எளிய ஸ்ரீ வித்யா சாதனை பயிற்சி நூலினை பெற
விண்ணப்பியுங்கள் : இங்கே
*************************************************************************************************************************
காயத்ரி உபாசனை மந்திரம், தத்துவங்கள் பற்றி பல கட்டுரைகள்
இதுவரை எமது வலைப்பதிவில் எழுதியுள்ளோம்.
இந்தக்கட்டுரையில் காயத்ரியின் பிராண தத்துவம் பற்றி
பார்ப்போம்.
காயத்ரி என்பதனை
ஆத்ரேயபிரமாணம் எனும் நூல் “காயம் பிராண த்ரயாதி” என்று வரையறுக்கிறது. பிராணனை
காப்பது என்று பொருள் படும். மனிதனில் உயிர்ப்பு, உணர்வுதன்மை, ஆரோக்கியம்
என்பவற்றை தரும் சக்தியினை பிராணன் என்று கூறுவார். எம்முள் இருந்து உடலை
அசைப்பதற்கு, வேலை செய்வதற்கு, சிந்திப்பதற்கு, ஞானத்தினை பெறுவதற்கு மூலமாக
இருப்பது பிராணன். பிராணன் இருப்பதால்தான் உடலுடன் ஆன்மா ஒன்றி இருக்கிறது. பிராணனுடன்
இருப்பதால்தான் உயிர் உள்ளவற்றை பிராணி என்கிறோம். கல் மண் போன்ற சடப்பொருட்களில்
பிராணன் உறைநிலையில் இருக்கிறது, செயல் நிலையில் உயிர்ப்புடன் இருப்பதில்லை.
பொதுவாக ஒருவரில்
பிராணனின் அளவு குறையும் போது ஆரம்பத்தில் உடலில் பெரிதாக மாற்றத்தினை காட்டாது ஆனால்
அவர் முற்றாக சக்தி இழந்தது சிறு வேலையினை செய்வதற்கும் சக்தி அற்றவராக உணர்வார்.
இத்தகைய நிலையில் எந்தவித நவீன மருத்துவ சோதனையிலும் எதுவித நோயும் இல்லை என்று
காட்டும், ஆனால் குறித்த நபர் தன்னால் சிறு வேலை கூட செய்ய முடியாத அளவு பலவீனமாக
இருப்பதாக கூறுவார். அவரது குரல் தழுதழுத்துக் காணப்படும். மனதில் பயம்
காணப்படும். சிறு சளி காய்ச்சல் போன்றவை வந்தால் குணமாவதற்கு நீண்ட நாட்கள் ஆகும்.
இத்தகைய நிலை காணப்படின் இது அவரது உடலில்
பிராணன் குறைபாடு அடைகிறது என்பதன் அறிகுறி!
பிராணனின் குறைபாடு
மனதின் செய்கையினையும் பாதிக்கும். பிராணன் குறைவடைந்தால் மனதில் தேவையில்லாத
பயங்கள், தம்முடன் தொடர்பு இல்லாதவற்றை கற்பனை செய்து வருந்துதல், மன அழுத்தம்,
வெறுப்பு போன்றவை உருவாகும். உதாரணமாக “எனக்கு எதைச் செய்தாலும் பிழையாகத்தான்
முடியும்” என எண்ணுவர், எதாவது பிரச்சனை வந்துவிட்டால் மிகப்பதட்டம் அடைந்து தமது
வாழ்வு முடியப்போவதாக எண்ணுவார்கள். எந்த விடயத்தினை எடுத்தாலும் அது
பிழையாகத்தான் முடியும் என்பதே அவர்களது எண்ணமாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள்
எப்போதும் மற்றவர்கள் எப்போதும் சுயநலமிகளாகவும், உண்மையற்றவர்களாகவும்,
முட்டாள்களாகவும், எதிரிகளாகவும் தெரிவார்கள். இவர்கள் மற்றவர்களது நேர்மையினை,
உண்மைத்தன்மையினை நம்பமாட்டார்கள். பிராணன் குறைவதன் குறிகள் பயங்கர கனவுகள்,
பதட்டம், நம்பிக்கையின்மை போன்றவாகும்.
பிராணன் நிறைந்துள்ள
ஒருவர் எப்போதும் உற்சாகமாகவும், உறுதியுடையவராகவும், ஆபத்துகளில் கலங்காதவராகவும்,
அமைதியானவராகவும், தனக்கு எதிர்காலம் வாய்ப்புள்ளதாக அமையும் என்று நம்பிக்கை
உள்ளவராகவும், முன்னேற்றம் உள்ளவராகவும் இருப்பார். பிராண சக்தி நிறைந்த ஒருவர்
உடல் தோற்றத்தில் அழகு அற்றவராகவும் உயர்ந்த கல்விகள் அற்றவராகவும் இருந்தாலும்
பிராண சக்தியின் வலிமையால் சாதாரண மனிதர்கள் சாதிக்க முடியாததை மற்றவர்கள்
வியக்கும் வண்ணம் சாதிப்பார்கள்.
