குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, August 31, 2020

தலைப்பு இல்லை

இரண்டு படைகள் சண்டையிடும் 

போது வெற்றிபெறும் படை கீழ்க்குறித்த ஏழு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யாமல் வெற்றி பெற முடியாது எங்கிறார் ஸன் சூ;

1) இரண்டு படைகளில் எது தார்மீகச் சட்டங்களுக்கு அடிபணியும் ஒழுக்கமுடையதாக இருக்கிறது?

2) இரண்டு தலைமைத் தளபதிகளில் யார் அதிக வலிமையும், ஆற்றலும், அறிவும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்?

3) களத்தின் ( சொர்க்கம், பூமி ஆற்றல் - யிங் - யங்) ஆற்றல் யாருக்கு அனுகூலமாக இருக்கிறது?

4) எந்தப்படை ஒழுக்கத்தையும், ஒழுங்கையும் கடைப்பிடிக்கிறது?

5) எந்தப்படை அதிக வலிமையாக இருக்கிறது?

6) எந்தப்படை அதிக பயிற்சி பெற்றிருக்கிறது?

7) எந்தப்படையில் அடைவிற்கு பரிசும், பிழைகளுக்கு தண்டனையும் சீராக இருக்கிறது?

இந்த ஏழு கேள்விகளும் சரியாக ஆராயப்பட்டால் வெற்றியைக் கணிக்கலாம் என்கிறார் ஸன் சூ;

ஒரு படை தோற்கிறது என்றால் இந்த ஏழு காரணிகளையும் பிழையாகக் கையாண்டிருக்கிறது என்று அர்த்தம்; இவற்றை இப்படி காரணிப்படுத்தலாம்.

1) ஒழுக்கம், பண்பு

2) அறிவு

3) புறச்சூழல் தனக்குப் பாதகமா? சாதகமா? என்று கணிக்கும் திறன்

4) போர் தொடங்கிய பின்னர் தமக்குள் குழப்பம் இல்லாமல் செயற்படும் திறன்

5) மனவலிமை, நிதிவளம், உணவு போன்ற வளங்கள்

6) தாம் வலிமையானவர்கள் என்று போலி நம்பிக்கையில்லாமல், உண்மையான பயிற்சி

7) படைகளை சண்டையிட மாத்திரம் உபயோகித்து விரக்தியடையச் செய்யாமல், அவர்கள் மனதை சந்தோஷப்படுத்தும் அதேவேளை தவறுகளுக்கு தண்டனை தந்து கட்டுப்படுத்தவும் தெரிய வேண்டும்; தண்டனையின் அளவு யதார்த்தத்திற்கு மீறிய கொடியதாக இருந்தால் படைகள் நம்பிக்கையிழக்கும். 

ஒருவன் தனது வாழ்க்கையில் வாழ்வா - சாவா என்ற சந்தர்ப்பத்திற்குள் செல்லும் போது அவன் போர் செய்ய உந்தப்படுகிறான். 

அப்போது இந்த விதிகள் அவனிற்குரிய மந்திரங்கள்! மந்திரங்கள் என்றால் மனதைத் திடப்படுத்துபவை என்று அர்த்தம்!


Saturday, August 29, 2020

Friday, August 28, 2020

தலைப்பு இல்லை

புத்தர் தனது உயிரை விடுவதற்குரிய இறுதிக் கணத்திலிருந்தார்; அப்போது அவரைத்தேடி ஸுபதன் என்றொரு மாணவன் ஞானோபதசம் பெறுவதற்கு வந்தான். 

வந்தவனை ஆனந்தர் உள்ளே விடவில்லை; புத்தரை தொல்லைப்படுத்த வேண்டாம் என்று அனுப்ப முயற்சிக்க புத்தர் அவனை உள்ளே அனுப்பும்படி கூறுகிறார்;

வணக்கத்திற்குரிய கௌதமரே, கோசல தேசத்திலும் மகத தேசத்திலும் இருக்கும் மிகப்பிரபலமான குருமார்கள், ஆசிரியர்கள் தாம் உண்மையை போதிப்பதாகக் கூறுகிறார்கள். அவர்கள் அனைவரும் உண்மையாகவே ஞானமடைந்தவர்களா? என்ற கேள்வியை முன்வைக்கிறான். 

அதற்கு புத்தர் தனது இறுதி உபதேசமாக "ஸுபதா, அவர்கள் ஞானமடைந்தவர்களா? இல்லையா? என்ற கேள்வியை நீ என்னிடம் கேட்பது அர்த்தமற்றது; உண்மையில் நீ ஞானமடைய, துன்பத்திலிருந்து விடுபட விருப்பமுள்ளவனாக இருந்தால், நான் எனது அனுபவத்தில் உணர்ந்ததை பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன், உபதேசத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறாயா என்று கூறுகிறார்; அதற்கு அவன் தெளிந்து சம்மதிக்க அவனிற்கு ஆர்ய அஷ்டாங்கிக மார்க்கம் என்ற தனது ஞானப்பயிற்சியை உபதேசிக்க ஸுபதன் கௌதம புத்தரின் கடைசிச் சீடராகிறான். 

ஆகவே ஒரு சாதகன், உண்மையை அறியத்தாகம் கொண்டவன் குருவிடம் வீண் கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்கக் கூடாது; அவரிடமிருந்து எம்மை உய்விக்கும் மார்க்கம் எது என்பதை அறிந்துகொண்டு எமது முயற்சியை ஆரம்பிக்க வேண்டும். எம்மிடம் உண்மையை அறிந்தபின்னர் அதற்காக முயற்சிக்கும் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். 

இன்று ஆன்மீகம், மதம் வளர்க்கிறோம் என்ற பலரும் ஸுபதனைப் போன்று மற்றவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது, மற்றவர்கள் உண்மையானதைப் போதிக்கிறார்களா? மற்றவர்களால் எமது சமயம் அழிகிறது என்ற எண்ணம்தான் இருக்கிறதே அன்றி தாம் நம்பும் வழியில் தம்மை ஈடேற்ற என்ன பயிற்சி என்பதைப் பற்றி எண்ணுவதில்லை!


தலைப்பு இல்லை

இன்று ஆவணி மூலம்; பாசமான மதுரைக்காரன், வழக்கறிஞர், சைவசித்தாந்தப் புலவர், கார்த்தி மாணிக்கவாசகரின் சிவபுராணத்திற்கு எழுதிய உரையான சிவயோக ஞானத்திறவுகோல் படித்து விட்டு நூலைப்பற்றி பதிவு போட்டிருக்கிறார். 
வீட்டில் மொட்டைக் கருப்பன் அரிசிமாவில் புட்டு! 
சரி ஆவணி மூலத்திற்கு புட்டிற்கும், மாணிக்கவாசகருக்கும் தொடர்பிருக்கிறதல்லவா? 
அரிமர்த்தன பாண்டியனிடம் வாங்கிய பொற்காசுகளைச் செலவழித்து கோபத்திற்கு ஆளாகிய திருவாதவூரரை வைகைக் கரை சுடுமண்ணில் நிறுத்தி மன்னன் தண்டிக்க, வைகை பெருக்கெடுத்து ஓட அணைகட்ட மன்னன் அனைவரையும் அழைக்கிறான். 
அதில் வேலைசெய்ய முடியாத புட்டு விற்கும் பாட்டியான செம்மனச் செல்வி (சுமனன் என்றாலும் செம்மனச் செல்வன் என்று கூறலாம்   ) யாருமில்லாமல் இருக்க எம்பெருமானே வந்து புட்டுக்கு மண் சுமந்த நாள் ஆவணி மூலம்!
மதுரையில் ஆவணி மூலத்திருவிழா விஷேடம்!
மொட்டைக் கருப்பன் அரிசி வன்னி/யாழ்ப்பாணத்திற்குரிய பாரம்பரிய அரிசி! உள்ளீடுகள் குறைவாகத் தேவைப்படும் பாரம்பரிய அரிசி! சுவையோ அருமை! புட்டு சிவந்த நிறத்தில் சுவையாக இருக்கும்! 
இயற்கை விவசாயத்திற்கு உகந்த அரிசி! ஆட்டக்காரி (சிவப்பரிசி வகை) வந்ததிலிருந்து யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் மொட்டைக்கறுப்பனை கைவிட்டுவிட்டார்கள் நிறையப்பேர்! 
ஆவணி மூலம் - மாணிக்கவாசகர் - சிவயோக ஞானத்திறவுகோல் - மொட்டைக் கருப்பன் அரிசி - இயற்கை விவசாயம் - புட்டு எல்லாவற்றையும் ஒரே பதிவில் சொல்லியாயிற்று!

Wednesday, August 26, 2020

தலைப்பு இல்லை

அன்றொரு காலை வாட்ஸப்பில் ஒரு செய்தி;
உங்களுடைய கட்டுரை பிரபலமான ஒரு சித்தர் குழுவில் அப்படியே பிரதி செய்யப்பட்டு தான் எழுதியது போல் அப்படியே அந்தக் குழு நிர்வாகி பதிவிட்டுள்ளார் என்று!
அதற்கு நான் அளித்த பதில் வருமாறு;
copy பண்ணுதல் என்பது கற்றல் நடவடிக்கையின் முதல் பழக்கம்! சிறுகுழந்தைகளை அவதானித்தால் அவர்கள் முதல் தமது பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்களை copy பண்ணுவதையே முதலாவதாகச் செய்வதை அவதானிக்கலாம்! ஆகவே அவர் கற்றலின் முதல் நிலையில் இருக்கிறார் என்றேன் பெருஞ்சிரிப்புடன்    
இல்லை ஐயா, கட்டாயம் உங்கள் பெயர் போடப்பட்டிருக்க வேண்டும் என்றார் என் மீது அன்பு கொண்ட அன்பர்; 
அதற்கு நான் சிரித்துக் கொண்டு சொன்ன பதில்; அவர் எனது சிந்தனைகளை, எண்ணங்களைப் பரப்பும் ஒரு கருவியாக செயற்படுகிறார்; அதில் எனது பெயர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எனது எழுத்துக்குரிய சக்தி - signature கட்டாயம் இருக்கும். நான் எழுதுவது எனது சந்தோஷத்திற்கு! எழுதிப் பதிவிட்ட பிறகு அதைப்பற்றி நான் சிந்திப்பதேயில்லை; 
மேலும் எனது எழுத்துக்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதும் பிரபஞ்சத்தில் எங்கோ மிதந்து கொண்டிருப்பதைத் தான் ஈர்த்து எழுதுகிறோம்! எல்லோரும் எங்கோ ஒரு மூலத்திலிருந்தே பெறுகிறோம்! 
யோகத்தைப் பற்றி எழுதப்படும் எழுத்துக்களைப் பிரதி எடுத்து தமதாக காட்டிக்கொள்வதில் பலரைக் கவரலாம்; பலரைக் கவர்ந்து கூட்டம் கூட்டினால் ஆன்ம முன்னேற்றம் வாய்க்காது! அது அவரது அனுபவமாக வேண்டும். இப்படி தனக்கு எல்லாம் தெரியும் என்று மக்களின் மனதிற்கு கோட்டை கட்டிக் கொண்டிருந்தால் அவற்றைக் காப்பாற்றவே தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருக்க வேண்டும்! இப்படிச் செய்து கொண்டிருந்தால் உளச்சுத்தி வாய்க்காது! ஆன்மீகமும் சித்திக்காது!
இப்படியானவர்களை நாம் குழந்தைகளைப் போல் மதிக்க வேண்டும்; எல்லோரிலிருந்தும் பிரதியெடுத்து தமது அறிவினை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்; சற்று வளர்ந்தவுடன் தமது சிந்தனை சக்தி பெருகிய பின்னர் ஏதாவது உலகிற்குத் தருவார்கள்.
எதை நாம் கொண்டு வந்தோம், எம்முடையது என்று சொல்வதற்கு! Facebook தந்த ஞானம் அனைத்தையும் share செய் என்பதே! 
ஆகவே என்னுடைய கட்டுரைகளை பிரதி எடுப்பவர்கள் தாராளமாக பிரதியெடுங்கள்! பகிருங்கள்! எமக்கு credit தந்தால் மிக்க மகிழ்ச்சி! அப்படித்தராவிட்டாலும் மிக்க மகிழ்ச்சிதான்! எமது எழுத்துக்களைப் பலருக்கும் கொண்டு செல்லும் உங்களுக்கு எமது நன்றிகளும்! பிரார்த்தனைகளும்! 
அதேவேளை நீங்கள் பிரதியெடுத்த அறிவை உங்களுடையதாக்கிக் கொண்டு புது அறிவினை உருவாக்க முயலுங்கள்! அதுவே நீங்கள் உங்களுக்கும், மற்றவர்களும் செய்யும் பெரும் தொண்டு!

தலைப்பு இல்லை

தம்பி ஓவியர் கோபி ரமணனின் ஓவியங்களில் ஒன்று!  

Tuesday, August 25, 2020

தலைப்பு இல்லை

Today I was invited to deliver the speech to New students - freshers (B.Sc Environmental Science) of Faculty of Applied Science, Vavuniya Campus of the University of Jaffna! 
To Give some inspirations to them on "What Environmental Science Student can do after his/her degree?"
Shared some personal career experience!

தலைப்பு இல்லை

திருநெல்வேலி காந்திமதியம்மை சமேத நெல்லையப்பர் சந்ததி

மூன்றாம் திருமுறை 92 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

மருந்தவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றுமெல்லாம்

அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே

பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதரத் துன்று பைம்பூம்

செருந்தி செம்பொன்மலர் திருநெல்வேலி உறை செல்வர் தாமே.

