குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, December 31, 2020

தலைப்பு இல்லை

2021 இன் முதல் மாத கற்றல் சங்கல்பம்! 

கவனிக்கவும். வாசிப்பதற்கு அல்ல! கற்றல் என்றால் கல்லுதல் என்று அர்த்தம்! கல்லுதல் என்றால் ஆழமாகத் தோண்டி என்ன இருக்கிறது என்று புரிந்துக் கொள்ளுதல் என்று அர்த்தம்! 

உண்மையான கல்வி என்பது மனதை செம்மைப்படுத்தும் அறிவே அன்றி மனதிற்கு தகவல்களைச் சேகரிப்பது இல்லை என்ற சுவாமி விவேகானந்தரின் அறிவுரை ஆழமாக சிறுவயதில் பதிந்ததால் எனது அறிவியல் கல்வியை விட மனதை, அதன் நுண்மைகளைக் கற்பதிலேயே அதிக நேரத்தைச் செலவிட்டுள்ளேன். 

இங்கொன்று, அங்கொன்றாக சுவாமி விவேகானந்தர் இப்படிச் சொன்னார், அப்படிச் சொன்னார் என்ற துணுக்குகளை வாசிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை! 

ஒவ்வொரு உரையும் அவரிற்கு முன்னால் இருந்தவர்களின் பரிபக்குவத்திற்கான உபதேசம், வழிகாட்டலாகத் தான் இருக்கும், அதைப் புரியாமல் வெறுமனே அவர் என்ன சொன்னார் என்பதைப் புரிந்துக் கொள்ள முடியாது! 

ஆகவே முழுமையாக ஒருக்கால் மூழ்கி எழுந்து, பின்னர் ஆர்வமுள்ளவர்களுடன் சேர்ந்து கற்கலாம் என்று ஒரு திட்டம்! 

எமக்கு மிக அருகில் வாழ்ந்து யோகத்தில் மிக உன்னத நிலை அடைந்தவர் சுவாமிஜி! பதஞ்சலி யோகத்தின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு சுவாமிஜியினுடையது! அவர் மனதைப் பற்றி 120 ஆண்டுகளுக்கு முன்னர் கூறியதை நோக்கி அதன் பிறகு தான் அறிவியல் உலகம் நகரத் தொடங்கியது! 

இவற்றை வாங்கி அனுப்பி வைத்த தம்பி கஜானனுக்கு நன்றிகள்!


தலைப்பு இல்லை

இந்த வருடம் எனது வாழ்க்கையில் குருநாதரின் பணியை முன்னெடுக்க செம்மைப்படுத்திய வருடம்! 

எனது குருநாதர் நாடிவருபவர்கள் மனதை உயர்த்த, யோகம் சாதனை கற்பிப்பாய் என்று கூறிய வாக்கிற்கமைய பத்து வருடங்களுக்கு முன்னர் எழுத்துப்பணி ஆரம்பமாகியது! 

பின்னர் ஒரு சில சிறிய ஆர்வமுள்ள குழுவிற்கு மாத்திரம் எனது தொழில் வாழ்க்கைக்கு மத்தியில், நேரப் போதாக்குறையுடன், சாதனை கற்பித்து வர அதை எப்படி அனேகருக்கு கற்பிப்பது என்ற எண்ணத்திற்கு நேரடிக் கற்றலுக்கு பயணப் படவேண்டும் என்ற பழைய கற்பித்தல் முறையில் சிரமம் இருந்தது. 

இந்த வருடம் புதிய நிகர் நிலைக் கற்கையை அறிமுகப்படுத்தியது! இந்தப் பணியை முன்னெடுக்க காலம் கனிந்தது! 

உலகில் எந்தப் பகுதியில் உள்ளவர்களுடனும் இணையலாம் என்ற வாய்ப்பினை இந்த வருடம் இயல்பாய் ஏற்படுத்தித்தந்தது! 

குருபாரம்பரியமாக பெற்ற யோக அனுபவத்தை, அறிவை பகிருந்துக் கொள்ள உருவாகியது சிருஷ்டி நிறுவகம்! 

இது பெருங் கூட்டம் கூட்டி கற்கும் இடமல்ல! யோகம் கற்கவேண்டும், சிரத்தையுண்டு, குருபாரம்பரிய வழி நிற்க வேண்டும் என்ற தூண்டுதல் உள்ளவர்களுக்கு மூலகுரு ஸ்ரீ அகத்திய மாமகரிஷியின் வழி மானச யோக வித்தைகள் படிப்படியாக குருபரம்பரை முறைப்படி கற்பிக்கும் திட்டம் இது! 

தற்போது உலகெங்கும் உள்ள இரண்டு அணி மாணவர்கள் ஆரம்ப கற்கை நெறியைப் பூர்த்தி செய்து அடுத்த படிக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள். 

2021 இல் இன்னும் அனேகர் இந்த உயரிய அறிவினைக் கற்பார்கள் என்ற எண்ணத்துடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


கல்யாண மித்ரன் - போற்றத்தக்க நண்பன் - ஆத்ம நண்பன்

எத்தனை பேருக்கு இப்படியான நட்பாக இருக்க ஆர்வம் இருக்கிறது? 

எத்தனை பேருக்கு இப்படியான நட்புக் கிடைத்திருக்கிறது? 

உரையாடுவோம்! 

புத்தபெருமான் ஒரு தியான சாதகனுக்கு, பிக்குவிற்கு, வாழ்க்கையில் முன்னேற வேண்டியவனுக்கு இருக்க வேண்டிய நட்பினை கல்யாண மித்திரன் என்கிறார். இதன் அர்த்தம் போற்றத்தக்க நண்பன் என்று மொழிப் பெயர்க்கப்பட்டாலும் தமிழில் ஆத்ம நண்பன் என்பது சரியான சொல்லாக இருக்கும். இத்தகைய போற்றத்தக்க/ஆத்ம நண்பன் வாய்த்தால் அவனுடைய ஆன்ம முன்னேற்றம் சிறக்கும் என்கிறார். 

திருவள்ளுவர் நட்பினைப் பற்றி மொத்தம் 17 அதிகாரத்தில் 170 குறள்களில் விரிவாக விரித்துரைத்திருக்கிறார். 

புத்தர் குறிப்பிடும் போற்றத்தக்க நண்பன் ஒருவனின் மனதை தூயவழியில் செலுத்தக் கூடிய ஆற்றல் உள்ள நண்பன் பற்றி கீழ்வருமாறு கூறுகிறார்:

எவன் ஒருவன் முழுமையாக ஸ்திர புத்தியை பின்பற்றுகிறானோ, எவன் ஒருவன் சீலத்தில் நிலைபெற்று சீலத்தில் முழுமையாக நிலைக்கிறானோ, எவன் ஒருவன் விவேகத்தில் நிலை பெற்று விவேகத்தில் நிலைக்கிறானோ, எவன் ஒருவன் நம்பிக்கையில் நிலை பெற்று நம்பிக்கையில் நிலைக்கிறானோ, கருணையில் நிலைபெற்று கருணையில் நிலைக்கிறானோ, அத்தகைய ஒருவனின் நட்பினைப் பெற்று ஒருவன் அவன் மூலம் இந்தப் பண்புகளை வளர்த்தெடுப்பதே கல்யாண மித்ரம் - போற்றத்தக்க நட்பு என்கிறார்!

இத்தகைய நட்பிற்கு ஏழு பண்புகளை பௌத்த தியான மூல நூலான விசுத்தி மார்க்கம் அட்டவணைப்படுத்துகிறது:

1) அன்புடமை - நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்பார் வள்ளுவர். நண்பனிடம் உண்மையான அன்பிருக்க வேண்டும்! இந்த அன்பு எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அவன்/அவள் நல்ல நிலை பெறவேண்டும் என்ற எண்ணத்தில் மாத்திரம் இருக்க வேண்டும். 

2) மதிப்புடன் இருத்தல் - ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்புடன் அணுகுதல். 

3) வணங்குவதற்குரிய தெய்வீகப் பண்புகளைக் கொண்டிருத்தல். 

4) எந்தத்துன்பத்திலும் தகுந்த சரியான ஆலோசனையைப் பெறக்கூடிய அறிவும் ஆற்றலும் உள்ளவர்.

5) ஒருவரின் பிரச்சனையை நன்கு செவிமடுக்கக்கூடிய பொறுமை உடையவனாக இருத்தல்.

6) எந்தச் சந்தேகம் வந்தாலும் அதை முழுமையாக விளக்கி மனதை உறுதி நிலைக்குக் கொண்டு செல்லக்கூடிய ஆற்றல் உடையவர். 

7) தேவையற்ற, பயனற்ற விடயங்களை உரையாடி மனதினைக் குழப்பாதவராக இருக்க வேண்டும். 

இந்த ஏழு பண்புகள் உடைய ஒருவரை நட்பாகப் பெற்றால் அத்தகையவன் தனது மனதினை அறிந்து, உண்மையைப் புரிந்து துன்பங்களிலிருந்து விரைவில் வெளிவருவான். 

நாம் ஒவ்வொருவரும் மற்றவர் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆத்ம நண்பர்களாக கல்யாண மித்ரர்களாக மாற 2021 ஆண்டில் சங்கல்பித்துக் கொள்வோம்!


Wednesday, December 30, 2020

தலைப்பு இல்லை

எமக்கு ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் சூழ்நிலையும் எமது அகத்திற்கு ஞானத்தைத் தருவதற்காக இந்த பிரபஞ்சத்தை இயக்கும் அந்த மகா சக்தி ஏற்படுத்துகிறது என்ற விழிப்புணர்வும், 

ஆசிரியர் வினாத்தாள் தருவது நான் எவ்வளவு கற்றலை உள் வாங்கியிருக்கிறேன் என்பதை பரீட்சித்து எனது புரிதலை மேம்படுத்தவே அன்றி என்னை அவமானப்படுத்த, தாழ்மைப்படுத்த இல்லை என்ற அறிவுடனும், 

புலம்புவதை விட நடக்கும் ஒவ்வொன்றையும் கூர்ந்த அவதானத்தால் அவதானித்து அவற்றின் காரண காரியத்தை அறிய முயற்சி செய்து விடை காணவேண்டும்!

விடை காண முடியவில்லை என்றால் அது பொய் என்று உரைத்து ஏளனமாக்கும் மனநிலையில் இருந்து வெளிவர வேண்டும்! இன்று பலரும் விடை  இல்லையென்றால் அது பொய் என்று பரிகாசித்து தம்மை அறிவியல் சிந்தனை (scientific thinking) உடையவர்கள் என்று எண்ணிக் கொள்கிறார்கள்! ஒரு அறிவியலாளன் தன்னால் அறிய முடியவில்லை, புரியவில்லை என்று கூறுவது தான் அறிவியல் சிந்தனையே அன்றி தனக்கு அனுபவமோ, பயிற்சியோ இல்லாத ஒன்றைப்பற்றி கேள்வி எழுப்புவதோ, பரிகாசிப்பதோ அறிவியல் முறை அல்ல! 

இந்த அறிவியல் சிந்தனையுடன், தன்னை மேதாவி என்ற ஆணவச் சிறைக்குள் சிக்கவைக்காமல் தளராமல் முயற்சி செய்பவன் வாழ்க்கையை, இயற்கையைப் புரிந்துகொள்கிறான்! 

தெளிந்த மனதுடன் தன் கடமையைச் செய்கிறான்!


