குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 30, 2018

என் மாணவன்: சாதனா உரையாடல் - 11

எமது குருவின் குருவான ஸ்ரீ கண்ணைய யோகியார் தமது குறிப்புகளில் "என் மாணவன்" என்று தலைப்பிட்டு எழுதப்பட்டது இது:
என் மாணவன்
***********************************************************
நான் இன்ன சாதி என்று நினையாதவன்.
***********************************************************
மனைவி மக்களை விட்டு சாமியாராக ஓடினால் தான் சாதனை செய்யலாம் என்று கருதாதவன்
***********************************************************
ஆசாபாசங்களைக் கொண்டவன் போலிருந்தும் உள்ளத்தில் அதைக் கொள்ளாதவன்
**********************************************************
கோப தாபம் உடையவன் போல் கருதப்பட்டும் அவைகளை அடக்கியவன்
************************************************************
பண்டிகை, விரதம், நோன்பு என்ற பெயரில் பணத்தைச் செலவழிக்காதவன்.
***************************************************************
எதைச் செய்தாலும் அதை ஏன் செய்கிறோமென்று யோசித்து செய்பவன்
*****************************************************************
தனக்கு இன்பம் தரும் கரியங்களில் மட்டும் ஈடுபடாமல் தனக்கு நன்மை தரும் காரியங்களில் ஈடுபடுபவன்
********************************************************************
மாமன், மைத்துனன், தங்கை, அண்ணன் என்ற உறவுகளுக்கு உதவி செய்வதற்காகத் தன் இறை சாதனையினை விட்டுக்கொடுக்காதவன்.
****************************************************************
வாழ்க்கையில் மற்றைய எல்லா காரியங்களை விடச் சாதனை மிக முக்கியமானது எனக் கருதி எக்காரணத்தாலும் சாதனையினைத் தவற விடாதவன்.
*************************************************************
கண்ட புத்தகங்களைப் படித்து மனதைக் குழப்பிக்கொள்ளாதவன்
******************************************************************
எத்தொழிலைச் செய்தாலும் தன் செயல்களின் மறைவில் ஓர் சக்தி இருக்கிறது என்பதனை உணர முயற்சி செய்த வண்ணமிருப்பவன்.
********************************************************************
சமயச் சழக்கெனும் சேற்றிலிருந்து துணிகரமாக மீள முயற்சிப்பவன்
********************************************************************
ரிஷி மரபின் உண்மைகளைத் தெரிந்து அதன் வழி நடப்பவன்
********************************************************************
அவனே என் மாணவன். அவனுக்குத்தான் என்னில் பொதிந்து கிடக்கும் ஆன்மீக ரத்தினங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.
- யோகி கண்ணையா -
******************************************************************
மேலே உள்ள ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளுக்குரிய உரையாடலாக எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.
இங்கு மாணவன் என்பது தன்னை அறியும் முயற்சியில் இருப்பவனும், காயத்ரியின் பேரொளியை தன்னில் அடைய முயற்சிக்கும் சாதகனையும் குறிக்கும்.
இனி முதலாவது உரையாடல்:
ஏன் தன்னை அறியும் முயற்சியில் இருப்பவனும், காயத்ரியின் பேரொளியை தன்னில் அடைய முயற்சிக்கும் சாதகன் தான் இன்ன ஜாதியை சேர்ந்தவன் என்ற நினைப்பு இருக்க கூடாது என்று கூறப்படுகிறது?

இனி முதலாவது உரையாடல்:

ஏன் தன்னை அறியும் முயற்சியில் இருப்பவனும், காயத்ரியின் பேரொளியை தன்னில் அடைய முயற்சிக்கும் சாதகன் தான் இன்ன ஜாதியை சேர்ந்தவன் என்ற நினைப்பு இருக்க கூடாது என்று கூறப்படுகிறது

எந்தவொரு மனிதனும் தனித்து இயங்க முடியாது, ஏன் இந்தப்பிரபஞ்சமே தனித்து இயங்க முடியாது, ஒன்றுடன் ஒன்று சார்ந்தே இந்த உலக, பிரபஞ்ச இயக்கம் நடைபெறுகிறது.

இந்த சார்பிற்காக மனிதன் காலத்திற்கு காலம் ஒவ்வொரு கட்டமைப்பினை ஏற்படுத்திவருகிறான். இந்தக்கட்டமைப்பில் அடிப்படை நான்கு வர்ணங்கள்.

இந்த வர்ணாசிரம ஏற்பாடு மனிதன் தனது பரிணாம முன்னேற்றத்தில் துரிதமாக முன்னேறுவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதாகும். ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் காலத்தில் ஈர்க்கும் எண்ணகளிற்கு ஏற்ப அடுத்த பிறப்பை ஈர்க்கிறான். அப்படி ஈர்த்த மனிதன் பிறப்பிற்கு பின்னர் தனது முற்பிறவிகளை மறந்து அடுத்த பிறவி எடுக்கும் போது தான் முன்பு செய்த சாதனை, முயற்சிகளை இந்தப்பிறப்பில் பயன்படுத்துவதற்கு வர்ணாச்சிரம முறை உதவியாக இருந்தது. எப்படி என்றால் ஒரு நிறுவனத்தில் எல்லா பதிவுகள் முறையாக ஒரு system இல் இருந்தால் பலகாலம் சென்று ஒருவன் வந்தாலும் அந்த system இன் துணையால் பழைய பதிவுகளைப் பார்த்து தனது வேலையை திட்டமிட்டுக் கொள்ள முடியும்.

அதுபோல் ஒருவன் பிராமணனாக இருந்து ஒருபிறப்பில் தனது ஆன்ம முன்னேற்றத்திற்கு சாதனை புரிந்து வரும் நிலையில் அடுத்த பிறப்பில் தான் முன்பிறப்பில் செய்த முயற்சிகளை தொடரமுடியாத குடும்பத்தில் பிறந்தால் முற்பிறப்பு கணக்க்குகளை சேர்க்க முடியாமல் முதலில் இருந்து முயற்சிக்க வேண்டும்.

இனி வர்ணாச்சிரம் என்பது தற்போது உள்ள ஜாதி முறையா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. சமூகம் சரியாக செயற்பட நான்கு அடிப்படை சக்திகள் தேவை அறிவு, ஆளுமை அல்லது நிர்வாகம், செல்வம்/நிதி, உடலுழைப்பு இந்த நான் கினையும் செய்யு குழுவை பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்று பிரித்து வைக்கப்பட்டார்கள்.

இன்று கம்பனிகளில் இருக்கும் Consultants, Directors, Manager, Worker எனும் அதே பாகுபாடுதான் வர்ணாச்சிரமம். இந்த வர்ணாச்சிரம பாகுபாட்டிற்கும் இறையை அறிந்து உணர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதன் அர்த்தம் பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்ற உடலக கடமைகளை செய்து கொண்டு எவரும் அவரவர் மன நிலைக்கு தக்க யோகம் செய்து ஞானம் பெற முடியும்.

