குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, August 25, 2018

அழுகண்ணிச் சித்தர் பாடல்கள் - சித்த வித்யா விஞ்ஞான விளக்கவுரை - 13




அடியே என் கண்ணம்மா,

எனது செய்த கர்மம் எல்லாம் மூலாதாரத்தில் காட்டு யானைபோல் கட்டுக்கடங்காமல் இருக்க அந்த வினைகளின் மேலிருந்து கொண்டுதான் கடைட்தெரு எனும் சுழுமுனைக்கு ஊடாக குண்டலினியை ஏற்ற முயற்சிக்கிறேன்.  இந்த முயற்சியில் நான் செய்த வினைகளால் சித்தத்தில் இருந்து கிளம்பும் வினையால் ஒவ்வொரு படியிலும் அவை என்னைப்பார்த்து நகைக்கிறது. இப்படி இந்த வினைகள் எல்லாம் எனது சாதனையை தடுத்தாலும் அதை நான் அனுபவித்துக்கொண்டு (காட்டானை மேலேறி) சஹஸ்ரரத்தில் இருக்கும் உன்னை வந்து காண்பேனடி! 

இந்தப்பாடலில் மூலாதாரத்தில் உறைந்திருக்கும் வினைகள் எல்லாம் காட்டு யானை போன்றவை, இந்த காட்டு யானை போன்ற வினைகள் எல்லாம் தெய்வ உருமாற்றம் பெற்றால் அது மூலாதாரத்து கணபதியாக மாறும். ஒரு சாதகன் தனது வினைகளுடன் சாதனையைத் தொடங்க அவை எல்லாம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி சாதனையே எல்லாப்பிரச்சனைக்கும் காரணம் என்று மனதை மயக்கி வழிதவறச்செய்யும். இப்படி நடந்தாலும் நானோ அந்த வினைகளை எல்லாம் உன் அருளால் எதிர்கொண்டு சஹஸ்ராரத்தில் இருக்கும் உன்னை வந்து அடைவேன் என்று கூறுகிறார். 

இந்தப்ப்பாடல் சாதகன் தனது சாதனையை தொடங்கியவுடன் தனது சித்தத்தில் ஏற்கனவே சேர்த்து வைத்த துன்பங்கள், கஷ்டங்கள் புதிய பிராண வலிமையால் வெளிப்படுவதைக் கண்டு பலரும் நாம் சாதனை செய்யத் தொடங்கிய நாளில் இருந்து பிரச்சனை மேல் பிரச்சனை என்று மனந்தடுமாறி சாதனையை விட்டுவிடுவர். இந்த நிலையே "காட்டானை மேலேறி கடைத்தெருவே போகையிலே நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ" என்பது. இது சாதகர்களுக்கு நல்ல உபதேசம். 

அழுகண்ணிச் சித்தர் பாடல்கள் - சித்த வித்யா விஞ்ஞான விளக்கவுரை - 12





அடியே என் கண்ணம்மா, 

யோகம் எப்படிச் செய்வது என்று சொல்வேனடி, வில்லாக இருக்கும் எனது புருவங்களின் மத்தியில் சூரிய சந்திரர்களாகிய வலது இடது கண்களை மூடிப் பார்க்க இருண்ட காடு போன்று (சந்திரருஞ் சூரியருந் தான்போந்த 
காவனத்தே ) இருக்கும். இதை உற்று உற்றுப் பார்க்க அந்தரம் என்ற சிதாகாச வெளி தோன்றும், இதை வில்லாக கொண்டு, ந ம சி வ ய என்ற ஐந்து எழுத்துக்களையும் அம்பாக்கி மந்திரத்தேரிலேறி ( நமசிவய, நமசிவய, என்ற தொடர்ச்சியான மந்திர உட்சாடனமே தேரோட்டம்) மான்போன்று துள்ளித்திரியும் மனதை வேட்டையாட நான் புருவமத்தியில் குவித்து பஞ்சாட்சர ஜெபத்தை தொடர்ச்சியாக செய்த வண்ணம் அந்த சிதாகச வெளியில் விளையாடிக்கொண்டு மனமகிழ்ந்து பார்ப்பேனடி! 


இந்தப்பாடல் சாதனையின் இலக்கை - மானாகிய மனத்தை வேட்டையாடவேண்டும் - கூறுகிறது. அதை எப்படிச் செய்ய வேண்டுமென்றால் புருவமத்தியில் கண்களைக் குவித்து பஞ்சாட்சர ஜெபத்தின் மூலம் என்பதைக் கூறியுள்ளார். மேலும் சாதனை என்பது ஒரு விளையாட்டைப்போல் மன மகிழ்ந்து செய்யவேண்டும் என்ற இனிய பார்வையை முன்வைக்கிறார் அழுகண்ணியார். 

Friday, August 24, 2018

அழுகண்ணிச் சித்தர் பாடல்கள் - சித்த வித்யா விஞ்ஞான விளக்கவுரை - 11



அடியே என் கண்ணம்மா,

எனது உயிரை ஒளியாக்கி உயர் நிலை அடைவது என்று சங்கல்பித்து எனது சாதனையை தொடங்கிவிட்டேன், எனக்கு எனது காமத்தை தீர்க்க மாமன் மகளோ, மச்சினியோ இல்லை, எனது காமக்கனல் என்னை சுடுகிறது, எனக்கு வேறு வழி தெரியவில்லை, நீ எனக்கு மாமன் மகளாகவோ, மச்சினியாகவோ வந்தால் காமனின் கணை என்னை இப்படி கண்விழித்து வேக வைக்காதல்லவா? 

இந்தப்பாடல் தாந்திரீகத்தில் கூறப்படும் மிக உயர்ந்த வீர பாவத்திலிருந்து எழுதப்படுகிறது.  காமத்தை வெல்ல தனது மனைவியை/தான் உடலுறுகொள்ளும் பெண்ணை சக்தியாக பாவித்து விழிப்புணர்வுடன் காமத்தில் ஈடுபடுவதன் மூலம் மனம் காமத்திலிருந்து விடுபடும். இதையே தான் உபாசிக்கும் தேவியே  "மாமன் மகளாகி மச்சினியும் நீயானால் காமன் கணைகளெல்லாம்     என் கண்ணம்மா கண்விழிக்க வேகாவோ" என்று குறிப்பிடுகிறார். மிக உயர்ந்த தாந்திரீகப் பயிற்சி இது. 

