காயத்ரி மந்திரம் அறிவினை தூண்டி நல்வழியில் செலுத்தும் ஆற்றலைத்தருகின்றது என்பதனை மந்திரப் பொருளினை விளக்கும் போது கூறியுள்ளோம். இது அந்தக்கரணங்களான மனம், புத்தி, சித்த அகங்காரம் ஆகிய நான்கினிலும் தனது தெய்வ காந்த சக்தியின் மூலம் சத்வ குணத்தினை பாய்ச்சுகிறது. இதற்கு சாதகன் மந்திரப் பொருளினை ஜெபத்துடன் பாவனை மூலம் செய்து வரவேண்டும். அந்த முறை இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இப்படிச் செய்து வரும்போது அவனது விஞ்ஞானமய கோசத்தில் மனதுடனும், உடலுடனும் தொடர்புகொள்ள ஆரம்பிக்கிறது. சாதாரண மனிதரில் மனமு,ஆழ்மனமுமே செயற்படும். இது தமக்கு ஏற்பட்ட முன் அனுபவங்களின் படி முடிவெடுக்கும் தன்மை உடையது. இதனாலேயே துன்பம் ஏற்படுகிறது. ஆனால் மனதிலும் மேலான ஒன்று புத்தி, புத்தி எது சரி, எது பிழை என சரியாக முடிவெடுக்கும் தன்மை உடையது, ஆனால் பலர் புத்தியினை தமது மனதுடன் இணைப்பதில்லை. அதனாலேயே பலரும் துன்பத்தினை அனுபவிக்கின்றனர். பாவனையுடன் கூடிய காயத்ரி மந்திர ஜெபம் புத்தியினை மனதுடன் இணைக்கும்.
இதன் பயனாக மனம் நல்ல எண்ணங்களை ஆகர்ஷிக்க தொடங்கும். மனதின் செயல்முறை அறிந்தவர்களுக்கு தெரியும் எண்ணங்கள் அதனை ஒத்த சமஅலை வேகமுடைய எண்ணங்களை ஈர்க்கும் என்பது. அதனால் காயத்ரி மந்திர ஜெபத்துடன் தகுந்த பாவனையினை செய்து வந்தால் மனம் தெய்வ சக்தியினை ஈர்க்கும் தன்மை உண்டாகிவரும். இப்படி பலகாலம் மனம் தெய்வ சக்தியினை ஈர்த்து வர படிப்படியாக அது உடலிலும் செயற்பட ஆரம்பிக்கும். இந்த மாற்றங்கள் அந்தக்கரணங்களில் நடைபெறுவதால் உடனடியாக வெற்றுக்கண்களுக்கு தெரியாது. ஆனால் உங்கள் மனதில் ஏற்படும் எண்ணங்களின் தன்மை மாற்றங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மனிதன் முக்குணங்களால் ஆக்கப்பட்டவன் என்பதனை அறிந்திருப்பீர்கள், அதாவது சத்வம், ரஜோ, தமோ குணங்களே அவை. இந்த மூன்றின் அளவு வேறுபடுவதற்கேற்பவே ஒருவரது வாழ்க்கையின் தன்மை இருக்கும்.
அமைதி, ஆனந்தம், இறைசாதனையில் விருப்பம்,ஆன்ம ஞானவிழிப்பு என்பன சத்வ குணத்தின் அடையாளங்கள்.
போராட்டம், அதிகாரம், எப்போதும் தன்னை ஏதாவது வேலைகளி ஈடுபடுத்தியவண்ணம் இருத்தல், ஆணவம் என்பன ரஜோகுணத்தின் தன்மை.
தமோகுணத்தின் தன்மைகள் இவை சோம்பல், உற்சாகம் இன்மை, தன்னம்பிக்கை இன்மை, பயம் என்பன.