தலைப்பு இல்லை

தனிமனித வாழ்வின் படிப்பினைக்கு அருமையான ஆண்டு 2020!
உலகப் பொருளாதாரம், அரசியல் என்ற பெரிய விஷயங்கள் இவற்றை எல்லாம் தள்ளி வைத்து விட்டு ஒரு மனிதனாக எதற்காக வாழ்கிறோம்? ஏன் வாழ்கிறோம் என்று கேள்வி கேட்பதற்கு உந்தலைத் தந்த ஆண்டு!
வேலை, பணம் என்று தம்மைச் சூழ இருக்கும் அருமையான விஷயங்களை எல்லாம் பார்க்காமல் பைத்தியம் பிடித்து ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களை முடக்கி உட்கார வைத்து சிந்திக்க வைத்த ஆண்டு! 
எது எமது வாழ்க்கையை வாழ அடிப்படையான தேவை - அளவான உணவு, இருக்க வசிப்பிடம், மகிழ்ச்சியாக இருக்க குடும்பம் என்ற அடிப்படையை புரிய வைத்த ஆண்டு 2020!.
பலரை அகவயமாக்கி யோகம், தியானம் என்று செலுத்தியிருக்கிறது!
பலரை சேர்த்து வைத்திருக்கும் பணத்தால் ஒன்றும் ஆகப் போவதில்லை நல்ல காரியத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது 2020! 
நேரில் சென்று நேரத்தை வீணாக்கி காரியம் செய்யும் வழமையை மாற்றிக் கொண்டு வீட்டில் இருந்த இடத்தில் இருந்துக் கொண்டு கற்றல், வியாபாரம் ஆகியவற்றைத் தந்து மனிதனுக்கு சுதந்திரத்தை தந்த ஆண்டு 2020! 
கற்றல் என்பது ஆசிரியர் வலிந்து புகுத்துவது என்பது மாறி மாணவர்கள் சுயமாக கற்கும் தலைமுறைக்குள் செல்ல ஆரம்பித்திருக்கிறது! 
விமானங்கள் பறக்காமல் ஆகாய மண்டலம் சுத்தமாக்கியிருக்கும் ஆண்டு! 
பயணங்கள் அதிகமில்லாமல் வாயுமண்டலத்திற்குரிய மாசினைக் குறைத்திருக்கும் ஆண்டு 2020! 
மனித உறவுகளை மேம்படுத்தாமல், முகம் பார்க்காமல் வேலை என்று ஓடிக் கொண்டிருந்தவர்களை ஓரிடத்தில் இருந்து நாம் என்ன செய்கிறோம் என்று சிந்திக்க வைத்த ஆண்டு! 
சுய தொழில் உருவாக்க வேண்டும்! விவசாயம் - உணவு உற்பத்தி செய்ய வேண்டும் என்று சிந்தித்த ஆண்டு!

Monday, December 28, 2020

தலைப்பு இல்லை

இன்று ஸ்ரீ தத்தாரேய ஜெயந்தி

தலைப்பு இல்லை

உரையைக் கேட்க நீண்ட நேரம் செலவழிக்க முடியாது. நான் ரொம்ப பிஸி என்பவர்களுக்கு சுருக்கமாக என்ன உரையாடப்பட்டது என்பது பற்றிய படங்கள்!

படம் பார்த்து கதையைப் புரிந்துகொள்ளவும்!


தலைப்பு இல்லை

All Life is Yoga 

The secret of success in yoga is to regard it:

Not as one of the aims to be pursued in life, but as the one and only aim, Not as an important part of life but as the whole of life!


Sunday, December 27, 2020

சனிபெயர்ச்சி விஷேட பதிவு! ஒரயோகசாதகனுக்கும் சனீஸ்வரருக்கும் இடையிலான உரையாடல்!

சனிஸ்வர பகவானே! குருதேவா! கடந்த ஒரு வாரமாக இங்கு மக்கள் நீங்கள் இராசி மாறப்போகிறீர்கள் என்று பயந்து போய் இருக்கிறார்கள்!

புத்தரை வழிபடும் சகோதரர்களும் உங்களை கண்டு பயந்து பரிகாரம் என்று ஜோதிடர், கோயில் என்று ஓடிய வண்ணம் இருக்கிறார்கள்!

கடவுள் இல்லை என்று நாத்திகமும், கொமினிசமும் பேசும் நண்பர்களும் பின்வாசலால் ஜோதிடரிடம் சென்று விசாரித்துக் கொள்கிறார்கள்!

தன் முயற்சி இல்லா மாணவர்கள் உங்கள் மேல் குற்றம் சாட்டிவிட்டு நீங்கள் இருக்கும் நிலையில் படித்தாலும் தலையில் ஏறாது என்று கூறுகிறார்கள்.

கணவனுக்கும் மனைவியிற்கும் வரும் மனஸ்தாபம் உங்களால் என்று குறை கூறுகிறார்கள்.

ஜோதிடர்களும், கோயில்களும் உங்கள் பாதிப்பினை இவர்கள் எல்லோருக்கும் குறைத்து தருவதாக வாக்குறுதி அளித்து ஸ்பெஷல் பக்கேஜ் அறிவித்துள்ளார்கள்!

இவற்றில் எவை உண்மை? எது பொய் சற்று விரிவாக கூற வேண்டுகிறேன் ஐயனே!

பதில் பதிவில்! 


தலைப்பு இல்லை

ஆற்றலுள்ள பட்டதாரிகளுக்கான வழிமுறைகள் என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளேன்! 

உரையின் கருத்து பட்டதாரிகளுக்கு மாத்திரம் உரியதல்ல! 

வாழ்க்கையில் எண்ணம், செயல், பழக்கம், மனச் சித்திரங்கள் எப்படி பாதிக்கிறது என்ற அடிப்படை ஸ்டீபன் கோவியின் நூலில் தரப்பட்ட மாதிரியின் (model) மூலம் அறிமுகப்படுத்தியுள்ளேன்! 

நூலை வாசித்திருந்தாலும் உரையைக் கேளுங்கள்! பொதுவாக எனது புரிதலையே பகிர்ந்துள்ளேன்! இது நூலை இன்னும் ஆழமாகப் படிக்க உங்களுக்குத் துணைபுரியும்! 

அனேகருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்! பார்த்து விட்டு கருத்துப் பதியுங்கள்! 

அனேக ஆர்வமுள்ளவர்கள் இருப்பின் இதனை ஒரு கற்கை வட்டமாக மாற்றலாம் என்று மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் எண்ணியுள்ளது!


Saturday, December 26, 2020

தலைப்பு இல்லை

மன அழுத்தத்திற்கு மருந்து போடும் காடுகள் - இப்படியான ஆய்வுகள் சூழலியலாளனான என்னை எரிச்சல் ஊட்டுபவை! 

சுயநலமும், குறுகிய புத்தியும் உள்ள மனிதன் தன்னைத் தானே செம்மைப்படுத்தாமல் செய்யும் குழப்பத்திற்கும், அட்டூழியத்திற்கும் காடுகள் ஏன் மருந்து போட வேண்டும்! 

மன அழுத்தம் வருவது இயற்கைக்கு மாறாக அதிக பற்றுடன் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்று பற்றுக் கொண்ட மனிதனிற்கு! மன அழுத்தத்திற்கு நல்ல மருந்து பற்றில்லாமல் காரியமாற்றுவது எப்படி என்பதை கற்றுக் கொள்வது! உடலும் மனமும் எப்படி இசைந்து இயங்குகிறது என்பதை அறிந்துக் கொள்வது! இதை விட்டுவிட்டு காட்டிற்கு போகிறேன் என்று மனிதனைத் தூண்டினால் அங்கு சென்று அவன் அந்தக் காட்டை அழிக்கத் தேவையான அனைத்தையும் செல்வான்!  

மன அழுத்தத்துடன் காட்டிற்குச் செல்லுபவன் படுத்துறங்க இடம் வேண்டும் என்று ஹோட்டல் கட்டுவான், மலசலம் கழிக்க கழிப்பிடம் கட்டுவான்; காப்பி, டீ குடிக்காமல் இருக்க முடியாது என்று coffee shop போடுவான்! 

பிறகு சில வருடங்களுக்குப் பிறகு அங்கு காடுகள் இருக்காது! கொங்கிரீட் காடுகள் இருக்கும்! 

இப்படித் தான் சபரிமலை, சதுரகிரி எல்லாம் கடவுள் அங்கு இருக்கிறார் என்று கூறி இன்று வெள்ளமும், சூழல் மாசும் நிறைந்த இடங்களாக மாறிக் கொண்டிருக்கிறது. 

காடுகள் மனிதனுக்கு நிம்மதி தருவதை விட பெரிய சூழல் பொறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் சிக்கலான ஒரு சூழல்தொகுதி! அதை அதன் பெரும் பொறுப்பைச் செய்ய விடாமல் குழப்பக்கூடாது!


Friday, December 25, 2020

தலைப்பு இல்லை

Esoteric schools என்பதன் தமிழ்படுத்தல் குப்த வித்யாலயங்கள் என்று கொள்ளலாம். உலகின் பொது ஸ்தூல தளத்திற்கு வராத அகவுலக விதிகளைக் கற்கும் குழுக்களை இந்தப் பெயரால் அழைப்பார்கள். 

இந்த அறிவுக் குழுக்கள் பெரும்பாலும் பெரியளவில் கூட்டம் சேர்ப்பதில்லை. பக்குவம் உள்ளவர்களை அகஞானம் பெற விருப்பம் உள்ள சாதகர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தனிப்பட பண்படுத்தி முன்னேற்றம் பெற வைப்பதும் அவர்களூடாக சமூகத்திற்கு நன்மைகளை செய்விப்பதுமாக மனிதகுலத்தின் பரிணாமத்தில் செல்வாக்குச் செலுத்தும் அறிவுக் குழுக்கள்! 

இந்தக் குழுக்கள் உலகின் அனைத்துப் பாகங்களிலும் அனைத்துக் காலங்களிலும் இருந்துக் கொண்டிருக்கிறது! 

Francis beccan, Sir Isaac Newton, லியானாடோ டாவின்ஸி போன்றவர்கள் இந்தக் குழுக்களைச் சார்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது


Thursday, December 24, 2020

தலைப்பு இல்லை

மண்புழுக்கள் ஆரோக்கியமான மண்ணின் குறிகாட்டிகள் (soil indicator) மாத்திரமல்ல! அந்தச் சூழலே நீரும், உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கான குறிகாட்டிகள்! 

ஒரு விவசாயியிற்கு செலவில்லாத உழவு இயந்திரம்! உழவு இயந்திரத்தை விட மிக நுண்ணறிவுடன் தாவரத்திற்கு பாதிப்பு வராமல் உழக்கூடிய செயற்திறன் மிக்கது! 

உங்கள் விவசாய நிலத்தில் ஒரு சதுர அடியில் 12 - 13 மண்புழுக்கள் இருந்தால் அது சேதன விவசாய நிலம் என்று சொல்ல முடியும்! 

இயற்கை விவசாய நிலத்தில் இதைவிட அதிகமாக இருக்கும்! 

இன்று எமது பண்ணை முகாமையாளர் நான்கு மாதங்களின் பின்னர் எமது ஐந்தடுக்கு உணவுக்காடு இயற்கை விவசாய நிலத்தில் உள்ள மண்புழு எண்ணிக்கையைக் கணக்கிட்ட போது இதை விட மிக அதிகமாக 20 மண்புழுக்கள் இருந்தது!

மண்ணின் காவலன் மண்புழு! படங்கள் கீழே! 


தலைப்பு இல்லை

இன்றைய மின்வழி கற்கை, நிகர் நிலைக் கற்கை என்பவை சிறக்க ஸ்ரீ அரவிந்தரின் கீழ்வரும் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது!

மாணவன் ஒரு குறித்த ஆசிரியர் குறித்த பாடத்தில் சர்வ வல்லமையுள்ள கடவுள் போல் எண்ணத் தொடங்கி அவரிடம் நேரே வகுப்பிற்குச் செல்லாவிட்டால் தான் பாடம் சித்தியடைய முடியாது என்று எண்ணத் தொடங்குகிறான்! ஆனால் கற்றலில் தனக்கிருக்கும் பொறுப்பு எது என்று தெளிவுற்ற மாணவனது கற்கை வெளிக் காரணிகளால் குழப்பமுறுவதில்லை! 