என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர் ஏறு அது ஏறிச்

சென்று தாம் செடிச்சியர் மனைதொறும் பலிகொளும் இயல்பு அதுவே

துன்று தண்பொழில் நுழைந்து எழுவிய கேதகைப் போதளைந்து

தென்றல் வந்து உலவிய திருநெல்வேலி உறை செல்வர் தாமே. 

பொறி கிளர் அரவமும் போழ் இளமதியமும் கங்கை என்னும்

நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவி வெண்ணீறு பூசிக்

கிறிபட நடந்து நல் கிளி மொழியவர் மனம் கவர்வர் போலும்

செறி பொழில் தழுவிய திருநெல்வேலி உறை செல்வர் தாமே. 

காண் தகு மலைமகள் கதிர் நிலா முறுவல் செய்து அருளவேயும்

பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடம் ஆடல் பேணி

ஈண்டு மா மாடங்கள், மாளிகை மீது எழு கொடி மதியம்

தீண்டி வந்து உலவிய திருநெல்வேலி உறை செல்வர் தாமே. 

ஏனவெண் கொம்பொடும் எழில் திகழ் மத்தமும் இளவரவும்

கூனல் வெண்பிறை தவழ் சடையினர் கொல் புலித் தோலுடையார்

ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர் பாடுவர் அருமறைகள்

தேனில் வண்டமர் பொழில் திருநெல்வேலி உறை செல்வர் தாமே. 

வெடிதரு தலையினர் வேனல் வெள்ளேற்றினர் விரிசடையர்

பொடியணி மார்பினர் புலியதள ஆடையர் பொங்கரவர்

வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல் செய்வார்

செடிபடு பொழிலணி திருநெல்வேலி உறை செல்வர் தாமே.

அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று

தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள் செம்மை

புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டு பண் முரலும் சோலைத்

திக்கெலாம் புகழ் உறும் திருநெல்வேலி உறை செல்வர் தாமே.

முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரி தரவே

உந்தி மா மலரடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார்

கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை

சிந்து பூந்துறை கமழ் திருநெல்வேலி உறை செல்வர் தாமே. 

பைங் கண்வாள் அரவு அணையவனொடு பனி மலரோனும் காணாது

அங்கணா அருள் என அவரவர் முறைமுறை இறைஞ்ச நின்றார்

சங்க நான்மறையவர் நிறைதர அரிவையர் ஆடல் பேணத்

திங்கள் நாள் விழமல்கு திருநெல்வேலி உறை செல்வர் தாமே.

துவருறு விரி துகில் ஆடையர் வேடமில் சமணரென்னும்

அவருறு சிறு சொலை அவம் என நினையும் எம் அண்ணலார் தாம்

கவருறு கொடி மல்கு மாளிகைச் சூளிகை மயில்களாலத்

திவருறு மதி தவழ் திருநெல்வேலி உறை செல்வர் தாமே.

பெருந்தண்மா மலர்மிசை அயன் அவன் அனையவர் பேணு கல்வித்

திருந்துமா மறையவர் திருநெல்வேலி உறை செல்வர் தம்மை

பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன

அருந்தமிழ் மாலைகள் பாடியாடக் கெடும், அருவினையே.


Saturday, August 22, 2020

தலைப்பு இல்லை

முத்தமிழ் FM இல் ஒரு சிறிய உரை! 
நன்றி Suman Thevakanthan

வேதகணபதி

இன்று சதுர்த்தியில் கொழுக்கட்டை, மோதகம், சுண்டல் வயிற்றிற்கு தந்தாயிற்று! 

கணபதியின் தத்துவம் பற்றி நாம் அறிவிற்கு, மனதிற்கு உணவு தர வேண்டுமல்லவா! அதற்குத் தான் இந்த நூல் அறிமுகம்! 

உபநிஷதங்கள் உபாசனைக்கு துணையானவை; உண்மைப் பொருளை விரித்துக் கூறி ஒரு சாதகனின் அனுபவத்தை மேம்படுத்தக் கூடியவை; அவற்றை அனுபவமாக உணர்ந்தவர்கள், தகுதி வாய்ந்தவர்கள் மூலம் பொருளறிந்து கற்பது உத்தமமானது! 

அந்த வகையில் தமிழ்த் தாத்தா என்ற தமிழிலக்கியங்களை எமக்கு மீட்டுத் தந்த உ. வே. சாமிநாதைய்யர் அவர்கள் பரம்பரையில் உதித்தவரும், புகழ்பெற்ற குஹானந்த மண்டலியின் ஸ்ரீ வித்யா பரம்பரையைச் சேர்ந்தவருமான ஸ்ரீ அருள்சக்தி நாகராஜன் ஐயா அவர்கள் கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத்திற்கு "வேதகணபதி" என்று ஒரு தமிழுரையை இயற்றியிருக்கிறார். 

அதர்வ சீர்ஷ உபநிஷதம் மகா கணபதியே எப்படிப் பரிபூரணமாக பரம்பொருளாக இருக்கிறார் என்பதை விளக்கும் உபநிஷதம். 

இந்த நூலில் மந்திரங்களின் பொருள் தெளிவாக விளங்க கூறியுள்ளார். 

நூலின் அச்சுப் பிரதி தீர்ந்து விட்டது, எனினும் ஆர்வமுள்ளவர்கள் அவரைத் தொடர்பு கொண்டு PDF பெறலாம்!


தலைப்பு இல்லை

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு

கருவிளை மலர்களும், வெண் மலர்களும் சாத்தி சதுராவர்த்தி தர்ப்பணம் பூர்த்தி!

கணபதியை சதுராவர்த்தி தர்ப்பணத்தால் துதிப்பவன் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வரியம், பலம், திருப்தி, அழிவற்ற புகழும், அங்கீகாரமும், கவித்துவம், உலக இன்பங்கள் இறுதியாக முக்தியை அடைகிறான்!

பிரபஞ்சசார தந்திரம்.


விநாயகர் கவசம் அறிவோம்

கந்தர் சஷ்டி கவசம் அனைவரும் அறிவோம்! ஆனால் விநாயகர் கவசம் அறிவோமா?
எனது குருநாதர் காயத்ரி சித்தருக்கு அவரது மிகச் சிறுவயதில் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஒரு பெரியவர் ஆட்கொண்டு இந்தக் கவசப்புத்தகத்தைக் கொடுத்ததாகவும், இதை அனுதினமும் படித்துவா, வாழ்வில் உயர்ச்சி பெறுவாய் என்று ஆசிகூறியதாகவும் கூறியுள்ளார். 
அதன் பிறகு அவர் காயத்ரி உபாசனையில் சித்தி பெற்ற பின்னரும் இறுதிவரை காலை தியானத்தில் இந்தக் கவசப் பிரயோகத்தைப் படித்து வந்தார்.  
இதற்கு ஒரு பிரயோக உரை நாம் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியுள்ளோம். மூன்று பதிவுகளாக உள்ளது. இன்றைய சதுர்த்தியில் அனைவருக்கும் விளக்கம் அறிந்து இன்புற பகிர்கிறோம். 
http://yogicpsychology-research.blogspot.com/2012/06/01.htm

Friday, August 21, 2020

சதுர்த்தி: சிவன் பொருத்திய யானைத்தலை

கணபதியை அம்பிகை தனது குளியலுக்காக வைத்திருந்த மஞ்சளில் இருந்து உருவாக்க, அந்தப்  பையன் சிவனுடனே சண்டையிட கோபத்தில் சிவனார் திரிசூலத்தினால் தலையைப் பிளந்து, பின்னர் பார்வதியின் வேண்டுதலுக்கு இணங்க யானைத்தலை பொருத்தியதாகக் கூறப்படுவதன் விளக்கம் என்ன?
அம்பிகையே சிவத்தின் செயற் சக்தி; அவள் தனது மங்கள சக்திகள் அனைத்தையும் சேர்த்து உருவாக்கிய பிள்ளை அறிவாகிய சிவம் யாரென்று தெரியாமல் சண்டையிட்டது! சிவத்தை அறியக் கூடிய சிவ ஒளி பொருந்திய மூளை தனியே பிரக்ருதியின் சக்தியால் மாத்திரம் ஆக்கப்பட்ட பிள்ளைக்கு வாய்க்கவில்லை! 
ஆகவே சிவன் தனது திரிசூலம் என்ற இச்சா, ஞான, கிரியா சக்திகளை ஒன்றாக்கி அம்பிகையின் பௌதீக மாயையில் இருந்து சிவத்தை நோக்கிச் செல்லக் கூடிய ஆற்றலுள்ள மூளையும், அது மூலாதாரம் வரை செல்லும் நாடியும் மனிதனிற்குள் பதிப்பித்த செயலே யானைத்தலை பொருத்திய கதை! 
அதாவது ஒரு காலத்தில் மனிதனின் மூளை பௌதீக மாயையில் மாத்திரம் உழன்று கொண்டு உயர்ந்த ஞானத்தைப் பெறும் ஆற்றலற்று இருந்தது! இதற்கு சிவமாகிய ஒளி பொருந்தி விருத்தியடைந்த அதீத மனம் செயற்படக் கூடிய விருத்தியடைந்த மூளையின் உருவாக்கமே பிள்ளையாரின் பிறப்பு! 
விக்கினங்கள் நீங்க வேண்டும் என்றால் அறிவு சரியாகச் செயற்பட வேண்டும்; அந்த அறிவை விழிப்படையச் செய்யும் உபாசனையே கணபதி உபாசனை! 
அம்பிக்கையின் துணை கொண்டு சிவத்தை அடையும் ஸ்ரீ வித்தையில் இதனாலேயே அறிவை விழிப்பிக்கும் கணபதி முதல் படியாகவும், அத்திவாரமாகமும் வகுத்து வைத்தார்கள்!
ஆக கணபதியின் அருள் இல்லாமல் ஒருவனின் அறிவுப் பரிணாமம் பூர்த்தியாகாது! 
அனைவருக்கும் அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா! ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா என்று பிரார்த்தித்து விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

சமூக தலைமைத்துவமும் இளைஞர்களும்

இன்று சமூகத்தில் காணப்படும் பெரும் பண்புப் பிரச்சனை தலைமைத்துவப் பண்பு! 
சுயமரியாதை (self esteem) குறைவானவர்களும், தகுதி குறைவான தாழ்வுச் சிக்கல் (inferiority complex) உள்ளவர்களும் தம்மிடம் இருக்கும் பணம், அதிகாரத்தால் குழுக்களை அமைத்து தமது சொல் பேச்சுக்கேட்கும் அடிமைகளை உருவாக்குவதை தலைமைத்துவம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 
இப்படியான தகுதியில்லாத, அறிவில்லாத தலைமைத்துவம் சமூகத்திற்குள் உருவாகும் போது கற்றவர்கள், அறிவுடையோர்கள், பண்புடையோர்கள் தம்மீது சேறு பட்டுவிடக்கூடாது என்று ஒதுங்கி விடுவதைப் பார்க்கிறோம். 
எம்மைவிட சிறிய இளைஞர்களை நாம் எம்மை மதிப்பதை விட அதிகமாக மதித்தால் தான் அவர்கள் சுயமரியாதை ஓங்கும்! நல்ல ஆற்றலுள்ள இளைஞர்களாக வளர்ந்து சமூகத்திற்கு பயனுள்ளவர்களாக இருப்பார்கள்! 
அவர்கள் தவறு செய்யும் போது சரி செய்து சரியான வழியில் செல்ல வைப்பதும், நல்ல விஷயங்களை முன்னேடுக்கும் போது தட்டிக் கொடுத்து ஆதரித்து அவர்களை உளவலிமை பெறச் செய்ய வேண்டும்.

திருமூலரும் அகத்தியரும்

ஸோமானந்தன் மூல நாதருடன் சாதனை பயிலத் தொடங்கிவிட்டான். ஒரு நாள் மூலநாதர் ஸோமா உனது குருநாதரின் மகிமை என்னவென்று தெரியுமா? என்று கேட்டார். 

அவர் மகிமை உங்கள் திருவாயால் கேட்டு மகிழ்வதே என் பாக்கியம் என்றான் ஸோமன். 

மூலநாதர் கண்களை மூடி ஆழ்ந்து சிறிது நேரம் தியானித்து கண்கள் மூடிய நிலையில் அகத்தியர் யார் என்பதற்குப் பதிலாக பாடல்கள் இரண்டைக் கூறத் தொடங்கினார். 

நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து

கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்

நடுவுள அங்கி அகத்திய நீபோய்

முடுகிய வையத்து முன்னிரென் றானே.

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்

அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு

மங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி

எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே.

கண்களைத் திறந்து அகத்தியர் யார் என்பதை எனது அனுபவத்தில் பாடலாக சுருக்கியிருக்கிறேன்! அவர் பெருமை அண்டம் போன்று பரந்தது! அதை விரித்து பலருக்கு புரியுமாறு கூறுவாய்! அவர் பணியை பூவுலகில் வளர்க்க உன்னைத் தகுதியாக்கிக் கொள்ளவே இங்கு பயிற்சிக்கு அனுப்பினார்! அந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டு அனைவருக்கும் புரியும்படி இந்தப் பாடல்களின் விளக்கத்தைக் கூறுவாய் என்றார்!