குறிப்பு: இதில் தரப்பட்டுள்ள அளவு விஷயம் மட்டுமே பொதுவில் பதியக்கூடியது, இதற்கு மேற்பட்ட விஷயங்கள் அந்த வழியில் சாதனை செய்பவர்களுக்கு குருமுகமாக அறியப்பட வேண்டியவை. 

அழுகண்ணிச் சித்தர் பாடல்கள் - சித்த வித்யா விஞ்ஞான விளக்கவுரை - 10



அடியே என் கண்ணம்மா,

நான் அன்னையின் கருப்பையிலே இருந்து (பையூரிலேயிருந்து), உடலை அழிக்கும் இந்த பூமியிலே பிறந்து (பாழூரில் பிறந்து) மெய்யூராகிய பேரொளி நிலையை அடைவதற்கு, அதன் வழியைக் கூறும் வேதாந்த தத்துவ விளக்கத்தை அறிந்தால், மீண்டும் பிறக்காமலும், இந்த பூமிக்கு உடலில் வரவேண்டய தேவையும் இல்லாமல் போகுமல்லவா?

இந்தப்பாடலில் அன்னையின் வயிற்றில் இருந்து உலகத்திற்கு வந்து உண்மையை அறியாமல் சாதனை செய்யாமல் வாழ்ந்தால் இந்த வாழ்க்கை பாழாய்ப்போன பழூர் வாழ்க்கையாககி விடும் என்பதையும், கிடைத்த இந்த வாக்கையில் வேதாந்தம் சொல்லும் நான் யார்? இறைவன் யார் என்ற உண்மைகளை அறிந்து கொண்டு அந்த இறையின் வீடாக எம்மை பேரொளி நிலைக்கு உயர்த்தும் வழியை அறிந்து வாழ்வை பிரயோசனமுள்ளதாக்கிக் கொள்ளவேண்டும். என்ற உபதேசத்தை சொல்கிறார்.

Thursday, August 23, 2018

அழுகண்ணிச் சித்தர் பாடல்கள் - சித்த வித்யா விளக்கவுரை - 08





அடியே கண்ணம்மா, 

இந்த உடலை நான் ஊத்தை, அழுக்கு என்று எண்ணிக்கொண்டிருந்தேன், ஆனால் அதற்குள்தான் உணவிற்கு சுவை தரும் உப்புப்போல் வாழ்விற்கு சுவை தரும் உயிர் இருப்பதால் அது உப்பிருக்கும் பாண்டம், அப்படி அந்த உப்பிருந்தாலும் இந்த ஸ்தூல உடலை மாற்றி ஒளியுடலைப் பெற மருந்து எனக்கு இன்னும் கிட்டவில்லையே, இந்த மருந்து கிட்டுமென்றால் இந்த ஊத்தை சடலத்தை விட்டு விட்டு உனது பாதத்தை சேர மாட்டேனா? 

இந்தப்பாடல் நாம் ஊத்தை என்றும் நிலையற்றது என்றும் கூறும் இந்த ஸ்தூல உடலிற்குள் இருக்கும் உயிரின் துணைகொண்டு, உயிரின் ஆற்றலை யோகத்தால் வளர்த்து பராசக்தியை நெருங்கக்கூடிய ஒளிஉடலைப் பெற்று அவள் பாதத்தை சேரவேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. ஆக சாதகன் இந்த ஸ்தூல உடலைப்பாவித்து ஒளியுடலைப் பெறும் மருந்தை அறியவேண்டும் என்பதே உபதேசம். 

ஜோதிஷ சிந்தனை: இஷ்ட பலம்/கஷ்ட பலம்


இஷ்டபலம் என்பது கிரகம் சாதகனில் இருக்கும் நல்ல காரகத்துவத்தை செய்யக்கூடிய ஆற்றலை அளவிடும் முறை.

கஷ்டபலம் என்பது கிரகம் சாதகனில் இருக்கும் கெட்ட/தீய பலங்களை செய்யக்கூடிய ஆற்றலை அளவிடும் முறை.

இது கணித எண்ணிக்கை மூலம் அளவிடலாம்,

இவை இரண்டு காரணிகளில் தங்கியுள்ளது:
1.      சூரியனிலிருந்து இருக்கும் தூரம்: கிரகங்களில் தந்தை சூரியன், சூரியனிலிருந்து அதிக தூரம் செல்லும் கிரகங்கள் அதிக இஷ்டபலத்தை பெறும். இதன் அடிப்படை தந்தையிற்கு அருகில் இருக்கும் மகன் எப்படி தந்தையின் புகழில் அவனது ஒளி வீசவதில்லையோ, அதைப்போல் சூரியனை நெருங்கும் கிரகங்கள் தமது ஒளியை இழந்து சூரியனின் ஒளியில் மறைந்து விடும். ஆக கிரகங்கள் சூரியனிலிருந்து விலக தமது ஒளியில் பிரகாசிக்க ஆரம்பிக்கும். அதைப்போல் வக்ரகதி அடையும் கிரகங்களும் சூரியனை விட்டு அதிகம் விலகி நிற்பதால் அவை அதிக இஷ்ட பலம் பெறும்.
2.      கிரகங்கள் உச்சம் பெறும் புள்ளிகளிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதைக் கொண்டு, உச்சப்புள்ளிக்கு அருகில் நிற்பது அதிக இஷ்ட பலத்தையும், குறைந்த கஷ்டபலத்தையும் தரும்.
3.      இவை இரண்டும் சேர்ந்து இஷ்ட பலம் கஷ்ட பலத்தை தீர்மானிக்கிறது. மேலும் குறைந்த இஷ்ட பலம் என்றால் அதிக கஷ்டபலம் என்று சொல்ல முடியாது. இரண்டும் வெவ்வேறு கணிதம்.
4.      இவை ஷட்பலத்திலிருந்து கணிக்கப்படுவதல்ல.
5.      தரப்படும் புள்ளிகள் 0 – 60 இற்குள் இருக்கும்.
6.      ராகுவும் கேதுவும் இந்த கணிதத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.
7.      அதிக இஷ்ட பல கிரகங்கள் தமது தசா புத்தி காலங்களில் தமது பலன் கள் தருவதை நிச்சயமாக்கும்.
8.      அதிக கஷ்டபலம் உள்ள கிரகங்கள் குறித்த தசாபுத்திகளில் அதிக இடைஞ்சல்களை ஏற்படுத்தும்.
9.      இறுதி விளைவைத் தீர்மானிக்குமா இல்லையா என்பதை இஷ்டபலமோ, கஷ்ட பலமோ கூறாது, குறித்த கிரகத்தின் காரகத்துவத்தினை அடைவதற்கான வழி இலகுவானதா, கஷ்டமானதா என்பதையே கூறும்.
10.  இறுதிப்பலனை தீர்மானிப்பதை கிரகத்தின் செயல்பாடு, ஷட்பலம், யோகங்கள், என்பவை தீர்மானிக்கும். இவை சரியாக இருந்தால் அந்த திசையில் நல்ல பலன் களைக் கொடுக்கும்.
11.  இஷ்ட பலம் குறைவாக இருக்கிறது என்றால் அந்தக்கிரகத்திற்குரிய காரகத்துவங்களின் பலங்களை அடைவதில் அதிக முயற் சிதேவை, அல்லது ஆரம்பத்தில் இலகுவான பாதையாக தென்படாது என்பதே இதற்கான விளக்கம்.
12.  இதற்கு மாறாக கிரகம் தீயகாரகத்துவத்திற்கு அதிபதியாக இருந்து குறைந்த இஷ்டபலத்தைக் கொண்டிருந்தால் அதன் திசாபுத்தியில் குறித்த பாவத்திற்குரிய காரகத்துவத்தை இல்லாதாக்கும்.
13.  இஷ்டபலம் 12 இற்கு குறைவாக இருத்த்தல் மிகக்குறைவு, 30 சராசரியாக நன்று, 45 மேல் மிகச்சிறப்பு.