சுருக்கமாக இந்தியத் தத்துவவியலில் ஆசிரியர் என்ற ஆளுமையின் வரைவிலக்கணத்தை ஸ்ரீ அரவிந்தர் ஒழுங்குபடுத்தித் தந்துள்ளார்! 

"கற்பித்தலின் முதல் தத்துவம் உண்மையான கற்பித்தலில் எதையும் கற்பிக்க முடியாது என்பதைப் (ஆசிரியரும் மாணவரும்) புரிந்துகொள்வது! ஆசிரியர் என்பவர் அறிவுரையாளரோ, பணியாளரோ அல்ல! அவர் உதவியாளர் அல்லது வழிகாட்டி ஆவார்! அவருடைய வேலை அறிவைப் பெறுவதற்கான வழியைப் பரிந்துரைப்பதே, எதையும் புகுத்துவது அல்ல! உண்மையில் மாணவனின் மனதைப் பயிற்றுவிப்பது அல்ல ஆசிரியனின் வேலை; அவர் செய்யக் கூடியது அவனது (மனம் புத்தி முதலான) கருவிகளை எப்படி செம்மைப்படுத்தி அறிவினைப் பெறுவது என்ற வழியைக் காட்டுவதுடன், மாணவனை உற்சாகப்படுத்தி அந்தப் பயணத்தில் உதவி செய்வது! ஆசிரியர் அறிவை புகுத்துவதில்லை, எப்படி அறிவைப் பெறுவது என்ற வழியைக் காட்டுவதே ஆசிரியரின் வழி! ஏனெனில் அறிவு வெளியிலிருந்து பெறப்படுவதில்லை! ஆசிரியர் மாணவனுடைய ஆழத்தில் புதைந்து கிடக்கும் அறிவினை மேலெழுந்து வரச் செய்வது எப்படி என்பதைப் பற்றியதே கற்பித்தல்! 

- ஸ்ரீ அரவிந்தர் - 

மேற்குறித்த புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் போது இப்போதுள்ள மின்வழிக் கற்கை பெரியளவில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தும் என்பது எனது நம்பிக்கை!


தலைப்பு இல்லை

அண்மைக் காலமாக யாழ்ப்பாணம் வெள்ளம் என்று ஒரு பகுதியில் உரையாடிக் கொண்டிருக்க, இன்னொரு புறம் ரம்மியமான இயற்கைச் சூழல் என்ற விதத்தில் பலரும் கீழ்வரும் சரசாலை வாய்க்காலின் படத்தைப் பகிர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்! இன்னும் ஒரு படி மேலே சென்று சுற்றுலாத் துறைக்கு உகந்த இடம் என்றும் இப்போது பிரபலப்படுத்தத் தொடங்கிருக்கிறார்கள்! 

இனி இந்தச் சூழல் மாசடைதலை நோக்கிச் செல்லும்! வார இறுதியில் வாடா மச்சான் சரசாலை வாய்க்காலில் பார்ட்டி போடுவோம், புரியாணி சமைப்போம் என்று ஒரு கூட்டம் கிளம்பும்! 

வீட்டுக்குள்ள இருக்கிறது ஒரே stress என்று கொழும்பில் இருப்பவர் வார இறுதிக்கு இந்த வாய்க்கால் கரையோரம் குடும்பத்துடன் இன்பமாக இருக்க வெளிக்கிட்டு வருவார்! 

இப்படி வருபவர்கள் மென்பானமும் வன்பானமும் குடித்துவிட்டு வாய்க்காலில் எறுவார்கள்! புரியாணி பக்கட் வீசப்படும்! 

வாய்க்கால் அடைபடும்!

அடுத்த வருடம் சரசாலையில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு என்று முகநூல் போராளிகள் புலம்புவார்கள்! 

வெள்ளம் வடிந்தவுடன் சரசாலை பிரதேசபை (??) பிளாட்ஸ்டிக் போத்தல்களை அள்ளும்! நாம் எல்லோரும் வெள்ளத்திற்கு முதல் பிரதேச சபை என்ன செய்துக் கொண்டிருந்தது? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருப்போம்! 

நண்பர்களே, இயற்கை உங்களை மகிழ்விக்க, மனக் களிப்பிற்குரிய இடம் என்றால் அதைப் பக்குவமாக பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் உங்களுடையது! எங்கோ இயல்பாக இருக்கும் இயற்கையில் சென்று குப்பை கொட்டி அதை அழுக்காக்கி நிம்மதி பெறுவதை விட உங்களிடம் ஒரு சிறுதுண்டு காணி இருந்தால் அதில் ஒரு உணவுக்காட்டினை உருவாக்குங்கள்! நீரோட்டம், சிறுகுட்டை உருவாக்கி நீர் சேமியுங்கள்! மீன் வளருங்கள்! பறவைகள் உங்களைத் தேடிவரும்! நீங்கள் உங்கள் ஆற்றலுக்குள் இயற்கையை உருவாக்கி அதைப் பேணி இன்புறுங்கள்! 

எங்கோ இயற்கை அன்னை இயல்பாக உருவாக்கி இருக்கும் இடத்திற்குச் சென்று சுற்றுலா என்ற பெயரில் அதை அசுத்தப்படுத்தி இன்பம் காணாதீர்கள்! 

இயற்கை போகப் பொருள் அல்ல!! எம் மனம் போன போக்கில் அனுபவிப்பதற்கு! இயற்கை எம்மை வலிமைப்படுத்தும் எமது ஆதார சக்தி, எமது அறியாமையால் அதை அழித்தோம் என்றால் எமது எதிர்காலச் சந்ததிக்குரிய முதுசங்களை அழித்தவர்களாவோம்! 


தலைப்பு இல்லை

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் தமது "அறிவுத்தேடல்" நிகழ்ச்சியினை தொடங்கி வைக்க அழைத்துள்ளார்கள். 

எதிர்வரும் சனிக்கிழமை 0330 PM இற்கு zoom வழியாக! 

உங்கள் வரவினை உறுதிப்படுத்த இந்த இணைப்பில் விருப்பத்தினைத் தெரிவிக்கவும்: https://fb.me/e/54yvUigsT


Monday, December 21, 2020

தலைப்பு இல்லை

அண்மையில் ஒரு பட்டதாரி மாணவன் தனது கற்கை முடிவின் பின் என்ன தொழில் துறையை தேர்ந்தெடுப்பது என்று அறிவுரை கேட்க உரையாடியிருந்தார்! 

அவரிடம் நீங்கள் உண்மையில் உளமார என்ன தொழிலை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்று கேட்க, எப்படியாவது பல்கலைக்கழக விரிவுரியாளராக வந்துவிட வேண்டும் என்று சொன்னார்!  

அதற்கு நான் ஏன் அப்படி வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டேன்! அவர் சொன்ன பதில், மிக கௌரவமான நல்ல சம்பளமுடைய தொழில் என்பது! 

அதற்கு நான் "ஆசிரியத் தொழில் என்றால் நாம் பல நூறு, ஆயிரம் பேரை உருவாக்கும் பணி அல்லவா?" ஆகவே பல நூறு நல்ல பிரஜைகளையும் மனிதர்களையும் உருவாக்கும் பொறுப்பிற்காக ஆசிரியராக வரவேண்டும் என்பதல்லவா முதல் எண்ணமாக இருக்க வேண்டும்! என்று கேட்டேன். 

இந்த உரையாடல் எமது சமூகத்தில் எப்படி நாம் பட்டதாரிகளின் மனதை சரியாக வழி நடாத்தி பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆற்றலுள்ள புத்திஜீவிகளாக ஆக்காமல் வேலைக்கும், கௌரவத்திற்கும் தொழில் தேடும் வலிமையற்றவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு உதாரணம்! 

உலகம் அனேக பிரச்சனைகளுக்குத் தீர்வு தேடிக் கொண்டிருக்கிறது! அவற்றை எப்படித் தீர்த்து தமக்குரிய வாய்ப்பாக்கி அவற்றினூடாக எப்படி பணத்தை உருவாக்குவது என்ற வித்தைகள் கல்விக்குச் சமாந்திரமாக போதிக்கப்பட வேண்டும்! பணம் சம்பாதித்துச் சேமித்துவைப்பவர்கள் இத்தகைய துறைகளில் புதிய தொழில் முனைவோரை உருவாக்க வேண்டும்! நம்பிக்கை கொடுக்க வேண்டும்!


தலைப்பு இல்லை

பலரும் மனதைக் கட்டுப்படுத்த என்னவழி என்று கேட்கிறார்கள்? இதற்கு தியானம், மந்திரம் சொல்லித்தர வேண்டும் என்று ஓடுகிறார்கள். 

யோகசாத்திரப்படி தியானம், மந்திர சாதனை என்பவை மனதைக் கட்டுப்படுத்த இருப்பவை அல்ல! மனதை தெய்வ உருமாற்றம் செய்ய இருப்பவை!

மனதைக் கட்டுப்படுத்த வழி என்ன? 

அறிவியலில் அறிவை அறியப் பயன்படுத்தும் விஞ்ஞான முறையைப் பயன்படுத்துவது! 

விஞ்ஞான முறை (Scientific Method) என்றால் என்ன? நீங்கள் அறிய விரும்பும் பொருளைப் பற்றி கேள்விகளை எழுப்புதல் (research questioning) முதல் படி! 

இந்தக்கேள்விகளின் படி அந்தவிடயம் சார்ந்து எடுக்கப்படும் முதல் அனுமானம் அடுத்த படி - இதை கருதுகோள் உருவாக்கம் (hypothesis formulation)

உருவாக்கப்பட்ட கருதுகோளைப் பற்றிய தரவுகள் அனைத்தையும் அவதானித்தல் (observation) மூன்றாவது படி! 

பெறப்பட்ட அவதானங்களை சரியான தர்க்க ரீதியாக அட்டவணைப்படுத்தல் (Data tabulation) நான்காவது படி

எமது அவதானங்களின் எல்லைகளை வரையறுத்தல், எமது அவதானங்களில் ஏற்படக்கூடிய வழுக்களை தீர்க்கமாக கவனித்தல் (Bias & error)

பெறப்பட்ட தரவுகள் நாம் உருவாக்கிய கருதுகோளை சரி என்று ஆதாரம் தருகிறதா இல்லை நாம் உருவாக்கிய கருதுகோள் பிழையாக்குகிறதா என்பதை பரிசீலித்தல் (analysis) ஆறாவது படி! 

பரிசீலனையில் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு எமது கருதுகோளிற்குரிய நிறுவலைப் பெறுதல் (Conclusion) ஏழாவது படி! 

இந்த நிறுவல் சில எல்லைகளுக்கு உட்பட்டது என்பதும், குறிப்பிட்ட அளவு வழு இருக்கிறது என்பதையும், இந்த முடிவு மறுதலிக்கக்கூடியது என்பதையும் உணர்ச்சிகள் இன்றி வெளிப்படுத்தல் அறிவியல் முடிவு (scientific conclusion) எனப்படும். 

இந்த ஏழு படிகளையும் உங்களுக்கு மனதில் ஏற்படும் ஒவ்வொரு கேள்விக்கும் உருவாக்க முடியுமானால் எமக்கு அறிவு உருவாகத்தொடங்கும்! 

இந்த அறிவியல் முறை என்பது சாதாரண மனதின் மிக உன்னத ஆற்றல்! இப்போது மனித குலம் இந்த ஆற்றலை அடைந்திருப்பதால்தான் இதை நாம் அறிவியல் யுகம் என்கிறோம்! 

இதற்கு மேலும் மனதின் தெய்வீகப்பரிணாமங்கள் இருக்கிறது, அவற்றை அடையவே யோகம், சாதனைகள் தேவைப்படுகிறது. 

ஆகவே சாதாரண நிலையில் ஒருவன் தனது மனதை அறிவியல் முறையில் (Scientific method) பண்படுத்துவானாக இருந்தாலே அவன் தனது கீழ்மனதை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவனாகி விடுவான்! 