ஸ்ரீமத் பாகவதத்தில் அஸ்வத்தாமனை விளிக்கும் போது பிராமண பந்து என்றே க்ருஷ்ணன் குறிப்பிடுகிறார். இதன் பொருள் பிராமணனின் உறவினன் என்பதாகும். ஏன் இப்படிக்குறிப்பிடுகிறார் என்றால் தூக்கத்தில் இருந்த் பாணவர்கள் குழந்தைகளை அனைவரையும் கொன்று, கடைசியாக கருவில் இருக்கும் அபிமன்யுவின் மகனை கொல்ல பிரம்மாஸ்திரம் ஏவிய துர்செயலை செய்ததால் பிராமண துரோணருக்கு மகனுக்கு பிறந்தாலும் பிராமணன் என்று விளிக்கமல் பிராமண பந்து எனப்படுகிறார்.

ஆக வர்ணாச்சிரம் என்பது உலகத்தின் மனித குலத்தின் பௌதீக இயக்கத்திற்காக அறிவு, ஆளுமை அல்லது நிர்வாகம், செல்வம்/நிதி, உடலுழைப்பு என்பவை நடைபெற உருவாக்கப்பட்ட அமைப்பே அன்றி அவை ஜாதி அல்ல.

மேற்குறித்த அமைப்பில் தர்மம் தவறி, முரண்பாடுகள் உருவாகி தனித்தனிக் குழுவாக மாறியபின்னர் உருவாக்கி கொண்ட பெயர்கள்தான் ஜாத், நன் கு நுணுக்கமாக பார்த்தால் ஒவ்வொரு ஜாதிக்குள்ளும் வர்ணாச்சிரமம் {அறிவு, ஆளுமை அல்லது நிர்வாகம், செல்வம்/நிதி, உடலுழைப்பு } இந்த நான்கும் இருக்கும். ஒரு கம்பனியில் இருந்து இன்னொரு கம்பனி முரண்பாட்டால் பிரிந்து உருவாகுவது போன்ற செயல்.

வர்ணச்சிரம் என்பது உலக கடமைக்கு உருவாக்கப்பட்டது. வர்ணாச்சிரமத்த்தில் கடமையும் அந்தக்கடமையை செய்யும் தர்மம் அவசியம்.

ஜாதி மனிதர்களிடையே ஒரு குழு தனித்துவமாக தம்மை அடையாளம் காட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு. எப்படி இருந்தாலும் ஒவ்வொரு ஜாதிக்குள்ளும், குழுக்களுக்குளும் வர்ணாச்சிரம் அமைப்பு இருக்கும்.


இதுவே ஜாதியிற்கும் வர்ணாச்சிரமத்திற்கும் உள்ள வேறுபாடு....

Thursday, June 28, 2018

சாதனா உரையாடல் - 10


இன்றைய உரையாடல் உபாசனை என்றால் என்ன?
உபாசனை என்பது சமஸ்க்ருதச் சொல், பொதுவாக "நான் சக்தி உபாஸகன், நான் முருக உபாசனை செய்கிறேன்" என்று சிலர் கூறுவதைக் கேள்விப்பட்டிருப்போம். இதன் படி உபாசனை என்பது இறை வழிபாடு என்று நாம் புரிந்திருப்போம். இன்றைய காலத்தில் வழிபாடு என்பது ஏதோ எமது துன்பங்களை இறைவனிடன் கொட்டுவது என்ற புரிதலிலேயே செய்யப்பட்டு வருகிறது.
உபாசனை என்பதன் அர்த்தம் உப + ஆசனம் என்பதாகும். உப என்றால் அருகில், ஆசனம் என்றால் இருக்கை என்று பொருள். ஆக உபாசனை என்றால் அருகில் இருத்தல் என்று பொருள்.
ஆக எவராவது குறித்த தெய்வத்தை உபாசிக்கிறேன் என்று கூறினால் அந்த தெய்வ சக்தியிற்கு அருகில் இருக்க முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம்.
நேற்று சாதனை என்றால் என்ன என்று பார்த்தோம். காயத்ரி சாதனை என்பது புத்தியை தூண்டும் பரம்பொருளின் பேரொளியை எம்மில் இருத்தி தியானித்து நாமும் அந்தப் பேரொளியின் ஒரு பாகமாக மாறும் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சி. இதற்கு முன்னர் குறித்த தெய்வசக்தியுடன் அருகில் இருந்து, அந்த தெய்வ சக்தியின் பண்புகளை நன்றாக தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா. அதற்கான முயற்சிதான் உபாசனை.
ஒரு தொழிலை செய்வதற்கு முன்னர் அந்த தொழில் சித்தி பெற்ற ஒருவருக்கு அருகில் இருந்து அவர் எப்படி ஒவ்வொரு விஷயத்தையும் செய்கிறார் என்பதை பார்த்து பழகி, பின்னர் அந்தப்பண்புகளை எம்மில் உருவாக்கின் பின்னர் அந்தத்தொழிலை நேர்த்தியுடன் செய்கிறோம் அல்லவா.
இதைப்போல் இறை ஆகவிரும்பும் ஒருவன் இறைவனிற்கு அருகில் இருந்து இறைவனின் பண்புகளை அறிந்து, புரிந்து எப்படி தன்னில் ஏற்பது என்பதை புரிந்துகொள்ளும் பயிற்சிதான் உபாசனை.
இப்படி நன்றாக புரிந்தபின்னர் அந்தப்பண்புகளை இலட்சியமாக வைத்து அதை அடையும் முயற்சியில் வெற்றி கண்டால் அவன் சாதகன்.
ஆக காயத்ரி உபாசனையில் ஆசமனம், நியாச சங்கல்பம், நியாசங்கள், பிரணாயாமம், ஆவாகனம், ஸ்தாபனம், சந்தன உபசாரம், குங்கும உபசாரம், அட்சதை, தாம்பூலம், பழங்கள், கற்பூர தீபம், நைவேத்தியங்கள், தியான சுலோகம், மந்திர ஜெபம், போன்ற அனைத்தும் எம்மில் இறை சக்தியை ஏற்கச்செய்ய அந்த இறை சக்திக்கு அருகில் இருந்து அந்தப்பண்புகளை நாம் பெறும் பயிற்சியே!