அழுகண்ணிச் சித்தர் பாடல்கள் - சித்த வித்யா விஞ்ஞான விளக்கவுரை - 09





அடியே என் கண்ணம்மா,

நான் எப்பேர்ப்பட்ட மூடன், உண்டால் இனிய சுவையும் இலகுவாக வாயிற்குள் செல்லும் வாழைப்பழத்தை தந்த போது அது தின்றால் வாய்வலிக்கும் என்று சொல்லிவிட்டு, முட்கள் நிறைந்த கசப்பும் துவர்ப்பும் நிறைந்த தாழைப்பழம் உண்டவன் உண்டு இறந்தவன் போல், இறப்பதற்கு முன்னர் வாழை போன்ற  இனிமையான அம்ருதத்தை சகஸ்ராரத்தில் இருந்து இந்த உடலில் இறக்கி, உயிரை ஒளியாக்கி இந்த உடலை விடும் இறப்பு நிகழந்தாலும் பேரொளி நிலை பெற்று ஒளி சரீரம் அடையவல்ல வழியைக் கூறமாட்டாயா என கண்ணமா? 

நாம் இந்த வாழ்வில் அடைய வேண்டிய உயர் நிலையாம் ஒளி நிலையை அடையாமல், அதற்குரிய இனிய செயல்களைச் செய்யாமல் (இவையே வாழைப்பழம் எனக் கூறப்பட்டது) தாழைப்பழம் போன்று உயிரிற்கு கசப்பான துவர்ப்பான உணர்வுகளையே கொடுத்து கடைசியில் சாகிறோம். இப்படி இல்லாமல் உயிரை ஒளியாக்கும் ஞானத்தை தரமாட்டாயா என்று இறைஞ்சுகிறார் . 

Wednesday, August 22, 2018

அழுகண்ணிச் சித்தர் பாடல்கள் - சித்த வித்யா விஞ்ஞான விளக்கவுரை -07




அடியே கண்ணம்மா,

முதல் பாடலில் சொன்னதுபோல் சூரியகலையை சமப்படுத்த அக்னியை எழுப்பி சாதனை செய்ய கொல்லனின் உலை போல வயிறு மணிப்பூரகச்சக்கரம் கொதிக்கத்தொடங்கும், அதை பலருக்கு கட்டுப்படுத்தத் தெரிவதில்லை, அப்படி அந்த உஷ்ணத்தை கட்டுப்படுத்த தெரிந்தாருக்கு கொல்ல வந்த எமன் மீண்டும் தனது இடத்திற்கு ஓடிப்போய்விடுவான், அப்படி மணிப்பூரகத்தில் எழும் உஷ்ணத்தை நீ தரும் ஞானத்தாலல்லவா சாதிக்க முடியும்,


இந்தப்பாடல் யோகசாதனையில் உடலில் ஏற்படும் உஷ்ணமும்,  அதைக்கட்டுப்படுத்தி மணிப்பூரக சித்தி பெற்றால் அவன் விரும்பிய நேரம் இறக்கும் இச்சா ம்ருத்யு சித்தி பெறலாம் என்பதையும் கூறுகிறார். 

அழுக்கண்ணிச் சித்தர் பாடல்கள் - சித்த வித்யா விஞ்ஞான விளக்கவுரை - 05



அடியே கண்ணம்மா,

நீ எங்கிருக்கிறாய் என்று நான் தேடி அறிந்து கொண்ட இடம்; நீ கம்பமாகிய என்னுடைய சுழுமுனை நாடி முடிந்து அதற்கு மேல் தலைக்கு மேல் சஹஸ்ராரத்தில் இருக்கிறாய் (கம்பத்தின் மேலிருந்தே), எந்த வடிவத்தில் இருக்கிறாய் என்று  நான் பார்த்த போது பொற்சிலம்பு அணிந்து ஒரு காலை மேலே தூக்கி மடியில் வைத்து, பொன்னிற அம்ருத கலை உடல் பூராகவும் கதிர்க்க அந்த கதிர்ப்பு உன் உடல் முழுது சேலையாக போர்த்த, கெண்டை மீன் (சேல்) விழிகொண்ட நீ, பொன்னிற பாம்பான (பொற் பணி) குண்டலினியாக எனது ஆறு ஆதாரங்களையும் பேதித்து மேலே ஏறி சஹஸ்ராரத்தில் இருந்து என்னை கண்குளிடப்பாரேனடி!

இந்தப்பாடல் உடலில் அம்பிகை குண்டலினியாக இருந்து சாதனையால் ஆறாதாரத்தை பிளந்து மேலேறி சஹஸ்ராரத்தில் குடி கொண்டு இருந்து பொன்னிற ஒளி சரீரத்தை அடையும் நிலை பற்றி விளக்கமாக கூறியுள்ளார்.  

