குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, December 30, 2019

வேதங்களின் இரகசியம்

The secret of the Veda எனும் நூல் ஸ்ரீ அரவிந்தரின் வேதங்கள் மீதான புரிதல் பற்றிய நூல். 
வேதங்களுக்கு இதுவரை கூறப்பட்ட விளங்கங்களில் யதார்த்தப் பூர்வமான ஆழமான வியாக்கியானம் இதுவெனக் கூறப்படுகிறது. இந்த நூலைக் கற்றதில் அறிந்த சுருக்கங்களை தமிழில் பதிவது இந்தப் பதிவின் நோக்கம். 
முதலாவது அத்தியாயம் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும் என்ற தலைப்பில் வேதங்களில் கூறப்பட்ட விஷயங்களுக்கு அர்த்தம் காண்பதில் உள்ள பிரச்சனைகளை ஆராய்கிறது. 
முதல் கேள்வி வேதங்களில் உள்ளவை எல்லாம் இரகசியங்களா? அல்லது இன்னும் இரகசியம் என்று ஏதும் இருக்கிறதா என்று ஆரம்பிக்கிறார் ஸ்ரீ அரவிந்தர். 
தற்காலத்தில் பழங்கால மர்மங்கள் அனைத்தும் பொதுவில் வெளிப்படுத்தப்பட்டு அனைவரும் அறியும் படி வெளியிட்ட பின்னர் உண்மையில் இரகசியம் என்ற ஒன்று எங்கிருக்கிறது என்று கேட்டபடி நூலைத் தொடங்குகிறார். 
முதல் பந்தியில் வேதங்கள் பற்றி கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: 
1. வேதங்களில் உள்ள பாடல்கள் ஆதி காலத்து, நாகரீகத்தின் தொடக்க காலத்தில் வாழ்ந்த மனித சமூகத்தின் இயற்கையின் சக்தி பற்றிய, சடங்குகள் அவற்றின் சினத்தைத் தணிக்கின்ற, தியாகப் பாடல்களின் தொகுப்பு.
2. இவற்றில் குழப்பமான அரைகுறையான நம்பிக்கைகளும் வானியல் சார்ந்த தகவல்களும் உள்ளடங்கி இருக்கிறது. 
3. பிற்காலத்தைய வேத மந்திரங்களில் மட்டுமே ஆழமான உளவியல் கருத்துக்களும், திராவிடர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட சிந்தனைகளும், வேதங்களைப் வெறுத்தவர்களைச் சபிக்கும் பாடல்களும் காணப்படுகிறது. 
அடுத்து தான் அந்த நூலில் தான் எடுத்தாளப் போகும் முறை பற்றிக் கூறுகிறார்;
இந்த நூலில் எனது நோக்கம் இந்த பழைய பிரச்சனைக்கு எப்படி புதிய பார்வையைத் தருவது என்பது, ஏற்கனவே இருக்கும் தீர்வுகளைப் பற்றி எதிர்மறையாகக் கூறி அவற்றை அழித் தொழிக்கும் கருத்தைக் கூறுவது எனது நோக்கமல்ல, ஆனால் எளிய, நேர்மறையான, ஆக்க பூர்வமான பயன் தரத்தக்க, இடைவெளியை நிரப்பக் கூடிய கருதுகோளை முன் வைத்து அதன் மீது புதிய ஒளியைப் பாய்ச்சுவதன் மூலம் பழைய சிந்தனைக்கும் கலாச்சாரத்தின் மீதும் உள்ள பற்றாக்குறையான கோட்பாடுகளில் இருக்கும் சாதாரண விதிகளின் மூலம் அறிந்துகொள்ள கஷ்டமானவற்றை புரிந்து கொள்ளும் முயற்சி என வரையறுக்கிறார். 
தொடரலாம்….

தலைப்பு இல்லை

எல்லாவற்றையும் முடித்து விட்டோம், அடைந்து விட்டோம் என்ற திருப்தி ஆபத்தானது! இயற்கைக்கு எதிரானது! இயற்கையில் இப்படியான ஒரு நிலை எப்போதும் இல்லை! எல்லாம் ஏதோ ஒன்றை நோக்கி திருப்தி அற்று முன்னேறிக் கொண்டு இருக்கிறது. 
இதைத் தெளிவாக அறிந்து கொள்ளாத மனம் வாழ்க்கையே நிலையற்றது, எது செய்தாலும் பலன் இல்லை என்று விரக்தியுற்றுப் புலம்பி செயலற்று சோம்பித் திரிய விருப்பம் கொள்கிறது. இதுவும் ஆபத்தானது! 
பயந்த மனமோ நம்பிக்கையற்று எதைச் செய்வது, எதைச் செய்தாலும் தோல்வி என்று விரக்தியுற்று திக்குத் தெரியாமல் திகைக்கிறது. 
இப்படியில்லாமல் செய்யும் செயலில் எவ்வளவு செம்மையாகச் சிறப்பாகச் செய்ய முடியுமோ அதைச் செய்து வரும் விளைவை ஏற்றுக் கொண்டு அதில் திருப்தி அடைவது எமக்கு இருக்கக் கூடிய எளிய தெரிவு!
செய்யும் செயலின் விளைவுகள் என்ன என்பதை நன்கு ஆரய்ந்து, அதை வெற்றி பெறச் செய்யும் காரணிகள் எவை? தோல்விக்கான காரணிகள் எவை என்பதை கண்டு தெளிந்து செய்தல் எமக்கு இருக்கும் சிறப்பான அடுத்த தெரிவு! 
செய்யும் செயல் முடிந்தவுடன் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற வெற்றிக்களிப்பில் மமதை கொள்ளாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மீண்டும் செயலில் ஈடுபடுபவன் எப்போதும் உற்சாகமாக இருக்கிறான்!

Saturday, December 28, 2019

தலைப்பு இல்லை

2020 இற்கான தத்துவ வாசிப்புகள் சிலது... 

ராகுல் சாங்கிருத்யாயன் மிகவும் சுவாரசியமான ஒருவர். இந்திய பயண இலக்கியத்தின் தந்தை என வர்ணிக்கப்படுபவர். 

ஏற்கனவே தம்பி வால்கா முதல் கங்கை வரை நூல் பற்றிக் கூறியிருந்தான். 

நானும் எனது சிறுவயது முதல் ஒரு உள்ளூர் சுற்றியாக இருப்பதால் இவரது ஊர்சுற்றிப் புராணம் என்னை மிகக் கவர்ந்திருந்தது. ஊர் சுற்றிகள் தாம் பயணிக்கும் ஊர்களிலிருந்து பெற்ற சிந்தனைகளை எப்படி சமூகத்தில் புகுத்துகிறார்கள் என்பதை அழகாகக் கூறியுள்ளார். 

வாழ்க்கை முழுக்க அறிவுத் தேடலில் கழித்திருக்கிறார். எல்லாவற்றையும் கேள்வி கேட்டு பதில் தெளியும் ஆக்கிரோசம் ஊர் சுற்றிப் புராணத்தில் தெரிகிறது. 

இவர் ரிஷி தயானந்தரின் ஆரிய சமாஜத்தின் தனது ஆன்ம தேடலைத் தொடங்கி, பின்னர் பௌத்த பிக்குவாக இலங்கையில் தீக்ஷை ஏற்று, பின்னர் அதிலிருந்து விலகி மார்க்ஸிசக் கொள்கைகள் என ஈர்க்கப்பட்டு பின்னர் உலக தத்துவங்கள் அனைத்தையும் தொகுத்து தர்சன் திக்தர்சன் என நூலாக இரண்டு பகுதிகளில் வெளியிட்டிருக்கிறார். 

உலகின் எல்லாத் தத்துவங்களையும் அறிமுகமாக வாசிக்க இவரின் இந்த நூற்கள் நல்ல ஆரம்பம்!


Friday, December 27, 2019

தலைப்பு இல்லை

சுவாரசியமான வருட இறுதி வாசிப்பு!

நியுட்டனின் தத்துவ உலகம்: இரசவாதம், எதிர்காலக் கணிப்பு, இழந்த ஞானத்தைப் பற்றிய தேடல் {The Metaphysical World of Isaac Newton: Alchemy, Prophecy, and the Search for Lost Knowledge}

ஆப்பிள் பழம் கீழே விழுந்ததால் புவியீர்ப்பு சக்தி இருப்பதைக் கண்டுபிடித்தவர் என்று எல்லோராலும் அறியப்பட்டவரும், மேற்கத்தேய பௌதீகவியலின் தந்தை எனப்படுபவரும், நுண்கணிதத்தை வகுத்தவருமான ஐசாக் நியுட்டனைப் பற்றிய சுவாரசியமான மறுபக்கம்!

அவரது Principa Mathematica என்ற நூலின் மூலம் கணிதவியலாளராகவும், இயற்பியலாளராகவும் அறியப்பட்ட நியுட்டனின் அதிகமான எழுத்துக்கள் இறையியல் சார்ந்து இருந்திருக்கிறது என்ற சுவாரசியத்தைக் கூறுகிறது. 

நியுட்டனினால் எழுதப்பட்ட அறிவியல் சாராத எழுத்துக்களை உள்ளடக்கிய இரண்டு பெரிய இரும்புப் பெட்டியில் பூட்டப்பட்டு இருந்த ஆவணங்கள் அவரது குடும்பத்தின் வழித்தோன்றல்களால் 1936ல் ஏலத்தில் விடப்படுகிறது. பின்னர் 1998 ம் ஆண்டு அவை கேம்பிரிட்ஜ் நியுட்டன் திட்டம் என ஆவணப்படுத்தி பின்னர் Oxford University ஆல் ஆவணப்படுத்தப்படுகிறது. 2016ம் ஆண்டளவில் தரவேற்றப்பட்ட எழுத்துக்களின் எண்ணிக்கை 6.4 மில்லியன் சொற்கள். இது அவர் அறிவியலில் எழுதியதை விட மிக அதிகமானது. 

இதை ஆய்வு செய்த ஆய்வாளர் ஒருவரின் கூற்று " நியுட்டன் இறையியலையும் இயற்கைத் தத்துவத்தையும் புரிந்து கொள்ள முயன்றிருக்கிறார், மனித குலத்தின் அறிவிற்கு உலகைப் பற்றியது, கடவுளைப் பற்றியதுமான அறிவினை தொகுக்க முயன்றிருக்கிறார். அறிவியலற்ற விஷயங்கள் என்று இவை வெளிவரவில்லை" என்கிறார். 

ஆர்வமுள்ளவர்களுக்கான பரிந்துரை!


Wednesday, December 25, 2019

தலைப்பு இல்லை

அர்த்த சாஸ்திரத்தின் இரண்டாவது அத்தியாயம், முதலாவது சுலோகம், முதல் இரண்டு வரிகள்;
இது அரசன் அறிய வேண்டிய வித்தைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. 
இதில் குறிப்பிடப்படும் ஆன்விக்ஷிகி முக்கியமானது. 
இதைத் திருவள்ளுவர் நுண்மாண் நுழைபுலம் என்கிறார். 
இது பாரத ரிஷிகளின் கேள்விக்கான, தர்க்கத்திற்கான அறிவியல், விஞ்ஞானம். ஆரம்பத்தில் சமூகம் ஆத்ம ஞானத்தை அடைவதற்கு மட்டுமே வாழ்க்கை என்று இருந்த போது ஆன்விக்ஷிகி என்ற புத்தியின் ஆற்றல் ஆன்ம ஞானத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. வேதாங்கமான உப நிஷத்துக்கள் ரிஷிகளின் ஆன்விக்ஷிகி ஆற்றல்கள் பிறந்த ஞானம். 
கட உப நிஷத்தில் நசிகேதனின் கேள்வி கேட்கும் ஆற்றல் ஆன்விக்ஷிக்கான உதாரணம்.
ஆன்விக்ஷிகி இரண்டு விடயத்துடன் தொடர்புபடுகிறது. ஒன்று ஆன்மாவை அறிதல், மற்றது காரியங்களுக்கான சரியான காரணத்தை அறிதல்.
கௌடில்யர் அரசன் அல்லது தலமை நிர்வாகி ஆன்மாவை அறிந்த ஞானியாகவும், சரியான தர்க்க ரீதியாக கேள்வி கேட்கக் கூடிய ஆற்றல் உள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அரசன் அறிய வேண்டிய வித்தைகளில் ஆன்விக்ஷிகி முதன்மை வித்தையாக குறிப்பிடுகிறார்.
ஆன்விக்ஷிகி என்பது தர்க்க ரீதியாக கேள்வி கேட்டு ஒரு விஷயத்திற்கான காரணத்தை சரியாக புரிந்து கொள்ளும் ஆற்றல்.
ஒரு விஷயத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்கும் போது மட்டுமே அதனது தர்க்கத்தை அறிய முடியும். தர்க்கத்தை அறிந்தால் மட்டுமே புத்தி ஏற்றுக் கொள்ளும். புத்தி ஏற்றுக் கொண்டால் மட்டுமே மனம் உள்வாங்கும். மனம் உள்வாங்கினால் மட்டுமே செயல் சிறப்பாக நடைபெறும்.
ஆகவே ஒருவன் தனது ஆன்விக்ஷிகி ஆற்றலை வளர்த்துக் கொள்ளாமல் எந்த சாஸ்திரப் படிப்பையும் முழுமையாக புரிந்து பயன் பெறமுடியாது.
இன்று வேதங்கள், சாஸ்திரங்கள் மூட நம்பிக்கையானதற்கு சமூகம் ஆன்விக்ஷிகி ஆற்றலை இழந்தது தான் காரணம்.
ஒருவன் ஆன்விக்ஷிகியில் சிறந்தால் உண்மையை மயக்கம் இன்றி தெளிந்து கொள்ள முடியும். இந்த அடிப்படையிலேயே முற்காலத்தில் மனதை, புத்தியை பயன்படுத்துபவர்களுக்கு புத்தியை ஒளியூட்டும் காயத்ரி சாதனை கட்டாயம் ஆக்கப்பட்டது.
உயர்ந்த ஞானத்தைப் பெற வேண்டியவர்கள் அறிய வேண்டிய அறிவியல் ஆன்விக்ஷிகி.
இதுவே ஸ்ரீ ஸக்தி சுமனன் ஆகிய எமது அபிப்பிராயம்.