சாதனை உரையாடல் - 09

நேற்றைய உரையாடல் சாதனை என்றால் என்ன என்பது?
சாதனை என்பதன் சமஸ்க்ருத அடிச்சொல்லின் அர்த்தம் இலட்ச்சியத்தின் மீதான அர்ப்பணிப்பு என்று பொருள்.
அதாவது ஒருவன் ஒரு இலட்சியத்தை இலக்கு வைத்து அதற்காக தன்னை அர்ப்பணிப்பு செய்து முயற்சி செய்பவன் சாதனை செய்பவன் ஆகிறார்.
பொதுவாக சாதித்துவிட்டான் என்று கூறுவதை கேட்கிறோம் அல்லவா, அதன் பொருளும் அவன் வைத்த இலக்கினை அடைந்து விட்டான் என்பதுதான்.
காயத்ரி சாதனை என்றால் காயத்ரியை இலட்ச்சியமாக வைத்து அர்ப்பணிப்புடன் செயல்புரிதல் என்று பொருள்.
காயத்ரி என்பது புத்தியைத் தூண்டும் பரம்பொருளின் பேரோளியை நம்மில் இருத்தி தியானிப்பது.
எனவே காயத்ரி சாதனை என்பது புத்தியை தூண்டும் பரம்பொருளின் பேரொளியை எம்மில் இருத்தி தியானித்து நாமும் அந்தப் பேரொளியின் ஒரு பாகமாக மாறும் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சி.
ஆகவே எவராவது சாதனை செய்கிறோம், சாதகர்கள் என்றால் இலட்சியத்திற்கான அர்ப்பணிப்புடன் செயல்புரிபவர்களையே குறிக்கும்.
அடுத்தது இந்த அர்ப்பணிப்பு ஒரு நாளில் மட்டும் இருப்பதால் அதனால் இலட்சியம் அடையப்படுவதில்லை. இந்த இலட்சியத்திற்கான அர்ப்பணிப்பு தினசரி, வாழ் நாட்கள் முழுவதும், பலபிறவிகளுக்கும் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். ஆகவே சாதனை என்பது தொடர்ச்சியான இலட்சியத்திற்கான அர்ப்பணிப்பு.
அர்ப்பணிப்பு என்பது சிரத்தையால் மட்டுமே வரும். ஆகவே சாதகர்களின் முக்கிய பண்பு சிரத்தை.
இங்கு சாதனை என்ற வார்த்தையில் சாதகர் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டியவை " இலட்சியத்திற்கான அர்ப்பணிப்பு"
இங்கு இலட்சியம் புத்தியைத் தூண்டும் பரம்பொருளின் பேரோளியை நம்மில் இருத்தி தியானிப்பது, அதன் மூலம் அந்த தெய்வீக பண்புகளை எம்மில் உருவாக்குவது, மற்றவர்களும் அதைப்பெற எம்மால் இயன்ற முயற்சிகளை செய்வது.

Wednesday, June 27, 2018

சாதனா உரையாடல் - 08

கடைமாணாக்கருக்குரிய கடைசி இரண்டு ஒப்பீடு எருமையும் வடிகட்டியும்...

எருமை தாமஸ குணத்தின் குறியீடு, மரணதேவனின் வாகனம். எருமையின் இயல்பு சோம்பித்திரிதல், சுத்தம் பாராமை, சேற்றில் உழலல்,

தேவி மகாத்மியத்தில் மகிஷாசூரன் என்று எருமை அரக்கன் உதாரணம் கூறப்பட்டுள்ளான், இதுவும் எமது மனதின் நிலையே. உயர்ந்த விஷயத்தைப் பற்றி கேள்விப்பட்டால் அதை தம்மால் செய்ய முடியாது என்றும், உயர்ந்த விஷயத்தில் ஈடுபடச்சொன்னால் எதுவித முயற்சியும் எடுக்காமல் தாம் இருக்கும் சேற்றின் நிலையையே பெரிதாக மனதில் எடுத்துக்கொள்ளும் மன நிலை உள்ளவர்கள் எருமையால் உவமானப்படுத்தப்படுகிறார்கள். உதாரணமாக வாழ்க்கையில் நிறைய பிரச்சனை இருக்கிறது அதற்கு தினசரி ஒழுங்காக சாதானை செய்யுங்கள் என்று கூறினால் தமக்கு வேலைப்பளு அதிகம், தமக்கு இன்னும் நேரம் வரவில்லை என்று புலம்புவதெல்லாம் மனதின் தாமஸ நிலை. இதுவே எருமையாக குறிக்கப்பட்டுள்ளது. தாம் இருக்கும் நிலையில் இருந்து (சேற்றில் இருந்து) உயர்ந்த நிலைக்கு (தூய நீரில் நீராட) வர எந்த முயற்சியும் இல்லாமல் தாமிருக்கும் நிலையையே பெரிதாக எண்ணி உரையாடும் முட்டாள்தன மன நிலையே எருமை.

இந்த எருமை மன நிலையை அழிப்பதையே தேவிமகாத்மியம் மகிஷாசூர சம்ஹாரம் என விளக்குகிறது. ஆக இந்த மன நிலையிலேயா நாம் இருக்கிறோம் என்று சரிபார்த்துக்கொள்வது ஒவ்வொரு மாணவனதும் சாதகனதும் கடமையாகும்.

அடுத்தது நெய்யரி என்ற வடிகட்டி, இதன் இயல்பு நல்ல நுண்மையான தூய்மையான பதார்த்தத்தை விட்டுவிட்டு அசுத்தத்தையும், தேவையற்றதையும் எடுத்து வைத்துக்கொள்ளும். இது அன்னத்திற்கு எதிர் உவமானம். பலர் தாம் கற்க வேண்டியவற்றை விட்டுவிட்டு தமது அறிவிற்கு உதவாத தகவல்களை சேமித்து வைத்துக்கோள்வார்கள். உதாரணமாக குரு சொல்லித்தரும் வித்தையை, ஞானத்தை ஆராய்ந்து அது தனக்கு பயன்படுகிறதா என்று முயற்சி செய்யாமல் குருவின் பௌதீக விஷயங்களை அதிகம் ஆராய்ந்து தன்னை குழப்பிக்கொள்ளும் மாணவர்கள் இந்த வகையினர்.

ஆக இந்த உரையாடலில் ஒரு வித்தையை கற்க வேண்டும் என முயற்சிக்கும் மாணவன் தனது மனப்பண்பினை எப்படி வைத்திருக்க வேண்டும் என்று உவமானங்கள் மூலம் ஆழமாக பார்த்திருக்கிறோம். இந்தப்பதிவுகள் எதிர்கால உரையாடலுக்கு மிக அவசியமானவை. ஆகவே மீண்டும் மீண்டும் படித்து நன்கு புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

சாதனை உரையாடல் - 07

இனி கடைமாணாக்கர் ஒப்பீடு

ஓட்டைக்குடம், ஆடு, எருமை, அல்லது வடிகட்டி போன்றவர்.