சமூகத்தில் சரியான அறிவியல் சிந்தனை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இவை சாதாரண பிரச்சனைகளை உணர்ச்சிகள் இன்றி தெளிவாக அணுகும் ஆற்றலை உருவாக்கும்!


தலைப்பு இல்லை

பழைய ஆவணங்கள் சுவாரசியமானவை! அண்மையில் மகளுடன் சேர்ந்து அலுமாரி அடுக்கும் போது கிடைத்த சில ஆவணங்கள்! - 02 

13 வருடங்களுக்கு முன்னர் வவுனியா நகரசபை எல்லைக்குள் சூழலியல் முகாமைத்துவ கட்டமைப்பு பற்றிய ஒரு ஆய்வில் திரட்டப்பட்ட ஒரு குறிப்பு! 

வவுனியா நகரசபை எல்லைக்குள் காணாமல் ஆக்கப்பட்ட குளங்களின் பட்டியல்! இது பழைய ஒரு வரைபடத்திலிருந்து பெறப்பட்ட பெயர்கள்! இதன் மூல ஆவணம் என்னிடம் இல்லை. 

குளங்களின் சூழலியல் தேவைகள் எமது மேலோட்டச் சிந்தனையில் உதிக்காத சூழலியல் செயற்பாட்டினைக் (environmental functionality) கொண்டிருக்கின்றன. 

குளம் என்றால் விவசாயத்திற்கான நீரைத் தேக்கிவைக்கும் குட்டை என்றுதான் பலரும் நினைக்கின்றனர். ஆனால் குளம் வெள்ளத்தைத் தடுக்கும் ஆபத்தாண்டவன் என்பதை யாரும் நினைப்பதில்லை! 

முற்காலத்தில் குளங்கள் நகரத்தின் பள்ளக் காணியில் அமைத்து அதன் சமவுயரக்கோட்டிற்கு ஏற்ப ஒரு நீர்த்தொடர்ச்சியை ஏற்படுத்தி குளம் - வயல் - குளம் - வயல் என்றவாறு சூழலியல் அமைப்பு இருக்கும். அதிக மழைவீழ்ச்சி பெறும் போது ஒரு குளம் நிரம்பி வயல்களூடாக மறு குளம் நிரம்பும்; இப்படி கடல் வரை சரியாக நீர் செலுத்தப்படும். இதை cascade system - நீர்த்தொடர்ச்சி அமைப்பு என்று கூறுவர். 

இது இலங்கையின் வட மாகாணம் - வடமத்திய மாகாணத்தில் காணப்பட்ட புராதன நீர்ப்பாசன உத்தியாகும்! இப்படியான நீர்ப்பாசன அமைப்பு சோழர்கள் காவிரி நீர்ப்படுக்கையில் ஒரு துளி நீரையும் வீணாக்காமல் விவசாயம் செய்த உத்தியுடன் ஒத்துப்போகிறது. சோழர் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு வந்த முதலாம் பராக்கிரமபாகு இந்தக் கட்டமைப்பினை அடிப்படையாகக் கொண்டு "ஒரு துளி நீரையேனும் பயன்படுத்தாமல் கடலில் கலக்க விடமாட்டேன்" என்று கூறி பர்மாவிற்கு அரிசி ஏற்றுமதி செய்வித்ததாக வரலாறு கூறுகிறது. 

இன்று நகர அபிவிருத்தியும், நீர்ப்பாசன அபிவிருத்தியும் இந்த இயற்கை தொகுதி கட்டமைப்பை (Natural system) கருத்தில் கொள்ளாமல் சிறுபிள்ளைத்தனமான திட்டங்கள் முன்னெடுப்பதால் நீர்வளம் குன்றும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


Sunday, December 20, 2020

தலைப்பு இல்லை

பழைய ஆவணங்கள் சுவாரசியமானவை! அண்மையில் மகளுடன் சேர்ந்து அலுமாரி அடுக்கும் போது கிடைத்த சில ஆவணங்கள்! 

20 வருடங்களுக்கு முன்னர் சித்த மருத்துவம் படிக்கும் போது அழகாக (??) சிறிய கையெழுத்தில் எழுதிவைத்த மருத்துவக் குறிப்புகள் கிடைத்தது! 

1) தமிர பஸ்பம்

2) ஆமையோட்டுப் பஸ்பம்

3) ரசபஸ்பம்

4) இந்துப்பு பஸ்பம்

5) இலுப்பை அரப்பு பஸ்பம்

6) மகாவீர மெழுகு

7) கனகலிங்க மெழுகு

 நவ உப்பு மெழுகு

9) கெந்தி மெழுகு

10) நவசூத மெழுகு

சரக்கு விபரம் இருக்கிறது; கைபாகம் செய்பாகம் மறைப்பு!


Saturday, December 19, 2020

தலைப்பு இல்லை

அண்மையில் அருமைத் தம்பி ஒருவரிற்கு அவரின் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்க அழைத்தேன்! வாழ்த்துத் தெரிவித்த பின்னர் உரையாடல் தொடர அவர் கூறிய விஷயம்,

"உங்களுடைய யோகம் பற்றிய பதிவுகளைப் பார்த்தால் தலைசுற்றி பயந்து விடுகிறேன், எளிதாகப் புரிவதில்லை" என்றார்! 

எழுத்தில் எளிமைப்படுத்த முயற்சிக்கிறேன்! இது பற்றி உங்கள் கருத்துக்களை அறிந்துக் கொள்ள விரும்புகிறேன்! 

பதிவிடுங்கள்! Like இனை விட கருத்துகளும், உரையாடலும் வரவேற்கப்படுகிறது!


தலைப்பு இல்லை

இயற்கை விவசாயத்தின் தத்துவாசிரியர் முன்னோடி Masanobu Fukuoka விவசாய நிலத்தில் சிலந்திகளே அது இயற்கை விவசாய நிலம் என்பதற்கான குறிகாட்டி என்று குறிப்பிடுவார். 
விவசாய நிலத்திற்குள் உருவாகும் சிலந்தி வலைகள் அங்கு பயிரிற்கு பாதகம் தரும் பூச்சிகளை தனது வலைகளினூடாக பிடித்து தனக்கு உணவாக்கிக் கொள்ளும். பூச்சி கொல்லி தெளிப்பதால் அதிகம் இறப்பது இப்படி விவசாயியிற்கு உதவும் நண்பர்களாகிய சிலந்திகளே! 
இன்று எமது சாகம்பரா ஐந்தடுக்கு இயற்கை விவசாய உணவுக் காட்டிற்குள் பிடிபட்ட சிலந்தி வலை!

ஸ்ரீ அரவிந்தரின் அரசியல் தத்துவம்

அரவிந்தர் இந்திய சமூகத்தின் அரசியல் பற்றிக் கூறும் போது கீழ்வருமாறு கூறுகிறார்;

இந்திய சமூக பரிமாணத்தில் அரசியல் வீரியம் இருந்ததில்லை; பொதுக் கலாச்சாரம், பொதுப் பண்பாடு, பொது ஆன்ம வாழ்க்கை இவற்றிற்கான ஒரு தலைமைத்துவம் இவற்றைக் கொண்டிருந்தது, ஆனால் ஒரு தேசமாக எழுந்து நிற்கக் கூடிய அகவலிமையைப் பெற்றிருக்கவில்லை; அனேக துண்டுபட்டுக் கொண்ட மன்னர்களால் ஆன சிறுகுழுக்களாகவே இருந்தது; ஒரு பெரும் தேசமாக எழக் கூடிய "centrifugal force" தாங்கக்கூடிய வல்லமையை சமூகம் தனது அகத்தில் பெறவில்லை என்கிறார். 

அவர் பாவிக்கும் அந்த மையவிலக்க விசை என்ற சொற்பதம் மிக ஆழமாகப் புரிந்துக் கொள்ளப்பட வேண்டியது! சமூகத்தில் ஒவ்வொரு தனிமனிதனிற்குள்ளும் மற்றவர் மீது இருக்கும் வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி, எரிச்சல் இவை சமூகம் ஒரு இலக்கை நோக்கிச் செல்லவிடாமல் அந்தச் சமூகத்தை பிரிக்கும் மைய நீக்கு விசைக் காரணிகள்! 

நாம் எல்லோரும் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பிரகடனப்படுத்திவிட்டு, உள்ளே அவன் யாழ்ப்பாணத்தான், மலையகத்தான், மட்டக்களப்பான் என்று ஒரு எரிமலையும், இவன் அந்த சாதிக்காரன், இந்த சாதிக்காரன் என்று இன்னொரு பக்க எரிமலையும் குழுவிற்கும் இரகசியமாக மைய நீக்க விசையாக வேலை செய்து கொண்டிருக்கும். இவற்றை அந்தக் குழு சமப்படுத்தி மையத்தை நோக்கிச் செலுத்த வல்ல அறிவு முதிர்ச்சியும், பண்பாடும் அந்தக் குழுவிடம் இல்லாவிட்டால் அந்தக் குழு உடைந்து சிதறும்! இலக்கினை அடையாது! 

இதில் எல்லோரும் ஒற்றுமையாக சமூக நன்மை என்ற மையத்தை நோக்கி இயங்க வேண்டும் என்ற நிலையில் ஆனால், அனைவரது மனமும் பிளவுபட்டு மையத்தை விட்டு விலகி இயங்குவதாகவே இந்திய சமூக மனம் கட்டமைக்கப்பட்டிருப்பதாக அரவிந்தர் கருதினார்!

இந்த மைய நீக்கு விசைக் காரணிகளை வென்று ஒன்றிணைந்து பெருந்தேசமாக எழும் வல்லமையை பெறமுடியாதபடி சமூக மனது இருக்கிறது! 

இந்த மைய நீக்கு விசைப் பாங்கினை இன்று தமிழ் அரசியல்வாதிகளிடமும் நன்றாகக் காணக் கூடியதாக இருக்கிறது. 

வேற்றுமைகளைக் களைந்து விட்டு ஒரு இலட்சியத்திற்கு எப்படிப் பாடுபடுவது என்ற மைய நோக்கு விசை சிந்தனையை எப்படி உருவாக்குவது என்பதே இன்றிருக்கக் கூடிய சவால்!


Friday, December 18, 2020

Saturday, December 12, 2020

தலைப்பு இல்லை

அண்மையில் பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சி தொடர்பாக இரண்டு பெருந்தகைகளுடன் உரையாடும் சந்தர்ப்பம் வாய்த்தது! 

அவர்கள் செய்யும் பணியும், ஈ-கல்வி திட்ட மாதிரியும் (project model) இலங்கையில் கல்வி வளர்ச்சிக்கு - குறிப்பாக மலையக கல்வி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்ற உத்வேகம் உள்ள இளைஞர்களுக்கு, சமூக குழுக்களுக்கு ஒரு முன்மாதிரியாகும்! 

அந்த இரண்டு பெரியவர்களும் Muralee Muraledaran & Dr. Kumaravel Ganeshan ஆவார்கள்! 

திரு முரளீதரன் ஐயா அவர்களுடைய சிந்தனையைக் கேட்டபோது உண்மையில் சொல்ல முடியாத பூரிப்படைந்தேன்! ஒரு சமூகத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உடையவன் கொள்ள வேண்டிய அறம் பற்றி அவர் உரையாடியதை சுருக்கமாக கீழே;

1) அந்த உதவியிலிருந்து எந்தப்பிரதிபலனும் பார்க்கக்கூடாது; 

2) உதவி என்பது பணத்தை அள்ளி வெளிப் பகட்டிற்கு கொடுப்பதல்ல; ஒருவன் கல்வி கற்பதற்கு வழி இல்லை எனும்போது நாம் இருக்கிறோம் கரம்கொடுக்க என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினாலே அந்த நம்பிக்கையைப் பிடித்துக்கொண்டு அவர்கள் ஏறி வந்துவிடுவார்கள் என்பது! 