Tuesday, December 24, 2019

தலைப்பு இல்லை

எதிராளி அல்லது வாதம் செய்பவரின் Ego இனை மதித்து, ஆனால் ஏற்றுக் கொள்ளாமல் தன் கருத்தை நுண்ணறிவு கொண்டு வாதம் செய்வது எப்படி என்பது தான் பலருக்குப் பிரச்சனை! 

வாதம் மற்றவரைத் தாக்கி குரோதம் வளர்ப்பதல்ல! 

தெளிவை நோக்கிய தாம் ஏற்றுக் கொண்ட விஷயத்தின் மீது விட்டுக் கொடுக்காத நுண்ணறிவுச் சமர்! வாதத்தின் இறுதியில் இருசாராரமும் தெளிவினை எட்டியிருக்க வேண்டும். எதிராளியின் கருத்தைத் தாக்குதல் என்பது எதிராளிக்கு தெளிவைக் கொடுத்து எமக்கு வெற்றியைத் தரவேண்டும். 

எதிராளியின் Ego இனை மதிக்காவிட்டால் அவர் தனது கருத்தை சரியாக முன் வைக்காமல் உணர்ச்சிவசப்பட்டு கூப்பாடு இட்டு தனது கருத்தை நிறுவ முயல்வார்! 

ஆகவே எதிர்த்துக் கருத்துச் சொல்பவர்கள் கருத்தை எக் காரணம் கொண்டும் அவர்கள் மனது நோகும்படி ஏளனமாக, தாழ்த்தி நகையாடக் கூடாது. 

இத்தகைய வாதங்களே கடந்த நூற்றாண்டின் புலவர் அறிஞர் மரபு என்பது இப்படித் தான் இருந்திருக்கிறது. தம்மை அந்த மரபினைக் காக்க வந்த இரட்சகர்களாக எண்ணிக் கொண்டு மற்றவர்களை தாக்கி எள்ளி நகையாடும் மரபு! இது அக்காலத்து சமூகத்தின் அறிவு மட்டத்திற்கு தேவையான ஒன்றாக இருந்திருக்கலாம். 

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை அற்று

நுண்ணறிவு இல்லாமல் நாம் அடைந்த அதிகாரங்கள், பதவிகள், சமூக அந்தஸ்து போன்ற புற எழில்களை வைத்துகொண்டு அறிவுச் செருக்கு காட்டுவோமானால் அது மண்பாவையின் அழகு போன்றது என்கிறார் வள்ளுவர்.


தலைப்பு இல்லை

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்

சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே

பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச் 

சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே


தலைப்பு இல்லை

என்னை நோக்கிப் பாய்ந்த....
.
.
.
.
.
.
.
.
Scooty!    
நாம் எவ்வளவு தான் விதிகளைப் பின்பற்றி வாழ்ந்தாலும் நம்மைச் சூழ உள்ளவர்களது கர்மத்தின் பலனை நாமும் அனுபவிக்க வேண்டும் என்ற அனுபவ உண்மை இன்றைய காலைப் பொழுதில்! 
மழையில் குடை பிடித்து ஸ்கூட்டி ஓட்டி வந்த நபர் உணவருந்த நிறுத்தியிருந்த காரினை காதலால் கட்டித் தழுவிய போது! 
வாகனங்கள் இரண்டுக்கும் ஏற்பட்ட பாதிப்பையும், ஸ்கூட்டி ஓட்டி வந்த நபர் எனது காரினை முத்தமிட முயன்றதனால் அவரது உதடு கிழிந்ததையும் தவிர வேறு பாதிப்புகள் எதுவும் இல்லை!

Sunday, December 22, 2019

அர்த்த சாஸ்திரம் - முதல் ஸ்லோகம்

ஓம் நம; சுக்கிர ப்ருஹஸ்பதிப்யாம் 
சென்ற பதிவில் ஓம் ஏன் என்ற விளக்கம் பார்த்தோம்! 
ஓம் இற்கு அடுத்து சுக்கிரனும் பிரஹஸ்பதியும் வணங்கப்படுகிறார்கள்
சுக்கிரனையும், பிரஹஸ்பதியையும் ஏன் குறிப்பிடப்படுகிறார் என்றால் அர்த்த சாஸ்திரத்துடன் உள்ள தொடர்பை விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். ரிஷி பரம்பரையில் இந்த பிரபஞ்சத்தின் "அர்த்தம் எனும் பொருள் உடைய வாழ்க்கையை - செல்வத்தை அடைய இரண்டு வழிகளே உண்டு. அவை
நல்ல வழி - பிரபஞ்ச மூல இயக்கத்துடன் ஒத்திசைந்து பெறுவது நல்வழி. 
தீய வழி - பிரபஞ்ச மூல இயக்கத்தை எதிர்த்து பலம் பெறுவது தீய வழி. 
நல்வழி கடைப்பிடிபோர் தேவர் என்றும், தீயவழி கடைப்பிடிப்போர் அசுரர் என்றும் கூறப்பட்டனர். 
ஆனால் இது நன்மை, இது தீமை என்று எப்போதும் தெளிவாக கோடிட்டு பிரித்து விட முடியாது. நன்மையில் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கும். நல்லவர் தீயவராகவும், தீயவர் நல்லவராகவும் மாறி மாறி மனதின் பிடியில் மாறிக் கொண்டிருப்பதே இயல்பு வாழ்க்கை!
ஆகவே வாழ்க்கையை நடத்த எது சரி எது பிழை எனக் கூற ஞானம் பெற்ற குரு அவசியம். நல்லவை மட்டுமே அர்த்தத்தை அடைய வழிகாட்டுவோம் என்ற வைராக்கியமுடைய நல்லவர்கள் பிரஹஸ்பதி என்ற தேவகுருவால் காட்டப்படுகிறார்.
கெட்டவரும் ஒரு நாள் நல்லவராவார் என்ற உயர்ந்த மனப் பண்புடன் வழிகாட்டும் குரு சுக்கிரனாக காட்டப்படுகிறார். 
சுக்கிரன் பிரம்மாவின் பேரன், பிருகு மகரிஷியின் மகன். சிறு வயதில் பிரகஸ்பதியின் தகப்பனான அங்கிரஸ் மகரிஷியின் கீழ் பிரகஸ்பதியும் சுக்கிரனும் கல்வி கற்கின்றனர். பின்னர் அங்கிரஸ் மகரிஷியின் தன் மகன் மீதான ஒரு தலைப்பட்சமான கவனிப்பால் கௌதம மகரிஷியிடம் கற்று தனது தவத்தின் மூலம் சிவபெருமானிடம் சஞ்சீவனி மந்திர உபதேசம் பெறுகிறார். பின்னர் அந்த உயர்ந்த வித்தையை தனது போட்டியாளனான பிரஹஸ்பதியின் மகனான கசனுக்கு, அவனது தகுதி கண்டு உபதேசிக்கிறார்.
இப்படி நன்மையும் தீமையும் போட்டியிடும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறிவு சக்தியே சுக்கிரனும், பிரஹஸ்பதியுமாக சுட்டிக் காட்டப்படுகிறார்கள். இந்த அறிவு சக்தியை பிரயோகித்தே மனித சமூகம் வளர்ந்திருக்கிறது. தீயதை செய்பவனை தனது சஞ்சீவினி வித்தையின் மூலமும் எல்லாம் வல்ல சிவனின் அருளாலும் நல்ல நிலைக்கு கொண்டுபோகின்றவர் சுக்கிரன். ஆக சுக்கிரன் அனைவரிலும் கருணை கொண்டவர். 
நல்ல நிலை எனப்படும் தேவ நிலை அடைந்த பின்னர் அந்த நிலையை தவறவிடாமல் இருக்க உதவுபவர் தேவ குரு பிரஹஸ்பதி!
ஆக சுக்கிரனும் பிரஹஸ்பதியும் மனித வாழ்க்கையில் நிகழும் நன்மையை வழி நடத்தும் அறிவு சக்திகள்! ஆகவே அர்த்த சாஸ்திரத்தை ஓம் என்ற பிரபஞ்ச சக்தியின் அதிர்வுடன் ஒத்திசைந்து, மனித மனதில் நிகழும் நன்மை, தீமைகளை வழி நடத்தும் அறிவு சக்திகளான சுக்கிரன், பிரஹஸ்பதியை நினைத்து அர்த்த சாஸ்திரத்தை தொடங்குகிறார்.
இதுவே இந்த ஸ்லோகத்தின் மீதான ஸ்ரீ ஸக்தி சுமனனாகிய எமது அபிப்பிராயம்.

தலைப்பு இல்லை

எதைக் கற்றாலும் நாலு பேரைச் சேர்த்துக் கொண்டு கூட்டமாக கற்பது என்பது எமது வழமையான போக்கு! இப்படிக் கற்கும் போது ஆர்வமாக சேரும் பலரும் இறுதி வரை நிற்பதில்லை. 
இப்படித் தொடங்கப்பட்டது தான் கௌடில்யர் அல்லது சாணக்கியரின் அர்த்த சாஸ்திரப் படிப்பு! 
முதலாவது சுலோகத்தின் விளக்கவுரை பகுதி பகுதியாக பதிவிடுவோம். 
அர்த்த சாஸ்திரத்தின் முதல் ஸ்லோகம் ஓம், சுக்கிரன், பிரகஸ்பதி ஆகிய மூன்றையும் வணங்கி சுருக்கமாக தொடங்குகிறார்.
ஏன் ஓம் என்ற மந்திரத்துடன் தொடங்குகிறது?
ஓம் என்பது இந்த உலகு தோன்றுவதற்கு ஏதுவான அ + உ + ம் என்ற நாதத்தின் (vibration) சப்தம். இந்த அதிர்வே பிரபஞ்ச இயக்கத்திற்கு மூலமாக இருக்கிறது. இந்த இயக்கத்தின் ஒத்திசைவிலேயே இந்த பிரபஞ்சம் தோற்றம் பெறுகிறது. இந்த பிரபஞ்சத்தின் ஒத்திசைந்த (Harmony) இயக்கத்திற்கு பிரபஞ்சத்தின் அடிப்படையுடன் ஒருவனுக்கு எப்போதுமே ஒத்திசைவு இருக்க வேண்டும். அதனாலேயே எமது ரிஷிகள் எந்த மந்திரமாக இருந்தாலும் ஓம் சேர்த்தார்கள். கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் நிர்வாக, அரசியல் ஒழுங்கைப் போதிக்கிறது. ஆகவே அந்த அர்த்த சாஸ்திர ஒழுங்கு பிரபஞ்சத்தின் ஒழுங்குடன் ஒத்திசைந்து இருக்க வேண்டுமல்லவா! ஆகவே அர்த்த சாஸ்திரம் பிரபஞ்ச ஒழுங்குடன் அமைக்கப்பட்டது என்பதை குறிக்க ஓம் என்ற பிரணவத்துடன் தொடங்குகிறது.