குடத்தின் இயல்பு நீரை ஏற்றல், அதுபோல் மாணவனின் இயல்பு அறிவை ஏற்றல், இப்படி அறிவை ஏற்று நிறைந்த நிறைகுடம் பின்னர் தளும்பாமல் தன்னிலையை பாதுகாத்து தேவையான நேரத்திலும் தேவையான சூழலுக்கு தன்னில் உள்ள அறிவை பயன்படுத்தும் இயல்பே நன்மாணாக்கருக்குரியது. இங்கு ஓட்டைக்குடத்தை கூறி நிறைகுடத்தை நன்மாணாக்கருக்கு மறைமுக உவமை கூறப்பட்டுள்ளது. இப்படி சுவாரசியமாக விடுகதை மன நிலையில் கற்பதே பண்டைய குருகுல முறை. ஆனால் சிலர் தாம் சிறிது அறிந்தவுடனேயே தாம் முழுமை அடைந்துவிட்டதாக மனதின் மாயையில் சிக்கி தாம் மற்றவர்களுக்கு வழிகாட்ட, கற்பிக்கத் தொடங்கி விடுவார்கள். இதனால் மனம் மேலும் விரிந்து முழுமையான பண்பைப் பெற்றும் மேலும் வளர முடியாமல் போய்விடும். பொதுவாக சாதனை செய்யும்போது ஏற்படும் அனுபவத்தில் தம்மை உயர் நிலை அடைந்து விட்டதாக கற்பனை செய்யும் நிலை அனைவருக்கும் ஒரு கட்டத்தில் வரும். அந்த நிலையை தாண்டி பசுவைப்போல், அன்னத்தைப்போல், நிறைகுடமாக மனதை வைத்திருக்க தெரிந்தவர்களுக்கு மாத்திரமே மேலும் முன்னேற முடியும்.

அடுத்த உதாரணம், ஆடு, ஆட்டிற்கு பசுவைப்போல் பெரிய இரைப்பை இல்லை, அதனால் அசைபோட முடியாது. அதுபோல் கடைமாணாக்கர்கள் உயர்ந்த அறிவை பெறுவதற்கு தமது மனதை விசாலப்படுத்திக்கொள்வதில்லை. அதேவேளை ஆட்டிற்கு காணும் செடியெல்லாம் சுவைக்க ஆசை, அதுபோல் தமது மனதை விசாலப்படுத்தி கற்றலை ஆழமாக செய்ய தம்மை பண்படுத்தாமல், எல்லா நூற்களையும் நுனிப்புல் மேய்ந்துகொள்ளும்.

மேலும் ஆடு துள்ளித்திரியும், அமைதியாக இருக்காது, அதுபோல் சிறிது தெரிந்து கொண்டு தமக்கு எல்லாம் தெரியும் என்பது போல் தம்மை முன்னிறுத்திக்கொள்ளும் மாணவர்களை இப்படி குறிப்பிடப்படுகிறார்கள்.

மேலும் ஆடு தனது குழுவிற்குள் சக ஆண் ஆடுகளுடன் முட்டிக்கொண்டு தமது பலத்தை நிருபிக்க முயலும். இதுபோல் கடை மாணாக்கர்கள் தமது சகமாணாக்கர்களுடன் தாம் அறிவில் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என நிருபிக்க எப்போதும் முட்டிக்கொள்வார்கள்.

ஆக கடை மாணாக்கர்கள் இயல்பு ஓட்டைக்குடம் போன்று முழுமையாக கற்கும் முன்னர் கொட்டிவிடும் மனப்பண்பையும், அதனால் ஆணவமாக நடக்கு மனப்பண்பை ஆட்டின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையே குரு நாதர் அகத்தியர் ஞானத்தில் "மதிகெட்டு விள்ளாதே மகிழ்ந்திடாதே" என்ற வரிகளில் உபதேசித்துள்ளார்.

அடுத்த பதிவில் எருமையும், நெய்யரியும் பற்றிய விளக்கம்....

சாதனா உரையாடல் - 06

இனி இடைமாணக்கர்,

இடை மாணக்கர்- நிலம் அல்லது கிளி போன்றவர்கள்.

நிலம் தருவதை வாங்கிக்கொள்ளும் தனக்கு உகந்ததாக இருந்தால் மட்டும் வளர்க்கும், தனக்கு உகந்தது அல்ல என்றால் வளம் குன்றி தனது நிலையை இழந்தும் விடும். நிலத்தினை சரியாக முகாமைத்துவம் செய்ய வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே பலன் தரும். பலன் தரவேண்டிய நிலமாக்க வேண்டும் என்றால் முயற்சி அவசியம். நிலத்தை உழவேண்டும், உரமிடவேண்டும். குறிப்பாக நிலத்தை பண்படுத்தும் உழவன் இருக்க வேண்டும்.

இதுபோல் இடைமாணாக்கர் என்பவர்கள் அறிவினை பெற்று தலைமாணாக்கர் போன்று வரக்கூடிய அனைத்து தகுதியும் உள்ளவர்கள் ஆனால் கட்டாயம் குருவின் உதவி தேவை. குரு உழுது, வரப்புக்கட்டி, நீர்பாய்ச்சி, உரமிட்டால் தகுந்த பலன் உண்டு. இல்லாவிட்டல் காடு மண்டிவிடும். சாதனையிலும் குருவின் தூண்டுதல் கட்டாயம் அடிக்கடி அவசியம் தேவைப்படும் நிலை உள்ளவர்கள் இடை மாணாக்கர் வகையினர்.

இந்த இடை மாணாக்கரது மற்றுமொரு இயல்பு கிளி போன்றவர்கள். கிளி சொல்லியதை மீண்டும் சொல்லும் இயல்பு உள்ளது. குரு சொன்ன விதிகளை இது எதற்காக, எங்கு, யாருக்காக சொன்னது என்றெல்லாம் சிந்திக்காமல் அப்படியே தாமும் கடைப்பிடித்து மற்றவர்களுக்கும் அதையே கூறிக்கொண்டு இருப்பவர்கள். இதற்கு நல்ல உதாரணம் குரு தனக்கு தினசரி 108 தடவை மந்திர ஜெபம் செய்ய சொல்லியுள்ளார் என்பதால் தான் கூறும் அனைவருக்கும் நீங்களும் 108 தடவை செய்யவேண்டும் என்று கிளிப்பிள்ளை போல் ஒப்புவிப்பர். ஆனால் அவர் சொல்லும் நபர் அந்த அளவு சொல்ல முடியாதவராகவோ அல்லது அதற்கு மேல் கட்டாயம் சாதனை செய்யவேண்டியவராகவோ இருப்பர். இப்படி தனது கற்றலில் தாம் எதைச் செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்பதை விளங்காமல் குரு சொன்னதைச் செய்கிறோம் என்று செய்பவர்கள் கிளிப்பிள்ளை போன்றவர்கள்.

