குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, November 11, 2018

ஸோமானந்தனின் ஸ்ரீ புர விஜயம் - 02 : அகஸ்திய மண்டலம்

Related image


அன்று அலுவலகத்தில் அதிக வேலைப்பளு, வீடுவந்து சேர ஏழுமணியாகிவிட்டது.  வந்தவுடன் மனைவி போட்டுத்தந்த சூடாக ஒரு தேனீர் அருந்திவிட்டு, அடுத்த நாள் அலுவலகத்திற்கு தேவையான வேலைகளைச் ஒழுங்கு படுத்திவிட்டு, மலை நாட்டு குளிர் நீரில் ஒரு குளியல் போட்டு விட்டு சாதனையறையில் அமர்ந்தான். தனது இரவு சாதனையை முடித்துக்கொண்டு நித்திரைக்கு சென்றுவிட்டான். 

சரியாக வைகறை நேரம், குருநாதர் தட்டிவிட்டார். எழுந்திரு சாதனைக்கு என்று கூற, விரைவாக எழுந்து குருபாதுகையை தியானித்து ராஸ்மி மாலா தியானத்தை படுக்கையில் இருந்த வண்ணம் முடித்துக்கொண்டு எழுந்து காலைக்கடன் முடித்து குளித்து விட்டு சரியாக 0430 இற்கு தனது சாதனைக்கு அமர்ந்தான். குருமந்திரம், காயத்ரி ஜெபம் முடித்து தனக்கு உபதேசமான மந்திரங்களை செய்யவேண்டிய ஆவர்த்திகள் முடித்துக்கொண்டு கடைசியாக தியானத்தில் அமர்ந்தான். 

சுவாசம் ஏற்கனவே ஆழமாகி மெதுவாகியிருந்தது. கவனத்தை புருவமத்தியில் வைக்க சில வினாடிகளில் ஒளி ஒரு புள்ளியாக தோன்ற ஆரம்பித்தது. ஏற்கனவே குருநாதர் உபதேசித்தபடி அந்த ஒளியை கவனமாக கவனிக்கத்தொடங்கினான். அப்படி அவதானித்துக்கொண்டிருக்க நேற்றைய தினம் ஸ்ரீ புரத்திற்கு சென்று தேவியுடன்  உரையாடிய அனுபவத்தால் ஏற்பட்ட மனக்களிப்பால் இன்றும் இந்த ஒளியைப் பின் தொடர்ந்து தேவியைய் தரிசிக்கலாம் என்ற மன உந்தல் எற்பட ஆரம்பித்தது. இந்த எண்ணம் ஏற்பட ஆழமாக ஒளியை கவனிக்கலானான்.  நேற்று ஏற்பட்ட அதே அனுபவம், ஸ்தூல உடலை விட்டு இப்போது பறந்து கொண்டிருந்தான். கருமேகங்களைத்தாண்டி வான வில் நிற மேகங்களைதாண்டியவுடன் நேற்று சென்ற பொன்னிறம் இல்லாமல் மெல்லிய நீல நிறம் உள்ள இடத்திற்குள் தான் வந்திருப்பதை உணர்ந்த வண்ணம் இருக்க, அந்த இடத்திற்குள் அந்த நீல நிற ஒளி ஒரு துவாரத்திலிருந்து கதிர்ப்பாக பெருகி வெள்ளம் போல் வந்திருப்பதை அவதானித்துக் கொண்டு இருக்கும் போது அந்த ஒளி பெருகத்தொடங்கியது. 

பெருகிய ஒளி ஜடை தாடியுடன் முனிவர் தோற்றம் பெற அருகில் இடது பாகத்தில் நேற்று ஸ்ரீ புரத்தில் தரிசித்த தேவியின் அழகுக்கு ஈடான அழகுடன் முனிவருக்கு அருகில், இருவரது உருவமும் முழுமை பெற்றவுட ஸோமானந்தன் தனக்கு இப்போது உருவம் கிடைப்பதை உணர்ந்தான். நேற்று பொன்னிறமாக இருந்த உடல் இன்று கிருஷ்ணனின் நிறத்தைப்போன்று நீல நிறமாகி இருந்தது. 

இருவரையும் பார்த்த மாத்திரத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து " ஓம் ஸ்ரீ லோபாமுத்திராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய மாமகரிஷி குரு பாதுகாம் சமர்ப்பயாமி நமஹ" என்ற மந்திரத்தை உச்சரித்துகொண்டு வணங்கினான். 