Saturday, December 21, 2019

தலைப்பு இல்லை

எனது பெயர் Sri Sakthi Suman   

இந்த முகநூல் தளத்தில் என்னை தெரிந்துள்ளவர்கள் இருக்கின்றீர்கள் என நம்புகின்றேன் நீங்கள் எனது பேஸ்புக்கில் இருந்தால், நீங்கள் என்னை விரும்புகிறீர்கள் என்று நான் நம்ப விரும்புகிறேன்.

விருப்பு வெறுப்புகள் மற்றும் பரிசுகளை விட அதிகமாக நாம் இன்னும் தொடர்பு கொள்ள முடியுமா என்று பார்க்க விரும்புகிறேன், உண்மையில் ஒருவருக்கொருவர் ஏதாவது எழுதலாம். 

புகைப்படம் இல்லாமல் ஒரு இடுகையை யார் படிக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். நாம் தொழில்நுட்பத்தில் மூழ்கி இருப்பதால் மிக முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டோம்: நல்ல நட்பு.

இந்த செய்தியை யாரும் படிக்கவில்லை என்றால், அது ஒரு குறுகிய சமூக பரிசோதனையாக இருக்கும். ஆனால் நீங்கள் அதை கடைசி வரை படித்தால், நீங்கள் என்னை பற்றி ஒரு வார்த்தையுடன் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

உதாரணமாக, ஒரு இடம், ஒரு பொருள், ஒரு நபர், நீங்கள் என்னை தொடர்புபடுத்தும் அல்லது நினைவில் வைத்திருக்கும் ஒரு கணம். இந்த உரையை நகலெடுத்து உங்கள் சுவரில் ஒட்டவும், (பகிர வேண்டாம்) நான் உங்களை நினைவூட்டும் ஒரு வார்த்தையை விட்டுச் செல்ல உங்கள் சுவருக்குச் செல்வேன். உரையை நகலெடுக்க உங்களுக்கு நேரம் இல்லையென்றால் தயவு செய்து எந்தக் கருத்தையும் எழுத வேண்டாம். 

அது பரிசோதனையை அழித்துவிடும்.

என் பெயரை மாற்றி உங்களுடையதை எழுதுங்கள்.

பேஸ்புக்கைத் தாண்டி பகிரப்பட்ட கதைக்கு ஏற்ப யார் படிக்கவும் பதிலளிக்கவும் நேரம் எடுத்தார்கள் என்று பார்ப்போம் !!

நன்றி

Copy & Paste


Thursday, December 19, 2019

புத்தரின் மூளை - 01

இந்த நூல் எமது மகிழ்ச்சிக்கும் மூளைக்கும் மனதிற்கும் உள்ள தொடர்பினை அழகாக விவரிக்கிறது. 
நான் கற்றவற்றின் அத்தியாயச் சுருக்கத்தை நேரம் கிடைக்கும் போது பகிர்கிறேன். 
இனி முதலாவது அத்தியாயத்தின் சுருக்கம் வருமாறு:
1. உங்கள் மனம் மாறும் போது உங்கள் மூளையும் மாறுகிறது. இந்த மாற்றம் காலத்துடனும், நீடித்து நிற்கக் கூடியதாகவும் இருக்கும். உங்கள் மூளையில் ஏற்படும் மாற்றம் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும், அதே போல் மனதில் ஏற்படும் மாற்றமும் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தும். மனமும் மூளையும் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த தொகுதி. 
2. ஆகவே உங்கள் மனதின் மூலம் மூளையில் மாறுதல்களை ஏற்படுத்தலாம். உங்களை மாத்திரமல்ல உங்களைச் சந்திக்கும் அனைவரின் மனதிலும் மூளையிலும் மாற்றத்தினை ஏற்படுத்தலாம். 
3. ஆழ்ந்த தியானப் பயிற்சியில் தம்மை நீண்ட காலம் பயிற்றுவித்துக் கொண்டவர்கள் மனதினை வெல்லும் ஒலிம்பிக் வீரர்கள். அவர்கள் தமது மனதை எப்படி பயிற்றுவித்துக் கொண்டார்கள் என்பதை அறிவதன், கற்பதன் மூலம் நாமும் மகிழ்ச்சி, அன்பு, ஞானம் என்பவற்றைப் பெறலாம். 
4. நீங்கள் பிழைத்து வாழ உதவுவதற்காக உங்கள் மூளை பரிணாமமுற்றுள்ளது. ஆயினும் பிழைத்து வாழ்வதற்கான அதனது மூன்று தந்திரோபாயங்கள் உங்கள் துன்பத்திற்கும் வழிவகுக்கின்றன. அவை 1) தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உலகத்திலிருந்து, மற்றவர்களிலிருந்து பிரித்துக்கொள்வது, 2) மாற்றத்தினை கட்டுப்படுத்தி தனது அகச்சூழலை சம நிலையில் முயற்சி 3) வாய்ப்புகளை அடைவதற்காகவும், ஆபத்துக்களை தவிர்ப்பதற்காகவும் கடந்து கொண்டிருக்கும் இன்பங்களை பற்றிப் பிடித்துக் கொள்ளவும், தவிர்க்க முடியாத வலிகளிலிருந்து தப்பிக்கவும் மனிதன் உட்பட அனைத்து விலங்குகளும் தமது நரம்புத் தொகுதியால் முயல்கிறது. 
5. அறம், விழிப்புணர்வு, ஞானம் ஆகிய இந்த மூன்றும் ஒவ்வொரு நாளினதும் இன்ப வாழ்க்கைக்கும், தனிமனித வளர்ச்சிக்குமான பயிற்சியாகும். இந்த மூன்றும் அடிப்படை நரம்புத் தொகுதியை மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சீரமைக்கின்றன.
6. அறம், விழிப்புணர்வு, ஞானத்துடன் கூடிட தொடர்ச்சியான சிறு முயற்சியும் மூளையின் நரம்புக் கலங்களில் புதுவித பாதையைத் தோற்றுவிக்கின்றன. உங்கள் தினசரி முயற்சி கட்டாயம் உங்கள் மூளையில் மாற்றத்தினை ஏற்படுத்தும். 
7. இப்படி அனேக மனிதரின் மூளையில் ஏற்படும் நல்ல மாற்றம் இந்த உலகத்தினை நலமான பாதையில் செலுத்தும்!

Tuesday, December 17, 2019

தலைப்பு இல்லை

வாசிப்பது ஒரு நல்ல போதை! அதுவும் எம்மை நாமே புரிந்துகொள்ளும் அறிவைத் தரும் நூற்கள் வாசிப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும் போதை! 
இன்றைய வாசிப்பு Neuroplasticity தொடர்பானது, Neuroplasticity என்றால் மூளை தன்னை தொடர்ச்சியாக புதுப்பித்துகொண்டு உருவாக்கிக்கொண்டிருக்கும் தன்மையைக் குறிக்கும் சொல்! 
பலகாலமாக மூளை பழுதடைந்தால் அவ்வளவுதான் அது மீளுருவாக்கம் பெறாது என்ற கருதுகோள்தான் நம்பப்பட்டது. ஆனால் இப்போது மூளை தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
மருத்துவர் Doidge இந்த நூலின் மூலம் மூளைப்பாதிப்புகளில் இருந்து வெற்றிகரமாக மீண்டுவந்த கதைகளை சொல்லுகிறார். 
இந்த நூலில் உள்ள "Rewiring the brain with light" என்ற அத்தியாயம் மிகச் சுவாரசியமானது. பண்டைய எகிப்திய, இந்திய நாகரீகத்தில் சூரிய வணக்கம் இருப்பது மூளையினை மீள் கட்டமைப்பதற்குரிய வழி என்பதை தற்போதைய நவீன ஆய்வுகளின் படி மூளையில் ஊடுருவும் ஒளி அலைகள் Neuro-plasticity தன்மையின் மூலம் மூளையை மீள்கட்டமைக்கும் தன்மை உடையது என்று அறியபட்டுள்ளது. இந்த அறிவை பண்டைய நாகரீகங்களான எகிப்தும், இந்தியாவும் பெற்றிருந்திருக்கிறார்கள் என்கிறார். (பக்கம் 119). 
காயத்ரி உபாசனையில் புத்தியைத் தூண்டும் அந்தப்பேரொளியை எம்மில் இருத்தி தியானிப்போமாக என்ற அர்த்தம் மூளையினை ஒளியின் மூலம் மீள் கட்டமைத்துக்கொள்ள என்பது விளக்கமாகிறது. 
சாத்திரங்கள் பாவகாரியங்கள் செய்தால் பிராயச்சித்தமாக சூரியனைத் தியானித்து ஆயிரம் காயத்ரி ஜெபித்து விடு பாவம் பிராயச்சித்தமாகிவிடும் என்று கூறுவதன் அடிப்படை இதுதான் எனலாம். பாவங்கள் எனப்படுபவை மூளையின் சம நிலையைக் குலைக்கும் உணர்ச்சிவசப்பட்ட செயல்கள், இவற்றைச் செய்த மூளை மீண்டும் சமப்பட்டு சரியான நிலைக்கு வர இந்தப்பயிற்சிகள் உதவுகின்றது எனக்கொள்ளலாம்! ஆகவே தவறான காரியத்தைச் செய்து மூளையைக் கெடுத்தவர்கள் தனது மனதினதும் சூரிய ஒளியின் உதவியினையும் கொண்டு தனது மூளையைச் சமப்படுத்திக்கொள்ளலாம். 
நாம் நினைப்பதைப்போல் எமது தோல், மண்டையோட்டுடன் சூரிய ஒளி நின்று விடுவதில்லை, இவற்றைத்தாண்டி ஒளி மூளையில் புகுந்து மூளையை மீள் கட்டமைக்கும் செயலைச் செய்கிறது என்கிறார் ஆசிரியர்!
எமது மூளையினதும் உடலினதும் ஆற்றல்கள் அபாரமானது!

Sunday, December 15, 2019

தலைப்பு இல்லை

ஜோதிடக் கலையின் நோக்கம் என்ன? 
இன்று எதிர் காலத்தைக் கணிக்க, நல்லது நடக்குமா, கெட்டது நடக்குமா என்று அறிய என எமது பிரச்சனைக்குரிய தீர்வினை காணும் ஒரு உத்தியாகவே ஜோதிடம் கருதப்படுகிறது. 
ஆனால் இதன் உண்மை நோக்கம் பற்றி மூல நூற்கள் கூறும் விஷயம் அற்புதமானது. மறையியல் சார்ந்தது. இந்தப் பௌதீகத்தைத் தாண்டிய நுண்ணுலக வாழ்க்கையுடன் தொடர்புபட்டது. 
ஜோதிடத்தின் ஆதி நூற்களில் ஒன்று பராசர ப்ருஹத் ஹோரா சாஸ்திரம் என்பது. இதன் முதலாவது அத்தியாயத்தில் பராசர முனிவரும் அவரது மாணவர் மைத்திரேயரும் சம்பாஷிப்பதாக உரையாடல் வருகிறது. 
ஜோதிடத்தை மனிதன் அறிய வேண்டியதன் நோக்கம் தன்னுள் உள்ள தெய்வத் தன்மையை அறிந்து தன்னை யார் என்று அறிவதற்கான நோக்கத்திற்காக என்று பராசரர் வகுக்கிறார். 
பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ஜீவராசிகளும் தமக்குள் ஜீவாத்ம அமிசத்தையும், பரமாத்ம அமிசத்தையும் கொண்டிருக்கிறது. 
இவற்றுள் தேவதைகளும், கிரகங்களும் பரமாத்ம அமிசங்கள் உடையவை. பூமியில் இருக்கக் கூடியவைகளில் ஜீவாத்ம அமிசமே அதிகமாகவும் பரமாத்ம அமிசம் குறைவாகவும் இருக்கிறது. 
ஆகவே பூமியின் பிறந்த மனிதன் தான் எப்படி பரமாத்ம அமிசம் பெறுவது என்ற வழியினைப் பெறுவதற்கு எமக்கு அருகில் இருக்கும் பரமாத்ம அமிசங்களான கிரகங்களின் துணையைப் பெற வேண்டும். 
பிரளயத்தின் இறுதியில் அனைத்தும் பரம் பொருளுடன் ஒன்றும். 
இந்த இரகசியங்களை அறிய ஜோதிஷ சாஸ்திரம் அவசியம் என்று கூறி இரண்டாவது அத்தியாயத்தை முடிக்கிறார். 
ஆக பராசரரின் முடிவின் படி ஜோதிஷம் தன்னை அறியும் (self realization) இற்கான ஒரு உப அறிவு (வேதமாகவே) கருதப்பட்டிருக்கிறது. 
தற்போது ஜோதிடத்தை இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறோமா என்பதே சிந்திக்க வேண்டிய விஷயம். 
மூல நூற்களைக் கற்காமல், அதன் நோக்கம் என்னவென்று புரியாமல் அவரவர் வசதிப்படி அறிவினை வளைத்துக் கொள்வது பெரும் குழப்பத்தில் ஆழ்த்தும் என்பது ஜோதிடக் கலையின் மூலம் புரிந்துக் கொள்ளலாம். 
மூல நூல் ஆசிரியரான பராசர ரிஷி கிரகங்களை பரமாத்ம அமிசம் என்கிறார். ஆனால் இன்று சனி குடியைக் கெடுக்கிறான், ராகு வாழ்க்கையைப் புரட்டுகிறான் என்று சொல்வது ஜோதிடத்தின் அடிப்படை விதிகளுடன் முரண்படுகிறது. 
ஜோதிஷத்தின் உண்மைப் பயன் என்னவென்று அறிய மூல நூற்களை கற்றுப் புரிதல் அவசியமான ஒன்று என்பதைக் கூறவே இந்தப் பதிவு.