3) பிள்ளைகள் படித்து முன்னேற என்ன வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்; எமக்கு பெயரும் வேண்டாம், புகழும் வேண்டாம், அவர்கள் படித்தாலே போதும்!

இந்த மூன்றும் கல்வியைச் சமூகப் பணியாக முன்னெடுக்க விரும்பும் ஒரு குழு பின்பற்ற வேண்டிய மனப்பண்பு! 

கலாநிதி குமாரவேல் கணேசன் தேர்ந்த ஆய்வாளர்; ஒரு விஷயத்தை எப்படி முறைப்படி systemic ஆக அணுக வேண்டும் என்ற நுணுக்கம் தெரிந்த அறிஞர்! செய்யும் செயல் எவ்வளவு விளைவைத்தருகிறது, எப்படி விளைவைத் தருகிறது என்பதை புள்ளிவிபரவியலுடன் விளக்கக் கூடிய ஆழமான மனிதர்! 

இன்று உலகமே online digital education என்று வந்து நிற்கும் போது பலவருடங்களுக்கு முன்னர் skype இன் மூலம் வசதியில்லாத மாணவர்களுக்கு கற்பிக்க முடிவு செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். 

பொதுவாக சமூக செயல் என்பது சொந்தப் பகட்டிற்காகவும், அரசியல் பிரபலத்திற்காகவும், தம்மை உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்ளவும் செய்யும் செயலாகத்தான் சமூக ஆர்வலர்கள் பலராலும் செய்யப்படுகிறது. ஆனால் கல்வித்திட்டங்கள் அப்படி நடைமுறைப்படுத்த முடியாது! அவை உண்மையான விளைவைத் தரமுடியாது!

சமூகத்தில் பணம் உள்ளவர்கள் அதற்குத் தேவையான வசதிகளைக் கொடுக்க வேண்டும்; கற்றறிந்த கல்வியாளர்கள் திட்டத்தை சரியாக முன்னெடுக்க வேண்டும். 

கல்வித் திட்டங்களை நடைமுறைப்படுத்த சுயநலமற்ற உத்வேகம் (motivation), சரியான விளைவைப் (மாணவர்கள் கல்வியில் ஆர்வம், சிறந்த பெறுபேறு) பெறக் கூடிய சரியான உத்தி எது என்ற ஆய்வும், தெளிவும் இருக்க வேண்டும். 

இதற்கு இத்தகைய கல்வியாளர்களின் சிறந்த சிந்தனை உள்வாங்கப்பட வேண்டும். அவர்கள் செய்யும் செயலை எமக்குப் போட்டியாக எண்ணாமல் அவர்கள் அறிவையும், உதவியையும் எமது சமூகத்திற்கு எப்படிப் பெறுவது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்! 

பணமுடைய வியாபார சமூகம் கல்வியாளர்களை மதிப்புடன் சமூக நன்மைக்கு பயன்படுத்தும் கட்டமைப்புகளை உருவாக்கி உதவவேண்டும்! 

அரசியல்வாதிகள் கல்வியாளர்களை போட்டியாளர்களாக எண்ணாமல் எப்படி தனது தொகுதியில் நல்ல கல்வித்தரத்தை வளர்ப்பது என்று சிந்தித்து தம்மை பலப்படுத்த வேண்டும். 

மொத்தத்தில் சமூகத்தின் கல்விப் பணி என்று வரும் போது உள்ளகப் போட்டியை விடுத்து ஒருவருக்கு ஒருவர் பலமாக எப்படி இயங்குவது என்று பரந்த மனதுடன் சிந்திக்க வேண்டும்!


தலைப்பு இல்லை

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது

ஒருவர் மேல் ஒருவர் அன்பும், ஒருவரை ஒருவர் பாதிக்காதபடி அறத்தினை அடிப்படையாகக் கொண்ட செயலினை இருவரும் வகுத்துக் கொண்டால் அப்படிப்பட்ட இல்வாழ்க்கை பண்பும் பயனும் உடையதாக இருக்கும் என்கிறார் திருவள்ளுவர்!

ஒரு பெண்ணை ஆணவமற்று உளமார அன்புடன் எம்மில் ஒருபாகமாக ஏற்றுக் கொள்ளும் போது அவளில் உள்ள சக்தி தத்துவம் பூரணமாக வெளிப்பட்டு எம்மை ஆற்றலுள்ளவனாக்குகிறது! பெண்ணுடன் ஆணவப் போட்டியிடுபவன் சக்தியற்றவனாகி வாழ்க்கை குழம்பிப் போய்விடுகிறான்.

திருமணம் இப்படியொரு யோகத்தைத் தான் நிகழ்விக்கிறது!

என்னையொரு பூரண சுதந்திரனாக, எனது பைத்தியக்காரத் தனங்களைப் பொறுத்துக் கொண்டு என்னைத் தளரவிடாமல் வாழ்வை இன்பமாக்கிக் கொண்டிருக்கும் சக்தீஸ்வரியை கரம் பிடித்த திருமண நாள் இன்று!


Friday, December 11, 2020

தலைப்பு இல்லை

இன்று எட்டயபுரத்து கவிக்கோ சுப்பிரமணிய பாரதியாரிற்கு பிறந்த நாள்! 

தேடிச் சோறுநிதந் தின்று -- பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம்

வாடித் துன்பமிக உழன்று -- பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து -- நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல

வேடிக்கை மனிதரைப் போலே -- நான்

வீழ்வே னென்றுநினைத் தாயோ?

பாரதி பாடிய பாடல் என்று என் நினைவில் நிற்கும் ஒரே பாடல்! இது எப்படி எனது மனதிற்குள் வந்தது என்பது பற்றித் தெரியாதென்றாலும் பாரதியார் யோகசித்தி வேண்டிப்பாடியது என்பதால் இது என் சித்தத்தில் புகுந்து கொண்டது என நினைக்கிறேன்! 

பாரதியார் அவர் வாழ்ந்த காலத்திற்கு எதிர்காலத்தில் வாழ்ந்த ஒரு யோகி! 

அவருடைய காசி வாழ்க்கை அன்னிபெசெண்ட், சகோதரி நிவேதிதை ஆகியவர்களின் வழிகாட்டலையும், பாண்டிச்சேரி வாழ்க்கையில் ஸ்ரீ அரவிந்தருக்கு உற்ற நண்பராக வேதங்களைப் புரிந்துக் கொள்ள உதவி செய்தவராக சுவாரசியமான, அதிகம் பேசப்படாத வரலாறுகளை உடையது. 

சமூகத்தின் ஒட்டுமொத்த பெறுமானங்களையும் தூக்கி எறிந்து நாத்திகம் பேசி சமூகத்தைக் குழப்பாமல், தெளிவாக களையப்பட வேண்டியவை இவை என்பதைப் பயமின்றி சுட்டிக்காட்டி போற்றப்படவேண்டியவை இவை என்று உத்வேகமூட்டிய வீரக்கவி! 

பாரதியை தமிழ் என்று மாத்திரம் கொண்டாடாமல் முழுமையாகக் கொண்டாட வேண்டும்!


Thursday, December 10, 2020

தலைப்பு இல்லை

நாம் ஒவ்வொருவரும் மஞ்சள் வீட்டிலும் வளர்க்க வேண்டும்! இறக்குமதியை நிறுத்தியதால் நகரமெங்கும் பச்சை மஞ்சள் தாராளமாக கிடைக்கிறது. இதை வாங்கி வீட்டில் நடலாம். 

வீட்டில் வளர்க்க வேண்டும் என்று சொல்வதற்குரிய காரணம் கீழே படத்திலும், பதிவிலும் கூறப்பட்டுள்ளது.

மஞ்சள் என்ற சொல்லைக் கேட்கும் போது பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் நாலடியாரின் கல்வி அதிகாரப் பாடல் எப்போதும் ஞாபகத்திற்கு வருவது தவிர்க்க முடியாமல் இருக்கிறது. 

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு.

நாலடியார் காலத்தில் மஞ்சள் அழகிற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஆயுர்வேதமும், நவீன மருத்தவ ஆயுள்வேதமும் மஞ்சளை ஒரு அரிய பொருளாக கருதுகிறது. 

சித்த ஆயுர்வேதத்தில் மஞ்சளைப் பற்றி அதிகமாகச் சொல்லப்படாத இரகசியம் இது ஒரு திரிதோஷ சமனி என்பது! 

உடலில் எந்த நோயும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களும் சமநிலை கெடுவதால் உண்டாவது என்பதுதான் சித்த ஆயுர்வேத தத்துவம்! இதை சமப்படுத்தி விட்டால் உடலில் இருந்து நோய் மறையும் என்ற எளிய தத்துவம் தான் எமது மருத்துவ அறிவு! 

இப்படி திரிதோஷ சமநிலைக்கு அதிகமாகப் பாவிக்கப்படுவது திரிபலா என்ற கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் என்ற மூன்றும் சேர்ந்த கலவை! ஆனால் மஞ்சள் இயல்பிலேயே தனியொரு மூலிகையாக திரிதோஷம் சமனிக்கும்! 

இப்படி திரிதோஷம் சமனிக்கும் மூலிகைகள் கற்ப மூலிகைகளுமாகும்! உடலை உறுதிபடுத்தும் மூலிகை. 

இப்படிப்பட்ட மூலிகைகளை நாமே வளர்த்து நாமே பயன்படுத்தும் போது இது ஆரோக்கியத்தை தரும்! 

கலப்படமற்ற சுத்தமான மஞ்சள் பொடி கீழ்வரும் முறைகளில் தினசரி எடுத்து வந்தால் எமது ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்!

கலப்படமற்ற சுத்தமான மஞ்சளைப் பெற நீங்களே மஞ்சளை வளர்த்து பதப்படுத்த வேண்டும். 

இரண்டு pinch - பெருவிரல் ஆட்காட்டி விரல் சேர்த்து அள்ளும் மஞ்சளின் அளவு அண்ணளவாக 01- 02 கிராம் 

உஷ்ண காலத்தில் பாலில் கலந்து பருகலாம்.

குளிர், மழைக்காலத்தில் அதே அளவு மிளகுப் பொடி தேனுடன் கலந்து பருகலாம்! 

எந்த உணவுப் பதார்த்தத்துடனும் குழம்பு, சாம்பார், கூட்டிலும் இந்த அளவு தினசரி சேர்த்துக் கொள்ளலாம்!


தலைப்பு இல்லை

இப்போது இலங்கையில் சிவயோக ஞானத்திறவுகோல் நூல் கிடைக்கிறது.

பூபாலசிங்கம் புத்தகசாலை (செட்டியார் தெரு)

202 செட்டியார் தெரு கொழும்பு 11

தொலைபேசி: 0112422321

பூபாலசிங்கம் புத்தகசாலை (வெள்ளவத்தை) 

Galle Main Rd, Colombo - 06

தொலைபேசி: 0114 515 775


தலைப்பு இல்லை

அம்மாவின் சுதேசி மஞ்சள்  

முதல் தடவை வளர்த்து வந்த மஞ்சளை பதப்படுத்தப்போய் எல்லாம் வீணாகிவிட சற்றும் மனந்தளராமல் புட்டவிக்கும் நீத்துப் பெட்டியில் தோல் சீவி நீராவியில் அவித்தெடுக்க மஞ்சள் கிடைக்கும் என்பதைக் கண்டுபிடித்தாகிவிட்டது! 

சுப்பர் மார்கட்டில் பொதி செய்யப்பட்ட மஞ்சள் வாங்கிப் பாவித்துக் கொண்டிருந்த எம்மை மஞ்சள் வளர்த்து, தோல் சீவி, பதப்படுத்திப் பாவிக்கும் அளவிற்கு நுட்பமுடையவர்களாக்கியிருக்கிறது காலம்!