Tuesday, August 21, 2018

அழுகண்ணிச் சித்தர் பாடல்கள் - சித்த வித்யா விஞ்ஞான விளக்கவுரை - 06



உன்னை எனது உடலில் குண்டலினியாக உணர்ந்து  ஆறு ஆதாரத்தை பேதித்து, சஹஸ்ராரத்தில் உணர எனக்கு எட்டாத புரவியான நேர்படுத்திய மூச்சையும் அதன் மூலம் பன்னிரேண்டு கலைகள் உடைய சூரிய கலையை வீதியாகிய நாடிகளில் மறித்து, விழிப்புணர்வு என்ற கட்டக் கயிறை எடுத்து மேலும் நான்கு  கலைகளான அக்னி கலைகளைச் சேர்த்து, பதினாறு கலை உள்ள சந்திர கலைக்கு சமப்படுத்தினால் (இறுக்கி) அட்டாளம் (மேல் வீடு) எங்கிற சகஸ்ராரத்திற்கு போகலாம் என்று தெரிந்து கொண்டேன், கண்ணம்மா என்னை நீ இதைச் செய்ய ஆண்டிருக்கலாகாதோ!

இந்தப்பாடல் மூச்சில் பெறும் விழிப்புணர்வினால் சூரியகலையை, அக்னி கலையுடன் சேர்த்து சந்திர கலைக்கு சமனாக்கி சஹஸ்ராரத்தில் உணர்வைப் பெறலாம் என்பதை விளக்கியுள்ளார். 

அழுகண்ணிச் சித்தர் பாடல்கள் சித்த வித்யா விஞ்ஞான விளக்கவுரை - 04



முதல் பாடலில் தியான முறை கூறியவர்,  அந்த புருவமத்தி தியானத்தை செய்ய ஏற்படும் விளைவை இந்தப்பாடலில் கூறுகிறார். 

அடியே கண்ணம்மா, 

முதலில் சொல்லியபடி தியானத்தை செய்ய  நெல்லுப்போல் கரடுமுரடாக இருந்த மனம் சமைத்த சம்பா அரிசி சாதம்போல் பொலிவடையும் (சம்பா அரிசி சந்திரனின் ஆதிக்கம், சந்திரன் மனதின் காரணம்) இப்படி சமைத்த சாதம்போல் பண்பட்ட மனதை பாராசக்தியான உன்னிடம் ஒப்படைத்து அதற்கு சிரசில் இருந்து வழியும் அம்ருதத்தை உழக்கு  அளவு நெய் வார்ப்பது போல் மனதிற்கு வார்த்து முக்கனியும், தேனும் சக்கரையும் சேர்ந்தால் இருக்கும் இனிப்பிற்கு ஒப்பான இனிமையுடையதாக எனது மனத்தை மாற்றி உனக்காக வைத்துள்ளேன் பாரேனே என்கிறார். 


இந்தப்பாடல் ஒரு சாதகன் தனது சாதனையால் மனத்தை தூய்மைப்படுத்தி பராசக்தியின் அருளை தன்னுள் ஏற்க்கும் நிலையை குறிப்பிடுகிறது.  

அழுகண்ணிச் சித்தர் பாடல்கள் சித்த வித்யா விஞ்ஞான விளக்கவுரை - 03




இந்தப்பாடலில் கூறவருவது என்னவென்றால்; 


அடியே கண்ணம்மா,


முத்துப்போன்ற கண்கள் உள்ள முகத்தில், இடகலை, பிங்கலை நாடி இணைந்து சுழுமுனை இணையும் முச்சந்தியாகிய புருவமத்தியில், கண்களை (பத்தாம் இதழ்) இமைகளை அரைவாசி மூடி (பஞ்சணை - கண்இமைகள்) இருத்தி, எண்ணம் தோன்றி மறைவதை அவதானித்து (அத்தை என்பது ஒன்றின் எல்லையை குறிக்கும், புருவமத்தியில் கண்களைக் குவித்து தோன்றும் எண்ணத்தைக் கவனிக்க எண்ணம் முடிவுறும் எல்லை புலப்படும்) இப்படி எண்ணங்களை அடக்கி, எண்ணம் இல்லாத மனம் வெறுமை அடையும் நேரத்தில் (யாருமில்லா வேளையில்) ஒளிதோன்றும் (குத்து விளக்கேற்றி) பிரபஞ்சத்தின் நுண்ணிய இழைத்தோற்றங்கள் கோலங்களாக தோன்றும், இதைப் பார்த்தவண்ணம் இருக்க மனதிற்கு பேரின்பம் தோன்றும். 

இந்தப்பாடலில் வாசி சிவயோகத்தின் உயர்ந்த தியானமுறையை சுவையாக கூறியுள்ளார்.



Friday, August 17, 2018

கடவுளை எமது சொந்தப்பிரச்சனைகளுக்கு கூப்பிடுவதில் உள்ள அபாயம்

இன்று காலை ஒரு சுவாரசியமான உரையாடல், 
எமது பிரச்சனைகளுக்கு கடவுளை அழைத்தால் இறுதியில் அவர் எல்லோருக்கும் சங்கு ஊதி விடுவார் என்றேன்.

இதற்கு உதாரணம் மகாபாரதம் – பாண்டவர்களும், கௌரவர்களும் தமக்குள் ஒரு புரிந்துணர்விற்கு வரமுடியாமல் தமது பங்காளிப்பிரச்சனையை கடவுளிடம் கொண்டு செல்ல கடைசியாக கிருஷ்ண பரமாத்மா யுத்தத்தை தூண்டி 1 பில்லியன் 660 மில்லியன், 20 ஆயிரம் ஆண்களைக் காவு கொடுத்து யுத்தம் மூலம் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இதன் மூலம் புரிய வேண்டியது என்னவென்றால், 

கடவுள் மனம், புத்தி, உணர்ச்சி எல்லாவற்றையும் தந்துள்ளார், இவற்றை சரியாக பாவித்து சரியான முடிவு எடுக்க முடியாமல் இயற்கையின் விதிகளுக்கு எதிராக உங்கள் ஆணவத்தை காட்டிக்கொண்டிருந்தால் வேறு வழியில்லாமல் இயற்கை தனது ஸ்வரூபத்தில் சிறு அசைவு என்று தான் எடுக்கும் முடிவும் மனிதனுக்கு பெரும் அழிவாக இருக்கும்.