Saturday, December 14, 2019

தலைப்பு இல்லை

அன்புடனும் பாசத்துடனும் எமது திருமண நாளில் எம்மை வாழ்த்திய அனைவருக்கும் எமது இதயங்கனிந்த நன்றிகள்!

தலைப்பு இல்லை

கொழும்பில் உள்ள நண்பர் குழாம் Complete work of Swami Vivekananda (CWSV) - ஞானதீபம் நூற் தொகுதியை முறைப்படி கற்க ஆர்வம் கொண்டுள்ளது. 

மாதம் ஒரு முறை ஆர்வமுள்ள நண்பர்கள் ஒன்று கூடி முதலாவது நூலிலிருந்து தொடங்கப்படும். குறித்த மாதத்தில் நூலில் சிறு பகுதிகள் பங்கு பெறுபவர்களால் படிக்கப்பட்டு அவர்களது புரிதல் பகிரப்படும். இப்படி படிப்படியாக முழுத் தொகுதியையும் சேர்ந்து படித்து முடிப்பது இந்தத் திட்டத்தின் இலக்கு! 

இந்த உரையாடலிற்குள் சரி, பிழை வாதங்களுக்கு உட்படாமல் சுவாமி விவேகானந்தர் தனது உரையில் என்ன சிந்தனையை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்வதே அடிப்படை. 

இதன் மூலம் ஒவ்வொருவருடைய புரிதலும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் என்பதே எண்ணம். படிக்காதவர்களும் படிப்பதற்குரிய தூண்டலைப் பெறுவதற்காக பங்கு பெறலாம். 

ஆர்வமுள்ளவர்கள் இந்தக் குழுவில் இணையுங்கள்: https://chat.whatsapp.com/BXqenTwpxYtLiEZ7iAGaeZ


Friday, December 13, 2019

தலைப்பு இல்லை

மிக நீண்ட காலத்திற்கு முன்னர் சோதிடம் படித்து பின்னர் நிறுத்தியாயிற்று! நேற்று தற்செயலாக புத்தகங்களை அடுக்கும் போது கண்ணில் பட்டது அஷ்டக வர்க்கம் பற்றிய நூல். 

அஷ்டகம் என்றால் எட்டு 

வர்க்கம் என்றால் பலம் என்று பொருள். 

பராசர முனிவர் எழுதிய பராசர ஹோராவில் இந்தக் கணிதம் விளக்கப்பட்டுள்ளது. கணிதத்தில் உள்ள ஒரு வித matrix calculation போன்றது. 

ராகு கேது நீங்கலாக ஏழு கிரகங்களும் லக்கினமும் சேர்ந்து எட்டு விதமான பலங்களை ஒவ்வொரு இராசிக்கும் தரும். 

இந்த பலத்தை கணித ரீதியாக புள்ளிகளைத் தந்து கொள்ளலாம். 

இனி விஷயத்திற்கு வருவோம், இது ஜோதிடப் பதிவு அல்ல, வழமையான தத்துவப் பதிவு தான். 

அஷ்டக வர்க்கம் வாழ்க்கை பற்றிய சுவாரசியமான செய்திகளைக் கூறுகிறது. 

இந்த அஷ்டக வர்க்கம் கூறும் செய்தி என்னவென்றால், 

1) எந்தவொரு மனிதனுக்கும் 337 புள்ளிகள் தான். ஆகவே படைப்பில் அனைவரும் சமம். 

2) ஒரு வீட்டிற்குரிய புள்ளிகள் கூடினால் இன்னொரு வீட்டிற்குரிய புள்ளிகள் குறையும். ஆகவே ஒன்றைப் பெற இன்னொன்றை இழக்க வேண்டும். 

3) அனைத்திலும் புள்ளிகள் சமமாக இருந்தால் சீரான ஏற்றத் தாழ்வு இல்லாத வாழ்க்கை வாழ்வார்கள். 

4) புள்ளிகள் அதிகம் இருக்கும் இராசிகள் எமது வலுவான ஆற்றல்கள்.

5) புள்ளிகள் குறைவாக இருக்கும் இராசிகள் எமது பலவீனமான ஆற்றல்கள். 

6) இவை அனைத்தும் எமது பூர்வ கர்மத்தின் balance sheet account என்பது இன்னும் சிறப்பான விஷயம். 

ஆக ஜோதிஷம் ஒரு SWOT analysis ஆக இந்த அஷ்ட வர்க்கத்தின் படி பயன்படுத்தலாம். 

தன்னிலும், இறை சக்தியிலும் நம்பிக்கை உள்ளவனுக்கு ஜோதிடம் ஒரு decision support tool என்பதே எனது புரிதல்! அப்படியுள்ளவர்களுக்கு அது ஒரு ஒளி விளக்கு!


யோக வாசிஷ்டம் கூறும் யோகசாதனையின் அதிகாரிகள்!

யோக வாசிஷ்டம் என்பது ஸ்ரீ இராமர் தனது குருவான வசிஷ்ட மகரிஷியிடம் தனது ஆன்ம சாதனைக்கான வழிகாட்டலைப் பெற உரையாடிய உரையாடலின் தொகுப்பு நூல்.

இது 32,000 பாடல்களைக் கொண்ட ப்ரஹத் யோக வாசிஷ்டம் என்றும், இதைச் சுருக்கி 6000 பாடல்கள் கொண்ட நூல் லகு யோக வாசிஷ்டம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நூலில் உள்ள சிறப்பம்சம் அதைப் படிப்பவனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதியைப் பற்றி பேசுகிறது.

ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்ட பலர் தாம் எதற்காக ஆன்மீகத்தில் தேடலை செய்கிறோம் என்பதை ஆழமாக ஆராய்ந்தால் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் தோல்விகள், துன்பங்கள் போன்ற காரணத்தால் அதற்குத் தீர்வு வேண்டி!

பலரும் தோல்வி, துன்பத்திற்கான காரணம் என்னவென்ற ஆராய்ச்சிக்குச் செல்ல விருப்பம் இல்லாமல் அதற்குத் தீர்வு என்னவென்ற நிலைக்குள் நின்றுவிடவே விரும்புகிறார்கள், ஏன் இந்தத் துன்பம் என்று கேட்பதில்லை! எதைச் செய்தால் துன்பம் தீரும் என்பதை மட்டும் கூறுங்கள் என்ற மனப்பாங்குடன் இருப்பவர்களே போலி ஆன்மீகவாதிகளிடன் சிக்கிக்கொண்டு அர்த்தம் தெரியாத சடங்குகளுக்குள் மாட்டிக்கொள்பவர்கள்.

எனக்குத் துன்பம் தீரும் வழியைச் சொல்ல முன்னர் துன்பத்தின் மூல காரணம் என்ன என்று தெரியவேண்டும் என்ற உறுதியுடன் தேடலைச் செய்பவனே யோக ஞான மார்க்கத்திற்கு அதிகாரி!

இப்படி துன்பம் நாம் எல்லாவற்றுடனும் பந்தப்பட்டுள்ளோம், அதனால் துன்பமடைகிறோம் என்ற விழிப்புணர்வு பெறுதல் முதல் நிலை!

யோக வாசிஷ்டம் யாருக்குரியது என்றால் " நாம் பந்தப்பட்டுள்ளோம், இதிலிருந்து எப்படி விடுபடுவது?" என்ற சிந்தனை உதித்தவனுக்கு! முழுமையாக ஞானம் பெற்ற ஞானிக்கும், முழுமையான அஞ்ஞானம் பெற்ற அஞ் ஞானிக்கும் இந்த நூல் உரியதல்ல என்று வசிஷ்டர் வரையறுக்கிறார்.

இருவருக்கு இந்த நூல எந்தப்பயனையும் தராது.

அடுத்து அஞ்ஞானி யார்? என்று நான்கு வரையறைகள் தரப்படுகிறது.
  1. தேகமே அகம் என்ற ஜடபுத்தி உள்ளவன்; நான் இந்த உடல் மாத்திரம்தான் என்ற எண்ணம் கொண்டவன் அதற்கு மேல் எந்தக்காரணமும் இருக்கலாம் என்ற முயற்சியைச் செய்ய மாட்டான்.
  2. எனது புலன்களால் பார்க்கப்படும் உலகம் மாத்திரமே சத்தியம், அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்ற நினைப்பு உள்ளவன்.
  3. புலன்களால் மாத்திரமே மகிழ்ச்சி உள்ளது என்று நம்புவன்.
  4. உண்பது, மது அருந்துவது, உறங்குவது, உடலின்பம் பெறுவது மாத்திரமே வாழ்க்கையின் நோக்கம்

என்ற இந்த நான்கு எண்ணங்களைக் கொண்டவனால் யோகப்பாதையில் பயணிக்க முடியாது.

மேற்கூறிய நான்கு எண்ணங்களுக்கும் மேலாக உண்மை இருக்கிறது என்ற பிரித்தறியும் புத்தி உள்ளவர்கள் முமுக்ஷுக்கள் எனப்படுகிறார்கள்.

இப்படி முமுக்ஷுத்துவத்துடன் ஆன்ம சாதனை முயற்சி செய்பவர்கள் ஜிக்ஞாசுக்கள் எனப்படுகிறார்கள்.

தலைப்பு இல்லை

இன்று எமது திருமண நாள்! 

அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா!

ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திட பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா! 

என எமக்காகவும் உங்கள் அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறோம்!


Thursday, December 12, 2019

தலைப்பு இல்லை

இன்று வெள்ளவத்தை கிரியா பாபாஜி யோக ஆரண்யத்தின் 11வது ஆண்டு விழா மலர் "ஆரண்யப் பிரசாதத்தில்" எமது "இல்லற யோகம்" என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. 

கட்டுரையைப் பிரசுரித்த மலர் குழுவினரிற்கு நன்றிகள்!


தலைப்பு இல்லை

இன்று தத்தாத்திரேய ஜெயந்தி!

ஆத்திரேயர் எனப்படும் அத்ரி மகரிஷிக்கும் அனுசூயைக்கும் மும்மூர்த்திகளாலும் தத்தம் பண்ணப்பட்ட ஆத்ரேயர் - தத்தாத்திரேயர். 

அத்ரி என்றால் புலன்களை வென்றவர் என்று அர்த்தம். 

அசூயை என்பது மற்றவர்களின் சிறப்புக் கண்டு பொறாமை கொண்டு வெதும்பும் மனதின் இயல்பு, அனுசூயை என்றால் அசூயை வென்றவர் அல்லது அசூயையை தன்னுள் அனுமதியாதவர் என்று பொருள். இப்படியான இருவருக்கும் மகனாக வாய்த்தவர் தாமச, ராஜச, சத்துவம் எனும் முக்குணங்களையும் வென்ற அவதூதர். 

ஆக புலன்களை வென்ற மனம் இறுதியில் அசூயையும் வென்றால் பூரண விழிப்புணர்வினைப் பெறும் என்பதே தத்தாத்ரேய தத்துவம். 

