்றி பதியை நோக்கி செலுத்தும்!
இந்த முறை அக்காலத்தில்
மக்கள் உள்ளம் இறைவனை அடைதலே வாழ்க்கை இலட்சியம் என்ற சமூகத்தில் பயன் தந்தது!
ஆனால் காலம் செல்ல மனிதன் மனம் குழப்பமும், தெளிவும் இல்லாமல் போய்விட்ட இக்காலச்
சமூகத்தில் வெறுமனே பண்ணுடன் பாடல் பாடுவது என்பது வெறும் சடங்காகப் போய்விட்டது!
பதிகம் பாடும் சாதகனை பதியுடன்
இணைக்கும் செயலைச் செய்ய முடியாத அளவிற்கு அவனது மனம் குழம்பிய நிலையிலேயே இப்போது
இருக்கிறோம். ஆகவே பதிகம் பாடுவதால் கிட்டும் இறை அனுபவத்தைப் பெறமுடியாதபடி முன்
மனமும், சித்தமும் குழப்பத்தில் இருக்கும் நிலையில் வாயால் பதிகம் பாடுவது மாத்திரம்
பலனைத் தராது!
இப்போது உள்ள காலம் தர்க்க மனதின்
ஆட்சிக்காலம்! ஆகவே பதிகங்களை சரியான வழியில் அதன் பலன் மனதிற்கு தர்க்க ரீதியாகப்
புரியவைத்தால் மாத்திரமே ஏற்றுக்கொள்ளும் வகையில் அனைவரது மனமும்
கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே ஒருவன் பதிகத்தைக் கொண்டு பலன்பெற
வேண்டினால் வாயால், பண்ணுடன் பாடுதல் என்ற இரண்டையும் விட அதன் பலனை, அர்த்தத்தைப்
புரிந்து பாடினால் விரைவான பலனைப் பெறுவான்!
அந்த வகையில் ஆயுள் முழுவதும்
எந்தவிதக் குறையும் இன்றி வாழ்வதற்க்கு ஓதவேண்டிய பதிகம் என்று கூறப்படும்
பஞ்சாக்கரத் திருப்பதிகத்தை மட்டும் அடுத்த பதிவில் விளக்கி இந்தப் பதிவை
முடிப்போம்!
பகுதி - 02 இல்
தொடரும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.