தங்கள் ஆசியுடன் என்று ஸோமன் அந்தப் பாடல்களின் பொருளை அறிய அகத்தியர் மூல குரு மந்திரத்தை உச்சரித்து தியானத்தில் ஆழ்ந்து விட்டான்! 

கண்களை விழித்து குருநாதா இந்தப் பாடலை வார்த்தைகளைக் கொண்டு பொருளறிந்தால் புராணத்தில் குருநாதரைப் பற்றித் தென்திசை ஏகிய கதையைச் சொல்வது போலிருந்தாலும் இது குருநாதரின் உயர்ந்த யோகசாதனையின் இரகசியம் இதிலிருக்கிறது என்றான் ஸோமன்.

மூலநாதர் தனது வழமையான புன்னகையால் ஆமோதித்தார்! 

சிவமான அறிவு புருவமத்தியில் சிவஜோதியாக, அக்கினியாக சுடர்விடுகிறது. இதன் கதிர்ப்பு மனதிற்கு ஒளிகொடுக்கும் வரை மனம் சிவத்தை நோக்கி இருக்கும்! ஆனால் சாதாரணமாக மனம் இந்த சிவஜோதியை நாடாமல் புலன்கள் வழி வெளியே சென்று கொண்டும் இருக்கும்! இவையிரண்டு சமமாக இருப்பதே நடுவு நிற்றல்; மனித உடலில் இருக்கும் சிவயோகியின் நிலை! சிவமிருக்கும் திசை வடபகுதி, பௌதீகத்தில் கையிலையாக்கி புறத்தே காட்டிய அது அகத்தில் உடலில் புருவமத்தியைக் குறிக்கும்! மனம் முழுமையும் வடபகுதியாகிய புருவமத்தியில் குவிந்தால் ஒரு சாதகனின் மனச் சமநிலை கெடும்! உலக வாழ்க்கை கெடும்! அவன் பரிணாமம் சரியாக நடைபெறமாட்டாது! அவன் தனது யோகாக்கினியை (அங்கி) உடல் புலன்வழி செல்லும் மனதினை ஆளும் கீழ்ச்சக்கரங்களான மணிப்பூரக, சுவாதிஷ்டான, மூலாதாரத்திற்கும், மேல் சக்கரங்களான விசுத்தி, ஆக்னை, சகஸ்ராரத்திற்கு இணைப்பாக இருக்கும் ஹ்ருதய ஸ்தானமாகிய அனாகதத்தில் தீயாக - அகத்தில் தீயாக - இருக்க வேண்டும்! இதுவே சரியான யோக முறை! 

ஆனால் உலகத்தவர்கள் குண்டலியை ஏற்றுகிறேன் என்று யோகம் புரிந்து வடபகுதியான புருவமத்தியில் அதிகமாகச் சேர்த்து தமது பரிணாமத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள், அல்லது புலன்வழி அதிகம் சென்று மூலாதாரத்து சுண்டலியிடம் மாட்டிக் கொள்கிறார்கள். இப்படி இரண்டு நிலையிலும் தமது பரிணாமத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் நடுவு நிற்கும் யோக முறை அறிந்தவர் அகத்தீசர்; இதை உலகிற்கு அனைவருக்கும் கொடுக்கும் வல்லமை ஈசனால் அருளப்பட்டவரும் அவரே! 

ஆகவே உலகில் ஒருவன் தனது பரிணாமத்தை வாழ்க்கைச் சமநிலை கெடாமல் யோகத்தில் முன்னேற அகத்தீசர் அருள் வேண்டும் ஐயனே! 

என்று முடித்தான் ஸோமன்! 

நீண்ட தபஸினால் புலன்கள் அடங்கப்பட்டவரும், அனைத்து யோக முறைகளையும் பயிற்சித்து சித்தி பெற்றவருமான, மனச் சமனிலை கெடாத நடுவு நிலை நிற்கும் மூலநாதர் புன்னகைத்தார்! 

எனது அனுபவமும் விளக்கமும் சரியானதா ஐயனே என்றான் ஸோமன்! 

இன்னுமொரு பாடல் பாக்கியிருக்கிறது என்று புன்னகைத்தார் மூல நாதர்! 

நள்ளிரவு தாண்டி விட்டது! தியானிக்க அமர்வோம்; அதிகாலையில் அடுத்த பாடலிற்கு பொருள் கண்ட பின்னர் எனது அபிப்பிராயம் சொல்கிறேன்! பாடலிற்கு பொருள் அறிவதை விட தியானசாதனை அதிமுக்கியமானது! அனுபவத்தைத் தருவது! என்று கூறிக்கொண்டு மூலநாதர் தனது மான் தோலாசனத்தில் பத்மாசனம் இட்டு அமர்ந்தார்! 

ஸோமனும் அருகிலிருந்த தனது ஆசனத்தில் தியானத்தில் அமர்ந்தான்!


எனது புதுவரவுகள்!

ஒரு தொகுதி புத்தகத்திற்கான செலவு தம்பி தனது பதவியுயர்விற்கான treat தரவேண்டும் என்று சொல்லி அதற்கொரு செலவாகும் என்று கூறி அந்தச் செலவிற்கு நீ எனக்குப் பிடித்த இப்படியொரு treat தரலாம் என்று ஐடியாவைப் புகுத்தி செலவை அவன் தலையில் கட்டியாயிற்று! புத்தகத்தை கடையிலிருந்து எப்படியாவது வாங்கிவிட இன்னொரு தம்பியை வைத்து காரியம் சாதித்தாகிவிட்டது! 

மற்றத் தொகுதி நூல்கள் transport service lorry மூலம் கொழும்பிலிருந்து வாங்கியதைப் பார்த்து எனது தம்பி கொரோனா காலத்தில் போதைவஸ்து கிடைக்காதவன் போதைக்குப் புதிதாக ஏதாவது கண்டுபிடிப்பது போல் கொழும்புக்குப் போகாமல் புத்தகம் வாங்கும் வழி கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று நக்கலடிக்க இதை விடப் பெரிய கவலை சென்னைக்கு விமானம் இல்லை என்பதும், அப்படியிருந்தாலும் சென்னையில் வாங்கப்படும் புத்தகங்களை எப்படிக் கொண்டுவருவது என்ற தவிப்பு!    

பிற்குறிப்பு:

எனது வாசிப்பு விடயப்பரப்புகளை உதாரணமாகவோ, எனது நம்பிக்கைகளாகவோ, விருப்பாகவோ எடுத்துக் கொண்டு அனுமானங்களை உருவாக்கிக் குழம்பிக் கொள்ள வேண்டாம்; என்னைப் பொறுத்தவரையில் வாசிப்பு என்பது மனதை ஒருமைப்படுத்தும் பயிற்சி! புதுப்புதுத் துறைகளைப் படிக்க மூளை தன்னை புதுப்பித்துக் கொண்டு இளமையாக்கிக் கொள்ளும்; மனதை ஒரு நதி போல ஓடிக்கொண்டிருக்க அதில் காலத்திற்கு காலம் மிதக்கும் ஓடம் போல வெவ்வேறு விடயங்களை படித்துக் கொண்டிருப்பதே இன்பம்! எதையும் பற்றி வைத்துக் கொண்டு எனது கொள்கைகளாக வரித்துக்கொள்வதில்லை! மனம் விரிந்து பரவ வாசிப்பு நல்ல கருவி!


திருமூலரும் அகத்தியரும்

{முற்பகுதி நேற்றுப் பதிவிடப்பட்டுள்ளது; கட்டாயம் படித்துவிட்டு இந்தப்பகுதியைப் படிக்கவும்}

பலமணி நேரம் தியானத்தில் கழிந்து விட ஸோமன் எழுந்துவிட்டான்; மூலநாதர் இன்னும் தியானம் கலையவில்லை. அன்றைய தியானம் அவன் தனது குருவாகிய அகத்தியரின் யோகம் பற்றிய உண்மையை அறிந்ததால் மனம் மிகவும் குதூகலமாக இருந்தது! எழுந்து சென்று நீராடி தனது காலைக் கடன்களை முடித்து கொண்டு தனது தினசரி தேவி பூஜைக்குத் தயாராகி வர மூலநாதர் தியானத்திலிருந்து விழிப்படைந்திருந்தார். 

என்ன ஸோமா பூசைக்கு தயாராகி விட்டாயா, அகத்தியரைப் பற்றி நாம் கூறிய இரண்டாவது பாடலிற்கு பொருள் கண்ட பின்னர் பூசைக்கு அமர்வாயாக; அது உன் அக அனுபவத்தை இன்னும் இனிமையாக்கும் என்று அன்புக் கட்டளையிட்டார். 

தங்கள் ஆணை என்று கூறிவிட்டு, கண்களை மூடி மூலநாதர் கூறிய பாடலை மனனிக்கத் தொடங்கினான். 

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்

அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு

மங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி

எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே.

கண்களை மெல்லியதாகத் திறந்து, 

உடலில் காமாக்னி சுவாதிஷ்டானத்திலிருந்து ஒருவனின் பிராணனைப் போக்கிக் கொண்டிருக்கிறது; இதை ஊர்த்துவமுகமாக வளர்க்க வேண்டும், அது போல் ஜடராக்னி மணிப் பூரகத்திலிருந்து மேலிருந்து கொட்டும் அம்ருதத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு அக்னிகளையும் ஊர்த்துவமுகமாக வளர்க்க வேண்டும். இந்த முறையைச் சொல்லித் தருவார் அகத்தியன் என்பதே அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன், அக்கினியை பிறப்பிக்கும் இடத்திலிருந்து வீணாகாமல் வளர்க்கும் உபாயம் அறிந்து மேல் நோக்கி வளரச்செய்யும் ஆற்றலும், அறிவும் உடையவர் அகத்தியர். 

கீழே இருக்கும் காமாக்னியும், ஜடராக்னியும் தோற்றம் பெறுவது மேலே ஆக்ஞாவில் இருக்கும் சிவாக்னியிலிருந்து, அதுவே அனைத்தினதும் தோற்றம், கீழிருந்து எம்மை பரிணாமத்தில் சுழற்றும் காமாக்னியும், ஜடராக்னியும் மேல் சென்று (பாலவன் - சிவன்) கலந்து சிவாக்னியில் மங்கவேண்டும்; இப்படி காமாக்னியையும், ஜடராக்னியையும் மேலெழுப்பி வடபுலமாகிய புருவமத்தியில் உள்ள சிவாக்னியில் கலப்பிக்கும் தவமுறை அறிந்த முனிவன் அவர்! இப்படி சிவாக்னியில் தன்னைப் பூரணமாக கலப்பித்ததாலே அவர் இந்தப்பிரபஞ்சத்தில் எங்கும் அறியப்படக்கூடிய ஆற்றலுடன் பேரொளியாக இருக்கிறார். 

சிவயோகத்தில் பூரணத்துவம் பெற்றதால் அவரை நினைக்கும் சாதகர்களுக்கு யோகத்தில் பூரணத்துவம் அருளும் பேரொளி என்று பொருள் ஐயனே! 

என்று முடித்தான் ஸோமானந்தன்! 

திருமூலநாதரின் முகம் சூரியப்பிரகாசமாக ஒளிர்ந்தது! ஸோம நாதா குருவின் திருவடியைத் தியானிப்பவர்களுக்கு குரு தனது யோகத்தில் சென்ற பாதைகள் எல்லாம் விளங்கும்! அத்தகைய சிறந்த பக்தியைக் கொண்டிருக்கிறாய்! எனது பரிபூரண ஆசிகள்! தற்போது உனது தேவி பூஜைக்குச் செல்! காலம் வரும் போது தேவி பூஜையின் இரகசியங்களையும் சொல்லித்தருகிறோம் என்று ஆசி கூறினார்!

திருமூல தேவரை நெடுஞ்சாண்கிடையாக வணங்கி ஸோமன் தனது பூஜைக்குத் தயாராகினான்!


Wednesday, August 19, 2020

தலைப்பு இல்லை

"When you’re seeking to get something from the world, you’re a beggar. When you are giving, you’re a king. By giving everything away, you gain everything – you conquer nature itself."

~ Sri Amritananda Natha Saraswati


திருமூலரும் ஸோம நாதரும்

அகத்திய மகரிஷி தனது சீடரான ஸோமானந்த நாதரை சிறிது காலம் மூல நாதர் தனது 3000 வருட தவத்தைப் பூர்த்தி செய்துள்ளார்; அவருடன் சென்று சிறிது காலம் குருகுலவாசம் செய்து வா என்று ஆசி கூறி அனுப்பியிருந்தார்;

ஸோமானந்தரும் மூலரிடம் சென்று பணிந்து வணங்கி சேர்ந்து கொண்டார். முதல் பாடம் ஸோமா இந்தப் பாடல் எனது நீண்ட தியான அனுபவத்தின் தொகுப்பு, கூறுகிறேன், உனது புரிதலைக் கூறுவாயாக என்றார். 

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகந்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே!

இதன் பொருள் என்னவென்று கூறு பார்க்கலாம் என்றார்!

குருவே உங்கள் ஆசியில்லாமல் இதை நான் புரிந்துக் கொள்ளமுடியாது! உங்கள் திருவடிப் பாதுகையை தியானிக்கிறேன், அருள்புரியுங்கள் என்று அந்தப் பாடலை மனனம் செய்து கொண்டு தியானத்தில் அமர்ந்தான் ஸோமன்! 

