ஆதி காண்டம்
முதற்சர்க்கம்
சங்கேத வைகறை - முதல் 10 - 22 வரிகள்
A power of fallen boundless self awake
Between the first and the last Nothingness,
Recalling the tenebrous womb from which it came,
Turned from the insoluble mystery of birth
And the tardy process of mortality
And longed to reach its end in vacant Nought.
As in a dark beginning of all things,
A mute featureless semblance of the Unknown
Repeating for ever the unconscious act,
Prolonging for ever the unseeing will,
Cradled the cosmic drowse of ignorant Force
Whose moved creative slumber kindles the suns
And carries our lives in its somnambulist whirl.
(விஜயா சங்கர நாராயணன் மொழிபெயர்ப்பு)
வீழ்ந்திருந்த வரம்பிலா ஜீவனின்
ஆற்ற லொன்று இன்மையின் ஆதி
யந்த மிரண்டின் இடையே விழித்தது
தானு தித்த அந்த காரக்
கருவறை தன்னை நினைவு கூர்ந்து,
மரணந்தன் நெடிய மந்த கதியைனையும்
பிறவியின் அவிழ்க்க வொண்ணாப் புதிரினையும்
ஏற்க விருப்பமின்றி சூனிய வெளியில்
தன்முடி வினையே மிக்க விழைந்தது
அனைத்துப் பொருள்களின் இருண்ட துவக்கத்
தினிலே போல புலன்களுக் கெட்டா
அறியாப் பொருளின் அவயவ மில்லா
ஓர் ஊமைச் சாயல் உணர்விலா கருமந்
தன்னைத் திரும்பத் திரும்பச் செய்து
கண்மூடிய இச்சை யதனை நீடித்த
வாறே பிரபஞ்சத் துயில்மயக் கத்தின்
சக்தி தன்னை ஏந்தி யணைத்தது
ஆக்கும் திறனுடை அந் நித்திரை தானே
சூரியர் தமையும் ஒளிரச் செய்து
நம்முடைய வாழ்வனைத்தையுமே தன்னுடை
துயில் நடைச் சுழலினில் தாங்கிச் செல்லும்.
ஜீவன் அல்லது ஆத்மன் எல்லையற்ற பரம்பொருளின் கருவறையிலிருந்து வந்து மனிதப் பிறவி எடுத்திருக்கிறது. அந்த ஜீவனின் ஆற்றல் வரம்பில்லாதது. தற்போது ஆத்மன் இருக்கும் நிலை தொடக்கத்திற்கும் முடிவிற்கும் இடையில் இருக்கும் ஒரு இடை நிலை. இதை பகவான் தனது ஒருங்கிணைந்த யோகத்திலும், மனிதனை தெய்வமாக வல்ல ஆற்றலுள்ள ஒரு இடை நிலை ஆற்றலாகவே குறிப்பிடுகிறார். தான் எங்கிருந்து வந்தோம் என்ற நினைவு ஆத்மனிற்கு ஆழத்தில் இருக்கிறது. காயத்ரிதேவியின் "ஆயாது வரதே தேவி பிரம்ம வாதினி காயத்ரீம் ஸந்தஸாம் மாதா பிரம்ம யோனிர் நமோஸ்துதே" என்ற ஆவாகன ஸ்லோகத்தில் வரும் பிரம்ம யோனி என்ற சொல்லின் பொருளை இந்த "Recalling the tenebrous womb from which it came" இந்த வரிகளில் குறிப்பிடுகிறார். Tenebrous womb என்பது இந்த பிரபஞ்சத்தின் அனைத்தும் தோற்றம் பெற்ற ஒரு கருப்பை. இதுவே பிரம்ம யோனி! இங்கிருந்துதான் பிரபஞ்சத்தின் அனைத்தும் தோற்றம் பெறுகிறது.
இந்தக் கருப்பையிலிருந்து நாம் வந்தோம் என்ற நினைவு ஆத்மனுக்கு ஆழமாக இருக்கிறது. தான் வந்த இடத்தினை மீண்டும் அடைவதற்கு அவன் அமரத்துவம் பெற வேண்டும். ஆனால் இறப்பும் பிறப்பும் என்று அவன் பயணம் தாமதமாகிக் கொண்டு இருக்கிறது. இப்படி பிறந்து இறந்து கொண்டிருப்பதால் vacant Nought என்ற மூல சூன்யத்தை அடைவதற்கு தாமதமாகிக் கொண்டு இருக்கிறான்.
எல்லாவற்றிற்கும் மூலமான அந்த காரிருள் கருங்குழி dark beginning of all things, புலன்களுக்குப் புலப்படாத வெறுமையான அந்த மௌனத் தோற்றம், விழிப்புணர்வு இல்லாமல் தனது கர்மத்தினை மீண்டும் மீண்டும் செய்து பிரபஞ்சத்தின் அந்த துயில் மயக்கத்தில் ஈடுபடுகிறது. விழிப்புணர்வு இல்லாமையால் எதையும் அறியமுடியா குருட்டு நிலையில் மீண்டும் மீண்டும் இந்த பிரபஞ்ச துயில் மயக்கத்தில் தனது இச்சையை ஏற்படுத்திக் கொண்டு, அனைத்தையும் படைக்கும் அந்த சக்தி பிரபஞ்ச மயக்கம் எனும் அறியாமை சக்தியின் தொட்டிலாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, அந்த சக்தி படைப்புத் தீயாக வெளிப்படாமல் தூக்கத்தில் இருந்து கொண்டு சூரியப் பிரகாசமாக எமது மயக்கம் நிறியந்த இந்த வாழ்க்கைச் சுழலை இயக்குகிறது.
ஸாவித்ரியின் இந்த வரிகள் சாதகர்களுக்கு கூறும் ஆன்ம உண்மைகள்:
மனித ஆன்மாவும் பிரபஞ்சமும் ஒரு மூல கருப்பையில் இருந்து வந்து முடிவினை அடைவதற்காக தமது பரிணாமத்தில் பாடுபட்டுக் கொண்டு இருக்கின்றன.
இந்த கருப்பையினை ஸ்ரீ அரவிந்தர் "Tenebrous womb" என்கிறார். இதை வேதம் பிரம்ம யோனி என்கிறது.
மனிதன் பூரணமடையாத ஆனால் பூரணம் அடைய முயன்று கொண்டு இருக்கும் ஒரு இடை நிலைப் பொருள்.
மனிதன் விழிப்புணர்வு இன்மையால் இந்த பிரபஞ்ச மயக்கத்தில் சிக்கிக் கொள்கிறான்.
இந்த பிரபஞ்ச மாயசக்தி நுணுக்கமாக உறங்கு நிலையில் இருந்து கொண்டு விழிப்புணர்வு இல்லாதவர்களை பிறப்பு இறப்பில் ஆழ்த்திக் கொண்டும் விழிப்புணர்வு அடைந்தவனுக்கு ஆன்ம ஒளிதரும் சூரியனாகவும், படைப்புத் திறனாகவும் வெளிப்படுகிறது.
தொடரும்...
குறிப்பு:
இந்த உரை எனது ஸாவித்ரியின் மீதான சுயகற்கையும் ஸாதனா அனுபவத்தின் மூலமும் எழுதப்படுவது. கால ஓட்டத்தில் திருத்தி புரிதல் மேம்படுத்தப்படலாம்.