இருவரும் ஒருமித்த குரலில் 'எழுந்திரு மகனே" என்று கூற ஸோமானந்தன் மகிழ்ச்சிப்பெருக்குடன் எழுந்தான். மனதிற்குள் "தேவியைப் பார்க்க வேண்டும் என்று முயற்சிக்க, ஏன் குருவையும் குரு அம்மாவையும் பார்க்க வேண்டி வந்தது என்று எண்ணிக்கொண்டு இருக்க, குரு நாதர் "என்ன ஏமாற்றமாகி விட்டதா ஸோமா?" என்று கேட்க ஸோமானந்தன் சுதாரித்து "அடடே சர்வ வல்லமை உள்ள குருவிற்கு முன்னார் உள்மனம், வெளிமனம் என்று எதுவுமில்லை, அவர் எல்லாமறிந்தவரல்லாவா" என்று சமாளித்துக்கொண்டு நேற்று தேவி கூறிய உபதேசத்தை உடனடியாக மனதிற்குள் கொண்டு வந்தான். 

"இல்லை குருநாதா, நேற்றே தேவி கூறிவிட்டாள், நான் அகஸ்தியமயி என்று, கட்கமாலா ஸ்தோத்திரத்தில் தேவி லோபாமுத்ரமயி என்பதையும் அறிந்து கொண்டேன், எனக்கு நீங்கள் இருவரும் தரிசனம் தந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி" என்றான். 

குருநாதர் சிரித்துக்கொண்டே "கெட்டிக்காரன், அதனால்தான் உன்னை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன், அது சரி நீ தேவியை பார்க்க ஸ்ரீ புரம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடுதானே தியானத்தில் அமர்ந்தாய், ஆனால் கடைசியில் எம்மிடமல்லவா வந்திருக்கிறாய்" என்று புன்சிரிப்புடன் ஸோமனைப் பார்த்து கேட்டார். 

ஸோமனது கற்பூர புத்திக்கு  குருநாதர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்து விட்டது.  ஏற்கனவே சாதனை செய்யும் போது எமது மன இச்சைகளால் எந்த உயர்ந்த நிலையை அடைவதற்கும் உந்தக்கூடாது, எமது பண்புகள், எண்ணங்கள், உடல் என்பவற்றை புடம் போட்டு தெய்வ சக்தியை ஏற்றுக்கொள்ளக் கூடியவாறு மாற்றுவது மட்டும்தான் எமது வேலை, மற்றவை குருவும் தேவியினதும் இச்சை எமது தகுதி, சரணாகதிக்கு தக்கவாறு நடக்கும் என்று பலதடவை பூலோக குருகுல வாசத்தில் குரு நாதர் கூறியிருந்தார். இதற்கான காரணத்தையும் தெளிவாக கூறியிருந்தார். இப்படியான இச்சைகள் இருக்கும்போது மனம் போலிக்கற்பனைக் காட்சிகளை படைத்து ஆன்மீக முன்னேற்றம் அடைந்துவிட்டதாக ஏமாற்றும் என்பதையும் தெளிவாக அறிந்திருந்தான். 

உடனடியாக ஸோமன் " ஆம், குரு நாதா தற்போது உணர்ந்து கொண்டேன், எனது இச்சையை விட தேவியும் குருவினதும் ஆணை என்ன என்பதை புரிவதே தேவையானது, அந்த ஆணைப்படியே இங்கு வரவழைக்கப்பட்டுள்ளேன்" என்றான். 

நல்லது, தேவியின ஆணை இருந்தால் மட்டுமே நீ அங்கு செல்ல முடியும், வீணாக மன உந்தலால் ஸ்ரீ புரத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆவல் கொள்ளாதே என்றார் குருநாதர். 