குருநாதா, ஐந்து கரங்கள் என்பது ஐந்து புலன்கள், யானை முகம் என்பது எமது புலன்களின் அறிவு செயற்படும் மூளையை கீழ்ப்புறமாக நோக்கின் தெரியும் வடிவம், இந்தின் இளம்பிறை போன்ற கொம்புகள் என்றால் இளஞ் சந்திரன் போன்ற வளைந்த கொம்புகள் உடைய புருவங்கள், அதுவே சிவத்தை மறைத்துக் கொண்டிருக்கும் நந்தியின் கொம்புகள், அந்தக் கொம்புகளுக்கு நடுவே புருவமத்தியில் கொழுந்து விட்டு தகிக்கும் ஞானத்தைத் தரும் சிவத்தின் திருவடியை எனது புத்தியில் வைத்துப் போற்றுகிறேன்! 

ஆகவே மூளைக்கு நடுவில், புருவமத்தியில் இருந்து உள் நோக்கித் தெரியும் அறிவினை தூய்மைப்படுத்தும் ஜோதிவடிவான இறைசக்தியை எமது அறிவில் இருத்தி தியானிக்க வேண்டும் என்பதே எனக்குப் புலப்பட்ட விளக்கம் ஐயனே என்றான் ஸோமன்! 

மூலநாதர் தெய்வீகப் புன்னகையை உதித்தார்! 

சிறிது நேர மௌனத்தின் பின்பு கணபதியைத் தொழுவதல்லவா மரபு? இந்தப் பாடலில் கணபதியைக் கூறியிருக்கிறேன் என்று ஏன் பொருள் கொள்ளக் கூடாது என்ற வினாவினை தொடுத்தார்! 

அதற்கு ஸோமன் ஐயனே நீங்களே இதைப் புரிந்துகொள்ள பிறிதொரு சமயத்தில், 

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே

என்று சிவத்தை எங்கு காணவேண்டும் என்ற உண்மையைக் கூறியுள்ளீர்கள்; எனது ஐயன் அகத்தீசரிடம் மருத்துவம் கற்கும் போது மூளையின் அமைப்பு யானை முகம் போன்று இருப்பதையும் அது புலன் வழி அறிவைக் கிரகிக்கும் என்பதையும் அறிந்துக் கொண்டேன். ஆழ்ந்து ஏகாக்கிர சித்தத்துடன் இந்தப் பாடலை தியானிக்க இந்த விளக்கத்தைப் பெற்றுக்கொண்டேன்! 

இன்னுமொரு விளக்கம் மனதில் உள்ளது; அதைக்கூறலாமா இல்லையா என்ற தயக்கமுள்ளது என்றான் ஸோமன்;

அதற்கு மூலநாதர் "அறிவு தெளிய விரும்புவன் பயமற்று சிந்திக்க வேண்டும், தைரியமாகக் கூறுவாயாக" என்றார். 

இந்தப் பாடல் புத்தியைத் தூண்டும் அந்தப் பேரொளியை எம்முள் இருத்தி தியானிப்போமாக என்ற காயத்ரி மகாமந்திரத்தின் பொருளையும் உள்ளடக்கியிருப்பதாகத் தெரிகிறது. அது சரிதானே ஐயனே! என்றான் ஸோமன்!

மீண்டும் அதே தெய்வீகப் புன்னகையை உதிர்த்துவிட்டு "ஸோமா உனக்கு அகத்தீசர் உபதேசிக்காதது எதுவுமிருக்காது; அவர் கருணை மிகுந்தவர், அவர் திருவடியை சிரசில் தாங்கிய உனக்கு எல்லாச் சூக்ஷ்சுமமும் விளங்கும்! மேலும் புரிதல் என்பது அவரவர் பரிணாமத்திற்கு தக்க, அந்தக் கரணத்தின் சுத்திக்கு ஒப்ப அறிவது தான்! ஆகவே கலக்கமின்றி உனது தியான சாதனையைத் தொடர்வாயாக! என்று கூறிவிட்டு அமைதியாக தியானத்தில் ஆழ்ந்து விட்டார்!


மலையக நூல்திரட்டு

ஒரு சமூகத்தின் வாழ்வியல் அதன் இலக்கியத்தில் பிரதிபலிக்கும். அந்த இலக்கியங்கள் அடுத்த தலைமுறை படிக்கக் கூடிய அளவில் ஆவணப்படுத்துவதும், ஆய்வுகள் செய்வதும் அவசியமானது. 

மலையகத்திற்குரிய இலக்கியங்களை ஒழுங்குபடுத்தி ஆவணப்படுத்தப்பட்டு ஆய்வுக்கு பயன்பட என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு மாத்தளைப் பட்டதாரிகள் ஒன்றியம் செயலில் இறங்கியுள்ளது. 

எதிர்காலத்தில் மலையக இலக்கியத்தில் ஆய்வு செய்ய விரும்பும் பட்டதாரிகள், MPhil, PhD ஆய்வு மாணவர்களுக்குரிய உசாத்துணைகளை இலகுவாகக் கிடைக்கும் வகையில் நூற்களை தொகுத்து அட்டவணைப்படுத்தப்படுகிறது. 

எதிர்காலத்தில் ஒன்றியம் மலையக இலக்கியங்களில் MPhil, PhD பட்ட ஆய்வுகளை செய்ய தனது அங்கத்தவர்களை உத்வேகப்படுத்தும். 

இது இளைஞர்களின் சமூக அக்கறை முயற்சி! 

இந்தத் திட்டம் உலக தமிழ் ஆவணமாக்கல் திட்டமான நூலகத்திற்கு பங்களிப்பது இதன் மற்றுமொரு பிரதான நோக்கம்! 

இதற்குரிய முதல் அடிக்கல்லை நாட்டி வாழ்த்தி வழிகாட்டியுள்ளார் மாத்தளை காத்திகேசு ஐயா அவர்கள்.

அவருடனான உரையாடலில் கிடைத்த மூன்று சுவாரசியமான செய்திகள்;

மாத்தளையின் முதல் இலக்கியம் ஸ்ரீ முத்துமாரியம்பாள் மீது 1922ம் ஆண்டு பாடப்பட்ட அந்தாதி.

இரண்டாவது சன்மார்க்க சங்கத்தால் வெளியிடப்பட்ட நூல்.

மேலும் நாகொல்ல பிள்ளையார் கோயில் சோழர்காலத்து புராதனமான கோயில் என்பதும் சில ஆவணங்களில் அந்த நிலப்பகுதி சோழபுரம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது என்பவை! 

கலாநிதி. க. நிசாந்தனும், யாழ்பல்கலைக்கழக விவசாய தொழில்நுட்ப பீட விரிவுரியாளர் தட்சணேஷ் காந்த், ஆசிரியர் லக்ஷ்னிகாந்த் ஆகியவர்கள் வழிகாட்டலுடன் இளம் பட்டதாரிகள் இந்தப் பணியைத் தொடங்கியுள்ளார்கள்.


Tuesday, August 18, 2020

திருமூலரும் ஸோம நாதரும்

ஒருமுறை திருமூலருடன் ஸோமநாதர் என்ற அகத்தியரின் சீடரும் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தார். அங்கு ஒரு பெரிய மதம் பிடித்த யானை மரத்தின் பின்னால் மறைந்து கொண்டிருந்தது. மரத்தைத் தாண்டிச் சென்றவுடன் இப்போது யானைக்குப் பின்னால் மரம் மறைந்து கொண்டிருந்தது. உடனே திருமூலர் அந்த சந்தர்ப்பத்தை வைத்து அவனுக்கு ஞானம் புகட்ட விரும்பினார்!

ஸோமா! இதிலிருந்து நீ உயர்ந்த இரகசியத்தை அறிந்துகொள்ளலாம் என்று கூறிவிட்டு நான்கடியில் பாடலைக் கூறினார்;

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்

பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே

இதைக்கூறிவிட்டு சரி உனது புரிதலைக் கூறுவாய் ஸோமா என்றார்;

மரத்திற்கு முன்னால் நிற்கும் போது மரத்தை மறைத்துக் கொண்டிருக்கும் அந்த மாமத யானை நாம் மரத்திலிருந்து நீங்கி மறுபக்கம் சென்றவுடன் மரம் யானையிலிருந்து மறைந்து கொண்டிருக்கிறது போல புலப்படுகிறது. நாம் மரத்திற்கு முன்னால் நின்று பார்த்தால் மரத்தில் யானை மறைந்து கொண்டிருக்கும்; யானைக்கு முன்னால் நின்று பார்த்தால் யானையில் மரம் மறைந்து கொண்டிருக்கும்.

இதுபோல நாம் ஐந்து பூதங்களாலான ஐந்து புலன்கள் மூலம் இந்த உலகத்தைப் பார்க்கும் வரை ஐந்து பூதங்களும் மரம் யானையை மறைத்தது போன்று அந்த பரமாகிய சிவத்தை மறைத்துக் கொண்டிருக்கும்!

எப்போது குருவின் அருள் சொரிய பரமாகிய சிவத்தை அறியும் தெளிவும், விழிப்பு கிடைத்து, புலன்களைத் தாண்டி அகவுணர்வினால் காணும் நிலை தியானத்தால் வாய்க்கும் போது நாம் மரத்தைத் தாண்டி இந்தப்பக்கம் வந்து மாமத யானையைக் கண்டாற்போல் பார்முதலாகிய ஐம்பூதங்களையும் தாண்டி பரமாகிய சிவத்தில் கலந்து போய் அனுபவமாகும்!

மரத்தில் யானை மறையும் நிலை ஐம்புலனால் ஐம்பூத உலகில் மனம் புறவழி அலையும் நிலை! யானையில் மரம் கரையும் நிலை ஐம்பூத புறவழி செல்லாது மனம் அகத்தில் அடங்கி பரமாகிய சிவத்தை உணரும் நிலை!

திருமூலர் சிறு புன்னகையை உதிர்த்தார்!

எனது புரிதல் சரியானதானதா குருவே என்றான் ஸோமன்!

சரி எது? பிழை எது? உனது நிலைக்கு விளங்கியதை நீ கூறுகிறாய்! புலன்களைத் தாண்டி, சலனமற்று அகத்தில் உனது சாதனையை தொடர்ந்து செய்துவா! அனுபவத்தில் அறிவாய்! அனுபவம் ஒன்றே உண்மையானது என்று ஆசி கூறினார்!

Post inspired by Dr. Lambotharan Ramanathan


Sunday, August 16, 2020

தலைப்பு இல்லை

அறிவு விதைக்கப்பட வேண்டும்! ஒரு துறையில் அறிவைப் பெற்றவன் தன்னைப் போல் பலரை எப்படி உருவாக்கலாம் என்ற சிந்தனை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் பெற்ற அறிவினைப் புரிந்துக் கொள்ள முடியாத சமூகத்துடன் முரண்படும் ஒரு விரக்தனாகத் தான் இருப்பான்!

ஒரு பட்டதாரி ஒரு துறையில் உருவாகினால் அவன் தன்னைப் போன்று பல பட்டதாரிகளை அவன் சமூகத்திற்குள் உருவாக்கினால் தான் அவனைப் புரிந்துக் கொள்ளும் சமூகம் உருவாகும். 

ஒரு எழுத்தாளன் தன்னைப் போல் பலரை உருவாக்கினால் தான் அவன் எழுத்து வளரும்! 

ஒரு உயர்ந்த நோக்கம் உள்ள அரசியல்வாதி தன்னைப் போல் கொள்கைப் பிடிப்புள்ள, சமூகத்தை முன்னேற்ற அதிகாரம் வேண்டும் எண்ணம் கொண்ட பலரை அவன் கட்சியிலும், சமூகத்திலும் உருவாக்கினால் தான் அவன் அரசியல் செய்ய முடியும்! 

இங்கு பலர் அறிஞர்களாகவும், கலாநிதிகளாகவும் இருந்தும் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் தமது நேரத்தை தம்மைப்போன்ற கொள்கையுடையவர்களை உருவாக்கச் செலவழிக்கவில்லை! 

தாம் வாழும் சமூகம் எம்மைப் புரிந்துக் கொள்ளவில்லை என்றால் முதலில் அந்தச் சமூகத்தின் அறிவு மட்டத்தை, சிந்தனை மட்டத்தை உயர்த்த ஆரம்பத்தில் தாம் பாடுபட வேண்டும், பின்னர் அதனால் உருவாகும் சூழலில் முழுச் சமூகத்தையும் படிப்படியாக முன்னேற்ற பொறுமையும், எறும்பூர கல்லும் கரையும் என்ற தொடர் முயற்சியும் அவசியம் என்பதைப் புரிய வேண்டும்! அப்படி இல்லாமல் எனது அறிவு உங்களை எல்லாரையும் விட அதிகமாக இருக்கிறது; நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற போக்கில் செயற்படும் புத்திஜீவிகள் சமூகத்திற்கு குறைகூறுவதையும், விரக்தியடைவதையும் தவிர எதையும் தரமுடியாது.

மேலும் தான் இதைச் சாதித்து புகழடையவேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுபவர்களும் எந்த நன்மையையும் சமூகத்திற்கு செய்துவிட முடியாது. 

அதிகாரத்தில் இருப்பது பெரும் பொறுப்பு என்பதை உணராமல் அதிகாரம் ஒரு பெரும் பெருமை என்பது முட்டாள் தனம்! எமக்கு அதிகாரமும், அறிவும், பொறுப்புகளும் தரப்படுவது மற்றவர்களுக்கு உதவவே அன்றி நாம் மாத்திரம் வாழ அல்ல என்ற மனப்பாங்கு கட்டியெழுப்பப்பட வேண்டும்.