ஆக மனிதன் செய்ய வேண்டியது தான் தனது புத்தியையும் மனதையும் எப்படி சரியாக உபயோகிப்பது என்று தெரிந்து கொள்வது.

நம்பிக்கை

வாழ்க்கையில் நம்பிக்கை என்பது மிகப்பெரிய சொத்து.
கணவன்- மனைவி
முதலாளி-தொழிலாளி
நண்பர்கள்
வியாபார பங்குதாரர்கள்
குரு - சிஷ்யன்

இப்படி எந்த உறவாக இருந்தாலும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே சிறக்க முடியும்.
பொதுவாக நான் நம்பிக்கை வைத்திருந்தே ஆனால் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்வதை கேட்டிருக்கிறோம். இப்படிச் சொன்னால் அதன் அர்த்தம் நம்பிக்கை என்றால் என்ன? உண்மையான நம்பிக்கையின் குறிகள் என்ன என்பதை அவர் அறியாமையே,
பலர் நம்பிக்கை என்றவுடன் வாயால் வடை சுட்டு மாற்றவர்களை ஒத்திசையச் செய்வது என்று நம்புகிறார்கள். இது ஒருவகை ஏமாற்று வித்தை.
உண்மையான நம்பிக்கை என்பது பல குணம், தகுதி, நேர்மை, நோக்கம், அக்கறை, வெளிப்படைத்தன்மை, திறந்த மனம், திறன், அறிவு, அனுபவம், செயல்திறன், மதிப்பு போன்ற பல வேர்களைக்கொண்ட ஆலவிருட்சம் போன்றது. இப்படி முறையாக கட்டியெழுப்பப்படும் நம்பிக்கை ஆலவிருட்சம் போன்று பல ஆயிரம் பேரிற்கு நிழல்தரக்கூடியது.
நம்பிக்கையிற்கு இரண்டு பிரதான கைகள் எம்முடையதும், நாம் நம்பிக்கை கொள்ளுபவரின் குணமும், தகுதியும். இருவரும் ஒத்த குணமோ அல்லது ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்ளும் குணமோ இல்லை எனில் நம்பிக்கை வளர்வது கடினம். எடுத்ததெற்கெல்லாம் குறை கூறுவது, தவறாக பேசும் குணம் இருந்தால் அந்த நபர் மீது எவருக்கும் நம்பிக்கை வராது.
நாம் ஒருவரை குணத்தின் அடிப்படையில் நம்பினாலும் நாம் நம்பும் விஷயத்தை பூர்த்தி செய்யும் தகுதி அந்த நபரிற்கு இருக்கிறதா என்பது அவசியமான ஒன்று. பொதுவாக நல்ல குணமுள்ளவர் என்று எமது வியாபாரத்தில் அந்தப் பையனை வைத்தேன் இப்போது எவ்வளவு பணம் வந்தது, எவ்வளவு பணம் சென்றது என்று தெரியவில்லை என்று தலையை பிய்த்துக்கொண்டு, எப்படி என்றாலும் கள்ளம் கபடமில்லாத பையன் என்று கூறினால், அவர் தகுதானவரை நம்பவில்லை என்று பொருள்.
அதேபோல் நன்றாக படித்திருக்கிறான், அறிவாளி என்று தகுதி எல்லாம் பார்த்து வேலைக்கு எடுத்த பையன் காசை சுருட்டிக்கொண்டு போய்விட்டன் என்றால் தகுதி இருந்தாலும் குணம் சரியில்லை என்று பொருள்.
ஆக நம்பிக்கை வளர குணமும், தகுதியும் மிக அவசியமான இரண்டு தூண்கள்.
குணத்தை எப்படி நல்ல குணம் என்றும், எமது நம்பிக்கைக்கு பாத்திரமாவான் என்றும் அறிவது, அவனது நோக்கத்தை அறிவதன் மூலம், நோக்கத்தை அறிவதற்கு மூன்று காரணிகள் உள்ளது, நாம் சொல்லும் விஷயத்தை அக்கறையுடன் கேட்கிறானா, வெளிப்படையாக தனது நடத்தையிலும் பேச்சிலும் இருக்கிறானா, கூறுபவற்றை திறந்த மனத்துடன் அணுகிகிறானா என்பதைக் கொண்டு ஒருவரின் குணத்தை அறியலாம்.
குணத்தின் அடுத்த குறியீடு நேர்மை, ஒரு விஷயத்தை அணுகும்போது நேர்மையுடன், பாரபட்சம் இன்றி, நம்பகத்தன்மை இன்றி அணுகினால் அவனது குணம் நல்ல குணம் என்று அனுமானிக்கலாம்.
தகுதியை அறிவதற்கு இரண்டு விஷயங்களை அவதானிக்கலாம். குறித்த வேலைக்கான அவனது திறனும், அந்த வேலையில் இதுவரை பெற்ற பெறுபேறுகளும்.
குறித்த விஷயத்தி திறன், அறிவு, அனுபவம் உண்டா என்பதைக்கொண்டு அவனது திறனை அனுமானிக்கலாம்.
பெறுபேறுகளை அவனது மதிப்பையும், அவன் மீது மற்றவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையினைக் கொண்டும், செயல்திறன் கொண்டும் அறியலாம்.
நம்பிக்கை என்பது என்னவென்று அறிந்து நம்பிக்கை வளர்ப்போம்.

Thursday, August 16, 2018

அழுகண்ணிச் சித்தர் பாடல் சித்த வித்யா விஞ்ஞான விளக்கவுரை - 02



அடியே கண்ணம்மா, 

முதல் பாட்டில் யோகத்தால் எனது உடலில் மகாசக்தியை எங்கிருந்து எப்படி எழுப்பி எங்கு கொண்டு போய் சேர்ப்பது என்று சொன்னேன், இப்போது இது நடக்கும் எனது உடலிப்பற்றி கூறுகிறேன் கேள், 

எனது கையின் ஒரு சாண் அளவு எடுத்தால் எனது மொத்த உடல் உச்சிமுதல் பாதம் வரை எட்டு சாண் அளவு, இந்த எண்சாண் உடலுக்கு ஒன்பது வாசல், இந்த எண்சாண் அளவு, ஒன்பது வாசனை ஆளும் பஞ்சாயத்துக்காரர்கள் ஐந்து பேர்,  ஸ்தூலம் சூக்ஷ்மம் என்று இரண்டு பட்டணமாக பிரித்து ஆளுகிறார்கள்.  இவர்களை ஆளும் மனமோ கோலாப்பதியான ஆக்கினைக்கு பயந்து (ஆக்கினையில் உணர்வு ஒடுங்கினால் மனமடங்கிவிடும் என்பதால்) எப்போதும் நிம்மதி இல்லாமல் ( நெஞ்சார நில்லாமல்) ஆடிக்கொண்டிருக்கும் இந்த மனத்தை பாரடி, இதனாலே அடையவேண்டிய நிலை அடையாமல் வாடுகிறேனே! 