சரி குருதேவா என்று பணிவான குரலில் பதில் சொல்ல, 

இந்த இடத்தை சற்று சுற்றிப் பார் என குருவின் ஆணை வந்தது.  சுற்றிலும் பார்க்க தான் ஆகாய வெளியில் நட்சத்திரங்களுக்குள் இருப்பதும், தன்னைச் சுற்றியும் கரு நீல ஆகாயம் விரந்து கிடப்பதையும் உணர்ந்தான். இப்படிப் பார்த்துக்கொண்டு இருக்க, குருதேவர்,

ஸோமா நீ வந்திருப்பது அகஸ்திய மண்டலம் எனும் பகுதிக்குள், தேவியின் ஆணைப்படி,  பூவுலகில் நல்ல ஆன்ம வித்துக்களை உருவாக்கும் பணி எமக்கு தேவியால் வழங்கப்பட்டிருக்கிறது.  எம்முடன் தொடர்பு கொள்ள இச்சையுள்ள ஆன்மாக்களில், பக்குவம் பெற்றவர்களுடனும், தம்மை மனப்பண்புகளில் தெய்வ குணமுள்ளவர்களாக உயர்த்திக்கொள்ளக்கூடியவர்களையும் நாம் தொடர்பு கொள்கிறோம்.  உன்னை தேர்ந்தெடுத்ததும் உனது நீண்டகால காயத்ரி சாதனையால் உன்னை நீ உயர்த்திக்கொண்டது, பல பிறப்புகளில் நீ தொடர்ச்சியாக செய்து வந்த சாதனையினாலுமே! 

தன்னை தேர்ந்தெடுத்துள்ளோம் என்ற குருநாதரின் வார்த்தைகளைக் கேட்டதும் ஸோமன் பூரித்துப்போய் விட்டான், மனதிற்குள் பட்டாம்பூச்சி பயக்க கற்பனையில் தான் மற்றவர்களை விட உயர்ந்தவன் என்ற எண்ணம் மனதிற்குள் தோன்றிக்கொண்டு இருக்கும்போதே குருநாதரின் குரல் "ஸோமா, அகத்தியர் யோக ஞானத்திறவுகோலின் முதல் பாடலில் ஆறாவது வரியைக் கூறப்பா" என்றார். 

இதைக்கேட்டதுமே ஸோமனுக்கு சட்டென்று தலையில் குட்டு விழுந்தது போலாகிவிட்டது. 

மெய்ஞ் ஞான குருபரனைப் பூசை பண்ணு
வித்தை தந்த சற்குருவை நிதமும் போற்று
கையாற மனமாற ஞானம் சொல்லும
காரணமாங் குருபதத்தை கருதிப் பாரு
வையமெல்லாம் கொண்டாட கருவைச் சொல்வேன்
மதிகெட்டு விள்ளாதே மகிழ்ந்திடாதே

என்று பாடலை ஒப்புவித்து, "மதிகெட்டு விள்ளாதே மகிழ்ந்திடாதே" ஐயனே என்றான். 

"நல்லது பாடல் எல்லாம் ஞாபகத்தில் இருக்கிறது, ஆனால் நடைமுறையில் வரவில்லையே" என்றார் தனது மந்திரப்புன்னகையுடன். 

 குருநாதர் சொல்லுவதெல்லாம்  அவனது மனதைப் பட்டை தீட்டிக்கொண்டிருந்தது. ஸோமனுக்கு குருநாதர் சுட்டிக்காட்டும் எதுவும் தன்னை குற்றம் குறை கண்டுபிடிப்பதாக தெரியவில்லை. அவன் அந்த நிலையைத் தாண்டி குருவிடம் சரணாகதி இயல்பாகவே கொண்டிருந்தான்.

ஸோமா, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றவுடன் அதிக பூரிப்புடன் நீ மட்டும் என்று எண்ணி இறுமாறக்கூடாது, உலகெங்கிலும் உள்ள பல்வேறு இனங்களைச் சார்ந்த தகுந்த தெய்வப்பண்புகளை வளர்த்த மனித வித்துக்கள் எமது ஈர்ப்பிற்குள் வருகிறார்கள், ஆகவே அகத்தியனின் அருளாற்றல் நீ புராணங்களிலும், மனிதர்கள் எழுதிய கதைகளில் படிப்பது போல், எமது அருளாற்றல் பூவுலகில் ஒரு குறித்த இனத்திற்கோ, இடத்திற்கோ சொந்தமானதல்ல, எவருடைய அகம் ஈசனை வரவேற்க பக்குவமாக இருக்கிறதோ அங்கு அகத்தீசன் அருள் நிறையும்! இங்கு அகம் என்பது உடலும் மனமும், வீடும் என மூன்று பொருளையும் குறிக்கும் " என்றார். 

