யாழ்ப்பாணத்து தமிழ் வேந்தர் காலம் என்று ஈழத்தும் தமிழ் கவிதைக் களஞ்சியம் குறிப்பிடுகிறது. இது கி.பி 1216 – 1621 வரையிலான காலப்பகுதி. அதாவது கி.பி 1044 இல் சோழராட்சி முடிவிற்கு வருகிறது. இதன் பின்னர் பாண்டியரின் துணையுடன் முதலாம் பாராக்கிரமபாகு இலங்கையை ஆட்சி செய்யத் தொடங்குகிறான். பின்னர் 180 வருடங்களின் பின்னர் கலிங்க மாகன் படையெடுப்பு நிகழ்கிறது.
1215ம் ஆண்டு கலிங்கமாகனின் படையெடுப்பில் இலங்கை அவனது ஆட்சிக்கும் கீழே வருகிறது. இரண்டாம் பராக்கிரமபாகு தம்பதெனியாவை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்கிறான். பின்னர் 1251 இல் பாண்டிய நாட்டில் முடிசூடிய சடாவர்ம சுந்தரபாண்டியன் ஏழுவருடங்கள் கழித்து பொலன்னறுவை மீது படையெடுத்து கலிங்க மாகனை விரட்டி தம்பதெனிய இராசதானியிடம் திறை பெறுகிறான். அதன் பிறகு 1284 இல் தம்பதெனிய இராசதானியில் மூன்றாம் பராக்கிரமபாகு முடிசூட பாண்டி நாட்டில் மாறவர்மன் குலசேகர பாண்டியன் முடிசூடிய பின்னர் இலங்கையை கவனிக்க அனுப்பிய சேனாதிபதியின் பட்டப்பெயரே “ஆரியச்சக்கரவர்த்தி” என்று யாழ்ப்பாண வைபவமாலை கூறும்.
இலங்கையின் முதல் பழந்தமிழ் இலக்கிய நூல் மூன்றாவது பராக்கிரமபாகுவின் அவையில் உருவாகிறது. அது ஒரு சோதிட நூல்; சரசோதிமாலை.
இந்த ஆரியச்சக்கரவர்த்திகள் 1284 இல் வட இலங்கையை தமது குடிகளுடன் அரசமைத்து 1621ம் ஆண்டு யாழ்ப்பாணம் போர்த்துக்கேயர் வசமாகும் வரை பன்னிரெண்டு அரசர்கள் ஆண்டதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறும். இந்த பன்னிரெண்டு மன்னர்களும் செகராரசசேகரன், பரராசசேகரன் என்ற பெயர்களை பட்டத்துப் பெயர்களை மாறிமாறிக்கொண்டிருந்தனர்.
1216 – 1450 வரை யாழ் இராசதானியின் தலை நகர் சிங்கை, 1450 -1621 வரை தலை நகர் நல்லூராக விளங்கியது. தலைநகரின் பெயரைக் கொண்டு சிங்கை செகராச சேகரன், நல்லூர் பரராச சேகரன் என்று மன்னர்கள் குறிப்பிடப்பட்டனர்.
இந்தப் பன்னிரு மன்னர்களில் சிங்கை செகராரசசேகரன் (1380 – 1414) மற்றும் நல்லூர் பரராசசேகரன் (1478 – 1519) ஆகிய இருமன்னர்களும் சிறந்த அறிஞர்கள். இவர்களது ஆட்சிக்காலத்தில் பல இலக்கியங்கள் தோன்றியது. அக்காலத்தில் அறிவியல் இலக்கியங்கள் என்று கருதப்படக்கூடிய சோதிடம், மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டு துறைகள் வளர்ச்சியடைந்து காணப்பட்டது.
சிங்கைச் செகராசசேகரனின் ஆட்சியில் தோன்றிய வைத்திய நூல் செகராசசேகரம்.
நல்லூர் பரராசசேகரன் காலத்தில் தோன்றிய வைத்திய நூல் பரராசசேகரம்.
இவை இரண்டுமே இன்று நூறுவருடங்களுக்கு முன்னர் ஏழாழையில் வாழ்ந்த ஐ. பொன்னையாப்பிள்ளை எனும் பெருந்தகையால் எல்லோருக்கும் கிடைக்கும்படி பதிப்பிக்கப்பட்ட மன்னர் காலத்தைய வைத்திய நூல்கள்.
உரையைக் கேட்க கீழ்வரும் Youtube channel இல் இணைந்திருங்கள்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.