Wednesday, December 09, 2020

தலைப்பு இல்லை

மாணிக்க வாசகப்பெருமானாரின் சிவபுராணத்திற்கு சிவயோகத்தை அடிப்படையாகக் கொண்ட உரையாக சிவயோக ஞானத்திறவுகோல் நூல் கடந்த சிவராத்ரி அன்று திருவண்ணாமலையில் அண்ணாமலையார் திருப்பாதத்தில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது!

பெப்பிரவரி மாதம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியீட்டு விழாவிற்கு வெறுமனே 110 புத்தகங்கள் மாத்திரமே பூபாலசிங்கம் புத்தகசாலை ஸ்ரீதர் ஐயா அவர்கள் எடுத்தவை அனைத்தும் அன்றைய தினமே முடிவுற்றது. 

அதன் பின்னர் lockdown... 

தற்போது பிரதிகள் இலங்கை வந்தடைந்துள்ளது! 

இலங்கையில் புத்தகம் தேவையானவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்! பூபாலசிங்கம் புத்தகசாலையிலும் கிடைக்கும்! 

எவராவது வாங்கி நூலகங்களுக்கு அன்பளிப்புச் செய்ய விரும்பினால் அறியத்தரவும்!


Monday, December 07, 2020

மஹாயான ஷட் புஜ (அறுகரத்து) மகாகால பைரவர்

நீல உடல் உடையவர் - இது தர்மகாயத்தின் குறியீடு - 

தலையில் ஐந்து மண்டையோடுகளை கீரீடமாக அணிந்தவர் - இதன் அர்த்தம் மனதின் ஐந்து விஷங்களான - கோபம்,  அதியாசை, அறியாமை, பொறாமை, தற்பெருமை ஆகியவற்றை ஐந்து ஞானங்களாக உருமாற்றும் ஆற்றல் உடையவர் -

ஆறு கரங்களில் தான, சீல, சாந்தி, வீர்ய, சமாதி, ப்ரஜ்ஜா { தானம் தரும் மனம், சீலம் என்ற ஒழுக்கம், சாந்தி என்ற மன அமைதி, வீரியம் என்ற சக்தி, சமாதி என்ற ஏகாக்கிர மனம், பிரஜ்ஜா என்ற ஞானம்} என்ற ஆறு செம்மைகளை தனது ஆயுதங்கள் மூலம் தருபவராக கட்கம், கபாலம், அக்ஷரமாலை, உடுக்கை, திரிசூலம் ஆகிய ஆறு ஆயுதங்களை உடைய அவலோகதீசுவரரின் அவதாரமாக வணங்கப்படுகிறார்.

அவரது திரிசூலம் - சாதகன் அடையும் திரிகாயத்தின் {தர்ம காயம், சபோக காயம், நிர்மன காயம்} குறியீடாகக் குறிக்கப்படுகிறது.


திருமூலர் கூறிய வைரவ தியானம் - 01

இன்று கால பைரவ - வைரவ அஷ்டமி

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் வீட்டிற்கொரு வைரவர் வைத்து வழிபடுவது தொன்று தொட்டு இருந்து வரும் மரபு! 

வேள்வி எனும் ஆட்டுப் பலி வைரவருக்கு படையலிடும் கலாச்சாரமும் தொன்று தொட்டு இருந்து வருகிறது! 

வைரவர் அகச் சத்துருக்களையும், புறச் சத்துருக்களையும் அழிக்கும் சிவமாகிய அறிவின் -விழிப்புணர்வின் அமிசம்! 

வைரவரை தியானிக்கும் முறையை திருமூலர் 1291 - 1295ம் பாடல் வரை கூறுகிறார். 

அறிந்த பிரதமையோடு ஆறும் அறிஞ்சு

அறிந்த அச் சத்தமி மேலிவை குற்ற

அறிந்தவை ஒன்றுவிட்டு ஒன்று பத்து ஆக

அறிந்து, வலம்அது வாக நடவே.

இந்தப் பாடல் வைரவரை ஆன்ம, வித்யா, சிவ தத்துவங்களான முப்பத்தாறு தத்துவங்களில் எப்படி யந்திரமாக்கி - வைரவச் சக்கரமாக்கி தியானிக்கும் முறையைக் கூறுகிறது. இது குருமுகமாகப் பயில வேண்டிய சாதனை என்பதால் விளக்கம் தரப்படவில்லை! அவரவர் குருவை அண்டித் தெளிவு பெறுக.!

நடந்த வயிரவன் சூல கபாலி

கடந்த பகைவனைக் கண்ணது போக்கி

தொடர்ந்த வுயிரது உண்ணும் பொழுது

படர்ந்த வுடல்கொடு பந்தாடலாமே.

மேற் குறித்த முறையில் வைரவச் சக்கரம் அமைத்து எமக்குள்ளேயுள்ள தத்துவங்களில் வைரவரை நிறுத்தி தியானிக்கும் போது அந்த வைரவர் சூல கபாலியாக தோற்றம் பெறுவார். 

திரிசூலம் எமக்குள் இருக்கும் மும்மைகளை (இடகலை, பிங்கலை, சுழுமுனை, சூரியகலை, அக்னி கலை, சந்திரகலை, தாமசம், ராஜசம், சத்துவம்) ஒடுக்கி உயிரை சிவத்தை நோக்கிச் செலுத்தும் ஆயுதம், சிவத்தை அடையவிடாமல் எம்மைத் தடைப்படுத்துவது அகங்காரம் என்ற ஆணவம் - இது கபாலத்தில் இருக்கும் வரை சிவயோகம் சித்தியுறாது! ஆகவே வைரவரின் சூலத்தின் துணையுடன் கபாலத்தில் உள்ள ஆணவத்தை பிளக்க வேண்டும். அகப்பகைவர்களில் முதன்மையானது ஆணவம் - இது கபாலத்தால் குறிக்கப்படுகிறது. இது வைரவரால் கொய்யப்படும். 

இப்படி ஆணவம் கொய்யப்பட்டால் இந்த ஆணவமலம் ஏற்படுவதற்கு மூல காரணம் தவறான பார்வை! மயக்கமான பார்வை! அடுத்து வைரவர் அகப் பகைவர்கள் உருவாக முதன்மையாக இருக்கும் தவறான பார்வையை நீக்குவார்! 

இப்படி வைரவரை தியானிக்க அவர் ஆணவத்தை நீக்கி, சிவத்தை அடையவெண்ணாமல் செய்யும் மனதின் தவறான பார்வையை நீக்கி, அகப் பகைவர்களை எல்லாம் அழித்து உயிரை சிவமாகிய ஒளியை உண்ணச் செய்விப்பார். 

கடைசி வரியை பலரும் எதிரியின் உடலைப் பந்தாடுவார் என்று பொருள் கொள்வார்கள். திருமந்திரம் சிவயோக நூல் என்ற பிரமாணத்தில் கீழ்வருமாறு சொற்பிரித்தால்,

படர்ந்த - சிவ ஒளி படர்ந்த

உடல் - உடலை

கொடு - கலப்பை (பிங்கல நிகண்டு)

பந்தாடலாமே - உழமுடியும்

இந்தக் கடைசி வரி வைரவர் சிவயோக சாதனையில் என்ன சித்தியினைத் தருவார் என்பதை விளக்குகிறது. சிவ ஒளி படர்ந்த இந்த உடலை சிவயோக சாதனை எனும் கலப்பையால் (கொடு) உழ வைரவர் அருள் வேண்டும். 

ஆக ஒருவன் தனது ஆணவ மலத்தை அழித்து, சிவயோகத்தில் சித்தி பெற வைரவர் அருள் பெற வேண்டும் என்பது இந்தப் பாடலால் கூறப்பட்டது. 

அடுத்த பாடலில் ஷட்புஜ பைரவர் எனும் அறுகர வைரவரின் உருவ விளக்கம் வருகிறது. 

ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன்

ஆமே கபாலமும் சூலமும் கைக் கொண்டு அங்கு

ஆமே தமருக பாசமும் கையது

ஆமே சிரத்தொடு வாளது கையே.

கபாலம், சூலம், உடுக்கை, பாசம், கொய்யப்பட்ட தலை, வாள் ஆகிய ஆறு ஆயுதங்களை ஏந்தியபடி இருக்கும் வைரவரை தியானிக்கும் படி கூறப்படுகிறது!

மிகுதி நாளை!


Saturday, December 05, 2020

தலைப்பு இல்லை

வேலை சிறப்பாக முடியாது என்பது ஒரு மனவியல் விதி! 

ஒரு ஓவியர் இறைவனின் படத்தை வரைகிறார் என்றால் நான் அந்தப் படத்தை வரையப்போகிறேன் என்ற அகங்காரம் தோன்றியது என்றால் அந்தப் படம் சிறப்பாக வராது! அந்தப் படத்திற்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற சிந்தனை ஓடத் தொடங்கினால் படத்தின் அழகு கெட்டு விடும்! வரையத் தொடங்கினால் அந்தப் படமாகவே மாறிவிட வேண்டும்! அப்படி வரையப்படும் படம் எல்லோர் மனதிலும் வசீகரிக்கும்!

நான் ஒருவரை காதலிக்கிறேன் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டால் அது அகங்காரமாகி விடும்! அந்தக் காதலாகவே மாறும் போது அதுவே ஜீவனுள்ள காதலாகிவிடும்! 

நான் இந்த உபாசகன், அந்த உபாசகன் என்று முத்திரை குத்திவிட்டால் நாம் உபாசிக்கும் தெய்வத்திடமிருந்து வேறுபட்டு விடுவோம்! 

நாம் மார்க்ஸியவாதி, சோஷலிசவாதி என்று எமக்குரிய அடையாளமாக தத்துவங்களை ஏற்றுக் கொண்டால் அவற்றை நாம் பிரயோகிக்கும் ஆற்றலை இழந்து விடுவோம்! 

ஆகவே நாம் அடைய விரும்பும் பொருளாகவே மாறி செயல் புரிந்தால் நாம் அடைந்திருப்போம்! ஆனால் அதை ஒரு முத்திரையாக, அகங்காரமாக மாற்றிக் கொண்டால் அந்தச் செயலின் வேகம், நோக்கம் தடைப்பட்டிருக்கும்!


தலைப்பு இல்லை

இன்று உலக மண் தினம் - டிசம்பர் 05

மேற்கத்தேய கலாச்சாரம் எல்லாவற்றிற்கும் ஒரு நாள் ஒதுக்கி அதை அன்று மட்டும் நினைவு கூர்ந்து விட்டு வியாபாரத்திற்காக மற்றைய நாட்களில் இயற்கையைச் சுரண்டிக் கொண்டிருப்பது. 

மண்ணிற்கு புராணங்களில் கூறப்படும் பெயர் "அன்னப்பூரணி" அன்னம் என்றால் உணவு, பூரணி என்றால் பூரணத்துவத்தைத் தருபவள் என்று பொருள். மண் உணவிற்கான அனைத்தையும் கொண்டிருக்கிறது என்பதுதான் இதன் அர்த்தம். 

இயற்கையின் விதிகளைப் படிக்காமல் வெறும் பணத்திற்கும், பட்டத்திற்கும் என்று படிக்கும் மனிதன் இந்த பூமிக்கு ஒன்றும் செய்து விடமுடியாது. 

ஆரோக்கியமான உக்கல், மரஞ் செடி, கொடி நிறைந்த மண் அவை இல்லாத மண்ணை விட 20000 மடங்கு நீரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும் ஆற்றல் உள்ளது. இன்று மண்ணில் உயிர்கள் வாழ முடியாதபடி இரசாயனங்களைக் கொட்டுகிறோம். நீர் உட்புகுந்து நிலத்தடியில் சேமிக்க முடியாதபடி கொங்கிரீட்டினால் மூடுகிறோம். பிறகு வெள்ளம், வெள்ளம் என்று புலம்புகிறோம். 