எம்மில் இருக்கும் விழிப்புணர்வு (mindfulness) சரியாக இருந்தால் உலகில் உள்ள அனைத்தும் ஞானத்தினைப் புகட்டும் என்பதை தனது 24 குருமார்கள் யார் என்று கூறி விளக்கியவர். 

இதற்கு மேல் அவர் தன்னுடைய உடல் எப்படி தனக்கு ஞானத்தினைத் தந்தது என்பது பற்றியும் கூறுகிறார். 

இன்று குரு என்று எவரையாவது, எதையாவது பற்றிக் கொண்டு விழிப்புணர்வு இல்லாமல் நம்பிக்கை மட்டுமே அடிப்படையில் ஆன்மீகம், யோகம் போன்றவற்றை அணுகுபவர்களுக்கு தத்தாத்திரேயர் குரு தத்துவத்தின் இரகசியத்தை விளக்குகிறார். 

எம்மில் இருக்கும் உணர்வு - consciousness - விழிப்புணர்வாக - mindfulness இருக்கும் போது அக குரு எம்மில் விழிப்படையும் போது எம்மை சூழ உள்ள அனைத்தும் புற குருவாக வழிகாட்டும் என்பது தத்தாத்ரேயரின் ஞானம்


Wednesday, December 11, 2019

சாதனையைத் தவறவிட்டல் மனம் மிகவும் துன்பமடைகிறதே?

என்னால் ஒரு நாள் கூட சாதனை செய்யாமல் இருக்க முடியவில்லை, அப்படி இருந்தால் வெறுமையாகவும் துன்பமாகவும் உணர்கிறேன்?

இப்படி பலசாதகர்கள் அனுபவமாக உணர்கிறார்கள்.

இந்த நிலை சரியானதா? பிழையானதா?

ஒருவிதத்தில் சாதனை மீது மிகுந்த பற்று வைத்திருக்கிறீர்கள் என்ற நிலையில்,

இன்னும் பரிபூரணமாக உங்கள் ஆளுமை தெய்வ ஆளுமையாக மாறவில்லை என்ற அளவில் நல்லது!

ஆனால் அடிப்படையில் குடிகாரனுக்கு சாராயம் குடிக்கவில்லை என்றால் ஏற்படும் ஒருவித போதை நிலைக்கு மனதை ஆழ்ப்படுத்தி வைத்திருக்கிறீர்கள் என்ற அளவில் நீங்கள் சம நிலையில் இல்லை என்றால் பிழையானது.

சாதனையைத் தவறவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது என்பது மிக அவசியமான பண்பு, இதற்கு சிரத்தை என்று பெயர்!

ஆனால் நாம் உலகவாழ்க்கையில் இருக்கிறோம், பலவித கடமைகளைச் செய்கிறோம் என்ற அளவில் யதார்த்த நிலையினைப் புரிந்துகொள்ள வேண்டும். எமது தினசரி வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் எமது சாதனையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

வீட்டில் பிள்ளைகள் உள்ள அம்மாவிற்கு அதிகாலை வேளை கணவனும் பிள்ளைகளுக்கும் உணவு தயாரிக்க வேண்டும், எட்டு மணிக்கு எல்லா வேலைகளும் முடிந்த பின்னர்தான் ஓய்வு கிடைக்கும் என்றால் அதற்கேற்றால் போல் நேரத்தை ஒதுக்கி வைத்துகொள்ள வேண்டும். இல்லாமல் எமது கடமைகளைத் தள்ளி வைத்து விட்டு சாதனை செய்கிறேன் என்று வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவது சாதனையின் நோக்கம் தெரியாமல் இருக்கிறோம் என்று அர்த்தம்.

சிரத்தையும், சோம்பலும், இறைசக்தியும் இன்று துன்பப்படும் நாம் அவற்றை சாதனையில் கொண்டு வந்து பின்னர் அதை வாழ்வின் ஒவ்வொரு விஷத்திலும் குடும்பம், தொழில், நட்புகள் அனைத்திலும் கொண்டுவருவதே சாதனையின் நோக்கம்.

வாழ்வின் அடிப்படை சாதனை, அதற்கான எமக்கு கர்மத்தால் அமைந்த வாழ்வினை, கடமைகளை வலிந்து வெறுத்து ஓடக்கூடாது.

ஆகவே சாதனை தவறவிட்டால் அதற்கு மனம் வருந்துவது கூடாது, ஏன் தவற விட்டோம் என்பதை விழிப்புணர்வுடன் ஆராய வேண்டும். காரணத்தைக் கண்டுபிடித்து அதை உடனடியாக திருத்திக்கொண்டு அடுத்த நாளிலிருந்து சாதனையைத் தொடரவேண்டும்.

அதை விடுத்து அதிக மனவருத்தம் அடைகிறோம் என்றால் நாம் சம நிலையில் இல்லாமல் எம்மை நாமே வருத்துகிறோம் என்று அர்த்தம். மனதிற்கு தாழ்வுமனப்பான்மையினை ஏற்படுத்தும் எதைச் செய்வதும் ஆன்ம முன்னேற்றத்திற்கு எதிரானது.