ஒருமனிதனில் இவை மூன்றும் கலந்தே இருக்கின்றன. இதன் அளவு வேறுபாட்டிற்கமைய ஒருவரின் ஆன்ம பரிணாமமுமிருக்கும். அதாவது சத்வகுண வளர்ச்சி அதிகம் ஏற்பட ஆன்மீகத்தில் தன்னை அறிந்து இறைவனை அறிய வேண்டும் என்ற விருப்பு ஏற்படும்.
ரஜோகுணம் அதிகரிக்க ஏதாவது வாழ்வில் சாதிக்கவேண்டும், தனது பெயரை நிறுத்தவேண்டும், நன்றாக உழைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படும்.
தமோகுணம் அதிகரிக்க எதையும் செய்ய இயலாம், எப்போதும் விரக்தியும், உலகமே துன்பமயமானதாக தோன்ற ஆரம்பிக்கும். இந்த நிலையில் இருப்பவர்கள் தம்மால் எதையும் செய்ய இயலாதவர்களாவே உணர்வார்கள்.
ஆகா ஆன்ம வளர்ச்சி என்பது இந்த குணங்களின் வளர்ச்சியுடனும் தொடர்புடையது. மனதில் உள்ள தமோ குணத்திலிருந்து வாழ்க்கையினை ரஜோ குணத்திற்கு கொண்டுவந்து, பின்பு சத்துவ குணமாக்கி பின் அந்த குணங்களிலிருந்தும் விடுபட்டு குணமற்ற ஜோதி ஸ்வரூபமான இறையினை அடைதலே இறுதி இலட்சியம்.
இதனை சாதிப்பதே காயத்ரி சாதனையின் முதல் படி, அதாவது நீங்கள் முக்குணங்களில் எது அதிகமாக இருந்தாலும் அந்த குணத்திலிருந்து அடுத்த குணத்திற்கு உங்களை தனது தெய்வ காந்த சகதியால் படிப்படியாக மாற்றும், இதனால் உங்கள் வாழ்வு பிரகாசமடையத் தொடங்கும்.
உதாரணமாக நீங்கள் பூஜை, சாதனை என்பவற்றை மட்டும் செய்துகொண்டு உலக காரியங்களான வேலை, உழைப்பு, குடும்பத்தினை புறக்கணித்து வருவீர்களானால் உங்களில் தகுந்த ரஜோகுண வளர்ச்சி இல்லை என்று அர்த்தம். அந்த நிலையில் காயத்ரி சதனை செய்தீர்களானால் அவற்றை சரி வர செய்யும் ரஜோகுண ஆற்றலைப் பெறுவீர்கள்.
அதுபோல் எப்போது உழைப்பு, பணம், பெயர்,புகழ் என மன நிம்மதி இன்றி உழைப்பவராக இருந்தால் காயத்ரி சாதனை செய்யத்தொடங்க சத்துவ வளர்ச்சியினை அதிகரிக்கும்.
அதுபோல் சோம்பித்திரிந்து ஒரு வேலையும்செய்யாமல் சதா தமோகுணத்தில் மூழ்கியிருந்தல் காயத்ரி சாதனை ரஜோகுண வளர்ச்சியினை ஏற்படுத்தும்.
இது எப்படி நடக்கிறது?
காயத்ரி மந்திரத்தின் ஒலி அமைப்பு பிரபஞ்ச ஞானத்துடன் (Cosmic Inteligence) தொடர்புடையது, அதாவது பிரபஞ்ச ஞானத்தினை மனித ஞானத்துடன் இணைக்கும் இணைப்பு பாலமே காயத்ரி மந்திரம். பிரபஞ்ச ஞானம் உங்களை எந்த பாதையில் செலுத்த வேண்டும் என அறிந்து அந்த வழியில் செலுத்தும்.
இத்தனை மகிமை உடைய காயத்ரி சாதனையினைப் பற்றி மேலும் சில குறிப்புகள் குருவருளால் பகிர்வோம்.
ஸத்குரு பாதம் போற்றி