ஸோமனும் மெதுவாக ஆமோதித்துக்கொண்டு இருக்க, அவனது நினைவில் ஒரு கேள்வி வந்தது, தமிழ் இலக்கியங்கள் பல பாடல்கள் பல்வேறு காலப்பகுதிகளில் அகத்தியர் என்ற பெயரில் எழுதப்பட்டது, பல்வேறு அகத்தியர்கள் பூவுலகில் வாழ்ந்தார்களா என்று எண்ணிக்கொண்டு இருக்க அதற்கு பதில் அடுத்து குரு நாதரின் வார்த்தைகளில் வந்தது, 

ஸோமா, இன்று பூவுலகில் சூக்ஷ்மத்தன்மையை அறியும் ஆற்றல் அருகிவிட்டது. ஸ்தூலத்தை வெளிப்படையாக அறிவதை மாத்திரமே அறிவு என்று எண்ணிக்கொண்டு தாம் முன்னேறி விட்டதாக கருதிக்கொள்ளும் மானிடர்கள் நீ எண்ணுவதைப்போல் பல்வேறு அகத்தியர்கள் வாழ்ந்தார்கள் என்று ஆய்வு படுத்திச் சொல்கிறார்கள். இது சரியானது, அதேவேளை பிழையானதும் கூட என்றார். 

இதைக்கேட்டவுடன் ஸோமன் சற்றுக்குழம்பிப் போய்விட்டான். அது எப்படி சரியாக இருக்கும் அதே வேளை பிழையானதாகவும் இருக்க முடியும், குரு நாதர் முன்னிலையில் எதையும் கேட்க வேண்டிய தேவை இருப்பதில்லையே, பதில் அடுத்து வந்தது, 

இதைப்புரிந்து கொள்ள உதாரணம் கூறுகிறேன் கேள், பூவுலகில் நீ படித்து பெற்ற பட்டம் என்ன? என்றார், அதற்கு ஸோமன் நான் மருத்துவம் படித்து பட்டம் பெற்றுள்ளேன் என்றான். 

சரி, உன்னை மக்கள் எப்படி அழைப்பார்கள்?

மருத்துவர் ஸோமன் என்று,

நல்லது, உன்னைப்போல் பட்டம் பெற்ற மற்றவர்களை எப்படி அழைப்பார்கள்?

மருத்துவர் என்ற அடைமொழியுடன் அவர்கள் பெயரில்!

அது தற்காலத்து வழக்கு, இன்று மருத்துவர்கள் கூடிவிட்ட நிலையில் அப்படி அழைக்கிறார்கள், ஆனால் முற்காலத்தில் ஊரிற்கு ஒரு மருத்துவர், அவரை மருத்துவர் என்று மட்டுமே அழைப்பார்கள், அவர் பரம்பரையில் எல்லோரும் மருத்துவராக இருப்பார்கள், எல்லோரையும் மருத்துவர் என மக்கள் அழைப்பார்கள். 

சரி பெயரிற்கும், மருத்துவர் என்ற அடைமொழிக்கும் என்ன வித்தியாசம் என்றார் குரு நாதர். 

மருத்துவர் என்பது ஒருவர் தனது அறிவையும், நோய் தீர்க்கும் திறனையும் தன்னில் வளர்த்துக்கொண்டு தகுதி பெற்றதால் வந்த பெயர், எமது பெயர் எமக்கு பெற்றோர் இட்ட பெயர் என்றான் ஸோமன். 

நல்லது, பார்த்தாயா, மருத்துவம் சார்ந்த நுண்ணறிவு சூக்ஷ்மமானது, பரம்பரை பரம்பரையா கடத்தப்படுவதால் அந்த அறிவு கடத்தப்படும் அனைவரும் மருத்துவர் என்று அழைக்கப்படுகிறார்கள். மருத்துவர்கள் வெவ்வேறு காலப்பகுதிகளில் வாழ்ந்தாலும் அனைவரும் மருத்துவர்களே, இதைப்போல் அகத்தியர் என்பது அகத்தில் ஈசனை கண்டு பேரொளி பெரு நிலை அடைவதற்குரிய அறிவின் குறியீடு, ஒவ்வொரு காலப்பகுதியிலும் தகுதியுள்ள மனித ஆன்மாக்கள் எமது ஈர்ப்பைப் பெற்று அந்த அறிவை பூலோகத்தில் காலத்திற்கு தகுந்த மாதிரி விதைக்கின்றன. அந்த அறிவு எங்கிருந்து அகத்தில் தோற்றம் பெறுகிறதோ அந்த இடத்திற்கே நீ இன்று வந்துள்ளாய், இங்கு உன்னைச் சுற்றி காணும் ஒளி நட்சத்திரங்கள் யாவும் அகத்தியர் நிலை அடைந்தவையே! 