ஆக இடைமாணாக்கர் என்பவர்கள் குருவின் முயற்சியாலும், தூண்டலாலும் முனனேறக்கூடியவர்கள் என்பதால் நிலம் என்ற உவமையும், ஏன் கற்கிறோம், எதற்கு கற்கிறோம் என்பது தெரியாமல் குரு சொல்லுவதை அப்படியே செய்வதால் கிளிப்பிள்ளைக்கு உதாரணம் காட்டப்பட்ட்டனர்.

அடுத்த பதிவில் கடை மாணாக்கர்....

Tuesday, June 26, 2018

சாதனா உரையாடல்கள் -04

இன்றைய உரையாடல் (26/06/2018) மாணவரின் பண்புகள்.

பண்புகள் என்பது ஒரு விஷயத்தில் மனம் எப்படி இயங்குகிறது என்பதாகும்.

மாணவன் என்றால் அறிந்து கொள்பவன் என்று பொருள்.

எதிப்பற்றியாவது அறியவேண்டிய தீராத்தாகம் கொண்ட எவரும் மாணவர்தாம்.

இப்படி விஷயத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்று தீராத்தாகம் கொண்ட மாணவர்களை அவர்களின் பண்புக்கு ஏற்ப மூன்று வகைக்குள் பிரிக்கிறார் பவணந்தியார்.

அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.

அதாவது
1. தலை மாணாக்கர் - அன்னம் அல்லது பசு போன்றவர்

2. இடை மாணக்கர்- நிலம் அல்லது கிளி போன்றவர்கள்

3. கடைமாணாக்கர் - ஓட்டைக்குடம், ஆடு, எருமை, அல்லது வடிகட்டி போன்றவர்.

தாம் அறிந்த விஷயத்தை உயர்விற்கும், மற்றவர்களுக்கு பிரயோசனமான வழியில் பயன்படுத்தும் மாணவர்களையே தலை மாணாக்கர் என்று கூறுவர். இத்தகையவர்களின் பண்பு இரண்டு விலங்குகளால் குறித்துக்காட்டப்பட்டுள்ளது

முதலாவது, அன்னம், அன்னம் என்பது உயர்ந்த ஞானத்தின் குறியீடு. அன்னை காயத்ரியின் வாகனமாக குறிப்பிடப்படுவது, புழு பூச்சி போன்ற எதையும் உண்ணாமல் தனக்கு தேவையான உயர்ந்த விஷயத்தை மாத்திரம் எடுத்துக்கொள்ளும். எப்போதும் உயர்ந்ததுடன் மாத்திரம் தொடர்பினைப்பேணும். ஆக எந்த அறிவையும் உயர்ந்த நோக்கங்களுக்கு பயன்படுத்தும் பண்பும், தனது மனதை உயர்ந்த விஷயங்களில் எப்போது ஈடுபடுத்திக்கொண்டு இருப்பதும், நல்லவற்றை மாத்திரமே கிரகித்து தன்னுள் ஜீரணித்துக்கொள்வதும் தலை மாணாக்கரது பண்பு. மேலும் அன்னம் வெண்மையானது, வெண்மை தூய்மையின் அடையாளம், ஆகவே தலை மாணாக்கரது மனமும் தூய்மையாக இருக்க வேண்டும். அன்னம் அழகியது, பார்ப்பவர் மனதை மயக்கும் நளினமும், நடையும் உடையது. அதுபோல் தலைமாணாக்கன் அறிவு மற்றவர்களை ஈர்க்கும் அழகுடன் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

இரண்டாவது, பசு, பசு எப்போதும் புற்களை மேய்ந்து கொண்டிருக்கும், ஆனால் உடனடியாக தனது சமிப்பாட்டிற்கு அனுப்பி விடாது. முன் இரைப்பையில் சேர்த்து பின்னர் நன் கு அரைத்து தனது சமிபாட்டிற்கு அனுப்பும். அதுபோல் தலைமாணாக்கார் கிடைக்கும் அறிவை எல்லாம் மனதில் கொட்டிக்கொண்டு பின்னர் புத்தியால் அசைபோட்டு தமக்கு தேவையானவற்றை ஜீரணித்துக்கொள்வர். இப்படி ஜீரணித்துக்கொண்ட உணவு உடலை போசிக்கும் பாலாக, தயிராக, நெய்யாக தரும். ஜீரணிக்காத உணவு சாணமாக பயிர்களை வளப்படுத்தும். ஆக பசுவிற்குள் செல்லும் உணவு எதுவும் வீணாகாமல், அதேவேளை தனக்கு தேவையானதை ஏற்று உடலையும் போசித்து, அதற்கு மிகுதியானதை பாலாக மற்றவர்களையும் போசித்து, தனக்கு தேவையில்லாததையும் மற்றவர்களுக்கு பலன் தரும் உரமாக மாற்றி தரும் பண்பு பசுவிற்கு உண்டு.

இதைப்போல் தலைமாணாக்கரும் தமக்கு கிடைக்கும் அறிவில் தமக்கு தேவையானதை ஜீரணித்து அந்த அறிவை மற்றவர்களுக்கு பயன்படும் அறிவாக உபயோகிப்பர். அதேவேளை தமக்கு தேவையில்லாத அறிவை கிடைத்தால் அது பயன்படக்கூடியவர்களுக்கு கிடைக்கச்செய்வர்.

ஆக அன்னம் பசு இவ்விரண்டு உதாரணமும் மற்றவர்களுக்கும், உலகிற்கும் பயன்படக்கூடிய வகையில் அறிவை பாவிக்கும் தலைமாணக்கருக்கு உதாரணமாக கூறப்பட்டது.

சாதகர்களுக்கு தலைமாணாக்கர் என்பதன் பொருள் என்னவென்பது விளங்கியிருக்கும் என்று நம்புகிறோம்.

இன்று அதிக பயணம் என்பதால் இத்துடன் இந்தப்ப்பதிவை முடித்துக்கொண்டு நாளை மற்ற இரு வகை மாணாக்கருக்குரிய பண்புகளை விளக்குகிறோம்.

நன்றி

ஸ்ரீ ஸக்தி சுமனன்

சாதனா உரையாடல் - 03

இன்றைய (25/06/2018) உரையாடல் மனம் பற்றியது.

மனிதன் என்பதன் பொருளே மனம் உள்ளவன் என்பதுதான். எந்தமொழியில் மனிதன் என்பதை மொழிபெயர்ந்தாலும் மனம் என்பது தொடர்புறும்.

மனம் என்றால் என்ன என்பதற்கு பலரும் எண்ணங்களின் தொகுப்பு எனப்பொருள் பட பதில் கூறியிருந்தார்கள். அந்தப்பதில் உண்மை என்றாலும் மீண்டும் எண்ணம் என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது.

