சிவஞானசித்தியாரிற்கு மாதவச் சிவ ஞானயோகிகள் எழுதிய உரைப்பாயிரத்தில் "சிவ சீவ சம்பந்தத்திற்கான 13 உவமைகளை இங்கு எளிய தமிழில் காண்போம்:
பண்ணிசைவெம் பரிதிமதி திலதயிலந்
தீயிரும்பு பாணி யுப்பு
விண்ண நில முடலுயிர் நீர் நிழலுச்சிப்
பளிங்குபகல் விளக்குப் பானீர்
கண்ணிரவி யுணர்வொளிபோற் பிரிவரிய
வத்துவிதக் கலவி காட்டித்
தண்ணளிவைத் தெனையாண்ட துறைசை
நமச் சிவாயகுரு சரணம் போற்றி!
சிவமும் சீவனும் -
உவமை - 01: பண்ணும் ஓசையும் (இராகமும் ஓசையும்)
உவமை - 02: சூரிய ஒளியும் பகல் காலத்தில் காணப்படும் சந்திரனும்
உவ்மை - 03: எள்ளும் அதனுள் இருக்கும் நெய்யும் போல
உவமை - 04: தீயும் அதனால் காய்ச்சப்பட்ட இரும்பும் போல்
உவமை - 05: ஆகாயமும் காற்றும் போல்
உவமை - 06: உடலும் உயிரும் போல
உவமை - 07: நீரும் அதன் நிழலும் போல
உவமை - 08: மத்தியான நேர சூரிய ஒளியும் பளிங்கின் ஒளியும் போல்
உவமை - 09: சூரிய ஒளியும் பகலில் விளக்கொளியும் போல
உவமை - 10: பாலும் அதனுடன் சேந்த நீரும் போல
உவமை - 11: கண்ணொளியும் அதில் காணும் பொருளும் போல்
உவமை - 12: கண்டும் உடனாய் நிற்கும் சூரியனொளியும் போலவும்
உவமை -13: ஆன்மாவின் அறிவும் அவ்வறிவால் பொருளை அறியும் கண்ணொளி போலவும்
இருக்கும் பிரிக்க முடியாத சிவ சீவ கலப்பினை எனக்கு கிருபையுடன் அனுபவமாக அறியச் செய்து என்னை ஆட்கொண்டருளிய திருவாவடு துறையின் கண் எழுந்தருளியிருக்கும் நமச்சிவாய தேசிக குரு மூர்த்திகளின் திருவடிகளைத் துதிப்போம்
********************************
சிவ சீவர்கள் அத்துவிதமாகிய கலப்பைக் கொண்டிருக்கிறார்கள்.
அத்துவிதம் என்பது மூன்று நிலைகளைக் கொண்டிருக்கிறது;
1) சிவமும் சீவனும் ஒன்றாய் நிற்றல் - நிலைத்தலுக்காக
2) சிவமும் சீவனும் வேறாய் நிற்றல் - அறிதலுக்காக
3) சிவமும் சீவனும் உடனாய் நிற்றல் - அனுபவித்தலுக்காக
இதுவே மெய்ப்பொருள், சைவ சித்தாந்த அத்துவிதம்.
மேற்குறித்த 13 உவமானங்களில் ஒன்றாய் நிற்றலுக்கு மூன்று உவமையும்,
வேறாய் நிற்றலுக்கு மூன்று உவமையும்,
உடனாய் நிற்றலுக்கு ஏழு உவமையும் கூறப்பட்டுள்ளது.
இதன் அர்த்தம் என்னவென்றால் சிவ சீவக்கலப்பு மூன்று பெரும் நிலைகளையும் இந்த மூன்று பெரும் நிலைகளுக்குள் 13 உப நிலைகளிலும் செயற்படுகிறது என்பதாகும்.
இந்த 13 நிலைகளையும் முழுமையாக அறிந்தவன் சிவ சீவ ஐக்கியம் என்ற அத்துவிதத்தின் உண்மைப் பொருள் - மெய்ப்பொருள் அறிந்தவனாவான்.
இதுவே மெய்ப்பொருள் இரகசியம்
சிவனும் சீவனும் ஒன்றாய் நிற்பவை என்பதற்குரிய முதல் உவமானத்தின் விளக்கம் - ஒலியும் பண்ணும்; ஒலி சிறு அதிர்வெண் வேறுபாட்டால் ஸ்வரமாகிறது; சப்த ஸ்வரங்கள் ஒழுங்கில் இசைக்கப்படும் போது இராகம் அல்லது பண் உருவாகிறது. இராகம் என்பது ஒழுங்கமைக்கப்பட்ட சிறு சிறு அதிர்வெண் வேறுபாடுகளைக் கொண்ட வெளிப்படும் ஒலி. இதுபோன்றே உயிராகிய சீவன் சிவம் என்ற ஒலியிலிருந்து வெளிப்படும் இராகம். எப்படி ஒலி பேதமுறும் போது ஸ்வரங்கள் உருவாகிறதோ, அப்படி உருவாகினாலும் ஸ்வரத்தில் ஒலி இருப்பது போல் சிவத்திலிருந்து பேதித்த உயிர்கள் எல்லாவற்றிலும் - எல்லாச் சீவன் களிலும் சிவம் கலப்புற்று ஆதாரமாக இருக்கிறது என்ற தெளிவு சாதகனுக்கு இருக்க வேண்டும்.