மனிதனின் வலிமை என்பது பிராணனில்
இருந்து பெறப்படுவது அன்றி தசைகளிலோ, என்புகளிலோ இருந்து அல்ல! இறப்பு என்பது
பிராணன் உடலின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வெளியேறும் நிலையாகும்.
யாரது பிராணன் மிக
வலிமையாகவும் வீணாக்குவதில் இருந்து தடைப்படுத்தப்பட்டு சேமிக்க படுவதாகவும் இருக்கிறதோ
அத்தகைய நபர் சக்தி உள்ளவராகவும் தனது கடின உழைப்பின் மூலம் உலக இன்பங்களையும்,
ஆன்மீக இன்பங்களையும் பெறக்கூடியவராக இருப்பார்கள். ஆகவே உலக வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், ஆன்ம வாழ்க்கையில்
வெற்றி பெறுவதற்கும் பிராண பலம் மிக அவசியம்.
வாழ்க்கையின் சாரம்
பிராணனில் அடங்கியுள்ளது. பிராண பலத்தினால்தான் உலகினை கட்டுப்படுத்தலாம். பிராணனை
இறைவன் தாராளமாக இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைத்துள்ளார். அதனை பெற்று எம்மில் சேமித்து வைப்பதற்கு தேவையானது
உறுதியான நோக்கமும், தகுதியும். பிராணனை அதிகமாக பெற்றாலும் அவர்களில்
சேமிக்கபடாமல் இருப்பதற்கான காரணம் அதிகமாக விரயம் செய்வதுதான்.
யார் பிராணனை சேமிக்கின்றானோ அவன் “பிரணவன்” ஆகிறான், பிரணவன் என்றால்
பிரம்மம் என்றுபொருள், பிரம்மம் ஒன்றே பிராண சக்தி நிறைந்தது.
தற்போது எப்படி பிராணனை விரயம் செய்யாமல் சேமிப்பது என்ற கேள்வி மனதில்
எழுகிறதல்லவா? இதற்கு எமது ரிஷிகள் அனைவரும் ஒரேகுரலில் தரும் பதில் காயத்ரி!
ரிஷிகளில் வாக்கியங்களை பாருங்கள்!
- காயா என்றால்
பிராணன், எது பிராணனை காக்கிறதோ அது காயத்ரி – ரிஷி பரத்வாஜர்
- எது பிராணனை
காக்கிறதோ அது காயத்ரி – ப்ருகதாரண்ய உபநிஷதம்
- எதனூடாக
பிராணன் காக்கப்படுகிறதோ அது காயத்ரி – சங்கர பாஷ்யம்
- ஹே தேவி, நீ
உன்னை உபாசிப்பவர்களை காக்கின்றாய்! அதனால் காயத்ரி எனப்படுகிராய், காயா என்றால்
பிராணன், காயத்ரி என்றால் பிராணனை காப்பது என்று பொருள்! – வசிஷ்ட ரிஷி
சரி எப்படி பிராணனை
காக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?
இதற்கு பதிலினை
ஆதிசங்கரர் தருகிறார் “எதனூடாக பிரம்மத்தினை அறிகிறோமோ அது காயத்ரி” என்கிறார்.
இப்படி அறிவதற்கான ஆற்றலை சமஸ்க்ருதத்தில் ரிதம்பரபிரக்ஞானம் என்று கூறுவார். இதனை
தமிழில் தெய்வ ஞானம் என்று கூறலாம். காயத்ரி சாதனையில் பிராணன் அதிகளவு
ஆகர்ஷிக்கப்படும் அதேவேளை அதனை காப்பதற்குரிய தெய்வ ஞானமம் எம்மில் வளரும்.
இந்த தெய்வ ஞானம்
எம்மில் உதிக்க தொடங்கியவுடன் எம்மால் எது உண்மை, எது பொய், எது சரி எது பிழை, எது
நல்லது எது கேட்டது என்று அறியும் ஆற்றல் வரும், இதன் மூலம் நாம் எடுக்கும்
முடிவுகள் தெய்வ ஞானத்தின் உதவியுடன் எடுக்கும் சரியான முடிவுகளாக இருக்கும்.
இத்தகைய முடிவுகள் மட்டுமே ஒருவனை எக்காலத்திலும் துன்பத்தினுள் ஆழ்த்தாதாக
இருக்கும். இத்தகைய தெய்வ ஞானம் இல்லாத நபர் மிக்க நுண்ணறிவு, திறமை, செல்வம்,
ஆற்றல் உள்ளவராக இருக்கலாம், ஆனால் உண்மையான இன்பத்தினை அனுபவிப்பவராக இருக்க
மாட்டார்கள். அவர்கள் பெரும் செல்வத்தினை உடையவர்களாக இருக்கலாம் ஆனால் மனதில்
பயத்துடன், பதட்டத்துடன், சந்தேகங்கள் நிறைந்து பொறாமை, உலக இன்பங்களில் பற்று,
தீய பழக்க வழக்கங்கள் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் உண்மை
இன்பத்தினை அனுபவிக்காதவர்களாக இருப்பார்கள்.
