மனதின் இயல்பு விருத்திகள் என்று என்று முன்னைய பதிவில் பார்த்தோம். மனம் தொடர்ச்சியாக எண்ணங்களை உருவாக்கிக் கொண்டு இருக்கும். இப்படி உருவாக்கிக் கொண்டு இருக்கும் எண்ணங்கள் ஒருவனை சூழச் சூழ அவன் அதற்குள் அகப்பட்டுக் கொள்கிறான்.
மகாபாரதத்தின் அபிமன்யு தாயின் வயிற்றில் இருக்கும் போது நாரதரின் உபதேசப் பிரகாரம் சக்கர வியூகத்திற்குள் செல்வதற்கு மட்டும் கேட்டுக் கொண்டதால் வெளியே வரும் வழி தெரியாமல் மாட்டிக் கொண்டு இறப்பதைப் படிக்கிறோம். இதே போல் எல்லோருக்கும் எண்ணங்களை விருத்திகளாக - அலைகளாக எழுப்பி கற்பனை மாத்திரமே காணும் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இப்படி தாம் படைத்த எண்ணச் சுழல்களான கற்பனை ஆற்றலில் சிக்கிக் கொண்டு மீண்டு வரத் தெரியாமல் மாட்டிக் கொண்ட அபிமன்யுக்களே அனேகர்.
மனம் எண்ணத்தை உருவாக்கி கற்பனை காணும் ஆற்றலை விகல்பம் என்று யோக மொழியில் கூறுவர். இந்த விகல்ப ஆற்றலே மனதின் ஆராய்ந்து அறிவினை உருவாக்கும் ஆற்றல்; ஆனால் அளவிற்கு மிஞ்சிச் செல்லும் போது அதுவே மனிதனை ஒரு சக்கர வியூகமாக சிக்க வைத்து விடும். இதிலிருந்து மீள அவன் மனதின் மற்றைய ஆற்றலான சங்கல்ப சக்தியைப் பயன்படுத்த வேண்டும். சங்கல்ப சக்தி என்பது விகல்பத்திற்கு எதிரானது. மனதை ஒரு முகப்படுத்தும் ஆற்றல்.
மனமானது எதிர் எதிரான இரண்டு ஆற்றல்களை தன்னிடம் வைத்திருக்கிறது. எப்படி அதிக விகல்பம் கூடாதோ அதே போல் அதிக சங்கல்ப சக்தியுடன் செயற்பட்டாலும் அது நன்மையைத் தராது.
ஒரு விஷயத்தை ஆழமாக அவதானிக்க, செய்ய நீண்ட சங்கல்ப சக்தி தேவை. இப்படி நீண்ட நேரம் ஒரே எண்ணத்தில் இயங்கினாலும் மனம் சோர்வடைந்து விடும். ஆனால் இப்படி இயங்கும் போது அந்த மனம் பலமுடையதாக இருக்கும். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போன்றது சங்கல்ப சக்தியுடைய மனம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.