இந்த ஞானம் வாய்க்கும் போது எல்லா உயிர்களிலும் கலப்பு விகிதத்திற்கு தக்க சிவம் வெளிப்படும் என்ற ஞானம் கிட்டும். எல்லா உயிரும் சிவமே ஆனால் அதில் சிவம் வெளிப்படும் கலப்பு விகிதம் வேறுபடுகிறது.
புல்லாகி, பூடாய் புழுவாகி பல்மிருகமாகி, பறவயாய், பாம்பாகி என்று மாணிக்க வாசகப் பெருமான் சொல்வது பரிணாமத்தில் ஒவ்வொரு உடலிலும் சிவம் உயிராக வெளிப்படும் அளவு விகிதம் வேறுபடுவதையே குறிப்பிடுகிறது. மனித உடலில் இந்த சிவத்தினை முழுமையாக வெளிப்படுத்தவே யோக பாதம் வைக்கப்பட்டது; யோக பாதம் மனம், உடல், உயிர் இவை மூன்றையும் சிவம் வெளிப்படச் செய்ய ஒருங்கிணைக்கும் முறை.
இப்போது உயிர் சிவத்திலிருந்து வெளிப்பட்டவுடன் வெளிப்பட்ட அந்த உயிரே சிவம் என்று மயங்கிவிடக்கூடாது என்பதற்கு இரண்டாவது "வெம்பரிதி மதி" என்ற உவமையைச் சொல்லுகிறார்.
வெம்பரிதி என்றால் பகல்காலத்தில் தோன்றும் சூரியனைக் குறிக்கும்; மதி என்பது பகலில் சந்திரனின் நிலை என்ன என்பதைக் குறிக்கும். சூரியன் தோன்றும் போது மதி இருந்தாலும் தெரியாது; சூரியன் மறைந்தாலும் சூரியனின் ஒளியைப் பெற்றே மதி தோன்ற முடியும்; அதுபோல் அத்துவித பூரண கலப்பில் வெம்பரிதியில் மறைந்த மதி போன்று சிவம் மாத்திரமே தோன்றும்; சிவத்திலிருந்து பிரிந்து செயற்படும் போதும் உயிரிற்கு ஆற்றலாய் இருப்பது சூரியனாகிய சிவமே. இந்த உவமையில் பரிதி என்பது சிவம், மதி என்பது சீவன்; இந்த உவமை சிவனும் சீவனும் கலப்பு நிலைகளின் வேறுபாட்டையும், பூரண கலப்பையும் விளக்குகிறது.
இந்த உவமையக் கேட்டவருக்கு அப்படியாயின் சிவமும் சீவனும் சூரிய சந்திரனைப் போல் பிரிந்து இயங்குகிறார்களா என்ற சந்தேகத்திற்கு மூன்றாவது உவமை கூறுகிறார்.
மூன்றாவது உவமை திலதைலம் - எள்ளெண்ணெய்; எள்ளிற்குள் எண்ணெய் இருக்கிறது. எண்ணெய் பிரிந்துவிட்டால் அதை எள்ளென்று சொல்வதில்லை. சீவன் என்ற எள்ளிற்கு ஆதாரமாய் போஷிப்பது நெய்யாகிய சிவம் என்ற தெளிவு இருக்க வேண்டும். இவற்றைப் பிரித்தால் அங்கு உண்மையைக் காணமுடியாது; எள்ளை விதைத்துப் பயன்பெற வேண்டும் என்றால் அதனுள் இருக்கும் எண்ணெயை பிரித்து சக்கையாக்கக் கூடாது; அதுபோல் சீவனைக் கொண்டு சிவத்தை அறிந்து முக்தியுற வேண்டும் என்றால் சீவனிலிருந்து சிவத்தைப் பிரிக்கக் கூடாது.
இந்த மூன்று உவமைகளையும் சரியாக விளங்கினால் சிவமும் சீவனும் எப்படி ஒன்றாய் நிற்கிறது என்ற அத்துவித மெய்ப்பொருள் புரியும்.
சிவமே ஆதாரமாக இருக்க உயிர் அந்த ஆதார சக்தியில் பலவித இராகங்கள் போன்று பிறப்பெடுத்து அனுபவத்தைப் பெறுகிறது; எத்தனை பிறப்பெடுத்தாலும் சிவத்துடனான ஆதாரம் அறுபடுவதில்லை இது ஓசையும் பண்ணும் போல!
ஈரண்டாவது முக்தி நிலையில் சீவன் என்ற தனித்த நிலையில்லை; பகலில் சூரிய ஒளியில் மறைந்த மதி போல சீவன் தன்னை சிவத்துள் மறைந்துவிடும். ஆனால் சிவமாகிய ஒளி இல்லாவிட்டாலும் ஆன்மா தானே இயங்குவது போல் இருந்தாலும் சிவத்தின் ஒளியைப் பெற்றே இயங்குகிறது. அப்படி இயங்கும் போது அது மதியாகத் தோன்றுகிறது. மதியாக இருக்கும் நிலை இருள் நிலை! வெம்பரிதி நிலைதன் உண்மை நிலை! மதி நிலை இருள் நிலை! இது முக்தி நிலையையும், சீவன் இருள் நிலையில் இருக்கும் தன்மையைம் காட்டுவதற்கான உவமானமே அன்றி இரண்டு வேறு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.
உயிரை விட்டு சிவம் நீங்கினால் அது உயிர் அல்ல! இதுவே திலதைலம். எள்ளை விட்டு எண்ணெய் நீங்கினால் அது எள்ளு அல்ல.
இதன் மூலம் சிவமும் சீவனும் ஒன்றாய் நிற்கும் நிலை அறியப்படுகிறது.
அடுத்து அறியப்படும் நிலை....
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.