காடுகள், மரங்கள் இருக்கும் இடத்தில் அவற்றின் மண்ணின் துளையைக் கூட்டி நீர் கீழிறங்கிச் செல்லும் பாதைகளை உருவாக்கி வைத்திருக்கும். மரங்களையும், காடுகளையும் அழித்து விட்டால் மண் நீரினால் அழித்துச் செல்லப்பட்டு, மண் இறுகி வெள்ளப் பெருக்குத்தான் ஏற்படும். 

மண்வளம் காத்தால், 

அது உணவைத் தரும்

நீரை சேமிக்கும்

நிலத்தடி நீர்வளத்தை உருவாக்கும்

குடி நீர்பிரச்சனை வராது

ஆகவே மண்வளம் பற்றிய சிந்தனை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திட்டத்திலும் சிந்திக்கப்படவேண்டியது! டிசம்பர் - 05 ம் திகதி மாத்திரம் சிந்திக்கப்படும் ஒரு விஷயமாக இருக்கக் கூடாது.


தலைப்பு இல்லை

மனித குலத்தின் பரிணாமத்தில் மனம் என்ற கருவியின் பரிணாமத்திற்கு பூவுலகில் காலத்திற்குக் காலம் சக்கரத்தைச் சுழற்றியவர்கள்;
எம்பெருமான் அகத்தியர்
பின்பு இராவணர் 
அடுத்து ஸ்ரீ கிருஷ்ணர்
பிறகு புத்தர் 
அடுத்து வள்ளலார்
கடைசியில் ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர் தென்னாடு வந்து ஸ்ரீ அகத்தியரின் வேதபுரியாகிய புதுச்சேரியில் யோக சாதனை செய்து சித்தியாகி மனதின் பரிணாமத்திற்குரிய இரகசிய விதிகளை சாவித்ரி காவியமாக்கித் தந்தார். 
இன்று ஸ்ரீ அரவிந்தரின் மகாசமாதி நாள்

Friday, December 04, 2020

தலைப்பு இல்லை

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் லியனகே உலக பல்கலைக்கழக தரப்படுத்தல் பற்றிக் கூறியுள்ளார். 

அவரது கூற்று; கல்வி வியாபரத்திற்குரிய சந்தைப்படுத்தல் உத்தியாக பல்கலைக்கழக தரப்படுத்தல் பயன்படுத்தப்படுகிறது என்பது. 

ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்காக பெரும் சந்தைப்படுத்தப்பட்ட போது அதன் உண்மை நிலையை கலாநிதி சிவா ஐயாத்துரை (மின்னஞ்சலைக் கண்டுப்பிடித்த தமிழர்) பகிரங்கமாக விமர்சித்தார். ஆதரித்த கமலஹாசனை முட்டாள் என்று கூறினார்; தமிழிற்காக இருக்கை தமிழ் நாட்டில் இருக்க வேண்டும்; அமெரிக்காவில் அல்ல! சில காலத்திற்குப் பிறகு தமிழ் பாடலுக்கு பொருள் எழுதுவது என்று அவர்கள் சொல்லித்தருவதற்கு வருவார்கள்! என்று விமர்சித்தார்! 

பல்கலைக்கழகம் சிந்தனை செய்யும் ஆற்றலுள்ள, ஆளுமையுள்ள சிந்தனையாளர்களை, புத்திஜீவிகளை உருவாக்கும் ஒரு தளமாக இருக்க வேண்டும். வியாபாரத்திற்கு போட்டி போடும் இடமாக இருக்கக் கூடாது என்பது. 

செய்திக்கு நன்றி: திரு. சாந்தரூபன்


யாழ்ப்பாணத்து வெள்ளமும் சூழலியல் காரணிகளும்

ஊருக்கு ஒரு குளம், கோயில், கேணி என்பதில் எல்லாம் வெள்ளத் தடுப்பு திட்டமிடல் இருந்தது என்று சொன்னால் அப்படியா என்று கேட்கும் அளவில் தான் நாம் இருக்கிறோம். 

கோயில் என்று சொல்லப்படும் சிதம்பரத்திற்குள்ளும் வெள்ளம்! யாழ்ப்பாணத்து நல்லூருக்குள்ளும் வெள்ளம்! 

கோயில் வழிபாடு, பூசை என்று மட்டும் பார்த்ததில் வந்த விளைவு! சுற்றியிருப்பவன் எல்லாம் நிலத்தை அபகரித்து விடுவான் என்று மனம் கெட்டதால் கொங்கிரீட் மதில் எழுப்பியதன் விளைவு! 

ஊரின் தாழ் நிலம் குளமாக்கப்பட்டு முதல் மழை நிரப்பப்படும் விவசாயத்திற்காக! அதைச் சூழ வயல் இருக்கும்! மேட்டு நிலத்தில் குடியிருப்பு இருக்க வேண்டும்! குளம் நிறைந்தால் ஊரைச் சுற்றி இருக்கும் கோயில்களில் உள்ள கேணிகள் நிரம்பி நிலத்தடி நீர் நிரப்பப்படும்! இதற்கு மேல் உள்ள நீர் வாய்க்கால் வழியாக ஆற்றில் கலந்து கடலிற்குச் செல்ல வேண்டும்! 

இப்படி இருந்தால் மக்களுக்குரிய விவசாய, குடி நீர் தேவைத் தன்னிறைவடையும்! 

இன்று யாழ்ப்பாணம் வெள்ளம் என்று கவலைப்படுவதற்குரிய காரணம், யாழ் குடா நாடு என்பது மொத்தமாக நீர் நிலைகளுடன் 1,030 km² பரப்பையுடைய பிரதேசம். மேற்குப்புறமாக தெல்லிப்பழை அதிகபட்சமாக கடல் மட்ட உயரம் 10.5 m, அனேகமான இடம் சமமான நிலமாகவும் தேற்குப்புறமான சாய்வினையும் கொண்ட நிலம். 

மேலே சொன்னபடி யாழ்குடா நாட்டிற்குள் பெய்யும் மழையைத் தேக்கி வைக்கும் கட்டமைப்புகளாக 600 சிறு குட்டைக் குளங்கள் இருப்பதாக ஆசிய வங்கி சூழல் மதிப்பீட்டு அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

அது தவிர வெள்ளம் நிரம்பினால் கடலுக்குக் கொண்டு போகும் பருவகால ஆறுகளாக தொண்டமானாறும், வழுக்கையாறும் இருக்கிறது. எப்படியிருப்பினும் வன்னி, மன்னார், அனுராதபுரம் பகுதிகள் போல் பெரும் குளங்கள் அமைப்பதற்குரிய நில, மண் அமைப்பினை யாழ்குடா நாடு கொண்டிருக்கவில்லை. 

17 - 18ம் நூற்றாண்டுகளில் டச்சுக் காலத்தில் கால்வாய்கள் சிறு குளங்களுடன் இணைக்கப்பட்டு செயற்கை தொடர்பெருக்கி (cascade system) யாழ்குடா நாட்டிற்குள் உருவாக்கப்பட்டது! 

பொதுவாக வயலுக்கு நடுவில் குளம் இருக்கும். பெருமழையின் போது ஏந்தப்படும் மழை நீர் இந்தக் கால்வாய் வழியாக முதலில் வயலுக்குள் பாய்ந்து குளத்தை நிரப்பும்; இப்படி நிரம்பும் நீர் குளம் நிரம்பி அடுத்த குளத்தை நிரப்பி மெதுவாக கடல் நீரேரி (Lagoon) நிரம்பி கடலுக்குள் பாயும்! 

1) flood buffers ஆன கேணிகள் இல்லை, மூடப்பட்டுவிட்டன, அல்லது இயற்கையான கேணிகளாக இல்லாமல் கோயில் திருவிழாவிற்கு மோட்டர் போட்டு நிரப்பும் கேணிகளாக மாற்றம் பெற்றுள்ளது. கோயில் வெள்ளத்தடுப்புச் செய்ய முடியும் என்ற இயற்கையுடன் இயைந்த அமைப்பாக இல்லாமல் மனிதன் தனக்கு வேண்டியபடி, விருப்பப்படி தீர்த்தமாடும் இடமாக்கி விட்டான் மனிதன். 

2) ஒவ்வொரு காணியும் மதிற்சுவர்களால் பிரிக்கப்படுவதால் மழை வேகமாக தான் செல்ல வேண்டிய கடலை அடையமுடியாமல் தவிர்த்து வீட்டிற்குள் புகுந்து விடுகிறது! முன்னர் சீமைகிளுவையும், பூவரசும் வேலியாக நின்றதால் அவை வீட்டிற்குள் புகுவதில்லை!


யாழ்ப்பாணத்து வெள்ளமும் சூழலியல் காரணிகளும்

ஊருக்கு ஒரு குளம், கோயில், கேணி என்பதில் எல்லாம் வெள்ளத்தடுப்பு திட்டமிடல் இருந்தது என்று சொன்னால் அப்படியா என்று கேட்கும் அளவில்தான் நாம் இருக்கிறோம். 
கோயில் என்று சொல்லப்படும் சிதம்பரத்திற்குள்ளும் வெள்ளம்! யாழ்ப்பாணத்து நல்லூருக்குள்ளும் வெள்ளம்! 
கோயில் வழிபாடு, பூசை என்று மட்டும் பார்த்ததில் வந்த விளைவு! சுற்றியிருப்பவன் எல்லாம் நிலத்தை அபகரித்து விடுவான் என்று மனம் கெட்டதால் கொங்கிரீட் மதில் எழுப்பியதன் விளைவு! 
ஊரின் தாழ் நிலம் குளமாக்கப்பட்டு முதல் மழை நிரப்பப்படும் விவசாயத்திற்காக! அதைச் சூழ வயல் இருக்கும்! மேட்டு நிலத்தில் குடியிருப்பு இருக்க வேண்டும்! குளம் நிறைந்தால் ஊரைச் சுற்றி இருக்கும் கோயில்களில் உள்ள கேணிகள் நிரம்பி நிலத்தடி நீர் நிரப்பப்படும்! இதற்கு மேல் உள்ள நீர் வாய்க்கால் வழியாக ஆற்றில் கலந்து கடலிற்குச் செல்ல வேண்டும்! 
இப்படி இருந்தால் மக்களுக்குரிய விவசாய, குடி நீர் தேவைத் தன்னிறைவடையும்! 
இன்று யாழ்ப்பாணம் வெள்ளம் என்று கவலைப்படுவதற்குரிய காரணம், யாழ் குடா நாடு என்பது மொத்தமாக நீர் நிலைகளுடன் 1,030 km² பரப்பையுடைய பிரதேசம். மேற்குப் புறமாக தெல்லிப்பழை அதிகபட்சமாக கடல் மட்ட உயரம் 10.5 m, அனேகமான இடம் சமமான நிலமாகவும் தேற்குப்புறமான சாய்வினையும் கொண்ட நிலம். 
மேலே சொன்னபடி யாழ்குடா நாட்டிற்குள் பெய்யும் மழையைத் தேக்கி வைக்கும் கட்டமைப்புகளாக 600 சிறு குட்டைக் குளங்கள் இருப்பதாக ஆசிய வங்கி சூழல் மதிப்பீட்டு அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.
அதுதவிர வெள்ளம் நிரம்பினால் கடலுக்குக் கொண்டு போகும் பருவகால ஆறுகளாக தொண்டமானாறும், வழுக்கையாறும் இருக்கிறது. எப்படியிருப்பினும் வன்னி, மன்னார், அனுராதபுரம் பகுதிகள் போல் பெரும் குளங்கள் அமைப்பதற்குரிய நில, மண் அமைப்பினை யாழ்குடா நாடு கொண்டிருக்கவில்லை. 
17 - 18ம் நூற்றாண்டுகளில் டச்சுக்காலத்தில் கால்வாய்கள் சிறுகுளங்களுடன் இணைக்கப்பட்டு செயற்கை தொடர்பெருக்கி (cascade system) யாழ்குடா நாட்டிற்குள் உருவாக்கப்பட்டது! 
பொதுவாக வயலுக்கு நடுவில் குளம் இருக்கும். பெருமழையின் போது ஏந்தப்படும் மழை நீர் இந்தக்கால்வாய் வழியாக முதலில் வயலுக்குள் பாய்ந்து குளத்தை நிரப்பும்; இப்படி நிரம்பும் நீர் குளம் நிரம்பி அடுத்த குளத்தை நிரப்பி மெதுவாக கடல் நீரேரி (Lagoon) நிரம்பி கடலுக்குள் பாயும்! 
1) flood buffers ஆன கேணிகள் இல்லை, மூடப்பட்டுவிட்டன, அல்லது இயற்கையான கேணிகளாக இல்லாமல் கோயில் திருவிழாவிற்கு மோட்டர் போட்டு நிரப்பும் கேணிகளாக மாற்றம் பெற்றுள்ளது. கோயில் வெள்ளத்தடுப்புச் செய்ய முடியும் என்ற இயற்கையுடன் இயைந்த அமைப்பாக இல்லாமல் மனிதன் தனக்கு வேண்டியபடி, விருப்பப்படி தீர்த்தமாடும் இடமாக்கி விட்டான் மனிதன். 
2) ஒவ்வொரு காணியும் மதிற்சுவர்களால் பிரிக்கப்படுவதால் மழை வேகமாக தான் செல்ல வேண்டிய கடலை அடையமுடியாமல் தவிர்த்து வீட்டிற்குள் புகுந்து விடுகிறது! முன்னர் சீமைகிளுவையும், பூவரசும் வேலியாக நின்றதால் அவை வீட்டிற்குள் புகுவதில்லை!