Saturday, August 15, 2020

தலைப்பு இல்லை

ஒரு இனம் விடுதலையை வேண்டின் அது தனது சமூக மனதைச் செம்மைப்படுத்தி விழுமியங்களை உருவாக்க வேண்டும் என்பதை இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சமூகவிடுதலைக்கான தத்துவவியலாளர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்!
எண்ணங்களிலும், முன் துணிபுகளிலும் இருந்து விடுதலையுற்ற மனமும், அதனால் கட்டமைக்கப்பட்ட இனமும், அதன் விழுமியமும் தனது சமூகத்திற்கு மாத்திரமல்ல மனித குலத்திற்கு பங்களிக்க வேண்டும். 
இருப்புக்கான காரணம் (purpose of existence) ஒவ்வொன்றும் கொண்டிருக்கும் விழுமியத்தில் (value) இருந்து உருவாகிறது! சிலது மறைகின்றன என்றால் அதன் இருப்புக்கான காரணமும், அதன் விழுமியமும் சமூகத்தில் இல்லாமல் போகும் அளவிற்கு அவர்களது கொள்கைகள் வலிமையற்றவர்கள் என்றுதான் அர்த்தம்! 
தமக்குள்ளேயே அதிகாரத்திற்கு அடிபடும் மனமும், உள்வீட்டுச் சண்டையில் நேரம் வீணாக்கும் இனமும் அதிகாரத்தை அடைந்து தமது சமூகத்திற்கு எதைப் பங்களிக்கப்போகிறார்கள்?
தமக்கு வெளியே எதிரி இருக்கிறான் என்று பழைய சூழல் அனுபவத்திலேயே மனதை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டு கற்பனையில் வாழ்ந்துகொண்டு, யதார்த்த சூழலைக் கூர்ந்து அவதானிக்காமல், குறைகூறிக்கொண்டு இருக்க எதிரி என்று கற்பித்தவன் தனது விழுமியத்தையும், குறைகளையும் மாற்றிக்கொள்ள, நாமோ இன்னும் பழைய ரீலையே ஓட்டிக்கொண்டிருந்தால் சிந்திக்கவும், அவதானிக்கவும் தெரியாதவர்கள் ஆகிறோம். 
தன்னைவிட அறிவில் சிறந்தவனை, ஆற்றலில் சிறந்தவனை எப்படி சமூக நன்மைக்குப் பயன்படுத்தமுடியும் என்று சிந்திக்கத்தெரியாமல் உள்ளூர தாழ்வு மனப்பான்மையுடன் புத்திஜீவிகளை ஒதுக்கி அரசியல் செய்யும் தலைமைகள் எப்போதும் நிலைத்திருப்பதில்லை! 
கேள்வி கேட்பவர்களை முட்டாள்களாகவும், எதிரிகளாகவும், துரோகிகளாகவும் முத்திரை குத்தப் பழகிய மனங்களுக்கு அதைத்தாண்டி தூரதரிசனமான சிந்திக்கும் ஆற்றல் வாய்ப்பதில்லை!
குறுகிய மனப்பாங்கிலிருந்து வெளிவருவதுதான் தமிழ்ச்சமூகத்தின் தற்போதைய தேவை! குண்டுச் சட்டி குதிரை மனங்கள் ஆபத்தானவை! 
குறிப்பு:
இந்தப்பதிவு இலங்கைத் தமிழ் அரசியலைப் பற்றியது அல்ல!    

தலைப்பு இல்லை

இன்று ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த நாள்; இந்திய சுதந்திர தினமும் கூட, 
இந்தியாவின் விடுதலையும், ஒற்றுமையான ஒரு தேசமாக இந்தியாவை உருவகித்ததற்கு அவர் ஆழமான காரணம் இருப்பதை விளக்கினார். பாரத தேசம் தனது ஆயிரம் ஆண்டு பழமையான ஞானத்தை உலகிற்கு கற்பிக்கும் குருவாக மாற சிதறிக்கிடக்கும் ஆற்றல் ஒன்றுபடுத்தப்பட்டு வலிமை பெற வேண்டும் என்று பாரதமாதாவை துர்க்கையாக உருவகித்தார்! 
பாரதத்தின் அந்த ஞானம் மனிதகுலத்தை பௌதீக தளப் பிரச்சனைகள் அனைத்திலிருந்தும் விடுவித்து ஒட்டுமொத்த மனித குலத்தையும் மேம்படுத்தும் என்பதற்காக தனது வேத விளக்கங்கள், உபநிஷத விளக்கங்கள், யோக சாதனைக் குறிப்புகள் அனைத்தையும் ஆங்கிலத்தில் எழுதி வைத்தார். 
இந்தியவிடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் தாங்கி பிரித்தானியர்களைத் தாக்கவேண்டும் என்ற கொள்கையுடன் இயங்கிய ஸ்ரீ அரவிந்தர் அலிப்பூர் வழக்கின் பின்னர் உண்மையான விடுதலை என்பது ஆன்ம விடுதலை என்பதை உணரத்தொடங்குகிறார். செயலோட்ட அரசியலிருந்து தன்னை முழுமையாக விடுவித்துக்கொண்டு, புறத்தில் போராடுவதை விட மக்கள் அனைவரும் அகத்தின் சூழலைமாற்ற நிலமைகள் மாறும் என்பது உணர்த்தப்பட அதற்காக தீவிர யோக சாதனையில் இறங்குகிறார். 
அபூர்வமாக அவரது பிறந்த நாளே இந்திய சுதந்திரதின நாளாக நிர்ணயிக்கப்படுகிறது! 
ஸ்ரீ அரவிந்தர் யோகி மாத்திரமல்ல அரசியல், சமூக நடைமுறை வழிகாட்டியும் கூட!

Friday, August 14, 2020

தலைப்பு இல்லை

வாக்கு அல்லது சொல் என்பது அதியுயர் சூக்ஷ்ம அர்த்தத்தில் நாதப்பிரம்மம் - இறைவன் எனப்படுகிறது!

இந்தச் சொற்கள் சந்தக் கோர்வையாக கட்டப்பட்டு ஓசை ஒழுங்கு மாறாத பாடலாகும் போது அது மனதை பற்றியிருக்கும் பந்தங்களிலிருந்து விடுவிக்கும்!

இதுவே இசையைக் கேட்டால் துன்பம் பறக்கிறது! பாடும் போது துன்பங்களிலிருந்து மனம் விடுபட்டிருக்கிறது! 

அத்தகைய படைப்பை Yamunalinie Pathmanathan தனது இனிய குரலிலும் இசையிலும் கொண்டு வந்திருக்கிறார்! 

Thava Sajitharan சொற்களைக் கோர்த்து சந்தம் கட்டும் வேலையைச் செய்ய,  காட்சியில் அழகாக்கி இருக்கிறார் தம்பி Thilojan VM


தலைப்பு இல்லை

வாக்கு அல்லது சொல் என்பது அதியுயர் சூக்ஷ்ம அர்த்தத்தில் நாதப்பிரம்மம் - இறைவன் எனப்படுகிறது!
இந்தச் சொற்கள் சந்தக்கோர்வையாக கட்டப்பட்டு ஓசை ஒழுங்கு மாறாத பாடலாகும் போது அது மனதை பற்றியிருக்கும் பந்தங்களிலிருந்து விடுவிக்கும்!
இதுவே இசையைக் கேட்டால் துன்பம் பறக்கிறது! பாடும் போது துன்பங்களிலிருந்து மனம் விடுபட்டிருக்கிறது! 
அத்தகைய படைப்பை Yamunalinie Pathmanathan தனது இனிய குரலிலும் இசையிலும் கொண்டு வந்திருக்கிறார்! 
Thava Sajitharan சொற்களைக் கோர்த்து சந்தம் கட்டும் வேலையைச் செய்ய,  காட்சியில் அழகாக்கி இருக்கிறார் தம்பி Thilojan VM

தலைப்பு இல்லை

அறிவு அவதானிப்பதிலிருந்து தொடங்குகிறது!
கற்றல் என்பது ஆழமாக அவதானித்துக் கிரகித்தல் என்பதே! 
பிள்ளைகளைப் பாடப் புத்தகத்தினைப் படி என்று நெருக்குவதை விட புறச்சூழலையும், தனக்குள் இருக்கும் அகச் சூழலையும் கூர்ந்து அவதானிக்கும் பண்பினை உருவாக்குதல் அவசியம்! 
அந்த வகையில் கொரோனா விடுமுறையில் மூன்றாம் வகுப்பு சிறுமி அமிர்தவர்ஷினி தனது வீட்டுத் தோட்டத்தினை அப்பம்மாவுடன் சேர்ந்து உருவாக்கி அவதானங்களைத் தொகுத்திருக்கிறார். இதற்கு அவரது அப்பா பாரதம் எழுதிய பிள்ளையார் வேலை கணணியில் பார்த்திருக்கிறார். அப்பா இரண்டு புத்தகங்கள் வெளியிட்டதால் தானும் புத்தகம் வெளியிட வேண்டும் என்ற தொல்லையால் நூலின் முதல் வரைபு வந்திருக்கிறது. இன்னும் அவதானங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 
நட்பு வட்டத்திலிருக்கும் சூழலியல், அறிவியல் அறிஞர்கள், எழுத்தாளர்கள் இதைப் படித்து தங்களின் ஆசிகளை, வழிகாட்டலை பின்னூட்டமாக வழங்கினால் அவற்றையும் நூலில் சேர்த்துக்கொள்ளலாம்!

தலைப்பு இல்லை

அறிவு அவதானிப்பதிலிருந்து தொடங்குகிறது!

கற்றல் என்பது ஆழமாக அவதானித்துக் கிரகித்தல் என்பதே! 

பிள்ளைகளைப் பாடப் புத்தகத்தினைப் படி என்று நெருக்குவதை விட புறச்சூழலையும், தனக்குள் இருக்கும் அகச்சூழலையும் கூர்ந்து அவதானிக்கும் பண்பினை உருவாக்குதல் அவசியம்! 

அந்த வகையில் கொரோனா விடுமுறையில் மூன்றாம் வகுப்பு சிறுமி அமிர்தவர்ஷினி தனது வீட்டுத்தோட்டத்தினை அப்பம்மாவுடன் சேர்ந்து உருவாக்கி அவதானங்களைத் தொகுத்திருக்கிறார். இதற்கு அவரது அப்பா பாரதம் எழுதிய பிள்ளையார் வேலை கணணியில் பார்த்திருக்கிறார். அப்பா இரண்டு புத்தகங்கள் வெளியிட்டதால் தானும் புத்தகம் வெளியிட வேண்டும் என்ற தொல்லையால் நூலின் முதல் வரைபு வந்திருக்கிறது. இன்னும் அவதானங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

நட்பு வட்டத்திலிருக்கும் சூழலியல், அறிவியல் அறிஞர்கள், எழுத்தாளர்கள் இதைப் படித்து தங்களின் ஆசிகளை, வழிகாட்டலை பின்னூட்டமாக வழங்கினால் அவற்றையும் நூலில் சேர்த்துக்கொள்ளலாம்!


Thursday, August 13, 2020

ஆங்கிலத்தில் சித்த மருத்துவம் கற்கலாமா?

அண்மையில் சித்த மருத்துவம் கற்கும் ஒரு பட்டதாரி மாணவரை சந்திக்க நேர்ந்தது. ஆங்கிலத்தில் தாம் படிப்பதாகப் பெருமையாகக் கூறினார்;
ஆச்சரியமாக சித்த மருத்துவத்தை ஆங்கிலத்தில் படிக்கிறீர்களா என்று, ஆம் என்றார்; சரி எப்படிப் படிக்கிறீர்கள் என்று கேட்டால் தமிழ்ப் பாடலை ஒலிபெயர்ப்பு செய்து அதை அரைகுறையாக மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் பாடமாக்கிக்கொண்டிருந்தார் பாவம் அந்த மாணவர்!! 
விருத்தப்பா தெரியுமா என்று கேட்க வருத்தமாக பார்த்தார்! சித்த வைத்தியம் ஆங்கிலத்தில் படிப்பதற்கு சித்தர் பாடல்களை தினசரி படித்து வாருங்கள்; அவை மிக எளிய தமிழ் நடையில் எழுதப்பட்டிருக்கிறது; சற்று நாட்களின் பின்னர் பாடலுடன் பழகியவுடன் உங்களுக்கே அர்த்தம் தெரியும் என்று நான் கூற, அதற்கு அவர் தனது விரிவுரையாளர் பாடல் பாடமாக்குவதெல்லாம் பழைய பரம்பரை வைத்தியர்கள் செய்வது, நாங்கள் எல்லாம் சித்த மருத்துவம் பட்டதாரிகளாகப் படிக்கிறோம் என்றார்! 
அவர்களுக்கு கற்பிப்பவர்களின் அறியாமையை எங்கு சென்று சொல்வது; சித்த மருத்துவத்தை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக சித்தவைத்தியம் ஆங்கிலத்தில் கற்பிக்கிறோம் என்பது என்னவகையான தந்திரோபாயம்! 
ஆயுர்வேத பட்டதாரியாக அடிப்படை சமஸ்க்ருதம் தெரிந்திருக்க வேண்டும், மேற்படிப்பு படிக்க கட்டாயம் சமஸ்ருத அறிவு வேண்டும். அப்படி சமஸ்க்ருதத்தில் மூல நூல் படிக்கும் ஆற்றலுடன் ஆங்கிலத்தில் கற்பார்கள். உலகப்புகழ் பெற்ற ரொபேட் ஸ்போடா, டேவிட் ஃப்ராவ்ளி போன்ற அமெரிக்க ஆயுர்வேத வைத்தியர்களே ஆயுர்வேதம் முறையாகக் கற்க வேண்டும் என்பதற்காக சமஸ்க்ருதத்தில் மிகுந்த புலமை பெற்றவர்கள். 
பட்டதாரி சித்த வைத்தியர்கள் தமது தொழில் ரீதியாக நிலை நிறுத்த ஆங்கில அறிவு பெற்றிருத்தல் மிக அவசியம்!ஆனால் சித்த வைத்தியம் வளர வேண்டும் என்றால், ஆய்வு செய்ய தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அடிப்படை யாப்பிலக்கணம் தெரிந்தால் தானே பாடல் சீர் பிரித்து விளங்கி ஆய்வு செய்ய முடியும்? அப்படி தமிழ் நன்கு தெரிந்த ஒருவர் ஆங்கிலப்புலமையுடன் சித்த வைத்திய அடிப்படைகளை ஆங்கிலத்திற்கு கொண்டுவருபவராக இருக்க வேண்டும். 