என்கிறார். 

முதல் பாட்டில் காரண சரீரத்தின் நிலை சொல்லி, அதில் யோகம் நடைபெறும்  நிலையும் சொல்லி, அந்த யோகம் நடைபெற மற்றைய இரு சரீரங்களும் எப்படி ஒத்திசைய வேண்டும் என்று, மனமே சலனித்து தடையாக்குகிறது என்ற நிலை இந்தப்பாட்டில் சொல்லுகிறார். 

அழுகண்ணிச் சித்தர் பாடல் சித்த வித்யா விஞ்ஞான விளக்கவுரை - 01


   




இந்தப் பாடலின் பொருள் வருமாறு:

அடியே என் கண்ணம்மா,

இங்கே பார், எனது உடலுக்குள்ளே பிராணனும், உயிரும் செயற்பட மூலமாக குதத்திற்கு குய்யத்திற்கு இருக்கும் மூலப்பதி எனும் மூலாதாரமும், அதிலிருந்து தொடங்கி  சுவாதிட்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி ஆக்னை என்ற மூவிரண்டு (3x2=6) ஆறுவீடுகள், அந்த ஆறு வீட்டையும் இணைக்கும் தெரு சுழுமுனை நாடி,  இந்த தெருவை கோலோச்சும் (ஆட்சி செய்யும்) கோலாப்பதி ஆக்கினை, இந்த ஆக்கினை மூலப்பதியாகிய மூலாதாரம் செய்யும் வேலைக்கு குதர்க்கம் செய்யும் இடம், குதர்க்கம் என்றால் எதிர்வேலை, மனிதனின் எண்ணம் மூலாதரத்தில் உதித்து ஆக்கினையில் ஒடுங்கும், ஆக கோலாப்பதி மூலப்பதிக்கு குதர்க்கம் செய்யும் இடம், அதேவேளை நடுத்தெருவான சுழுமுனை முடியும் இடமும் கூட அதையே கோலாப் பதியடியோ குதர்க்கந் தெருநடுவே என்றார். 

அடுத்து சாலாப்பதி என்ற அக்னி மண்டலம் (சுவாதிட்டானம், மணிப்ப்பூரகத்தில்) யோகத்தால் மேல் நோக்கி ஊர்த்துவமாக யோகாக்கினியால் வளர்த்த  குண்டலினி, மேலப்பதி எனும் சகஸ்ராரத்தில் சென்று தாக்கியதால் வந்த விளையாட்டைப் பாரேனடி! 

எங்கிறார். 

இங்கு கண்ணம்மா என்பது அவர் உபாசிக்கும் தாய் சக்தி - வாலை, மனோன்மணி. 

மூலப்பதி - மூலாதாரம்
கோலாப்பதி -ஆக்கினை
நடுத்தெரு -சுழுமுனை 
சாலாப்பதி- அக்னி மண்டலம்
வளர்த்த கம்பம் - குண்டலினி
மேலப்பதி - சஹஸ்ராரம் 

Wednesday, August 15, 2018

ஸ்ரீ அரவிந்தரின் சப்த சதுஷ்டயம்

இன்று ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த நாள்.
ஸ்ரீ அரவிந்தர் ஒரு பூரண யோகி, சமூகம், அரசியல், கல்வி, யோகம், மனிதகுல மேம்பாடு என்று அனைத்தையும் ரிஷிகளின் ஞானத்தின் அடிப்படையில் சிந்தித்த தத்துவ ஞானி!
இந்த நாளில் அவர் ஒரு யோக சாதகன் சாதனையில் அடையவேண்டிய நிலைகளை ஏழு நிலைகளாகவும், ஒவ்வொரு நிலைக்கு மேலும் நன் கு நிலைகளாகவும் சாதனா சதுஷ்டயம் ஆக அவரது டயறிக் குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.
அவற்றை நாம் எமது தனிப்பட்ட புரிதலுக்காக வரைபடமாக்கியுள்ளோம்.
சாதகர்களுக்கு உதவும் என்ற வகையில் இங்கு பகிர்கிறோம்.
ஆரோக்கியமான சாதனா உரையாடலை எதிர்பார்க்கிறோம்.