ஆக சூக்ஷ்மத்தில் ஒன்றாய் அந்த அறிவு இருக்க, வெவ்வேறு காலப்பகுதிகளில் வெளிப்படுவதால் வெளிப்படும் நபர்கள் வேறாக இருக்கிறார்கள், ஆனால் எல்லோரும் அந்த மூலத்தை அடையும் வழியை ஆராயாமல் ஸ்தூலத்தில் வேற்றுமை கண்டு பிடிக்கிறார்கள் என்றார் குரு நாதர்!

சரி, ஸோமா நீண்ட நேரம் இங்கு இருக்க உனது ஸ்துல உடல் இந்த ஆற்றலை தாங்காது, இன்று கூறியவற்றை உடலிற்கு திரும்பியவுடன் ஞாபக வருபவற்றை எழுதி வை!

பூவுலகில் அகஸ்திய உணர்வினை ஈர்க்க உனக்கு தேவியின் ஆணைப்படி எமது குரு மந்திரம் தருகிறோம், இதை நீ முதலில் ஒரு மண்டலம் பயிற்சிக்க வேண்டும். அதன் பின்னர் யார் உன்னிடம் கேட்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் சொல்லிக்கொடு! இதற்கு உனக்கு தகுதி உண்டா என்பது பற்றி நீ கவலைப்படத்தேவையில்லை, நீ சொல்லித்தரும் அனைவருக்குமான வழிகாட்டலை நாம் ஏற்றுக்கொள்வோம்!

இந்த மந்திரம் குருமந்திரம், குருமண்டல நாமாவளிக்கு பிறகும், காயத்ரி ஜெபத்திற்கு முன்னரும் ஜெபித்து வரவேண்டும், இதிலுள்ள பீஜாட்சரங்கள் ஒருவனது பரிணாமத்தை துரிதப்படுத்தும், ஆன்ம வழியில் முன்னேற்றும்! என்று கூறியவாறு மந்திரத்தை கூறத்தொடங்கினார்.

ௐம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சிம் வம் அம் உம் மம் மகத்தான அகத்தீசாய நமஹ;

இந்த குரு மந்திரத்தை எவர் ஒருவர் தினசரி ஜெபம் செய்து வருவதுடன் தனது பண்புகளை தெய்வ பண்புகளாக மாற்ற முயற்சிக்கிறாகளோ அவர்களுக்கு மிக சூக்ஷ்மமாக வாழ்வின் எல்லா நிலைகளிலும் உதவி செய்வேன், சென்று வா மகனே என்று குரு நாதரும் குரு அம்மையும் கைகளை உயர்த்தி ஆசி கூற மெதுவாக அவர்களது உடல் கரைந்து நீல நிற ஒளியாகத்தொடங்கியது. ஸோமனது உடலும் ஒளியாக கரையத் தொடங்கியது, தான் மீண்டும் வந்த முகில் கூட்டங்களினூடக பயணித்தவன் இறுதியாக தனது பூஜையறையில் தனது புருவ மத்தியில் கவனைத்துக்கொண்டிருப்பதைக் கண்டான். 

மெதுவாக கண்களைத்திறக்க ஏற்றிய விளக்கு எரிந்துகொண்டும், பொழுது புலர்ந்து விட்டதையும், குருவிகளது கீச்சிடும் ஒலியும் கேட்டுக்கொண்டு மெதுவாக பூஜையறையை விட்டு வந்தான். தேனீர் தயாராகியிருந்தது. 

தேனீரை அருந்திக்கொண்டு தனது அனுபவங்களை குறித்து வைக்க நோட்டுப்புத்தகத்தை எடுத்துக்கொண்டு அமர்ந்தான்.  அவளது மகள் பாடசாலை செல்வதற்கு அப்பா இந்த புத்தகப் பையை அடுக்கித்தாருங்கள் என்று கேட்க அதைச் செய்து கொடுக்க எழும்பினான். 

அதை முடிக்க ஆபிஸிற்கு செல்ல நேரமாகி விட்டதை உணர்ந்து கொண்டு தயாரானான். 

ஸோமானந்தனின் ஸ்ரீ புர பயணம் தொடரும்....

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...