சாதகன் தான் ஆன்ம பௌதீக முன்னேற்றம் பெற மனத்தையும் அதன் இயக்கத்தையும் புரிந்து கொள்வது மிக அவசியமானது. இந்தவகையில் மனம் என்றால் என்ன என்ற கேள்விக்கு பொருத்தமான விளக்கம் மனம் ஒரு சக்தி என்பதாகும். சக்தியாக மனதைப் புரிந்து கொள்வதில் மனதின் பல்வேறு பரிணாமங்களை அறிந்து கொள்ளலாம்.

1. சக்தியை ஆக்கவோ அழிக்கவோ முடியது. அதுபோல மனதில் தோன்று எண்ணங்கள் அழிவதில்லை.
2. சக்தி சலனிக்கும்போது அதிர்வினை உண்டாக்கும், அதுபோல் மனச்சக்தி சலனிக்கும்போது எண்ணங்கள் என்ற அதிர்வு உண்டாகும்.
3. சக்தியை ஒடுக்கினால் ஆற்றல் உண்டாகும், அதுபோல் மனதை ஒருமுகப்படுத்தினால் ஆற்றல் உண்டாகும்
4. பௌதீக சக்திகள் ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாற்றக்கூஅடியவை, அதுபோல் மனச்சக்தி அன்பு, பரிவு, பாசம், கருணை, கோபம், காமம், க்ரோதம் எனும் உணர்ச்சிகளாக மாறக்கூடியது.
5. பௌதீக சக்திகளை நல்ல உட்கட்டுமானங்கள் மூலம் எமது தேவைக்கு முன்னேற்றங்களுக்கு பயன்படுத்தலாம். அதுபோல் மனச்சக்தியை சாதனைமூலம் எமது தேவைகளுக்கு பயன்படுத்த முடியும்.
6. சக்தியை அடக்கினால் அழுத்தம் அதிகமாகி வெடித்து சிதறும், அதுபோல் மனதை அடக்க முடியாது, அடக்கினால் அழுத்தம் உண்டாகி உடல் பாழ்படும்.
7. சக்தியை கட்டுப்படுத்தி, ஒழுங்கு படுத்தி எமது தேவைகளுக்கு உபயோகப்படுத்தலாம். அதுபோல் மனச்சக்தியை கட்டுப்படுத்தி அரிய பல காரியங்களை சாதிக்கலாம்.
8. சக்தியை கண்களால் பார்க்க முடியாது, இயக்கத்தின் மூலமே அறியலாம் அதுபோல் மனதை அதன் இயக்கத்தின் மூலமே அறியலாம்.

ஆக மனம் என்பது ஒரு சக்தி, அதிலும் ஒளி, ஒலி, வெப்பம் போன்ற பௌதீக சக்தியல்ல, சூக்ஷ்மமான சக்தி என்ற புரிதல் சாதகர்களுக்கு மற்ற எல்லா தத்துவ விளக்கங்களுக்கும் முன்னராக புரிய வேண்டியது.

மனம் சக்தி என்ற அடிப்படை புரிந்தால் நாம் வீணான ஆணவத்தால் மனத்துடன் சண்டை போட மாட்டோம். எவராவது மின்சக்தியுடன் தமக்கு பிடிக்கவில்லை என்று கோபப்படுவாரகளா? அதுபோல் மனம் சக்தி என்று உணர்ந்தவர்கள் மனத்துடன் சண்டை பிடிப்பதை நிறுத்தி விட்டு மனதை எப்படி தனது முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவது என்று சிந்திக்க ஆரம்பிப்போம்.

ஆகவே மனதை பயன்படுத்த விரும்பும் சாதகர்கள் மனம் ஒரு சக்தி என்பதை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள்.

இனி நீங்கள் மனதிற்கு கொண்டிருக்கும் விளக்கங்களை மனம் என்பது ஒரு சக்தி என்ற அடிப்படையில் ஒப்பிட்டுப்பாருங்கள்.

அந்தசக்தியை வசப்படுத்த என்ன செய்யலாம் என்பதே சாதனை, உபாசனை, யோகம், மந்திர ஜெபம் எல்லாம்.

Sunday, June 24, 2018

சாதனா உரையாடல்கள் - 02

சாதகர்களே,
இன்றைய கேள்வி (24/06/2018)
சாதகருக்கு உடல் ஏன் அவசியம்?
இதன் நோக்கம் சாதனையில் உடலின் அவசியத்தை அறியும் அதே வேளை தேவைக்கதிகமாக உடலில் அதிகம் கவனம் செலுத்துவதால் சாதனையின் உயர்ந்த இலக்கினை அடையமுடியாமல் போய்விடலாம் என்ற உண்மையினையும் விளங்குவது.
இதற்கு திருமூலர் இரண்டு பாடல்கள் பாடமாக தந்துள்ளார்.
உடம்பார் அழியில் உயிரார் அழிவர் 
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் 
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.” (724)

இதன் பொருள் உடம்பினை அழியவிட்டால் உயிர் வளரும் வழியும் அழியும், இப்படி உயிர் வளராவிட்டால் மெய் ஞானம் கிட்டவும் மாட்டாது, அதனால் உடலை வளர்க்கும் உபாயம் அறிந்து, உடலையும் வளர்த்து, உயிரையும் வளர்த்தேனே.
அடுத்த பாடலில் (725)
உடம்பினை முன்னம் இழுக்குஎன்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புள்ளே உத்தமன் கோவில் கொண்டான்என்று
உடம்பினை யான்இருந்து ஓம்புகின் றேனே.

பலர் உடலை விட்டுவிட்டு இறையை அடையமுடியும், உடல் தாழ்ந்தது என்றெல்லாம கூறுவதை கேட்டு அதை இழுக்கென்று எண்ணியிருந்தேன், பின்னர் தெரிந்தது அதற்குள்ளேயே நான் தேடும் பொருள் உள்ளேயே இருக்கிறது என்பதையும், அந்த உத்தமன் குடிகொள்ளும் கோயில் என்பதையும் அறிந்து கோண்டு உடலைப்பாதுகாக்கிறேன் என்றார்.
இந்த இரண்டு பாடல்களும் சாதகர்களாக உடலைப்பற்றிய பார்வை எப்படி இருக்க வேண்டும் என்று இந்த இரண்டு பாடல்களும் தெளிவைத்தருகிறது.
தெளிவாக புரியவேண்டியது:
1) உடல் இறைவன் அல்ல, 
2) உடல் இறைவன் வசிக்கும் வீடு
3) உடலில் இருந்துதான் உயிர் வளரவேண்டும். 
4) சாதகர் உடலை எப்போதும் தாழ்ந்ததாக நினைக்கக்கூடாது. 
5) உடல் மட்டும் இறைசக்தியை ஈர்க்கும் சாதனம் அல்ல, மனதையும், உணர்வையும் சரியாக இயக்கினால் மட்டுமே உயிர் வளரும். ஆகவே உடலுக்கு அதீத முக்கியத்துவம் தந்து சாதனையில் முன்னேறாமல் நின்று விடக்கூடாது.