Tuesday, August 14, 2018

கடுவெளிச்சித்தர் சாதகர்களுக்கு சொல்லிய அறிவுரைகள் - பகுதி 03




இப்படி அம்ருதம் உண்டு உன் சாதனையில் களித்து இருக்கும் காலத்தில் உன் ஆற்றல் பெருகும், இந்த ஆற்றலை அடைந்து விட்ட பின்னர் நீ கடைப்பிடிக்க வேண்டியவை எவை என்பதை கூறுவேன்.
  • பிழைப்புக்காக வேதங்களை வியாக்கியானம் சொல்லும் போதகர்கள் கூறும் வழியை உண்மை வழி என்று எண்ணி அவர்கள் சொற்படி அறிவினை மயங்கவிடாதே.
  • மயக்கும் பெண்களை சாராதே, துர்குணமுடையவரகள் கூட்டத்தில் கலந்து கொண்டாடாதே,  உன்னை தூற்றுபவர்களை கூட வைத்திராதே, இந்த உலகமே பொய் சொன்னாலும் நீ பொய் சொல்லாதே, விளையாட்டாக பறவைகளுக்கு கல்லெறிந்து துன்பப்படுத்தாதே,
  • சிவமன்றி வேறு எதையும் வேண்டாதே, எவருக்கும் தீங்கு பயக்கும் சண்டைகளை தூண்டாதே,
  • உன் தவ நிலையை விட்டு தாண்டாதே, நல்ல சன்மார்க்கமில்லாத நூற்களை படிக்காதே,
  • குண்டலினியை எழுப்புகிறேன் என்று அறியாமல் முயற்சி செய்யாதே.
  • உன்னிடம் அன்புடன் வாழ்க்கையில் ஒருபாகமாக இருக்கும் மனைவியரை எக்காரணம் கொண்டும் பழிக்காதே.
  • உலகில் கசப்பான சிந்தனைகளை எவருக்கும் ஊட்டாதே, உனது ஆணவத்தை காட்ட எந்த செயலையும் செய்யதே.
  • வீணான ஆடம்பர சடங்குகளை செய்யதே, உன்னைப் புகழ்பவர்களிடம் எக்காரணம் கொண்டும் நன்மைகள் எதையும் பெற எண்ணாதே.
  • உனது வாழ்வில் கிடைத்த புகழை மனதில் எண்ணி வாழாதே, மற்றவர்கள் தாழும்படி எந்த தாழ்வையும் நீ செய்யாதே.
  • கஞ்சாபுகை பிடிக்காதே, வெறியூட்டி மதிமயக்கும் கள்ளு குடிக்காதே, உயிர்கள் எதையும் கொல்லாதே, புத்தி குறைந்த ஞானம் புரியாதவனுக்கு ஞான நூற்களை சொல்லாதே,
  • பக்தி என்ற உடலை நாட்டி,  நன்மை, தீமை, உயர்வு தாழ்வு என்று இருமையுறும் தொந்தங்களான பந்தங்களை அற்றதான இடத்தை பார்த்து அங்கு உன் கவனத்தை நீட்டி, சத்தியத்தை உனக்குள் சேர்த்து, சமயங்கள் போதிக்கும் உன் தழைகள் ஓட்டி உண்மையை உன் வசமாக்கிக் கொள்.
  • உலகில் வாழும் போது சொல்லமுடியாத மோகங்கள் எம்மை மயக்கும் அவையெல்லாவற்றையும் சீ என்று ஒதுக்கி திடமான விவேகம் கொண்டு, ஒப்பரிய அட்டாங்க யோகம் நன்றாக ஆழமாக அறிந்து உண்மையான சம்போகம் எது என்பதை அறிவாய்.
  • எல்லாவகையான நல்ல நீதிகளையும் கற்று அவற்றை மற்றவர்களுக்கு  போதிக்க வேண்டும்.
  • நாம் பலவித சாதிகளை வைத்து பகுத்துப்பார்க்கும் மனிதர்கள் எல்லோரும் ஒன்றே என்று அறியவேண்டும், கள்ள உடம்பினை உனது அறிவால் கண்டுபிடித்து அதனுள் இருக்கும் உண்மையை கண்டுபிடி, இல்லாமல் பல புனித நதிகளில் நனைத்து உயர்வு பெறலாம் என்று எண்ணாதே.
  • எதையும் கொள்ளை கொள்ள நினையாதே, நட்பு கொண்டு பிரிந்தா அந்த நட்பின் மீது கோள் சொல்லாதே.
  • எங்கும் வெற்றி தரும் பிரகாசமாக இருப்பவன், அன்பர்களுக்கு உயர்வினை தரும் அடிவர்களின் அடிமை, தன்னை துதிப்பவர்களுக்கு பேரொளி நிலை அருளும் ஈசன்.

              
பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
     போதகர் சொற்புத்தி போதவோ ராதே
மைவிழி யாரைச்சா ராதே - துன்
     மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே.       
வைதோரைக் கூடவை யாதே - இந்த
     வைய முழுதும் பொய்த் தாலும்பொய் யாதே
வெய்ய வினைகள்செய் யாதே - கல்லை
     வீணில் பறவைகள் மீதிலெய் யாதே.              
சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
     தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத்தாண் டாதே - நல்ல
     சன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே.             
பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்
     பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்
     வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே.   
போற்றுஞ் சடங்கைநண் ணாதே - உன்னைப்
     புகழ்ந்து பலரிற் புகலவொண் ணாதே
சாற்றுமுன் வாழ்வையெண் ணாதே - பிறர்
     தாழும் படிக்குநீ தாழ்வைப்பண் ணாதே.          
கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
     காட்டி மயங்கியே கட்குடி யாதே
அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி
     அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே.              
பத்தி யெனுமேனி நாட்டித் - தொந்த
     பந்தமற் றவிடம் பார்த்ததை நீட்டி
சத்திய மென்றதை யீட்டி - நாளுந்
     தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி.        
செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
     சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
     ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம்.         
எவ்வகை யாகநன் னீதி - அவை
     எல்லா மறிந்தே யெடுத்துநீபோதி
ஒவ்வாவென்ற பல சாதி - யாவும்
     ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி.            
கள்ளவே டம்புனை யாதே - பல
     கங்கையி லேயுன் கடம்நனை யாதே
கொள்ளைகொள் ளநினை யாதே - நட்புக்
     கொண்டு பிரிந்துநீ கோள்முனை யாதே.             
எங்குஞ் சயப்பிர காசன் - அன்பர்
     இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
     துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன்.