Wednesday, August 12, 2020

தலைப்பு இல்லை

அப்பா நான் சொல்லுவதை computer இல் எழுதித் தாங்கோ?

என்ன விஷயம்?

என்னுடைய friends எல்லோரையும் வீட்டிற்கு கூப்பிடப்போகிறேன்?

ஏன்?

கிருஷ்ணருடைய Birthday க்கு Party கொடுக்க?

ஏன் இதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

கிருஷ்ணன் ரொம்ப happy ஆனவர், Friends ஐயும் happy ஆக வைத்திருப்பவர் அல்லவா; அப்படி என்றால் அவருடைய Birthdayக்கு என்னுடைய friend ஐயும் கூப்பிட்டு பலகாரம் கொடுக்க வேண்டுமல்லவா? சரி அழைப்பிதழ் செய்து தாங்கோ! 

சரி

little Krisha படம் எடுங்கோ?


Tuesday, August 11, 2020

தலைப்பு இல்லை

ராதாராணி எப்படி ஒரு சாதகனுக்கு உயர்வு தருவாள்?

சாதனை என்பது வெறுமனே ஆன்மீகப் புத்தகங்களைப் படித்துவிட்டு, புனித தலங்களுக்குச் சென்று நதிகளில் மூழ்கி எழுவதல்ல. 

எமது மனதில் எழும் லோகாயத எண்ணங்களை கூர்ந்த விழிப்புணர்வுடன் அவதானித்து அவை எழும் போது தியானசாதனை மூலம் விலக்கி அகத்தில் ஒளிரும் பிரம்ம தேஜஸ் ஒளியில் மனதை தொடர்ச்சியாக இருத்தப் பயில்வதே சாதனை. 

ஆனால் இது எப்போதும் சாத்தியமாகாது, ஏனென்றால் உடலின் ஒவ்வொரு கலமும் ரஜோகுணத்தில் மூழ்கி செயல் புரிய எம்மை உந்திக்கொண்டே இருக்கும். இந்த உடலின் ரஜோ குண உந்துதலில் மனம் கவ்விக்கொண்டு தன்னை ஒத்திசைந்து உடலில் ரஜோகுணத்திற்கேற்ப குதித்துக்கொண்டிருக்கும். இப்படி ரஜோகுணத்தால் பந்தப்பட்ட ஜீவன் தனக்குள் இருக்கும் ஒளியை அனுபவித்து உயரத் தெரியாமல் கீழே விழுந்துகொண்டிருக்கும். 

இப்படி திருப்பித்திருப்பி விழுந்துகொண்டிருக்கும் மனதை ஊர்த்துவ முகமாகத் திருப்பும் சக்தி ஏதும் உண்டா என்றால் ஆம் அதுதான் தேவியின் ஹ்லாதினி சக்தி! 

ஸ்ரீ ராதா தியானமே அதற்குரிய எளிய வழி! 

எவன் ஒருவன் ஸ்ரீ ராதையைத் தியானிக்கிறானோ அவனில் மதுரபாவம் வாய்க்கும்! அவன் மனதில் மதுர சக்தி கலக்கத்தொடங்கும். இப்படி மனதில் மதுரபாவம் வாய்த்த சாதகன் உடலின் ரஜோகுணத்தினில் விழமாட்டான்! தியானத்தின் சுவையறிந்து ஆழ்ந்த தியான சாதனை வாய்க்கப்பெறுவான்!


தலைப்பு இல்லை

கடந்த 25 வருட யோக தத்துவ, சித்த ஆயுர்வேத மருத்துவ கற்கை அனுபவம் 

13 வருட சூழலியல் விஞ்ஞான கள அனுபவம் 

07 வருட விவசாயத் திட்ட முகாமைத்துவ கள அனுபவம்

இவற்றை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து அனைவருக்கும் பயனுள்ள வகையில் கற்பிப்பதற்கும், ஆலோசனை கூறுவதற்குமான ஒரு நிறுவனமாக ஸ்ரீ ஸக்தி சுமனன் நிறுவகம் ஆரம்பிக்கப்படுகிறது.


தலைப்பு இல்லை

சென்ற பதிவினைப் படித்த அன்பர் ஒருவர் மனம் எப்படி உயர் மண்டலங்களின் ஒளியைப் பெறும் என்ற கேள்வி கேட்டிருந்தார் அதற்குரிய விதிகள் வருமாறு;

1) மனம் தூய்மையாகவும் தெய்வீக ஒளியைப் பெறக்கூடிய வகையில் மௌனமாகவும் இருக்க வேண்டும்.

2) வெளிப்புறமாக மனம் அலையும் போது உண்மையை அறிய முடியாது.

3) ஆழமான மௌனத்தில் மனம் ஏகாக்கிரமடையும் போது இன்னும் ஆழமாக ஊடறுத்துச் செல்லும் ஆற்றலை மனம் பெறும்.

4) எண்ணங்கள் அற்ற மனம் அது தியானிக்கப்படும் பொருளின் ஆற்றலை, பண்பை பிரதிபலிக்கும். 

5) ஆகவே மனம் உயர்மண்டலங்களிலிருந்து ஆற்றலைப்பெற வேண்டுமானால் அது தனது வழமையாக குழப்பங்களிலிருந்து அமைதியாக, மௌனமாக இருக்கப் பழக வேண்டும்.


Monday, August 10, 2020

தலைப்பு இல்லை

ஸ்ரீ ராதையைத் துதிக்காதவன் கிருஷ்ணரை வழிபட அருகதையற்றவன். ஸ்ரீ ராதை கிருஷ்ணனின் பிராண சக்தி! 

ஸ்ரீ தேவிபாகவதம்    

அறியாமையில் துன்பத்தில் உழலும் ஜீவனை பக்குவப்படுத்தி அவித்தை - இந்த ப்ரக்ருதி உலகத்தின் மீதான பற்றினை - தனது ஆற்றல்களால் நீக்கி கோலோகப் ப்ருந்தாவனத்தில் அந்த ராதா ராணியின் பாதங்களை அடைவிக்கும் பொறுப்பை ஸ்ரீ க்ருஷ்ணன் ஏற்றுக்கொள்கிறான். 

தேவியானவள் தனது ஹ்லாதினி சக்தியால் ஒற்றைப் பார்வையால் ஜீவனின் மனதை தெய்வீக உணர்வு பெறச் செய்விக்கிறாள்!


Sunday, August 09, 2020

தலைப்பு இல்லை

இன்று இலங்கையின் தலைசிறந்த ஒரு புத்தாக்குனர், விஞ்ஞானி, தொழில்முனைவர் ஒருவரை சந்திக்கச் சென்றிருந்தேன்! 

அந்தச் சந்திப்பு ஒரு தொழில்முறை சார்ந்த சந்திப்பாக இருந்தது! அவரது தொலை நோக்கு (Vision) உயர்ந்த மனித மனங்களை எப்படி உருவாக்குவது என்ற திட்டமாக இருந்தது! 

சிறிது நேரத்திற்கு பிறகு மனம் பற்றிய தத்துவம் தொடர்பாக ஆழமாக உரையாடினார்! 

எமது சாதாரண மனம், சப்தம் எனும் ஒலியின் அலைவரிசையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்படி இயங்கும் மனம் அதிக அலைக்கழிவும், குழப்பமும், வினைத்திறனும் அற்றது. இத்தகைய மனதை வைத்துக் கொண்டு உயர்ந்த செயல்கள் எதையும் செய்ய முடியாது. இப்படி இருக்கும் மனதைக் கொண்டு நாம் அடைய வேண்டிய பௌதீக உயர்வையெல்லாம் அடைந்து விட்டோம்! இப்போது பௌதீகத்தின் எல்லையை அடைந்து கொண்டிருக்கிறோம். 

மனித மனம் இதற்கு மேல் செல்லமுடியும்; தியான சாதனையால் அது சந்திர மண்டல ஒளியைப் பெறும் போது சலனமுறும் மனம் பூரணமாக அடங்க ஆரம்பிக்கும். சூரிய மண்டல ஒளியை அடையும் போது புத்தி பூர்ணமாக விழிப்புற ஆரம்பிக்கும். பிரக்ஞா மண்டலத்தை அடையும் போது ஒளியை விட வேகமாகப் பயணித்து நாம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களை நடத்துவிக்கும் என தனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்களைக் குறிப்பிட்டார். 

பிறகு இந்தத்திட்டத்தின் மூலம் நாம் உயர்ந்த ஆன்மீகதிறனுடைய மனங்களை தொழிற்துறையில் உருவாக்க வேண்டும் என்று விபரித்தார்.


தலைப்பு இல்லை

தம்பி உள்ளான் படைக்கு அஞ்சான் என்பதன் யதார்த்தப் படங்கள் இதுவோ?

தம்பி ஜனாதிபதி!

அண்ணன் பிரதமர்! 

தம்பிக்கு முன்னால் அண்ணன் பதவிப்பிரமாணம் செய்ய வேண்டும்! 

இருவரும் எழுபது வயது கடந்த முதியவர்கள்!

தம்பிக்கு பதவி மமதை இல்லை! 

தம்பிக்கு ஆணவம் இல்லை! 

அன்பும், விழுமியமும், மரியாதையும் மட்டும்தான்!!

உண்மையான மரியாதை நிறைந்த  சகோதரத்துவம்!

உங்கள் ஆட்சியில் அமைதியும் சுபீட்சமும் நிறைந்த, பல்லினமும் மகிழ்ச்சியாக வாழும் இலங்கையை உருவாக்குவீர்கள் என்று ஆழமாக நம்புகிறோம்!

குறிப்பு:

தமிழர்களிடம் இப்படியொரு விழுமியம் இருந்ததாக எங்கோ படித்த ஞாபகம்!


Friday, August 07, 2020

தலைப்பு இல்லை

இலங்கை தாமரை மொட்டு!

இந்தியா தாமரைப் பூ!

பிராந்தியத்தின் போக்கு ஒன்றுபடுதலை (unification) நோக்கிச் செல்கிறதா? 

முற்போக்கு, இடதுசாரிச் சிந்தனைகள் என்பவை மக்களுக்கு கவர்ச்சிகரமாக இல்லையா? எதிர்ப்பரசியல் வலுவிழந்து விட்ட காலாவதியான தத்துவங்களா? 

அறுதிப் பெரும்பான்மை பெற பெரும்பான்மையான மக்களின் மனதை எப்படி ஒன்றுபடுத்த முடிந்தது?

பழைய சிறுபான்மை அரசியல் தந்திரோபயம் என்பது பெரும்பான்மை இரு பெரும் பிளவாக, கட்சி அரசியலில் வலுவற்று இருக்கும் போது சிறுபான்மையினர் ஒற்றுமையாக அரசமைக்க பேரம் பேசும் சக்தியாகி தாம் வலுப்பெறுவது என்ற அனுமானத்தில் வகுக்கப்பட்ட தந்திரோபாயம்; 

கடந்த ஐந்து வருடத்தில் அந்த இருகட்சிப் பிளவு தம்மை வலுவிழக்க வைக்கும் அரசியல் இது என்பதைப் புரிந்து கொண்டு, அரசியலை மாற்றி, இருபெரும் பாரம்பரிய அரசியல் கட்சிகளை கரைத்து விட்டு, புதிய தாளில் தாமரை மொட்டு வரைந்து தனிப்பெரும் பெரும்பான்மையாக்கி வலுப்பெற்று இருக்கிறது இலங்கையின் யதார்த்த அரசியல், 

இதன் மறுதலையாக தமிழ் கட்சிகள் வடக்கு, கிழக்கு, மலையகம் ஒட்டமுடியாத துண்டு துண்டாக்கிக் கிடக்கிறது.

முடிவுகளுக்கும், கொள்கை மாற்றங்களுக்கும் எந்த அழுத்தமும் கொடுக்கும் பலம் எவருக்கும் இனி வாய்க்கப் போவதில்லை!

ஆகவே நிதானத்துடனும், புரிந்துணர்வுடன் கூடிய நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாடு, புரிந்துணர்வு, உரையாடல், நட்பு பெரும்பான்மை சமூகத்துடன் நடைபெறாமல் அரசியல் இனிச் சாத்தியம் இல்லை என்ற நிலவரத்தில் வந்து நிற்கிறது என்பதுதான் யதார்த்தம்! 

தமக்குள் ஒன்றுபட முடியாமல் இருப்பதற்குரிய "மனநிலை" க்குரிய காரணங்கள் எவை என்பதைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் இனி வலிமை பெறமுடியாது. 