இல்லற யோகம்


இல்லறம் என்பது வாழ்வில் மிகப்பெரிய ஆன்ம முன்னேற்றத்தை அடைவதற்கான வாய்ப்பு. அது புனிதமானது, அர்த்தமுள்ளதும் முக்கியமானதுமாகும். பூரணமற்ற இரு ஆன்மாக்கள் கணவன் மனைவியாக ஒற்றுமையாக இணைந்து பூரண வாழ்க்கையை மேற்கொள்ளும் நிகழ்வு அது. இரண்டு இறக்கைகள் கொண்ட பறவைகள் போல அல்லது சக்கரங்கள் கொண்ட தேர் போல ஆணும் பெண்ணும் இணைந்து வலிமையான உறுதியான ஒரு தொகுதியை உருவாக்கும் நிகழ்வு இல்லறம். உளவியல் நிபுணர்களுக்குத் தெரியும் ஆண்களதும் பெண்களதும் பலமும், பலவீனங்களும் என்னவென்று. ஒருவர் மற்றொருவரது பலவீனத்தை நிரப்பும் பலமாக செயற்படுவதே. ஆணும் பெண்ணும் கவர்ச்சியுறுவது மற்றவரின் ஆற்றலைப் பெற்று தன்னை பலப்படுத்திக்கொள்ளவே. எப்பொழுதும் எமது ஆழ்மனம் எமது பலவீனத்தை பூர்த்தி செய்து வலிமையடைவதற்குரிய மார்க்கத்தைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறது. இதுவே ஒவ்வொருவருக்கும் இருக்கும் நட்பிற்கும் உறவினைத் தேடுவதற்குமான காரணமாகும்.   ஒரு குருடன் மற்றவர்களின் உதவியுடன் தான் நடமாடுவதுபோல் தம்பதியினர் ஒருவருக்கொருவர் உதவி செய்தல் வேண்டும்.
அடிப்படையில் ஆண்கள் கூடாதவர்கள், பெண்கள் கூடாதவர்கள் என்ற பொதுமைப்பாட்டுக்கருத்துடன் ஒருவர் மற்றொருவரது ஆன்மீக வாழ்க்கைக்கு தடையானவர்கள் என்ற கருத்து தவறானது. எல்லோரும் இறைவனின் படைப்பே. அனைவருக்குள்ளும் அந்த இறைவனின் ஒளி மறைந்து இருக்கத்தான் செய்கிறது. ஆண் வீட்டிற்கு வெளியே அதிகம் புழங்குவதால் அவனது வெளிப்புற ஆளுமை விருத்தியடைகிறது. வலிமையான, மற்றவர்கள் மேல் செல்வாக்குச் செலுத்தும் புத்திசாலித்தனம் விருத்தியடைகிறது. ஆனால் தொடர்ச்சியான இந்தப்போராட்டத்தால் அவன் தனது அகத்தில் ஆன்மாவின் நல்ல பண்புகளை இழந்து விடுகிறான்.   அதனால் எளிமை, உயிர்ப்புடன் செயலாற்றுதல், நேர்மை, தியாகம், கருணை, அன்பு ஆகிய நல்லுணர்ச்சிகள் ஆணைவிட பெண்ணிலேயே அதிகம் காணப்படுகிறது. பெண்கள் குணத்தில் ஆணைவிட மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள். பலரும் கூறுவதுபோல் பெண் மாயையின் உரு, பெண்ணுடன் இருந்தால் ஆன்மீக நிலை தவறிவிடும் என்பது தவறான கருத்து. பெண்ணுடன் இருக்கும் ஒரு ஆண் தனது அரக்க இயல்பினை தெளிவாக அறிந்துகொள்ள முடியும். அவளது அன்பும் அருளும் அழகிய நதிபோன்றது, அது அவனது மனதைச் சுத்தி செய்து, மனதைப் பாவங்களிலிருந்து விடுத்து துன்பங்களிலிருந்து விடுபடச் செய்யக்கூடியது.
பாவங்களும் புண்ணியங்களும் வெளிப்படையாகச் செய்யும் செயல்களில் மட்டும் இல்லை. நாம் எமக்குள் எண்ணும் எண்ணமும் செயலிற்கான நோக்கமும் காரணமாகும். தன்னலமும் தன்னலமின்மையும், நற் செயல்களும், தீய செயல்களும் வெளியே செய்யப்படும் செயல்களால் தீர்மானிக்கப்படுவதில்லை, அந்தச் செயலைச் செய்வதற்கு தூண்டிய மனப்பாங்கு எது என்பதைப் பொறுத்தே அமைகிறது. இறைவனின் நீதிமன்றத்தில் வெளிப்புறச் செயல்கள் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. செயலிற்குப் பின்னால் இருக்கும் நோக்கமே கருத்தில் கொள்ளப்படுகிறது.
இல்லறம் இல்லாவிட்டால் எப்படி நல்ல பழக்கவழக்கங்களுடைய குழந்தைகள் உருவாகுவார்கள்? எப்படி உயர்ந்த யோகிகள் உருவாகுவார்கள்? இல்லற யோகம் எல்லாவிதமான ஆன்மீக சாதனைகளையும் பயிற்சித்து சித்தி செய்யக்கூடிய புனிதமான ஆன்ம முன்னேற்றம் தரக்கூடிய ஒரு அரிய வாழ்க்கை முறையாகும். எந்தவொரு குடும்பஸ்தனும் தனது குடும்ப வாழ்க்கையால் தனது ஆன்மீகம் இல்லாமல் போகிறது என்று எக்காலத்திலும் எண்ணக்கூடாது. அடிப்படையில் திருமண வாழ்க்கைக்கும் திருமணமற்ற வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. ஒவ்வொருவருடைய தேர்வும் அவரவர் வசதி, ஆர்வம், வாழ்க்கைமுறையில் தங்கியுள்ளது. யாருடைய வாழ்க்கை முறை மனைவி பிள்ளைகள் என்று அதிக பொறுப்புகளைச் சுமக்க முடியாதபடி இருக்கிறதோ அவர்கள் திருமணமற்ற வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். யாருக்கு உறுதியான வாழத் தேவையாவான வசதிகளும் மனப்பண்பும் இருக்கிறதோ அவர்கள் திருமண வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். எந்த வாழ்க்கையத் தேர்ந்தெடுத்தாலும் தூய, தன்னலமற்ற, ஆன்ம முன்னேற்றம் விளையும் நோக்கம் இருந்தாலும் அங்கு துரித முன்னேற்றம் நடைபெறும்.
அடுத்து இல்லறயோகத்தின் அடிப்படைகளைப் பற்றிப்பார்ப்போம். வாழ்வின் அடிப்படை இந்த ஜீவான்மா இறுதியாக பரமான்மாவை அடைதாலாகும். எமது சுய நல எண்ணங்ககளைத் துறந்து அனைத்து உயிர்களும் நலமாக வாழச் செய்யக்கூடிய ஆன்மீகச் செயல்கள் சாதனை எனப்படுகிறது. இந்த சாதனாவை வாழ்வில் செய்வதற்கு பலவிதமான முறைகள் இருக்கிறது. இல்லற யோகம் ஒரு வழியாகும். ஒரு குழந்தை தனது திறனகளை வளர்த்துக்கொள்ளும் இடம் வீடாகும். தனது வாழ்க்கையில் அரைவாசிக்கும் மேற்பட்ட திறனை வளர்த்துக்கொள்ளும் இடம் வீடாகும். ஆகவே எமது அகத்தைப் பண்படுத்தும் சாதனையும் தொடங்கப்பட வேண்டிய இடம் வீடாகும்.  வாழ்வில் மேன்மை, சுயகட்டுப்பாட்டுடன் நாகரீகமாகவும், சுய சார்புடையவரகளாகவும் உருவாக மிகச்சிறந்த இடம் வீடாகும். இதைச் சாதிப்பது வீட்டில் இலகுவாக இருக்கும், ஏனென்றால் வீட்டில் இயல்பாகவே அன்பு, பொறுப்பு, கடமை, ஒருவரை ஒருவர் தங்கியிருத்தல், ஒற்றுமை என்பன காணப்படுகிறது. வீடு மற்றவர்களது தாக்கம் இன்றி எம்மை நாமே வளர்த்துக்கொள்ள நல்ல இடம்.
இல்லற யோகத்தினைத் தேர்ந்தெடுக்கும் சாதகன் கீழ்வருமாறு தனது சிந்தனையில் தியானானிக்க வேண்டும்.
·       குடும்பமே எனது சாதனைக்கான புனித ஆசிரமம். எனது பூஜை அனுஷ்டானங்கள் என்பது எனது வீட்டினையும் குடும்பத்தினையும் அழகாகவும், நறுமணமுள்ள, வளமான தோட்டத்தைப் போன்று ஆக்குவதற்கு எனது சக்தி முழுவதையும் செலவழிப்பேன். கடவுள் மேலுள்ள பக்தி என்பது என்மீது நம்பிக்கை வைத்து எனக்குத் தரப்பட்டுள்ள எனது பொறுப்புக்களை சரிவரச் செய்வது. மலர்த்தோட்டத்தை நீரூற்றி, பராமரித்து செழிப்படையச் செய்வது போன்று நானும் எனது குடும்பத்தவர்கள் அனைவரது வாழ்வினையும் செழிப்படையச் செய்வேன். எனது குடும்பத்தில் எவரையும் சிறியவர், பயனற்றவர், எனது சேவையினைப் பெறத் தகுதியில்லாதவர் என்ற எண்ணத்தினைக் கொண்டிருக்க மாட்டேன், சுய கட்டுப்பாட்டுடன் இருப்பேன். நானே அதிகாரி, வழிகாட்டி, தலைவர், எல்லாவற்றையும் முடிவெடுப்பவன் என்ற அகங்காரம் கொண்டிருக்கமாட்டேன். எப்போதும் சுய கட்டுப்பாட்டுடன் முடிவெடுப்பேன்.  நான் கருணையுடனும், சுய நலமற்று எனது சேவையை குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு ஆளுமையினையும் விருத்தி செய்யப் பாடுபடுவேன்.
·       எனது சரணாகதி என்பது கடமையுடன் எதையும் எதிர்பார்க்காமல் தூய மனதுடன் மற்றவர்களுக்கு சேவை செய்வது.. எனது தவம் என்பது எனது குடும்பத்தவர்கள் அனைவரும் வசதியாக, மகிழ்வுடன் வாழ்வதற்குரிய வழிமுறைகளைச் செய்வது.
·       எனது யாகம் என்பது உலகமும், எனது குடும்பத்தவர்களும் உண்மையுடனும், நேர்மையுடனும், பொறுப்புணர்வுடனும், அமைதியாகவும், மகிழ்வாகவும் வாழ்வதற்குரிய செயல்களைச் செய்வது.
·       எனது மத உறுதிமொழி என்பது எனது நடத்தையும், செயலும் தூய்மையாகவும், இலட்சியமுடையதாகவும், மற்றவர்களை உத்வேகப்படுத்தும் படியாகவும், மற்றவர்கள் என்னைப் பார்த்து பின்பற்றும் ஆளுமையுடையதாகவும் புனிதமடையச் செய்வது.
·       எனது சுய கட்டுப்பாடு என்பது எனது குடும்பத்தினர் அனைவரையும் சரியான வழியில் பணம் ஈட்டுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது.
·       எனது ஆராதனை என்பது அன்பும், கருணையும் நிறைந்த மனத்துடன் மகிழ்ச்சி, ஆனந்தம், ஒற்றுமையினை குடும்பத்திலும், சமூகத்திலும் உருவாக்கப் பாடுபடுவது.
·       எனது பூஜை என்பது எனது குடும்பம் எனும் கோயிலில் வாழும் அனைத்து தெய்வங்களையும் வணங்கி குடும்பத்தில் நல்லெண்ணங்கள், நற்பழக்க வழக்கங்கள், நல்ல நடத்தைகளை உருவாக்க   பாடுபடுவது.
·       தினசரி எனது காயத்ரி சாதனையில் உண்மையுடன் இருக்கிறேன் என்பதை  ஆத்மார்த்தமாக இருத்தல். நான் பற்றற்ற கர்மயோகி, எனது சந்தோஷமும் திருப்தியும் என்பது உண்மயான அர்ப்பணிப்புடன் வெற்றி தோல்வி பற்றிய எந்தக்கவலையும் இன்றி தினசரி சாதனையைத் தொடர்தல்.  நான் உண்மையுடனும், சரியான வழியிலும் எப்போது இருப்பேன் என்ற உறுதிமொழியுடன் சரியான உண்மையான வழியைப் பின்பற்றுவேன் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுதல்.
·       இந்த உறுதிமொழிகள் அனைத்தையும் ஒவ்வொரு இல்லறயோகியும் முழுமனதுடன் இதயப்பூர்வமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.    
  ஒவ்வொரு இல்லறத்தவர்களும் கடைப்பிடிக்கக்கூடிய எளிய உயர்ந்த சாதனை குரு அகத்திய காயத்ரி சாதனா உபதேசமாகும். இதில் காணப்படும் குருமந்திரம், சங்கல்பம், மந்திர ஜெபம், சித்த சாதனை என்ற அமிசங்கள் ஒருசாதகனின் அந்தக்கரணத்தில் துரிதமுன்னேற்றத்தினை ஏற்படுத்தும் வழிமுறையாகும்.
எல்லா உன்னத ரிஷிகளும் இல்லற யோகவாழ்க்கை வாழ்ந்த சாதர்களின் குடும்பத்திலேயே பிறந்து வளர்ந்து அரிய சாதனைகளைச் செய்தார்கள். சில புத்திக்குறைவான நபர்கள் இல்லறம் மாயையால் ஆனது, லௌகீகயமயமானது என்று கூறுவது உண்மையானால் எப்படி இராமர், கிருஷ்ணன், புத்தர், நபிகள், காந்தி போன்றோர் வந்திருக்க முடியும். எப்படி பதிவிரதைகளான சீதை, சாவித்ரி, மதலசா, தமயந்தி, பார்வதி போன்றோர் இருக்க முடியும். துருவன், பிரகலாதன், நசிகேதன் போன்ற தெய்வக்குழந்தைகள் உருவாகியிருக்க முடியும். இவர்கள் அனைவரும் ஆன்மீக உலகின் மாணிக்கம் போன்றவர்கள். மற்றைய அனைத்து ஆசிரமங்களான பிரம்மச்சாரிய, வானப்பிரஸ்த, சந்நியாச ஆசிரமங்கள் அனைத்தும் கிரகஸ்த ஆசிரமத்திலிருந்தே தோற்றம் பெறுவதால் இந்த இல்லறம் என்பது அனைத்து ஆசிரமங்களினதும் தந்தை என்று கூறுவது மிகையில்லை. ஆகவே இல்லறத்தைக் கேவலப்படுத்துவது தந்தையைக் குறைகூறுவது போன்றதும், சமூக முன்னேற்றத்தினைத் தடை செய்வதுமாகும்.
{இந்தக்கட்டுரை குருதேவர் பண்டிட் ஸ்ரீ ராம்சர்மாச்சார்யாவின் க்ருஹஸ்த யோகம் என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது}


{இன்று வெள்ளவத்தை கிரியா பாபாஜி யோக ஆரண்யத்தின் 11வது ஆண்டு விழா மலர் "ஆரண்யப் பிரசாதத்திக்" எமது "இல்லற யோகம்" என்ற இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது.}

தலைப்பு இல்லை

நான் எழுதுவது வித்தகச் செருக்கில் எனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் இல்லை! அனைவரையும் ரட்சிக்க வந்த மேய்ப்பர் என்ற நினைப்பும் இல்லை! எல்லையற்ற ஆர்வத்துடனும் (curiosity) பேரார்வத்துடனும் (passion) உலகில் பயணிக்கும் பயணி அவ்வளவு தான்! 

எழுதுவது மனதிற்கு மிகுந்த இன்பம் தரும் செயல், சிந்தனையை ஒழுங்குபடுத்தி, எண்ணங்களைச் சொற்களாக்கி, சொற்களை கோர்த்து, எழுத்தில் கொண்டு வரும் போது மனம் ஒருவித சந்தத்தில் ஒருமைப்படும். இப்படி ஒருமைப்படும் மனம் எப்போதும் இன்பமாக இருக்கும். என்னைப் பொறுத்த வரையில் எழுத்து ஒரு இன்பத்திற்கான வழி! 

தனி நபர்களைப் பற்றிய விமர்சனமோ, கருத்தோ, நன்மை தீமைகளைப் பற்றி எப்போதும் விலகியே இருக்கிறேன். ஏனென்றால் இவை தேவையற்ற உணர்ச்சிகளை எம்மில் உருவாக்கி எமது மூளையின் சம நிலையைக் குலைக்கும்!

நான் மனிதர்களை எண்ணங்களாகவே பார்க்கிறேன், எண்ணங்கள் கணத்துக்கு கணம் மாறும், ஆகவே இப்போது இருக்கும் நபர் அடுத்த கணத்தில் இருப்பதில்லை, ஆகவே ஒருவரைப் பற்றி ஏதாவது முத்திரை குத்தினால் அடுத்த கணம் அவர் அந்த முத்திரையிலிருந்து மாறியிருப்பார். ஆகவே மாறிக்கொண்டு இருக்கும் எண்ணங்களை வைத்து ஒருவரை அடையாளப்படுத்தி அவர் மீது விருப்பு, வெறுப்பு ஏற்படுத்தும் செயலை நான் எப்போதும் செய்ய விரும்புவதில்லை! 

அதைப் போல் எவரையும் அறிவாளி என்று மெச்சுவதோ எவரையும் அறிவிலி என்று பரிகாசிப்பது கிடையாது! அறிவு என்பது அனுபவத்தினால் வருவது! அனுபவத்தை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு அறிவு வாய்ப்பதில்லை! 

அடிப்படையில் அனைத்தும் அன்பு என்ற தங்க இழையினால் பிணைக்கப்பட்டிருக்கிறது. எழுத்தும் அன்பினைப் பகிர்வதற்கான ஒரு வழியும் கூட.... 

ஆகவே என் வழி கணியன் பூங்குன்றனார் வழி;    

எல்லா ஊரும் எம் ஊர் 

எல்லா மக்களும் எம் உறவினரே

நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை

துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை

சாதல் புதுமையில்லை; வாழ்தல்

இன்பமென்று மகிழ்ந்தது இல்லை

வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை

பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல

இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று

தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்

ஆதலினால், பிறந்து வாழ்வோரில்

சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை

பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

(புறநானூறு: 192)


தலைப்பு இல்லை

நண்பர்களே, 
எனது பதிவில் உங்களை இணைப்பதில் (Tag) விருப்பம் இல்லை என்றால் நேர்பட எனக்கு அறியத் தாருங்கள். 
நான் இணைப்பது பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறு ஆவலால் தான்! 
இன்று நண்பரொருவர் சிறு விஷயத்தை சுட்டிக் காட்டினார், இன்னொரு நண்பர் ஒருவர் நான் அவரை அடிக்கடி tag செய்வதால் அவர் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும், புலம்பல் பதிவுகள் இடுவதாகவும்! 
வீணாக உங்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்க நான் விரும்பவில்லை! 

தலைப்பு இல்லை

இயற்கையின் சம நிலையைப் புரிந்துக் கொள்வது சூழலியல் பிரச்சனைகளைப் புரிந்துக் கொள்வதற்கான அடிப்படை! 

பூமி ஒரு தனி உயிரினமாக தன்னைத் தானே சமப்படுத்திக் கொண்டு பல மில்லியன் ஆண்டுகளாக இருக்கிறது. 

இயற்கையைப் புரிந்துக் கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை வகுக்க வேண்டும். 

இயற்கையுடன் இயைந்து வாழ முடியுமா?

