சித்தர் தத்துவத்தில்
எப்படி உலகத்தின் பௌதீகப் பொருட்கள் தோற்றம் பெறுகிறது என்பதற்குப் பாவிக்கப்படும்
மாதிரியுருவை பஞ்சபூத பஞ்சீகரணம் என்று சொல்லுவார்கள். இது சுருக்கமாக
அனைவருக்கும் விளங்கும் மொழியில் கூறுவதானால்;
பிரபஞ்சம் ஆரம்பத்தில் (சிவம்
என்ற) ஒரு புள்ளியில் இருந்து அதிரத்தொடங்க (vibration) நாதமும் (Sound)
விந்துவும் (ஒளியும் - light) தோற்றம் பெற அவை இணைந்து சதாசிவம் என்ற ஆற்றலினூடாக
பஞ்ச பூதங்களாகத் தோற்றம் பெற்றது. பஞ்சபூதங்கள்;
ஆகாயம் - Space
வாயு - Air
அக்கினி - fire
நீர் - water
பிருதிவி - Earth or
Solid
ஆகாயத்திலிருந்து வாயுவும்,
வாயுவிலிருந்து அக்னியும், அக்னியிலிருந்து நீரும், நீரிலிருந்து பிருதிவியும்
தோன்றியதாக எழுதி வைத்திருக்கிறார்கள்; இது நிற்க!
1783 இல் இங்கிலாந்தைச் சேர்ந்த
ஒரு இரசாயனவியல் - இயற்பியல் விஞ்ஞானி ஹென்றி கவெண்டிஷ் மின்சாரத்தினை பலவிதமான
திரவங்களுக்குள் செலுத்தி என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்கிறார். இதில்
அடைக்கப்பட்ட குழாயில் மின்சாரத்தைச் செலுத்தும்போது திடீரென நீர் ஆவியாகி மறைவதைக்
காண்கிறார். பலமுறை ஆராய்ந்த பிறகு குழாயினுள் துரிதமாக எரியக்கூடிய வாயுவும்,
அதைவிட பாரம்கூடிய வாயுக்களும் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். இதை மீண்டும்
மீண்டும் ஆராய்ந்து கவெண்டிஷ் கீழ்வரும் முடிவிற்கு வந்தார்;
நீர் என்பது உண்மையில் நீரல்ல!
இது மணமற்ற, நிறமற்ற, சுவையற்ற பதார்த்தம் மாத்திரம் அல்ல! இது மூலகமும் அல்ல!
இரண்டு சுயாதீன மூலகங்களால் ஆக்கப்பட்ட மூலகங்கள். இதில் ஒரு மூலகம் எரியும்
பொருளாகவும், மற்றையது எரிக்கும் பொருளாகவும் இருக்கிறது. இந்த இரண்டும் இணைந்து
உருவாகும் பதார்த்தமாகிய நீர் தாகத்தையும், நெருப்பினையும் அணைக்கும் பதார்த்தமாக
மாறுகிறது என்று குறிப்பு எழுதி வைத்தார்.
இதை அடிப்படையாக வைத்து லாவோசியர்
நீரில் ஹைட்ரஜன், (இதன் அர்த்தம் நீரை உற்பத்தி செய்வது) ஒட்சிசன் ஆகிய இரண்டு மூலகங்கள்
இருப்பதாக கண்டுபிடித்து பெயரிட்டார்!
எனினும் ஹென்றி கவெண்டிஷின் ஆய்வு
முடிவு விளக்கிய விதம் சுவாரசியமானது; சித்தர்களின் பஞ்சீகரண விளக்கத்தை தொட்டுச்
செல்கிறது.
சித்தர் தத்துவத்தில்
பிருதிவிக்குள் மற்ற நான்கு பூதங்கள் (Elements) உள்ளன. அதேபோல் நீரில் மற்றைய
மூன்றும் - ஆகாயம், வாயு, அக்னி ஆகிய மூன்றும் உள்ளன. நீரிலுள்ள ஒட்சிசன்
எரிக்கும் அக்னி தத்துவமாகவும், ஹைட்ரஜன் எரியப்படும் வாயுதத்துவமாகவும்
விளங்கப்படுத்தலாம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.