மேற்கூறியவை ஒரு சாதகன் தெரிந்து இருக்க வேண்டியவை.
இனி உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்று பார்ப்போம்.
1) உடல் மனதால் ஆளப்படுகிறது, ஆகவே மனச்சம நிலை உடலாரோக்கியத்திற்கு அவசியம்.
2) உடல் உணவால் ஆளப்படுகிறது ஆகவே உணவில் சம நிலை அவசியம்
3) உடல் மூச்சால் ஆளப்படுகிறது, ஆகவே சரியாக சுவாசிக்கத்தெரிதல் அவசியம்
4) உடல் சுற்றுச்சூழலால் ஆளப்படுகிறது, ஆகவே சுத்தமான சூழலில் வசித்தல் அவசியம். 
5) உடல் ஓய்வினால் புத்துயிர் பெறுகிறது, ஆகவே உடலிற்கு தகுந்த ஓய்வு தருதல் அவசியம். 
6) உடல் மனம், எண்ணங்கள், உணவு, ஓய்வு ஆகியவை குறிப்பிட்ட ஒழுங்கில் இருக்கும் போது ஆரோக்கியமாக இருக்கிறது. ஆகவே தினசரி உணவில், எண்ணத்தில், ஓய்வில் ஒழுங்குமுறை அவசியம்.

இவற்றைக்கடைப்பிடித்தால் இவையே உடல் வளர்க்கும் உபாயம். இது உயிரை வளர்க்கும் உபாயத்திற்கு இட்டுச்செல்லும்.
அடுத்த உரையாடலில் மனம் பற்றி ஆழமாக இணைந்து சிந்திப்போம்.

சாதனா உரையாடல்கள் - 01

இன்றைய உரையாடலில் நோக்கம்: 23/06/2018

சாதனையின் அடிப்படையை யதார்த்த ரீதியாக புரிந்துகொள்வதற்குரிய தெளிவினை சாதகர்களுக்கு உருவாக்குதல்.

சாதகர்கள் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டியது வெறுமனே மந்திர ஜெபம் செய்வதால், எண்ணிக்கையை பூர்த்தி செய்வதால் நாம் சாதனையில் முன்னேறுகிறோம் என்ற எண்ணம் எவருக்கும் ஏற்படக்கூடாது என்பதாகும்.

மந்திர ஜெபமும் சாதனையும் எமது உடல், மனம் ஆகிய இரண்டையும் தூய்மைப்படுத்தி வலிமைப்படுத்தும் சாதனங்கள். இப்படி தூய்மையடையும் உடல் மனம் ஆகியவற்றை எப்படி நாம் பயன்படுத்துகிறோம் என்பதில் காலம் சேர்கிறது.

உதாரணமாக சாதனையால் தூய்மையுற்ற மனம், உடல் ஆகிய இரண்டையும் எந்தச் செயல்களில் தினசரி வீணாக்குகிறோம் என்பதை விழிப்புணர்வுடன் அவதானித்தல் ஒரு சாதகனின் அவசியமான பண்பாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் எவ்வளவு சாதனை செய்தாலும் ஓட்டைக்குடத்தில் ஊற்றும் நீர்தான்!

எனவே சாதகன் தனது நேரத்தை தினசரி சரியாக திட்டமிட்டு பயன்படுத்துவது மிக அவசியமான ஒன்று. இப்படி செய்யாத சாதகர்கள் சாதனையால் முழுமையாக பயன் எதையும் பெறமுடியாது.

ஆகவே ஒவ்வொரு சாதகனுக்கும் 24 மணி நேரம் தினசரி தரப்படுகிறது. இதை சரியாக தமது உடல், மன, ஆன்ம முன்னேற்றத்திற்கும் பௌதீக வள, வாழ்வதற்கான பணத்தினை பெறுவதற்கு சரியாக திட்ட மிட்டுப்பயன்படுத்த வேண்டும்.

இன்றைய சூழலில் பணமும், தேவையான வளங்களும் இன்றி உலக வாழ்க்கை இல்லை. ஆகவே அதை மறுக்கும் சாதகனால் மன நிம்மதியாக தனது வாழ்க்கையை தொடரமுடியாது. ஆகவே தன்னிடம் இருக்கும் பணத்தையும், வளங்களையும் எப்படி சரியாக பயன்படுத்துவது என்பது பற்றி சாதகன் திட்டமிட்டு செயலாற்றவேண்டும்.

இப்படி ஒரு சாதகன் உடல், மனம், நேரம், பணம் ஆகிய நான் கினையும் சரியாக திட்டமிட்டு சரியான வழியில் நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துவத சாதனையின் முதல் படி.

ஆகவே சாதகர்கள் அனைவரும் இதனை நன்றாக மனதில் உள்வாங்கிக்கொண்டு தமது சாதனையை தொடர குருமண்டலத்தை பிரார்த்திக்கிறோம்.

அடுத்த உரையாடலில் ஒவ்வொன்றை பற்றிய விரிவாக உரையாடுவோம்.

Wednesday, June 20, 2018

உலகசேவகன் - 02


பூஜ்ய குருதேவர் ஸ்ரீ ராம்சர்மா ஆச்சார்யா அவர்கள் உலகசேவகனிற்கு இருக்க வேண்டிய உண்மைப்பண்புகளும், பழக்கவழக்கங்களும் பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய இலஞ்சமும், சுய நலமும், தன்னைப்பற்றிய சிந்தனை மட்டுமே நிறைந்த சமூக நிலைமையில் சமூக சேவையை விட தன்னுடைய நலம் மிக முக்கியமானது. இப்படியான காலகட்டத்தில் குருதேவரின் சிந்தனைகள் அடித்தூண்களாக இருந்து உதவக்கூடியவை. இவை ஒருவனை ஆன்ம முன்னேற்றத்துடன், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கருணையுடன் சமூகத்தில் வாழ உதவி செய்யும். இந்த ஒழுங்கு விதிகள் எந்தவொரு சமூக சேவை நிறுவனத்திற்கும் பொருத்தமானது.

குருதேவர் எந்தவொரு சமூக சேவகனும் நேர்மறையான எண்ணத்துடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். இந்தக் கொள்கைகளை, சிந்தனைகளை தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலம் ஒருவன் சுய திருப்தியையும், சமூகத்தின் மரியாதையையும், தெய்வ ஆற்றலையும் பெறமுடியும். இந்த வழிகாட்டலை ஒருவன் கடைப்பிடிப்பதன் மூலம் ஒருவன் சமூகத்தையும், தேசத்தையும், இந்த யுகத்தையும் கட்டமைப்பதில் பெரும் பங்கு வழங்கமுடியும்.