கடுவெளிச் சித்தர் சொல்லும் சாதகர்களுக்கான அறிவுரைகள் - 02




இந்தப்பகுதி ஒரு சாதகன் தனது சாதனையை எப்படி செய்ய வேண்டும் என்ற விளக்கத்தை தருகிறது. 
  • எமக்கு நன்மை தராத இன்பம் தரும் கலைகளில் மனத்தை செலுத்தி நடவாதே, நல்ல புத்தியை பொய்யான வழியில் நடத்தாதே, ஏனென்றால் இங்கிருக்கும் எதுவும் உடலை விடும்போது கூட வரப்போவதில்லை. புழுவாகப்போகும் உடல் கூடு ஏற்கனவே தொல்லைகள் பல செய்துகொண்டு இங்கு உலாவிக்கொண்டு இருக்கிறது.
  • நாம் தேடுவதற்குரிய எல்லை மோக்ஷம், அதை தேடும் வழியை எவருமே  தெளிவதில்லை. ஐம்பூதங்கள் சூழும் இந்த உடலாகிய காட்டில் அந்த ஐவரையும் தகுந்த சதனையால் அவர்கள் நாடாகிய பஞ்சகோசத்தில் சேர்த்துவிட வேண்டும்.
  • இந்த வழிமுறையை வருந்தி தேடு, அப்படி தேடி அதன் மூலத்தை அறிந்திட வாய்க்குமே முத்தியாகிய வீடு, அந்த ஐந்துபேர் சூழ்ந்த காட்ட்டில் மனம் , புத்தி, சித்தம், ஆங்காரம் என்ற நான் கு வகை கோட்டையிருக்கிறது.
  • இந்த நான்கு கோட்டைகளையும் பகை ஏற்படுத்தாமல் பிடித்திட்டால் ஆளலாம் இந்த உடலாகிய நாட்டை.
  • இந்த நாட்டை காடாகமாற்றும் கள்ளப் புலன் ஐந்தையும் வெட்டி, அக்னியாகிய தபஸில் இட்டு எரித்திட்டால் காடாகிய உடலிற்குள் மறைந்திருக்கும்  இறைவன் வாழும் வீட்டைக்காணலாம்.
  • காசிக்கு ஓடிப்போனால் செய்த வினைகள் எல்லாம் போகுமா? கங்கையில் குளித்தால் நல்ல கதி கிடைத்திடுமா? என்னுடைய பூர்வ கர்மம் இது என்று அறிந்து பேசிக்கொண்டிருந்தால் மட்டும் அதனால் விளையும் துன்பங்கள் போகுமா? பல பேதங்கள் ஏற்படுத்தி வைத்து விட்டு ஒருவரை ஒருவர் போற்றிக்கொண்டிருந்தால் அந்தப்பேதங்கள் இல்லாமல் போய்விடுமா? ஒருவரை முகஸ்துதிக்காக பொய்யாக பாராட்டி இப்படி எம்மை நாமே ஏமாற்றி செய்யும் வேலைகள் எல்லாம் இந்த உடல் போகும் காலத்தில் எம்மை நாமே எப்படி எல்லாம் ஏமாற்றினோம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
  • உண்மையான சுத்த ஜாலம் என்னவென்று கூறுகிறேன் கேள், இதைப்புரிந்து கொண்டால் இந்த உலகவாழ்க்கையில் என்ன அனுகூலம் என்று சொல்லுகிறேன் கேள். இதைப் புரிந்துகொண்டால் சந்தகமே இல்லாமல் இது தங்கத்தை விட உயர்ந்த பொக்கிஷம் என்பதை உணர்.
  • அதை சார்ந்து எம்முடைய தினசரி பயிற்சி ஆக்கிக்கோண்டால் அது தாழ்வில்லாத மகிழ்ச்சியை தரும். முடிவில்லாத எங்கும் நிறைந்த மகிழ்வைத்தரும் அந்த உயர்வான அந்த பரிசுத்தத்தை பெற இந்த உலகில் உயர்ந்த செய்கையான பக்தியை கைக்கொள்.
  • அந்த பக்தியை பற்றினவர்க்கே முக்தியும் சித்தியுன் சாத்தியமாகும். அப்படி பக்தி உன்னில் உண்டாக அந்த சிவனின் செயலே காரணம்.
  • அன்பென்ற மலரை உன் மனதில் தூவி தேவியின் பாதார விந்தங்களை குருபாதங்களாக தியானித்து, இன்பமாய் மனமகிழ்வுடன் உன் உடல் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து, உன்னை நீ ஈடேற்ற வேண்டும் என்று நீ உன் உடலினுள் இருக்கும் ஆறு வீடுகளையும் கண்டு அதனை எப்படி இயக்குவது என்ற வழியையும் அறிந்து கொண்டு, மனதை தேவையற்ற எண்ணங்களால் கொதிக்க விடாமல் தொண்டு செய்துகொண்டு
  • ஆதிசிவனின் இருப்பிடத்தை அறிய, உடலில் ஆன்மா இருந்தால்தான் உடலின் ஆட்டம் என்பதை அறிந்து கொண்டு, அது அற்றபோதே உடல் வாட்டமடைந்து இறக்கிறது என்று அறிந்து,
  • வான் கதி என்று மகா பிராண சக்தியில் நாட்டம் வைத்து, உன் சாதனையை தொடர, அதன் பயனாக உனது அகத்தில் உண்டாகும் எல்லையற்ற மகிழ்ச்சியால் எப்போது கொண்டாட்ட மன நிலையில் இருப்பாய்.
  • எட்டும் இரண்டும் எங்கிருக்கிறது என்று அறிந்து, அதை உனக்குள்ளே தெளிவாக ஏகமாய் அறிந்து, அவை எல்லாம் தோன்றும் வெட்டவெளியை சார்ந்து தியானித்து, ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி, மிகுந்த களிப்புடன் உலகத்தில் உள்ள எதிலும் இச்சை வையாமல், ஒவ்வொரு நாளும் சிரசில் இருந்து வழியும் செந்தேன் போன்ற அம்ருதத்தை மொள்ளு, சிந்தை தித்திக்க தெவிட்டாமல் இதை உட்கொள்ளு!

பொய்க்கலை யால்நட வாதே - நல்ல
புத்தியைப் பொய்வழி தனில்நடத் தாதே.      
கூட வருவதொன் றில்லை - புழுக்
கூடெடுத் திங்கள் உலவுவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை - அதைத்
தேடும் வழியைத் தெளிவோரு மில்லை.
ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு - அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு.       
உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னும் காட்டை - வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை.  
காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ
பேசமுன் கன்மங்கள் சாமோ - பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ.
பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம்
போகவே வாய்த்திடும் யாவர்க்கும்போங் காலம்
மெய்யாக வேசுத்த சாலம் - பாரில்
மேவப் புரிந்திடில் என்னனு கூலம்.       
சந்தேக மில்லாத தங்கம் - அதைச்
சார்ந்துகொண் டாலுமே தாழ்வில்லா பொங்கம்
அந்தமில் லாதவோர் துங்கம் - எங்கும்
ஆனந்த மாக நிரம்பிய புங்கம்.      
பாரி லுயர்ந்தது பத்தி - அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி.        
அன்பெனும் நன்மலர் தூவிப் - பர
மானந்தத் தேவின் அடியினை மேவி
இன்பொடும் உன்னுட லாவி - நாளும்
ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி.       
ஆற்றறும் வீடேற்றங் கண்டு - அதற்
கான வழியை யறிந்து நீ கொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடுங் கொண்டு.            
ஆன்மாவா லாடிடு மாட்டந் - தேகத்
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையி லுனக்கு வருமே கொண் டாட்டம். 
எட்டு மிரண்டையும் ஓர்ந்து - மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து.  
இந்த வுலகமு முள்ளுஞ் - சற்றும்
இச்சைவை யாமலே எந்நாளுந் தள்ளு
செந்தேன்வெள் ளமதை மொள்ளு - உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...