Thursday, December 03, 2020

தலைப்பு இல்லை

Morale அல்லது மன உறுதி என்பது மிகமுக்கியமான தலைமைப் பண்பு! நாம் குழுவாக இணைந்து இயங்கும் போது சரியான நோக்கத்தில் குழு இயங்க குழுவை இலக்கு நோக்கிச் செலுத்த மனவுறுதி அவசியம்!
மனவுறுதி அற்றவர்கள் தலைமைப் பதவியில் இருந்தால் எந்தக் காரியமும் நகராது! 
மனவுறுதியை இல்லாமலாக்குவது அடிப்படை சிந்தனையில் இருக்கும் வழு! பலரும் சமூக நோக்கத்திற்கு செயல் புரிய வேண்டும் என்ற இலக்கை விட்டுவிட்டு தமது ஆணவத்தை, அசூயையைக் கொட்ட முனையும் போது காரியத்தைக் குழப்பி விடுவார்கள். 
ஒருவரை இன்னொருவருடன் கோள் மூட்டி விடுவது, காரணம் இல்லாமல் செயல்புரிபவர்களுக்கு வீண் அழுத்தம் கொடுத்து செயலைத் தடுப்பது, ஒருவரைப் பற்றி மற்றவர்களுக்கு நம்பிக்கையீனம் ஏற்படுத்துவது எல்லாம் lower morale உள்ளவர்களின் செயல்! 
இப்படியானவர்கள் ஏதாவது செயலைச் செய்கிறோம் என்று தொடங்கி பலரையும் பகைக்கு உள்ளாக்கி செயலையும் கெடுத்து விடுவார்கள்! 
ஒரு செயலைப் பூர்த்தி செய்ய மிக உயர்ந்த மனவுறுதியுடன் செயலின் இலக்கு சமூக நன்மைக்கானது, அதிலிருந்து பின்வாங்காமல் பூர்த்தி செய்ய வேண்டும் என்று எவரையும் பகைக்காமல் எல்லோருக்கும் இயன்றளவு உதவிக் கொண்டு காரியத்தை நடத்திக்காட்ட வேண்டும்!

தலைப்பு இல்லை

கரையைக் கடக்கும் புரவிப் புயல் எமது தோட்டத்தையும் கடந்தது!

புரவிப் புயலும் சாகரம்பராவின் ஐந்தடுக்கு உணவுக் காடும்!

புயல் முல்லைத்தீவில் கரைக் கடந்து போகிறது என்றால் கட்டாயம் எமது ஐந்தடுக்கு காடுகளை மல்லாவியில் பிடுங்கத்தான் போகிறது என்று உறுதி செய்து கொண்டு நேற்று இரவு எமது பண்ணை முகாமையாளருடன் உரையாடி அவரது பாதுகாப்புக்களையும் உறுதிப்படுத்தி விட்டு நடப்பது நடக்கட்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த எமக்கு இப்போது கிடைத்த அறிக்கை சற்று மன நிம்மதி!
இயற்கையைப் புரிந்த விவசாயியே திட்டத்தின் முகாமையாளராக இருப்பதால் அவரது அறிக்கைகள் சுவாரசியமானது; 
"கூடி வாழ்தலினை உணர்த்தும் இயற்கையின் சாட்சியங்கள் எமது ஐந்தடுக்கு உணவுக் காடானது ஒரு கூட்டமாக இருப்பதனால் கடந்து சென்ற புயல் இடமிருந்து குறைந்தளவு இழப்புகளுடன் தன்னைத் தானே காத்திருக்கிறது. சுற்றியுள்ள தாவரங்கள் மாத்திரம் பாதிப்படைந்துள்ளது. நடுவில் உள்ள தாவரங்களில் வாழை மட்டும் இலைகள் கிழிவடைந்து பாதிக்கப்பட்டுள்ளன. வெளிப்புற தாவரத்துடன்(1st and 2nd line) ஒப்பிடுகையில் உள்ளிருக்கும் வாழை இலைகளின் சேதம் குறைவு. கூட்டமாகவும் நெருக்கமாகவும் இருப்பதால் இதன் தாக்கம் குறைவாகவே இருக்கிறது. அதனைவிட எமது தனிப்பயிர்கள் பெருமளவு சேதமடைந்துள்ளது. முறையான கூட்டங்களாக அமைந்தால் பல இடங்களிலிருந்து குறைந்தளவான பாதிப்புடன் தம்மைத் தாமே காத்துக் கொள்ளலாம் என இயற்கை உணர்த்தி நிற்கிறது."
எப்படியிருப்பினும் புயலை ஐந்தடுக்கு காடு வெல்லும் என்று சொல்லவரவில்லை! இயற்கையின் extreme weather இனை தனிமரங்களை விடவோ, தனித் தாவரங்களைவிட தாங்கும் என்பதை அனுமானித்துக் கொள்ளலாம்! 
எம் ஆற்றலுக்கு மீறிய இயற்கையுடன் ஒத்திசைந்து வாழ்வதே மிகப் பெரிய ஞானம்!

தலைப்பு இல்லை

திட்ட வரைபுகளைச் செய்யும் போது குழுவை எப்படி உத்வேகப்படுத்தி விளைவுகளைப் பெறுவது என்ற விதிகளை ஆராயவேண்டும். 

ஒரு பாடசாலை வெற்றி பெறவேண்டும் என்றால் - வெற்றி என்பது பெறுபேறுகள், நற்பண்புகள் கொண்ட சமூகத்திற்கு பலன் தரும் ஒரு பிரஜையாக மாணவன் உருவாகுவது - நிசாந்தன் மூன்று காரணிகளை பட்டியலிட்டிருக்கிறார். 

1) சுயநலமற்ற அதிபர், ஆசிரியர்கள் 

2) பொதுநலமான பெற்றார், 

3) உத்வேகமான மாணவர்கள், 

இது உண்மையான விஷயம் கூட, இப்படியான அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் எப்படி உருவாகிறார்கள் என்பது பற்றி ஆராயவேண்டும்! 

இதை எப்படி ஒவ்வொரு சமூகத்திலும் உருவாக்குவது என்ற பொறிமுறையை உருவாக்க வேண்டும்.

நாம் ஒரு பாடசாலையைப் பற்றி உரையாடுகிறோம் என்றால் அங்கு, 

1) அர்ப்பணிப்பும், சுய நலமும் அற்ற அதிபர், ஆசிரியர் குழாம் இருக்கிறதா?

2) அதிபரிற்கும், ஆசிரியருக்கும் ஒத்துழைப்புத் தரும் பொதுநல நோக்கமுள்ள பெற்றோர், பழைய மாணவர்கள் இருக்கிறார்களா?

3) மாணவர்கள் கல்வியிலும், பண்பிலும் உயரும் உத்வேகம் உள்ளவர்களாக இருக்கிறார்களா?

என்ற மூன்று கேள்விகளைக் கேட்டு சரியான பதிலைக் காண வேண்டும்!


Wednesday, December 02, 2020

தலைப்பு இல்லை

யோகத்தால் தெய்வ உருமாற்றம் பற்றி ஸ்ரீ அரவிந்தர்
ஆன்ம முன்னேற்றம் என்பது ஆரம்ப காலத்திலும் நீண்டகால சாதனையின் பின்னரும் ஒருவருக்கு துரிதமாகவும், அதிகமாகவும், அதிசக்தி வாய்ந்ததாகவும் ஏற்படுவதற்கான நிபந்தனைகள் அவனுடைய தீராத ஆர்வமும், சாதகனுடைய விடாமுயற்சியுமேயாகும். 
யோகத்தின் செயல்முறை என்பது மனித ஆன்மா தனது வெளி உலகிலிருந்து பெற்ற உணர்வினால் உருவான அகங்கார உணர்விலிருந்து திரும்பி அகமுகமாக உயர் உணர்வினை ஈர்த்து தன்னில் பிரபஞ்ச மஹா சக்தியினை பாயுமாறு மாற்றி, தெய்வ உணர்வுள்ள ஆன்மாவாக உருமாற்றும் செயல் முறையாகும். 
யோகத்தில் ஒருவன் சித்தி அடைந்துள்ளான் என்பதை அறிவதற்குரிய முதற்படி அவன் எவ்வளவு அகவயமாக திரும்புகிறான் என்பதும், எந்த ஆற்றல் அவனை அகவயமாக திருப்புகிறது என்பதுமாகும். இது சாதகனின் இருதயகமலத்தின் சாதனை மீதான ஆர்வம், இச்சாசக்தியின் ஆற்றல், மனஒருமைப்பாட்டு சக்தி, பிராணசக்தியை தனது உடலில் காத்தலும், இலட்சியத்துடன் இருத்தலும் ஆகிய காரணிகளாக இருக்கலாம். இவற்றின் மூலம் உருவாகும் ஆற்றல் ஒருவனை அகவயமாக செல்ல தூண்டும். 
இப்படி ஒரு சாதகன் தன்னில் தெய்வ சக்தியின் தொடர்பினை ஏற்படுத்தும் போது அவதானத்துடன் தன்னில் தனது ஆற்றலை மீறிய ஒரு சக்தி செயற்படுகிறது என்பதை அறிந்திருப்பதுடன், அந்த சக்தி தன் மீது ஆதிக்கம் செலுத்தி தனது ஆணவ உணர்வை கரைத்து தெய்வ உருமாற்றம் செய்வதுடன் தனது ஆற்றலின் கொள்ளளவை அதிகரிக்கிறது என்பதையும் உணர்வுப்பூர்வமாக அறிந்திருக்க வேண்டும். இந்த உயர் ஆற்றலை தன்னில் தெய்வ உருமாற்ற வேலை செய்வதற்கு அனுமதிப்பதுடன், தன்னை அதற்கு சமர்ப்பித்து முன்னேற்றி தனது யோகத்தின் இலக்கினை அடைய வேண்டும். 
ஒருவன் (சரணாகதியினூடாக) தனது இச்சாசக்தியின் முடிவில் இந்த உயர் சக்தியுடன் இணைந்து ஒன்றாவான். அவன் தெய்வ இச்சாசக்தியுடன் கலந்து தெய்வ உருமாற்றம் பெற்று பிரபஞ்ச சக்தியாக உருப்பெறுவான். 
The Synthesis of Yoga

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...