இலங்கையும் இந்தியாவும் இந்த ஒரே போக்கில் பயணிக்கிறது என்பது இன்னும் சுவாரசியம்!


Thursday, August 06, 2020

இராவணன் தமிழனா?

நண்பர் ஒருவரின் கேள்வி?

இது ஒரு அர்த்தமற்ற கேள்வி! நாத்திகர்கள் கட்டிய கற்பனைக் கோட்டைகளின் இன்னுமொரு வடிவம்! கடவுள் இல்லை என்று எண்ணும் நாத்திகர்களுக்கு இராவணனுடனும், நரகாசூரனுடனும் என்ன வேலை! கடவுள் இல்லை என்ற பின்னர் அசுரனும் இல்லைத்தானே! ஒரு நாணயத்தின் ஒருபக்கம் இல்லை என்றால் மறுபக்கமும் இல்லைத்தானே! 

காப்பியங்கள் மனிதரின் மனநிலைகளை படம்பிடித்துக்காட்டுவதற்கும், மக்களை நன்மை, தீமை, சமூக நியதி என்பவற்றை மனதிற்குப் புகட்ட எடுத்துக்கொள்ளப்பட்ட உருவகங்கள்! வாழ்ந்த ஆளுமைகளை மனநிலைக்கு ஏற்ற விதத்தில், பார்வைகளுக்கு ஏற்ற வகையில் கதை கதையாக எழுதி வைத்திருக்கிறார்கள் எமது மனநிலையை உணர்த்த, உயர்த்த! இந்தக்கதைகளைப் படிக்கும் போது எமது மனநிலைக்கு ஒத்த பாத்திரங்களுடன் ஒன்றி நமக்குரிய மனதின் கட்டமைப்பை, வழிகாட்டலைப் பேணமுடியும்! 

இந்த அடிப்படையில் கதைகளை, இதிகாசங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக இராவணனின் மனநிலை உடையவர்களுக்கு அவர்கள் இராவணனின் வழித்தோன்றலாகவும்; இராமரின் மனநிலையுடையவருக்கு இராமர் வழித்தோன்றலாகவும் தோன்றும்! அவ்வளவுதான்! இதில் உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை! அவரவர் மனநிலை! தம்மை எப்படித் தொடர்புபடுத்திக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது! 

பல காலத்திற்கு முன்னர் ஒரு தமிழ் திரைப்படத்தில் ஆக்கிரோசனாமான, திறமையான பொலிஸ் அதிகாரி வில்லனை தைரியத்துடன் எதிர்கொள்ளும்போது வில்லன் அவனைப் பார்த்து உள்ளூர இரசித்துக் கொண்டு அவன் நம்ம சாதிக்கார பயலுதான், காதைப் பாரு துடிக்குதிலே என்பார், ஆனால் பொலிஸ்காரனோ வில்லனை அழிக்கும் வேலை பார்த்துக்கொண்டிருப்பான், கடைசியில் வில்லனை அந்த பொலிஸ்காரன் அழித்துவிடுவான்! 

இதைப்போல ஒரு மனநிலை தான் இராவணனை தமிழனாக்கி இரசிப்பது! 

இதிகாச வரலாற்றுப்படி பிரம்மாவின் மகன் புலஸ்தியர், புலஸ்தியர் மகன் வைச்ரவ, வைச்ரவ மகன் இராவணன், இராவணன் பிரம்மாவின் 04ம் தலைமுறை! 

பிரம்மாவின் இன்னொரு மகன் மரீசீ, மரீசீயின் மகன், காஷ்யப்பர், அவர் மகன், விஸ்வான், அவர் மகன் மனு, அவர் மகன் இஷ்வாகு இப்படி 67வது தலைமுறையில் ஸ்ரீ இராமர் உதிக்கிறார். 

ஆக இதிகாசப்படி பார்த்தால் இராவணன் ரிஷி கோத்திர வழிவந்த ஒரு பிராமணன்!


Tuesday, August 04, 2020

தலைப்பு இல்லை

சமஸ்க்ருதத்தில் மனீஷி என்ற சொல்லிற்கு அர்த்தம் உயர்ந்த ஆற்றலுள்ள மனிதன் என்பதாகும்! இத்தகைய மனீஷி என்பவர்கள் தமது மனதை கட்டுப்பாட்டில் வைத்து தமது இச்சைப்படி மனதை செயற்படுத்த வல்ல புத்திக்கூர்மையானவர்கள். இத்தகையவர்கள் மிகச் சிறந்த அறிஞர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும், புத்தி ஜீவிகளாகவும், பத்திரிகையாசிரியர்களாகவும், சட்டத்தரணிகளாகவும், எழுத்தாளர்களாகவும் அவரவர் துறைகளில் உயர்ந்த நிலை அடைந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய புத்திசாலித் தனத்தினால் இவர்கள் கூறுவது எல்லாம் மக்கள் மனதை வசீகரிக்கும், மக்களை ஈர்க்கும் வல்லமை உள்ளவர்களாக இருப்பார்கள். பொதுவாக பெருந்தலைவர்கள் எல்லோரும் இந்த வகை மனீஷி என்ற புத்திக் கூர்மையுடைய மனிதர்கள் தான்! 

ஆனால் இந்த மனீஷிகள் புத்திக் கூர்மையுடன் தமது தாழ் உணர்வுகளான புகழ் மீதான ஆசை, பணம் மீதான ஆசை, உடல் இச்சை என்பவற்றின் பிடியிலிருந்தால் புத்திக் கூர்மையின் மூலம் தாம் கட்டமைக்கும் அரசியல் கட்சிகள், நிறுவனங்கள், தொழில் என்பவற்றின் மூலம் பெறும் அதிகாரங்களை இவற்றைத் தக்கவைத்துக்கொள்ளவே பயன்படுத்துவார்கள். 

இந்த நிலை வந்தவுடன் சமூகத்தின், மனித குலத்திற்கான முழுமையான முன்னேற்றத்திற்கான பாதை தடைப்பட்டுவிடும்! அவர்களுடைய பணிகள் மனித குலத்திற்கு மாத்திரம் என்று இல்லாமல் தமது இனம், குழு, கட்சி, குடும்பம் என்று சுருங்கி விடும்! இப்படி இதயத் தூய்மையும், நல்லொழுக்கமும் இல்லாமல் தனியே புத்திக் கூர்மை மாத்திரம் உள்ள ஒரு சமூகம் தனக்குள்ளே உயர்வு தாழ்வு சண்டைகளை உருவாக்கி சமநிலை அற்ற ஒரு சமூகமாகவே இருக்கும்! 

ஆக புத்திக் கூர்மையுடையவர்கள் தமது கூர்மையான புத்தியை இதய சுத்தியுடன் சமூகத்திற்கும், மனித குலத்தின் மேன்மைக்கும் பயன்படுத்தும் பண்புள்ளவர்களாக இருக்க வேண்டும்! 

குறிப்பு: இந்தக்கட்டுரை தமிழ் சமூகத்தைப் பற்றியதல்ல!


Monday, August 03, 2020

குரு அகத்திய காயத்ரி சாதனா அனுபவம் - வாழ்க்கை எப்படி சீராகியது என்று ஒரு சாதகியின் அனுபவம்

சாதனை அனுபவம் 


இரண்டரை வருடங்களுக்கு முன் என்னிடம் காயத்ரி சாதனை செய்வதற்கு சுமனன் அண்ணா வழிகாட்டுகிறார் நீங்களும் சாதனை செய்ய விண்ணப்பியுங்கள் என கூறியபோது நம்மால் மந்திர சாதனை செய்ய முடியுமா அதற்கு உரிய தகுதி நமக்கில்லையே அத்துடன் மந்திர சாதனையெல்லாம் நம்மால் முடியாது என மறுத்து கூறினேன். அப்போது காயத்ரி ஜபம் மனதை வழிப்படுத்த உதவும் முயற்சி செய்து பாருங்கள் என்று கூறினார்கள். சரி நம்மால் முடியாத காரியம் எனினும் 48 நாட்கள் முயற்சி செய்து பார்ப்பது என்று முடிவெடுத்து நாள் ஒன்றுக்கு 27 ஜெப எண்ணிக்கை கொண்டு ஆரம்பித்தேன். அப்போது 48 நாட்கள் சாதனையை தடையின்றி செய்வதற்காக எந்தவித குழப்பங்களுக்கும் இடம் கொடாமல் குரு வழிகாட்டலில் செல்வது அத்துடன் தினமும் காலையில் தவறாது  சாதனை செய்வது என்ற தீர்மானமும் செய்துகொண்டேன்.   சிரமம் இன்றி 48 நாட்கள் சாதனை முடிவுற்றது. நம்மால் சாதனை செய்ய முடியும் எனும் நம்பிக்கை வந்தது. அப்படியே தொடர்ந்து 54, 108, கல்ப சாதனை, லகு அனுஷ்டானம், மகா லஷ்மி சாதனை மற்றும்  நவக்கிரக சாதனை என முயற்சித்து வருகிறேன். இந்த தொடர்முயற்சியையும், தினம் குரு வழிகாட்டலில்  சாதனைசெய்வதும் என்னில் நம்மால்முடியும்என்ற நம்பிக்கையை வளர்த்தது. இந்த தன்னம்பிக்கை என்னால் முடியாது என எதையும் தவிர்க்காமல், எக்காரியத்தையும் நம்மால் இயன்றவரை செய்துபார்ப்போம் எனும் மனப்பாங்குடன் செய்யும் பண்பு வளர ஆரம்பித்துள்ளது. 


சாதனை  ஆரம்பிக்கும் காலத்தில் அடிக்கடி ஒற்றை தலைவலி, சைனஸ்  infection வந்து சிரமப்படுவேன் .   நோய்  தாக்கத்தில் இருந்து வெளிவர குறைந்தது 3 முதல் 5 நாட்கள் ஆகிவிடும் . இப்போது அவை வருவது அரிதாகிவருகிறது. அப்படியே வந்தாலும்  அறிகுறிகள் ஆரம்பித்த உடனே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்கிறேன்.  அத்துடன் தலைவலி, சைனஸ் தூண்டும் காரணிகளை அறிந்து அவற்றை தூண்டும் எண்ணஙகள் மற்றும் பழக்கவழக்கங்களை மாற்றியமைத்து கொள்கிறேன்.  இவ்வாறு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அந்த பிரச்சினைக்கான தீர்வினை கண்டறிந்து அதற்கு ஏற்ப விடை கண்டு செயல்படுத்தி வருகிறேன். 


மனதில் தோன்றுவதை உள்ளது உள்ளபடி கூறுவது பழக்கம், இதனால் யாரையாவது மனம் நோகும்படி சொல்லிவிடுவேன். இப்போது பேசும் போது  எனது வார்த்தைகள் ஒருவரை காயப்படுதாது இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன். அவ்வாறு துன்புறுத்தும் வார்த்தைகள்  எண்ண அலையில் ஏற்பட்ட உடனேயே என்னுள் ஒரு குரல் அதனை தடுத்து அவ்விடத்தில் மற்றவரது மனம் கோணாது சொல்லக்கூடியற்றை  அறிவுறுத்துவதுடன் அவ்வாறு செய்யவும் கட்டாயப்படுத்துவதும் உண்டு. கோபத்துடனோ அல்லது பிறரை காயப்படுத்தும் செயல்களை என்னுள் இருக்கும் அந்த சக்தி அனுமதிப்பத்தும் இல்லை. சில நேரங்களில் என்னடா நம்மளை பாதிக்கும்படி  பேசுவர்களை கூட மன ஆறுதலுக்கு கூட ஏதும் சொல்ல என தோன்றும் இருப்பினும் நான் அமைதியான சூழலை பாதிக்கும்                        செ யல்களையோ அல்லது எண்ணங்களையோ  அந்த சக்தி அனுமதிப்பதும் இல்லை.  அவ்வாறான சந்தர்ப்பங்களில் சித்த சாதனையில் உள்ள வாக்கியங்களை நினைவுபடுத்தி அந்த சக்தி நல்  வழிப்படுத்துவது உண்டு. 


காயத்ரி சாதனை ஆரம்பித்த பின் நான் செய்யும் நற்காரியங்கள்  அதிகரித்து இருப்பதை கவனித்தேன். பிறர்க்கு உதவும் மனப்பாங்குஅதிகரித்து உள்ளது.  ஒருவரால் நான் அடைந்த பலன்களின் ஏற்ப அவர்களுக்கு உதவும் மனப்பாங்கு மறைந்து அந்த சந்தர்ப்பத்தில் செய்யவேண்டிய காரியத்தை முழுமனதுடன் செய்து வருகிறேன். என்னால் இயன்றவரை என்னை சுற்றி உள்ளவர்களுக்கு உதவி வருகிறேன் 


மேலும் வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களாலும், கோபம், எரிச்சலுறும் தன்மை, பொறாமை எண்ணங்கள் இருந்தது அவை எல்லாம் இப்பொழுது குறைந்து அமைதியானவளாகவும் அன்பு கொண்டவளாகவும் மாறுவதை உணர்கிறேன். 


எந்த காரியத்தையும் அவசரமாகவும் பதட்டத்துடனும் செய்யும் தன்மை இருந்தது அதுமாரி  எக்காரியத்தையும் நிதானமாகவும்  கவனமாகவும் சிறப்பாவாகவும் செய்யும் தன்மை அதிகரித்துள்ளது. 


