இன்று அனைவருக்கும் சூழலியல் பிரச்சனைகளில் ஆர்வம் இருக்கிறது. அதேபோல் தமது பிரதேசம் அபிவிருத்தி அடைய வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது.
மனிதன் பரிணாமத்தில் எப்போது சூழலைக் கட்டுப்படுத்தி விவசாயத்தைச் செய்ய ஆரம்பித்தானோ (அண்ணளவாக பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்) அப்போதே இயற்கையில் ஒத்திசைந்து வாழ்வதை விடுத்து இயற்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டான்.
இதிலிருந்து தொழில்புரட்சி, அறிவியல் புரட்சி, தொழில்நுட்ப புரட்சி என்று இயற்கையை மீறி கட்டுப்படுத்தும் சக்தியை வலுப்படுத்திக்கொண்டு வருகிறான்.
இப்படி தனது இயல்பே இயற்கைக்கு எதிராக இருக்கும் மனிதன் இயற்கையைப் பாதுக்காக்கிறோம் என்று செய்ய முயலும் விஷயங்கள் யானை தடவிய அந்தகன் போன்ற நிலை!
யானையின் காதைத் தடவிய அந்தகன் யானை சுளகு போன்றது என்பான்,
யானையின் காலைத்தடவிய அந்தகன் யானை உரல் போன்றது என்பான்,
யானையின் துதிக்கையை தடவிய அந்தகன் யானையும் பாம்பு போன்றதென்பான்!
இப்படித்தான் சூழலியல் பிரச்சனைகளை பகுதியாக ஆராய்பவர்களது நிலை.
ஒரு குளம் என்பது மனிதன் மேலதிகமான மழை நீரை சேமித்து நிலத்தடி நீரிற்கும் பாய்ச்சி தனது விவசாய, இதர தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட செயற்கையான அமைப்பு!
இந்த செயற்கையான அமைப்பை சரியாக மனிதன் முகாமைத்துவம் - மேலாண்மை செய்யாவிட்டால் இயற்கை தனக்கு உகந்த வகையில் அந்த இடத்தை நிரப்புவதற்குரிய சூழலியல் இயக்கத்தை ஆரம்பிக்கும்.
அதாவது மண்ணை வெட்டி ஆழமாக்கப்பட்ட நிலத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர இயற்கை தனது மீள்கட்டமைப்பு பொறிமுறையை உருவாக்கும்.
குளத்தினுள் நீர்க்களைகள் எனப்படும் சல்வேனிய, தாமரை, அல்லி இவை எல்லாம் பெருகி குளத்தின் ஆழத்தினைக் குறைத்து மெதுவாக குளத்தை நிலமாக்கும் சூழலியல் இயக்கத்தை ஆரம்பிக்கும்.
இந்த நிலை ஆரம்பித்தவுடன் மனிதன் தனது நோக்கமாகிய நீரை நிரப்புவது தடைபட்டுவிடாமல் இருக்கச் சரியான காலத்தில் அவற்றை கட்டுப்படுத்தி, தாவரங்களை அகற்றி முகாமைத்துவம் செய்து கொண்டு வர வேண்டும்.
இனி யானை தடவிய அந்தகன் கதைக்கு வருவோம்;
குளத்தின் முக்கியத்துவத்தை விவசாயி நீரின் அடிப்படையில் பார்ப்பார்!
அழகிய பறவைகளின் வாழிடமாக குளம் சிலருக்குத் தெரியும்.
மீன்பிடிப்பவருக்கு மீன்களின் வாழிடமாகத் தெரியும்!
முகாமைத்துவம் செய்யும் நகரசபைக்கு பொழுதுபோக்கு தலமாக்கி எப்படி வருமானம் ஈட்டலாம் என திட்டமிடுவர்.
நுளம்புகளின் தேக்கமாக சுகாதார உத்தியோகத்தர்களுக்குத் தெரியும்.
அறிவற்றவர்களுக்கு குப்பை கொட்டும் இடமாகத் தெரியும்.
அரசியல் பார்வை கொண்டவர்கள் அபிவிருத்தி என்ற பெயரில் ஏதோ அரசியல் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகிறது என்று சந்தேகப்படுவார்கள்!
இவையெல்லாம் அந்தப்பிரச்சனை என்ற யானையின் துதிக்கை, கால், காது, வால் போன்றவை!
இவை எல்லாவற்றையும் பொருத்தி அதில் எமது உயிர்பல்வகைமை பாதிக்காமல், சாக்கடையாகாமல், அரசியல் பகடையாகாமல், மக்களின் நீர் ஆதாரம் பாதிக்கப்படாமல், பொருளாதார ரீதியில் சிறப்பான திட்டம் வகுப்பது என்பது இயற்கைக்கு முரணான மனதைக் கொண்ட மனிதனிற்கு கடினமானது!
இப்படிப்பட்ட முரணான மனதை வைத்துக்கொண்டு மனிதன் காட்டும் சூழலியல் அக்கறை என்பது தனது சொந்த நலம் சார்ந்த ஒன்றுதான்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.