தனி மர நடுகைத் திட்டங்கள் சரியானதா? காடு வளர்ப்பு திட்டங்கள் அதைவிட பயனுள்ளதா? 

இன்னும் சில கருத்துக்கள்...சுவாரசியமான உரையாடல்..... பார்த்து விட்டு கருத்துக் கூறுங்களேன்! 


Tuesday, December 10, 2019

தலைப்பு இல்லை

எனது முற்பிறப்புகளில் ஒரு போர் வீரனாக இருந்திருக்கிறேனாம்! இது உண்மையா பொய்யா, நம்புகிறேனா, இல்லையா என்பதைத் தாண்டி செய்தி நன்றாக இருக்கிறது! 

ஆகவே சில நாட்கள் பண்பற்றவர்களை தலையைக் கொய்த குரு, பரசுராமரின் படம் அலங்கரிக்கட்டும்!


தலைப்பு இல்லை

மழை காலத்தில் வழமையாக எடுத்துச் செல்லும் குடையினை செல்லும் இடத்தில் விட்டு வருவது தான் எமது தனிச் சிறப்பு. ஆனால் இந்த முறை அப்படி நடைபெறவில்லை. ஆகவே நான் பெருமைப்பட்டுக் கொண்டேன். 

மனைவியும் நான் தற்போது முன்னரை விட பெருமளவில் முன்னேறியிருப்பதாக கூறினார். நானும் பெருமிதப்பட்டுக் கொண்டேன். 

அந்தப் பெருமிதம் சில வினாடிகளில் கரைந்து விடுவதாக இடியென அடுத்த அறிக்கை வந்தது, முன்னர் குடைகளை விட்டு விட்டு வந்து நஷ்டமேற்படுத்துவீர்கள், இந்த முறை திறமையாக பழைய குடையை வைத்து விட்டு வேறொருவருடைய புதுக் குடையைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று, அடடா என்று பார்த்தால் நமக்குச் சம்பந்தமில்லாத வகையில் ஒரு குடை! 

அனேகமாக வீட்டுக்கு வீடு வாசல்படி தான் என்று நினைக்கிறேன்.


Monday, December 09, 2019

தலைப்பு இல்லை

மூளையைப் பற்றிய புரிதலுக்கு அருமையான நூல்

ஹாவர்ட் உள நோய்ப் பிரிவில் விஞ்ஞானியாகப் பணியாற்றிய Jill Bolte Taylor எழுதியுள்ள நூல் இது. 

இடது பக்க மூளையில் ஏற்பட்ட இரத்தக் குழாய் வெடிப்பின் அனுபவத்தை ஒரு மூளை விஞ்ஞானியாக தான் அவதானித்ததை மூளையியல் அடிப்படையில் தனது சுய அனுபவத்தினைத் தொகுத்து சுவாரசியமாக எழுதியுள்ளார். 

சுவையான செய்தி, மனிதன் Homo Duplex அதாவது இரு மூளையும் இருவகை மனமும் கொண்டவன் என்பதை எளிமையாக விளங்கப்படுத்தியிருப்பது. 

வலது மூளை என்ன செயலைச் செய்கிறது?

இடது மூளை என்ன செயலைச் செய்கிறது?

இரண்டும் ஒன்றுக்கொன்று எப்படி மாற்றீடாகச் செயற்படுகிறது என பல சுவாரசியமான விஷயங்கள் எளிமையாக விளங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. 

மனம், மூளை பற்றி ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்! 

அல்லது சுருக்கமாக TED show இல் அவருடைய உரையைக் கேட்கலாம்: 

https://youtu.be/UyyjU8fzEYU


Sunday, December 08, 2019

தலைப்பு இல்லை

நண்பர் சாந்தரூபன் அவர்கள் கல்விக் கொள்கை பற்றிய உரையாடலை தனது காலக் கோட்டில் பதிவிட்டிருந்தார். 

கல்வி என்பது தரவுகளை மனதிற்கு ஊட்டி குறித்த விதத்தில் ஒருவனை செதுக்கும் செயற்பாட்டினைச் செய்யும் ஒரு பொறி முறையாகவே தற்போது இருக்கிறது. 

நான் இந்தத் துறை சார்ந்தவன் என்ற நம்பிக்கை ஆக்கப்பட்டு அந்தத் துறை அற்ற எதைப் பற்றியும் சிந்திக்க முடியாத கடிவாளம் கட்டிய குதிரைகளை உருவாக்கும் செயல் முறையையே தற்காலக் கல்வி முறை போதிக்கிறது. 

இப்படியான தரவுகளை மண்டையில் ஏற்றுவதை விடுத்து எளிய ஆர்வத்துடன் (Curiosity) இது என்ன? இது எனக்கு என்ன பயன்? என்று பிரச்சனைகளைச் சிந்தித்து அதற்கு தீர்வுகாணும் பிரச்சனை மையக் கற்றல் முறை (Problem based learning) அனைத்துத் துறைகளிலும் உருவாக்கப்படவேண்டும். 

சமயப் பாடமாக இருந்தாலும் ஏன் தேவாரம் திருவாசகம் பாடமாக்க வேண்டும் என்ற கேள்விக்கு ஏன் பாடமாக்க வேண்டும்? அதனால் எனக்கு என்ன பயன் என்ற யதார்த்தப் பூர்வமாக தனிமனித பயன் என்னவென்ற விளக்கம் தரப்பட வேண்டும். அதைவிடுத்து கடவுளைச் சந்தோஷப்படுத்த, கலாச்சாரத்தைப் பாதுகாக்க, பண்பாட்டைப் பேண போன்ற அர்த்தமற்ற விளக்கங்களில் இருந்து விலகி தனிமனித மேம்பாட்டிற்குரிய பயன் தரும் விடயமாக இருக்க வேண்டும்.

Saturday, December 07, 2019

தலைப்பு இல்லை

வடக்கு தேய்கிறது, தெற்கு வளர்கிறது! 
பூமியின் இயக்கவியல் எப்போதும் சம நிலைக்குட்பட்டது, ஒன்றிணைந்த தொகுதியாக (Integrated system) பார்க்கப்பட வேண்டியது. ஆர்க்டிக் வட்டம் தேய்கிறது என்று புலம்பினால் அந்தாட்டிக்கா பனி வட்டம் வளர்கிறது. 
பூமி உயிர் வாழ்வதற்கு ஏற்ற வகையில் தன்னை எப்போதும் வைத்திருப்பதில் முனைப்பாக தன்னை சமநிலைப் படுத்திக் கொண்டிருக்கும். ஆனால் மனிதன் பூமி தன்னைச் சம நிலைக்குட்படுத்தும் செயலைச் செய்யும் போது நிலைத்திருப்பானா, தாங்கிக் கொள்வானா என்பது தான் இப்போதுள்ள கேள்வி? 
முன்னொரு காலத்தில் வடக்கு வளர்ந்து தெற்கு தேய்ந்த போது அகத்திய மகரிஷி தென் திசை வந்ததாக புராணங்கள் கூறுகிறது. மீண்டும் வடக்கு தேய்ந்து தெற்கு வளரும் காலம் ஏற்பட்டுள்ளது. 
துருவங்கள் பூமியிலிருந்து சூரியக் கதிர்களை தெறிக்க விடுவதில் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது. இதனை Albedo என்பார்கள். இவற்றின் Albedo அளவு அதிகம், அதாவது அதிகமாக சூரிய வெப்பத்தை பூமிக்குள் வெளிவர விடாமல் தெறிக்க விட்டு வளிமண்டலத்தை சம நிலைப்படுத்துவதில் பங்காற்றிக் கொண்டிருக்கின்றன.

ஆங்காரம் - அகங்காரம் -ஆணவம் -அசூயை

யோக சாதனையில் இந்த நான்கு சொற்களும் வெவ்வேறு நிலைகளை விளக்கப் பயன்படும் சொற்கள். இவற்றை சரியாகப் புரிந்து கொள்வது ஒவ்வொருவருக்கும் தம்மைத் தாமே புரிந்து கொள்ள வழிவகுக்கும். 
மனிதன் தனது உணர்வுக்கு (Consciousness) இடும் முகமூடியினை அல்லது அடையாளத்தை ஆங்காரம் என்று சித்தர்கள் யோக வழக்கில் சொல்வார்கள். ஆங்காரத்தை பொது வழக்கில் அகங்காரம், ஆணவம், அகந்தை என்றெல்லாம் கூறுவார்கள். எனினும் இவை செயற்பாட்டில் வெவ்வேறு அர்த்தங்கள் உடையவை. 
ஆங்காரம் என்பது மனம் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு ஏற்படுத்திக் கொள்ளும் மையம். இதை அடிப்படையில் "நான்" என்று சொல்லலாம். 
நான் மருத்துவன் ஆக வேண்டும் என்ற ஆங்காரம் இருந்தால் மருத்துவத்தைக் கற்க வேண்டும்,  நல்ல மருத்துவராக இருக்க வேண்டும் என்ற அளவில் ஆங்காரம் உருவாகி மனம் ஒழுங்குபடும். 
இப்படி நான் எனும் ஆங்காரம் உருவாவதிலிருந்து எமது மனம், புத்தி, சித்தம் என்ற ஒழுங்கு அமைகிறது. 
ஆங்காரத்தினால் அந்த ஆங்காரத்திற்குரிய விஷயங்கள் மனதில் சேர்க்கப்பட்டு "நான் மருத்துவன்" என்ற ஆங்காரம் உருவாகுவதால் நாம் சிறந்த மருத்துவராக இருப்போம். 
இப்படி நான் மருத்துவர் என்ற ஆங்காரத்தில் நன்கு சேவை செய்ய, எல்லோரும் இவர் நல்ல மருத்துவர், வல்ல மருத்துவர் என்று புகழ "ஆகா, நான் நல்ல மருத்துவர்" என்ற அகங்காரம் உருவாகிவிடும். கவனிக்க, ஆங்காரம் இப்போது அகங்காரமாகிவிட்டது. இந்த "நான் நல்ல மருத்துவர்" என்ற அகங்காரமும் மற்றவர்களுக்கு நன்மை தான் செய்யும், நான் பெற்ற நற்பெயரைக் கவனமாக காப்பாற்ற நல்ல மருத்துவராக இருக்க வேண்டும் என்ற உத்வேகம் அவரை நல்ல மருத்துவராக வைத்திருக்க உதவும். 
அதே போல் அதன் தீய பாகம் "நான் "தான்" நல்ல மருத்துவர்" என்று எண்ணத் தொடங்கும் போது அகங்காரம் ஆணவமாகத் தொடங்குகிறது. 
ஆணவத்தின் காதலி அசூயை, ஆணவம் ஏற்பட்டவுடன் நாம் அசூயையைக் காதலிக்கத் தொடங்கிவிடுவோம். 
அசூயை என்றால் மற்றவர்கள் மேல் ஏற்படும் பொறாமை உணர்ச்சி, நான் தான் நல்ல மருத்துவர் என்று எண்ணி மற்றவர்கள் என்னை விட தரங்குறைந்தவர்கள், அறிவிலிகள், மற்ற மருத்துவரையும் என்னைப் போலவே மதிக்கிறார்கள், அவருக்கென்ன தகுதி இருக்கிறது" என்ற மனம் வெம்பும் குணம். 
ஆணவம் என்ற காதலன் அசூயை என்ற காதலியுடன் சேர்ந்து பெற்ற பிள்ளை தான் அகந்தை. இவனைச் சரியாகப் புரிந்து கொள்ள ஆங்கிலத்திலுள்ள arrogance என்ற சொல் பொருத்தமானது. அகந்தை வந்தால் மற்றவர்களை அவமதிக்கத் தொடங்குவோம். 
ஆக எமது மனம் செயற்பட ஆங்காரம், அகங்காரம் கட்டாயம் தேவை, ஆணவம் ஏற்படும் போது சற்றுக் கவனம் தேவை, ஆணவம் அசூயையைக் காதலிக்காமல், காதலித்தாலும் அகந்தை என்ற துஷ்டனைப் பெற்றுக் கொள்ளாமல் இருக்க வேண்டும். 
பொதுவாக மனம் பற்றி உரையாடும் போது அனேகருக்கு மற்றவர்கள் மனதை ஆராய்ந்து குறை காணும் இயல்பே பொதுவானது. ஆனால் யோகத்தில் தன்னை ஆராய்தலே வேண்டப்படுவது. 
யோகத்தில் ஆங்காரத்தையும் தூய்மையாக்கி உண்மையான பார்வையினைப் பெறுவதே இலக்கு. இதற்கு இவற்றின் இயல்புகள் தெரிந்திருத்தல் மிக அவசியமானது! 
இந்த நுண்மையான ஆங்கார அகங்கார ஆணவ அகந்தை அமைப்பினைப் புரிந்துக் கொள்ள இன்றைய காலைப் பொழுதில் இந்த உரையாடலைத் தொடங்கி வைத்த அன்பு நண்பருக்கு நன்றிகள் பல!