சாதனையானது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கொண்டு  ஒரு சிறு  கண்ணோட்டத்த்தில் இருந்து செயல்படாது பரந்த நோக்குடன் செல்லப்படும்தன்மையை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் இந்த அனுபவங்களை பண்பு மாற்றங்களை நான் ஒரு ஆரம்ப பள்ளி மாணவனிடம் இருக்கும் நிலையாகவே உணர்கிறேன்.  குருவழிகாட்டலின்படி நின்று தேவியின்கருணை பெற்று இந்த பண்பு மாற்றம் இன்னும் ஆழமாக என்னுள் ஏற்படுவேண்டும் எனும் பிரார்தனையுடனும் சாதனை தொடர்ந்து   செய்வதை குறிக்கோளாக கொண்டு தொடர்ந்து இந்த பாதையில் பயணத்தை தொடர்கிறேன்….


Sunday, August 02, 2020

தமிழ் அரசியல் தலைமைகளுக்கு வள்ளுவரும் சாணக்கியரும் கூறும் அறிவுரைகள்

தற்போதைய தேர்தல் சூழலில் கட்சிகளையும், அவர்கள் நோக்கங்களையும் சரியாகப் புரிந்துகொண்டு யார் நல்ல தலைவர் என்பதற்கும், எது நல்ல கட்சி என்பதை அறிந்துகொள்ள வள்ளுவரும், சாணக்கியரும் நல்ல ஆலோசனை கூறியிருக்கிறார்கள். 

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு. ( 381) 

படை, குடி, செல்வம், அமைச்சர், ஆலோசனை பெற நல்ல நட்பு, கோட்டை என்னும் ஆறு உறுப்புக்களையும் சிறப்பாகப் பெற்றவன் அரசருள் சிங்கம் எனப்படுவான் என்கிறார் வள்ளுவர். 

சுவாமி அமாத்யா ஜன்பதா துர்க் கோஷா தண்ட மித்ரா இதி ப்ரக்ரிதய (6.1.1 அர்த்த சாஸ்த்ரம்)

தலைவர், மந்திரி, குடி, அடிப்படை வசதிகள், செல்வம், படை, நல்ல நட்பு ஆகிய ஏழும் உரியது அரசு என்கிறார் சாணக்கியர். 

வள்ளுவர் அரசனின் இலக்கணம் வகுக்கிறார்.

சாணக்கியர் அரசினை வரைவிலக்கணம் வகுக்கிறார்.

வள்ளுவர் தலைவன் என்ற தனியொருவனைப் பற்றிப் பேசுகிறார்!

சாணக்கியர் அரசு என்ற கட்டமைப்பின் இயல்பு பற்றிப் பேசுகிறார்

ஆக ஒரு நல்ல கொள்கையுடைய தலைவருக்கும் வழிகாட்டும் அறிவு சொல்லும் ஆலோசகர் குழு முதல் நிபந்தனை! 

அரசன் வகுக்கும் கொள்கை குடிமக்களுக்கானதாக இருக்க வேண்டும். அந்தக்கொள்கையை நடைமுறைப்படுத்த செல்வமும், அதைப் பாதுகாக்கும் அரணாக கொள்கையைக் காப்பாற்றும் படையும் இருக்க வேண்டும்! 

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியையும் ஒரு சிற்றரசாக எடுத்துக்கொண்டு மேற்கூறிய அமைப்பை ஆராயலாம். 

கட்சித்தலைவர் - சிற்றரசர் 

அமாத்யர் - அமைச்சு - கட்சியின் ஆலோசகர்கள்

செல்வம் - கட்சி நிதி

அரண் - கட்சியின் தேர்த்தல் தொகுதி, வாக்குகளைக் காப்பாற்றும் பொறிமுறை, தேர்தல் பிரச்சாரம்

குடி - தமது தேர்தல் தொகுதி மக்கள்

படை - கட்சிக்காரர்

நட்பு - கட்சிக்கு வெளியே அவர்களுக்கு உதவக்கூடிய வெளியாட்கள், கூட்டுக் கட்சி!

கட்சித் தலைவர் தேர்தலில் வெல்ல எது மக்களின் மனதை வெல்லும் தந்திரோபாயம் என்பதை தனது மதியுரைஞர்களின் அறிவுரை கேட்டு, தனது மக்களின் மனமறிந்து உபாயம் வகுக்க வேண்டும். மக்களின் மனதை அறியாமல் தேர்தலிற்கு நிதி அவசியம் என்ற மயக்கத்துடன் தனது வேட்பாளர்களைத் தேர்வு செய்தாலோ, மக்களால் நன்கு மதிக்கப்படும், மக்களுக்கு சேவை செய்யும் வேட்பாளரை ஒதுக்கினாலோ மக்களின் நம்பிக்கையை இழக்க வேண்டிவரும். 

அதுபோல் மக்களின் அடிப்படைத் தேவைகளையும் மனதையும் வெல்லாமல், இன்பமான, அமைதியான வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் யதார்த்தத் தேவைகளுக்கு எதையும் அரசோ, கட்சியோ செய்யாமல் அரசியல் இலக்கினை நோக்கி தலைவன் முயற்சிக்கும் போது அவனிற்கு மக்களும், படைகளும் ஒத்துழைக்காது! ஆகவே மன்னன் - கட்சித்தலைவன் தனது குடிமக்களின் அடிப்படைத் தேவைகளை முதலில் புரிந்துகொண்டு அவற்றை திறம்பட நிறைவேற்றி அதன்மூலம் அவர்கள் மனதை வெல்ல வேண்டும். அதன் பின்னரே அடுத்த இலக்கு நோக்கிச் செல்ல வேண்டும்!


Saturday, August 01, 2020

தலைப்பு இல்லை

சில நாட்களுக்கு முன்னர் மலையகத்தின் முதல் தமிழ் இலக்கியம் எது என்ற கேள்விக்கு திலகர் அவர்கள் தனது அதீத வேலைப்பழுவிற்கு மத்தியில் "கோப்பி கிரிஷி கும்மி ( பாடல்கள் ) - ஆபிரஹாம் ஜோசப் என்றவர் தொகுத்தது என்றும், அச்சு 1869 ஆஷ்பரி பிரஸ் அச்சகம்" என்றும், லண்டனில் இந்த நூலின் பிரதி இருக்கிறது என்ற அபூர்வ தகவலைத் தந்தார்!

கலாநிதி க. செ. நடராசா தனது PhD ஆய்வேடாக எழுதிய ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி என்ற நூலை கொழும்பு தமிழ்ச் சங்கம் வெளியிட்டிருந்தது. இந்த நூல் 14ம் நூற்றாண்டிலிருந்து 18ம் நூற்றாண்டு வரை உருவாகிய நூல்களை வரிசைப்படுத்திய நூல், ஈழத்துப் பழந்தமிழ் இலக்கியத்தில் நல்ல ஆய்வுத் தொகுப்பு எனலாம். 

மலையகத்தின் இலக்கியப் பாரம்பரியம், எழுத்துக்கள் சார்ந்து முழுமையான ஒரு பார்வையை அறிந்துகொள்வது எப்படி என்ற கேள்விக்கு பேராசிரியர். சோ. சந்திரசேகரமும், கலாநிதி இரா. ரமேஷும் சேர்ந்து வடிவம் தந்திருக்கிறார்கள். கடந்த 150 வருடங்களுக்குள் வெளிவந்த புனைவுகள் சிறுகதை இல்லாத, 

1. சமூக, பொருளாதார, மற்றும் அரசியல், 

2. வரலாறும் இனத்துவ அடையாளம், பிரஜாவுரிமை, 

3. கல்வி, சுகாதாரம், பெண்கள், 

4. வீடு காணி மற்றும் மனித உரிமைகள், 

5. பெருந்தோட்டக் கைத்தொழில், 

6. கலாச்சாரம் மற்றும் ஆளுமை என்ற ஆறு விடயதானத் தொகுப்புகளில் தந்திருக்கிறார்கள். 

இந்த அரிய வரலாற்று ஆவணத்தை கனடா இந்திய பூர்வீக இலங்கை தமிழர் பேரவை வெளியிட்டிருக்கிறது. இன்று காலை அந்த அமைப்பின் தலைவர் ஜெ.ஜெஹிந்தராஜ் அவர்களுடன் சமூக முன்னேற்றம் பற்றிய நல்ல உரையாடலுடன் நூல் கைகளுக்கு வந்து சேர்ந்தது. 

இந்த நூலில் குறிப்பிடப்படும் நூல்கள் மாத்தளை ரோகிணி அவர்களின் உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள், ஏ. ஏ. எம் புவாஜி அவர்கள் எழுதிய மாத்தளை மாவட்ட தமிழர்களின் வரலாறும் பாரம்பரியமும் ஆகிய இரண்டு நூல்களதும் வெளியீட்டில் சிறுவயதில் தந்தையுடன் எனது தம்பி கவிதை பாட பங்கு பற்றிய ஞாபகம் இந்த நூலைப் படிக்கும் போது மீட்டக்கூடியதாக இருந்தது. 

மலையகப் பாடசாலைகளின் நூலகத்தில் இந்த நூலும் நூலில் குறிப்பிடப்பட்ட நூல்களும் இருத்தல் அவசியம், மேலும் மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியச் செயலாளர் Dr. Nishānthan Ganeshan இடம் இந்த நூலைப் பற்றி மாத்தளை பட்டதாரிகள் ஒன்றியத்தில் உரையாடுவதன் முக்கியத்துவம் பற்றி உரையாடினோம்.


தலைப்பு இல்லை

We have to be always conscious that our past does not take over present and future. 

We do belong not to the past dawns but the noons of the future!

~Inspired by Sri Aurobindo!


தலைப்பு இல்லை

விழுமியம் (Value) சமூகத்தினைக் கட்டமைப்பதற்குரிய அடிப்படை அத்திவாரக்கல்! 

உலகத்துடன் ஒத்திசைந்து வாழக்கூடிய விழுமியங்களை சமூகங்கத்தின் அத்திவாரமாக கொண்டிருக்கும் சமூகத்தின் மீதுதான் கல்வி, பொருளாதாரம் வளர்ந்து தேசம் - இனம் என்ற ஒன்று உருவாக்கப்பட முடியும்! விழுமியங்கள் பிழையாக இருக்கும் போது அந்த விழுமியங்களைத் தகர்த்தால் சமூகம் என்ற பெறுமானம் அற்றுப்போகிறது! 

பின்னர் கல்வி மேம்பாடும் அறிவு விருத்தியும், அதன்பின்பு தொழிலும் பொருளாதாரமும் மேம்பட்ட நிலையும் சமூகத்திற்குள் ஏற்படும் போது மட்டுமே அந்தச் சமூகம் அதிகாரத்தைக் கையாளும் தகுதியைப் பெறுகிறது! கல்வியை மாத்திரம் வைத்துக்கொண்டு பொருளாதாரம் இல்லாத சமூகம் தன்னை நிலை நிறுத்த முடியாது. அதுபோல் தனியே பொருளாதாரமும், செல்வமும் உள்ள சமூகம் அதை சரியான வழியில் பிரயோகித்து நல்ல நிலையை அடையவும் முடியாது. 

ஒரு சமூகம் தனக்குரிய விழுமியங்களை வரையறுத்து அந்த விழுமியங்களுக்குரிய கல்வியும், பொருளாதார நிறைவினூடாக தனக்குள் இருக்கக்கூடிய கருத்தியல் குழப்பங்களைத் தீர்த்துக்கொண்டு சம நிலைக்கு வந்து, தாம் ஒரேயொரு சமூகக்குழு மாத்திரம்தான் உலகத்திலிருக்கிறோம் என்ற கிணற்றுத்தவளை மனநிலையிலிருந்து வெளிவந்து நாம் சார்ந்திருக்கக் வேண்டிய, விலகியிருக்க வேண்டிய, எம்மைத் தாக்கம் செய்யக்கூடிய சமூகங்களுடன் இடைத்தொடர்படைந்து சமநிலையுடன் நீடித்து நிலைத்திருக்கும் ஆற்றலைப் பெற்றதன் பிறகுதான் அது அதிகாரத்தைத் திறம்பட முகாமைத்துவம் செய்யும் ஆற்றலைப் பெறும்.

தனிமனித மனநிலையில் அதியாசையும் (craving), கூட்டுச் சமூக நிலையில் அதிகாரத்தை அடைந்துவிட வேண்டும் என்ற பேரவாவும் சரியான தடுப்பு (Break) இல்லாமல் அதிவேகப்பாதையில் வாகனம் ஓட்டி விபத்து உண்டாக்கும் நிலைதான்! 

தான்சார்ந்த சமூகத்திற்குள் தொடர்பாடி கருத்தினை ஏற்றுக்கொண்டு ஒரு திசையில் செலுத்தவல்ல தலைமைத்துவமும், தெளிவும் அவசியம்! கருத்தை எதிர்த்து வாதம் செய்யும் அதேவேளை எதிர்க்கருத்தைக் கூறுபவருடன் எந்தவித தனிப்பட்ட பகையுணர்ச்சியும், தனிமனித தாக்குதலும் செய்யாமல் இருவரும் ஒரு நோக்கத்திற்காக பாடுபடும் இருவேறு பாதைகள் என்ற தெளிவு இருத்தல் அதிமுக்கியம்! 

இப்படியில்லாமல் தமக்குள்ளேயே ஒத்திசைவைப் (Harmoney) பேணமுடியாத சமூகம் அதிகாரத்தை எப்படி அடையப் போகிறது? அடைந்த பின்னர் தக்கவைத்துக்கொள்ளப்போகிறது என்ற ஆய்வு மிக அவசியமானது!


பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...