காயத்ரி சாதனை
தொடங்கியவுடன் மெதுவாக அவர்களில் சத்வ குணம் வளர்ந்து, தெய்வஞானம் உருவாக்கி,
பிராணனை ஆகர்ஷித்து ஒருவனில் சேமிக்க தொடங்குகிறது. இதனால் அவன் படிப்படியாக இன்ப
வாழ்வினுள் செல்ல ஆரம்பிக்கிறான்.
இதுவே
காயத்ரியின் பிராண தத்துவம்! காயத்ரி என்பது உண்மையில் பிராண உபாசனை! இன்று பலர்
மணிக்கணக்கில் பலமணிநேரம் பிரணாயாமம் செய்து வருகிறார்கள் ஆனால் அவர்களால்
எடுக்கும் பிராணனை சேமிக்க முடிவதில்லை! இதற்கு பதிலாக சிறிதளவு காயத்ரி உபாசனை
முறைப்படி செய்தால் உங்களில் பிராணன் நிறைவதை உணர்வீர்கள்!
இத்தகைய அரிய காயத்ரி உபாசனை செய்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருப்பின் மின்னஞ்சலில் கூறுங்கள்,
வழிமுறைகளை தருகிறோம்.
ஸத்குரு பாதம்
போற்றி
எந்த எந்த வழிகளில் ஒருவருக்கு பிராண இழப்பு ஏற்படுகின்றது? அல்லது,
ReplyDeleteபிராணன் ஒருவரிடம் இருந்து எவ்வகையில் விரயம் ஆகிறது?
இதற்கும் பதில் தந்தீர்களானால்,
இதுவரை காலமும் பிராண விரயச் செயல்களில் தம்மை அறியாமல் ஈடுபட்டு வந்த சாதகர்கள், இனிமேல் விழிப்புடன் இருந்து
அச்செயல்களை செய்யாமலோ அல்லது இயன்ற அளவு குறைத்துக் கொள்ளவோ முடியும்.
அன்புள்ள ஆதித்தன்,
ReplyDeleteஉங்கள் கேள்விக்கான உடனடிப்பதில் ஏற்கனவே தரப்பட்டுள்ளது – காயத்ரி உபாசனை, இதுதான் எமது முன்னோர்களது வழிமுறைகளில் உள்ள சிறப்பு, ஒரு பிரச்சனையினைப் பற்றி ஆராய்ந்து, பயந்து அதில் எமது சக்தியினை செலவழிக்காமல் அதற்குரிய தீர்வினை செய்வீர்கள் ஆனால் பலனை பெறுவீர்கள். ஆதலால் நீங்கள் காயத்ரி உபாசனை செய்பவராக இருந்தால் இதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.
உங்கள் கூற்றான //இதுவரை காலமும் பிராண விரயச் செயல்களில் தம்மை அறியாமல் ஈடுபட்டு வந்த சாதகர்கள், இனிமேல் விழிப்புடன் இருந்து
அச்செயல்களை செய்யாமலோ அல்லது இயன்ற அளவு குறைத்துக் கொள்ளவோ முடியும். //
சாதாரணமாக ஒருவரால் இதனைச் செய்யமுடியுமாக இருந்தால் சாதனை/உபாசனை தேவை இல்லை அல்லவா? இதனை செய்வதற்குத்தான் காயத்ரி உபாசனை, காயத்ரி உபாசனையின் மூலம் தகுந்த சக்தியினைப் பெற்று படிப்படியாக உங்கள் பிராண இழப்பினை குறைக்கும். ஆக நீங்கள் செய்ய வேண்டியது முறைப்படி காயத்ரி உபாசனையினை செய்யவேண்டியதுதான். பொதுவாக சாதனை நியமம் என்ற பகுதியில் உள்ளவை இந்த நோக்கத்திற்காக கூறப்படுபவை.
மேலும் இந்த விடயங்களையும் கருத்தில் கொள்ளுங்கள்;
1. பொதுவாக எந்தக்காரியத்தினையும் செய்வதற்கு பிராணன் வீணாகத்தான் செய்யும்.
2. மேலும் பிராணன் ஒரு சக்தி, சக்தியினை எப்போதும் ஒரு இடத்தில் சேமித்து வைக்க முடியாது.
3. ஆகவே பிராணனைப் பெற்று நல்ல காரியங்களுக்கு செலவழிக்க வேண்டும்.