Friday, December 06, 2019

தலைப்பு இல்லை

இன்று உலக மண் தினம் - 05 December 2019

மண்ணின் வளம் என்பது நைதரசன், பொஸ்பரஸ், பொட்டாசியம் என்ற NPK என்ற மாயையிலிருந்து வெளி வந்து மண்ணிற்கும் உயிர் உண்டு, மண்ணின் வளம் என்பது அதன் உக்கலின் அளவு (Humus) என்பதை விவசாய விஞ்ஞானிகள் புரிந்துக் கொண்டு மண் வளம் காக்க வேண்டும். 

மண்வளம் என்பது நீர்வளத்தின் அடிப்படையும் கூட

மண்ணரிப்பு, மண்வளம் பற்றிய ஒரு சிறிய உரையாடல் இன்றைய காலைப் பொழுதில்.....


தலைப்பு இல்லை

நாளுக்கு 2 திருக்குறட் பா விகிதம் 5 நாட்களுக்கான சவால்

-----------------------

நாள் -03

----------------------------------------

Vimalathithan Vimalanathan இனின் திருக்குறள் சவாலின் ஒருபகுதி, தினசரி 01 குறட் பா எனது முடிவு!

***************************************************************

குறள் 384:

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா 

மானம் உடைய தரசு. 

Translation:

Kingship, in virtue failing not, all vice restrains, 

In courage failing not, it honour's grace maintains. 

முதற் குறளில் ஒரு தலைமை நிர்வாகி – அரசன் கவனிக்க வேண்டிய ஆறு காரணிகளை கூறியவர் அடுத்த குறளில் அவனுக்கு இருக்க வேண்டிய நிர்வாக இயல்புக்குரிய நான்கு அத்தியாவசிய குணங்களை கூறினார். பின்னர் ஒருவன் சிறந்த முடிவெடுக்கும் திறனுடையவனாக இருக்க வேண்டிய தூங்காமை, கல்வி, துணிவுடைமை ஆகிய மூன்று ஆற்றல்களைப் பற்றி கூறி அடுத்த குறளில் ஒரு நிர்வாகத்திற்கு இருக்க வேண்டிய அடிப்படை நெறிமுறை பற்றி கூறுகிறார். ஒரு தலைமை நிர்வாகி தனது வியாபாரத்திற்கும், சேவைக்கும் உரிய மூலப் பொருட்களைப் பெறுவதிலிருந்து, தனது சேவையை வாடிக்கையாளருக்கு வழங்கும் வரை உள்ள பொறிமுறையில் அறத்துடன் இருத்தல் அவசியம். 

அறம் என்பது இது சரியானது என்று உய்த்துணரும் அறிவு. இன்றைய காலகட்டத்தில் நீடித்து நிலைத்திருக்கும் முகாமைத்துவத்தையே (sustainability management) சரியான வியாபார தத்துவமாக கருதப்படுகிறது. நீடித்து நிலைத்திருக்கும் நிலை வேண்டுமென்றால் சூழலிருந்து பெறப்படும் வளங்கள், அதை உபயோகிப்பதால் வரும் கழிவுகள் சரியாக முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும். 

இந்த வளத்திலிருந்து பெறப்படும் உற்பத்தி செய்யும் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் சரியான பலனைப் பெறவேண்டும். 

விற்பனை மூலம் உருவாகும் இலாபம் சரியான பொருளாதாரக் கொள்கைகள் மூலமும், நிதி முகாமைத்துவம் மூலமும் பராமரிக்கப்பட வேண்டும். 

இத்தகைய நீடித்து நிலைத்திருக்கும் அபிவிருத்தியை விரும்பும் தலைமை நிர்வாகி தனது படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகிய ஆறு அங்கங்களும் அறத்துடன் நடத்தல் அவசியமாகும். 

தனது படைகளையும், அமைச்சினையும் சிறந்த அற விழுமியங்களை போதித்து கடைப்பிடிக்கச் செய்வது தலைமை நிர்வாகியின் முதன்மை கடமைகளில் ஒன்றாகும். 

வளங்களைப் பயன்படுத்தும் போது அதீதமாக பயன்படுத்தி எதிர்கால சந்ததியினருக்கு அற்றுப்போய் விடாமல் கவனமாக பாவித்தலில் தலைமை நிர்வாகியின் திட்டங்கள், ஏற்பாடுகள் இருத்தல் அவசியமாகும். 

வியாபார உறவுகளை உருவாக்கும் போது நம்பகத் தன்மையுடன் உறவுகளை உண்டாக்குதல் அவசியம். ஏன் அற நெறிமுறைகளில் தலைமை நிர்வாகி கவனம் செலுத்த வேண்டும்? குடிகளாகிய வாடிக்கையாளர்கள் தாம் பெறும் சேவைகள், பொருட்கள் அறநெறிக்கு உட்பட்டவையா என்பதை அவதானத்துடன் கவனித்து, அத்தகைய மரியாதை உள்ளவற்றையே தமது முதன்மை தேர்வாக எடுத்துக் கொள்வார்கள். 

இதனை இன்றைய காலகட்டத்தில் corporate reputation/Image என்று சொல்லுவார்கள். இன்றைய காலகட்டத்தில் சமூகத்திற்கு, சூழலிற்கு, வளங்களை பாதிக்கும் வகையில் முடிவுகளை எடுக்கும் நிர்வாகிகளை மக்கள்/வாடிக்கையாளர்கள் மதிப்பதில்லை. ஆகவே சிறந்த நிர்வாகமாக இருக்க வேண்டுமானால் சூழலிற்கும், சமூகத்திற்கு தீமை தரக் கூடிய அறநெறி முறைகள் அல்லாதவற்றை நீக்கி மறம் என்ற தைரியத்துடன் தமது மரியாதைக்கு குறைவேற்படாத வகையில் தமது முடிவுகளை எடுக்கும் திறனுடையவராக தலைமை நிர்வாகி இருத்தல் அவசியம். 

இத்தகைய தலைமை நிர்வாகியை கொண்ட நிர்வாகமே நல்ல நிர்வாகம். இந்தக் குறளில் நல்ல நிர்வாகம்/அரசு என்பது நெறிமுறைகளுக்கு உட்பட்டு தனது நிர்வாகத்தை செய்ய வேண்டும் என்பதனை தெளிவாக உரைத்துள்ளார். 

ஸ்ரீ ஸக்தி சுமனன்


Thursday, December 05, 2019

தலைப்பு இல்லை

நாளுக்கு 2 திருக்குறட் பா விகிதம் 5 நாட்களுக்கான சவால்

-----------------------

நாள் -02

----------------------------------------

Vimalathithan Vimalanathan இனின் திருக்குறள் சவாலின் ஒருபகுதி, தினசரி 01 குறட் பா எனது முடிவு! 

***************************************************************

குறள் 383:

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலனான் பவர்க்கு.

Translation:

A sleepless promptitude, knowledge, decision strong:

These three for aye to rulers of the land belong.

*************************************************************

நிர்வாக அதிகாரி கவனிக்க வேண்டிய ஆறு புறக் காரணிகளை முன்னர் கூறினோம். இந்த ஆறு காரணிகளும் சரியாக இருந்தாலும், குறித்த நிர்வாக அதிகாரி அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், ஆகிய நான்கும் குறைவில்லாமல் இருக்க வேண்டிய அகப் பண்புகள், இந்த அகப் பண்புகளை சரியாக கொண்டிருக்காவிட்டாலும் நிர்வாகம் விழுந்து விடும். மேலே கூறிய குறைவில்லாமல் இருக்க வேண்டிய நான்கு அகப் பண்புகளுடன் ஆளும் நிர்வாகிக்கு நீங்காமல் இருக்க வேண்டிய மேலும் மூன்று பண்புகள் பற்றி இந்தக் குறளில் விதந்துரைக்கிறார்.

ஒருவன் சிறந்த நிர்வாகியாக இருக்க வேண்டுமென்றால் கீழ்வரும் மூன்று பண்புகளை நீங்காமல் பெற்றிருக்க வேண்டும்.

தூங்காமை: இன்றைய நிர்வாக முகாமைத்துவத்தில் இருக்கும் பெரிய பழுது சரியான நேரத்தில், சரியான முடிவு எடுக்காமை. முடிவெடுப்பதில் தாமதம், இந்த தூங்கும் பண்பு உள்ளவன் எப்போதும் சிறந்த நிர்வாகியாக வர முடியாது. ஆகவே சிறந்த நிர்வாகி என்பவன் துரிதமாக முடிவுகளை எடுக்கும் ஆற்றல் உள்ளவனாக இருக்க வேண்டும். தாமதமான, சரியான நேரத்தில் எடுக்கப்படாத முடிவுகளே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தூங்காமை என்பதை சோர்ந்து போகாமை என்று பொருள் கொள்ள வேண்டும். 

கல்வி: சரியான, துரிதமான முடிவுகள் எடுப்பதற்கு துறைசார்ந்த புரிதல் அவசியம், அந்த புரிதலின் அடிப்படை கற்கும் கல்வியில் இருந்தே வருகிறது. ஆகவே சிறந்த நிர்வாகியாக இருப்பதற்கு அடிப்படை அந்த துறைசார்ந்த விடயங்களில் தனது அறிவினை பெருக்கி, தெளிந்து இருக்க வேண்டும், இதற்கு கல்வி அவசியம். துரிதமாக முடிவெடுக்கலாம் ஆனால் எடுத்த முடிவு சரியாக இருப்பதற்கு அறிவுத் தெளிவு அவசியம். அந்த அறிவுத்தெளிவை தருவது கல்வி. ஆகவே சிறந்த நிர்வாகி அந்த துறைசார்ந்த அடிப்படைக் கல்வியினை பெற்றிருத்தல் அவசியம்.

துணிவுடைமை: தூங்காமையுடன் துரிதமாக முடிவு எடுக்கும் திறனுக்கு தேவையான முதல் அகப் பண்பு கல்வி என்றால் இரண்டாவது அத்தியாவசிய பண்பு துணிவுடைமை. முடிவுகள் எடுக்கும் போது அதன் விளைவுகள் சாதகமாக இருந்தால் வெற்றி, இல்லாவிட்டால் அதன் விளைவுகளை தலைமை நிர்வாகியே சந்திக்க வேண்டும். பலரும் முடிவு எடுக்காமல் தேங்குவதற்காண முதற்காரணி முடிவுகளின் விளைவு என்னவாக இருக்குமோ என்ற பயம். அந்த பயம் இருபவனால் எதையும் தலைமை தாங்கவோ, குழுவை வழி நடத்தவோ, வெற்றி பெறவோ முடியாதவனாகி விடுவான். ஆகவே கல்வி அடிப்படை புரிதலை தந்தாலும், வெற்றி பெறுபவன் துணிவுடன் சரியான முடிவுகளை எடுப்பவனே.

இந்தக் குறள் என்னைப் பொறுத்த வரையில்  அருமையான குறள். முடிவெடுக்கும் போது விரைவாக முடிவெடுக்க வேண்டும், அப்படி விரைவாக முடிவெடுக்கும் போது தவறான முடிவாக இருக்க கூடாது, அதற்கு சிறந்த புரிதல் வேண்டும், அந்தப் புரிதலைத் தரும் கல்வியினை ஒருவன் சரியாக பெற்றிருக்க வேண்டும். அப்படி சரியான கல்வியறிவு பெற்ற அனைவரும் சிறந்த தலைமைத்துவம் உள்ளவர்களாக வருவதில்லை, ஏனெனில் பலரும் தாம் எடுக்கும் முடிவுகளால் என்ன விளைவு வருமோ என்ற பயம், அந்த பயத்தை உதறி துணிவுடன் முடிவு எடுப்பவன் வெற்றியை நோக்கி பயணிக்கிறான். ஆக இந்தக் குறளில் மூன்று பண்புகளையும் கோர்வையாக ஒன்றுக்கு ஒன்று தொடர்புடன் கூறியுள்ளார்.


பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...