புத்தி விழிப்படையச் செய்த சாதகர்களுக்கு,

பூஜ்ய குருதேவர் தனது சாந்திகுஞ்ச் ஆசிரமம் மனிதன் ஆளுமை வளர்ச்சிக்கான ஒரு மையமாக இருக்கவேண்டும்  என சங்கல்பித்து தனது சமூக சேவகர்களை பண்படுத்துவதற்காக கீழ்வரும் ஏழு ஒழுகங்களை வகுத்தார். இதனால் புதிய யுகத்திற்கான மாற்றம் வினைத்திறனாகனவும், ஆற்றலுடனும் நடைபெறும் என நம்பினார். அதற்காக கீழ்வரும் வழிகாட்டலை வழங்கியுள்ளார்.

புத்தி விழிப்படைந்த சாதகர்கள் எப்போதும் தமது வாழ்க்கையில் அவர்களின் முன்னேற்றத்திற்கான முயற்சி, மற்றது சமூகத்திற்கான முயற்சி ஆகிய இருவித பொறுப்புகளை கொண்டிருத்தல் வேண்டும். அவர்கள் தமது ஆளுமையை அதிக ஒழுங்கமைக்கப்பட்ட, ஆற்றல் உள்ள, அனைவரும் விரும்பக்கூடிய வகையில் கொண்டிருத்தல் அவசியம். இதைப்பெறுவதற்கு நீண்ட, தொடர்ச்சியான முயற்சியும், சில விஷேட திறமைகளும் அவசியமாகும்.

ஒவ்வொரு சாதகனும் கீழ்வரும் விதிகளை மீண்டும் மீண்டும் படித்து தனது தினசரி பயிற்சியில் கொண்டு வரவேண்டும்.

உலக சேவகனுக்கான விதி 01: ஆர்வமும் சிந்தனையும்: 

இறைவன் தந்த அரிய கொடைகளில் வாழ்வு மிக உயர்ந்த கொடை. இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு கணத்தையும் பிரயோசனமுள்ளதாக மாற்றிக்கொண்டு உலகம் எனும் தோட்டத்தை அழகுபடுத்துவதில் எமது  நேரத்தை செலவழிக்க வேண்டும். வீணான உலக சிந்தனையில் எமது சக்தியை வீணாக்குவதை விட உண்மையான உயர்விற்கான உயர்ந்த சிந்தனையில் வாழ்க்கையின் இலக்கை நிர்ணயிக்க வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு முயற்சியிலும் காமத்தையும், பேராசையையும், பற்றினையும் உடைப்பதற்குரிய பயிற்சியாக பார்க்க வேண்டும். எமது உள் நோக்கம் அல்லது அக எண்ணம் எப்போதும் தூயதாகவும், இலக்குகளை அடைவதற்குரிய முயற்சிகள் நேர்மையானதாகவும் இருத்தல் அவசியம். எப்போதும் பின்னோக்கி செல்வதற்கு சிந்திக்காதீர்கள். நிகழ்காலத்தை மட்டும் அனுபவியுங்கள். எதிர்காலத்தை மனதில் கொண்டு. நிகழ்காலத்தை மிக நுண்மையாக அவதானியுங்கள்.

எப்போதும் ஒரு ஞானயோகி போன்று சிந்தியுங்கள். ஒரு விஷயத்தை செயற்படுத்தி வெற்றி அடையும் போது ஒரு கர்மயோகி போன்று நடவுங்கள். மற்றவர்களை கையாளும் போது ஒரு பக்தி யோகி போன்று செயற்படுத்துங்கள். எப்போது தீய அழிவு சக்திகளின் செல்வாக்கினை அகற்றுவதில் மன ஒருமையுடன் சிந்தியுங்கள்.

ஒவ்வொரு காலைபொழுதும் புதிய வாழ்க்கையின் ஆரம்பமாக கருதுங்கள். ஒவ்வொரு இரவு உறங்கப்போகும் போதும் வாழ்வின் முடிவாக கருதுங்கள். ஒரு நாளை திட்டமிடும்போது நாளை என்பது இல்லை என்று எண்ணி திட்டமிடுங்கள். கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் ஞானத்துடன் உபயோகியுங்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் சூரிய தியானமும், குறைந்தது மூன்று மாலை காயத்ரி மந்திர ஜெபமும் தவறாமல் செய்யுங்கள்.

உலக சேவகனுக்கான விதி 02:  விடாமுயற்சி
காலமே வாழ்க்கை, இது எப்போதும் மனதில் இருக்க வேண்டியது. அதனால் ஒவ்வொரு நிமிஷமும் அர்த்தமுள்ளதாகவும், பிரயோசனமானதாகவும் பயன்படுத்தவேண்டும். சோம்பலும், கவலையீனமும் எமது வாழ்வின் மிகப்பெரிய எதிரிகளாக கருதப்பட்டு தவிர்க்கப்பட வேண்டும். உங்களது எல்லாப்பழக்க வழக்கங்களுக்கும் அவை நல்லதோ தீயதோ நீங்களே பொறுப்பாக வேண்டும்.  எப்போதும் சுயபரிசோதனையுடன், உங்கள் முயற்சியை பரிசோதித்து உங்கள் முயற்சிகள் எதுவும் உங்களை பின் நோக்கி செலுத்தவில்லை என்பதையும் தவறாக இல்லை என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள்.

எந்த ஒரு வேலையையும் தாழ்வாக எடுக்கக்கூடாது. எந்த வேலையாக இருந்தாலும் இருக்கும் வளங்களுடனும், திறமையுடனும், தரப்பட்ட நேரத்திற்குள் பூர்த்தி செய்யவதிலேயே ஒவ்வொருவரும் பெருமைப்படவேண்டும். எவரும் மற்றவர்கள் அனுமதி தரும் வரை காத்திருந்து வேலை செய்யவேண்டும் என்று நினைக்கக்கூடாது. எவ்வளவோ வேலைகள் பூர்த்தி செய்யப்பட காத்திருக்கின்றது. எம்மைச்சுழவே எவ்வளவோ வேலைகள் செய்வதற்கான வாய்ப்புகள் காத்திருக்கின்றது. ஒரு வேலையை மதிப்பிடுவதில் அவர் எவ்வளவு பணிகளை ஆரம்பித்துள்ளார் என்பதையும் அந்தப்பணியில் அந்த வேலைக்கு எவ்வளவு ஆர்வமுடன் செயற்படுகிறார் என்பதிலுமே அவை மதிப்பிடப்படவேண்டும்.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...